யாழில் 14 வயது மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். உதைபந்தாட்டத்திற்கு தேவையான காலணியை தந்தை, வாங்கிக் கொடுக்கவில்லை என்ற விரக்தியில் மாணவன் இந்த தவறான முடிவினை எடுத்துள்ளார்.
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, வட்டுக்கோட்டை மேற்கு பகுதியில் வசித்து வந்த மாணவனே நேற்றிரவு இவ்வாறு தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். குடும்பத்தின் வறுமை நிலை காரணமாக தந்தையால் உடனடியாக காலணியை வாங்கிக் கொடுக்க முடியாத நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த மாணவனது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
களுத்துறை – மத்துகம வீதியில் கல் அஸ்ஹேன் பிரசேத்தில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்த யுவதி தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விபத்தில் களுத்துறை, சேறுபிட்ட வெந்தேசிவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட கந்தமுல்லைச் சேர்ந்த உதேனி நிமேஷா கருணாதிலக்க என்ற 23 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் கொழும்பில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் விஞ்ஞான பிரிவில் பயிலும் இறுதியாண்டு மாணவியென விசாரணையில் தெரியவந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவருக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் தான் திருமணம் செய்யவிருந்த இளைஞனுடன் களுத்துறையில் இருந்து மத்துகம நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது களுத்துறையிலிருந்து சென்ற லொறியுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் யுவதி உயிரிழந்துள்ளதாகவும், இளைஞன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை களக்கத்தினால் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் விசாரணை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு – சித்தாண்டியில் இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்த இளைஞனின் ஐந்து உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மேலும் அவரது குடும்பத்தினரும் அவயங்களைத் தானம் செய்வதில் ஆர்வம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வயல் வேலை முடித்து கிரான் பகுதியிலிருந்து சித்தாண்டியிலுள்ள தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இந்திரசேன ரேனுஜன் (வயது 29) படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை (21.04.2023) இடம்பெற்ற விபத்தின் போது படுகாயடைந்த அவர், மூளைச்சாவு அடைந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்ததையடுத்து வைத்தியர்களின் ஆலோசனையுடன் அவரது உடலுறுப்புக்களை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்துள்ளனர்.
அதனடிப்படையில் மூளைச்சாவடைந்த ரேனுஜனின் சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல், இதயம் ஆகிய அவயங்கள் தேவையுடையோருக்கு பொருத்தும் வகையில் தானம் செய்யப்பட்டதாக ரேனுஜனின் சகோதரி இந்திரசேன கிரிஷாந்தினி தெரிவித்துள்ளார்.
தமது சகோதரனை இழந்தது ஆறாத் துயரமாக இருந்த போதிலும் தமது சகோதரனின் உடல் உறுப்புக்கள் 5 பேருக்கு வாழ்வளிக்கும் என்பதில் தமது சகோதரன் சாகாவரம் பெற்றுள்ளதாக நினைத்து தமது குடும்பத்தினர் பெருமையடைவதாக கிரிஷாந்தினி தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதுபோன்று உடலுறுப்புக்களைத் தானம் செய்ய தாமும் தமது குடும்பத்தவர்களும் சித்தமாக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். எப்போதும் பொது நலனில் அக்கறை கொண்டுள்ள கிரிஷாந்தினி கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இரத்த தானம் செய்து வருவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரேனுஜனின் உடல் அதிகளவானோரின் பங்கேற்புடன் சனிக்கிழமை (22.04.2023) சித்தாண்டியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
குறித்த விபத்தை ஏற்படுத்திய மற்றைய மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானமான போயிங் 737 விமானம் நடுவானில் சென்றுகொண்டிருந்த போது திடீரென தீப்பற்றியுள்ளது. இதனால் விமானம் உடனடியாக தரை இறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொலம்பஸ்சில் இருந்து பீனிக்ஸ் நகருக்கு விமானம் பயணம் செய்து கொண்டிருந்த போது பறவை ஒன்று விமானத்தின் இறக்கையில் மோதியுள்ளது. இதனால் விமானத்தின் என்ஜின் இருக்கும் பகுதியின் ஒருபுறத்தில் இருந்து புகை வெளிவந்து சிறிது நேரத்தில் தீ பிடிக்க தொடங்கியுள்ளது.
இதையடுத்து உடனடியாக விமானம் தரை இறக்கப்பட்டுள்ளது. இவ்விபத்து சம்பவத்தின் போது விமானத்தில் 173 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்துள்ளனர்.
விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. பின்னர் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறக்கி மற்றொரு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மின் உற்பத்தி நிலையங்களுக்கு அருகில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 30.8 சதவீதமாக குறைந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் நாளாந்த மின்சாரத் தேவை அதிகரித்துள்ளதுடன், மணித்தியாலத்திற்கு 45.2 ஜிகாவாட்களை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறைந்த நீர்மட்டம் நாட்டின் மின் உற்பத்தியை பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக காசல்ரீ, கொத்மலை மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களில் மிகக் குறைந்த நீர்மட்டம் பதிவாகியுள்ளது.
இதற்கமைய காசல்ரீ நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு இப்போது 13 சதவீதமாகவும், கொத்மலை நீர்த்தேக்கம் மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கம் முறையே 13.3 சதவீதம் மற்றும் 15 சதவீதம் கொள்ளளவாகவும் உள்ளது.
இதேவேளை விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 34 சதவீதமாகவும், ரந்தெனிகல நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 84 சதவீதமாகவும், சமன் வெவ நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 38 சதவீதமாகவும் உள்ளது.
மேலும் மொத்த மின் உற்பத்தியில் 14 சதவீதம் மாத்திரமே நீர்மின் நிலையங்கள் மூலமாகவும், 72.5 சதவீதம் அனல் மின் நிலையங்களில் இருந்தும் கிடைகின்றன.
தனது கணவனை கொலை செய்வதற்காக ஒரு இலட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்த சந்தேகத்தின் பேரில் மனைவியை நேற்றையதினம் (23) ஆனமடுவ பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
சந்தேக நபரான பெண் தனது கணவரின் நெருங்கிய நண்பருடன் தகாத உறவைப் பேணியிருந்தமை பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில், பெண்ணுடன் தகாத உறவை வைத்தார் என கூறப்படும் நண்பர் உட்பட மேலும் நால்வரை ஆனமடுவ பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
சம்பவத்தின்போது வாள்வெட்டுக்கு இலக்கான கணவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேசமயம் கொலை முயற்சிக்கு பயன்படுத்தப்பட்ட வாள்கள் மற்றும் கத்திகள் ஆறொன்றிலிருந்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காடழிப்பை வெளிப்படுத்திய ஆசியருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதுடன், சமூக வலைத்தளங்களிலும் அவதூறு ஏற்படுத்தப்படுவதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர் இன்று (25.04) வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.
வவுனியா, கட்டையர்குளம் பகுதியில் கடந்த சில நாட்களாக காடழிப்பு இடம்பெற்று வந்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற அக் கிராம மக்களும், கிராம அபிவிருத்தி சங்கத்தினரும் அதனை தடுத்து நிறுத்தியதுடன், இது தொடர்பில் அரச அதிருடமும் முறைப்பாடு செய்திருந்தனர்.
இதனையடுத்து, குறித்த கிராமத்தின் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினரும், குறித்த பிரச்சினையை வெளிக்கொண்டு வந்தவருமான ஆசிரியருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய கிராம அலுவலர் ஒருவர் ஆசிரியருக்கு தொலைபேசியில் மிரட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்,
போலி முகநூலின் ஊடக குறித்த ஆசிரியரின் புகைப்படத்தை பதிவிட்டு அவதூறு ஏற்படுத்தப்படுத்தியுள்ளதாக தெரிவித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர் குறித்த சம்பவம் தொடர்பில்,
வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் அவர்களிடம் முறையிட்டுள்ளதுடன், வவுனியா பொலிசிலும் ஒர் கிராம அலுவலருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வவுனியா, கட்டையர்குளம் பகுதியில் 12 ஏக்கர் காடு சட்டவிரோதமாக அழிக்கப்பட்டுள்ள போதும் இது தொடர்பில் பொலிசாரும், வன இலாகாவும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப் பகுதி கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வவுனியா, ஈச்சங்குளம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள கட்டையர்குளம் பகுதியில் வனஇலாகாவுக்கு சொந்தமான காட்டுப்பகுதி 12 ஏக்கர் கடந்த சில நாட்களாக அழிக்கப்பட்டு வருகின்றது.
இது குறித்து அரச அதிகாரிகள் பலருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னரே மக்கள் முறையிட்டும் குறித்த காடழிப்பு தடுத்து நிறுத்தப்படவில்லை என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், நேற்றைய தினமும் (23.04) குறித்த பகுதியில் காடழிப்பு மற்றும் அதனுடன் இணைந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட போது அங்கு சென்ற கிராம மக்கள் அதனை தடுத்து நிறுத்தியுள்ளதுடன்,
இது தொடர்பில் ஈச்சங்குளம் பொலிசாருக்கும் முறைப்பாடு செய்திருந்தனர். இருப்பினும் பொலிசார் தமது முறைப்பாட்டை பதிவு செய்யவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
காடழிப்பு இடம்பெற்ற போது குறித்த பகுதிக்கு தமது பகுதியில் இல்லாத வாகனங்கள் சில வந்து சென்றதாகவும் கிராம மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த பகுதியானது வரைபடத்தில் காட்டுப் பகுதியாக காணப்படுகின்ற போதும் எவருடைய அனுமதியும் பெறப்படாது சில அதிகாரிகள் தமது அதிகாரத்தை பயன்படுத்தி காடழிப்பில் ஈடுபடுகின்றார்களா அல்லது காடழிப்புக்கு துணை போகின்றார்களா என கிராம மக்கள் கேள்வி எழுப்பியுள்ளதுடன், இது தொடர்பில் அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பிரதேச செயலாளர், வவுனியா மாவட்ட செயலாளர், வனஇலாகா ஆகியோருக்கும் கிராம மக்களால் நேற்று (24.04) எழுத்து மூலம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம், சிங்கள மயமாக்கலை எதிர்த்து வடக்கு, கிழக்கில் இன்று செவ்வாய்க்கிழமை (25.04.2023) பூரண ஹர்த்தால் இடம் பெறுகின்றது.
வவுனியா மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் , சிங்கள மக்கள் ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் அந்தப் பகுதிகளில் அனைத்து துறைகளும் இன்று முடங்கியுள்ளன.
வவுனியாவில் தமிழ், முஸ்லிம் , சிங்கள மக்களின் வர்த்தக நிலையங்கள், சந்தைகள், அழகக நிலையங்கள் பூட்டப்பட்டு காணப்படுகின்றன.
பாடசாலைகளுக்கு மாணவர்கள் வருகைதரவில்லை. இதனால் பாடசாலைகள் இயங்கவில்லை. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து காணப்படுகின்றது.
தனியார் பேரூந்துகளும் சேவையில் ஈடுபடவில்லை மேலும் அரச திணைக்களங்கள் , அரச பேரூந்துகள் வழமை போன்று இயங்குகின்றன.
கிரீஸில் நடைபெற்ற உலக பாடசாலை சதுரங்கப்போட்டியில் 9 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தங்கப்பதக்கத்தை கொழும்பு ஆனந்த வித்தியாலயத்தை சேர்ந்த ரித்மிதா தெஹாஸ் கிரிங்கோடா வென்றுள்ளார்.
உலகின் 23 நாடுகளைச் சேர்ந்த 61 பாடசாலையை சேர்ந்த செஸ் வீரர்கள் போட்டியில் பங்கேற்றுள்ளனர். இதில் 9 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் ரித்மிதா தெஹாஸ் 9 சுற்றுகளில் 7.5 புள்ளிகளைப் பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளார்.
இந்த போட்டியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை கஜகஸ்தானின் பாடசாலை வீரர்கள் பெற்றுள்ளனர். மேலும் அவர்கள் இருவரும் 9 சுற்றுகளில் இருந்து புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
இந்த போட்டியின் ஆரம்பம் முதல் முன்னணியில் இருந்த ரித்மிதா தெஹாஸ், தன்னை விட அதிக புள்ளிகளை பெற்ற வீரர்களை முறியடித்து வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாளையதினம் நடைபெறவிருக்கும் ஹர்தாலுக்கு ஆதரவு கோரி இன்றையதினம் (24.04.2023) வவுனியா நகர் பகுதியில் தமிழ் தேசிய கட்சிகள், பொது அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.
வவுனியா நகரில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கும் வவுனியா நகரிற்கு வருகை தந்தவர்களுக்கும் இந்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் எமது இனத்திற்கு பாதகமான அதன் கடுமையான விளைவுகளை கருத்தில் கொண்டு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும்,
எமது இனத்தின் இருப்பை கேள்விக்குறியாக்கும் பேரினவாத அரசின் திட்டமிட்ட, இந்நாட்டின் பூர்வீக குடிகளான தமிழ் மக்களின் வரலாற்றை சிதைக்கும் அரசின் அனைத்து கட்டமைப்புக்களின் செயற்பாட்டை எதிர்க்க நாளைய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
குறித்த துண்டுப்பிரசுரம் வழங்கும் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி, தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்டகிளையின் செயலாளர் ந.கருணாநிதி,
முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான செந்தில்நாதன் மயூரன், ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராசா, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் குகன், புதிய ஜனநாயக மாக்ஸ்சிச லெனினிச கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் நி.பிரதீபன் மற்றும் கட்சியின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வடக்கு – கிழக்கில் ஹர்த்தால் அனுஸ்டிக்க ஆதரவு கோரி 6 கட்சிகளான இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் தேசியக் கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன கூட்டாக கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு கிழக்கில் நாளையதினம் கர்த்தால் நடைபெறவுள்ள நிலையில் ஊழியர் நலன்புரி சங்கத்தினரினால் இன்று (24.04.2023) மாலை வர்த்தக நிலையங்களுக்கு துண்டுப்பிரசுரமொன்று விநியோகிக்கப்பட்டுள்ளது.
குறித்த துண்டுப்பிரசுரத்தில் நாளை கடை அடைப்பா? அல்லது கடை திறப்பா? அன்பான வவுனியா வாழ் வர்த்தகர்களே, பேருந்து உரிமையாளர்களே, முச்சக்கர வண்டி உரிமையாளர்களே, சிகை அலங்கரிப்பு உரிமையாளர்களே! உங்களிடம் தாழ்மையான வேண்டுகோள்,
நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் நாளைய தினம் தனிப்பட்ட அரசியல் நோக்கத்திற்காக நடைபெறவுள்ள கதவடைப்பால் எமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது.
இதனை கருத்தில் கொண்டு நாளைய தினம் நடைபெறவுள்ள கதவடைப்பிற்கு ஆதரவு வழங்க வேண்டாம் என்பதை தாழ்மையாக கேட்டுக் கொள்கின்றோம்.
குறிப்பு:- இந்த கதவடைப்பை ஏற்பாடு செய்துள்ள அரசியல் கட்சிகள், அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்காக இதுவரை உண்ணாவிரதமோ இல்லை பாராளுமன்ற பகிஷ்கரிப்போ செய்ததில்லை. இதற்காக நீங்கள் ஏன் ஆதரவு வழங்க வேண்டும்?
பல்கலைக்கழக மாணவர்களே இதே கதவடைப்பை செய்கின்ற அரசியல்வாதிகள் 1972 யாழ் பல்கலைக்கழகம் வருவதை தடை செய்து கறுப்பு கொடி கட்டி கதவடைப்பு செய்ய முன்வந்தவர்கள். இவர்களுக்கு ஏன் ஆதரவு வழங்க வேண்டும்?
2009 முள்ளிவாய்க்காலில் மக்கள் அவதிப்படும் போது இதே அரசியல்வாதிகள் அனைவரும் வெளிநாடுகளில் சொகுசான வாழ்க்கையை வாழ்ந்தார்கள். அப்போது ஏன் ஒரு ஆர்ப்பாட்டமோ உண்ணாவிரதமோ இருக்கவில்லை?
நல்லாட்சி அரசாங்கத்தில் இணைந்து இருக்கும் போது ஏன் இந்த கதவடைப்பை செய்யவில்லை? அப்போது பல்வேறுபட்ட பதவிகளை பெற்று சொகுசு வாழ்க்கை வாழும் போது தெரியவில்லையா? இப்போது தான் இது தேவையா?
யுத்த காலத்தில் இருந்த அனைத்து ஆயுத குழுக்களும் அந்த யுத்த காலத்தில் அரசாங்கத்திடம் நிவாரணம் பெற்று அரசாங்கத்திற்காக செயற்பட்டவர்கள் தானே? இப்போது மட்டும் ஏன் இந்த புதியநிலை?
இந்த கதவடைப்பை செய்து மக்களின் ஆதரவை காட்டி வரப்போகும் ஜனாதிபதி தேர்தலில் அரசிடம் பேரம் பேசி பணத்தினை பெற்றுக் கொள்வதற்கு தானே இந்த கதவடைப்பு?
ஏன் மக்களை ஏமாற்றுகிறீர்கள்? சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கபோவதாக சூளுரைத்தவர், எங்கே எப்போது உண்ணாவிரதம் இருக்க போகிறீர்கள்?
எந்த ஆயுதக் குழுவுடனும் சேர்ந்து அறிக்கை விடமாட்டேன் என்று உரைத்த விக்கினேஸ்வரன் ஐயா. இப்போது யாருடன் கூட்டு சேர்ந்துள்ளீர்கள் சம்பந்தன் ஐயா, நீங்கள் ஏன் இந்த மௌனம்?
இந்த அரசியல்வாதிகள் தமது சம்பளத்தில் எங்காவது மக்களுக்கோ அல்லது பொது தேவைக்காகவோ உதவிகள் செய்துள்ளீர்களா? இதுவரை காலமும் பாராளுமன்றத்தில் கிடைத்த வாகன அனுமதி பத்திரம் அனைத்தையும் விற்று சொகுசு வாழ்க்கை தான் வாழ்ந்துள்ளீர்கள்.
யாருக்காவது உதவி செய்துள்ளீர்களா? மக்களே! அனைவரும் இனியாவது சிந்தித்து செயல்படுங்கள். இப்படியான அரசியல் நோக்கங்களிற்காக நடைபெறும் எந்த செயலுக்கும் ஆதரவு வழங்காதீர்கள் என குறித்த துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் துண்டுப்பிரசுரத்தின் இறுதியில் ஊழியர் நலன்புரி சங்கத்தினர் என உரிமை கோரப்பட்டுள்ளதுடன் வவுனியா மாவட்டத்திலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு இன்று மாலை இவ் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
மத்துகம – குருதிப்பிட்ட பிரதேசத்தில் இளம் தந்தையொருவர் மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களால் கொடூரமான முறையில் தாக்கி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் தொடர்பில் புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.
கடந்த பெப்ரவரி 14 அன்று, கல்மட்ட, வெலிப்பன்ன வீதியில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச்சென்ற மூன்று பாடசாலைச் மாணவர்களை எச்சரித்த 34 வயதுடைய இளம் தந்தையொருவர் மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தால் அடித்துக் கொல்லப்பட்டார்.
சம்பவத்தில் ஒரு பிள்ளையின் தந்தையான ரங்கவிராஜ் துரதிஷ்டவசமாக உயிரிழந்திருந்தார்.இதனை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் மத்துகம நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் ரங்காவை தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் மூவர் மாகொல சிறுவர் தடுப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் 16 வயதுடைய பாடசாலை மாணவர்களான சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டு சிறுவர் தடுப்பு நிலையத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை ஏப்ரல் 18 ஆம் திகதி மீண்டும் மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் சந்தேகநபர்களான மூன்று மாணவர்களையும் வானில் மீண்டும் தடுப்பு நிலையத்திற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகநபர்களின் உறவினர்கள், நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள வீதியில் வானை நிறுத்தி சில பொருட்களை வழங்கியதாக கொலை செய்யப்பட்ட நபரின் உறவினர்களால் சிறைச்சாலை புலனாய்வுப்பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனை உயிரிழந்தவரின் சகோதரர் ஒருவர் கையடக்க தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்து சிறைச்சாலை அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளார். இந்நிலையில், இது தொடர்பில் உயிரிழந்த ரங்காவின் மூத்த சகோதரர் தெரிவிக்கையில்,
சந்தேகநபர்களின் உறவினர்கள், நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள வீதியில் வானை நிறுத்தி சில பொருட்களை வழங்கியதினை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வந்தோம். சம்பவத்தை கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்தோம். சந்தேகநபர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், எதிர் தரப்பினரான, எங்கள் மீது பலி விழும்.
எனவே இதனை அடுத்த வழக்கில், வழக்கறிஞர் மூலம், நீதிமன்றத்தில் தெரிவிக்க, சிறைத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர். அடுத்த வழக்கில் இந்த சம்பவத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்க எண்ணியுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரியில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் தமிழ் மொழிமூலப் பிரிவில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி இம்முறை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தனது வீட்டில் போதிய வசதிகள் இல்லாத காரணத்தினால், தனது தந்தையின் தங்கையினது வீட்டுக்கு சென்று மாணவி உறங்குவது வழக்கமாகும்.
இந்நிலையில்,கடந்த வியாழக்கிழமை (20) இரவு 10 மணியளவில் உறங்கச்சென்ற மாணவி (21) அதிகாலை நித்திரை கொண்டிருந்த தனது அத்தையை எழுப்பி, தண்ணீர் கேட்டு, அருந்திவிட்டு, மீண்டும் தூங்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து அதிகாலை 5 மணியளவில் அத்தையும் வீட்டாரும் நித்திரை விட்டெழுந்து மாணவியை பார்த்தபோது, அவர் வெறுந்தரையில் இருந்துள்ளார். அதனையடுத்து, உடனடியாக மாணவியை இரத்தினபுரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு மாணவியை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் முன்கூட்டியே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். குறித்த மாணவியின் மரணம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து மாணவியின் இறப்புக்கான காரணத்தை கண்டறிய இரத்தினபுரி நீதவான் நீதிமன்ற நீதவான் பிரேத பரிசோதனை செய்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், இரத்தினபுரி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை செய்வதற்கான விசேட வைத்திய நிபுணர் விடுமுறையில் இருப்பதனால் இதுவரை பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை எனவும் , மாணவியின் உடல் உறவினர்களிடம் இதுவரை கையளிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.
வவுனியாவில் ஹர்த்தால் தொடர்பில் சில பொது அமைப்புக்கள் தீர்க்கமான முடிவினை அறிவிக்காமையினால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல் மற்றும் பௌத்தமயமாக்கல் என்பவற்றுக்கு எதிராக நாளை (25.04) செவ்வாய்கிழமை வடக்கு – கிழக்கு பகுதியில் பூரண ஹர்த்தாலுக்கு 7 தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் சில பொது அமைப்புக்கள் அழைப்பு விடுத்திருந்தன.
இந்நிலையில் இன்றைய தினம் (24.04) ஹர்த்தால் நடவடிக்கைக்கு ஆதரவு கோரி வவுனியாவில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளில் வவுனியா மாவட்டத்தை உள்டக்கிய வன்னித் தேர்தல் தொகுதியில் செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகிய 3 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வில் அவர்கள் கலந்து கொள்ளவில்லை.
அத்துடன் வவுனியா மாவட்ட வர்த்தக சங்கம், தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம், மொத்த வியாபாரிகள் சங்கம், சிகை அலங்கரிப்பாளர் சங்கம் என எந்த அமைப்புடனும் அவர்கள் பேசவில்லை.
அவர்களது கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்திய சில முன்னாள் மாகாண சபை மற்றும் முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், வேட்பாளர்களே ஹர்த்தால் அழைப்பினை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், குறித்த ஹர்த்தாலுக்கு வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம், சிகையலங்கரிப்பாளர் சங்கம், பதிப்பாளர் கூட்டுறவுச் சங்கம் என்பன,
பூரண ஆதரவைத் தெரிவித்துள்ளதுடன், மொத்த விற்பனையாளர் சங்கம் (மரக்கறி), வர்த்தக சங்கம், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் என்பன தமது முடிவிவை தெளிவாக அறிவிக்கவில்லை.
இது தொடர்பில் அவர்களிடம் கேட்ட போது, அவர்கள் அதற்கு தெளிவான பதிலை வழங்க மறுத்து விட்டனர். இந்நிலையில் நாளைய தினம் (25.05) வர்த்தக நிலையங்களில் வேலை செய்வோர்,
மரக்கறிகளை கொண்டு செல்வோர், விவசாயிகள், பொது மக்கள் எனப் பலரும் வர்த்தக நிலையங்கள் திறக்குமா?, திறக்காதா என்ற குழப்பத்தில் உள்ளனர்.