மாத்தளை, பிடகந்த தோட்டத்தில் உள்ள பழைய தேயிலைத் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள வடிகாணில், பிறந்த சிசு ஒன்று வீசப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கந்தேனுவர பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிசு மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட சிசு, மாத்தளை பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிசுவின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. சம்பவம் கந்தேனுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை கடந்த 2 ஆம் திகதி இப்லோகம, கொன்வேவா பகுதியில் தனது தாயாரால் கைவிடப்பட்ட ஒரு மாத பெண் குழந்தை ஒரு பையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
ஓய்வுபெற்ற குடும்ப சுகாதார அதிகாரி வீட்டின் முன் ஒரு நாற்காலியில் குழந்தை விடப்பட்டிருந்தது. மேலும் அம்ப்பாறை மாவட்டத்திலும் பதின்மவயது பெற்றோர் பெற்ற குழந்தையும் அநாதர்வான நிலையில் கண்டு பிடிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
ஹிங்குரக்கொடை வராஹேன பகுதியில் உள்ள விவசாயி ஒருவர், நேற்று (03) மதியம் தனது நெல் வயலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தார். உயிரிழந்த நபர், ஹிங்குரக்கொடை போகஸ் சந்தி பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
வரும் போகத்திற்காக நெல் விதைக்க வயலைத் தயார் செய்யும் நோக்கில், அறுவடை செய்த பின்னர் மீதமுள்ள வைக்கோலுக்கு தீ வைத்தார். இந்நிலையில், வெப்பமான வானிலை மற்றும் காற்று வீச்சால் தீ பரவி, அவர் அதில் சிக்கியுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம், பிரேதப் பரிசோதனைக்காக பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பாக ஹிங்குரக்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
மலேசிய கடவுச்சீட்டை பெற இலங்கை சேர்ந்த ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட தந்திரமான முயற்சியை, கோலாலம்பூர் குடிவரவு துறை முறியடித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று முன்தினத் காலை கோலாலம்பூர் குடிவரவு அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
அன்றையதினம் காலை 10.15 மணிக்கு நடந்த இந்த சம்பவத்தில், ஒரு இலங்கையர் தனது தாய் என கூறிய ஒரு மலேசிய பெண்ணுடன், 10 வயதிற்குட்பட்ட சிறுவனுக்காக கடவுச்சீட்டிற்கு முதன்முறையாக விண்ணப்பித்துள்ளார் என கோலாலம்பூர் குடிவரவு இயக்குநர் வான் முகமது சௌபி வான் யூசோப் தெரிவித்தார்.
விண்ணப்பதாரரின் உடல் தோற்றம், அவருக்காக சமர்ப்பிக்கப்பட்ட பிறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்பட்ட வயதுடன் பொருந்தவில்லை என்பதை அதிகாரிகள் கவனித்ததையடுத்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
பயோமெட்ரிக் சரிபார்த்த போது, அடிப்படை மலாய் மொழி வழிமுறைகளையும் பின்பற்ற முடியாமல் இருந்தமையினால் மேலதிக விசாரணைக்கு வழிவகுந்ததாக கூறப்படுகிறது.
மேலும், இது ஒரு உள்ளூர் பெண் தலைமையிலான கும்பலின் அறிவுறுத்தலின் கீழ் திட்டமிட்ட முயற்சி எனவும், அந்த கும்பல் மலேசிய கடவுச்சீட்டை பெற இலங்கையர்களுக்கான குறுக்குவழி ஒன்றை வழங்கி வந்ததாகவும் வான் முகமது சௌபி தெரிவித்துள்ளார்.
குறித்த இலங்கையர், உள்ளூர் பெண்ணின் உயிரியல் குழந்தையின் பிறப்புச் சான்றிதழைப் பயன்படுத்தி, அந்தக் குழந்தையை தனது மகனாக காட்டி கடவுச்சீட்டு பெற முயன்றுள்ளார்.
கடவுச்சீட்டு சட்டம் 1966 இன் கீழ், மேலதிக விசாரணைக்காக இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல், கும்பல் பயன்படுத்தியதாக நம்பப்படும் பல ஆவணங்கள் மற்றும் கையடக்க தொலைபேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் சர்வதேச பயண ஆவணங்களை சட்டவிரோதமாகப் பெற முயற்சிக்கும் கும்பல்களின் வலையமைப்பை வெளிப்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மலேசிய குடிமகனாக தோற்றமளித்து கடவுச்சீட்டு பெற முயற்சிப்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் என குறிப்பிடப்படுகின்றது.
இலங்கையில் அண்மைய காலமாக WhatsApp ஊடாக மேற்கொள்ளப்படும் மோசடி மற்றும் ஹேக்கிங் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கணக்கு ஹேக்கிங் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக பிரிவின் பாதுகாப்பு அதிகாரி சாருகா தமுனுபொல தெரிவித்துள்ளார்.
குறைந்த விலையில் பல்வேறு தயாரிப்புகளை விற்பனை செய்யும் குழுக்கள் மூலம் பெறும் தகவல்கள் அதிகளவிலான மோசடி செய்யப்படுவதாக சாருகா தமுனுபொல குறிப்பிட்டுள்ளார்.
“உங்களுக்குத் தெரியாத குழுக்களில் சேருவதன் மூலம் இந்த நிலைமை ஏற்படலாம். மிகக் குறைந்த விலையில் ஒரு குறிப்பிட்ட தயாரிப்பை விற்பனை செய்வதாக கூறி முன்கூட்டியே பணம் வசூலிக்கப்படும் மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
WhatsApp கணக்கு ஹேக்கிங்கிலும் அதிகரிப்பு உள்ளது. ஒன்லைனில் ஒரு கூட்டத்தில் சேர Zoom இணைப்பு வழியாக குறியீட்டைப் பெறுவது என்ற போர்வையில் WhatsApp கணக்குகளுக்கு அங்கீகரிக்கப்படாத அணுகல் இடம்பெறுகின்றது.
கணக்குகள் ஹேக் செய்யப்படும்போது, பட்டியலில் உள்ள மற்றவர்களுக்கு பல்வேறு செய்திகள் அனுப்பப்பட்டு அவர்களிடமிருந்து பணம் வசூலிக்கப்படுகின்றது.
அதற்கமைய, ஒரு கணக்கு ஹேக் செய்யப்பட்டால், அவர்கள் வணிகம் செய்யும் வங்கியைத் தொடர்பு கொண்டு பொருத்தமான பாதுகாப்பு உத்திகளைச் செயல்படுத்த வேண்டும்.
மோசடி தொடர்பான தொலைபேசி எண்கள் அல்லது பரிவர்த்தனைகளின் நகல்கள் அவர்களிடம் இருந்தால், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் விரைவில் முறைப்பாடு செய்ய வேண்டும் என இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு பாதுகாப்பு அதிகாரி சாருகா தமுனுபொல மேலும் தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்வில் வீடுகளில் கொள்ளையிடும் மோசடியில் ஈடுபட்டு வந்த தாயும் மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீட்டு வேலைகளுக்கு பணியாளர்களை வழங்கும் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்ணும் அவரது மகனுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபரான பெண், தனது மகன் தலைமையிலான கும்பலுடன் நீண்ட காலமாக வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டு வந்தமை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பெம்முல்ல பகுதியிலுள்ள வீடொன்றில் சந்தேகநபரான பெண் பணியாளராக அனுப்பப்பட்டுள்ளார்.
இதனை சாதகமான கொண்டு இரவு நேரத்தில் தனது மகன் தலைமையிலான கும்பலுடன், வீட்டு உரிமையாளர்களை கட்டிவைத்து, 1.5 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள நகைகளை திருடியுள்ளனர்.
இது குறித்து பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, 24 மணி நேரத்திற்குள் பெம்முல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் ஹங்குரான்கெத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து திருடப்பட்ட நகைகள் மற்றும் 3 கிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கும்பல் நாடு முழுவதும் சுமார் 10 கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
கரூரில் தவெக பரப்புரை கூட்டத்தின் போது இடம்பெற்ற துயரசம்பவம் தொடர்பில் சிசிடிவி காட்சிகளை பொலிஸாரிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் அவற்றை கொடுக்க தவெக தலைவர் விஜய் ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கரூரில் கடந்த 27ஆம் திகதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய் தேர்தல் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.
இதற்கான வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில்,ரோடு ஷோக்களுக்கு நெறிமுறைகளை வகுக்கக் கோரி தாக்கல் செய்த மனுவானது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் முன்பு நேற்றையதினம்(3) விசாரணைக்கு வந்தது.
அப்போது விசாரணைகளை மேற்கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி, நாமக்கல், கரூர் தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெற்ற இடத்தின் அத்தனை சிசிடிவி காட்சிகளையும்,
குறிப்பாக விஜய் சென்ற பரப்புரை வாகனத்தின் உள்ளேயும் வெளியேயும் இருந்த சிசிடிவி, பதிவுகளை சேகரிக்க வேண்டும் என சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் பேருந்தின் சிசிடிவி காட்சிகளை ஒப்படைக்க விஜய் சம்மதம் தெரிவித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கரூர் சம்பவத்தில் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின்பேரில் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான குழுவில் எஸ்பிக்கள் விமலா, சியாமளா, தேவி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
கரூர் சம்பவம் தொடர்பான கோப்புகளை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கவும் பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஓய்வுபெற்ற குடும்ப சுகாதார பெண் உத்தியோகத்தரின் வீட்டு வாசலில் கிடந்த பைக்குள் இருந்து குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக மஹவ பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரம், இப்பலோகம மஹவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பிறந்து ஒரு நாளேயான குழந்தை ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணையில் தெரியவருவதாவது, இப்பலோகம மஹவ பிரதேசத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற குடும்ப சுகாதார பெண் உத்தியோகத்தரின் வீட்டு வாசலில் பை ஒன்று கிடந்துள்ளது.
இதனை அவதானித்த ஓய்வுபெற்ற குடும்ப சுகாதார பெண் உத்தியோகத்தர் அந்த பையை சோதனையிட்டு பார்த்த போது பைக்குள் குழந்தை ஒன்று உயிருடன் இருந்துள்ளது.
இதனையடுத்து ஓய்வுபெற்ற குடும்ப சுகாதார பெண் உத்தியோகத்தர் அந்த குழந்தையை நிக்கவெரெட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
பிறந்து ஒரு நாளேயான குழந்தை ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. குழந்தையை வீட்டு வாசலில் யார் விட்டுச் சென்றது என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஹபரணை – தம்புள்ளை வீதியில் ஹிரிவட்டுன்ன பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (02) மாலை 07.10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதிக வேகத்தில் பயணித்த பஸ் ஒன்று வீதியை கடக்க முயன்ற நபர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் படுகாயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 65 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சி முகமாலை வேம்படுகேணி பகுதியில் ரயில் கடவைக்கு அருகில் நேற்று இரவு (02) இரண்டு டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த டிப்பர் வாகனமும், கிளிநொச்சியில் இருந்து பயணித்த மற்றொரு டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து நேர்ந்துள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்து ஒன்று மக்களை இறக்குவதற்கு குறித்த பகுதியில் தரித்து நின்ற போது, அதனை டிப்பர் வாகனம் ஒன்று முந்தி செல்ல முற்பட்ட போதே இவ்விபத்து இடம்பெற்றது.
விபத்தில் டிப்பர் வாகன சாரதிகள் காயமடைந்த நிலையில், பளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாணந்துறையில் பிரபல தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய இரண்டு இளம் பெண்கள் மர்மான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திடீரெனவும் மர்மமான முறையில் உயிரிழந்த இரண்டு இளம் பெண்களின் இறுதிச் சடங்குகள் நேற்று நடைபெற்றுள்ளன. இவ்வாறு உயிரிழந்த 28 வயதான திலினி சொய்சாவின் இறுதிச் சடங்குகள் நேற்று பிற்பகல் அலுபோமுல்லவில் நடைபெற்றுள்ளது.
மற்றைய யுவதியான 19 வயதான மலிஷாவின் இறுதிச் சடங்குகள் வாதுவையின் வெரகாமாவில் நடைபெற்றுள்ளன.
திலினியின் மரணத்திற்குக் காரணம் அவரது உடலின் முக்கிய இரத்த நாளத்தில் உருவான இரத்த உறைவு (த்ரோம்பஸ்) எனவும் இது இரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது எனவும் தகவல்கள் பரவி வருகின்றன.
எனினும் அதிகப்படியான சோர்வு, மற்றும் மன அழுத்தம் போன்ற காரணங்களாலும் இதுபோன்ற நிலைமைகள் ஏற்படலாம் என்று மருத்துவ நிபுணர்கள் நம்புகின்றனர்.
உயிரிழப்பதற்கு முன்பு உணவை உட்கொண்ட பிறகு அவர்கள் இருவரும் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்றதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாணந்துறை பொது சுகாதார ஆய்வாளர், யுனிச்செலாவின் சமையலறையை ஆய்வு செய்து, அங்கிருந்து உணவு மாதிரிகளை எடுத்து, இரண்டு ஊழியர்களின் திடீர் மரணம் தொடர்பாக நேற்று முன்தினம் களுத்துறை தேசிய சுகாதார நிறுவனத்திற்கு அனுப்பினார்.
எனினும் நிறுவனத்தின் மூன்று ஊழியர்கள் நேற்று முன்தினம் நோய்வாய்ப்பட்டு பாணந்துறை பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா – முல்லைத்தீவு உட்பட்ட சில மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை, இன்று (03.10.2025) இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, குறித்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், மின்னல் அபாயங்களைக் குறைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலத்தின் பல பகுதிகளில் விஜயதசமியை முன்னிட்டு துர்கா சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டிருந்தன. இந்த வழிபாடுகள் அனைத்தும் முடித்து சிலைகள் ஆங்காங்கே நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கந்த்வா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த துர்கா சிலைகளை பக்தர்கள் டிராக்டர் ஒன்றில் எடுத்துக் கொண்டு அப்பகுதியில் உள்ள ஏரியில் கரைப்பதற்காகச் சென்றிருந்தனர்.
அதன் படி டிராக்டர் அந்த ஏரியை அடைந்தபோது திடீரென சிலைகள் வைக்கப்பட்டிருந்த டிராலி ஏரியில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் துர்கா சிலைகளுடன் பக்தர்களும் அந்த ஏரிக்குள் விழுந்து மூழ்கினர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். அவர்கள் 6 பக்தர்களை உயிருடன் மீட்டனர்.
ஆனால் 11 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து வேறு யாரும் நீரில் மூழ்கி உள்ளனரா? என தீவிரமாக சிகிச்சைக்காக தேடபட்டு வருகின்றனர்.
இச்சம்பவத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். துர்கா சிலை கரைப்புக்காக சென்ற பக்தர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்கள் வாங்கிய பின்னர் மீதமிருந்த பணத்தில் மது குடித்த தொழிலாளியை அவரது மனைவி குடத்தால் அடித்துக் கொன்ற சம்பவம் கடலூர் விருதாச்சலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குருவன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன்(36). மரம் வெட்டும் கூலித்தொழிலாளி. இவரது மனைவி வள்ளி. இந்த தம்பதிக்கு அய்யனார்(11),
வெற்றிவேல்(5) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். வேல்முருகனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. அவ்வாறு மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வரும்போதெல்லாம் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக வேல்முருகனிடம் ரூ.1,000யை வள்ளி கொடுத்தார்.
அதன்படி வேல்முருகனும் கடைக்கு சென்று பூஜை பொருட்களை வாங்கினார். அதில் மீதம் இருந்த பணத்துக்கு அவர், டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்தார்.
பின்னர் மதுபோதையில் வீட்டுக்கு சென்ற வேல்முருகன், தனது மனைவியிடம் பூஜை பொருட்களை கொடுத்தார். பொருட்கள் வாங்கியது போக மீதமுள்ள பணத்தை தருமாறு வள்ளி கேட்டார்.
அதற்கு அவர் செலவாகி விட்டதாக கூறினார். அந்த பணத்தில்தான், தனது கணவர் மதுகுடித்து விட்டு வந்ததை அறிந்து கொண்ட வள்ளி அவருடன் வாக்குவாதம் செய்தார்.
மேலும் வேல்முருகனுக்கு சாப்பாடு கொடுக்காமல், அவரை வீட்டுக்கு வெளியே நிற்க வைத்து உள்பக்கமாக கதவை பூட்டிக்கொண்டு வள்ளி இரவில் தூங்கி விட்டார். வேல்முருகன் வீட்டின் முன்பகுதியில் படுத்து தூங்கினார்.
நேற்று காலையில் எழுந்த வள்ளி, பால் வாங்குவதற்காக கடைக்கு சென்றார். இதை கண்ட வேல்முருகன், உடனடியாக வீட்டிற்குள் சென்று படுத்துக் கொண்டார்.
இதனிடையே பால் வாங்கிவிட்டு வந்த வள்ளி, கணவரிடம் ஏன் வீட்டுக்குள் வந்தாய் என்று கேட்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வள்ளி, அங்கிருந்த எவர்சில்வர் குடத்தை எடுத்து வேல்முருகனின் தலையில் ஓங்கி அடித்தார்.
இதில் அவர் சுருண்டு விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே வேல்முருகன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இங்கிலாந்து நாட்டின் ஹயேஸ் பகுதியில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் மன்பிரீத் ஜாதனா , ஜஸ்கிரெத் சிங் உப்பல் .
34 மற்றும் 36 வயதான இவர்கள் தங்களது 3 வயது மகளான பெனலோப் சந்திரீயுடன் வசித்து வந்தனர். இந்த குழந்தை 2023ல் டிசம்பர் 17ம் தேதி மாலையில் வீட்டிலேயே உயிரிழந்து உள்ளது.
இச்சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் பெனலோப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், ஊட்டச்சத்து குறைபாட்டால் பெனலோப் உயிரிழந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.
இது குறித்து நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், பல மாதங்களாக பெனலோப்பை அந்த தம்பதி பட்டினியாக போட்டிருந்ததாக அதிர்ச்சி தரும் தகவல்கள் தெரியவந்தன.
பல ஆண்டுகளாக நடந்து வந்த விசாரணை முடிவில், ஜாதனா மற்றும் உப்பல் தம்பதியை போலீசார் கைது செய்து குற்றச்சாட்டு அறிக்கையையும் பதிவு செய்தனர்.
3 வயது மகளை அவர்கள் பட்டினி போட்டு கொலை செய்த குற்றச்சாட்டு அவர்கள் மீது சுமத்தப்பட்டு உள்ளது. இது குறித்து அடுத்த கட்ட விசாரணை நடத்தவும் முடிவாகி உள்ளது. இதற்கான உத்தரவை நீதிபதி லின் டெய்டன் பிறப்பித்து உள்ளார்.