ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானப்படை அதிகாரிக்கு கிடைத்த அங்கீகாரம்!!

இலங்கை விமானப்படையின் பெல் 212 ஹெலிகொப்டரின் தலைமை விமானியான விங் கொமாண்டர் நிர்மல சியம்பலாபிட்டிய லுனுவில பகுதியில் விமானத்தை அவசரமாக தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளார்.

அவரது சிறப்பான சேவையை அங்கீகரிக்கும் விதமாக, 2025 நவம்பர் 30 முதல் விங் கொமாண்டர் பதவிநிலையிலிருந்து குரூப் கேப்டன் பதவி நிலைக்கு பதவி உயர்த்தப்பட்டார்.

அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 2025 டிசம்பர் 02, மாலையில் இரத்மலானை இல்லத்திற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அவரது இறுதிச் சடங்குகள் விமானப்படையின் முழு மரியாதையுடன் எதிர்வரும் 2025 டிசம்பர் 04ஆம் திகதி நடைபெறும்.

மூன்று வாகனங்கள் மோதி விபத்து : ஒருவர் பலி, மூவர் காயம்!!

மஹவ – நாகொல்லாகம வீதியில் விஹேனேகம சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (02.12.2025) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதிக வேகத்தில் பயணித்த வேன் ஒன்று, சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் வேனின் சாரதியும், சைக்கிளில் பயணித்த இருவரும் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சைக்கிளில் பயணித்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாய், இரு குழந்தைகளுடன் மண்ணில் புதைந்த வீடு : இன்று வரை மீட்க முடியாத அவலம்!!

நாட்டில் ஏற்பட்ட கடும் மழை காரணமான கந்தப்பளை – சந்திரிகாமம் பகுதியில் காணாமல் போன குடும்பங்களைத் தேடி தற்போது இராணுவம் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

தாய், இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு குழந்தைகளின் பாட்டி ஆகியோரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

மண்ணுக்குள் வீடு

நுவரெலியா சிங்கப் படையணியைச் சேர்ந்த படையினர் நேற்று (01) முதல் தேடுதல் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த 27ஆம் திகதி மதியம் குறித்த பகுதியில் பெய்த பலத்த மழையினால் இந்த வீடு மண்ணுக்குள் புதையுண்டதாகவும், அந்த நேரத்தில் அவர்கள் அனைவரும் வீட்டினுள் இருந்ததாகவும் பிரதேசமக்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை தீவில் பேரிடர் : உயிர் மற்றும் சொத்துக்களை இழந்த அப்பாவி பொதுமக்கள்!!

இலங்கையில் ஏற்பட்ட கடும் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் அப்பாவி பொதுமக்கள் பெரும் உயிர் மற்றும் சொத்து இழப்பை சந்தித்துள்ளனர் என சமூக ஊடகவலைத்தள பதிவொன்றில் தகவல் வெளியாகியுள்ளது.

உலக புகழ்பெற்ற வானிலை நிறுவங்கள், அதாவது AccuWeather, BBC Weather மற்றும் Al Jazeera, முறையான முன்கூட்டிய எச்சரிக்கைகளை 10, 12 மற்றும் 14 நவம்பர் ஆகிய நாட்களில் வெளியிட்டன.

இதற்கு இணையாக, இலங்கை வானிலை அவதானிப்பு மைய பணிப்பாளர் மற்றும் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா உட்பட பல துறை சார்ந்த நிபுணர்கள் தொடர்ச்சியான எச்சரிக்கைகளை வழங்கி, அவசரகால தயார்நிலை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவையை வலியுறுத்தினர்.

ஆனாலும், நாட்டின் நிர்வாகம் முறையான முன்னேற்பாடுகளை எடுக்கவில்லை. 26 நவம்பருக்குள் மழை உக்கிரமடைந்த போதும், ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்க நேரலைக்கு தலைமை தாங்க தயாராக இல்லாமல், திரைப்பட துறை சார்ந்த செயற்பாடுகளில் நேரத்தை செலவழித்தார்.

தேசிய பேரிடர் முகாமைத்துவ சபை (NCDM) செயலாற்றாமையால், பேரிடர் சம்பவத்திற்கு பிறகு மூன்று நாட்கள் வரை மாவட்ட அரசும், அங்கு சார்ந்த நிறுவனங்களும் உடனடி நிதி உதவிகளை விடுவிக்க முடியாமல் தடுமாறினர்.

இதனால் பாதிக்கப்பட்டோர் 48 மணி நேரத்திற்கு மேல் உணவுத் தங்குமிடம், மருத்துவ உதவி போன்ற அடிப்படை தேவைகள் கூட பெற முடியாமல் தடுமாறினர்.

நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் வெளியேற்ற நடவடிக்கைகள் திட்டமிடப்படாததால், மழை பெருக்கம் பல இடங்களில் உயிர் மற்றும் சொத்து இழப்புகளை அதிகரித்தது.

இதுபோன்ற நிர்வாக மந்தத்திற்கும், அதனால் ஏற்படும் பேரழிவிற்கும் காரணமாக, சமூக வலைத்தளங்களில் மற்றும் நாடாளுமன்ற விவாதங்களில் அரசின் செயல்திறன் குறித்து கேள்விகள் எழுகின்றன.

Disaster Management Centre (DMC) கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தாலும், ஆண்டுதோறும் நிகழும் இயற்கை பேரிடர்களில் மாற்றம் ஏற்படவில்லை என சமூக வலைத்தளங்கள் குறிப்பிட்டுள்ளன.

மலையக மக்களுக்கு மிகப்பெரும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த இயற்கை பேரிடர்களில், நிர்வாக மந்தத்தால் ஏற்படும் பேரழிவுகள் தொடர்ச்சியாக நிகழ்வதால் நாட்டின் இயற்கை மற்றும் சமூக பாதுகாப்பு குறித்து முக்கிய அச்சங்கள் எழுந்துள்ளன என இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் நிழவும் சீரற்ற காலநிலை : சுகாதாரப் பணியாளர்களின் வீர செயல்!!

நாட்டில் நிழவும் சீரற்ற காலநிலையையும் பொருட்படுத்தாமல் சுகாதார துறை சார்ந்தவர்கள் செய்யும் செய்யும் அர்பணிப்புகள் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.

தன் உயிரையும் பொருட்படுத்தாது கடும் வெள்ள பெருக்கிற்கு நடுவில் நடந்து சென்று சேவை செய்யும் இவ்வாறான பணியாளர்களை போற்ற வேண்டும்.

இலங்கையில் தாய்–சிசு மரண வீதம் உலகின் பெருவளர்ச்சியடைந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அளவில் குறைவாக இருப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று இவர்களின் அர்ப்பணிப்பு,

நெகிழ்வான சேவை மற்றும் தொடர்ச்சியான தாய்க் கவனிப்பே என சுகாதார துறை வலியுறுத்துகிறது.

மேலும், பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கைக் குழந்தைகள் ஆரோக்கியத்திலும், போசாக்குத்தன்மையிலும் முன்னிலை வகிப்பதற்கும் நடுவிளைப்பெண்கள் வழங்கும் மடிமுதல் பராமரிப்பு, வீட்டுக்குச் செல்லும் சுகாதார கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு செயல்பாடுகள் பெரும் பங்காற்றுகின்றன.

ஒரு தாய் கர்ப்பம் முதல் பிரசவம் வரை அனுபவிக்கும் சவாலான பயணத்தில், அவர்களின் பாதுகாப்பையும், குழந்தையின் நலத்தையும் உறுதி செய்யும் இவர்கள் சுகாதார அமைப்பின் அடித்தள வீராங்கனைகள் என்பதில் ஐயம் இல்லை.

குடிநீா் போத்தல்களுக்கு தட்டுப்பாடு!!

நாடு முழுவதும் குடிநீா் போத்தல்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிகரித்துள்ள தேவை அளவிற்கு நீர் போத்தல்களை வழங்க முடியாததற்கான முக்கியக் காரணம் வெற்று பிளாஸ்டிக் போத்தல்களின் தட்டுப்பாடு என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சீரற்ற காலநிலை பாதிப்புகள் காரணமாக நாட்டில் குடிநீர் போத்தல்களை நிரப்பும் பெரும்பாலான தொழிற்சாலைகளின் செயற்பாடுகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும் வெற்று போத்தல்களை களஞ்சியப்படுத்துவதற்கு அதிக இடவசதி தேவைப்படுவதால், ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களுக்கு தேவையான போத்தல்கள் மட்டுமே கையிருப்பில் வைக்கப்படுகின்றன.

இலங்கையில் மல்வான,பியகம, யக்கல மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் உள்ள முக்கிய உற்பத்தி மையங்கள் அனைத்தும் செயலிழந்துள்ளன.

இவை மீண்டும் இயக்கப்படும்வரை, சிறிய அளவிலான உற்பத்தியாளர்களினால் சந்தை தேவையை பூர்த்தி செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுற்றுலா ஹோட்டல்கள் உள்ளிட்ட எப்போதும் நீர் பாட்டில் விநியோகம் பெறும் நிறுவனங்களுக்கு கூட இப்போதெல்லாம் விநியோகத்தில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீரை வழங்கும் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் சில மீட்பு மையங்களுக்கு அணுகுதல் எளிதாக இருப்பதால் அந்த இடங்களுக்கு அதிக அளவில் போத்தல்கள் கிடைக்கின்றன என்றும்,

அணுகல் கடினமான பகுதிகளுக்கு நீர் விநியோகத்தை ஏற்பாடு செய்ய சிறப்பு முறைகள் தேவைப்படுகின்றன என்றும் உற்பத்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

அவர்கள் மேலும் கூறியதாவது, வெள்ள நிலைமை சீராகும் வரை இந்த தட்டுப்பாட்டை சமாளிக்க வேண்டியிருக்கும் எனவும், நிலைமைக்கு ஏற்ப நடவடிக்கைகள் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியாவில் 77 பேர் பலி – 73 பேர் மாயம்.!!

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ளதுடன், 73 பேர் காணாமல் போயுள்ளனர் என மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

மொத்தம் 5,729 குடும்பங்களைச் சேர்ந்த 20,649 பேர் இந்த பேரிடரில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2,124 குடும்பங்களைச் சேர்ந்த 8,718 பேர் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 79 தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர் மழை, மண்சரிவு, காற்றழுத்தம் காரணமாக நுவரெலியாவுக்கு செல்லும் அனைத்து முக்கிய வீதிகளும் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன.

மேலும் தகவல் தொடர்பு சேவைகள் பெரும்பாலும் செயலிழந்துள்ளதால் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மிகுந்த சிரமத்துடன் நடைபெற்று வருவதாக மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

கொத்மலை மற்றும் வலப்பனை பகுதிகளில் இராணுவத்தினரும், ஏனைய மீட்புப் படையினரும் தீவிரமாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் மற்றும் பிற அடிப்படை நிவாரணப் பொருட்கள் வழங்கும் நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், நுவரெலியாவிலிருந்து ஹட்டன் வழியாக கொழும்பு செல்லும் பிரதான வீதிகள் நேற்று (01) மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது எனவும் மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையை உலுக்கிய டிட்வா புயல் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை – மண்ணில் புதையுண்ட பலர்!!

சீரற்ற காலநிலையால் 25 மாவட்டங்களையும் பாதித்த பேரிடர் நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 410 ஆக அதிகரித்துள்ளது. மேலும், அனர்த்த நிலை காரணமாக, 336 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்து மத்திய நிலையத்தில் அறிக்கை தெரிவிக்கின்றது.

இன்று (02) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையில் இந்த விபரம் வெளியாகியுள்ளது. மேலும், மோசமான வானிலையால் 407,594 குடும்பங்களைச் சேர்ந்த 1,466,615 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அறிக்கையின்படி, அதிகபட்சமாக கண்டி மாவட்டத்தில் 88 பேர் உயிரிழந்துள்ளனர். இதே நேரத்தில், பதுளை மாவட்டத்தில் 83 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 75 பேரும், குருநாகலாவில் 52 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 27 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 150 பேரும், நுவரெலியாவைச் சேர்ந்த 62 பேரும், கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த 48 பேரும், பதுளையைச் சேர்ந்த 28 பேரும், குருநாகலைச் சேர்ந்த 27 பேரும் தற்போது பேரிடர் காரணமாக காணாமல்போயுள்ளனர்.

பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் திகதி தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான திகதியை திருத்துவது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.

அதன்படி, முன்னர் அறிவிக்கப்பட்ட படி டிசம்பர் 16ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், திகதியில் ஏதேனும் மாற்றம் இருந்தால், அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து இன்றும் (02) ஒரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. மேலும், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாகாண மட்டத்திலான பாடசாலைகளை முதலில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, க.பொ.த. உயர்தர பரீட்சை மற்றும் நடைபெறவிருந்த அனைத்துப் பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக அனைத்து பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வங்காள விரிகுடாவில் ஒரே நேரத்தில் உருவான இரண்டு புயல்கள் : வெளியான காரணம்!!

வங்காள விரிகுடாவில் ஒரே நேரத்தில் இரண்டு சூறாவளிகள் உருவாகுவது புவி வெப்பமடைதலின் விளைவாகும் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். உலகிலேயே வேகமாக வெப்பமடையும் வெப்பமண்டல கடலாக இந்தியப் பெருங்கடல் கருதப்படுகின்றது.

டிட்வா சூறாவளி இலங்கையை தாக்கிய அதே நேரத்தில் சென்யார் சூறாவளி இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் மலேசியாவில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது.

கடல் நீர் வெப்பமடைவதால் இவ்வாறு புயல்கள் ஏற்படுவதாக இந்தியப் பேராசிரியர் பஞ்ச பிரகாஷ் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, புயலின் தாக்கத்தினால் மொனராகலை மாவட்டம் அதிக பாதிப்புக்குள்ளாகியிருந்த நிலையில்,நேற்று மொனராகலை மாவட்டத்தில் 32.6 பாகை செல்சியஸ் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒரே நேரத்தில் மீட்கப்பட்டுள்ள 22 பேரின் சடலங்கள் : பதைபதைக்க வைக்கும் நிலவரம்!!

மினிப்பே – நெலும்கம பகுதியில் இருந்து 22 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டவர்களின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

மினிப்பே – நெலுங்கம பகுதியில் மொத்தம் 16 வீடுகள் காணப்பட்டுள்ள நிலையில் மொத்தம் 12 வீடுகள் மண்சரிவில் சிக்குண்டுள்ளன. இதன்படி, குறித்த 12 வீடுகளில் இருந்தும் 30 பேர் காணாமல் போயிருந்த நிலையில் தற்போது 22 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த 27ஆம் திகதி குறித்த பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. எனினும், பல இடங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியாத அளவுக்கு அனர்த்தங்கள் ஏற்பட்டிருந்தன.

குறித்த மண்சரிவில் சிக்கி காணாமல் போயிருந்தவர்களில் 22 பேரின் சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன.

வவுனியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் விநியோகம்!!

வவுனியா மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் விநியோகம் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க மற்றும் மாவட்ட செயலாளர் திரு.பி.ஏ.சரத்சந்ர ஆகியோரின் தலைமையில் இன்று (02.12.2025)நடைபெற்றது.

வவுனியா மாவட்டத்தில் 1874 குடும்பங்களைச் சேர்ந்த 6509 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள் 43 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்படுள்ளனர். இவர்களிற்கு ஒரு வாரத்திற்கு ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு ரூ. 2100 வீதம் தேவையான உலர் உணவுப் பொருட்கள் இவ்வாறு விநியோகிக்கப்பட்டன.

டிட்வா புயலால் 6,123 குடும்பங்களைச் சேர்ந்த 20,282 பேர் பாதிக்கப்பட்டனர். வவுனியா, வவுனியா தெற்கு, வெங்கலசெட்டிகுளம் மற்றும் நெடுங்கேணி பிரதேச செயலகப் பிரிவுகளில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் இந்த உலர் உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன.

வவுனியா வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தணிகாசலத்தின் மகன் வெள்ளத்தில் சிக்கி பலி!!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய நிலையில் பேருந்தில் இருந்த இளைஞன் காணாமல் போன நிலையில் இன்றைய தினம் (01.2025) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த இருதினங்களிற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து அநுராதபுரம் புத்தளம் வீதியில் கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியது.

அதன் போது பேருந்தினுள் சுமார் 60 பேர் வரையில் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக பேருந்தில் சிக்கியவர்களை அருகில் இருந் வீடொன்றின் கூரை மீது ஏற்றி பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு, பின்னர் கடற்படையினரின் உதவியுடன் அவர்கள் படகுகளில் ஏற்றப்பட்டு இரு நாட்கள் கடுமையான போராட்டத்தின் மத்தியில் மீட்கப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த பேருந்தில் பயணித்த இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் நொச்சியாகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

யாழ்ப்பாணத்தில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கடமையாற்றும் தணிகாசலம் பத்மநிகேதன் (வயது 36) என்ற இளைஞனே காணாமல் போயிருந்தார்.

பேருந்தின் மேற்கூரையில் அமைந்திருப்பவர்கள் தொடர்பில் வெளியான காலணாளி ஒன்றில் பத்மநிகேதன் காணப்படுகிறார்.

அதேவேளை வீட்டின் கூரையில் இருந்த வேளை கூரையின் ஒரு பகுதி உடைந்து விழுந்ததாகவும், அதன் போது சிலர் வெள்ளத்தில் விழுந்த நிலையில் அங்கிருந்தவர்களை அவர்களை மீட்டிருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் காணாமல் போன இளைஞன் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் வவுனியா வடக்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் தணிகாசலத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு : அறிகுறிகளை கண்டால் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல்!!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வீடுகளுக்குச் செல்ல முடியும் என்பதை உறுதிப்படுத்தும் வரை, மிகவும் பாதுகாப்பற்ற இடங்களில் உள்ள மக்கள் அந்த இடங்களுக்குத் திரும்ப வேண்டாம் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, பாதுகாப்பற்ற நிலையில் இருந்த மக்கள் தொடர்ந்தும் முகாம்களிலேயே தங்கியிருக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

7 மாவட்டங்களில் உள்ள 70 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல்களும் வெளியேறுவதற்கான சிவப்பு அறிவித்தல்களும் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், அதிக மழை பெய்த அனைத்துப் பகுதிகளிலும் நிலம் நீரால் நிரம்பியுள்ளதால், அடுத்த சில நாட்களிலும் கூட மண்சரிவு, பாறைகள் உருண்டு விழுதல், அல்லது மண்மேடுகள் இடிந்து விழுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிலத்திலிருந்து விநோத சத்தங்கள், அல்லது நீர் ஊற்றுகள் தோன்றுதல் மற்றும் மறைதல் போன்ற அறிகுறிகளைக் கண்டால், உடனடியாக அந்த இடங்களை விட்டு வெளியேறுமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு, பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்து நடைமுறையில் உள்ளது.

கொச்சிக்கடை வீட்டில் வெள்ளத்தில் சிக்கி ஆணும் பெண்ணும் பலி!!

நாட்டைத் தாக்கிய பாரிய பேரழிவின் காரணமாக வெள்ளத்தில் சிக்கி நீர்கொழும்பு பிரதேச செயலகப் பிரிவில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். கொச்சிக்கடை பகுதியில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளத்தில் அகப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

கொச்சிக்கடை ஓயா வீதியைச் சேர்ந்த சின்னையா பாக்கியம் என்ற 77 வயது பெண்மணியும், பள்ளியா வீதியைச் சேர்ந்த ஏ.எச். ஸ்ரீ நமன் என்ற 55 வயது ஆணும் உயிரிழந்துள்ளனர்.

கனமழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காரணமாக மகள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதேவேளை வயதான பெண் வீட்டினுள் வெள்ளத்தில் அகப்பட்டு உயிரிழந்துளார்.

மற்றைய நபரை கவனித்துக் கொள்ள இருந்த நபர் வெளியே சென்ற வேளையில் தனியாக இருந்த நபர் வெள்ளத்தில் அகப்பட்டு உயிரிழந்துள்ளதாக நீர்கொழும்பு பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் வெள்ளத்தில் சிக்கி பல கால்நடைகள் உயிரிழப்பு!!

வவுனியா – செட்டிக்குளம் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் பல கால்நடைகள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

தொடர்ச்சியான கனமழையால் குளங்கள் நிரம்பி வழிவந்து, வவுனியாவின் பல பகுதிகள் தண்ணீரில் மூழ்கிய நிலையில், மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட பல கால்நடைகள் வெள்ளத்தில் உயிரிழந்துள்ளன.

இந்நிலையில் பிரதேசத்தைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பாளர்கள், விவசாயிகள், கால்நடைகள் உயிரிழந்ததன் காரணமாக பெரும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளதாக குறிப்பிடுகின்றனர்.