வீடு புகுந்து கல்லூரி மாணவி கொலை.. நெஞ்சை உலுக்கும் கோர சம்பவம்!!

திண்டுக்கல்லில்..

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்த அழகுபாண்டி- முத்தாலம்மாள் தம்பதிக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உண்டு. இதில் 2ஆவது மகள் ஜோகிதா ( 18).

இளம்பெண் ஜோகிதா திருச்சியில் தனது அத்தை மகாலட்சுமி (40) வீட்டில் தங்கியிருந்து சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

மகாலட்சுமி மளிகை கடையில் வேலை பார்த்து வருகிறார். மேலும் ஜோகிதாவின் அக்காள் பவித்ராவுக்கு திருமணமாகி திருச்சியில் உள்ள அவரது அத்தை வீட்டிற்கு அருகே வசித்து வருகிறார்.

மகாலட்சுமி வழக்கம் போல் காலை மளிகை கடைக்கு வேலைக்கு சென்று விட்ட நிலையில், ஜோகிதா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மாலை 4.30 மணியளவில் பவித்ரா பலமுறை போன் செய்தும் ஜோகிதாவின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த பவித்ரா, அத்தை வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது ஜோகிதா கழுத்து மற்றும் முதுகு பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அவர் கதறி அழுததால், அவரது சத்தம் கேட்டு அப்பகுதியினர் திரண்டனர். பின்னர் அங்கு வந்த அவரது உறவினர்கள் ஜோகிதாவின் உடலுடன் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த தில்லைநகர் போலீசார் ஜோகிதாவின் உறவினர்களை தொடர்பு கொண்டு, அவரது உடலை திருச்சிக்கு கொண்டு வரும்படி கூறினர்.

இதையடுத்து ஜோகிதாவின் உடலை அவர்கள் திருச்சிக்கு கொண்டு வந்தனர். பின்னர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஜோகிதா குத்தி கொலை செய்யப்பட்டதற்கான அடையாளம் உள்ளதால், இது குறித்து வழக்குப் பதிவு செய்து, ஜோகிதாவை கொலைச் செய்தது யார்? அதற்கான காரணம் குறித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கொட்டும் மழையிலும் கொண்டு வரப்பட்ட இதயம்.. சரியான நேரத்தில் செய்த அறுவை சிகிச்சையால் உயிர் பிழைத்த சிறுமி!!

ஆந்திராவில்..

ஆந்திராவில் அமைந்துள்ள திருப்பதி தேவஸ்தானத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் இதயம் தொடர்பான பிரச்சினைகளை சரி செய்ய ‘பத்மாவதி குழந்தைகள் இதய நல மருத்துவமனை கடந்த ஆறு மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது.

இந்த மருத்துவமனையில் குழந்தைகளுக்கு குறைந்த செலவில் இதயம் சார்ந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் இதுவரை 2 குழந்தைகளுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று மாலை மூன்றாவதாக ஒரு குழந்தைக்கு இதய இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆந்திராவில் உள்ள சிறுமி ஒருவர் இதய நோயால் பாதிக்கப்பட்டுளளார்.

இவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதை தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக சிறுமி காத்திருந்தார். இந்த சூழலில் ஆந்திராவில் உள்ள ஸ்ரீ குளம் என்ற பகுதியில் உள்ள மாணவன் ஒருவர் அண்மையில் விபத்து ஒன்றில் சிக்கி தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்ததால் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அப்போது அவரது இதயம் இந்த சிறுமிக்கு பொறுத்த திட்டமிடப்பட்டது.

அதன்படி அந்த மாணவரின் இதயம் விசாகப்பட்டினத்திற்கு கொண்டுவரப்பட்டு, விசாகப்பட்டின விமான நிலையத்திலிருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.

பின் ரேணிகுண்டா விமான நிலையத்திலிருந்து கிரீன் சேனல் மூலம் தேவஸ்தான மருத்துவமனைக்கு இதயம் கொண்டுசெல்லப்பட்டது. இரவு நேரத்தில் மருத்துவ பணியாளர்கள் கொட்டும் மழையிலும் ஓடி சென்று இதயத்தை மருத்துவமனையில் சரியான நேரத்தில் கொண்டு சேர்த்தனர்.

தொடர்ந்து இதயம் வந்த பிறகு அந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை மூலம் இந்த மாணவரின் இதயம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. தற்போது சிறுமி நலமுடன் இருக்கிறார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொட்டும் மழையிலும் இதயத்தை சரியான நேரத்திற்கு கொண்டு வந்த மருத்துவமனை ஊழியர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்ததோடு சிறுமிக்கு இதயம் கொடுத்து உதவிய மாணவரின் குடும்பத்துக்கும் சிறுமியின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் மாட்டை களவாடி இறைச்சிக்காக வெட்டிய திருடர்கள்!!

வவுனியாவில் தொழுவத்தில் இருந்த பசு மாட்டினை திருடி இறைச்சிக்காக வெட்டப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவமானது வவுனியா கல்வீரங்குளத்தில் இடம்பெற்றிருந்தது. இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

நேற்று மாலை தொழுவத்தில் கட்டப்பட்ட பசு மாட்டினை காணாத நிலையில் மாட்டின் உரிமையாளர் மற்றும் அயலவர்கள் பசு மாட்டினை தேடிய நிலையில் இறைச்சிக்காக வெட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சிதம்பரபுரம் பொலிஸாருக்கு இச்சம்பவம் குறித்த விடயம் தொடர்பாக அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இச்சம்பவம் தொடர்பான விசாரணையினை முன்னெடுத்து வருகின்றனர்.

அண்மைக்காலமாக வவுனியா மாவட்டத்தில் பரவலாக மாடு களவாடப்பட்டு வெட்டப்படுகின்ற செயற்பாடுகள் தொடரந்த வன்னமே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

அதிக வெப்பம் காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் மரணம் : இதுவரை மூவர் மரணம்!!

அனுராதபுரத்தில்..

நாட்டில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக அனுராதபுரத்தில் மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார். எப்பாவல, மெடியாவ, யாய 2 பகுதியில் அதிக வெப்பநிலையை தாங்க முடியாமல் 81 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

வெப்ப அதிர்ச்சியினால் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலை காரணமாக உயிரிழந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் மூன்று இறப்புகள் வெவ்வேறு பகுதிகளில் பதிவாகியுள்ளன.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க, தற்போதைய வெப்பநிலைக்கு முகங்கொடுக்கும் வகையில் வெப்ப ஆற்றலைக் குறைக்கும் வகையில் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

கடுமையான பணிகளில் ஈடுபடுவது உடலுக்கு உகந்தது அல்ல எனவும் மே மாதம் 20ஆம் திகதிக்குப் பிறகு எதிர்பார்க்கப்படும் தென்மேற்குப் பருவமழைக்குப் பிறகு இந்நிலை முற்றிலும் மாறிவிடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மீண்டும் நடைமுறைக்கு வரும் கோவிட் கட்டுப்பாடுகள்!!

இலங்கையில்..

இலங்கையில் மீண்டும் கோவிட் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரவுள்ளன. கோவிட் தொற்றுக்குள்ளான 7 பேர் நேற்றைய தினமும் 4 பேர் நேற்று முன்தினமும் (24.04.2023) அடையாளம் காணப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது இலங்கையில் கோவிட் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைவாக இருந்த ஒரு காலத்திற்குப் பிறகு மீண்டும் ஏற்பட்டுள்ளமையினால் அதிக அவதானம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன் காரணமாக சுகாதார ஆலோசனைகளை தொடர்ந்து பின்பற்றுவது மிகவும் அவசியம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன ஆலோசனை வழங்கியுள்ளார்.

பலர் கோவிட் நோய் தொற்று பற்றி மறந்துவிட்டதால், பயணத்தின் போது முகக்கவசம் அணிவது, சவர்க்காரம் பயன்படுத்தி கைகளை தவறாமல் கழுவுதல் மற்றும் சமூக இடைவெளியைப் பேணுதல் போன்ற சுகாதார பழக்கங்களை,

அவர்கள் மறந்துவிட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார். சிறு குழந்தைகளை நெரிசலான இடங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தவிர்க்குமாறு பெற்றோர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

சிங்கள சிறுமி ஒருவரின் நெகிழ்ச்சியான செயல் : மகிழ்ச்சியில் கண்ணீர் விட்ட பெண்!!

அனுராதபுரத்தில்..

அனுராதபுரத்தில் சிங்கள சிறுமி ஒருவரின் நெகிழ்ச்சியான செயல் குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. ராஜாங்கனையில் பெண் ஒருவர் பெருந்தொகை பணத்துடன் தவற விடப்பட்ட பையை சிறுமி ஒருவர் கையளித்துள்ளார்.

அனுராதபுரம், சிறிமாபுர மகா வித்தியாலயத்தில் தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவியே இந்த செயலை செய்து பலரின் பாரட்டினை பெற்றுள்ளார். குறித்த சிறுமி, அருகிலுள்ள தனது நண்பியின் வீட்டில் விளையாடிவிட்டு தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது வீதியோராமாக கிடந்த கை பையை கண்டெடுத்துள்ளார்.

வெற்று பை என நினைத்த எடுத்த அந்த சிறுமிக்கு, அந்த பணப்பை சற்று கடினமாக இருப்பதால் அதை திறந்து பார்த்தபோது, அதில் பெருந்தொகை பணம் இருந்துள்ளது. இந்நிலையில் குறித்த பணத்தை உரியவரிடம் ஒப்படைப்பதற்கு உதவுமாறு தனது நண்பியின் தாயாரிடம் கோரியுள்ளார்.

இந்நிலையில் பணத்தை தவற விட்ட பெண்ணை தேடி கண்டுபிடித்து அந்தப் பகுதி பிரதேச சபை அதிகாரிகள் முன்னிலையில் கை பை ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவசர பணத்தேவைக்காக பணத்‍தை கை பையில் வைத்திருந்தபோதே தனது கை பை தவறவிடப்பட்டதாக குறித்த பெண் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவின் நேர்மையான செயற்பாட்டினை பலரும் பாராட்டி வரும் நிலையில், அந்த பகுதியிலுள்ள நலன்புரிச் சங்கமொன்று குறித்து சிறுமியை கெளரவித்திருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோர விபத்தில் ஒருவர் பரிதாபமாக பலி!!

புத்தளத்தில்..

புத்தளம் – கற்பிட்டி பகுதியில் பேருந்துடன், கெப் வண்டி ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து பாலாவி – கற்பிட்டி சம்மட்டிவாடி பகுதியில் இன்றைய தினம் (27.04.2023) காலை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் கற்பிட்டி – மண்டலக்குடா பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய கெப் வண்டியின் சாரதி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கற்பிட்டியிலிருந்து மன்னார் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துக்குச் சொந்தமான பேருந்துடன், பாலாவியிலிருந்து கற்பிட்டி சென்ற கெப் வண்டி நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது கெப் வண்டியில் பயணித்த இருவரும் படுகாயங்களுக்குள்ளான நிலையில், புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து கெப் வண்டியின் சாரதி புத்தளம் ஆதார வைத்தியசாலையிலிருந்து சிலாபம் வைத்தியசாலைக்கு சென்றவேளை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்..

உயிரிழந்த கெப் வண்டியின் சாரதியின் சடலம் சிலாபம் வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மற்றுமொருவர் குருனாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

42 வயதில் கண்ணை மறைத்த காதல் : 4.8 மில்லியன் பணத்தை இழந்த இலங்கைப் பெண்!!

நீர்கொழும்பில்..

நீர்கொழும்பில் பேஸ்புக் வழியாக 42 வயது பெண் ஒருவரை போலியாக காதலித்து ரூ. 4.8 மில்லியன் மோசடி செய்த, 38 வயதான திருமணமான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நீர்கொழும்பு பிடிபன வீதியை வசிப்பிடமாகக் கொண்டவராவார். நீர்கொழும்பு பிரிவு மோசடி விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அமெரிக்காவில் வாழும் இலங்கை கோடீஸ்வரர் போல் நடித்து சந்தேகநபர் பெண்ணை ஏமாற்றியுள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் போலியான முகநூல் பக்கத்தையும் உருவாக்கி அதனூடாக பெண்ணுடன் காதல் உறவை வளர்த்து வந்துள்ளார். சந்தேகநபர் அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை கோடீஸ்வரர் போல் தன்னை காட்டிக்கொண்டு பேஸ்புக் ஊடாக இந்த உறவை பேணி வந்துள்ளார்.

விரைவில் இலங்கைக்கு வந்து திருமணம் செய்து அமெரிக்கா அழைத்துச் செல்வதாக முகநூல் ஊடாக மேற்கொள்ளப்பட்ட அழைப்புகள் மூலம் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

பெண்ணுடன் சிறிது காலம் டேட்டிங் செய்த பிறகு, சந்தேக நபர் பெண்ணை பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டு, தனது தாயார் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அவசர அறுவை சிகிச்சைக்காக தனக்கு ரூ. 4.8 மில்லியன் தேவையெனவும் கேட்டுள்ளார்.

பணத்தை வசூலிக்க அண்ணனை அனுப்புவார் என்றும் இலங்கைக்கு வந்தவுடன் பணத்தை திருப்பித் தருவதாகவும் சதேகநபர் உறுதியளித்திருந்தார். பின்னர், அந்த பெண்ணிடம் சென்று, கோடீஸ்வரனின் சகோதரன் தானேயென குறிப்பிட்டு, பணத்தை பெற்றுள்ளார்.

அதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண் பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார். அதன் பிரகாரம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபர் கைதாகியுள்ளார். இந்நிலையில் கைதான நபரை ஏப்ரல் 28 வரை விளக்கமறியலில் வைக்க நீர்கொழும்பு பிரதான நீதவான் சம்பிகா ராஜபக்ஷ நேற்று உத்தரவிட்டார்.

காதல் திருமணம் செய்து ஒரு மாதம் கூட ஆகவில்லை.. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு!!

திருப்பத்தூரில்..

சிலருக்கு காதலித்தவரையே திருமணம் செய்து கொள்ளும் பேறு கிடைப்பது எல்லாம் வரம் தான். ஆனா… காதலிச்சவங்களையே கல்யாணம் பண்ணிக் கொண்டவர்களில் எத்தனைப் பேர் சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்பதில் இருக்கிறது காதலின் வெற்றி.

காதலிக்கும் போது இருக்கிற சுகமும், உறுதியும் திருமணத்திற்கு பிறகு காணாமல் போய்விடுவது தான் பலரது வாழ்வில் சறுக்க துவங்குகிறது. காதலிச்சவரையே கைப்பிடித்து முழுசா ஒரு மாசம் கூட முடியலை.. ஆசை முப்பது நாள்னு சொல்வாங்க… முப்பது நாள் கூட ஆகலை…

அதுக்குள்ள 26 வயசான அனுப்பிரியா தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்டது உறவினர்களையும், நண்பர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இத்தனைக்கும் கல்யாணத்துக்கு அப்புறமா சந்தோஷமா வாழ்றதா தான் எல்லோரிடமும் சொல்லி வந்திருக்கிறார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்துள்ள விண்ணமங்கலத்தைச் சேர்ந்தவர் அனுப்பிரியா (26). சென்னையில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்த அனுப்பிரியா, வங்கி பணிக்கான தேர்வு எழுதுவதற்காக ஆம்பூரில் தனியார் பயிற்சி மையம் ஒன்றிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஆம்பூர் மின்னூரைச் சேர்ந்த திருமுருகன் (26) என்பவருடன் பயிற்சி வகுப்பின் போது பழக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் இவர்களது நட்பு காதலாக மலர்ந்தது. சில மாதங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த மாதம் இருவரும் ஆம்பூரில் உள்ள கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பின்னர் மின்னூர் பகுதியில் இருவரும் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தனர். இந்நிலையில், காதல்… கல்யாணத்தில் முடிந்ததும் பொருளாதாரம் இருவரின் முகத்திலும் அறைய துவங்கியுள்ளது.

இது குறித்து கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. தகராறு முற்றியதில், வாழ்வை வெறுத்த அனுப்பிரியா, மன அழுத்தத்தில் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்பூர் தாலுகா போலீசார் அனுப்பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அனுப்பிரியா தற்கொலை செய்து கொண்டது குறித்து தகவல் அறிந்து வந்த அவரது பெற்றோர்களும், உறவினர்களும் ஆம்பூர் தாலுகா காவல் நிலையத்தின் முன்பு குவிந்தனர். மேலும் அனுப்பிரியாவின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருமணமாகி முழுசாக ஒரு மாதம் கூட முடிவடையாத நிலையில், புதுப்பெண் மரணமடைந்ததால், அனுப்பிரியாவின் இறப்புக்கான காரணம் குறித்து வாணியம்பாடி கோட்டாட்சியர் பிரேமலதா விசாரனை நடத்தி வருகிறார். இந்நிலையில் திருமுருகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரரின் உடைக்கப்பட்ட சிலைகள் நாளை பிரதிஷ்டை செய்யப்படுகிறது : நீதிமன்றம் அனுமதி!!

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்து வழிபாடு மேற்கொள்ள முடியுமென வவுனியாவவுனியா மாவட்ட நீதிமன்றம் இன்று (27.04) உத்தரவிட்டது.

அத்துடன், ஆதிலிங்கேஸ்வரர் சிலைகளை உடைத்தவர்கள் யார் என்பதை கண்டறிந்து உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டுமென்றும் பொலிசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆதிலிங்கேஸ்வர் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்ள முடியுமென கடந்த 24ஆம் திகதி உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை இன்று வரை ஒத்தி வைத்திருந்தது.

இன்று தொல்லியல் திணைக்களமும் மன்றில் முன்னிலையாகி, சிலைகள் மீள பிரதிஷ்டை செய்வதில் ஆட்சேபணையில்லையென அறிவித்தனர்.

இதையடுத்து, நாளை வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வர் ஆலயத்தில் சிலைகள் மீள பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன.

பேஸ்புக்கால் சீரழிந்த 15 வயது மாணவியின் வாழ்க்கை!!

மாத்தறையில்..

15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதிவான் நேற்று செவ்வாய்க்கிழமை (25) உத்தரவிட்டுள்ளார்.

பேஸ்புக் ஊடாக 15 வயது சிறுமியுடன் தொடர்பைப் பேணிய இளைஞரே கைது செய்யப்பட்டவராவார். மாத்தறையைச் சேர்ந்த 22 வயதுடைய குறித்த இளைஞர், சிறுமியை பிறிதொரு இடத்தில் சந்தித்து அவர் தங்கியிருந்த வீட்டுக்கு அழைத்துச் சென்று பல நாட்கள் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் தனது மகள் இனந்தெரியாத இளைஞனுடன் வீடு ஒன்றில் தங்கியிருப்பதாக சிறுமியின் தாயாருக்குக் கிடைத்த தகவலின்பேரில் சிறுமியின் தாய் திவுலப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமியை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைத்ததையடுத்து, சிறுமி தாயின் பாதுகாப்பில் இருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பலரையும் சோகத்தில் ஆழ்த்திய சிறுமியின் மரணம்.. விசாரணையில் வெளியான காரணம்!!

கம்பளையில்..

கம்பளை-உடுவெல்ல பிரதேசத்தில் ஏழு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்க வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட பெரசிட்டமோல் மருந்து அளவுக்கதிகமாக வழங்கப்பட்டதால் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குறித்த சிறுமி உயிரிழந்துள்ளார்.

கம்பளை உடஹெந்தென்ன, உடுவெல்ல தாமரவல்லி பகுதியை சேர்ந்த ஷியாமலி தருஷி என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி அந்த சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இதன் பின்னர் சிறுமியை அப்பகுதியிலுள்ள ஒரேயொரு கிராமிய வைத்தியசாலையான குருந்துவத்தை பிரதேச வைத்தியசாலைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர்.

இதேவேளை வைத்தியசாலை வைத்தியர் பரிந்துரைத்த மருந்தை வைத்தியசாலையின் மருந்தகத்தில் இருந்து எடுத்துச் சென்ற போதிலும் சிறுமியின் நோய் குணமாகவில்லை.

இரண்டாவது மருந்திலும் குணமடையாததால் சிறுமியை கம்பளை வைத்தியசாலைக்கு பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர். கம்பளை வைத்தியசாலையின் வைத்தியர்கள், சிறுமியை பரிசோதித்ததுடன் சிறுமிக்கு குருந்துவத்தை வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட மருந்துகளையும் பரிசோதித்துள்ளனர்.

அதன்படி, சிறுமிக்கு அளவுக்கு அதிகமாக மருந்து கொடுக்கப்பட்டதை வைத்தியர்கள் உறுதி செய்துள்ளனர். ஆபத்தான நிலையில் இருந்த சிறுமி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுமி உயிரிழந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் குருந்துவத்தை வைத்தியசாலையில் மருந்துகளை வழங்க போதுமான கடதாசி பொதிகள் இல்லாமையினால், மருந்துகளை கடதாசிகளில் சுற்றி அதனுள் மருந்துகளின் அளவுகள் எழுதி வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

இவ்வாறு வழங்கப்பட்ட மருந்துகளில் வைத்தியர் கடதாசியின் வெளிப்புறம் ஒரு மாத்திரை வீதம் வழங்குமாறும், மருந்து வழங்கியவர் கடதாசியின் உட்புறம் இரண்டு மாத்திரை வீதம் வழங்குமாறும் எழுதியுள்ளனர்.

எவ்வாறாயினும், பெற்றோர் கடதாசியின் உட்புறம் குறிப்பிடப்பட்டிருந்தவாறு இரண்டு மாத்திரைகள் வீதம் வழங்கி வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் நிஹால் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு இளைஞனின் புதிய முயற்சி : பாக்கு நீரிணையை நீந்தி படைக்கவுள்ள சாதனை!!

மட்டக்களப்பில்..

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி பழைய மாணவரும் ஜனாதிபதி விருது பெற்ற சிரேஷ்ட சாரணருமான தவேந்திரன் மதுஷிகன் அடுத்த வாரம் மே மாதம் 4ஆம் திகதி பாக்கு நீரிணையை நீந்திச் சாதனை படைக்கவுள்ளார்.

இதற்காக இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து அதிகாலை ஒரு மணிக்கு தனது நீச்சல் பயணத்தை ஆரம்பித்து பாக்கு நீரிணையை நீந்தி இலங்கையின் தலைமன்னாரை வந்தடையவுள்ளார்.

இவர் தனது சாதனை நீச்சல் பயணத்தில் 30கிலோமீட்டர் தூரமுடைய நீரிணையை சுமார் 10 மணித்தியாலங்களில் நீந்திக் கரை சேருவதற்கு எதிர்பார்க்கிறார். மதுஷிகன் தனது சாதனைக்கான முன்னாயத்தமாக கல்கிஸை கடற்கரையில் 20கிலோ மீற்றர் தூரம் வரை நீந்தியுள்ளார்.

தற்போது 20 வயதான மதுஷிகன், மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் பன்னிரண்டு வயதில் தனது நீச்சல் பயிற்சியை ஆரம்பித்து மாகாண மற்றும் திறந்த மட்ட நீச்சல் போட்டிகளில் பங்கேற்று வெற்றியீட்டியுள்ளார்.

இதுவரை நீச்சல் திறமைக்காக 12 பதக்கங்களை வென்றெடுத்துள்ள மதுஷிகன் கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் கணிதத்துறையில் தமது பாடசாலைக் கல்வியை கற்றதுடன், இலங்கை சாரணியப் படையில் இணைந்து தமது ஆற்றல்களை வெளிப்படுத்தி வந்துள்ளார்.

தவேந்திரன் மதுஷிகன் தனது நீச்சல் திறமையினை சாதனையாக மாற்றுவதற்கு பாடசாலையின் பழைய மாணவர்கள், கடல் சார் செயற்பாடுகளில் ஈடுபடும் ஒஷியன் பயோம் என்ற அமைப்பு மற்றும் தனது பெற்றோர்களான தந்தை தங்கையா தவேந்திரன், தாய் அகல்யா ரோஷினி ஆகியோர் ஊக்குவிப்பதாக நினைவு கூர்ந்தார்.

தாகம் ஏற்படும் வரை காத்திருக்க வேண்டாம் – இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை.!!

இலங்கையில்..

இலங்கையில் வெப்பமான காலநிலை காரணமாக ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடும் வெப்பம் காரணமாக, மக்கள் தாகம் எடுக்கும் வரை காத்திருக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பல மாவட்டங்களில் வெப்பமான காலநிலை நிலவுவதே இந்த கோரிக்கை விடுப்பதற்கு காரணமாகும்.

பல மாவட்டங்களில் 32 முதல் 36 பாகை செல்சியஸ் வரை வெப்பம் நிலவினாலும், அதை விட மனித உடல் வெப்பம் அதிகமாக இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த வெப்பமான காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்ஸ்டாகிராம் காதல்… மாணவியை சீரழித்த காதலன் : உடந்தையாக இருந்த தோழிகள்!!

கன்னியாகுமரியில்..

கேரளா மாநிலம், எர்ணாகுளம், காலடி பகுதியை சேர்ந்தவர் அஜின் சாம். இவரது நண்பர்கள் அகிலேஷ் ஷாபு, ஜிதின் வர்கீஸ், பூர்ணிமா தினேஷ், சுருதி சித்தார்த். இதில் உள்ள அஜன் சாம் கடந்த சில மாதம் முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் களியக்காவிளை பகுதியை சேர்ந்த பிளஸ் 1 மாணவியிடம் நெருக்கமாக பழகியுள்ளார்.

பிறகு அந்த மாணவியை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார். கடந்த 17 ஆம் தேதி காரில் களியக்காவிளை வந்த அஜின் சேம் மற்றும் நண்பர்கள் மாணவியை உடன் அழைத்து சென்றுள்ளனர். பின்னர் நெய்யாற்றின் கரையில் உள்ள நட்சத்திர விடுதியில் அடைத்து வைத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

அங்கு அஜின் சாம் மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். 18 ஆம் தேதி மாணவியை அவரது வீட்டருகில் விட்டு விட்டு சென்றுள்ளனர். மறுநாள் முதல் அஜின் சாம் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது.

இதனால் சந்தேகம் அடைந்த மாணவி நடந்த சம்பவத்தை உறவினர்களிடம் தெரிவித்தார். உடனடியாக களியக்காவிளை அருகேயுள்ள பாறசாலை போலீசில் புகார் அளித்தனர். போலீசார் எர்ணாகுளத்தில் சென்று சம்மந்தபட்ட 5 நபர்களையும் கைது செய்தனர்.

விசாரணையில் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்ற நோக்கத்தில் பெண் நண்பர்களையும் அழைத்து வந்ததாக தெரிகிறது. இந்த கும்பலால் வேறு பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா ? என்று விசாரணை நடைபெற்று வருகிறது. மாணவியை கடத்தி திருமணம் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.

திருமண ஆசையில் 34 லட்சத்தை இழந்த மருத்துவர்… அமெரிக்க டாக்டர் எனக் கூறி இளம்பெண் மோசடி!!

புதுச்சேரியில்..

புதுச்சேரி தோட்டக்கால் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. 36 வயதுடைய இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் , கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பாலாஜி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்த சூழலில் பாலாஜிக்கு 2-வது திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். எனவே பாலாஜியின் தகவல்களை திருமண தகவல் மைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்தனர். இதனை தொடர்ந்து பாலாஜியின் செல்போன் எண்ணுக்கு பலரும் தொடர்ந்து கொண்டு பேசினர்.

அப்போது பாலாஜிக்கு சோமஸ்ரீ நாயக் என்ற ஒரு பெண் ஒருவர் அறிமுகமானார். ஆரம்பத்தில் நன்றாக பேசிய அவர், தான் அமெரிக்காவில் டாக்டருக்கு படித்து முடித்துவிட்டு, சிரியா நாட்டில் வேலை பார்த்து வருவதாகவும், தன்னிடம் அதிகமான பணம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனை நம்பிய பாலாஜி அவரிடம் அப்படியே பேசி பேசி தனது வாட்ஸ் அப் எண்ணையும் பகிர்ந்துள்ளார். தொடர்ந்து இருவரும் நட்பாக பேச தொடங்கி திருமணம் செய்வது குறித்தும் பேசி வந்துள்ளனர்.

மேலும் 100 க்கும் மேற்பட்ட தனது புகைப்படங்களை சோமஸ்ரீ நாயக் பாலாஜிக்கு அனுப்பிய நிலையில், இருவருக்கும் ஒருவருக்கு ஒருவரை பிடித்து போயுள்ளது. எனவே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.

இந்த நிலையில் சோமஸ்ரீ தனக்கு பணத்தேவை இருப்பதாக கூறி பாலாஜியிடம் இருந்து பல்வேறு தவணைகளாக ரூ.34 லட்சத்து 55 ஆயிரத்தை வாங்கி உள்ளார். அதன்பிறகு திருமணம் குறித்து தீவிர பேச்சுவார்த்தை போகவே சோமஸ்ரீ பாலாஜியிடம் சரியாக பேசுவதில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் சோமஸ்ரீ மீது பாலாஜிக்கு சந்தேகம் எழுந்தது. தொடர்ந்து அவரது டாக்டர் பதிவு எண் (ஐ.டி.) கேட்டார். அதற்கு அவர் எந்த பதிலும் சொல்லாமல் மழுப்பி வந்துள்ளார். மேலும் பாலாஜியுடன் பேசுவதையும் நிறுத்தியுள்ளார்.

அவரது எண்ணை தொடர்பு கொண்டால் அது தவறு என்று வந்துள்ளது. இதையடுத்தே தான் ஏமாற்றப்பட்டதை பாலாஜி உணர்ந்தார். பின்னர் இந்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலிசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சைபர் கிரைம் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

புதுச்சேரியை சேர்ந்த மருத்துவர் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அமெரிக்க டாக்டர் என்று கூறி பெண் ஒருவர், ரூ.34 லட்சம் மோசடி செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.