இலங்கை சுற்றுலா பயணம் மேற்கொள்ள வந்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரின் பையில் பெறுமதியான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு இலட்சம் இலங்கை ரூபாய், 100 அமெரிக்க டொலர்கள் மற்றும் 200 அவுஸ்திரேலிய டொலர்கள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.
காலி சமனல மைதானத்திற்கு அருகில் வைத்து நால்வர் பேர் கொண்ட கும்பல் கொள்ளையில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் தனது பையை தரையில் வைத்துவிட்டு தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொள்ளைக் கும்பல் அவ்விடத்திற்கு வந்ததுடன் அவர்களில் ஒருவர் பையை எடுத்துக்கொண்டு ரத்கம கடற்கரையை நோக்கி ஓடியுள்ளார். குறித்த சுற்றுலா பயணியான பெண்ணும், கொள்ளையர்கள் பின்னால் ஓடிய போது கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பிலிப்பைன்ஸ் பெண், ரத்கம பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். இந்நிலையில், காலி நகரம் மற்றும் கோட்டைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பை தொலைந்து போனதாகவும், அதில் இருந்த பணத்தை திருடர்கள் எடுத்துள்ளனர். எனினும் கடவுச்சீட்டு மட்டும் கிடைத்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று (03.05.2023) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 3,638 ரூபாவாகும். இதேவேளை 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 40 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 1,462 ரூபாவாகும்.
மேலும் 2.3 கிலோ கிராம் சிலிண்டரின் விலை19 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 681 ரூபாவாகும். இந்நிலையில் லாஃப் எரிவாயு நிறுவனம் எந்தவித விலை குறைப்புகளையும் மேற்கொள்ளாது என அறிவித்துள்ளது.
உலக சந்தையில் எரிவாயு விலைகள் அதிகரித்த போதிலும், லாஃப் எரிவாயு உற்பத்திகளின் விலையை அதிகரிக்க போவதில்லை என்று தெரிவித்துள்ளது.
குவைத்தில் வீட்டு வேலை செய்து 7 வருடங்கள் கழித்து இலங்கை திரும்பவிருந்த நாளில் பெண் ஒருவர் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாத்தளை யட்டவத்த பிரதேசத்தில் வசிக்கும் 50 வயதுடைய ஜி.அனோமா என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உள்ளதால், அரசாங்கம் முறையான விசாரணை நடத்த வேண்டும் என உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தனது மகனுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் 7 ஆண்டுகளுக்கு முன்பு அவர் குவைத் சென்றுள்ளார். குவைத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்த அவர், தன் மகன் மற்றும் பேரக்குழந்தைகளுக்குப் பரிசுகளுடன் நாட்டிற்கு வர தயாரானார். ஏப்ரல் 26 ஆம் திகதி தாய்நாட்டிற்குத் திரும்பத் தயாராக இருந்தார்.
இதுபற்றி அவர் தனது தாயாருக்கு அதற்கு முன்தினம் தொலைபேசி அழைப்பேற்படுத்தி தெரிவித்துள்ளார். மகன் சதுரங்க தம்மிக்க தனது தாயை வரவேற்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்றுள்ளார், ஆனால் அவர் வரவில்லை.
உடனடியாக குழப்பமடைந்த அவர், விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது உரிய பதில் கிடைக்காததால் கட்டுநாயக்க பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். விமான நிலைய அதிகாரிகளிடம் போலீசார் விசாரித்தபோது, குவைத்தில் இருந்து அனோமா விமானம் ஏறவில்லை என்பது தெரியவந்தது.
பின்னர், இதுபற்றித் தெரிந்து கொள்ள அவரது நண்பர்கள் சிலர் அவர் வேலை செய்த குவைத் வீட்டுக்குச் சென்றனர். அவர் தூக்கிட்டு இறந்துவிட்டதாக வீட்டின் உரிமையாளர் கூறினார்.
குவைத் தூதரகத்தின் ஊடாக கிடைத்த தகவலின் படி குவைத் மாநிலத்தில் இரண்டு இலங்கையர்களின் சடலங்கள் இருப்பதாகவும் அதில் ஒன்று தனது தாயாரின் சடலம் என உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அனோமாவின் மகன் தம்மிக தெரிவித்துள்ளார். தாய் தூக்கிலிட எந்த காரணமும் இல்லை என்பது குறித்து அரசு முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பெலாரஸில் பல்கலைகழகத்தில் இலங்கை மருத்துவ மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Grodno State Medical பல்கலைகழகத்தில் கல்வி கற்று வந்த 24 வயதுடைய திஷான் குலரத்ன என்ற மருத்துவ மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கண்டியில் உள்ள பிரதான ஆண்கள் பாடசாலையொன்றில் கல்வி கற்ற இந்த மாணவன் உயிரியல் பிரிவில் சித்தியடைந்து வைத்தியராக வேண்டும் என்ற நோக்கத்தில் பெலாரஸில் உள்ள Grodno பல்கலைக்கழகத்தில் பதிவு செய்துள்ளார்.
இறக்கும் போது அதே பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்ற இந்த மாணவன் முதலாம், இரண்டாம், மூன்றாம் வருடங்களில் வருடத்தின் சிறந்த மாணவருக்கான விருதை வென்றிருந்தார்.
இம்மாணவன் பாடசாலைக் காலத்தில் பாடசாலையின் பிரதி மாணவர் தலைவராகவும் கடமையாற்றியுள்ளதுடன் பாடநெறிக்கு அப்பாற்பட்ட செயற்பாடுகளிலும் திறமையானவர் என தெரிவிக்கப்படுகின்றது.
பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு பாடங்கள் சொல்லிக்கொடுத்து அவர்களுடன் மிகவும் நட்புடன் பழகியுள்ளார். மாணவனின் தாயார் தனது மகனுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தபோது, அவர் அழைப்புக்கு பதிலளிக்காததாலும், ஏனைய மருத்துவ மாணவர்கள் சிலரை அழைத்து மகன் தொடர்பில் தகவல் பெற கோரிக்கை விடுத்துள்ளார்.
சக மருத்துவ மாணவர்கள் அவர் உறங்கிக் கொண்டிருந்த அறைக்குச் சென்று தேடியபோது இந்த மருத்துவ மாணவனின் உயரமான அலுமாரியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
மாணவன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணத்தால் இறந்தாரா என பெலாரஸ் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான உண்மைகளை வெளிக்கொணருவதற்காக அந்நாட்டு பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்த மாணவன் கடந்த 29ஆம் திகதி இரவு சுமார் 11.00 மணி வரை தனது கைத்தொலைபேசியை பயன்படுத்தியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் டி.வி.நகரில் சேதுபதி (23) என்ற இளைஞர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரும் அதே பகுதயை சேர்ந்த முருகவேணி (19) என்ற பெண்ணுடன் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திருமணம் முடிந்த கையொடு தனியாக வசித்துவந்தனர்.
இந்த நிலையில், திருமணமாகி 20 நாட்கள் மட்டுமே முடிந்த நிலையில் 01.08.2019ஆம் தேதி சேதுபதி வீட்டினுள் படுத்திருந்தத போது குடிசை வீ்ட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தில் சேதுபதி உடல்கருகி உயிரிழந்தார்.
பின்னர் உடல்கருகிய நிலையில் சேதுபதியி்ன் உடல் மீட்கப்பட்டது. உடலை கைப்பற்றிய திண்டிவனம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேதுபதியின் உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சேதுபதியின் தந்தை தட்சணாமூர்த்தி அளித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சேதுபதியின் வீடு தீப்பிடித்து எரிந்த போது வீட்டின் கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது போலீசாரின் விசாரணையில் அம்பலமானது.
இதனையடுத்து சேதுபதியை கொலை செய்தது யார் என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது, சேதுபதியின் மனைவி முருகவேணியிடம் விசாரணை மேற்கொண்டபோது, போதைக்கு அடிமையான சேதுபதி தன் மனைவி முருகவேணியை பலவிதத்தில் கொடுமைப்படுத்தியுள்ளார்.
இதனால் முருகவேணி போதையில் படுத்து இருந்த சேதுபதிமீது மண்ணெண்ணை ஊற்றி தீவைத்து வீட்டுக்கு வெளியே வந்து கதவை வெளிபக்கமாக பூட்டியது தெரியவந்தது . இதையடுத்து முருகவேணியை போலீசார் கைது செய்தனர்.
கணவனை கொன்ற வழக்கு திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணைகள் முடிந்த நிலையில் நீதிபதி ரகுமான் முருகவேணிக்கு ஆயுள் தண்டனையும், ரூ5000ம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதனை தொடர்ந்து போலீசார் முருகவேணியை கடலூர் மத்திய சிறைக்கு அழைத்து சென்று அடைத்தனர்.
2023 ஐபிஎல் தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது முதலாவது சதத்தை பூர்த்தி செய்துள்ளதை கிரிக்கெட் உலகம் பாராட்டி வருகின்றது. ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போட்டியில் ராஜஸ்தான் ரோயல் அணிக்காக 21 வயது ஜெய்ஸ்வால் 62 பந்துகளில் 124 ஓட்டங்களை பெற்றார்.
ஜெய்ஸ்வால் தான் பிறந்த உத்தரபிரதேசத்திலிருந்து வெளியேறி மும்பாயில் குடியேறியவர் – அந்த மும்பாயில் அவர் தனது முதலாவது ஐபிஎல் சதத்தை பெற்றுள்ளார். 11 வயதில் ஜெய்ஸ்வால் தனது குடும்பத்தவர்களுடன் மும்பாய்க்கு குடிபெயர்ந்தார்.
நான்மாட்டுபண்ணையில் உறங்குவேன் பின்னர் உறவினர் வீட்டில் தங்கினேன் அவர் என்னை வேறு இடம்பார்க்கசொன்னார் என 2020 இல் ஜெய்ஸ்வால் சர்வதேச ஊடகமொன்றிற்கு தெரிவித்திருந்தார்.
மும்பாய் மைதானத்தில் நான் கூடாரமொன்றில் தங்கியிருந்தேன்,பகலில் நான் விளையாடுவேன் உணவிற்கு பணம் சேர்ப்பதற்காக நான் இரவில் பானிப்பூரி விற்பேன் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
கழகங்களின் கிரிக்கெட் ஓட்டங்களை பதிவது பந்தை எடுத்துகொடுப்பது போன்றவற்றை செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் கழகத்திற்கான கட்டணத்தை செலுத்தினேன் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் அவரது முதல் சதத்திற்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன . இந்நிலையில் எவ்வாறான சிறந்த கதை எவ்வாறான சிறந்த திறமை ஜெய்ஸ்வால் ஒரு எதிர்கால சூப்பர்ஸ்டார் என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டொம்மூடி தெரிவித்துள்ளார்.
அதேசமயம் யஷஸ்வி ஜெய்ஸ்வாலிடம் மிகச்சிறந்த திறமையுள்ளது உள்ளுர் போட்டிகளில் அவர் மிகச்சிறப்பாக விளையாடினார் அந்த திறமையை ஐபிஎல்லில் தொடர்கின்றார் என இது ரோகித்சர்மா தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த மறைமலைநகர் கூடலூர் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற இளைஞர், பெருங்களத்தூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டுப் படித்து வந்தார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை ஒரு ஆண்டாக காதலித்து வந்துள்ளார்.
இதனிடையே, சூர்யாவின் காதலி, அவரது வீட்டில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாகக் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பினாயில் குடித்துத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். எனினும் அவரை உறவினர்கள் மீட்டுச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அப்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், காதலி தற்கொலை முயற்சி என்ற தகவலை அறிந்து சூர்யா மன உளைச்சலுக்கு ஆளானார். தன் காதலி இறந்து விடுவாளோ என்ற வேதனையில் தானும் தற்கொலைச் செய்ய முடிவெடுத்து, நேற்று வீட்டில் அவரது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப் போட்டுத் தற்கொலைச் செய்து கொண்டார்.
வீட்டில் சூர்யாவின் உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் அங்கு சென்ற போலீசார், தற்கொலை செய்துக் கொண்ட சூர்யாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்பு சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி குன்னத்தூர் பகுதியில் சங்கரம்மாள் என்ற அபிராமி(28) என்ற இளம்பெண் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவருக்கு அதேபகுதியைச் சேர்ந்த பிரபுராஜா(32) என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
தனியார் மில் ஒன்றில் பிரபு ராஜா வேலை செய்து வருகிறார். இந்தத் தம்பதியினருக்கு 9 வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.அபிராமி இந்த நிலையில், வீட்டில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
அதாவது, பிரபு ராஜா சமீபகாலமாகத் தன் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்துவந்தார். நாள்தோறும் இந்த தகராறு நீடித்ததால் பிரபு ராஜாவோடு இனி வாழமுடியாது என முடிவெடுத்த அபிராமி, தன் இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு நெல்லை மாவட்டம் சுத்தமல்லி பகுதியில் உள்ள தன் பாட்டி ஊருக்கு சென்றுவிட்டார்.
அங்கு தனியே வீடு எடுத்து குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை தனது மனைவியைப் பார்க்க பிரபுராஜா மதுரையில் இருந்து சென்றுள்ளார். அங்கு வீட்டில் இருவரும் பேசிக்கொள்ளும்போது மீண்டும் தம்பதிகளுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதில், ஆத்திரமான பிரபுராஜா தன் மனைவி அபிராமியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபு ராஜாவைத் தேடி வருகின்றனர். பிரிந்து சென்ற மனைவியை அவரது கணவர் தேடிவந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் பியூட்டி பார்லருக்கு செல்ல கணவன் தடுத்தால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம், இந்தூரைச் சேர்ந்தவர் பல்ராம். இவர் 15 ஆண்டுகளுக்கு முன் ரீனா (34) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை ரீனா அழகு நிலையத்திற்கு செல்வதாக பல்ராம்மிடம் கூறியுள்ளார். ஆனால், அழகு நிலையத்திற்கு செல்ல கூடாது என்று பல்ராம் ரீனாவை தடுத்துள்ளார்.
இதனால் இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டுள்ளது. மனம் உடைந்த ரீனா தனது வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீடு திரும்பிய பல்ராம், மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் ரீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான கணவன் பல்ராமனிடம் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அனுராதபுரம் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் மன்னார் பிரதேசத்தை சேர்ந்த இளைஞரே கொலை செய்யப்பட்டிருந்தார்.
சம்பவம் தொடர்பில் மாதவச்சி பிரதேசத்தைச் 27 வயதுடைய நபரொருவரும், 23 வயதான அவரது மனைவியும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் தொடர்பாக மேலும் மூவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோதலொன்றின்போது பலத்த காயமடைந்து அனுராதபுரம் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேற்படி இளைஞர் கடந்த 28ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் பல வருடங்களின் பின்னர் மீண்டும் “டெங்கு 3” வைரஸ் பரவி வருவதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய சோதனைகளின் படி, இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஒருவருக்கு காய்ச்சல் இரு தினங்களுக்கு மேல் காணப்படுமாயின், டெங்கு பரிசோதனை நடத்துவதன் ஊடாக அதனை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
டெங்கு 3 க்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியோ, ஆன்டிபாடிகளோ இல்லை என கூறியுள்ள அவர், இந்த வைரஸ் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை கடந்த வாரம் மாத்திரம் 1900 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, ஹம்பாந்தோட்டை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களைச் சேர்ந்த சிகாதார பிரிவுகளும் இந்த அதிக அபாய வலயங்களில் உள்ளடங்குவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
அத்துடன் மேலதிகமாக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், குருநாகல், கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள சில சுகாதார மற்றும் மருத்துவ பிரிவுகளும் டெங்கு அபாய வலயங்களுக்குள் உள்ளடங்கியுள்ளன. இந்த வருடத்தில் இதுவரை டெங்கு நோயினால் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
நீர்கொழும்பில் இருந்து ஹங்வெல்ல நோக்கி பயணித்த இ.போ.ச க்கு சொந்தமான பேருந்து ஒன்று கம்பஹா வந்துருகம எனுமிடத்தில் இன்று (02) காலை விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இவ் விபத்தின் போது 70 பயணிகள் பேருந்தில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காயமடைந்தவர்கள் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு அதிகவேகம் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இந்த வாரம் தங்கத்தின் விலை வேகமாக வீழ்ச்சியடையக் கூடும் என தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி இன்றைய தினம்(02.05.2023) தங்க அவுன்ஸின் விலை 638,260 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,520 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 182,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன், 22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 165,150 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,710 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 157,650 ரூபாவாகவும் இன்யைதினம் பதிவாகியுள்ளது.
லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு தொடர்பில் லிட்ரோ நிறுவனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் புதிய விலை மாற்றம் நாளை (03.05.2023) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 1005 ரூபாவால் குறைக்கப்பட்டு தற்போது 3,738 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
குருநாகல் பகுதியில் மூளை புற்று நோய் காரணமாக மூளைச்சாவடைந்த மாணவியொருவர் தனது உடல் உறுப்புகளை வழங்கி 7 பேரின் உயிரை காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவமொன்று கடந்த மார்ச் மாதம் பதிவாகியிருந்தது.
குருநாகல் பகுதியில் மகளிர் கல்லூரியில் உயர்தரம் கல்வி பயின்ற 19 வயதுடைய மாணவியொருவர் மூளைச்சாவு காரணமாக உயிரிழந்திருந்தார். இதன்போது உறவினர்களின் அனுமதியுடன் மூளைச்சாவடைந்த மாணவியின் இதயம் மற்றும் நுரையீரல்கள் என்பன இதயம் மற்றும் நுரையீரல் செயலிழந்து ஆபத்தான நிலையில் சிகிச்சைப்பெற்று வந்த மருந்துவ நிபுணருக்கு இவ்விரு உறுப்புகளும் பொருத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், 46 வயதான வைத்தியருக்கு, சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு சிக்கல்களுடன் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அறுவை சிகிச்சை முடிந்து சுமார் ஒரு மாதத்தின் பின்னர் கடந்த சனிக்கிழமை (29.04.2023) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
களுபோவில வைத்தியசாலையில் பணியாற்றிய குறித்த வைத்தியருக்கு கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த இருதய சத்திரசிகிச்சை நிபுணர்கள் மற்றும் மயக்கவியல் நிபுணர்களால் சத்திரசிகிச்சை செய்யப்பட்டது.
இவ்வாறு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பின்னர் இதயம் மற்றும் நுரையீரல் செயலிழந்து ஆபத்தான நிலையில் இருந்த வைத்தியர், மாணவி விஹகனா ஆரியசிங்கவின் உறுப்புகளை பெற்றுக்கொள்ள முடிந்ததையிட்டு மகிழ்ச்சி வெளியிட்டிருந்தார்.
சுகாதாரத்துறைக்குள் எழுந்துள்ள விமர்சனங்கள் இருப்பினும், மருத்துவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட விதம் குறித்து சுகாதாரத்துறைக்குள் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
2017ஆம் ஆண்டு இலங்கையில் முதன் முதலாக இதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த டாக்டர் அனில் அபேவிக்ரமவின் சேவையை பெற்றுக்கொள்ள முடிந்த போதிலும், அவர் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்தும் சத்திரசிகிச்சையை செய்ய மறுத்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் இந்திய வைத்தியர்கள் குழுவுடன் இணைந்து இந்த வைத்தியரின் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு இலங்கையில் அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் நோயாளிக்கு சிக்கல்கள் உள்ளதா என பரிசோதிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், மயக்க மருந்து நிபுணரின் மரணம் சத்திரசிகிச்சையின் சிக்கலால் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் ஏற்பட்டதா என்பதை அறிய கொழும்பு தேசிய வைத்தியசாலை நிர்வாகம் இது தொடர்பில் உள்ளக விசாரணையை ஆரம்பித்துள்ளது.
இந்த சத்திரசிகிச்சை தொடர்பில் ஊடகங்களுக்கு எந்த தகவலையும் வழங்க வேண்டாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுற்றறிக்கையில் வைத்தியர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.