கொழும்பு கடற்கரையோரமாக மிகவும் தாழ்வாக பறந்த புதிய ஏர்பஸ் விமானம்!!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் இணையும் புதிய ஏர்பஸ் A330-200 விமானம் இலங்கையை வந்தடைந்துள்ளது. கொழும்பு கடற்கரைக்கு மேலாக குறித்த விமானம் பறந்து செல்லும் காட்சியை பலரும் பார்வையிட்டுள்ளனர்.

பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் இருந்து A330-200 wide-body என்ற ஏர்பஸ் விமானம் இலங்கையை வந்தடைந்தது.

குறித்த கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்க முன்னர், மிகவும் தாழ்வாக கொழும்பின் கடற்கரையோரமாக பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய இன்று காலை 9.40 மணியளவில் கொள்ளுப்பிட்டி – பாணந்துறை கடற்கரை அண்டிய பகுதியில் பறந்து சென்றுள்ளது. எனினும் பலரும் எதிர்பார்த்தளவுக்கு பாரியளவிலான விமானத்தை பார்வையிட முடியவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.

பாம்பு வழிகாட்டி அந்தோனியார் : இலங்கையில் இப்படி ஒரு ஆலயமா? கடலென குவிந்த பக்தர்கள்!!

மன்னார் – சிற்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவானது செவ்வாய்க்கிழமை (3) சிறப்பாக நடைபெற்றது.

மாதத்தில் முதல் வரும் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வருகை தந்து அந்தோனியாரின் திருவருளைப் பெற்றுச் செல்வது வழமை.

அந்தவகையில் செவ்வாய்க்கிழமை (3) திருவிழா என்பதால் இலட்சக்கணக்கான மக்கள் வருகை தந்து அநீதோனியாரை தரிசித்து சென்றனர்.

பக்தர்கள் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் முகமாக உணவுப் பொருட்களை தானம் செய்வதையும், நினைத்த காரியங்கள் நிறைவேறுவதற்கு தமது வேண்டுதல்கள் எழுதிய கடதாசிகளை மரங்களில் கட்டுவதையும், பிள்ளைப்பேறு வேண்டி தொட்டில்களை கட்டுகின்றனர்.

பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலயத்திற்கு சென்று வேண்டியவர்களின் பல்வேறு வேண்டுதல்கள் நிறைவேறியபடியால் இந்த ஆலயமானது பிரசித்தி பெற்றுள்ளது.

இதன் காரணமாக பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலயத்திற்கு கிறிஸ்தவ மக்கள் மாத்திரமன்றி பல்வேறு மதத்தவர்ளும் சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.

யாழில் பல லட்சங்களுக்கு ஏலம் போன முருகன் மாம்பழம் : வாங்கியது யார் தெரியுமா?

யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை தாமரைவீதியில் அமைந்துள்ள வண்ணை கோட்டையம்பதி சிறிசிவசுப்பிரமணியர் ஆலயத்தில் நடைபெற்ற மாம்பழத் திருவிழாவில் மாம்பழம் பல இலட்சங்களில் ஏலம் போயுள்ளது.

புலம்பெயர் தமிழர் ஒருவர் இந்த மாம்பழத்தை ஏலத்தில் எடுத்துள்ளார். கோட்டையம்பதி சிறிசிவசுப்பிரமணியர் ஆலயத்தில் 15 நாட்கள் திருவிழா நடைபெற்று வருகிற நிலையில் எட்டாம் நாளான நேற்று மாம்பழத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

மாம்பழத் திருவிழா நிறைவடைந்த பின்னராக முருகனின் மாம்பழம் ஆலய நிர்வாக சபையினரால் ஏலம் விடப்பட்டிருந்தது.

இதன் போது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்தும் ஆலயத்திற்கு வந்திருந்த அடியவர்கள் குறித்த மாம்பழத்தை வாங்கும் நோக்கில் ஏலத்தில் ஈடுபட்டனர். இதனால் மாம்பழத்தின் விலை பல இலட்சங்களையும் தாண்டி மாம்பழம் ஏலம் எடுக்கப்பட்டது.

பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்திருந்த அடியவர் நான்கு இலட்சத்து அறுபதினாயிரம் (4,60,000) ரூபாவிற்கு இந்த மாம்பழத்தை ஏலத்தில் எடுத்திருந்தார்.

இதன் போது ஆலய நிர்வாக சபையினரால் மாம்பழத்துடன் ஏனைய சில பொருட்களும் ஏலத்தில் விடப்பட்டிருந்தது.

சடலத்தை காண ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்றவர் மரணம்!!

ஆற்றில் மிதந்த சடலத்தை காண ஆற்றின் நடுப்பகுதிக்கு நீந்தி சென்ற ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போனதாக வாரியபொல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வாரியபொல ஆற்றில் அழுகிய நிலையில் மிதந்த சடலத்தையே அவர் பார்வையிட அவர் நீந்திச் சென்றமை மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வாரியபொல-களுகமுவ வீதியில் வாரியபொல நகருக்கு அருகிலுள்ள விலக்கட்டுபொத ஆற்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நீரில் மூழ்கிய நபர் அங்கு இருந்த பொலிஸாரின் அறிவுறுத்தல்களை மீறி ஆற்றின் நடுப்பகுதிக்கு நீந்தி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இரு சடங்களும் புத்தளம் கடற்படையினரால் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் வாரியபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உலக மக்கள் தொகைக்கு பேரழிவு : அமெரிக்க பேராசிரியர் அதிர்ச்சித் தகவல்!!

உலக மக்கள் தொகை 2300ஆம் ஆண்டில் 10 கோடியாக குறையக்கூடும் அமெரிக்க பேராசிரியர் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் 2300ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 10 கோடியாக குறையக்கூடும் என்று அமெரிக்காவை சேர்ந்த கணினி அறிவியல் பேராசிரியர் சுபாஷ் காக் தெரிவித்தார்.

டெர்மினேட்டர் பாணி அணு ஆயுதப் போரினால் அல்ல, மாறாக மனிதனின் வேலைகளை ஏஐ-க்கு மாற்றுவதன் மூலம் மக்கள் தொகையில் சரிவு ஏற்படும் என்றார்.

வேலை வாய்ப்பு இழப்பு குறிப்பிடத்தக்க பிறப்பு விகித சரிவுக்கு வழிவகுக்கும் என்றும், ஐரோப்பா, சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் மக்கள் தொகை குறைந்து வருவதையும் சுபாஷ் காக் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை வேலை இல்லாதவர்கள் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள தயங்குவார்கள் என்பதால், பிறப்பு விகிதம் வீழ்ச்சியடையும் என்றும், இதனால் உலக மக்கள் தொகைக்கு பேரழிவு ஏற்படக்கூடும் என்றும் கூறினார்.

 

கனடாவில் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞன் – விசாரணையில் வெளியான தகவல்!!

கனடாவில் மோசமாக செயற்பட்ட தமிழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரொரன்ரோவில் உள்ள வணிக வளாகத்தில் நடந்த சம்பவம் தொடர்பில் 30 வயதுடைய தமிழர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 23ஆம் திகதி வணிக வளாகத்தில் பெண்கள் உடை மாற்றும் அறையின் சுவருக்கு அடியில் கையடக்க தொலைபேசி வைத்தாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பின்னர் பொலிஸார் கடைக்கு வரவழைக்கப்பட்ட நிலையில் சந்தேக நபரான ஜெரோன் நித்தியானந்தராஜா என்பவர் கைது செய்யப்பட்டார்.

உடை மாற்றும் அறையில் இருந்தவரை நோக்கி அந்த கையடக்க தொலைபேசி காணப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் யோர்க் பிராந்திய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

தொழிலதிபரின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட 55 கிலோகிராம் தங்கம்!!

களுத்துறை- ஹொரணை பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபரின் வீட்டில் இருந்து சுமார் ஐம்பத்தைந்து கிலோகிராம் தங்கம் புலனாய்வுத் துறையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவற்றின் மதிப்பு ஒரு பில்லியன் ரூபாயை நெருங்கும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தொழிலதிபர் தங்கமானது, நீண்ட காலமாக தான் சேர்த்து வைத்திருக்கும் இருப்பு என்று கூறியுள்ளார்.

எனினும், அத்தகைய இருப்பு எவ்வாறு என்பது என்பது குறித்த தகவலை அவரால் வெளியிட முடியவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தங்க இருப்புக்களை புலனாய்வுத் துறை பறிமுதல் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அறியப்படுகிறது.

கொவிட் பரவல் காரணமாக எடுக்கப்படவுள்ள கட்டுப்பாடுகள் தொடர்பில் சுகாதார அமைச்சு தகவல்!!

நாட்டிற்குள் நுழைந்துள்ள புதிய கோவிட் திரிபு மேலும் பரவாமல் தடுக்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையை நிவர்த்தி செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உலக சுகாதார நிறுவனத்துடன் தொடர்ந்து கலந்துரையாடி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வரும் வெளிநாட்டவர்களிடம் கோவிட் பரிசோதனை மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் 24 பிராந்தியங்களில் கோவிட் பரவியுள்ளது. இந்நிலையில் இலங்கை சுகாதார பிரிவின் நடவடிக்கை தொடர்பில் அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பல நாடுகளில் கடந்த சில நாட்களாக தொற்று பரவி வருவதனை அவதானிக்க முடிந்துள்ளது. இதனால் நிலைமை தொடர்பில் உலக சுகாதார அமைப்புடன் இணைந்து செயற்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது பதிவாகும் கோவிட் நோயாளிகள் மற்றும் தற்போதைய நிலைமை குறித்த தகவல்கள் இன்று நாட்டிற்கு வெளிப்படுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்பில் ஆராயப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும். நாட்டை முடக்குவதா கட்டுப்பாடுகள் விதிப்பதா என்பது தொடர்பில் நன்கு ஆராய்ந்த பின்னர் முடிவுகள் எடுக்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் நோய் பரவுவதை தொடர்ந்து கண்காணித்து வருவதால், பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் மாரடைப்பு : விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

இலங்கை மற்றும் பிற தெற்காசிய நாடுகளில், இளைஞர்கள் மத்தியில், மாரடைப்புஅதிகரித்து வருவது தொடர்பில், முக்கிய விடயங்கள் பகிரப்பட்டுள்ளன.

25 ஆண்டுகளுக்கும் மேலாக இருதயநோய் நிபுணராக சேவையாற்றும், கோட்டாபய ரணசிங்க இந்த தகவல்களை பகிர்ந்துள்ளார். ஒரு காலத்தில் 40 வயதுக்குட்பட்டவர்களில் அரிதாக இருந்த மாரடைப்பு, இப்போது மிகவும் பொதுவானதாகிவிட்டது.

ஒவ்வொரு மாதமும், 20 மற்றும் 30 வயதுகளில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களை தாம் சந்திப்பதாக கூறும் அவர், அதில் பலர் உடல் பருமன் அல்லது குடும்ப வரலாறு போன்ற பாரம்பரிய ஆபத்து காரணிகள் இல்லாமல், மாரடைப்புக்கு உள்ளாகியுள்ளதை காண முடிகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

அப்படியானால் இந்த நிலைமைக்கு, நவீன வாழ்க்கை முறை உள்ளது. குறிப்பாக, மோசமான உணவு, உடல் செயலற்ற தன்மை, நாட்பட்ட மன அழுத்தம் மற்றும் போதுமான தூக்கமின்மை என்பன மாரடைப்புக்கான முக்கியம் மூல காரணங்களாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, வாரத்துக்கு குறைந்தது ஐந்து நாட்கள் 40 நிமிடங்கள் உடல் செயல்பாடுகளில் ஈடுபடுங்கள். இதற்கு ஜிம் தேவையில்லை. நடைபயிற்சி என்பது உங்கள் இதயத்தைப் பாதுகாக்க எளிமையான மற்றும் மிகவும் சக்திவாய்ந்த பழக்கமாகும்.

நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் அல்லது நடனம் போன்ற பிற செயல்பாடுகளும் சிறந்தவை என்று அவர் பரிந்துரைத்துள்ளார்.

தூக்கமின்மை ஒரு முக்கிய இருதய ஆபத்து காரணி என்பதை பலர் உணரவில்லை. மோசமான தூக்கம் மன அழுத்த ஹோர்மோன் அளவை (கார்டிசோல் போன்றவை) அதிகரிக்கிறது.

குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கிறது மற்றும் தமனிகளை சேதப்படுத்துகிறது ஆகவே ஒரு இரவுக்கு குறைந்தது 7 மணிநேரம் தரமான தூங்குங்கள். இது ஒரு மருத்துவத் தேவையாகும் என்று மருத்துவர் ரணசிங்க வலியுறுத்தியுள்ளார்.

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளைக் குறைக்க வேண்டும். விதை எண்ணெய்களைத் தவிர்த்து, தேங்காய் எண்ணெய் அல்லது ஒலிவ் எண்ணெயை உட்கொள்ளவும்.

உங்கள் உணவில் இருந்து மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை நீக்கவும். இந்த நிலையில், அசாதாரண சோர்வு, படபடப்பு அல்லது மார்பு இறுக்கம் ஏற்பட்டால், அவற்றை புறக்கணிக்காதீர்கள் என்றும் இருதயநோய் நிபுணராக சேவையாற்றும், கோட்டாபய ரணசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

வவுனியா ஓமந்தையில் திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டது!!

வவுனியா ஓமந்தை கிராம அலுவலர் வளாகத்திற்குள் திருவள்ளுவர் சிலை இன்று (04.06.2025) திறந்துவைக்கப்பட்டது.

கிராம அலுவலர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட வவுனியா பிரதேச செயலாளர் இ.பிரதாபன் சிலையை திறந்துவைத்தார்.

நிகழ்வில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் விரிவுரையாளர் கு.பாலஷண்குகன், தெற்கு பிரதேசசபையின் செயலாளர் சு.தெர்ஜனா, அதிபர், பாடசாலை மாணவர்கள், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

வவுனியாவில் மனைவியின் தலையுடன் பொலிசில் சரணடைந்த கணவர் : விசாரணையில் அதிர்ச்சி!!

வவுனியாவில் ஆசிரியையான 32 இளம் குடும்பப் பெண் கணவனால் கழுத்து வெட்டி கொல்லப்பட்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.

தனது மனைவியை கொலை செய்ததாக கணவர் மனைவியின் தலையுடன் புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த கொடூர சம்பவம் நேற்றையதினம் (03.06.2025) இடம்பெற்றிருந்தது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட 35 வயதான யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த சுகிர்தரன் என்ற இளம் குடும்பஸ்தரான மரணமடைந்த பெண்ணின் கணவர் வழங்கிய வாக்கு மூலத்தில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவர்ணலதா என்ற 32 வயதான ஆரம்பப் பிரிவு ஆசிரியரான இவர் கணவனால் கொலை செய்யப்பட்டமைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்த போதிலும் கணவனினால் புளியங்குளம் பொலிசாருக்கு வழங்கப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையில் தனது மனைவி ஏற்பட்ட சந்தேகமே இந்த நிலைமைக்கு காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தான் கொழும்பில் தங்கி இருந்து கட்டிட வேலைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ள குறித்த இளம் குடும்பஸ்தர், நீண்ட காலமாக தனக்கும் மனைவிக்கும் இடையில் பல சலசலப்புகள் ஏற்பட்ட நிலையில்,

கடந்த வியாழக்கிழமை தனது தொலைபேசிக்கு ஒரு 21 வயது இளைஞனினால் அனுப்பப்பட்ட புகைப்படங்களால் தனது கோபம் உச்சம் அடைந்த நிலையில் தான் கொழும்பிலிருந்து நொச்சிக்குளம் கிராமத்திற்கு வருகை தந்து என் மனைவியுடன் பல்வேறு விடயங்களில் கருத்து முரண்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனினும் இதில் தீர்வு கிடைக்காத நிலையில் தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது சொந்த ஊரான யாழ்ப்பாணம், மானிப்பாய் சென்று பின்னர் திங்கட்கிழமை மீண்டும் வருகை தந்து மனைவியை தாய் சேய் பராமரிப்பு நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக தெரிவித்த அவர்,

இந்த குழந்தைக்கு காரணம் யார் என்பது தொடர்பில் தனக்கு நீண்ட கால சந்தேகம் ஏற்பட்டு இருந்ததாகவும் இது தொடர்பாக தன் மனைவியிடம் கேட்டதன் பிரகாரம் எவ்விதமான பதிலும் கூறவில்லை.

நேற்று (03.06) காலை அவர் அதை ஒத்துக் கொண்டதையடுத்து தனது மனைவியை புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறியே அவர் சின்ன பூவரசங்குளம் காட்டுப்பாதையினால் அழைத்து வந்திருக்கின்றார் என்றும் தெரிவித்திருந்தார்.

அந்த காட்டுப் பாதையின் வழியே 200 மீட்டர் அளவில் சென்றதன் பின்னர் மனைவி ஏன் இந்த வீதியால் செல்கிறீர்கள் என கேட்டபோது, தான் அந்த குறித்த 21 வயது இளைஞன் இந்த பகுதிக்கு வருவதாகவும் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு காண்பதற்காக தன்னை அழைத்து வந்திருக்கிறதாகவும் கூறியதாகவும் பொலிசாரிடம் கூறி இருக்கின்றார்.

இதன் பின்னர் தான் அவரை கொலை செய்ததாகவும் வந்ததாகவும் புளியங்குளம் பொலிசாரிடம் தெரிவித்திருந்தார். இதனை அடுத்து பொலிசார் குறித்த மோட்டார் சைக்கிளையும், தலையையும் கைப்பற்றியதோடு அவரையும் கைது செய்திருந்தனர்.

இதனை அடுத்து உயிரிழந்து இறந்த பெண்ணின் கணவன் சுகிர்தரன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சின்ன பூவரசங்குளம் காட்டுப் பகுதிக்கு சென்ற பொலிசார் சடலத்தை கைப்பற்றி இருந்தனர்.

குறித்த பகுதிக்கு தடயவியல் பொலிசாரும் வருகை தந்து அங்கிருந்த சான்று பொருட்களை சேகரித்ததோடு, குறித்த விடயம் தொடர்பாக புளியங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் இரத்தக்கறைகளுடன் இளைஞனின் சடலம் மீட்பு!!

வவுனியா காத்தார்சின்னக்குளத்தில் இரத்தக்கறைகளுடன் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலத்தினை பொலிசார் இன்று (04.06.2025) மீட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள தற்காலிக வீடொன்றில் இளைஞர் ஒருவரின் சடலம் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது. பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேபகுதியை சேர்ந்த செல்லத்துரை கபிநாத் என்ற 24 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த சடலத்தில் இரத்தக்கறை படிந்துள்ள நிலையில் குறித்த மரணம் கொலையா? என்ற கோணத்தில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை உயிரிழந்த இளைஞர் நேற்று (03.06) மாலை இளைஞர் குழுவொன்றுடன் மோதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் இன்று காலை அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகளை முன்னெடுத்துவரும் வவுனியா குற்றப்பிரிவு பொலிசார், சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு இளைஞர்களிடம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்!!

இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் வவுனியாவில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு வவுனியாவில் இன்று (03.06.2025) இடம்பெற்றது.

வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகமான தாயகத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது. இதன்போது வவுனியாவில் உள்ள நான்கு உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள் மற்றும் விகிதாசார உறுப்பினர்கள் கலந்துகொண்டு தமது சத்தியப்பிரமாணத்தை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த நிகழ்வு தமிழரசுக்கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், செயலாளர் எம்.எ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் ஆகியவர்களின் முன்னிலையில் இடம்பெற்றது.

நிகழ்வில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள்,கட்சியின் ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருத்தனர்.

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தினை முற்றுகையிட்ட விற்பனை முகவர்களால் பரபரப்பு!!

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் அமைந்துள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலயத்தினை இன்று (03.06.2025) காலை 10.30 மணியளவில் விற்பனை முகவர்கள் முற்றுகையிட்டமையினால் அங்கு சற்று பதற்ற நிலமை காணப்பட்டதுடன் பிரதி அமைச்சரின் தலையீட்டினால் முடிவிற்கு கொண்டு வரப்பட்டது.

பேரூந்து நிலையத்தில் இரு வர்த்தக நிலையங்கள் காணப்படுவதுடன் அவற்றில் நெடுந்தூர சேவை தரிப்பிட கட்டிடத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்திற்கு கடன் அடிப்படையில் 18 வர்த்தக முகவர்கள் 15 லட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை வழங்கியுள்ளனர்.

ஒப்பந்தகாலம் நிறைவடைந்துள்ளமையினால் வர்த்தக நிலைய உரிமையாளர் வர்த்தக நிலையத்தினை கடந்த ஓர் வாரமாக முடியுள்ளார். இதனால் வர்த்தகருக்கு வழங்கிய கடனை மீட்க முடியாத நிலைக்கு விற்பனை முகவர்கள் தள்ளப்பட்டனர்.

இதனையடுத்து இவ்விடயம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொள்வதற்காக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலயத்திற்கு சென்ற விற்பனை முகவர்கள் குறித்த வர்த்தக நிலைய ஒப்பந்தகாரரின் அடையாள அட்டை இலக்கம் மற்றும் விலாசம் என்பவற்றினை கோரியுள்ளனர்.

எனினும் அதற்கு பதிலளித்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலயத்தினர் தம்மிடம் ஆவணங்கள் இல்லை என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றையதினம் இரவு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலயத்திற்கு சென்ற குறித்த வர்த்தக நிலையத்தின் ஒப்பந்ததாரர் ஆணைக்குழு ஊழியர்களுடன் கலந்துரையாடியமையுடன் வர்த்தக நிலைய பொருட்களையும் எடுத்துச்செல்ல முயற்சித்துள்ளார்.

இதனால் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கீழ் ஒப்பந்தம் மேற்கொண்டவரின் ஆவணம் எவ்வாறு இல்லாமல் செல்லும் மற்றும் இரவில் எவ்வாறு ஆணைக்குழு இயங்கும் என ஆத்திரமடைந்த விற்பனை முகவர்கள் வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் அமைந்துள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலயத்தினை முற்றுகையிட்டு தமக்குரிய நீதியினையினை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க உட்பட தேசிய மக்கள் சக்தியின் பிராந்திய இணைப்பாளர் லெனின், மாநகரசபை உறுப்பினர் லக்சனா ஆகியோர் குறித்த விற்பனை முகவர்களுடன் கலந்துரையாடியமையுடன் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய அதிகாரிகளையும் அழைத்து பிரச்சனைகளை கேட்டறிந்தனர்.

ஒரு வாரத்தில் இதற்குரிய தீர்வினை பெற்றுத்தருவதாக தெரிவித்தமையுடன் ஆணைக்குழு அதிகாரிகளிடமிருந்து ஒப்பந்ததாரரின் தொலைபேசி இலக்கம், விலாசம், அடையாள அட்டை இலக்கம் என்பவற்றினையும் பெற்று விற்பனை முகவர்களிடம் வழங்கியிருந்தார். பிரதி அமைச்சரின் வாக்குறிதியினையடுத்து விற்பனை முகவர்கள் புதிய பேரூந்து நிலையத்திலிருந்து கலைந்து சென்றனர்.

பலரின் கண்ணீருக்கு மத்தியில் முல்லைத்தீவு மாணவியின் இறுதி ஊர்வலம்!!

முல்லைத்தீவு மக்களின் கண்ணீருக்கு மத்தியில் ஆலய கேணியில் உயிரிழந்த மாணவியின் இறுதி ஊர்வலம் இன்றையதினம் (03.06.2025) இடம்பெற்றது. குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணிக்கு நேற்றுமுன்தினம் மூன்று மாணவிகள் சென்றுள்ளனர்.

அதில் இருவர் கேணிக்குள் புகைப்படம் எடுப்பதற்காக இறங்கிய வேளை இருவரும் கேணிக்குள் தவறி விழ்ந்த நிலையில் மற்றைய மாணவியின் கதறல் சத்தம் கேட்டு,

குமுழமுனை இளைஞர்களால் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில சிகிச்சை பலனின்றி இரு மாணவிகளும் உயிரிழந்திருந்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்த சற்சொரூபநாதன் றஸ்மிளா எனும் மாணவியின் இறுதி ஊர்வலம் இன்றையதினம் பெரும்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்றது.

மாணவியின் இறுதி ஊர்வலத்தில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டு இறுதி அஞ்சலியினை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

கிளிநொச்சி இளைஞனின் மரணத்திற்கு நீதி வேண்டும்: இறுதி ஊர்வலத்தில் சலசலப்பு!!

கிளிநொச்சி பூநகரி இளைஞனின் மரணத்திற்கு நீதி வேண்டி, அவரின் இறுதி ஊர்வலத்தின் போது பிரதேச மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தம்பிராய் பகுதியில் கடந்த 31 ஆம் திகதி நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் இளைஞன் உயிரிழந்துள்ளார்.

இனந்தெரியாத நபர்களின் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்த பூநகரி செம்மன் குன்று பகுதியைச்சேர்ந்த கந்தசாமி பிரணவனின் இறுதிக்கிரியை இன்று நடைபெற்றது.

இந் நிலையில் இளைஞனின் கொலைக்கு நீதி வேண்டி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வாள் வெட்டுக் குழுக்களை சட்டத்தின் முன் நிறுத்துங்கள், உயிரை பறித்தவரை ஒரு போதும் மன்னிக்காதே, போதையை கூண்டோடு ஒழிப்போம் போன்ற பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதோடு குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வலியுறுத்தி, பூநகரி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களிடம், பொது மக்களின் கையொப்பம் அடங்கிய மகஜரும் கையளிக்கப்பட்டது.

அதேவேளை இளைஞன் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நான்கு பேர் பூநகரி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.