திண்டுக்கல்லில்..

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்த அழகுபாண்டி- முத்தாலம்மாள் தம்பதிக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உண்டு. இதில் 2ஆவது மகள் ஜோகிதா ( 18).

இளம்பெண் ஜோகிதா திருச்சியில் தனது அத்தை மகாலட்சுமி (40) வீட்டில் தங்கியிருந்து சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

மகாலட்சுமி மளிகை கடையில் வேலை பார்த்து வருகிறார். மேலும் ஜோகிதாவின் அக்காள் பவித்ராவுக்கு திருமணமாகி திருச்சியில் உள்ள அவரது அத்தை வீட்டிற்கு அருகே வசித்து வருகிறார்.

மகாலட்சுமி வழக்கம் போல் காலை மளிகை கடைக்கு வேலைக்கு சென்று விட்ட நிலையில், ஜோகிதா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மாலை 4.30 மணியளவில் பவித்ரா பலமுறை போன் செய்தும் ஜோகிதாவின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த பவித்ரா, அத்தை வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது ஜோகிதா கழுத்து மற்றும் முதுகு பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அவர் கதறி அழுததால், அவரது சத்தம் கேட்டு அப்பகுதியினர் திரண்டனர். பின்னர் அங்கு வந்த அவரது உறவினர்கள் ஜோகிதாவின் உடலுடன் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த தில்லைநகர் போலீசார் ஜோகிதாவின் உறவினர்களை தொடர்பு கொண்டு, அவரது உடலை திருச்சிக்கு கொண்டு வரும்படி கூறினர்.

இதையடுத்து ஜோகிதாவின் உடலை அவர்கள் திருச்சிக்கு கொண்டு வந்தனர். பின்னர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஜோகிதா குத்தி கொலை செய்யப்பட்டதற்கான அடையாளம் உள்ளதால், இது குறித்து வழக்குப் பதிவு செய்து, ஜோகிதாவை கொலைச் செய்தது யார்? அதற்கான காரணம் குறித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

































































