வவுனியாவில் பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகளை மறித்து திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் 10க்கு மேற்பட்ட சாரதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டது.
வவுனியா மாவட்ட மோட்டார் திணைக்கள பிரதான பரிட்சையாளர் ஏ.எம்.வி.கே அதிகாரி தலைமையில் வவுனியா நெளுக்குளம் பொலிஸ் நிலைய மற்றும் மாவட்ட பிரிவு போக்குவரத்து பொலிஸாரினால் இந்த திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த செயற்பாடானது வவுனியா நெளுக்குளம் பகுதியில் சதொச சந்தியில் இன்று காலை 10.30 மணி தொடக்கம் மதியம் 1.30 மணி வரை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அரச மற்றும் தனியார் பேருந்துகள், அதிவேக மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கரவண்டிகள் என்பன சோதனைக்குட்படுத்தப்பட்டன.
அவற்றில் மேலதிக பாகங்கள் பொருத்தியமை, வழுக்கையான ரயர்கள், லைட் மற்றும் வைசர் வேலை செய்யாமை, அதிக ஒலி எழுப்பும் கோன், விபத்தினை ஏற்படுத்தும் வகையிலான பாகங்கள் பொருத்தியமை,
போன்ற பல்வேறு குற்றங்களுக்காக முச்சக்கரவண்டி சாரதி, மோட்டார் சைக்கிள் சாரதி, பேருந்து சாரதிகள் என 10க்கு மேற்பட்ட வாகன சாரதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டன.
அரச சேவையில் புதிதாக 72,000 பேரை இணைத்துக் கொள்ளவுள்ளதாக தொழிலாளர் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் இராஜாங்க அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
2026ஆம் ஆண்டில் பொதுமக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான மற்றும் நெருக்கமான சேவைகளை வழங்கும் அரசு நிறுவனங்கள் உட்பட, முழு அரச சேவையிலும் உள்ள வெற்றிடங்கள் பூர்த்தி செய்யப்படவுள்ளன.
குறித்த வேலை வெற்றிடங்களை நிரப்புவதற்கு தேவையான ஒப்புதலையும், 20 பில்லியன் ரூபாய் நிதியையும் அரசாங்கம் ஏற்கனவே ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
பொருளாதார மேம்பாடு மற்றும் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சராக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வழங்கிய அறிவுறுத்தல்களுக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அரச சேவையில் உள்ள அந்தந்த வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் கூட போட்டித் தேர்வை எதிர்கொண்ட பின்னரே ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வெளிப்படைத்தன்மை மற்றும் திறமைகள் நிறைந்த ஒரு குழுவை அரச சேவையில் கொண்டு வருவது பொது மக்களுக்கு சேவைகளை வழங்குவதில் பெரும் உறுதுணையாக இருக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் 25,000 அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுகிறார்கள். ஓய்வு பெறுபவர்களுக்கு பதிலாக புதியவர்களை நியமிக்க வேண்டும். அதற்கமைய, பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையிலான குழு மூலம் வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளதாக அமைச்சர் கூறினார்.
அமைச்சுகள், கூட்டுத்தாபனங்கள், சட்டரீதியான வாரியங்கள் மற்றும் பிற பொது நிறுவனங்களில் பணியாளர் வெற்றிடங்களை விரைவாக நிரப்புவதன் காரணமாக இந்த ஆண்டு பல புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
பொது மக்களுக்கு நேர்மையான அரச சேவையை வழங்கும் நோக்கில், அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கும், அரச சேவையில் புதிய ஆட்சேர்ப்பு செய்வதற்கும் நாட்டின் வரலாற்றில் அதிக அளவு பணம் ஒதுக்கப்பட்ட ஆண்டாக 2026ஆம் ஆண்டு பதிவு செய்யப்படும்” என அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம், கலேன்பிந்துனுவெவ பகுதியில் குடும்ப தகராறு காரணமாக ஒருவர் தனது வீட்டிற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ள நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கலேன்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு வீட்டில் இன்று அதிகாலை 2 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ வைத்த 43 வயது நபரும் அவரது 13 வயது மகளும் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். தீ விபத்தில் சிக்கிய 36 வயது மனைவி, 15 வயது மகள், 20 வயது மகன் மற்றும் 66 வயது பாட்டி ஆகியோர் அநுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தந்தை வீட்டிற்கு தீ வைத்தபோது இரண்டு மகள்கள், மனைவி மற்றும் மனைவியின் தாய் மட்டுமே வீட்டில் இருந்தனர்.
சம்பவத்தைக் கேள்விப்பட்டு மகன் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். தனது தாய் மற்றும் சகோதரிகளை மீட்க முயன்றபோது, 20 வயது மகனுக்கும் தீக்காயம் ஏற்பட்டது.
தீ வைத்த நபர் அடிக்கடி மது அருந்திவிட்டு தனது மனைவியைத் தாக்கி வந்துள்ளார். அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறுகள் காரணமாக, கலென்பிந்துனுவெவ பொலிஸாரிடம் பலமுறை முறைப்பாடு செய்யப்பட்டதுடன், இரு தரப்பினரும் எச்சரிக்கப்பட்டனர் எனவும் தெரியவந்தது.
இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நிலைகொண்டிருந்த வளிமண்டலவியல் தளம்பல் நிலையானது தீவிரமடைந்து ஒரு தாழ் அமுக்க பிரதேசமாக விருத்தியடைந்துள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆகையால் நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் நாளை மறுதினம் முதல் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும். வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.
ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் நுவரெலியா, மாத்தளை, பொலனறுவை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
மத்திய மலைப் பிராந்தியங்களின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கொழும்பு, கம்பஹா, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 50கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் நுவரெலியா, மாத்தளை, பொலனறுவை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
மத்திய மலைப்பிராந்தியங்களின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, கிழக்கு , வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கொழும்பு, கம்பஹா, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
கொழும்பு, வெள்ளவத்தையில் பிரபல சைவ உணவகம் ஒன்றில் சாப்பிடச் சென்றவர்கள் அதிர்ச்சி அடையும் சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. குறித்த உணவகத்தில் வழங்கிய உழுந்து வடை ஒன்றுக்குள் முழுமையான கராப்பான் பூச்சி ஒன்றை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதனை சாப்பிட முற்பட்ட வேளையில், அதனை கண்ட பெண் ஒருவர் அதிர்ச்சி அடைந்துள்ளதுடன், கடையின் நிர்வாகத்தினரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
அத்துடன் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சில நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி வருகின்றன. அந்தவகையில் செவ்வாய்க்கிழமை (06.01.2026) ஆமையின் இறந்த உடல்கள் கரையொதுங்கிய உள்ளன.
கடலின் சீற்றம் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் காயமடைந்த ஆமைகள் உயிரிழந்து கரை ஒதுங்குவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆமைகளை பிடிப்பதும், இறைச்சிக்காக பயன்படுத்துவதும் சட்டவிரோதம் என்பதால் கரையொதுங்கிய ஆமைகள் துர்நாற்றம் வீசக்கூடிய நிலையிலும் உருக்குலைந்து காணப்படுகின்றது.
அதேவேளை திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள சல்லி கடற்கரையில் இறந்த நிலையில் டொல்பின் ஒன்று செவ்வாய்க்கிழமை (6) காலை கரையொதுங்கியுள்ளது. இந்த டொல்பின் சுமார் 5 அடி நீளம் கொண்டதாகவும் சிறியதாகவும் உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
போலி சீட்டிழுப்பு திட்டத்தின் மூலம் பொதுமக்களை ஏமாற்றி ரூ. 10 மில்லியன் மோசடி செய்த இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
பணமோசடி குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர் வடக்கு மாகாணப் பிரிவின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், நேற்று திங்கட்கிழமை (05.01.2026) கைது செய்யப்பட்டுள்ளார்.
வடக்கு மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நடத்தப்பட்டு வந்த விசாரணைகளுக்கு அமைய இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
டயலொக் மெகா வாசனா அதிஸ்டச் சீட்டிழுப்பில் பரிசுகளைப் பெற்றுள்ளதாகக் கூறி, இணையம் மூலம் மக்களை ஏமாற்றி 10 மில்லியன் ரூபாய் பணமோசடி செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. வடக்கு மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு, இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
இலங்கையில் நேற்று (05) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 6000 ரூபாயால் அதிகரித்த நிலையில் இன்று (06) மீண்டும் 3000 ரூபாயால் அதிகரித்துள்ளமை நகைப்பிரியர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (05) 24 கரட் தங்கம் பவுண் 362,000 ரூபாயாக விற்பனையாகியிருந்த நிலையில், இன்று (06) மீண்டும் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 365,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 337,600 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,625 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,200 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
சந்தேக நபர் ஒருவரை கைது செய்வதற்காக பொரளை பொலிஸாரால் வரையப்பட்ட ஓவியத்துடன், ஒப்பிட்டு வேறு ஒரு நபர் தாக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சம்பவத்திற்கு முகம் கொடுத்தவர் தெரணியகல பகுதியில் சிறிய உணவகம் ஒன்றை நடத்தி வருபவர் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த டிசம்பர் 30ஆம் திகதி இரவு கொஹூவல, போதியாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 16 வயது சிறுமி ஒருவர் காயமடைந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸாரால் தேடப்பட்டு வரும் சந்தேக நபர் ஒருவரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளதுடன், பொலிஸ் ஓவியக் கலைஞர்களினால் வரையப்பட்ட சந்தேக நபரின் மாதிரி படம் ஒன்றையும் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருந்தனர்.
இந்த சூழலில், தெரணியகல பகுதியில் சிறிய உணவகம் நடத்தும் லஹிரு மதுசங்க என்பவர், தனது வியாபாரத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடந்த ஜனவரி முதலாம் திகதி கொழும்புக்கு வந்திருந்தார்.
அன்று இரவு பேஸ்லைன் வீதியிலுள்ள தமது மனைவியின் வீட்டில் தங்கியிருந்தபோது, அடுத்த நாள் காலை பொலிஸ் உத்தியோகத்தர்கள் அந்த வீட்டிற்கு பிரவேசித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, தனது விருப்பத்தின் பேரில் வாக்குமூலம் அளிப்பதற்காக பொரளை பொலிஸ் நிலையத்திற்குச் சென்றபோது, சந்தேக நபரின் வரைபடத்தைக் காட்டி பொலிஸார் தன்னைத் தாக்கியதாக அந்த இளைஞர் குற்றம் சாட்டியுள்ளார்.
சுமார் 2 நாட்கள் பொரளை பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டிருந்த லஹிரு, கடந்த 3ஆம் திகதி பிற்பகலே விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை , அந்த இளைஞரைத் தாக்கியதாக பொலிஸார் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிராகரித்துள்லார்
அனுராதபுரம் மாவட்டத்தின் கலென்பிந்துனுவெவ பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் தந்தை, மகள், தாய் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் பலத்த தீக்காயங்களுக்குள்ளான தாய், இரண்டு பிள்ளைகளும் மற்றும் பாட்டி ஆகியோர் அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்த தந்தைக்கு 43 வயது என்றும், மகளுக்கு 13 வயது என்றும் தாய்க்கு 36 வயது என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். 15 வயது மகள் மற்றும் 20 வயது மகன், 66 வயது பாட்டி ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முன்னதாக இவர்களுக்கு இடையே குடும்ப தகராறுகள் இருந்ததாக காவல்துறையில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்ததுடன்,
கணவர் அடிக்கடி மது அருந்துவது மற்றும் மனைவியைத் தாக்குவது தொடர்பாக காவல்துறையினருக்கு பல சந்தர்ப்பங்களில் முறைப்பாடுகள் வந்ததாகவும் கூறப்படுகிறது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பாப்பக்காப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குப்பனம்பட்டியில் சோகமான சம்பவம் நடந்தது. அண்ணாதுரை (55) என்பவரின் மகள் தனலட்சுமி (19), குடும்பப் பிரச்னை காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு விவசாய பாசன கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முயன்றார்.
இதைக் கண்ட தந்தை அண்ணாதுரை மகளைக் காப்பாற்ற உடனே கிணற்றில் குதித்தார். மது போதையில் இருந்ததாக கூறப்படும் அண்ணாதுரை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்த குளித்தலை தீயணைப்புத் துறையினர் நள்ளிரவில் வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
கிணற்றின் சுவரைப் பிடித்து தத்தளித்த தனலட்சுமி உயிருடன் மீட்கப்பட்டார். அண்ணாதுரை சடலமாக மீட்கப்பட்டார். போலீஸார் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவருடன் தகராறு ஏற்பட்ட நிலையில், பெற்றோருடன் செல்போனில் பேசியபடியே தகவல் கூறிவிட்டு, இளம்பெண் தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் நெல்லையில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியை சேர்ந்த அம்ப்ரோஸின் மகள் பிரியங்கா (27). எம்பிஏ பட்டதாரியான இவருக்கு பாளையங்கோட்டை சாந்தி நகர் பகுதியை சேர்ந்த ஜெப்ரின் டேவிட்சனுடன் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
தம்பதிக்கு 5 வயது மகனும், 9 மாத குழந்தையும் உள்ள நிலையில், கடந்த சில மாதங்களாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மனைவி மீது சந்தேகப்பட்டு, ஜெப்ரின் டேவிட்சன் தொடர்ந்து பிரியங்காவை அடித்து துன்புறுத்தி வருவதாக பிரியங்கா குடும்பத்தினரிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடவில்லை, கணவருடன் சண்டை என பெற்றோரிடம் போனில் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் புத்தாண்டு பிறந்த சில நிமிடங்களில், கணவர் வீட்டில் பிரியங்கா தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிவிக்கப்பட்டது.
உடனே அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஜனவரி 3ஆம் தேதி அதிகாலை உயிரிழந்தார்.
தகவலறிந்த பாளையங்கோட்டை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரியங்கா தற்கொலை செய்யும் அளவிற்கு கோழை அல்ல என அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
விவாகரத்தான இளம்பெண்ணைக் காதலித்து வந்த நிலையில், குழந்தையைப் பிரிந்து வர மறுத்த காதலியை நடுரோட்டில் கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டு, காதலன் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டம் எல்லாபூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சிதா (30). இவருக்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பு அஸ்வின் என்பவருடன் திருமணம் நடந்தது.
கருத்து வேறுபாடு காரணமாக மூன்று ஆண்டுகளாக கணவரை பிரிந்து தாய் வீட்டில் வாழ்ந்து வந்தார். அரசு பள்ளியில் சத்துணவு மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.
இந்த காலகட்டத்தில் அதே பகுதியை சேர்ந்த ரஃபிக் என்பவருடன் ரஞ்சிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. ரஃபிக் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார். குழந்தையை விட்டு வரச் சொன்னதால் ரஞ்சிதா காதலை முற்றிலும் மறுத்து பேசுவதையும் நிறுத்திக் கொண்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ரஃபிக், கடந்த ஜனவரி 2ம் தேதி வேலை முடிந்து வந்த ரஞ்சிதாவை வழிமறித்து அவருடன் தகராறில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் தகராறு வலுக்கவே, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரஞ்சிதாவின் கழுத்தை அறுத்தார்.
உடனடியாக அந்த பகுதியில் இருந்தவர்கள் ரஞ்சிதாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ரஞ்சிதா பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தலைமறைவான ரஃபிக், காட்டில் தூக்கிட்ட சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த இரட்டை மரணம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளம் வயதில் காதலித்த பெண்ணை சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பிரிந்த நபர், குறும்படம் பார்த்த பின்னர் அந்த பெண்ணை தனது 65 வயதில் திருமணம் செய்துள்ளார்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தின் முண்டக்கல் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். தற்போது 65 வயதான இவர், தன்னுடைய இளம் வயதில், ராஷ்மி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
ஆனால் பயத்தின் காரணமாக இருவரும் தன்னுடைய காதலை வெளிப்படுத்தாமல் இருந்த நிலையில், ராஷ்மியின் பெற்றோர் அவருக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
அதன் பின்னர் வேலைக்காக வெளிநாடு சென்ற ஜெய பிரகாஷும் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். வேறு வேறு நபர்களை திருமணம் செய்து கொண்ட இருவரும், குழந்தைகள் பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக திருமண வாழ்வை நடத்தி வந்தனர்.
இந்த சூழலில் ராஷ்மியின் கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். இதே போல், ஜெயபிரகாஷின் மனைவியும் 5 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்து விட்டார்.
கணவரை இழந்த சோகத்தில் இருந்து மீள்வதற்காக, ரஷ்மி குறும்படங்களில் நடிக்கத் தொடங்கினார். தனது மகள்களின் வற்புறுத்தலின் பேரில் மறுமணம் செய்ய ஒப்புக்கொண்ட ஜெயபிரகாஷ், அதற்காக பெண் பார்த்து வந்துள்ளார்.
இதற்கிடையே அவர், ராஷ்மி நடித்த குறும்படம் ஒன்றை பார்த்துள்ளார். தனது முன்னாள் காதலி குறும்படத்தில் நடிப்பதை பார்த்து உற்சாகமடைந்த ஜெயபிரகாஷ் உடனடியாக குறும்பட இயக்குநரிடம் ராஷ்மியுடைய மகளின் செல்போன் எண்ணை வாங்கி ராஷ்மி உடன் பேசியுள்ளார்.
இருவரும் தங்களது துணையை இழந்த விவரங்களை அறிந்த பின்னர், தான் மறுமணத்திற்கு பெண் தேடி வருவதாக ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார். மேலும், நாம் இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என்ற கருத்தையும் முன்வைத்துள்ளார்.
இது குறித்து, ரஷ்மி தனது மகள் மற்றும் மருமகனிடம் ஆலோசனை நடத்திய நிலையில், அவர்கள் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டனர்.
இதனையடுத்து, ஜெயபிரகாஷ் மற்றும் ராஷ்மியின் குழந்தைகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் பங்குபெற்ற அவர்களின் திருமணம், கடந்த ஞாயிற்றுக்கிழமை கொச்சியில் எளிய முறையில் நடைபெற்றது.
ஜெயபிரகாஷ் மற்றும் ரஷ்மியின் திருமணப் படத்தை, சமூகவலைத்தளத்தில் பகிர்ந்த ராஷ்மியின் மகள், “எந்தக் குழந்தைகளுக்கு இந்த அதிர்ஷ்டம் கிடைக்கும்?” என பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.
இந்திய இளம்பெண்ணொருவர் அமெரிக்காவில் சடலமாக மீட்கப்பட்ட விடயம் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள நிலையில், அவரது தந்தை புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவின் மேரிலேண்டில் வாழ்ந்துவந்த இந்திய இளம்பெண்ணான நிகிதா (Nikitha Rao Godishala, 27), டிசம்பர் மாதம் 31ஆம் திகதி மாயமான நிலையில், அர்ஜூன் ஷர்மா என்னும் நபர், ஜனவரி மாதம் 2ஆம் திகதி, நிகிதாவைக் காணவில்லை என பொலிசில் புகாரளித்துள்ளார்.
அவரது உடலில் கத்திக்குத்துக் காயங்கள் காணப்பட்டுள்ளன. விடயம் என்னவென்றால், நிகிதாவைக் காணவில்லை என புகாரளித்த அர்ஜூன் தலைமறைவாகிவிட்டார்.
அர்ஜூன் இந்தியாவுக்கு தப்பியோடியிருக்கலாம் என நம்பும் அமெரிக்க பொலிசார், அவரைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பித்துள்ளார்கள்.
தந்தை தெரிவித்துள்ள தகவல்
இந்நிலையில், நிகிதாவின் தந்தையான ஆனந்த் (Anand Godishala), ஊடகங்கள் குறிப்பிடுவது போல, அர்ஜூன் தன் மகளுடைய முன்னாள் காதலர் அல்ல என்று கூறியுள்ளார்.
அர்ஜூனும் வேறு இரண்டுபேரும், நிகிதா தங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியிருந்ததாக தெரிவித்துள்ள ஆனந்த், அர்ஜூன் தன் மகளுடைய அறையில் தங்கியிருந்தவர் மட்டுமே என்றும், அவர் தன் மகளுடைய முன்னாள் காதலர் அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அர்ஜூன் பலரிடம் பணம் கடன் வாங்கியிருந்தது குறித்தும், அவர் இந்தியாவுக்குத் திரும்ப திட்டமிட்டுவந்தது குறித்தும் தன் மகளான நிகிதா சமீபத்தில் அறிந்துகொண்டதாகவும் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
வங்காள விரிகுடாவில் இலங்கையின் பொத்துவிலுக்கு தென்கிழக்கு திசையில் 664 கி.மீ. தொலைவில் காணப்படும் காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று தற்போது நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக (Well Marked Low Pressure) மாறியுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளரான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்துள்ள அவர், இது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கையின் கிழக்கு மாகாணக் கரையோரமாக வடக்கு நோக்கி நகர்ந்து, வடக்கு மாகாணத்தை அண்மித்து மேலும் வடக்கு நோக்கி நகர்ந்து தமிழ்நாட்டை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தாழமுக்கமும் இலங்கைக்கு மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. தற்போது வடக்கு, கிழக்கு, வட மத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களுக்கு பரவலாக மிதமான மழை கிடைத்து வருகின்றது.
எதிர்வரும் 08.01.2026 முதல் 12.01.2026 வரை வடக்கு, கிழக்கு, ஊவா, வட மத்திய, மத்திய மற்றும் தென் மாகாணங்கள் முழுவதும் மிக மிக கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பல தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அனர்த்தங்களுக்கு வாய்ப்புள்ளது.
முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், திருகோணமலை, கிளிநொச்சி, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 8,9,10,11 ம் திகதிகளில் மிக மிக கனமழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் எதிர்வரும் 08.01.2026 முதல் 11.01.2026 வரை திரட்டிய மழைவீழ்ச்சியாக 450மி.மீ. க்கு மேல் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
எதிர்வரும் 08.01.2026 முதல் 13.01.2026 வரை வடமேற்கு, மேற்கு, சபரகமுவா மாகாணங்களுக்கு பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
இது தற்போது தாழமுக்கமாகக் காணப்பட்டாலும் இலங்கைக் கரையை அண்மிக்கும் போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதனால் எதிர்வரும் 08.01.2026 முதல் கிழக்கு, வடக்கு வடமத்திய ஊவா மாகாணங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60 கி.மீ. இனை விட கூடுதலாக வீசக்கூடும்.
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைக்கும் என்பதனால் நிலச்சரிவு அனர்த்தங்களும் நிகழக்கூடும்.
வடக்கு, கிழக்கு, வட மத்திய, மத்திய, மற்றும் ஊவா மாகாணங்களின் மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாக அதிகாரிகள் முன்கூட்டியே மக்களுக்கு இந்தக் கனமழை தொடர்பிலும் வெள்ள அனர்த்தங்கள் மற்றும் நிலச்சரிவுகள் தொடர்பிலும் தெரியப்படுத்துவதன் மூலம் பாதிப்புக்களைக் குறைக்க முடியும்.
தயவு செய்து இந்த தாழமுக்கத்தினைச் சாதாரண நிகழ்வாகக் கருத வேண்டாம். மிக வேகமான காற்றோடு கூடிய மிகக் கனமழை (இடி மின்னலும் இணைந்ததாக) மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடும்.
மிக முக்கியமாக இது தாழமுக்கம்/ தாழ்வு மண்டலத்தோடு இணைந்த நிகழ்வு என்பதனால் வழமையை விட கடல் மட்டம் மிக உயர்வாக காணப்படும்.
ஆகவே சாதாரண காலங்களில் வெள்ளநீர் கடலுக்குள் செல்வது போல இக்காலத்தில் வெள்ள நீர் கடலுக்கு செல்லாது. ஆகவே இதனையும் கருத்தில் கொண்டு அதிகாரிகள் செயற்படுவது சிறந்தது என குறிப்பிட்டுள்ளார்.