தலை தீபாவளி கொண்டாடிய புதுப்பெண் கணவன் வேலைக்கு சென்றதால் எடுத்த விபரீத முடிவு!!

சிவகங்கை மாவட்டத்தில் நடந்த துயர சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திருமணமான முதல் வருட தலை தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய புதுமணப் பெண் ஒருவர், கணவர் வேலைக்கு புறப்படுவதாக கூறியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே உள்ள குன்னத்தூர், களத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மச்சக்காளையின் இரண்டாவது மகள் ரூபிகா (21).

கடந்த ஜூலை மாதம் திண்டுக்கல் மாவட்டம் ரெட்டையாம்பட்டியைச் சேர்ந்த பாண்டி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. பாண்டி திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

புதுமணத் தம்பதிகள் தீபாவளியைத் தலை தீபாவளியாக கொண்டாடும் நோக்கில் கடந்த அக்டோபர் 19ம் தேதி ரூபிகாவின் ஊரான களத்துப்பட்டிக்கு வந்தனர்.

குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் இணைந்து தலைதீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய பின்னர், பாண்டி நேற்று மீண்டும் பணிக்கு திரும்புவதாக கூறியதில், ரூபிகா அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

“தலை தீபாவளிக்கு வந்தவுடனேயே ஏன் உடனே வேலைக்கு செல்ல வேண்டும்?” என்ற விவாதம் தம்பதியருக்குள் வாக்குவாதமாக மாறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாக்குவாதத்திற்குப் பிறகு பாண்டி வேலைக்கு புறப்பட்டு சென்றார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ரூபிகா, குடும்பத்தினர் இல்லாத நேரத்தில் வீட்டில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த தகவல் அறிந்த புழுதிபட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரூபிகாவின் சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுமணத் தம்பதிகளின் மகிழ்ச்சி நிறைந்த தங்கள் தலைதீபாவளிக் கொண்டாட்டம், இப்படி துயரமாக மாறியிருப்பது கிராம மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

கரப்பான் பூச்சிக்கு பயந்து முழு அடுக்குமாடி குடியிருப்பை கொளுத்திய பெண்!!

தென் கொரியாவின் ஓசான் நகரில், 20 வயதுடைய ஒரு பெண் கரப்பான் பூச்சியை கொல்ல முயற்சித்ததில், தனது அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது.

கீழ்தள வணிக வளாகங்கள் மற்றும் மேல்தளங்களில் 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கொண்ட இந்த அடுக்குமாடியில், அந்த பெண் தற்காலிக ஃபிளேம்த்ரோவை பயன்படுத்தி பூச்சியை கொல்ல முயன்ற போது தீ விரைவாக பரவி குடியிருப்பை ஆழமாக பாதித்தது.

இந்த தீ விபத்தில், அந்தக் குடியிருப்பில் வசித்து வந்த 30 வயது சீனப் பெண் ஒருவர் தீ மற்றும் அதிக புகை காரணமாக சிக்கி, மருத்துவமனையில் அனுப்பப்பட்டாலும் உயிரிழந்தார்.

குறைந்தபட்சம் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தீ விபத்திற்கும் அலட்சியத்திற்கும் பொறுப்பாக அந்த இளம் பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகங்களில், வீடுகளில் பயன்படுத்தப்படும் தீவிர கரப்பான் பூச்சி கொல்லும் முறைகள் அதிகமாக பிரபலமாகி வருகின்றன.

இதேபோல் முன்னொரு சில சம்பவங்களிலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில், 2023ஆம் ஆண்டு ஜப்பானில் அதேபோல் முயற்சிகள் தீ விபத்திற்கான காரணமாக இருந்ததாக பதிவாகியுள்ளது.

மண் சுவர் இடிந்து விழுந்து கல்லூரி மாணவி பரிதாபமாக பலி!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பழைய வெள்ளையாபுரம் கிராமத்தில் வீரமணி குடும்பத்திடம் நிகழ்ந்த துயர சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வீரமணி மகள் பவானி (17), சிவகாசியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 18-ஆம் தேதி வீட்டில் தூய்மைப் பணிகள் நடக்கும் போது, கனமழையால் வீட்டின் பக்க மண் சுவர் இடிந்து விழுந்தது.

இந்த இடிபாட்டில் பவானி கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தார். உடனடியாக பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பவானி உயிரிழந்தார். திருத்தங்கல் காவல்துறை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், அப்பகுதி மக்கள் மாணவியின் குடும்பத்திற்கு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுவிஸ்லாந்து வரலாற்றில் இராணி பட்டம் பெற்ற முதல் ஈழத்தமிழ்ப் பெண்!!

இராணி பேர்த்த பதக்கம் வழங்கும் விழாவானது சுவிட்சர்லாந்து- பேர்ண் மேற்குப்பகுதியில் Bienzgut, Heuboden என்ற இடத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இந்தப் பதக்கம் வழங்கும் நிகழ்வானது தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகின்றது. 2025 ஆம் ஆண்டு இந்தப் பதக்கமானது இருவருக்கு கிடைத்துள்ளது.

இந்தநிலையில், இணையர் நந்தினி முருகவேள். சுவிற்சர்லாந்து தலைநகர் பேர்ண் நகரசபையின் சமுதாய அரசபணியாளர்களில் ஈழத்தமிழரான பேர்ண் வள்ளுவன் பள்ளி ஆசிரியை நந்தினி முர்கவேளுக்கு பேர்ண் நகரின் 2025 ஆம் ஆண்டிற்கான முடியரசி (இராணி) என்ற பட்டம் வழங்கி நகரசபை மதிப்பளித்துள்ளது.

இவர் பேர்ண் நகரப்பகுதியிலும், பேரண்மேற்குப்பகுதியிலும், தனது சமுகாயத்தின் ஒருங்கிணைப்புக்காக அவர் அயராது பாடுபடுகிறார்.

சமூக-பண்பாட்டு நடவடிக்கைகளில் ஓர் பாலமாக தனது சமுதாயத்துடன் இருக்கின்றார்.பெண்களுக்கான பல திட்டங்களுக்கு பொறுப்பாகக் கடமையாற்றகின்றார். வயோதிபர்களுக்குப் பொறுப்பாகக் கடமையாற்றுகின்றார்.

பொதுவாக பேர்ண் நகரப்பதியிலும் பேர்ண் மேற்குப்பகுதியிலும் அவர் ஓர் முக்கியமான ஆளாக தமிழ்மக்களுக்கும்,ஏனையோருக்கும் கடமையாற்றுகின்ற ஓர் சிறந்த சமூகசேவையாளராகவும், காணப்படுகின்றார்.

இதற்கு அப்பால் தேவைப்படும் இடங்களில் மகிழ்ச்சியாக இலவசமாக தனது சேவையை தமிழ்மக்களுக்கு ஆற்றி வருகின்றார். தனது கணவருடன் பேர்ண் வள்ளுவன் பள்ளியையும் நடத்தி வருகின்றார்.

இவ்வாறான பல செயற்பாடுகளையும் திறமையாக செயற்படுத்தி வருவதால் அவரை இந்த ஆண்டு நாங்கள் தெரிவு செய்திருக்கின்றோம் என்று இவ் விழாவினை ஏற்பாடு செய்திருந்த நகரசபை அமைப்பின் தலைவர் தெரிவித்திருந்தார்.

அத்தோடு, பீட்டர் பிளேசர் என்பவர் பல ஆண்டுகளாக மக்களுக்குத் தேவையான பல்வேறு திட்டங்களில் அயராது தன்னிச்சையாக செயற்பட்டு வருகின்றார்.

இவர் SP கட்சியின் ஓர் முக்கியமான உறுப்பினர்.இவரின் பிரதான பணிகளாக முக்கியமான திட்டங்களை உருவாக்குதல்,அவற்றை நடைமுறைப்படுத்தல். இவை போன்ற மக்களுக்குத் தேவையான திட்டங்களை நீண்டகாலமாக விருப்புடன் செயற்படுத்தி வருகின்றார்.

இவ்வாறான மக்களுக்குத் தேவையான ஓர் சிறந்த மனிதரையும் தெரிவு செய்திருக்கின்றோம் என நகரசபை அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

பேர்ண் மேற்குப்பகுதியில் அனைத்து சமூகசேவையாளர்களுக்கும் பொறுப்பாகக் கடமையாற்றும் VBG அரச அமைப்பின் மேலதிகாரி ஸ்டெபானி ஷார் (Steffi) தனது உரையில் 2000 ஆம் ஆண்டு சுவிசிற்கு வருகைதந்த நந்தினி மிக விரைவாக யேர்மன்மொழியைக் கற்று ஏனைய கற்கை நெறிகளையும் யேர்மன் மொழியில் கற்று முடித்தார்.

2006 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை அரசாங்க பல்பண்பாட்டு மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றகின்றார்.இவர் பாடசாலை வைத்தியசாலை, நீதிமன்றம், பொலிஸ்துறை பெண்கள் பாதுகாப்பு விடுதி எனப் பல்வேறு அரச நிறுவனங்களில் மொழிபெயர்ப்பை மேற்கொள்கின்றார்.

அத்துடன் ஓர் கணக்காய்வாளராகவும் கடமையாற்றுகின்றார். 2010 ஆம் ஆண்டிலிருந்து சுவிஸ் நாட்டு அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கான மகப்பேற்றுக்கான ஆயத்தங்களை மேற்கொள்ளும் வகுப்புக்களுக்கான ஓர் ஒருங்கிணைப்பாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் கடமையாற்றுகின்றார்.

அதே ஆண்டில் உருவாக்கப்பட்ட பெண்களுக்கான கலந்துரையாடல் என்னும் திட்டத்திற்கு பொறுப்பாக கடமையாற்றவதுடன் வயோதிபர்களுக்கான பல திட்டங்களுக்குப் பொறுப்பாகக் கடமையாற்றுகின்றார்.அத்துடன் பேர்ண் மேற்குப் பகுதியின் சமூகசேவையாளராகவும்,ஆலோசகராகவும், செயலாளராகவும் என்னுடன் கடமையாற்றுகின்றார்.

பேர்ண் வள்ளுவன் பள்ளியின் ஆசிரியையாகவும் கடமையாற்றுகின்றார்.இவர் எந்த வேலையை செய்தாலும் முழுமனதுடன், நம்பிக்கையுடன்,மேற்கொள்ளார்.

இவர் அதிகளவு மணித்தியாலங்களை தன்னுடைய நாட்டு மக்களுக்காக இலவசமாக ஆற்றுவார். இவரின் சேவை பெருமைக்குரியதும், பாராட்டுக்குமுரியதாகும். இவருடைய குடும்பம் மிக அழகானதாகும் எனத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு,செந்தமிழ் அருட்சுனையரும், சமய உளவள ஆற்றுப்படுத்துநருமாகிய தர்மலிங்கம் சசிக்குமார் கருத்துத் தெரிவிக்கையில், இணையர் நந்தினி முருகவேள் எங்களுடன் நீண்டகாலமாக இணைந்து பல திட்டங்களில் கடமையாற்றுகின்றார்.

எங்களுடைய ஓர் முக்கியமான திட்டமாக எதிர்காலத்தில் சுவிட்சர்லாந்து பேர்ன் மாநிலம் வாழும் தமிழர்கள் முதுமையில் இணக்கமாக மகிழ்வுடன் வாழக்கூடிய ஓர் மூதாளர் இல்லம் அமைப்பது தமிழ்க்குடில் தொடர்பானதாகும்.

இணயர் நந்தினி முருகவேள் தனது உரையில், இன்று நான் பேர்ண் நகரசபையால் மதிப்பளிப்பினைப் பெற்றுக்கொள்கின்றேன். என்றால் அதற்கு பலர் காரணம். முதலில் என்னுடைய பெற்றோர்கள். என்னுடைய தந்தை கிருஸ்ணசாமி,என்னுடைய தாயார் அன்னலட்சுமி.

இலங்கையில் சிறுவயதிலிருந்து என்னுடைய பல்கலைக்கழக கற்கைநெறி வரை என்னுடன் அயராது பாடுபட்டவர்கள். என்னுடைய அப்பாவும் ஓர் சிறந்த சமுதாயப்பணியாளர்.

என்னுடைய 5 சகோதரிகளும் அன்றும்,இன்றும், என்றும் எனக்கு ஊக்குவிப்பாக,ஒத்துழைப்பாக இருக்கிறார்கள்.அடுத்து என்னுடைய கணவரும்,இரண்டு பிள்ளைகளும், என்னுடன் கடமையாற்றும் எனது தோழி Steffi என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும், எனது வேலையிலும் மிகவும் உதவியாக இருப்பார் எனத் தெரிவித்துள்ளார்.

 

யாழில் மழையுடன் சேர்ந்து விழுந்த மீன்கள்!!

யாழில் பொழிந்த மழையுடன் மீன்களும் சேர்ந்து விழுந்த சம்பவம் பதிவாகியுள்ளது. நேற்று (21.10.2025) அதிகாலை தொடக்கம் தொடர்ச்சியாக யாழில் மழை பொழிந்தது.

இந்த மழையுடன் சேர்ந்து மீன்களும் விழுந்துள்ளதுடன் அந்த மீன்களை மக்கள் பிடிப்பதை அவதானிக்க முடிந்தது.

கடந்த காலங்களிலும் இவ்வாறு மழையுடன் மீன்கள் விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இலங்கையில் நிலவும் மோசமான வானிலை : பொலிசார் எச்சரிக்கை!!

நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில், பாணந்துறை – பன்னமபுர வீதியில் ஒரு கார் சறுக்கி கால்வாயில் கவிழ்ந்து விபத்துள்ளாகி உள்ளது.

விபத்து நடந்த நேரத்தில் காரில் இரண்டு பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். எனினும் விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அந்த பகுதி மக்கள் கயிறுகளின் உதவியுடன் காரை மீட்க இணைந்து பணியாற்றினர்.

முன்னால் வாகனம் வந்தபோது காரின் ஓட்டுநர் பிரேக் போட்டதாகவும், மழை காரணமாக வீதி வழுக்கும் தன்மை கொண்டதால், கார் வீதியை விட்டு விலகி கால்வாயில் கவிழ்ந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பல பகுதிகளில் இவ்வாறு விபத்து சம்பவம் இடம்பெறுவதாகவும் அவதானமாக செயற்படுமாறும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் சடுதியாக குறைந்த தங்கத்தின் விலை!!

நாட்டில் தங்கத்தின் விலை ரூ.20,000 குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது இன்றைய தினம் வரை ரூ.60,000 குறைந்துள்ளதாககூறுப்படுகின்றது.

அதன்படி, இன்று (22.10.2025) காலை கொழும்பு செட்டியார் வீதி தங்க சந்தையில் ஒரு பவுண் “22 கரட்” தங்கத்தின் விலை 322,000 ஆக குறைந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை, 379,200 என விலை நிர்ணயிக்கப்பட்டது. இதற்கிடையில், வெள்ளிக்கிழமை ரூ.410,000 ஆக இருந்த “24 கரட்” தங்கத்தின் விலை இன்று ரூ.350,000 ஆகக் குறைந்துள்ளதாக கொழும்பு தங்கச்சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெலிகம பிரதேச சபைத் தலைவர் சுட்டுப் படுகொலை!!

புதிய இணைப்பு

துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான வெலிகம பிரதே சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர உயிரிழந்துள்ளார். சபைத் தலைவருக்குரிய தன்னுடைய கதிரையில் அமர்ந்திருந்த போது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பிரதேச சபை தலைவரை மாத்தறை பொது மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் சென்றுள்ளனர்.

எனினும், படுகாயமடைந்த தலைவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்திச் சென்ற துப்பாக்கிதாரிகள், பிரதேச சபைத் தலைவரிடம் ஒரு கடிதத்தில் கையெழுத்து வாங்குவதற்காக சபைக்குள் நுழைந்ததாகவும் ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலாம் இணைப்பு

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதேச சபை கட்டிடத்தில் தன்னுடைய அறையில் அமர்ந்திருந்த போது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

வெளிநாட்டு காதலனால் பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

தென்னிலங்கையில் பெண் ஒருவரை ஏமாற்றி பணம் பறிக்க முயன்ற இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பல்கலைக்கழக மாணவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எல்பிட்டிய மீட்டியாகொடவில் வசிக்கும் 25 வயது பெண்ணிடம் ஒரு லட்சம் ரூபாய் பணம் பறிக்க முயன்ற வேளையில் மீட்டியாகொட பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

பொலிஸ் விசாரணையின் போது, ​​தனக்குத் தெரிந்த பிரேசிலிய நண்பர் ஒருவரின் வேண்டுகோளுக்கு அமைய பணத்தைப் பெற முயன்றதாக மாணவன் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பபட்ட பெண் டெலிகிராம் செயலி மூலம் சுமார் நான்கு மாதங்களாக பிரேசில் நாட்டு இளைஞருடன் உறவில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த உறவு பின்னர் காதல் உறவாக வளர்ந்துள்ளது. குறித்த பெண்ணை திருமணம் செய்வதாகவும் உறுதியளித்துள்ளார். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்பட்ட நெருக்கமான உறவு காரணமாக, குறித்த பெண்ணுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

சில மாதங்களில் குறித்த பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிடவுள்ளதாக மிரட்டி பணம் கோரியதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

குறித்த பல்கலைக்கழக மாணவனிடம் பணத்தை வழங்குமாறு வெளிநாட்டவர் கோரிக்கை விடுத்த நிலையில், இது குறித்து பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கப்பல்துறை பகுதியில் கத்திக்குத்து : ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!!

திருகோணமலை – சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கப்பல்துறை பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கப்பல்துறை சமுர்த்தி வீதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று (21.10.2025) அதிகாலை 2.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது நடராஜ் என்ற 43 வயதான நபர் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

நேற்று அதிகாலை 2.30 மணியளவில் நாய் குரைக்கின்ற சத்தம் கேட்டு குறித்த நபர் வெளியே வந்து வீட்டின் முன்னால் உள்ள கடைப்பகுதியை பார்த்தபோது இருவர் அவர் மீது தடியைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாகவும் பின்னர் கத்தியால் குத்திவிட்டு அவர் அணிந்திருந்த சங்கிலி உள்ளிட்ட நகைகளை அபகரித்து சென்றதாகவும் தெரிய வருகின்றது.

குறித்த இரு மர்ம நபர்களும் கடையை உடைத்து திருட வந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஹயஸ் வாகனமும் லொறியும் மோதி விபத்து!!

ஹயேஸ் வாகனமும் சிறிய ரக லொறியும் மோதி சிலாபம் – வாரியபொல வீதியில் பிங்கிரிய நகரில் நேற்று (21.10.2025) விபத்துகுள்ளாகியுள்ளன.

நாட்டில் மழையுடனான காலநிலை நிலவும் நிலையில் பயணித்த ஹயேஸ் வாகனம், சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து நிலைதடுமாறி தேங்காய்களை ஏற்றிச்சென்ற லொறி மோதித் தள்ளியது.

இந்த விபத்தில் இரண்டு வாகன சாரதிகளும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் விபத்து குறித்த விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்த பாடசாலை மாணவிக்கு நேர்ந்த விபரீதம் : பரிதாபமாக பிரிந்த உயிர்!!

நேற்று பெய்த கனமழை காரணமாக பாதுகாப்பற்ற மதகில் வீழ்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி ஒருவர் நேற்று (21) உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி பேருந்து தரிப்பிடம் அருகே காத்திருந்தபோது, அவர் பாதுகாப்பற்ற மதகில் சிக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து அவரை அவிசாவளை மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்தநிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளைவரை கனமழை!!

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் தற்போது பெய்துவரும் கனமழை நாளை (22) வரை தொடரும் வாய்ப்பிருப்பதாக யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை பீட பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா நேற்று (21.10.2025) பிற்பகல் ஒரு மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வங்காள விரிகுடாவில் கடந்த திங்கட்கிழமை தினம் உருவான தாழமுக்கம் வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்றது. இத்தாழமுக்கம் நேற்று (21) மாலை அல்லது இன்று(22) அதிகாலை வடக்கு மாகாணத்துக்கு மிக அருகாக நிலைகொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதன் காரணமாக தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வரும் கனமழை நாளை வரை தொடரும் வாய்ப்பிருக்கிறது

எனவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்கள் இது தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாநகரசபை முதல்வர், பிரதிமுதல்வரின் பதவிகளுக்கு மேன் முறையீடு நீதிமன்றம் இடைக்காலத்தடை!!

வவுனியா மாநகரசபையின் முதல்வர், பிரதிமுதல்வர் ஆகியோர் அந்த பதவிகளை வகிப்பதற்கு இடைக்கால தடை உத்தரவை விதித்து கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(21.10.2025) உத்தரவிட்டுள்ளது.

வவுனியா மாநகரசபை உறுப்பினர்களான க.பிரேமதாஸ் மற்றும் சு.விஜயகுமார் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்திற்கே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் பிரதிவாதிகளாக ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த சு.காண்டீபன், ஜனநாயக தேசியகூட்டணியின் ப.கார்த்தீபன் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

குறித்த மனுவில் வவுனியா மாகநரசபையின் முதல்வர் பிரதிமுதல்வர் தெரிவின் போது பிரதிவாதிகள் சட்டத்திற்கு முரனானவகையில் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பிரதி முதல்வர் ப.கார்த்தீபன் மாநகரசபை எல்லைக்குள் வசிக்காத ஒருவராக உள்ளார்.

எனவே குறித்த இருவரும் அப் பதவிகளில் இருப்பதற்கு தகுதியற்றவர்கள் என்ற அடிப்படையில் அவர்களின் பதவிகளை செல்லுபடியற்றதாக அறிவிக்குமாறு கோரி இவ் வழக்குதாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவற்றை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் மனுமீதான விசாரணைகள் முடிவடையும்வரை முதல்வர், பிரதிமுதல்வர் ஆகியோர் அந்த பதவிகளை வகிப்பதற்கு இடைக்கால தடை உத்தரவினை வழங்கி இன்று உத்தரவிட்டுள்ளது.

மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் ஆயராகியிருந்தார்.

கோர விபத்தில் முதியவர் பரிதாபமாக பலி!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களுதாவளையில் இன்று செவ்வாய்க்கிழமை (21.10.2025) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு கல்முனை வீதியில் களுவாஞ்சிகுடி பக்கமிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று களுதாவளை பொது நூலகத்திற்கு அருகாமையில் பிரதான வீதியை கடந்துகொண்டிருந்த முதியவர் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த முதியவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் டிப்பர் சாரதி களுவாஞ்சிகுடி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் களுதாவளை பகுதியை சேர்ந்த 70வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஸ்தலத்திற்கு சென்ற களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் சடலம் களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் சாரதி உயிரிழப்பு!!

வவுணதீவு பொலிஸ் பிரிவில் உள்ள பாவக்கொடிச்சேனை வயல் பிரதேசத்தில் உழவு இயந்திரம் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி உயிரிழந்துள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

பாவக்கொடிச்சேனையைச் சேர்ந்த 51 வயதுடையவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உழவு இயந்திர சாரதி நேற்று திங்கட்கிழமை (20) வீட்டில் இருந்து பழங்குடியிருப்பு மடு பிரதேசத்திலுள்ள வயல் ஒன்றை உழுது பயன்படுத்துவதற்காக உழவு இயந்திரத்துடன் சென்றுள்ள நிலையில் இரவாகியும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார்.

இதனால் உழவு இயந்திர சாரதியின் உறவிழனர்கள் அவரை தேடி இன்று செவ்வாய்க்கிழமை காலையில் வயலுக்கு சென்ற போது உழவு இயந்திரம் குடைசாய்ந்துள்ளதையும் சாரதி சடலமாக கிடப்பதையும் கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்