கொடூரமாக மாறிய நள்ளிரவு : மண்ணில் புதையுண்டு உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர்!!

பதுளை, மடுல்சிம, பட்டவத்தை பகுதியில் கடந்த நவம்பர் 27ஆம் திகதி அன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மண்ணில் புதைந்த சம்பவம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

அன்றையதினம் கடுமையான குளிரில், தங்கள் பிள்ளைகளுடன் ஒரு அறையில் உறங்கிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர், அதிகாலை 4.00 மணியளவில் ஒரு பெரிய மண் சரிவில் புதைந்துள்ளனர்.

குறித்த வீட்டின் உரிமையாளர் ஆர். தியாகராஜா. அன்றைய தினம் தனது மனைவி மற்றும் மூன்று மகன்களுடன் வீட்டின் வரவேற்பு அறையில் உறங்கிக்கொண்டிருந்தார். இதன்போது அன்று நடந்த பெரிய சோகத்தைப் பற்றி அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

‘எனது மனைவி, மூன்று மகன்கள் மற்றும் நான் வரவேற்பு அறையில் உறங்கினோம். ஏனைய மூன்று மகள்கள், மகளின் இரண்டு பிள்ளைகள் மற்றும் எனது மருமகள் ஆகியோர் அறையில் உறங்கினர். மருமகளுக்கு குழந்தை பிறக்கவிருந்தது.

இந்த நிலையில் திடீரென்று ஒரு பெரிய சத்தம் கேட்டது. நான் வெளியே ஓடியபோது, அதிகளவான தண்ணீர் வருவதினை கண்டேன். “காப்பாற்றுங்கள்… காப்பாற்றுகள்…” என்று மக்கள் கத்துவதைக்கேட்டேன், இருட்டில் எனக்கு எதுவும் தெரியவில்லை.

நான் திரும்பிப்பார்த்தபோது, ​​ஒரு பெரிய பாறை வீட்டின் மீது மோதியது, வீடு முழுவதும் இடிந்து விழுந்தது. அறையில் உறங்கிக்கொண்டிருந்த அனைவரும் அதன் கீழ் புதைந்திருந்தனர்.

அவர்களைக் காப்பாற்றுமாறு முடிந்தவரை சத்தமாகக் கத்தினேன். ஆனால் யாரும் வர முடியவில்லை. எப்படியோ, காலையில், பாறைகள் மற்றும் மண் அகற்றப்பட்டு, பிள்ளைகள் வெளியே இழுக்கப்பட்டனர்.

இராணுவ வீரர்கள் கடினமாக உழைத்தனர். பிள்ளைகளை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வழி இல்லை. அதற்குள், அனைத்து பிள்ளைகளும் ஏற்கனவே இறந்துவிட்டனர். எனது பிள்ளைகள் என் கண் முன்னே உயிரிழந்து விட்டனர். இந்த துக்கத்தை என்னால் தாங்க முடியவில்லை.”

19, 27 மற்றும் 28 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று மகள்கள், ஒரு மகளின் 7 வயது மகள் மற்றும் இரண்டரை வயது மகன், அதே போல் 26 வயது மருமகள் ஆகியோர் இந்த பயங்கர மண் சரிவில் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தையடுத்து நாங்கள் செல்லமாக வளர்க்கும் நாய் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. அது நாள் முழுவதும் வீட்டைச் சுற்றித் திரியும். எங்கள் பிள்ளைகள் இந்த நாயை மிகவும் நேசித்தார்கள். நாயும் அப்படித்தான்.

அது பேரப்பிள்ளைகளின் புத்தகங்களை பார்த்து குரைக்கிறது. என்னால் அதனை தாங்க முடியவில்லை. குடும்பத்தினர் உயிரிழந்ததில் இருந்து நாய் சாப்பிட வருவதில்லை. நான் நாயை சாப்பிடுமாறு கூறினாலும் அது வராது.

அதனால் நான் உணவை எடுத்துக்கொண்டு நாய் தங்கியிருக்கும் உடைந்த வீடு அமைந்துள்ள இடத்திற்கு வர வேண்டும். அது எனக்கு இன்னும் வருத்தமாக உள்ளதாக தியாகராஜா கூறினார்.

இலங்கையில் இப்படியும் மனிதர்கள் வித்தியாசமான முறையில் உதவி செய்யும் நபர்!!

இலங்கையில் ஏற்பட்ட பேரிடரினால் பாதிக்கப்பட்ட வீடுகளில் மின் சாதனங்களை இலவசமாக பழுதுபார்க்கும் நடவடிக்கையில் நபர் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.

மாரவில தொழிற்பயிற்சி கல்லூரியில் ஆலோசகராகப் பணிபுரியும் சுஜித் ஹேரத் என்பவரே இந்த மகத்தான சேவையை செய்து வருகிறார். வெள்ளத்தால் சேதமடைந்த பல்வேறு வகையான மின் சாதனங்களை எந்த சேவைக் கட்டணமும் வசூலிக்காமல் திருத்திக் கொடுக்கிறார்.

ஏதேனும் குழு அல்லது தன்னார்வ அமைப்பு முன்வந்தால், கிராமம் கிராமமாகச் சென்று மாரவில தொழிற்பயிற்சி கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மற்றும் பட்டம் பெற்றவர்களின் உதவியுடன் தனது சேவைகளை வழங்க முடியும் என்று சுஜித் ஹேரத் தெரிவித்துள்ளார்.

வெள்ளம் வீடுகளில் உள்ள மின் சாதனங்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் நான் கற்றுக்கொண்டதைக் கொண்டு அவர்களுக்கு உதவ ஏதாவது செய்ய வேண்டும் என்று உணர்ந்தேன்.

அதனால்தான் இந்த சேவையை வழங்க முடிவு செய்தேன். ஏற்கனவே பல்வேறு மின் சாதனங்களை தான் இலவசமாக சரி செய்து கொடுத்துள்ளதாக சுஜித் ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஆசியாவிற்கு மேலும் பேரழிவுகளா : அச்சமூட்டும் பாபா வங்காவின் கணிப்புக்கள்!!

அண்மைய நாட்களாக இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளில் பதிவாகி வரும் காலநிலை மாற்றங்கள் எவரும் எதிர்பார்க்காத அளவு பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளன. இயற்கையின் கோர தாண்டவத்தில் மனித, சொத்து மற்றும் பொருளாதார சேதத்தை குறித்த நாடுகள் கடுமையாக எதிர்நோக்கியுள்ளன.

இந்நிலையில், பாபா வங்கா, உலகில் நடக்கப்போகும் பேரழிவுகள் குறித்து மேற்கொண்டுள்ள கணிப்புக்கள் பேசுபொருளாகியுள்ளதுடன் அவரின் கணிப்பின் படி தான் அனைத்தும் நடக்கின்றனவா என அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது.

எனவே, ஆசியாவிற்கு பேரழிவுகள் ஏற்படும் என அவர் கணித்திருந்தமை, தற்போது வரை பதிவாகியுள்ள அனர்த்தங்கள் மாத்திரமா அல்லது மேலும் பல காத்திருக்கின்றனவா என்றும் ஒரு அச்சம் எழுகின்றது.

பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா பார்வையற்ற பெண்ணொருவர், எதிர்காலம் குறித்து பல நிகழ்வுகளை கணித்துள்ளதாகவும் அவரின் கணிப்புக்களில் ஆசியாவுக்கு பேரழிவு ஏற்படும் என சுட்டிக்காட்டியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்களில் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக, அவர் மேற்கொண்ட பல நிகழ்வுகள் அதேபோல நடக்காவிடினும் அதற்கு ஒத்த அல்லது தொடர்புடைய சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமையே அவரின் கணிப்புக்களை ஆராய தூண்டுகின்றது.

அந்தவகையில், 1996 ஆம் ஆண்டு உயிர்நீத்த பார்வையற்ற பெண்ணொருவர் 2025ஆம் ஆண்டில் ஏற்பட போகும் பேரழிவுகளை கணித்தார் என கேட்கும் போது நமக்கு அவநம்பிக்கை ஏற்படும் அதேவேளை, சந்தேகத்தையும் எழுப்புகின்றது.

எனவே, அவரின் கணிப்பை ஆராயும் போது, குறித்த பெண், 2025ஆம் ஆண்டு ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளுக்கு ஒரு மோசமான அழிவு ஏற்படும் என கணித்துள்ளார்.

அதன்படி, ஆசியாவில் ஒரு பெரிய இயற்கை பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளது, அதைத் தொடர்ந்து ஒரு பாரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது, அதைத் தொடர்ந்து சுனாமி வரக்கூடும் அபாயம் உள்ளது என அவரின் கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மையில், ஆசிய நாடான ஜப்பானில் ஒரு வாரத்திற்கு முன்னர் அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகியது. இதன்போது, கிட்டத்தட்ட 90,000 பேர் வெளியேற்றப்பட்டதுடன் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு நில அதிர்வு அபாயம் அதிகமாக இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டது.

அதேவேளை, குறித்த நிலநடுக்கத்தின் போது குறைந்தது 23–33 பேர் காயமடைந்ததாக அந்நாட்டு செய்திகளில் கூறப்பட்டன. அதேசமயம், இலங்கை மற்றுமு் இந்தியாவில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திய டிட்வா புயலும் பதிவாகியிருந்தது.

இலங்கை காலநிலை வரலாற்றிலேயே சுனாமிக்கு பிறகு மிகப் பாரிய பொருளாதார சேதத்தை ஏற்படுத்திய ஒரு அனர்த்தமாக இது பதிவு செய்யப்பட்டது.

2004 ஏற்பட்ட சுனாமியை விடவும் அதிகமான பொருளாதார சேதத்தை ஏற்படுத்தி நாடு முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு மீட்பு பணிக்கு கூட சிரமங்களை ஏற்படுத்திய ஒரு பேரழிவு இந்த டிட்வா புயல்.

இத்தகைய, அனர்த்தங்கள் பதிவாகியிருக்கும் நிலையிலேயே பாபா வங்கா ஆசியாவுக்கு பேரழிவு ஏற்படும் என கணித்திருந்ததாக கூறப்படும் செய்தி பேசுபொருளாகியுள்ளது.

அத்துடன், மேலும், அவர் 5079 ஆம் ஆண்டு வரை நடக்க போகும் என மேற்கொண்டுள்ள கணிப்புக்கள் குறித்து கேள்வி எழுப்பப்படுவதுடன் சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் ஆராயப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோர விபத்தில் தம்பதி மரணம் : படுகாயங்களுடன் வைத்தியசாலையில் மூவர்!!

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். கார் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது காரைச் செலுத்திச் சென்ற 45 வயதுடைய நபரும், காரின் முன் ஆசனத்தில் அமர்ந்து பயணித்த 39 வயதுடைய பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேற்படி இருவரும் தம்பதி என்று பொலிஸ் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

மேலும், காரின் பின் ஆசனங்களில் அமர்ந்து பயணித்த மேற்படி தம்பதியரின் உறவினர்கள் மூவர் (ஆண் ஒருவர், இரு பெண்கள்) காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்துச் சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவர்கள், காதலர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்!!

குருநாகல் மாவட்டத்தில் மேலதிக வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்களிடம் பணம் பறிக்கு இளைஞர் கும்பலை சேர்ந்த பலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக குருநாகல் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட குழு அந்தப் பகுதியிலுள்ள பாடசாலையில் படிக்கும் மாணவர்கள் என தெரியவந்துள்ளது.

கல்கமுவ, தம்புள்ள, அலவ்வ, கிரியுல்ல மற்றும் குளியாபிட்டிய போன்ற தொலைதூரப் பகுதிகளிலிருந்து குருநாகலுக்கு வரும் மாணவர்களை அச்சுறுத்தி மிரட்டி, அவர்களிடமிருந்து 100 முதல் 1000 ரூபாய் வரை பலவந்தமாக பணம் பறிப்பதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக குருநாகல் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்ஸ விதானகேவுக்கு கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து, சிவில் உடையில் கண்காணிப்பில் ஈடுபட்ட பொலிஸார் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை குருநாகல் பகுதிக்கு வருகை தரும் இளம் காதலர்களை மிரட்டி பணம் பறிக்கும் இளைஞர் கும்பலை சேர்ந்த ஒரு குழுவும் இதே முறையில் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறான நிலையில் வழிப்பறிகள் தொடர்பில் பாடசாலைகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தொடர் நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விதானகே மேலும் தெரிவித்துள்ளார்.

டித்வா புயலின் எதிரொலி : பெற்றோரை இழந்துள்ள பல சிறுவர்கள்!!

அனர்த்தங்கள் காரணமாக 73 சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.  இந்த சிறுவர்கள் தாய், தந்தை அல்லது பெற்றோர் இருவரையும் இழந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் பெரும்பாலானோர் பதுளை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும், அந்த மாவட்டத்தில் இவ்வாறான 21 சிறுவர்கள் பற்றிய தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

கண்டி மாவட்டத்தில் 20 சிறுவர்கள் தாய், தந்தை அல்லது பெற்றோரை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அனர்த்தம் காரணமாக பெற்றோரை இழந்து பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவர்கள் தொடர்பில் தகவல்களை திரட்டி மேற்கொள்ளப்படும் கடத்தல் சம்பவங்கள் குறித்து பொலிஸ் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

இலங்கையில் பணப் பாவனை தொடர்பில் எச்சரிக்கை : 20 வருடம் சிறைத்தண்டனை!!

பண்டிகைக் காலத்தில் போலி பணத்தாள்கள் புழக்கத்தில் உள்ளமை குறித்து பொலிஸாருக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் வுட்லர் தெரிவித்துள்ளார்.

பணத் தாள்கள் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்யுமாறு பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார்.

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்ட பெரும்பாலான போலி பணத் தாள்கள் 5000 ரூபாய் நாணயத்தாள்களாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டில், குற்றப் புலனாய்வுத் பிரிவினால் போலி 5000 ரூபாய் பணத் தாள்கள் 596 கைப்பற்றப்பட்டன. 2025 ஆம் ஆண்டில் இதுவரை போலி 5000 ரூபாய் பணத் தாள்கள் 535 பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

போலி பணத்தாள்கள் அச்சிடுதல், அவற்றை வைத்திருத்தல் மற்றும் போலி பணத்தாள்களை அச்சிடுவதற்கான உபகரணங்களை வைத்திருத்தல் போன்ற குற்றங்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

நள்ளிரவில் இடம்பெற்ற விபத்து : முச்சக்கரவண்டயில் காட்டுப்பன்றி மோதியதில் இருவர் காயம்!!

அதிக வேகத்தில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று, காட்டுப்பன்றியுடன் மோதி விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில், மல்லிப்பு சந்திக்கு அருகில் நேற்று (16.12.2025) நள்ளிரவு 12.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கினிகத்தேனை பகுதியிலிருந்து கொட்டகலை பகுதியை நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

முச்சக்கரவண்டி அதிக வேகத்தில் பயணித்துள்ளதாகவும், இதன்போது வீதியின் குறுக்கே பாய்ந்த காட்டுப்பன்றியின் மீது மோதியுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் முச்சக்கரவண்டிக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்களைப் பொலிஸாரும், வீதியில் பயணித்தவர்களும் இணைந்து மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டில் அலை வடிவிலான காற்றுப்பெயர்ச்சி : கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை!!

வளிமண்டலத்தின் கிழக்கு பகுதியில் ஏற்படும் அலை வடிவிலான காற்றுப்பெயர்ச்சியின் தாக்கம் காரணமாக, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன், கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும், பதுளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைக்க பொதுமக்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

லண்டனில் தமிழர் கடையில் நடந்த சம்பவம் : நையப்புடைக்கப்பட்ட இளைஞர்!!

லண்டனில் தமிழர் கடை ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் லண்டன்வாழ் தமிழர்களியே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனில் அண்மையில் யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட திருமணமாகி ஒருவருடமே ஆன இளம் குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த 14 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தமிழரின் கடைக்குள் நுழைந்த நபர் அங்கு கொள்ளையிட முயற்சித்ததுடன், கடைக்கு தீவைக்க முயற்சித்துள்ளார். இதன் போது கடையில் இருந்த நபர், கொள்ளையன் மீது தாக்குதலை மேற்கொண்ட காணொளி வெளியாகியுள்ளது.

அத்துடன் தீவைக்க முயன்ற நபர் கடையில் நின்றவரால் நையப்புடைக்கப்பட்டுள்ளார். நாட்டைவிட்டு புலம்பெயர்ந்து அங்கு பல துன்பங்களை அனுபவித்து வாழ்க்கையில் முன்னேறி வரும்போது கொள்ளையர்களால் தாக்கப்படும் சம்பவங்கள் கலக்கத்தை ஏற்படுத்துயுள்ளது.

அண்மைக்காலமாக லண்டனின் தமிழர்களை இலங்கு வைத்து அரங்கேறும் கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள் லண்டன் வாழ் தமிழர்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய்யுள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் : இலங்கையில் பதிவாகியுள்ள நிலவரம்!!

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று (17.12.2025) காலை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,307 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

அதேநேரம் நேற்று (16) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,277 அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்ததாக செய்திகள் கூறுகின்றன.

இதேவேளை, நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (17) 22 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 1700 ரூபாயால் அதிகரித்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 340,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்க பவுண் ஒன்று 314,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 39,313 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

முல்லைதீவில் மாயமான சிறுவன் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை!!

முல்லைத்தீவு, கருநாட்டுக்கேணி பகுதியில் வசித்து வந்த 16 வயதுடைய சிறுவனை கடந்த 29ஆம் திகதி அன்று முதல் காணவில்லை என உறவினர்களினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான், கூழாமுறிப்பு பகுதியினை சொந்த முகவரியாக கொண்ட குறித்த சிறுவன், கடந்த புயலுக்கு முன்னர் கருநாட்டுக்கேணி பகுதியில் தயாரின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இதற்கிடையில், கடந்த 28.11.2025ஆம் திகதி தொடக்கம் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி போன்ற பகுதிகளுக்கான தரை வழிப்பாதையான நாயாற்று பாலம் ஊடாக போக்குவரத்து பாலம் உடைவினால் இன்றுவரை தடைப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த சிறுவன், காணாமல் போனமை தொடர்பில் எந்த தகவலும் அறிந்து கொள்ள முடியாத நிலையில் உறவினர்கள் இருந்துள்ளார்கள்.

அதனைதொடர்ந்து, இது தொடர்பில் உறவினர்களினால் முல்லைத்தீவு பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த சிறுவனை காண்பவர்கள் உடனடியாக 768459796 இந்த இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

மின் கம்பங்களை உடைத்துக்கொண்டு ஆற்றில் பாய்ந்த வான் : உயிர் தப்பிய யுவதிகள்!!

கந்தளாய் – சேருநுவர பிரதான வீதியில், கந்தளாய் அணைக்கட்டுக்கு முன்பாக வான் ஒன்று வீதியில் இருந்து விலகி ஆற்றில் பாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

இன்று (17.12.2025) காலை 8.00 மணியளவில் கந்தளாயில் இருந்து ஆடைத்தொழிற்சாலை யுவதிகளை வான்-எல பகுதிக்கு ஏற்றச்சென்ற வானே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

கந்தளாய் அணைக்கட்டுக்கு முன்பாக கட்டுப்பாட்டை இழந்து வீதியிலிருந்து விலகிய வான், வீதியோரத்திலிருந்த இரண்டு மின்கம்பங்களை பலமாக மோதி உடைத்துக்கொண்டு அருகில் இருந்த ஆற்றுக்குள் விழுந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது வானில் பயணித்த சாரதி உட்பட இரண்டு யுவதிகளுக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என கந்தளாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையைச் சுற்றிவளைத்த காற்றுச் சுழற்சி : யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர் விடுத்துள்ள எச்சரிக்கை!!

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக உருவாகிய காற்றுச் சுழற்சி மேற்கு வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்போது இலங்கைக்கு தெற்காக நிலை கொண்டுள்ளது என யாழ்.பல்கலைக்கழக புவியியல்துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

அதேபோல இலங்கையின் தென்பகுதியில் ஒரு வளிமண்டல உறுதியற்ற நிலைமையும் காணப்படுகின்றது.

இதன் காரணமாக தற்பொழுது நாட்டின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வரும் மழை எதிர்வரும் 19ஆம் திகதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாளை இரவு முதல் (18.12.2025) வடக்கு மாகாணத்திற்கு மழை படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால் கிழக்கு ஊவா, மத்திய, சப்ரகமுவ, தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களுக்கு எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மழை நீடிக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.

காற்றுச்சுழற்சி இலங்கைக்கு தெற்காக நிலை கொண்டிருப்பதனாலும் தென்பகுதியில் நிலவும் வளிமண்டல உறுதியற்ற தன்மையினாலும் மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் இன்று முதல்(17.12.2025) எதிர்வரும் 19.12.2025 ஆம் திகதி வரை சற்று கனமழையைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே பதுளை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, கேகாலை மாவட்டங்களில் கனமழையோடு இணைந்த நிலச்சரிவு தொடர்பில் மக்கள் அவதானமாக இருப்பது அவசியமானதாகும்.

அதேவேளை கிழக்கு மாகாணத்தில் பல பகுதிகளுக்கும் மழை தொடர்ந்து கிடைத்து வருவதாலும் கிழக்கு மாகாணத்திற்கு எதிர்வரும் 19ம் திகதி வரை மழை கிடைக்கும் என்பதனாலும் கிழக்கு மாகாணத்தில் குளங்களுக்கு நீரை கொண்டு வருகின்ற நீரேந்துப் பிரதேசங்களுக்கும் மழை தொடரும் எனவும் சுட்டிகாட்டியுள்ளார்.

கிழக்கு மாகாண குளங்களுக்கு அதிகளவான நீர்வரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கிடைத்து வருகின்ற மிதமான மற்றும் கனமான மழை காரணமாக வடக்கு மாகாணத்தில் பல குளங்கள் வான் பாய்கின்ற நிலைமை காணப்படுகின்றது.

எனினும் நாளை (18.12.2025) இரவு முதல் வடக்கு மாகாணத்திற்கு மழை குறைவடையும் வாய்ப்புள்ளது

அதேவேளை கடந்த சில நாட்களாக நிலவிய குளிர் மீண்டும் நாளை மறு தினம் முதல் (19.12.2025) அதிகரிக்கும் என்பதோடு இந்த குளிரான வானிலை 26 ஆம் திகதி வரைக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ்.பல்கலைக்கழக புவியியல்துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்திய விமானம் : 200 உயிர்களை காப்பாற்றிய விமானியின் சாமர்த்தியம்!!

புதிய இணைப்பு : கொழும்பிலிருந்து இஸ்தான்புல்லுக்கு செல்லவிருந்த விமானத்தில், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை அதன் விமானி சாமர்த்தியமாக கையாண்டுள்ளார்.

பயணத்தை தொடங்கிய சிறு பொழுதுகளிலேயே, விமானத்தின் சக்கரங்களை உள்ளிழுக்கும் அமைப்பில் (Landing Gear) சிக்கல் ஏற்பட்டுள்ளதை விமானி கண்டறிந்துள்ளார்.

அதன் பின்னர், விமானத்தைத் தொடர்ந்து இயக்குவது பாதுகாப்பானது அல்ல என்பதை உணர்ந்த விமானி, உடனடியாகக் கட்டுநாயக்க விமான நிலையக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டு அவசரமாகத் தரையிறங்க அனுமதி கோரியுள்ளார்.

இருப்பினும், முழுப் பயணத்திற்கும் தேவையான எரிபொருளுடன் இருந்த விமானம், அதன் அதிகப்படியான எடையுடன் தரையிறங்குவது பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்பதால் உடனடியாகத் தரையிறக்க முடியாமல் போயுள்ளது.

அதனை தொடர்ந்து, விமானத்தின் எடையைக் குறைப்பதற்காக சாமர்த்தியமாக செயற்பட்ட விமானி, சிலாபம் கடல் பகுதிக்கு மேலே விமானத்தை வட்ட பாதையில் செயற்படுத்தியுள்ளார்.

இதன் காரணமாக நடுவானிலேயே பெருமளவு எரிபொருள் கடலில் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளது. இதற்கிடையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் முழு அவசரக்கால எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தொடர்ந்து, நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, எடையைக் குறைத்துக்கொண்ட அந்த விமானம் நள்ளிரவில் மிகவும் லாவகமாகப் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

விமானத்தில் இருந்த 202 பயணிகள் மற்றும் 10 பணிக்குழுவினர் என யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் விமானம் தரையிறங்கியுள்ளது.

ஆபத்தான நேரத்திலும் சாமர்த்தியமாக செயல்பட்ட விமானியின் நிதானமும், தரைக் கட்டுப்பாட்டு அறையின் துரித நடவடிக்கையும் இவ்விடத்தில் பாராட்டத்தக்கது.

இரண்டாம் இணைப்பு : கொழும்பிலிருந்து இஸ்தான்புல்லுக்குச் சென்ற துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் TK 733, தொழில்நுட்பக் கோளாறைத் தொடர்ந்து அதிகாலை 12:28 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

முதலாம் இணைப்பு : துருக்கிய ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விமானம், தரையிறங்கும் கியரில் செயலிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) ஓடுபாதையில் அவசரமாக தரையிறங்கத் தயாராக உள்ளது என்று விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இஸ்தான்புல்லுக்குச் செல்லவிருந்த TK 733 விமானம், 202 பயணிகள் மற்றும் 10 பணியாளர்களை ஏற்றி கொண்டு கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, அதன் தரையிறங்கும் கியரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை தொடர்ந்து, தரையிறங்கும் போது ஏற்படும் அபாயங்களைக் குறைக்க விமானி கடலுக்கு மேலே ஒரு முன்னெச்சரிக்கை எரிபொருள் நிரப்புதலை மேற்கொண்டதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இவ்விடயம் தொடர்பிலான அறிக்கை வெளியான நேரத்தில், விமானம் சிலாபம் பகுதிக்கு மேலே சுமார் 4,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்துள்ளது.

மேலும், விமானம் இன்று நள்ளிரவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், தீயணைப்பு வாகனங்கள், நோயாளர் காவு வண்டிகள் மற்றும் அவசரகால மீட்புக் குழுக்கள் ஓடுபாதையில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு விபத்தில் தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் பலி!!

மட்டக்களப்பு – கிரானில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ் விபத்துச் சம்பவம் நேற்று (15) பிற்பகல் கிரான் கும்புறுமூலைச் சந்தியில் மோட்டார் சைக்கிள் மற்றும் டிப்பர் வாகனம் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில். மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியின் கற்கை நெறியை தொடர்ந்து கொண்டிருந்த கிரானைச் சேர்ந்த சுரேந்திரன் கிசாளன் எனும் மாணவனே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் வாழைச்சேனை போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.