சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த திருகோணமலை இளம் குடும்பஸ்தர் சுகயீனமுற்று உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு வருடத்திற்கு முன் திருமணம் செய்த நிலையில் ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளதாக கூறப்படுவதுடன், குறித்த குடும்பஸ்தர் திருகோணமலையில் வீடியோ கடையை நடாத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவத்தில் திருகோணமலை அலஸ்தோட்டத்தைச் சேர்ந்த 34 வயதான செல்வநாயகம் சத்தியகுமார் குடும்பஸ்தரே உயிரிழந்தவர் ஆவார் . இந்நிலையில் இளம் குடும்பஸ்தரின் மரணம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸில் ஏற்பட்ட கோர விபத்தில் ஈழத்தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கடந்த ஏழாம் திகதி Seine-et-Marne மாவட்டத்திற்குட்பட்ட Mitry-Moryஇல் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட 21 வயதான சதீஸ்குமார் அபிசன் என்பவரே உயிரிழந்துள்ளார். காலை வேளையில் இலத்திரனியல் உந்துருளியில் பயணித்து கொண்டிருந்து போது, எதிரே வந்த கார் ஒன்று மோதித்தள்ளியுள்ளது.
விபத்தினை ஏற்படுத்திய 30 வயதான சாரதி தப்பிச் சென்றுள்ளார். எனினும் தான் பணியாற்றும் நிறுவன உரிமையாளரிடம் விபத்து தொடர்பில் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய உரிமையாளர் வழங்கிய தகவலுக்கு அமைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான சாரதிக்கு மேற்கொண்ட இரத்த பரிசோதனையில் 1.5 கிராம் மதுபானம் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய சாரதி பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
அநுராதபுரத்தில் டிசம்பர் 02ஆம் திகதி அதிகாலையில் தனது இரண்டு பிள்ளைகளையும் மல்வத்து ஓயாவில் தள்ளிவிட்டு கொலைசெய்த தாயாரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் பிரதான நீதவான் சியபத் சசிந்து விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார்.
அநுராதபுரத்தில் 40 வயதுடைய தாய் ஒருவர், தனது 04 வயதுடைய மகள் மற்றும் 08 வயதுடைய மகனை மல்வத்து ஓயாவில் தள்ளிவிட்டுள்ளார்.
மல்வத்து ஓயாவில் தள்ளிவிடப்பட்ட இரண்டு பிள்ளைகளும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சில நாட்களின் பின்னர் அவர்களின் சடலங்கள் கரை ஒதுங்கியன.
குடும்பத் தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதனையடுத்து சந்தேக நபரான தாயார் கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு நகரில் செல்லப்பிராணியை காப்பாற்ற முயன்று இளைஞர் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் ரூ.2.5 மதிப்புள்ள செல்லப்பிராணியான மக்காவ்(Macaw) வகை கிளியை காப்பாற்ற முயன்று பெங்களூருவைச் சேர்ந்த 32 வயது தொழிலதிபர் அருண் குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
செல்லப்பிராணி மக்காவ் வெள்ளிக்கிழமை குமாரின் வீட்டில் இருந்து தப்பிச் சென்று அருகில் இருந்த மின் கம்பத்தின் மீது அமர்ந்துள்ளது. உடனடியாக அதை மீட்க வேண்டும் என்று உரிமையாளர் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார்.
அப்போது எஃகு குழாய் ஒன்றை (Steel Pipe) எடுத்துக் கொண்டு மீட்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக எஃகு குழாய் ஆனது மின்னழுத்த கம்பியில் பட்டுள்ளது.
அப்போது உயர் மின்சாரம் தாக்கி 32 வயது தொழிலதிபர் அருண் குமார் உயிரிழந்தார் என மூத்த காவல்துறை அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர், பிரபல கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் ஆண்டொன்றிற்கு 30 லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலை செய்துவந்துள்ளார். ஆனால், தான் அந்த வேலையை விட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளார் அவர்.
என்ன காரணம்?
இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள இடுகை ஒன்றில், கல்வி கற்று, ஒரு நல்ல வேலை கிடைத்து, சொந்தமாக ஒரு வீடு கட்டி, திருமணமும் செய்து வாழ்ந்துவந்த நிலையிலும், ஏதோ வாழ்க்கையில் மிஸ் ஆவதை உணர்ந்ததாகத் தெரிவிக்கிறார் அந்தப் பெண்.
பயணம் செய்தல் மலையேறுதல் போன்ற விடயங்களில் ஆர்வம் கொண்ட அவர், வார இறுதிகளில் அத்தகைய விடயங்களில் ஈடுபட்டாலும், மற்ற நாட்களில் தினமும் காலை முதல் மாலை வரை ஒரே வேலையைச் செய்தாக வேண்டியுள்ளதே என்னும் ரீதியில் யோசிக்கத் துவங்கியுள்ளார்.
ஆகவே, தனக்குப் பிடித்த வாழ்க்கையைத் தொடர்வதற்காக, தனது முழு நேர வேலையை விட்டுவிட்டதாகத் தெரிவிக்கும் அவர், ஐந்து ஆண்டுகள் ஆனாலும் வேலை கிடைக்கும், ஆனால், அப்போது இதே இளமையும் சக்தியும் இருக்குமா என கேள்வி எழுப்புகிறார்.
தனக்குப் பிடித்ததைச் செய்ய, தனக்காக வாழ முடிவெடுத்த அவருக்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.
உத்தர பிரதேசத்தில் கிருஷ்ணர் மீது கொண்ட அதீத பக்தியால் உறவினர்கள் முன் அவரது சிலைக்கு மாலை அணிவித்து பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்டார்.
அண்மையில் காய்ச்சல் வந்தபோது கிருஷ்ணருக்கு பூஜை செய்ததாகவும் அதன்பின்னர் காய்ச்சல் குணமாகியதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, தனது வாழ்க்கையில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்தன எனக்கூறிய அவர், இதனால் கிருஷ்ணரையே திருமணம் செய்துகொள்ளப் போகிறேன் என பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
அவரது குடும்பத்தினர் முதலில் சம்மதம் தெரிவிக்க மறுத்து இருந்தாலும் அவர் தனது முடிவில் உறுதியாக இருந்ததால், பின்னர் அவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, பாரம்பரிய சடங்குகளுடன் கிருஷ்ணருக்கும் அவருக்கும் திருமணம் நடைபெற்றது.
வழக்கமான திருமண நிகழ்ச்சி போன்றே கிருஷ்ணர் சிலைக்கும், அந்த பெண்ணுக்கும் அவரது உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. இது தொடர்பான காணொளிகளும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.
இந்நிலையில் நவநாகரீக உலகில் இன்றும் இவ்வாறான விநோத செயற்பாடுகள் இருக்கத்தான் செய்வதாக பலரும் கூறிவருகின்றனர்.
யால எட்டுல்ல பிரதேசத்தில் கெப் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இரண்டு வெளிநாட்டு சுற்றலுாப் பயணிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (15) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு சுற்றுலாப் பயணிகளும் யால தேசிய பூங்காவுக்கு சுற்றுலா சென்று விட்டு மீண்டும் விடுதியை நோக்கி பயணித்த போதே விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த சுற்றலா பயணிகளும் கிரிந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள வீரமாநகர் பகுதியைச் சேர்ந்த 24 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் ஈச்சிலம்பற்று பொலிஸாரால் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் அனைவரும் ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளின் படி, டிக்டொக் சமூக வலைத்தளத்தின் மூலம் இளைஞர் ஒருவர் குறித்த பெண்ணுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு நேரில் சந்தித்துள்ளார்.
இதன் பின்னர், குறித்த இடத்திற்கு அவரது நண்பர்கள் வருகை தந்ததுடன், யுவதி மீது குழுவாக பாலியல் பலாத்காரம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பேரிடரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு ஐரோப்பா வாழ் இலங்கையர் ஒருவர் 4.2 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளார்.
சுவீடனில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் தனது உணவகம் மூலம் கிடைக்கும் வருமானத்தையு, சுவீடன் நாட்டு மக்களின் மூலம் கிடைத்த பணத்தையும் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக, இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக சுவீடனில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த சமையல் கலைஞரான ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் சோகமாக இருக்கும் போது, நாம் இருக்கும் இடத்திலிருந்தே உதவ வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த உன்னத முயற்சிக்கு சுவீடன் மக்களிடமிருந்தும் பெரும் ஆதரவு கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளர்.
தொலைவில் வாழ்ந்தாலும், தங்கள் தாயக மக்கள் மீதான ஆழமான அக்கறை காரணமாக இவ்வாறான செயற்பாட்டை முன்னெடுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த உதவி மனப்பான்மை புலம்பெயர் சமூகத்தின் நாட்டுப்பற்று மற்றும் மனிதநேயத்தை வெளிப்படுத்துவதாக இலங்கை மக்கள் சமூக வலைத்தளங்களில் நன்றி தெரிவித்துள்ளனர்.
தன்வத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் காணாமல் போன 7 வயது மாணவியின் சடலம் 2 வாரங்களுக்கு பின்னர் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 27ஆம் திகதி மதியம் யட்டியந்தோட்ட பிரதேச செயலகப் பிரிவின் பெரன்னாவயில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி குறித்த சிறுமி மண்ணுக்குள் புதையுண்டு இருந்துள்ளார்.
பெரன்னாவ மகா வித்தியாலயத்தில் இரண்டாம் வகுப்பில் கல்வி பயிலும், நேதுகி சஹான்யாவின் உடல் நேற்று (14.12.2025) மதியம் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் கண்டெடுக்கப்பட்டதாக யட்டியந்தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தென்னவத்தையிலிருந்து பத்தனேகல வரையிலான வீதியை சுத்தம் செய்யும் போது, அருகில் ஒரு நாய் மண்ணை தோண்டுவதை கவனித்த குழுவினர், சோதனை நடத்தியபோது, கிதுல் மரத்தின் கிளைகளுக்கு அடியில் இறந்த சிறுமியின் உடலைக் கண்டெடுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, சடலம் பிரேத பரிசோதனைக்காக கருவனெல்ல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அந்த நிலச்சரிவில் சிறுமியின் தாய், தந்தை, தம்பி மற்றும் பாட்டி ஆகியோர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இரண்டு நாட்களுக்குப் முன்னரே சிறுமியின் தாயின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குருணாகல், மஹாவ – நாகொல்லாகம பிரதேசத்தில் காட்டுப்பன்றிகளைப் பிடிக்க பொருத்தப்பட்ட மின்சார கம்பியில் சிக்கிய தனது தந்தையைக் காப்பாற்றச் சென்ற 17 வயது மகன் உயிரிழந்துள்ளார்.
க.பொ.த. உயர்தரப் படிப்பிற்கு தயாராகி கொண்டிருந்த நாகொல்லாகம பொலிஸ் பிரிவின் கரம்பே, பிடிவில்லாவைச் சேர்ந்த 17 வயதான எதிரிசிங்க ஆராச்சிலாகே கவிஷ்க எதிரிசிங்க என்ற மாணவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
அயல்வீட்டில் வசிக்கும் குடும்பம், காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக பிரதான மின் கம்பியில் இருந்து சட்டவிரோதமாக மின்சாரம் எடுத்து இழுக்கப்பட்ட மின்சார கம்பியில் தற்செயலாக மோதியதில் தந்தை மீது மின்சாரம் தாக்கியுள்ளார்.
அப்போது தனது தந்தையைக் காப்பாற்ற முயன்ற மகன் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மின்சாரம் தாக்கப்பட்டதற்கு காரணமாக இருந்த மின்சார கம்பியை பொருத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் நேற்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
பொல்பித்திகம ஆதார மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டபோது மகன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகவும், உயிரிழந்த மகனின் தந்தை சுமார் 44 வயதுடையவர் எனவும் அவர் ஆபத்தான நிலையில் இருந்ததாகவும்,
மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் மருத்துவமனை ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் இரவு 11.00 மணியளவில் தந்தை வீட்டிலிருந்து அருகிலுள்ள தோட்டத்திற்குச் சென்றிருந்தார். ஆனால் அவர் திரும்பி வராததால், அவரைப் பார்க்கச் சென்ற மகன் சம்பவத்தில் உயிரிழந்தார்.
மேலும் அவரது தந்தை இரவில் அந்த இடத்திற்கு ஏன் சென்றார் என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. சந்தேகநபர் மஹாவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். சம்பவம் குறித்து நாகொல்லாகம போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலை மாற்றம் கண்டுவருகின்றது. அதற்கமைய கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது, இன்றையதினம்(2025.12.15) தங்கத்தின் விலை சற்று உயர்வடைந்துள்ளது.
தங்க விலை நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது1,340,283 ரூபாவாக காணப்படுகின்றது. 24 கரட் தங்கம் ஒரு கிராமின்(24 karat gold 1 grams) விலை 47,280 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்று 378,250 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராமின்(22 karat gold 1 grams) விலையானது 43,340 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams) 41,370 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று(21 karat gold 8 grams) 331,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்கள் அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின் இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண்(22 karat gold 8 grams) ஒன்றின் விலையானது 314,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.
எனினும் தங்க ஆபரணங்களின் விலை மேற்குறிப்பிட்ட விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மண்சரிவு என்பது ஒரு இயற்கையான நிகழ்வு என்றும், உலகம் முழுவதும் மழைவீழ்ச்சி, நிலநடுக்கம், பனிப்பாறைகளின் செயற்பாடுகள் காரணமாக மண்சரிவுகள் ஏற்படுவதாகவும்,
இலங்கையில் மழைவீழ்ச்சி காரணமாகவே மண்சரிவுகள் ஏற்படுவதாகவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவிச்சரிதவியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.
மண்சரிவு முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் மூன்று விதமாக விடுக்கப்படுகின்றன.
அவை முதலாம் கட்டம், இரண்டாம் கட்டம் மற்றும் வெளியேறுவதற்கான சிவப்பு அறிவிப்பு என மூன்று பிரிவுகளாக வழங்கப்படுவதாக வசந்த சேனாதீர குறிப்பிட்டுள்ளார்.
முன்னெச்சரிக்கை அறிவிப்பு
அந்தப் பிரதேசத்தில் கிடைக்கும் மழைவீழ்ச்சியைக் கணக்கிடுவதன் மூலம் கிடைக்கும் எண்ணிக்கைப் பெறுமானத்துடன், உரிய அறிவிப்புகள் அந்தந்த கட்டங்களின் கீழ் வகைப்படுத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்ட இடங்கள் மாத்திரமே மண்சரிவுக்கு உள்ளாகும் என இதன் மூலம் அர்த்தப்படாது என்றும், முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் உள்ள பிரதேசங்களும் மண்சரிவுக்கு உள்ளாகக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னெச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்ட பின்னர் எந்தவொரு கட்டத்தின் கீழும் மண்சரிவுச் சம்பவம் ஏற்படக்கூடும் என்றும், சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் பாரிய அளவில் மண்சரிவுகள் ஏற்படக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உருவாக்கப்பட்ட மண் மேடுகள்
பாரிய மண்சரிவுக்கு மழைவீழ்ச்சி காரணமாக அமையலாம் என்றாலும், ஒன்று மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் உள்ள பிரதேசங்களில், மனிதனால் உருவாக்கப்பட்ட மண் மேடுகள் சரிந்து விழுதல் போன்றன ஏற்படக்கூடும் என வசந்த சேனாதீர தெரிவித்தார்.
அத்துடன், விடுக்கப்படும் அறிவிப்பில் மண் மேடுகள் சரிந்து விழுதல், கற்பாறைகள் புரளுதல் மற்றும் மண்சரிவு அபாயம் உள்ள இடங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் அங்கு கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவிச்சரிதவியலாளர் வசந்த சேனாதீர, “இதற்கு மேலதிகமாக அடையாளம் காணப்பட்ட சில மண்சரிவுப் பிரதேசங்கள் உள்ளன.
உதாரணமாக கலபட, அத்துடன் பியனில்ல, வீரியபுர, உடபத அதாவது புளத்கொஹுபிட்டிய பகுதியில். இவற்றுக்கு மேலதிகமாக இன்னும் உள்ளன.
அங்கும் மண்சரிவுகள் ஏற்படுகின்றன. அதாவது வருடத்திற்கு ஒரு குறிப்பிட்ட அளவு சரிகின்றது. அதனால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் சிட்னி, பொண்டி கடற்கரையில் நேற்று (14) இடம்பெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து, நாட்டில் துப்பாக்கி தொடர்பான சட்டங்களை கடுமையாக்குவது குறித்து அந்நாட்டு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் ஏற்படுவதைத் தடுப்பதற்கு பொருத்தமான எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதற்கு அரசாங்கம் தயங்காது என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, ஒருவருக்கு வழங்கக்கூடிய துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தல், அனுமதிப்பத்திர மீளாய்வு காலப்பகுதியொன்றை அறிமுகப்படுத்தல் போன்றவை தொடர்பில் இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாட எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
சிட்னி பொண்டி கடற்கரையில் நேற்று (14) இரண்டு துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுத் தொடரில் 10 வயதுச் சிறுமி உட்பட 15 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதுடன், மேலும் 40 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிதாரிகள் இருவரும் 50 வயதுடைய சஜிட் அக்ரம் மற்றும் அவரது 24 வயது மகனான நவீட் அக்ரம் என தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.
பொலிஸ் நடவடிக்கையின் போது சஜிட் அக்ரம் என்பவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சஜிட் அக்ரம் என்பவர் 1998 ஆம் ஆண்டு மாணவர் வீசாவில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளதுடன், அவரது மகனான நவீட் அக்ரம் அவுஸ்திரேலியாவில் பிறந்தவர் எனவும்,
அவர் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பொன்றுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் 2019 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலிய பாதுகாப்புத் தரப்பினரின் கண்காணிப்புக்கு உள்ளாகியிருந்தவர் விசாரணையி6ல் தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் சஜிட் அக்ரம் என்பவர் விலங்குகளை வேட்டையாடுவதற்காக 2015 ஆம் ஆண்டிலிருந்து துப்பாக்கி அனுமதிப்பத்திரத்தை வைத்திருந்தவர் என்பதும் தற்போது தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக 7739.5 ஏக்கர் நெற்செய்கையானது அழிவடைந்துள்ளதாக மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வவுனியா மாவட்டத்தில் இம்முறை பெரும்போக நெற்செய்கையானது 62846.41 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்தது.
இதேவேளை மாவட்டத்தின் வருட மழைவீழ்ச்சியில் 68 வீதமான மழை வீழ்ச்சியானது குறித்த நான்கு நாட்களில் பெறப்பட்டமையால் ஏற்பட்ட வரலாறு கானாத வெள்ளம் காரணமாக அனைத்து குளங்களும் வான் பாய்ந்திருந்தமையாலும் 124 குளங்கள் உடைப்பெடுத்திருந்தமையாலும் வயல் நிலங்கள் நீரில் மூழ்கின என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இந்நிலையில், வெள்ள அனர்த்தம் காரணமாக வவுனியா மாவட்டத்தில் நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளமையால் தங்களது வாழ்வாதாரம் கேள்விக் குறியாகியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக ஒரு ஏக்கரில் நெற்செய்கையினை மேற்கொள்வதற்கு நிலத்தினை பன்படுத்ததுவதற்கு, விதைநெல் மற்றும் பசளை, கிருமிநாசிகள் உட்பட ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா வரை செலவாகும் நிலையிலே வங்கிக் கடனை பெற்றும் தங்களது நகைகளை அடகு வைத்தும் நெற்செய்கையினை மேற்கொண்ட விவசாயிகளின் நிலை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
இதேவேளை அரசினால் வயல் அழிவிற்காக ஒரு ஹெக்டயருக்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இப்பணத்தினை விரைந்து வழங்கப்பட வேண்டும் எனவும் விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு அரசாங்கம் 25000 ரூபா நிவாரணத்தை அரசாங்கம் வழங்கி வருகின்றது. குறிப்பாக முற்றாக அழிவடைந்த வீடுகள், பகுதியளவில் அழிவடைந்த வீடுகள் , வெள்ளத்தினால் சிறியளவில் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் 25,000 நிவாரணம் வழங்கின்றது.
அந்த வகையில் வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவையாளர்கள் பிரிவிலுள்ள பாதிக்கப்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 1550 க்கு மேற்பட்ட குடும்பத்தினர் 25,000 ரூபாவினை பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளமையுடன் அவற்றில் தற்போது 850குடும்பங்களுக்கு 25,000 ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது.
இவற்றினுள் தாண்டிக்குளம் பகுதியினை சேர்ந்த 381 குடும்பங்களுக்கு மேற்பட்டவர்களுக்கே அதிகளவில் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளமையுடன் பண்டாரிக்குளம் கிராமத்தினை சேர்ந்த 85 குடும்பத்தினரும், வவுனியா நகரம் வடக்கு பகுதியினை சேர்ந்த 77க்கு மேற்பட்டவர்களுக்கும் என வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 42 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 1550 குடும்பத்தினர் இந்த நிதியினை பெற தகுதி பெற்றுள்ளனர்.
இது வரை 850 குடும்பங்களுக்கு 2கோடியே 12லட்சத்தி 50000 ரூபாய் நிதி தற்போது வழங்கப்பட்டுள்ளமையுடன் மிகுதி குடும்பத்தினர்களுக்கான நிதி கட்டம் கட்டமாக வழங்கப்படவுள்ளது.