மட்டக்களப்பு வாழைச்சேனை கிண்ணையடி மாரியம்மன் ஆலயத்தில் தீக்குழியிலிருந்து நெருப்பு எழுகின்ற அதிசயம் இடம்பெற்றுள்ளது. கிண்ணையடி மாரியம்மன் ஆலய வருடாந்த திருச் சடங்கு கடந்த 02/07/2025 தொடங்கி 2025 /07/10 அன்று நிறைவு பெற்றது.
நேற்று 11/09/2025 வியாழக்கிழமை 7:40மணியளவில் ஆலயத்தில் லைட் (மின் குமிழ்) போட வந்த ஆலய தலைவர் மூடியிருந்த தீ குழியில் இருந்து தீ எரிவதை கண்டு நிர்வாகத்திடம் தெரிவித்திருந்தார்.
ஆலய திருச் சடங்கு முடிந்து இரண்டு மாதம் கடந்த நிலையில் ஆலயத்தில் தீக்குழிக்குள் இருந்து நெருப்பு வருவதாக அறிந்த பக்தர்கள் வந்து பார்வையிடுகின்றார்கள்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் கூகட்பள்ளியில் ஸ்வான் லேக் கிரேடட் கம்யூனிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ராகேஷ்அகர்வால். தொழிலதிபரான இவரது மனைவி ரேணு அகர்வால்.
இவர்களது வீட்டில் கடந்த 9 ஆண்டுகளாக ஜார்க்கண்ட்டை சேர்ந்த ரோஷன் என்பவர் சமையல்காரராக பணிபுரிந்து உள்ளார்.
ராகேஷ் குடும்பத்தினர் ரோஷனிடம் தங்கள் வீட்டுக்கும் ஒரு சமையல்காரர் வேண்டும் என தெரிவித்துள்ளனர். அதன்படி ஹர்ஷா என்பவரை கடந்த 11 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சேர்த்துள்ளார்.
இந்நிலையில் ராகேஷ் நேற்று தனது மகனுடன் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். மாலை 6 மணியளவில் ராகேஷ் தனது வீட்டிற்கு போன் செய்துள்ளார்.
பலமுறை போன் செய்தும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அவர் உடனடியாக வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. கதவை நீண்ட நேரமாக தட்டியும் திறக்கவில்லை.
இதனால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது மனைவி ரேணுஅகர்வால் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதை பார்த்து கதறி அழுதார். அவரது கை, கால்கள் கட்டப்பட்டிருந்தது.
தலையில் குக்கரால் தாக்கியும் உடல் முழுவதும் கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டுள்ளார். அருகே உள்ள மேஜை மீது ரத்தக்கறை படிந்த குக்கர் இருந்தது. புதிதாக வேலைக்கு சேர்ந்த ஹர்ஷாவை காணவில்லை.
இதுகுறித்து போலீசாருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் உறவினர் வீட்டில் வேலை செய்யும் ரோஷனும், ஹர்ஷாவும் சேர்ந்து, ரேணுஅகர்வாலிடம் நகை, பணம் எங்கே என கேட்டு மிரட்டியுள்ளனர்.
அவர் தெரிவிக்க முரண்டு பிடித்ததால் ஆத்திரமடைந்த இருவரும் சேர்ந்து கைகளால் தாக்குதல் நடத்தியுள்ளனர். பின்னர் கை, கால்களை கட்டிவிட்டு குக்கரை எடுத்து வந்து தலையில் தாக்கியுள்ளனர். மேலும் கத்தியாலும் பல இடங்களில் குத்தியுள்ளனர்.
அவர் உயிரிழந்த பிறகு ரத்தக்கறை படிந்து தங்களது உடைகளை கழற்றி போட்டுவிட்டு பாத்ரூமில் குளித்துள்ளனர்.
அதன்பிறகு ரேணுவின் மகன் சுபத்தின் உடைகளை அணிந்து கொண்டு வீட்டில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு லிப்ட் வழியாக தப்பிச் சென்றுள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணை கொலை செய்து விட்டு நகை, பணத்துடன் தப்பிச்சென்ற 2 பேரையும் தேடி வருகின்றனர்.
மேலும் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசாரும் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தம்புத்தேகமவில் உள்ள ஒரு வீட்டிலிருந்து நேற்று சந்தேகத்திற்கிடமான ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. உயிரிழந்தவர் 49 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபர் அவரது மனைவியைப் பிரிந்து வசிப்பதாகவும், அவருக்கு 21 வயது மகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
உயிருள்ள 6 அரிய வகைய பாம்புகளை கடத்திவந்த இலங்கைப் பெண் ஒருவரை, சுங்க அதிகாரிகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்துள்ளனர்.
40 வயதுடைய குறித்த இலங்கைப் பெண் பயணி, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் பெங்கொக்கிலிருந்து சென்னை வழியாக இலங்கை வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள், பல்லுயிர், கலாசார மற்றும் தேசிய பாரம்பரியப் பாதுகாப்புப் பிரிவுடன் சேர்ந்து மேற்கொண்ட சோதனைகளில் இந்த பாம்புகளைக் கண்டுபிடித்தனர்.
இந்த பாம்புகள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்களின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளவைகள் என தெரியவந்துள்ளது.
காலியில் அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மெதம்பாகம பிரதேசத்தில் உள்ள ரயில் கடவையில் ரயிலில் மோதி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று (11) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் காலி – பூஸா பிரதேசத்தைச் செர்ந்த 68 வயதுடைய வயோதிபர் என பொலிஸார் தெரிவித்தனர்.
வயோதிபர் ரயில் கடவையை கடக்க முயன்ற போது ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தென்னிலங்கையில் வீடொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாயும் மகனும் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் கரந்தெனிய, கொட்டவெல பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றதாக கரந்தெனிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கொட்டவெல பகுதியை சேர்ந்த 75 வயதுடைய ஹகுரு குனவத்தி என்ற பெண்ணும், அவரது 25 வயதுடைய மகன் சதுரங்க திசாநாயக்கவும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இரண்டு கொலைகளும் ஒருவரால் செய்யப்பட்டதாகவும், சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொலைச் சம்பவம் குறித்து கரந்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எல்ல பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்தை 55 இலட்சத்திற்கு வாங்கியதாகவும் அதனை 70 இலட்சம் பெறுமதியில் வடிவமைப்பு செய்ததாகவும் பேருந்து உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட தலைமை மோட்டார் வாகன ஆய்வாளர் ஜாலிய பண்டார இன்று(12.09.2025) ஊடகங்களுக்கு வெளியிட்ட சிறப்பு அறிக்கையிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
பேருந்து விபத்து தொடர்பான விசாரணையில் தானும் பங்கேற்றதாகவும், பேருந்தின் உரிமையாளருடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்ததாகவும் பண்டார கூறியுள்ளார்.
பேருந்தின் வடிவமைப்பிற்காக அதிக பணம் செலவிடப்பட்டிருந்தாலும் அதனை சரியான முறையில் பராமரிக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பேருந்து சக்கரங்களின் ட்ரம் பகுதி வெப்பமடைவதால் அதனை செங்குத்தான சாலைகளில் செலுத்தும் போது, ப்ரேக் செயலிழப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என பண்டார கூறியுள்ளார்.
அத்துடன், சுற்றுலா செல்வோர், தாங்கள் தேர்ந்தெடுக்கும் வாகனத்தின் பாதுகாப்பு, வாகனம் முறையாக பராமரிக்கப்படுகிறதா மற்றும் வாகன ஓட்டுனரின் பழக்கவழக்கம் குறித்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
புதிய வாகன விற்பனையில் சந்தையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் காரணமாக, பதிவு செய்யப்பட்ட, பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விற்பனை இந்த நாட்களில் குறைந்து வருவதாக சந்தை வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
பல புதிய வாகன மாதிரிகள் சந்தையில் நுழைந்திருப்பதே இதற்குக் காரணம் என்று அவர்கள் கூறுகிறார்கள், குறிப்பாக அரசாங்கம் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளதால்.
இதுபோன்ற சூழ்நிலையில், முதல் முறையாக வாகனம் வாங்குபவர்களும், கூடுதல் வாகனம் வாங்க விரும்புபவர்களும் பதிவு செய்யப்படாத, அதாவது புதிய வாகனங்களை வாங்க அதிகளவில் ஆசைப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த வாகனங்களில் பெரும்பாலான மக்கள் மின்சார வாகனங்களையே விரும்புவதாகத் தெரிகிறது.
இந்தப் போக்குக்கான முக்கிய காரணங்கள், இன்று சந்தையில் பல மலிவு விலை மின்சார வாகன மாதிரிகள் கிடைப்பதும், இந்த வாகனங்களின் சிறிய அளவும், ஒரே சார்ஜில் அதிக தூரம் பயணிக்கும் திறன் ஆகியவையும் ஆகும்.
பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் விற்பனை இல்லாததால், தற்போது அதிக விலைக்கு விற்பனையாகும் பயன்படுத்தப்பட்ட பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் விலைகளும் எதிர்காலத்தில் கணிசமாகக் குறையும் என்று சந்தை வட்டாரங்கள் மேலும் கணித்துள்ளன.
அண்மையில் இராவண எல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு வவுனியா மாநகரசபையின் அமர்வில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த 4ஆம்திகதி இரவு எல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் தங்காலை நகரசபை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உட்பட 15 பேர் பலியாகியிருந்தனர்.
அவர்களின் ஆத்மா சாந்தியடைவதற்காக வவுனியா மாநகரசபையின் இன்றைய அமர்வில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது சபையின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு மெழுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மரணித்த பௌத்த துறவிக்கு சிலை ஒன்றினை அமைப்பதற்கு வவுனியா நகரப்பகுதியில் இடம் ஒன்றை வழங்குமாறு மாநகரசபை உறுப்பினர் லலித் ஜெயசேகர கோரிக்கை விடுத்துள்ளார். வவுனியா மாநகரசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் சு.காண்டீபன் தலைமையில் இன்று (11.09.2025) இடம்பெற்றது.
இதன்போது சபையின் உறுப்பினர் முகமட் முனவ்வர் வவுனியா தர்மலிங்கம் வீதியின் முகப்பில் உள்ள காணியில் இஸ்லாமிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் தூபி ஒன்றை அமைப்பதற்கான அனுமதியினை வழங்குமாறு கோரியிருந்தார். அந்தப் பகுதியில் பள்ளிவாசல் இருப்பதால் அதனை அமைப்பதற்கு அந்த இடம் பொருத்தமானதாக இருக்கும் என அவர் தெரிவித்திருந்தார்.
இதன்போது எழுந்த துணைமுதல்வர் கார்த்தீபன் அந்த பகுதியில் மரணித்த ஊடகவியலாளர்களிற்கான ஒரு பொது நினைவுத்தூபியினை நிறுவுவதற்கான அனுமதியை ஏற்கனவே நான் கோரியுள்ளேன்.
தற்போது பள்ளி அமைந்துள்ள பகுதியானது மதராசா பாடசாலை ஒன்றுக்காவே அந்த காலப்பகுதியில் வழங்கப்பட்டது. தற்போது பள்ளிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் அதனை சுற்றியுள்ள இடங்களை நீங்கள் உரிமை கோர முடியாது என தெரிவித்தார்.
இதன்போது எழுந்த மற்றொரு உறுப்பினரான லலித் ஜெயசேகர அண்மையில் மரணித்த பௌத்தபிக்கு ஒருவருக்கு சிலை அமைப்பதற்கு வவுனியா நகரில் இடம் ஒன்றை வழங்குமாறு தாழ்மையான வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார்.
இதற்கு பதில் அளித்த முதல்வர் காண்டீபன் சிலைகள் அமைப்பது தொடர்பாக முழுமையான தீர்மானத்திற்கூடாகவே செல்ல முடியும். சபை அங்கீகரித்து ஆளுனர் வரையில் அந்த விடயம் செல்லவேண்டும்.
எழுத்தில் மாத்திரம் கோரிக்கைகளை தருவதால் பயன்இல்லை. எனவே சமூகங்களிற்கிடையில் பிரச்சனைகளை ஏற்ப்படுத்த வேண்டாம்.
ஏற்கனவே எம்.ஜி.ஆர் சிலை ஒன்றை அங்கு வைப்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டு அது தடுக்கப்பட்டிருந்தது. எனவே விண்ணப்பங்களை கோருவோர் முழுமையான தகவல்களை வழங்கி அதனை சபைக்கு சமர்பிக்குமாறு தெரிவித்திருந்தார்.
வவுனியா மாநகரசபைக்குட்பட்ட உணவங்களுடன் இணைந்தவாறாக உள்ள புகைத்தல் பகுதிகளுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநகரசபையின் இன்றைய அமர்வின் போது குறித்த உத்தரவினை முதல்வர் காண்டீபன் வழங்கியுள்ளார்.
குறிப்பாக வவுனியா நகரத்தில் உள்ள சில உணவங்களுக்கு பின்புறமாக புகைப்பிடிப்பதற்கென சிறிய பகுதிகள் காணப்படுகின்றது.
இவ்வாறான பகுதிகளை உடன் தடை செய்யுமாறு மாநகர சுகாதார குழு பரிந்துரை செய்துள்ளதையடுத்து குறித்த உத்தரவை மாநகர முதல்வர் வழங்கியுள்ளார்.
அத்துடன் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலத்திற்கு முன்பாக பாடசாலை முடிவடையும் நேரத்தில் சிலர் போதைமாத்திரை வியாபாரத்தில் ஈடுபடுவதாக உறுப்பினர் க.கிருஸ்ணதாஸ் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதனை தடுப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக பொலிசாருக்கு அறிவித்து நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் தெரிவித்திருந்தார்.
கொழும்பு பல்கலைக்கழக மாணவி ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஹம்பாந்தோட்ட, பந்தகிரிய பகுதியை சேர்ந்த 22 வயதுடைய மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிந்துள்ளார்.
பந்தகிரிய பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் செல்லும் வழியில் தந்தையும் மகளும் விபத்துக்குள்ளாகியுள்ளனர். சம்பவம் தொடர்பில் மாணவியின் தந்தை தெரிவித்ததாவது,
என் மகள் கொழும்பு பல்கலைக்கழகத்திலிருந்து வீட்டிற்கு வந்தார். மாலையில் பேருந்து இல்லாததால், அவரை நான் என் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றேன். மகள் தலைக்கவசம் அணியவில்லை. எங்களுக்கு முன்னால் ஒரு முச்சக்கர வண்டி வந்தது.
கோர விபத்து பின்னால் வந்த ஒரு வேன் திடீரென வலதுபுறம் திரும்பி முச்சக்கர வண்டியைக் கடந்து சென்றது. நாங்கள் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் எங்கள் முன்னால் இருந்த வேனின் வலது பக்கத்தில் மோதியதால் நாங்கள் தூக்கி வீசப்பட்டோம்.
எனக்கு சுயநினைவு திரும்பிய போது, நான் மருத்துவமனையில் இருந்தேன். எனது வலது காலும் வலது கையும் காயமடைந்தன. எனது மகளின் தலையில் இருந்து இரத்தம் கசிந்திருந்தது. 9 நாட்கள் சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும் மகள் உயிரிழந்து விட்டார்.” என தெரிவித்துள்ளார்.
புற்று நோயினால் பாதிக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பருத்தித்துறையை சேர்ந்த இளம் ஆசிரியர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 37 வயதான ஒரு பிள்ளையின் தாயை இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவர் ஆவார்
திருகோணமலையை சொந்த இடமாககொண்ட குறித்த ஆசிரியர் யாழ் இளைஞர் ஒருவரை திருமணம் செய்து மூன்று வயது குழந்தையும் உள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த சில மாதங்களாக புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் குறித்த ஆசிரியை இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் . இளம் ஆசிரியையின் உயிரிழப்பு பருத்தித்துறை பிரதேசத்தில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .
பலாங்கொடை – இரத்தினபுரி வீதியில் எல்லேபொல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று புதன்கிழமை (10.09) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பலாங்கொடை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று முன்னால் பயணித்த பஸ்ஸை கடந்து செல்ல முயன்ற போது பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய இளைஞன் ஆவார். இது தொடர்பில் பலாங்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று காலை கொழும்பு-பதுளை பிரதான சாலையில் உள்ள பலாங்கொடை பஹலவின் எல்லேபொல பகுதியில்இன்று (11) மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.
பெல்மதுளையிலிருந்து பலாங்கொடை நோக்கி பாடசாலை குழந்தைகள் உட்பட பயணிகளை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்து,
பலாங்கொடையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து மற்றும் அதே திசையில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் ஒன்று வந்ததால், அப்பகுதி மக்கள் பாடசாலை குழந்தைகள் மற்றும் சிறு காயங்களுக்கு உள்ளான பல பயணிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். விபத்து காரணமாக பதுளை-கொழும்பு பிரதான சாலை முற்றிலுமாக தடைபட்டது.
விபத்தின் போது பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் பிரதேசவாசிகளின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டம்பர் வரை மொத்தம் 200,026 வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க நிதி பற்றிய குழு தெரிவித்துள்ளது.
அவற்றில் 154,537 வாகனங்கள் ஏற்கனவே சுங்கத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுவிக்கப்பட்ட வாகனங்களில் 98,923 மோட்டார் சைக்கிள்கள், 40,323 மோட்டார் வாகனங்கள், 9,025 முச்சக்கர வண்டிகள், 5,368 வணிக வாகனங்கள் மற்றும் 898 வேன்கள் மற்றும் பேருந்துகள் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் சுங்கத் திணைக்களம் ரூ. 429 பில்லியன் வருமானத்தை ஈட்டியுள்ளது. இந்தக் காலகட்டத்தில் வாகன இறக்குமதிக்காக 30,594 கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் மொத்த மதிப்பு 1,491 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும் அந்த குழு மேலும் தெரிவித்துள்ளது.