கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா பகுதியில் ஸ்ரீகாந்த் – லட்சுமி தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு ஆதித்யா (4) என்ற மகனும், அமுல்யா என்ற மகளும் உள்ளனர். மலகாலா கிராமத்தில் தங்கியிருந்த இவர்கள் இருவருக்கும் இடையே அண்மைக்காலமாக குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் வீட்டில் அவ்வப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் ஸ்ரீகாந்த்- லட்சுமி தம்பதி இடையே இடையில் மீண்டும் தகராறு ஏற்பட்டபோது, ஸ்ரீகாந்த் கடும் கோபமடைந்தார். அப்போது அதிகாலையில் மனைவியை தாக்கிய அவர், திடீரென சுத்தியலால் 2 குழந்தைகளையும் பயங்கரமாக தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த இரண்டு குழந்தைகளும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஸ்ரீகாந்த் தலைமறைவாகி விட்டார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த லட்சுமி மீட்கப்பட்டு மைசூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஸ்ரீரங்கப்பட்டணா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு குழந்தைகளையும் தந்தையே சுத்தியலால் அடித்து கொலை செய்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா; பேச முடியாதவர்களே பேச வைப்பதாகவும், நடக்க முடியாதவர்களை நடக்க வைப்பதாகவும், நானே மகாவிஷ்ணு என கூறி ஏமாற்றிய போலி சாமியாரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சியை சேர்ந்த சந்தோஷ்குமாருக்கு இரண்டு மனைவிகளும். ஒரு மகனும் உள்ளனர். சந்தோஷின் மகன் ஒரு ஆண்டுகளுக்கு முன்பு தெலங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டம் சுகுரு கிராமத்தில் உள்ள ஒரு கோயிலில் அர்ச்சகராக பணி புரிந்து வருகிறார்.
சந்தோஷ் தன்னை மகா விஷ்ணுவாகவும், தனது மனைவிகளை ஸ்ரீதேவி, பூதேவி என கூறி கொண்டு மக்களை காக்க மனித உருவில் வந்த கடவுள் என தன்னை சந்திக்க வருபவர்களிடம் கூறி வந்துள்ளார்.
மேலும் நிஜ பாம்பு தனது படுக்கையாக இருக்க வேண்டும். தற்காலிகமாக ஐந்து தலைகள் கொண்ட பாம்பு போன்று கட்டில் அமைத்து அதில் படுத்து கொண்டு தனது இரண்டு மனைவிகள் கால் அழுத்தி விடுவது போன்றும், திருப்பதி ஏழுமலையான் போன்று வேடம் அணிந்து போட்டோக்களை எடுத்து சுற்று வட்டாரத்தில் நான் கடவுள் என பிரச்சாரம் செய்து வந்துள்ளார்.
அவ்வாது பாலமூறு மாவட்டம் கெட்டிதொட்டி மண்டலம் உமித்யாலா கிராமத்தின் தலைவர் சத்தியநாராயணனிடம் ஸ்ரீ ரங்கம் ரங்கநாத சுவாமி தனது உடலுக்குள் இருப்பதாகவும், நோயால் அவதியுறும் மக்களின் பிரச்சனைகள் தீர்க்க தனக்கு சிறிது இடம் ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டார். இதனையடுத்து, சத்யநாராயணாவும் கிராம மக்களுக்கு தெரிவித்து விவசாய நிலத்திற்கு மத்தியில் உள்ள வீட்டை வழங்கினர்.
அங்கு அமர்ந்து பக்தர்களை தரிசிக்க ஏற்பாடு செய்து கொண்டார். திருப்பதியில் உள்ள ஏழுமலையானுக்கு அலங்கரிக்கப்படும் மலர் மாலைகள் விரைவில் என்னை அலங்கரிக்க வரும் என பக்தர்களிடம் கூறி வந்தார்.
உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினருடன் தரிசித்தால், அனைத்து நோய்களும் விலகி, பூரண ஆரோக்கியத்துடன் வாழ்வர் என பக்தர்களுக்கு தெரிவித்தார். இதனை அறிந்த சுற்றுவட்டார மக்கள் சுவாமியை நேரில் சந்தித்து தங்களது குறைகளை தெரிவித்தனர்.
கடந்த மூன்று நாட்களாக பல்வேறு நோய்கள் மற்றும் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை சந்தோஷ் சுவாமி தீர்த்து வைப்பதாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.
சுவாமிஜியின் மகிமையால் தான் பலர் பேசவும், நடக்க முடியாதவர்கள் நடக்கவும் முடிந்தது என்ற பிரச்சாரம் சுற்றுவட்டார கிராமங்களுக்கு பரவியது. இதனால், சந்தோஷ் சுவாமியை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனை அறிந்த கொடிதொட்டி எஸ்.ஐ வெங்கடேஷ் உத்தரவின் பேரில், சந்தோஷ் சுவாமியை அங்கிருந்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் பல்வேறு நிபந்தனைகளுடன் விடுவித்தனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் காதல் ஜோடி சுட்டுக்கொலை செய்யப்பட்டு உடலை முதலைகள் நிறைந்த ஆற்றில் வீசிய கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்திற்குட்பட்ட ரத்தன்பாசாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதேஷ்யாம். இதே கிராமத்தைச் சேர்ந்தவர் ஷிவானி. இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதலுக்குப் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தனது மகன் ராதேஷ்யாம் காணவில்லை என அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்து வந்துள்ளனர். இந்த புகாரை அடுத்து ஷிவானியின் குடும்பத்தாரிடம் போலிஸார் விசாரணை நடத்தினர்.
பலமணி நேரம் நடந்த இந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. காதலுக்கு ஷிவானியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் ஷிவானி பெற்றோர்கள் பேச்சைக் கேட்காமல் காதலித்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ஜூன் 3ம் தேதி ஷிவானி மற்றும் ராதேஷ்யாம் இருவரையும் சுட்டுக்கொலை செய்துள்ளனர். பின்னர் இருவரது உடலையும் கிராமத்தின் அருகே இருந்த முதலைகள் நிறைந்த ஆற்றில் வீசியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இதையடுத்து அவர்களை போலிஸார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லண்டனில் இந்திய இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, அவருடன் தங்கியிருந்த இலங்கையரான அகிலா ஜனகம, அந்த கடைசி நிமிடங்களை பயத்துடன் நினைவு கூர்ந்துள்ளார்.
குறித்த குடியிருப்புக்கு இனி தம்மால் செல்ல முடியாது என குறிப்பிட்டுள்ள அகிலா ஜனகம, தனது வாழ்க்கையில் ஒரு ஐந்து நிமிடம் மிகுந்த மகிழ்ச்சியுடனும் அடுத்த ஐந்து நிமிடத்தில் மிகக் கொடூரமான சம்பவம் ஒன்றும் நடந்தது என தேஜஸ்வினி கொல்லப்பட்ட நாளை குறிப்பிட்டு கண்கலங்கியுள்ளார்.
தேஜஸ்வினியின் நெருங்கிய தோழியான 28 வயது அகிலா ஜனகம, மார்பில் 4 முறையும் காலில் ஒரு முறையும் கத்தியால் தாக்கப்பட்டு உயிர் தப்பிய நிலையில் சிகிச்சையில் உள்ளார்.
அந்த பிரேசில் இளைஞரிடம் இருந்து தம்மை காத்துக்கொள்ள கதவருகே நின்று போராடியதாகவும், அதே வேளை பொலிசாருக்கும் தொடர்புகொள்ள முயன்றதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்த 10 நிமிடங்கள் எனது வாழ்க்கையை மொத்தமாக புரட்டிப்போட்டது என கூறும் அகிலா, அந்த நிமிடங்கள் மயான அமைதி நிலவியது எனறும், தம்மால் தேஜாவின் கடைசி மூச்சு பிரிவதை கேட்க முடிந்தது என்றும் கூறியுள்ளார்.
சமையலறையில், ரத்தவெள்ளத்தில் கிடந்த அவளை தாம் பார்த்ததாகவும், ஆனால் அவள் முகம் தன்னால் பார்க்க முடியவில்லை என தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை பகல் Harry Styles இசை நிகழ்ச்சிக்கு செல்ல தாம் தயாராகிக் கொண்டு இருந்ததாக கூறும் அகிலா,
தேஜஸ்வினி மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவர் என்றும், எந்த தலைப்பிலும் சரளமாக பேசக்கூடியவர் எனவும் தெரிவித்துள்ளார். கிரீன்விச் பல்கலைக்கழக மாணவியான தேஜஸ்வினியுடன் கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே அகிலா ஒன்றாக தங்கி வருகிறார்.
திருமணம் செய்துகொள்ளும் முடிவுடன் செப்டம்பரில் தேஜஸ்வினி இந்தியா செல்ல இருந்ததையும் அகிலா குறிப்பிட்டுள்ளார். தற்போது தேஜஸ்வினியின் உடலை இந்தியாவுக்கு அனுப்பவும், அவரது குடும்பத்தினருக்கு உதவும் பொருட்டும் பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டி வருகின்றனர்.
அத்துடன், அகிலாவும் தமது மருத்துவ செலவு உட்பட தமது நிதி நெருக்கடியை சமாளிக்க, 10,000 பவுண்டுகள் தொகையை பொதுமக்களிடம் இருந்து திரட்ட முடிவு செய்துள்ளார்.
வாழ்க்கையில் இதுவரை மிக மோசமான தருணங்களை எதிர்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அகிலா, தமது அன்றாட பணிகளை முடிப்பதில் சிரமம் உள்ளது எனவும், மேலும் இந்த இக்கட்டான சூழலில் இனி நான் எப்போது பணிக்கு திரும்ப முடியும் என்று தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தேஜஸ்வினி கொலை வழக்கு மற்றும் அகிலா மீது கொலை முயற்சி உள்ளிட்ட குற்றங்களுக்காக 23 வயது Keven Antonio Lourenco De Morais என்ற இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குவைத்தில் இலங்கைப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம், வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவுக்கு அறிவித்துள்ளது. குலசிங்க ஆராச்சிலாகே அனுலா பிரிதிமாலி பெரேரா என்ற 66 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், அவரது இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள நெருங்கிய உறவினர்கள் அல்லது அவருக்குத் தெரிந்தவர்கள் இருந்தால், தங்களுக்கு விரைவில் அறிவிக்கவும்.
உயிரிழந்ததாக கூறப்படும் பெண் இலக்கம் 438/1, நுகாவத்தை வீதி, கிரிவத்துடுவ என்ற முகவரியில் வசிப்பவர் என குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்படி புகைப்படத்தில் உள்ள பெண்ணை யாரேனும் அறிந்தால், அமைச்சின் தொலைபேசி இலக்கம்: 011238836/ 0117711163/ 0112323015, மின்னஞ்சல்: consular@mfa.gov.lk அல்லது தூதரகப் பிரிவு, வெளிவிவகார அமைச்சு, 2வது மாடி, செலிங்கோ கட்டிடம் கொழும்பு 01. என்ற முகவரி ஊடாக அமைச்சுக்கு அறிவிக்குமாறு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
வெலிக்கடை பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டிருந்த போது உயிரிழந்த ஆர்.ராஜகுமாரியின் மரணம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (21-06-2023) உத்தரவிட்டுள்ளது.
பதுளை பிரதேசத்தில் 41 வயதுடைய பெண்ணொருவர் பொலிஸ் காவலில் இருந்த போது சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பான மரண விசாரணை கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த அறிக்கையை எதிர்வரும் 26ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் ஹர்ஷன கெகுனவல உத்தரவிட்டுள்ளார்.
ஒரு நாள் புறக்கோட்டை பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் இருந்த போது 2 பொலிஸ் அதிகாரிகள் வந்து கைவிலங்கிட்டு வாகனத்தில் ஏற்றி பொரளை – கோட்டா வீதியில் உள்ள ராஜகுமாரி வேலை செய்த வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக சாட்சியாளர் கூறியுள்ளார்.
மேலும் ராஜகுமாரியை அழைத்து வந்த பொலிஸார் ஒருபக்க கைவிலங்கை அகற்றி அவரின் கையில் இட்டதாகவும் சாட்சி கூறினார். இவ்வாறு ராஜகுமாரியை அழைத்துச் சென்றபோது அவர் திடகாத்திரமாக இருந்ததாகவும், நன்றாக நடந்து சென்றதாகவும் தெரிவித்தாா்.
வாகனத்தில் இருந்து அழைத்துச் செல்லப்படும் போது வாகனத்தில் இருந்த பொலிஸ் அதிகாரி ராஜகுமாரியிடம், “மோதிரம், வாசனை திரவியப் போத்தல் மற்றும் காலணிகளைத் திருடினாய்” என்று கூறியதாகவும் சாட்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.
தானும் ராஜகுமாரியும் வெலிக்கடை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதாகவும், அங்கிருந்த 2 பொலிஸ் அதிகாரிகள் தன்னையும், ராஜகுமாரியையும் தாக்கியதாகவும் அவர்களில் ஒருவர் மொட்டையுடையவர் எனவும் மற்றையவர் ஒல்லியான உயரமானவர் எனவும் சாட்சியாளர் தெரிவித்துள்ளார்.
இதன்போது ஒல்லியான உயரமான அதிகாரி ஒருவர் உயிாிழந்த ராஜகுமாரியை றப்பர் குழாயால் தாக்கியதை தான் பார்த்ததாக அவா் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் “சுதர்மா மேடம்” வந்து தாக்க வேண்டாம் என்றும், பிரச்சினையை தீர்க்குமாறும் கேட்டுக் கொண்டதாக சாட்சியாளர் மேலும் கூறியுள்ளார். அதன்பின்னா், வழக்கு அடுத்தகட்ட விசாரணைக்காக எதிா்வரும், 26ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அனுராதபுரம், தம்புத்தேகம பிரதேசத்தில் பிரசவ வலியால் துடித்த பெண் ஒருவர் தனது வீட்டில் குழந்தையை பிரசவித்து குப்பையில் வீசியமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கிராலோகம பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடைய பெண் எனவும், அவர் கடந்த 16 ஆம் திகதி பிற்பகல் 02 மணி முதல் 03 மணி வரையில் காலப்பகுதியில் குழந்தை ஒன்றை பிரசவித்து குழந்தையை குப்பை மேட்டில் வீசியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபரின் தாயும் குழந்தையும் தற்போது தம்புத்தேகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த குற்றச் செயல் தொடர்பில் சந்தேகநபரின் தாயாரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. சம்பவம் தொடர்பில் தம்புத்தேகம தலைமையக பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
கொலன்னாவ ரஜமஹா விஹாரைக்கு அருகில் இன்று (22) காலை இடம்பெற்ற விபத்தில் மகளை பாடசாலைக்கு அழைத்துச்சென்ற தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெல்லம்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஏழு வயதான பாடசாலை மாணவி படுகாயமடைந்து கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் தனது மகளை குப்பியாவத்தை பாடசாலைக்கு கொண்டு செல்வதற்காக மெகொட கொலன்னாவையிலிருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்து அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கொலன்னாவ ரஜமஹா விஹாரைக்கு அருகில் அதே திசையில் பயணித்த பஸ் திடீரென இடப்புறம் திரும்பியதில் மோட்டார் சைக்கிளை சுமார் ஐம்பது மீற்றர் வரை இழுத்துச் சென்றதிலேயே இந்த விபத்த இடம்பெற்றுள்ளது.
மெகொட கொலன்னாவ பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்தையடுத்து, ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள், விபத்தை ஏற்படுத்திய பஸ்ஸை தாக்கி பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
பிரதேசவாசிகளால் தாக்கப்பட்ட பஸ் சாரதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்த பொலிஸார் , பாதுகாப்பு கருதி பஸ் முல்லேரியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
பண்டாரகமவில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் 3 வயதான சிறுமி ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராணுவ வாகனம் மோதியதில் இன்று அதிகாலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் சிறுமியின் தாய் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பண்டாரகம கூட்டுறவுச் சங்கத்தின் பிரதான காரியாலயத்தின் கணக்காளராக சிறுமியின் தாய் பணியாற்றி வருகிறார்.
அலுவலகத்திற்கு சிறுமியுடன் தாய் சென்று கொண்டிருந்த போது இராணுவ வாகனத்தில் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறையில் இருந்து இராணுவத் தலைமையகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற இராணுவ பேருந்தே இவர்கள் மீது மோதியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த சிறுமியையும் அவரது தாயையும் உடனடியாக பண்டாரகம மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூலை மாதம் ஆரம்பமாகவுள்ள பல்வேறு சான்றிதழ் (NVQ4) கற்கைநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
கற்கைநெறிகளுக்கான முடிவுத் திகதி எதிர்வரும் 30 ஆம் திகதி (30.06.2023) என்பதனால் ஆண்டு 9ல் இருந்து பாடசாலை விலகிய மாணவர் முதல் சாதாரண தரப் பரீட்சை, உயர்தர பரீட்சைக்குத் தோற்றியுள்ளோர் மற்றும்,
தொழில் புரியும் அரச மற்றும் தனியார் நிறுவன உத்தியோகத்தர் வரைக்கும் தத்தம் தேவைகளுக்கேற்ப கற்கை நெறிகளுடன் இணைந்து கொள்ள முடியும் என கல்லூரியின் அதிபர் ஆ.நற்குனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
6 மாத பயிற்சிநெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன். வயதெல்லை 17 தொடக்கம் 29 வரை ஆகும். பொருத்தமான மாணவர்கள் விண்ணப்பப் படிவங்களை கல்லூரிக்கு நேரடியாகச் சென்று பெற்றுக்கொள்ளுங்கள்…
கீழ்வரும் பயிற்சிநெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன..
Computer Network Technician
Computer Graphics Designer
Agriculture Field Assistant
Automobile
Plumber
Motor Cycle Repairing Technician
Electrical Appliance Maintenance Technician
மேலதிக தொடர்புகளுக்கு
அதிபர்,
தொழில்நுட்பக் கல்லூரி,
மன்னார் வீதி,
நெளுக்குளம்,
வவுனியா
தொலைபேசி இலக்கம் 024 222 3664, 024 222 6720.
வவுனியா, சூசைப்பிள்ளையார்குளம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் இன்று (21.06) தெரிவித்தனர்.
வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள இரண்டு வீடுகளில் 4 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மற்றும் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளை திருடியமை மற்றும் வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நகைகளை திருடியமை,
அத்துடன் வவுனியா மில் வீதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருடியமை மற்றும் ஒலிபெருக்கி திருடப் பட்டதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.
குறித்த நகையினை வீட்டில் வைத்துவிட்டு வீட்டார் வவுனியா நகருக்கு வேலை நிமித்தமாக சென்றுவிட்டு வீடு திரும்பிய போது, வீட்டின் பின்கதவு திறக்கப்பட்டு இருந்ததுடன், வீட்டு அலுமாரிகளும் திறக்கப்பட்டிருந்தன.
வீட்டு அலுமாரிகளை பார்வையிட்ட போது அதில் இருந்த நகைகளை காணவில்லை. இதனையடுத்து வீட்டு உரிமையாளரால் வவுனியா பொலிசாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இச் சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா, சூசைப்பிள்ளையார்குளம் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் இருந்து 10 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு அடைவு வைக்கப்பட்ட நிலையில் நகையும் மீட்கப்பட்டதுடன், ஆலய ஒலிபெருக்கியும் மீட்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலும் தெரிவித்தனர்.
அனுராதபுரம் – கெக்கிராவ ரணஜயபுர பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயது மாணவன் அதே பாடசாலையில் கல்வி கற்கும் 16 வயது மாணவியை கத்தியால் குத்திய படுகாயப்படுத்திய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சந்தேக நபர் வசிக்கும் வீட்டிற்கு அருகில் உள்ள வீடொன்றில் வசிக்கும் மாணவியே இவ்வாறு கத்தியால் குத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் மாணவியின் இடது கை மற்றும் இடது காலில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக கெக்கிராவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதனையடுத்து மாணவியை குத்த பயன்படுத்த கத்தியுடன் குறித்த மாணவன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்த போது பொலிஸார் அவரை கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை எனவும், காயமடைந்த மாணவனிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர் காரணம் தெரியவரும் எனவும் ரணஜயபுர பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். சந்தேகத்திற்குரிய மாணவி கெக்கிராவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
ராகம போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 28 வயது பெண்ணின் மரணத்திற்கு வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவரே காரணம் என குறித்த யுவதியின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
முன்னதாக, தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து இளம் பெண் ஒருவர் உயிரிழந்ததற்காக இதே மருத்துவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
கொழும்பு மியூசியஸ் கல்லூரியில் விளையாட்டு ஆசிரியையாகப் பணியாற்றிய இனேஷா என்ற பெண் 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பித்தப்பைக் கற்களை அகற்றுவதற்கான சத்திரசிகிச்சைக்காக கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு விசேட வைத்தியர் ஹசஞ்சய குணவர்தன தலைமையில் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, பின்னர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
மூன்று மாதங்களின் பின்னர், பெண் கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையின் ஐந்தாவது பிரிவிற்கு மாற்றப்பட்டு, பின்னர் ராகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அதன் பின்னர் மீண்டும் தனது வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.
அங்கு, அவர் கிட்டத்தட்ட 5 மாதங்கள் ஒரே இடத்தில் இருக்க வேண்டியிருந்தது, குழாய் உதவியுடன் உணவு மற்றும் பானங்கள் அவருக்கு வழங்கப்பட்டது. வைத்தியசாலையின் அறிவிப்பின் அடிப்படையில் குறித்த பெண் சத்திரசிகிச்சைக்காக வட கொழும்பு போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல அவரது பெற்றோர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சத்திரசிகிச்சையின் பின்னர் வீடு திரும்பிய அவர் சுவாசக் கோளாறு காரணமாக ராகம போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 18 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
அறுவைசிகிச்சை செய்த அறுவை சிகிச்சை நிபுணரின் அலட்சியத்தால் மரணம் நிகழ்ந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர். ஜாஎல, தெலத்துர பிரதேசத்தில் வசிக்கும் யுவதியொருவர் தனியார் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு சுகயீனம் காரணமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் செய்தி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க விசேட சிறுவர் வைத்தியசாலையில் (SBSCH) குழந்தையொன்று உயிரிழந்தமை தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ள நிலையில், மரணத்திற்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அறுஷா அஷ்விதா வெல்கம என்ற இரண்டரை வயது குழந்தை கடந்த 25ம் திகதி உயிரிழந்திருந்தது.
திகன ரஜவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த இந்த குழந்தை, கடந்த 22 ஆம் திகதி காலில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. எனினும் 6 மணித்தியால சத்திரசிகிச்சைக்கு பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 25ஆம் திகதி குழந்தை உயிரிழந்ததாக குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
பேராதனை போதனா வைத்தியசாலையில் மயக்க மருந்தை செலுத்தியதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இரண்டு பெண்கள் உயிரிழந்ததாக இதற்கு முன்னர் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில், குழந்தையின் மரணத்திற்கு மயக்க மருந்தே காரணம் என்ற சந்தேகம் நிலவுவதாகவும் சுகாதார நிபுணர்கள் சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
எவ்வாறாயினும், பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறப்பு போதனா சிறுவர் வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர், இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என எந்தவொரு தரப்பினரிடமிருந்தும் முறைப்பாடு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
அறுவைசிகிச்சைக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு மயக்க மருந்து காரணமாக குழந்தை இறந்ததாக சந்தேகிக்க நியாயமான காரணங்கள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீர் மற்றும் மண்ணின் ஊடாக பரவும் பக்டீரியா ஒன்றினால் மண் காய்ச்சல் எனப்படும் நோய் பரவி வருவதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று (20.06.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் பேராசிரியர் இனோகா இதனை தெரிவித்துள்ளார்.
இந்த நோய் அதிகளவு உயிரிழப்பை ஏற்படுத்தும் என்றும்,மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டம், வடமேல் மாகாணத்தின் புத்தளம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் இந்நோய் பதிவாகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போதைய மழையுடனான காலநிலையில் நீர் மற்றும் மண்ணின் ஊடாக பரவும் பக்டீரியாவினால் இந்த மண் காய்ச்சல் நோய் பரவி வருவதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
பாதங்களில் ஏற்படும் காயங்கள், அழுக்கு நீர் போன்றவற்றின் ஊடாக இந்த பக்டீரியாக்கள் உள்நுழைவதாக வைத்தியர் எச்சரித்துள்ளனர்.
மொனராகல, இங்கினியாகல பொல்வத்த மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் இரு மாணவிகள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
16 வயதான பி.ஜி.அஷானி வஷ்மிகா மற்றும் எப்.ஆர். பவீஷா நெத்மினி ஆகிய இரு மாணவிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். இங்கினியாகல பொல்வத்த மகா வித்தியாலயத்தில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் இந்த இரண்டு மாணவர்களும் நெருங்கிய நண்பிகள் என தெரிவிக்கப்பட்டது.
பவீஷா பாடசாலைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு கடந்த 15ம் திகதி ஆஷானியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அஷானியின் தந்தை கொழும்பில் பணிபுரிகிறார், அவர் பாட்டி வீட்டில் வாழ்ந்து வருகின்றார். சிறு வயதிலேயே அம்மா அவரை கைவிட்டு சென்றுள்ளார் என தெரிவந்துள்ளது.
இந்த வீட்டில் பாட்டியால் பராமரித்து வரும் அஷானி, கடந்த 15ஆம் திகதி காலை மேலதிக வகுப்புக்கு செல்வதாக கூறி வீட்டிற்கு பவீஷாவுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.
ஆனால் இவ்வாறு சென்ற சிறுமிகள் திரும்பி வராததையடுத்து பவீஷாவின் பெற்றோரும் அஷானியின் பாட்டியும் இங்கினியாகல பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். இதனையடுத்து அது தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மாணவிகள் வீட்டை விட்டு வெளியேறிய நாளும் அதற்கு மறுநாளும் தங்கள் நண்பர் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தியதாகவும் தாங்கள் கொழும்பில் இருப்பதாகவும் கூறியுள்ளனர். அதற்கமைய, சம்பந்தப்பட்ட மாணவனை பொலிஸார் அழைத்து விசாரித்துள்ளனர்.
இந்த மாணவிகள் காணாமல் போனமை தொடர்பில் சகல பொலிஸ் நிலையங்களின் உதவியுடன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்கான சரியான காரணம் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இந்த மாணவர்கள் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.