ஓடும் இரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞர்.. ஓடோடி காப்பாற்ற முயன்ற நண்பனுக்கு நேர்ந்த சோகம்!!

திருப்பத்தூரில்..

திருப்பத்தூரை சேர்ந்த சுவீத் என்ற இளைஞர் சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்ல இருந்தார். எனவே தன்னை வழியனுப்ப இருந்து நண்பர்களை அழைத்துள்ளார். அதன்படி அவரது நண்பர்களான ஆசைத்தம்பி, கவுதம் உட்பட 4 பேர், திருப்பத்தூரிலிருந்து சென்னைக்கு கடந்த திங்கள்கிழமை (ஏப். 24) வந்துள்ளனர்.

சென்னை வந்த அவர்கள் விமான நிலையத்துக்கு செல்வதற்காக இரவு நேரத்தில் பூங்கா இரயில் நிலையத்தில் இருந்து மின்சார இரயிலில் பயணம் செய்துள்ளனர். அவர்கள் பயணம் செய்த இரயில் மாம்பலம் – சைதாப்பேட்டை இடையே சென்று கொண்டிருக்கும்போது வாசலில் நின்று கொண்டிருந்த ஆசைத்தம்பி திடீரென கால் இடறி கீழே விழுந்துள்ளார்.

இதனை கண்டதும் பதறிப்போன நண்பர்கள் சைதாப்பேட்டையில் அந்த இரயில் நின்றவுடன், கீழே விழுந்த ஆசைதம்பியை காப்பாற்ற அங்கிருந்து தண்டவாளத்தில் ஓடியுள்ளனர்.

அப்போது கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயில் கவுதம் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இதுகுறித்து இரயில்வே போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள், கீழே விழுந்த ஆசைத்தம்பியை மீட்டு உடனே மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த கவுதம் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர்.

தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ரயில்வே காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரயிலில் இருந்து தவறி விழுந்த நண்பனை காப்பாற்ற முயன்ற இளைஞர், வேறொரு இரயில் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விமான நிலையத்திற்கு 22 பாம்புகளுடன் வந்த பெண்ணால் பரபரப்பு!!

மலேசியாவில்..

மலேசியாவில் இருந்து சென்னை வந்த பெண் பயணி ஒருவரிடம் இருந்து 22 பாம்புகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.

இதன்போது விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பாம்புகளைக் கொண்டு வந்த பெண் பிளாஸ்டிக் போத்தல்களில் தனித்தனியே பாம்புகளை கொண்டு வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சில பாம்புகள் கட்டுப்பாடின்றி வெளியே வந்துள்ளது. மேலும் நடைபெற்ற சோதனையில் அந்த பெண் பச்சோந்தியையும் கொண்டு வந்துள்ளார்.

இதன்படி அந்த பெண் சுங்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளின் பசியை தீர்க்க உணவு தேடி தவித்த தாய்.. இறுதியில் நேர்ந்த சோகம்.!!

புத்தளத்தில்..

புத்தளம்- பள்ளம, அடம்மன வெலிய பிரதேசத்தில் மின்னல் தாக்கி இரண்டு பிள்ளைகளின் இளம் தாயொருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக பள்ளம பொலிஸார் தெரிவித்துள்ளனர். அடம்மன, எம்.ஏ. பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய மல்காந்தி என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ரோகினி தன்னை கணவனின் குடிப்பழக்கத்தால் கடும் பொருளாதார நெருக்கடிக்குள்ளான இந்த இளம் தாய், தனது காணியில் உள்ள முந்திரி மரத்தில் ஒரு கிலோ முந்திரியை பறித்து விற்பனை செய்து தனது இரண்டு குழந்தைகளுக்கும் இரவு உணவு தயாரிப்பதற்காக வருகை தந்தபோதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

மின்னல் தாக்கத்திற்கு உள்ளான இந்த பெண்ணுக்கு 9 வயது மகளும், ஒரு வயது மூன்று மாத ஆண் குழந்தையும் உள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இந்த அனர்த்தத்தின் போது தாயுடன் மகளும் வந்திருந்ததாகவும், வேல் யாய ஆற்றின் ஊடாக வீட்டிற்கு அருகில் சென்றுக்கொண்டிருந்த போது மின்னல் தாக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

எனினும், மகள் தனது தாயை விட 15 மீற்றருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த போது, ​​எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியதாகவும், அதில் சிக்கி பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகி தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

யாழில் விபத்தில் சிக்கிய பெண் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில்..

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஊரெழு பர்வதவர்த்தனி மனோன்மணி அம்மன் ஆலயத்திற்கு அருகில் பலாலி வீதியில் நேற்று முன்தினம் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 73 வயதான உமாதேவி கனகநாயகம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் உரும்பிராய் வடக்கு கற்பக விநாயகர் கோவில் கிளை வீதியை வசிப்பிடமாகக் கொண்டவர் என தெரிய வந்துள்ளது.

குறித்த பெண்மணி துவிச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த போது ஊரெழு பர்வதவர்த்தனி மனோன்மணி அம்மன் ஆலயத்திற்கு அருகில் பலாலி வீதியில் மஞ்சள் கடவையின் எல்லையில் பின்னால் வேகமாக வந்த பட்டா ரக வாகனம் குறித்த பெண்ணைச் சடுதியாக மோதித் தள்ளியது.

சம்பவத்தில் வயோதிபப் பெண் தூக்கி வீசப்பட்டுத் தலையில் படுகாயமடைந்தார். இந்நிலையில் சுயநினைவற்று ஆபத்தான நிலையிலிருந்த குறித்த பெண் யாழ். போதனா மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு 12 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் மீண்டும் தீவிரமடையும் கோவிட் தொற்று.. இருவர் மரணம்!!

இலங்கையில்..

இலங்கையில் மீண்டும் கோவிட் வைரஸ் தீவிரமடைந்து இரண்டு நாட்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக கொலன்னாவ மரண விசாரணை அதிகாரி காஞ்சனா விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.

மாத்தறை ஹமந்துவ பிரதேசத்தில் வசிக்கும் 56 வயதுடைய பெண்ணும், யட்டியந்தோட்டை பனாவத்தையில் வசிக்கும் 73 வயதுடைய ஆணும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த பெண் கடந்த 27ஆம் திகதி IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மறுநாள் வெள்ளிக்கிழமை (28.04.2023) உயிரிழந்துள்ளார். மற்றைய நபர் 28ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (29.04.2023) உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கோவிட் 19 தொற்று மீண்டும் சமூகம் முழுவதும் பரவும் அபாயம் இருப்பதாகவும் குறிப்பாக முகக்கவசம் அணிந்து சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுவது மிகவும் பொருத்தமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, மருத்துவமனை வட்டாரங்களின்படி, கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட அதிக எண்ணிக்கையான நோயாளிகள் IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழில் இருந்து நண்பர்களுடன் சுற்றுலா சென்ற இளைஞன் மரணம்!!

யாழில்..

நண்பர்களுடன் சுற்றுலா சென்ற போது கிளிநொச்சி உமையாள் புரம் பகுதியில் விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இளைஞர் வெள்ளிக்கிழமை (28) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் யாழ்ப்பாணம் வடமராட்சி புலோலி சாரையாடி பகுதியை சேர்ந்த தனியார் வங்கி ஊழியரான சுந்தரமூர்த்தி சத்யன் (வயது 27) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 20ஆம் திகதி தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சுற்றுலா சென்றுவிட்டு யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்தபோது கிளிநொச்சி உமையாள் புரம் பகுதியில் ஹயஸ் ரக வாகனம் குறித்த மோட்டார் சைக்கிளின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த குறித்த இளைஞர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே நேற்று முன்தினம் இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உலக சாதனை படைத்த நான்கு வயது இலங்கைத் தமிழ்ச் சிறுமி!!

அம்பாறையில்..

அம்பாறை மாவட்டம் கல்முனை துறைவந்தியமேடு நான்கு வயது சிறுமி கிரண்யாஸ்ரீ எழுதுவதில் இரு உலக சாதனைபடைத்துள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட துறைவந்தியமேடு கிராமத்தைச் சேர்ந்த ஜனாசுகிர்தன் கிரண்யாஸ்ரீ எனும் நான்கு வயதுச் சிறுமி இரண்டு உலக சாதனைகள் படைத்துள்ளார்.

இவர் தனது இரண்டு கைகளாலும் A தொடக்ம் Z வரை குறுகிய நேரத்தில் ஆங்கில எழுத்துக்களை எழுதி அவர் ஏற்கனவே படைத்த சாதனையை முறியடித்துள்ளார். முதலாவது சாதனை A-Zவரை 3.30 நிமிடங்கள், இரண்டாவது சாதனை A-Z வரை 2.38 நிமிடங்கள் இவை இந்தியாவை தலைமையமாகக் கொண்டு இயங்கும் இரண்டு உலக சாதனை நிறுவனங்கள் மூலம் நிகழ்த்தப்பட்டது.

இந்தியாவில் சென்னையில் இருக்கும் Jackhi book of world record, மற்றும் இந்தியா கல்கத்தாவில் இருக்கும் Netaji world record, ஆகிய உலக சாதனை புத்தக நிறுவனங்களின் ஊடாக இச் சாதனை பதியப்பட்டுள்ளது.

சாதனை நிகழ்த்திய சிறுமியின் தந்தை ஜனாசுகிர்தன் உலகில் மிகச்சிறிய சிவலிங்கத்தை மரத்தில் செதுக்கி உலக சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் மாபெரும் இரத்தான முகாம் : அனைவருக்கும் அழைப்பு!!

இரத்ததானம் அல்லது குருதிக் கொடை (Blood Donation) என்பது ஒருவர் தனது இரத்தத்தை பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும்.

அந்த வகையில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் 2014 உயர்தர மாணவர்களின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்தான முகாம் பாடசாலை வளாகத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை (01.05.2023) காலை 9.00 மணி தொடக்கம் மாலை 3.00 மணி வரை இடம்பெறவுள்ளது.

‘உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்’ எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படவுள்ள இரத்ததான முகாமில் பாடசாலை பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வளர்கள் என அனைவரது பங்களிப்பினையும் கோரி நிற்கின்றனர் ஏற்பாட்டுக் குழுவினர்.

வவுனியாவில் 6 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞன் கைது!!

வவுனியாவில் 6 வயது சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

சிறுமியின் தாய் வெளிநாட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகின்றார். தந்தை இல்லை. வவுனியா, பம்பைமடு பகுதியில் அமைந்துள்ள முச்சக்கரவண்டி சாரதி ஒருவரின் வீட்டில் மாதாந்த கொடுப்பனவின் அடிப்படையில் குறித்த சிறுமி தங்கி இருந்துள்ளார்.

குறித்த சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் பூவரசன்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறுமியின் அந்தரங்க உறுப்பில் இருந்து அசாதாரண இரத்தப்போக்கை அவதானித்த வைத்தியர்கள் பூவரசன்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் வீடடில் தங்கியிருந்த இளைஞரை கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்ட இளைஞரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்று தாயும் குதித்து விபரீத முடிவு!!

ராணிப்பேட்டையில்..

குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை கொன்றுவிட்டு தாயும் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். குடும்பத்தகராறில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்திருக்கிறது இந்த அதிர்ச்சி சம்பவம்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு அடுத்த மேல் புலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். சென்னை கோயம்பேட்டில் சலூன் கடையில் இவர் பணிபுரிந்து வருகிறார். இவரின் மனைவி ரேணுகா. இந்த தம்பதிக்கு ஐந்து வயதில் சுருதி என்ற மகளும் மூன்று வயதில் தீபக் என்ற மகனும் இருந்தனர்.

இன்று மாலையில் நாலு மணி அளவில் மேல் புலம் கிராமத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் ரேணுகா, சுருதி, தீபக் மூன்று பேரும் சடலமாக மிதந்து இருக்கிறார்கள். தகவல் அறிந்த கலவை போலீசார் மூன்று பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர் .

சங்கர் சென்னையில் வேலை செய்து வருவதால் 15 நாளுக்கு ஒருமுறைதான் வீட்டிற்கு வந்து சென்று இருக்கிறார். இந்த நிலையில் சங்கரின் தாய் சரஸ்வதி மருமகள் ரேணுகாவை பணம் கேட்டு தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.  இதில் மன வேதனை அடைந்த ரேணுகா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார் .

தற்கொலைக்கு முன்பாக தனது குழந்தைகளையும் கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொள்ள நினைத்து மகன் மற்றும் மகளை அழைத்துச் சென்று முதலில் கிணற்றில் தள்ளி கொன்று விட்டு , பின்னர் தானும் அதே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருப்பதாக போலீசாரின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையால் பிரபல மாடல் அழகி மரணம் – அதிர்ச்சி சம்பவம்!!

கலிபோர்னியாவில்..

பிரபல மாடல் அழகி மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியாவைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா ஆஷ்டேன் கூர்கானி. கிம் கர்தாஷியன் தோற்றம் கொண்ட இவர் பிரபல மாடல் அழகியாக வலம் வந்தார்.

34 வயதாகும் இவருக்கு இன்ஸ்டா பக்கத்தில் 618Kக்கும் அதிகமான ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்தனர். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவரது குடும்பத்தினர் கலிபோர்னியா மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், மருத்துவ சிகிச்சை பலனின்றி கிறிஸ்டினா உயிரிழந்தார். இவருடைய இறுதிச் சடங்கு கூர்கனியில் நடைபெற உள்ளது. இதனால், அவரது குடும்பத்தினர் பணம் திரட்டுவதற்காக GoFundMe பக்கத்தை உருவாக்கியுள்ளனர்.

இது குறித்து கிறிஸ்டினாவின் குடும்பத்தினர் சமூகவலைத்தளங்களில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ‘எங்கள் அழகான, அன்பு மகளும் சகோதரியுமான கிறிஸ்டினா ஆஷ்டேன் கூர்கானியின் துரதிர்ஷ்டவசமான மறைவை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்.

மிகுந்த ஆழ்ந்த சோகத்துடனும், மிகுந்த கனத்துடனும், உடைந்த இதயத்துடனும் இருக்கிறது என்று பதிவிட்டுள்ளனர். இது தொடர்பாக பொலிசார் அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவி கூறிய வார்த்தையால் நாளொன்றுக்கு 5 கோடி ஊதியம்.. உலகத்தை கலக்கும் தமிழர் சுந்தர் பிச்சை!!

சுந்தர் பிச்சை..

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, மனைவியின் அறிவுறுத்தலால் தற்போது நாளொன்றுக்கு 5 கோடி ஊதியமாக பெறுகிறார். கூகுளின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வருபவர் சுந்தர் பிச்சை. தமிழகத்தின் மதுரையில் 1972ஆம் ஆண்டு பிறந்த இவர், ஐஐடி காரக்பூரில் இரசாயன பொறியியல் படித்தார்.

அப்போது தனது மனைவி அஞ்சலியை தோழியாக சந்தித்தார் சுந்தர் பிச்சை. காதலில் விழுந்த இவர்கள், கல்லூரியிலேயே நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். பின்னர், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் படிக்க சென்றதால் சுந்தர்பிச்சை தனது மனைவியுடன் நீண்ட தூர உறவில் இருந்தார்.

அதனைத் தொடர்ந்து ஒரு வழியாக இருவரும் 2003ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர். அஞ்சலி பிச்சை 1999ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரை Accenture நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

MBA படிப்பை முடித்த சுந்தர் பிச்சை, 2004ஆம் ஆண்டில் கூகுளில் இணைந்தார். படிப்படியாக முன்னேறிய சுந்தர் பிச்சை, 2019ஆம் ஆண்டு கூகுளின் CEO ஆக உயர்ந்தார்.

அதேபோல் அவரது மனைவி அஞ்சலி பிச்சை, Intuit என்ற மென்பொருள் நிறுவனத்தில் வணிக இயக்க மேலாளராக பணிபுரிகிறார். தற்போது உயர்நிலையில் சுந்தர் பிச்சையின் வெற்றியில் அவரது மனைவி அஞ்சலி பிச்சை முக்கிய பங்கு வகித்து வருகிறார்.

உதாரணமாக, ஒருமுறை யாஹூ மற்றும் ட்விட்டரில் இருந்து சுந்தர் பிச்சைக்கு வாய்ப்புகள் வந்தபோது, அவர் கூகுளில் இருந்து வெளியேறுவதாக மனைவியிடம் கூறியுள்ளார்.

ஆனால், அவரோ கூகுலிலேயே தொடர்ந்து பணியாற்றுமாறு அஞ்சலி பிச்சை அறிவுறுத்தியுள்ளார். மனைவியின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்த சுந்தர் பிச்சை, தற்போது நாளொன்றுக்கு 5 கோடி ஊதியம் பெறுகிறார்.

இன்று உலகின் பாரிய மென்பொருள் நிறுவனத்தை நடத்தும் சுந்தர் பிச்சை, தனது வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தவர் மனைவி அஞ்சலி என கூறியுள்ளார்.

கூகுளின் தாய் நிறுவனமான Alphabet Inc 2022ஆம் ஆண்டில் சுந்தர் பிச்சைக்கு 22.6 கோடி டொலர்களை வழங்கியது. சுந்தர் பிச்சையின் பங்கு மதிப்பு 1788 கோடி ஆகும். கூகுள் ஊழியர்களின் சராசரி ஊதியம் 2.42 கோடி ஆகும். கடந்த ஜனவரி மாதம் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக கூகுள் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை.. பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!!

இலங்கையில்..

பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பலஇடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.

அத்துடன், மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென்மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்திலும் முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மேலும், கடுமையான மின்னல் தாக்கம் தொடர்பில் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இன்றைய தினத்திற்கான வானிலை முன்னறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அடை மழை மற்றும் மின்னல் தாக்கங்கள் தொடர்பில் 16 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரீத முடிவெடுத்த கஜினி பட நடிகை : கைதான பிரபல நடிகர் விடுதலை!!

ஜிஹா கான்..

படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தொங்கிய கஜினி பட நடிகை ஜிஹா கான் வழக்கில் அவரின் காதலரும் நடிகருமான சுராஜ் பன்ஜொலி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை ஜிஹா கான். நியூயார்க்கில் பிறந்து வளர்ந்த ஜிஹா கான் லண்டனில் படித்துள்ளார். மும்பையில் குடியேறிய ஜிகா தான் பாலிவுட் படங்களில் நடித்து வந்தார். ராம்கோபால் வர்மாவின் நிசாபத் படத்தின் மூலம் கடந்த 2007 ஆம் ஆண்டில் அறிமுகமான ஜிஹா கான் , தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் ஹிந்தியில் வெளியான கஜினி திரைப்படத்திலும் நடித்திருந்தார். 2013 ஆம் ஆண்டில் ஜூன் 3ஆம் தேதி அன்று மும்பையில் உள்ள ஜூஹி நகரில் தனது வீட்டின் படுக்கையறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

தற்கொலைக்கு முன்பாக எழுதிய தற்கொலை கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். அதன் பின்னர் நடிகை தற்கொலை குறித்து தீவிர விசாரணை நடந்து வந்தது.

இதில் அவரின் காதலரும் நடிகருமான சுராஜ் 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜூலை மாதத்தில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார் . சுராஜ் தன் மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து விட்டதாக, ஜிஹாவின் தாயார் குற்றம் சாட்டியிருந்தார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் கடந்த 2018 ஆம் ஆண்டில் சுராஜ் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஜிஹா கானை தற்கொலைக்கு தூண்டியதாக சுராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் மும்பையில் சிறப்பு நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது.

விசாரணை முடிந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டு இருக்கிறது. ஜிஹா கான் தற்கொலை வழக்கில் புதிய ஆதாரங்கள் இல்லாததால் சுராஜ் குற்றமற்றவர் என்று தீர்ப்பளிக்கப்பட்டு அவரை வழக்கிலிருந்து விடுதலை செய்துள்ளது நீதிமன்றம்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் கொடூரமாக வெட்டிக்கொலை!!

அனுராதபுரத்தில்..

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர், கூரிய ஆயுதத்தினால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதவாச்சி, மன்னார் சந்தி பகுதியில் வசித்து வந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனிப்பட்ட பிரச்சினை காரணமாக தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த இளைஞன் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.

குறித்த நபர் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (28) அதிகாலை 05 மணியளவில் அவசர பிரிவிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் இளைஞனின் கழுத்து மற்றும் காலில் தாக்குதல் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதன்போது உடனடியாகச் செயல்பட்ட மருத்துவர்களும், மருத்துவமனை ஊழியர்களும் நோயாளியை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை வழங்கிய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வைத்தியசாலை பொலிஸார் மற்றும் அனுராதபுரம் பொலிஸ் தலைமையகம், மெதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு உயிரிழந்த நபர் சில நாட்களுக்கு முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து : நால்வர் படுகாயம்!!

நிலாவெளியில்..

நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை – நிலாவெளி பிரதான வீதியின் ஏழாம் கட்டை பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இவ்விபத்துச் சம்பவம் இன்று(28) இடம்பெற்றுள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த 3 வயது குழந்தை உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் நிலாவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக சிகிச்சைகளுக்காக 3 வயதான குழந்தையும், தந்தையும் திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை நிலாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.