வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட பின் பலியான இளைஞன் : சர்ச்சையை கிளப்பிய சம்பவம்!!

திடீர் சுகவீனம் காரணமாக கண்டி – மடுல்கலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அங்கு சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

மடுல்கலை பகுதியைச் சேர்ந்த ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக நேற்று பிற்பகல் 2 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பிற்பகல் 2.30 அளவில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசமந்த போக்கு

மருத்துவமனை நிர்வாகத்தின் அசமந்த போக்கு காரணமாகவே அவர் உயிரிழந்ததாக அந்த பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அத்துடன், குறித்த உயிரிழப்பை அடுத்து அவரது உறவினர்கள் உள்ளிட்ட தரப்பினர் மருத்துவமனை வளாகத்தில் எதிர்ப்பில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மடுல்கலை – கிறீன்லேண்ட் பகுதியைச் சேர்ந்த 33 வயதான ஒருவரே உயிரிழந்தார். இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கருத்து தெரிவிக்கையில்,

குறித்த சடலத்தில் உடற்கூற்று பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், அதன் அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றில் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

உடல் எடையை குறைக்க வீட்டு தோட்டத்தில் இருக்கும் இந்த ஒரு பழம் போதும்!!

கொய்யா பழம், இலை என்பன சுவையும், ஆரோக்கியமும் நிறைந்தது. இதனை உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம், இவை உறுதியான மாற்றங்களை உங்களுக்குக் கொடுக்கும். மேலும் இது பக்கவிளைவுகள் இல்லாமல் உடலை சுத்தம் செய்யும்.

உங்கள் வீட்டு தோட்டத்தில் இருக்கும் கொய்யா பழ இலை, உடலில் தேங்கும் தேவையற்ற கொழுப்புகளை நீக்கி, எடையை கட்டுப்படுத்தும் சக்தி கொண்டது.

கொய்யா பழம் நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரி கொண்டது. இது வயிற்றை நிறைக்கும் உணர்வை தருவதால் அதிகமாக சாப்பிடுவதை கட்டுப்படுத்தும்.

கொய்யா இலை கஷாயம் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது, இது உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவியாக இருக்கிறது.

நார்ச்சத்து அதிகமுள்ள கொய்யா செரிமானத்தை சீராக்கும், உடல் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. இது பக்கவிளைவில்லா ஒழுங்கான எடைக் குறைப்பு முறையாகும்.

வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த இந்த பழம், உடலுக்கு புத்துணர்ச்சி தரும். உடலை சோர்வின்றி சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது.

கொய்யா இலையில் உள்ள இயற்கை சேர்மங்கள் உடலில் தேங்கும் கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.

கொய்யாவும் இதன் இலையும் கஷாயம், சாலட், சாறு என எளிதாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது சுவையோடு கூடிய ஆரோக்கியம் தரும்.

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் காணொளி : இரு நபர்களின் முகம்சுழிக்க வைக்கும் செயல்!!

மோட்டார் சைக்கிள் ஒன்றை இனந்தெரியாத இரண்டு நபர்கள் சூட்சமமான முறையில் திருடிச் செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்தத் திருட்டுச் சம்பவம் கிரிபத்கொட மஹர சந்திக்கு அருகில் இன்று (25) இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் அந்தப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கருப்பு நிற பல்சர் மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்றுள்ளனர்.

இந்தத் திருட்டுச் சம்பவம் அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது. சிசிடிவி பதிவுகளை வைத்து சந்தேகநபர்களைத் தேடுவதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

கணவர் வெளிநாட்டில் : கொடூரமாக கொலை செய்யப்பட்ட மனைவி : இரட்டை சகோதரிகள் கைது!!

அம்பாறை பெரிய நீலாவணை பிரதேசத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட குடும்பப் பெண்ணின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் சகோதரிகளான இரட்டையர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தனித்திருந்த 38 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் கடந்த மே மாதம் 30 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இரண்டு பிள்ளைகளின் தாயான குறித்த பெண்ணின் கழுத்து பகுதியில் காயங்கள் ஏற்படக் கூடிய வகையில் வெட்டப்பட்டு தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை, பொதுமக்களின் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்ட குறித்த சம்பவம் தொடர்பில் பல தரப்பினரும் விசாரணை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், 24 நாட்களின் பின்னர் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவில் இணைக்கப்பட்ட உப பரிசோதகர்

ஏ.எல்.எம். அஸீம் தலைமையிலான அணி குறித்த படுகொலை தொடர்பில் 34 வயதுடைய இரட்டையரான சகோதரிகளை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படுகொலை இடம்பெற்ற வேளை, மரணமடைந்த குடும்ப பெண்ணின் கணவர் வெளிநாடு ஒன்றில் தொழில் நிமிர்த்தம் சென்றுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கெமராவில் பதிவான காட்சிகளை சேமிக்கும் கருவி (DVR) கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களால் எடுத்துச் செல்லப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

16 வருடமாக 3 பிள்ளைகளை தேடும் கிளிநொச்சி தாய்!!

தனது மூன்று பிள்ளைகளும் காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 16 வருட காலமாக அவர்களை தேடி வருவதாக கிளிநொச்சி தாயார் ஒருவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் செம்மணியில் நடைபெற்று வரும் அணையா விளக்கு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த தாயார் ஒருவரே அவ்வாறு தெரிவித்தார்.

கிளிநொச்சி கண்டாவளை பகுதியை சேர்ந்த வைரமுத்து நிரஞ்சனாதேவி என்பவரின் மகன்களான , வைரமுத்து வைகுந்தன் 2009ஆம் ஆண்டு 02ஆம் மாதம் 11ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்.

அடுத்த மகனான வைரமுத்து லோகிதன் 2009ஆம் ஆண்டு 03ஆம் மாதம் 22ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்டுள்ளார். அதன் பின்னர் அவரது மகளான வைரமுத்து பிரதாயினி 2009ஆம் ஆண்டு 05ஆம் மாதம் 12ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்.

07 பிள்ளைகளில் மூன்று பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில் , கணவர் மற்றும் ஏனைய நான்கு பிள்ளைகளுடன் கண்டவளையில் வாழ்த்து வருகின்றார்.

அதில் ஒரு பிள்ளை விசேட தேவைக்குரிய பிள்ளையாக காணப்படுகிறார். காணாமல் ஆக்கப்பட்ட மூன்று பிள்ளைகளையும் தேடி ஆணைக்குழுக்களுக்கு சென்றும் எந்த விதமான தகவல்களும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் ஜூலை முதல் அமுலுக்கு வரும் தடை!!

இலங்கையில், ஜூலை முதலாம் திகதி முதல் பிள்ளைகள் யாசகம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று (25.06) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை ஊடக சந்திப்பில் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை குறிப்பிட்டார்.

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் யாசகம் எடுப்பதில் ஈடுபடுவதற்கு மற்றும் 16 தொடக்கம் 18 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்கள் வீட்டு வேலைகள் உட்பட ஈடுபடுத்தல் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல்

தடை செய்யப்பட்டமைக்கு இணங்க தற்போது காணப்படும் சட்ட ஒழுங்கு விதிகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி இது தொடர்பான சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுதல் தொடர்பாக சரளமாக தெளிவுப்படுத்தும் திட்டம் மூலம் பொதுமக்களுக்கு தெளிவூட்டுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

தென்னிலங்கையில் நடந்த பயங்கரம் : மனைவி, மாமி, மைத்துனியை தீ வைத்து எரித்த கணவன்!!

மொரட்டுவையில் மனைவி, தாய் மற்றும் மைத்துனியை பெட்ரோல் ஊற்றி எரித்து தலையில் தாக்கியதற்காக கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். தீக்காயமடைந்த மூவரும் தற்போது பாணந்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரின் மனைவியான 28 வயதான இரண்டு பிள்ளை தாய் மற்றும் மனைவியின் தாய் மற்றும் மைத்துனி ஆகியோர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்ததாக தெரியவந்துள்ளது.

குடும்ப தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று மதியம் 12:20 மணியளவில் மொரட்டுவ, பகுதியில் உள்ள வீட்டில் நடந்துள்ளது.

மனைவி சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு திரும்பி வந்து மீண்டும் வெளிநாடு திரும்ப ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். கணவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த விடயம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது.

அதற்கமைய, அவர்கள் அனைவரும் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்திற்குச் சென்று வீடு திரும்பிய பின்னர் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சந்தேக நபரின் மனைவி மற்றும் மாமியார் பாணந்துறை ஆதார மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தனது மனைவி மீது ஆசிட் தாக்குதல் அல்லது அவர் வெளிநாடு செல்வதைத் தடுப்பேன் என சந்தேக நபர் பலரிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர் சிவில் பாதுகாப்பு வீரர் எனவும் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மொரட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மலையகத்திற்கு பெருமை சேர்த்த விக்னராஜ் வக்சான்!!

மலையகத்தின் தலவாகலைப் பகுதியைச் சேர்ந்த விக்னராஜ் வக்சான் சர்வதேச ஓட்டப் போட்டியொன்றில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

தாய்லாந்து பாங்காக் நகரில் நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் தடகளப் போட்டியில், இலங்கை தடகள வீரர் விக்னராஜ் வாக்சன் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

அவர் 5,000 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்கேற்று 15 நிமிடங்கள் 56 வினாடிகளில் நிறைவு செய்து முதலிடத்தைப் பிடித்தார். வக்சானுக்கு இப்போட்டித் தொடரில் கிடைத்த இரண்டாவது பதக்கம் ஆகும்.

போட்டி ஆரம்பித்த முதல் நாளில் நடைபெற்ற 1,500 மீட்டர் ஓட்டத்தில், அவர் வெண்கல பதக்கம் வென்றிருந்தார்.

வக்சான் இதற்கு முன்னர் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று தனது திறமைகளை வெளிப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டி ஆசியப் பகுதியைச் சேர்ந்த பல நாடுகள் பங்கேற்கும் வகையில் நடத்தப்படுகிறது. இதுவரை போட்டியின் மூன்றாவது நாள் முடிவில் இலங்கை அணி மூன்று தங்கம் மற்றும் ஒரு வெள்ளி என நான்கு பதக்கங்களைப் பெற்றுள்ளது.

இதேவளை, ருசிரு சதுரங்க வீரர், 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றார். ஏற்கனவே அவர் 1,500 மீட்டர் ஓட்டத்திலும் தங்கம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அணித்தலைவி நிமலி லியனாராச்சி, பெண்கள் 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கத்தை வென்று பிரகாசித்தார். அவர் 1,500 மீட்டர் ஓட்டத்தில் வெண்கல பதக்கம் பெற்றிருந்தார்.

மேலும், குறுகிய தூர ஓட்ட வீரர் அயோமல் அகலங்க, 400 மீட்டர் தடைகளை உடைய ஓட்டத்தில் வெண்கல பதக்கத்தை வென்று இலங்கையின் பதக்க பட்டியலில் தமது பெயரையும் சேர்த்துள்ளார். இலங்கை அணிக்காக 8 வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்று வருகின்றனர். போட்டி இன்று முடிவடைகிறது.

வெளிநாட்டு ஆசை காட்டி 150 பேரை ஏமாற்றிய நபர் : கொழும்பில் 5 கோடியுடன் சிக்கிய இளைஞன்!!

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 150 பேரிடம் 5 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பணத்தை மோசடி செய்ததற்காக இந்த சந்தேக நபர் நேற்று மாலை கிருலப்பனை பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் கொம்பனி தெரு பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழு நடத்திய விசாரணையின் போது, ​​சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெஹிவளையை சேர்ந்த 37 வயதுடையவராகும். சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைக்கவசத்தால் அடித்து கொலை செய்யப்பட்ட இளைஞர்!!

புலத்சிங்கள, ஹல்வதுர பகுதியில் பாதுகாப்பு தலைக்கவசத்தால் தாக்கப்பட்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரண்டு நபர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்ததை அடுத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான நபர் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் மீண்டும் ஹொரணை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் புலத்சிங்கள, ஹல்வதுர பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபர் ஆவார்.

தாக்குதல் தொடர்பாக 23 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

200 பயணிகளுடன் மயிரிழையில் ஆபத்திலிருந்து தப்பிய விமானம்!!

கத்தாரின் தோஹாவில் அமைந்துள்ள அமெரிக்காவின் இராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளமை மத்திய கிழக்கில் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் கத்தாருக்கு சொந்தமான விமானம் பெரும் ஆபத்தில் இருந்து தப்பியுள்ள தகவல் வெளியாகிய்யுள்ளது.

குறித்த விமானத்தில் இலங்கைப் பயணிகளும் இருந்ததாக கூறப்படுகின்றது. அல்-உதெய்த் விமானப்படைத் தளம் மீதே இந்த தாக்குதல் நாத்தப்பட்டுள்ளது. சுமார் 24 ஹெக்டேர் (60 ஏக்கர்) பரப்பளவில் அமைந்துள்ள அமெரிக்காவின் இராணுவ தளத்தில் கிட்டத்தட்ட 100 விமானங்கள் அங்கு இருக்கின்றன.

இதையடுத்து போர் நிறுத்தம் அமுலுக்கு வருவதாக அமெரிக ஜனாதிபதி டிரம்ப் அறிவித்த நிலையில், அதன்பின்னர் ஈரான் இஸ்ரேல மிது தாக்குதலை மேற்கொண்டுள்ளதால் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

அதேவேளை ஈரானின் தாக்குதல் இடம்பெற்றபோது கத்தாருக்கு சொந்தமான விமானம் ஒன்று வான்வெளியில் 200 பயணிகளுடன் பயணித்ததாகவும் கூறப்படுகின்றது. எனினும் இந்த சம்பவம் தொடர்பில் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

இதை அடுத்து சர்வதேச விமானக்கள் பல ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், ஈரானின் தாக்குதலுக்கு கத்தார் நாடும் கண்டனம் வெளியிட்டிருந்த்து.

கொழும்பு கடலில் மிதந்த மர்மப் பொருள்!!

கொழும்பு மொரட்டுவ, கோரலவெல்ல, ஷ்ரமதான மாவத்தைக்கு அருகில் கடலில் மிதந்து கொண்டிருந்த ஒரு சாதனத்தின் ஒரு பகுதி கரைக்கு கொண்டு வரப்பட்டதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

வட்ட வடிவ சாதனத்தின் நடுவில் ஒரு சிறிய சுற்று மற்றும் மொபைல் போன்களைப் போன்ற நான்கு சிறிய சோலார் பேனல்கள் உள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் மீட்கப்பட்ட பொருள், அது ஏதோ ஒரு சாதனத்தில் இணைக்கப்பட்டு, தளர்வான பிறகு கடலில் மிதந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பதவி விலகினார் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்!!

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் , முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள உள்ளூர் அதிகார சபைகளுக்கான இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தவிசாளர் தெரிவுகளில் ஏற்பட்ட அதிருப்தியினால் கட்சிப் பதவிகளிலிருந்து விலகியுள்ளார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்டக் கிளைச் செயலாளர் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசக் கிளைத் தலைவர் ஆகிய பதவிகளிலிருந்தே ரவிகரன் பதவி விலகியுள்ளார்.

மேலும், தாம் கட்சிப் பதவிகளிலிருந்து விலகும் இந்த முடிவை கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், கட்சியின் நிர்வாகச் செயலாளர் சேவியர் குலநாயகம் ஆகியோருக்கு நேற்று கடிதத்தின் மூலம் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

50000 ரூபா கடனுக்காக நண்பனுக்கு மனைவியை விற்ற கணவன் : அதிர்ச்சி சம்பவம்!!

இந்தியாவில் சூதாட்டத்தில் ஏற்பட்ட கடனுக்காக கணவன் , நண்பனுக்கு மனைவியை விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேசத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மத்தியபிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் வசித்து வந்த ஒருவர் சூதாட்டத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சூதாட்டத்தில் ரூ.50,000 வரை அவருக்கு கடன் ஏற்பட்டுள்ளது.

இந்த கடனை அடைப்பதற்காக அவர் தனது நண்பர்களிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடன் வழங்கியவர்கள், பணத்தை திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுத்ததால், கடனுக்காக ஒருவருக்கு தனது மனைவியை விற்பனை செய்துள்ளார்.

அந்த பெண்ணை கணவரின் நண்பர் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து, அங்கிருந்து தப்பி வந்த பெண், இந்தூர் மகளிர் காவல்நிலையத்தில் இதுதொடர்பாக முறைப்பாடு அளித்துள்ளார்.

பெண்னின் முறைப்பாட்டின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, அப்பெண்ணின் கணவர் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்த கணவரின் நண்பரையும் போலீசார் தேடி வருகின்றதாக கூறப்படுகின்றது.

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் காயம்!!

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் கெலேகால பகுதியில் நுவரெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று தனியார் பஸ் மற்றும் காருடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்து இன்று புதன்கிழமை (25) காலை இடம்பெற்றுள்ளது.

செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற தனியார் பஸ் ஒன்றுடன் மோதியதைத் தொடர்ந்து, கெலேகால பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருடனும் மோதி வீதியில் குடைசாய்ந்து வீழ்ந்துள்ளது.

இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா வெண்கல செட்டிகுளம் பிரதேசசபையை தமிழ்கட்சிகளின் ஆதரவுடன் கைப்பற்றியது றிசாட் தரப்பு!!

வவுனியா வெண்கல செட்டிகுளம் பிரதேசசபையில் தமிழ்த்தேசிய கட்சிகளின் ஆதரவுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ஐக்கியமக்கள் சக்தி) உறுப்பினர் தாஜுதீன் முகமது இம்தியாஸ் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் தமிழரசுக்கட்சியை சேர்ந்த தேவசகாயம் சிவனாந்தராசா உபதவிசாளராக போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

வவுனியா செட்டிகுளம் பிரதேசசபைக்கான தவிசாளர்,உபதவிசாளர தெரிவு, வடக்குமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினி தலைமையில், சபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்றது.

இதன்போது தவிசாளர் தெரிவை பகிரங்கமாக நடத்துமாறு 12 உறுப்பினர்களும் ரகசியமாக நடாத்துமாறு 6 உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர். பெரும்பாண்மை வாக்குகளின் அடிப்படையில் தவிசாளர் தெரிவு பகிரங்கமாக நடாத்தப்பட்டது.

அந்தவகையில் தவிசாளராக பெயர் பிரேரிக்கப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் இம்தியாஸுக்கு ஆதரவாக 11 வாக்குகளும், தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட தாவீது இசையாஸ் மிரால் அவர்களுக்கு 6 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.

இதனடிப்படையில் முகமது இம்தியாஸ் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். அவருக்கு இலங்கை தமிழரசுக்கட்சியின் மூன்று உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணியின் இரண்டு உறுப்பினர்ளும், ஜனநாயக தேசியக் கூட்டணியின் இரண்டு உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தியின் நான்கு உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

இதனையடுத்து உப தவிசாளருக்கான தெரிவு இடம்பெற்றது. உபதவிசாளராக தமிழரசுக் கட்சி சார்பில் தேவசாகயம் சிவானந்தராசா போட்டியிட்டார்.

உபதவிசாளராக வேறு நபர்களின் பெயர்கள் பிரேரிக்கப்படாத நிலையில் தமிழரசுக்கட்சியை சேர்ந்த அவர் உபதவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார். இதேவேளை சுயேட்சைகுழு உறுப்பினர் ஒருவர் தவிசாளர் தெரிவின் போது வெளிநடப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.