குரும்சிட்டி, தெல்லிப்பளை வைத்தியசாலை வீதியில் இன்று வியாழக்கிழமை (11) காலை வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட குழு ஒன்று குடும்பஸ்தர் மீது இந்த வாள்வெட்டு சம்பவத்தினை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பலாலி பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான 32 வயதுடையவரே வெட்டு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். காயமடைந்தவர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பலாலி பொலிஸார் மற்றும் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் பிரபல தனியார் வங்கியின் போலியான இணையதளத்தை உருவாக்கி மோசடி செய்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வங்கிக்கு சொந்தமான 50 மில்லியன் ரூபாய் மோசடியாக பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், செப்டம்பர் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த உத்தரவை கொழும்பு தலைமை நீதிபதி அசங்க எஸ். போதரகம பிறப்பித்துள்ளார். இந்த மோசடித் திட்டம் நாட்டிற்குள் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவு இந்த மோசடியைப் பற்றிய தகவல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். மேலும், மோசடியுடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
சந்தேக நபர்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையானவர்களாக இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த பெருங்காப்பூர், பசுமலைத்தாங்கல் கிராமத்தில் வசித்து வருபவர் நமச்சிவாயம். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி பத்மாவதி . இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இதில் பாண்டியராஜன் அரசு உருது பள்ளியில் சத்துணவு பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார்.தினமும் வீட்டுக்கு வந்தவுடன் கணவருடன் சேர்ந்து கால்நடைகளை பராமரிப்பது மற்றும் விவசாய பணிகளையும் கவனித்து கொண்டார்.
இந்நிலையில் நமச்சிவாயம் மற்றும் அவரது மனைவி பத்மாவதிக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்படுமாம். நேற்று முன்தினம் வழக்கம்போல் பத்மாவதி சத்துணவு பொறுப்பாளர் பணிக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினார்.
வீட்டில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அவர்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கால்நடைகளை கொட்டகையில் கட்டுவதற்கு சென்றுள்ளார்.
ஆனால் இரவு நீண்ட நேரமாகியும் பத்மாவதி வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அவரை தேடி சென்றுள்ளனர்.
அப்போது பசுமலைத்தாங்கல் மலை அடிவாரத்தின் கீழே உள்ள ஓடை நீரில் பத்மாவதி மூச்சு பேச்சின்றி மயக்க நிலையில் கிடந்தார். அதன் அருகில் இருந்த மரத்தில் நமச்சிவாயம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு திரண்டிருந்த கிராம மக்கள், பத்மாவதியை மீட்டு உடனே செஞ்சி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பத்மாவதி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் மனைவியை அங்குள்ள ஓடை நீரில் அமுக்கி நமச்சிவாயம் கொலை செய்து விட்டு தானும் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
5 வருடங்கள் காதலித்து வந்த நிலையில், காதலனின் நடத்தையில் திடீர் மாற்றம் ஏற்பட்டதாலும், தொடர்ந்து திருமணத்தை தள்ளிப்போட்டு வந்ததாலும் இளம்பெண் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் மண்டியாவை சேர்ந்தவர் லதா (வயது 25). அதே பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித். இவர் எலெக்டரீசியனாக பணியாற்றி வருகிறார்.
லதா பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இதனால் அவர் ராஜாஜிநகர் காயத்திரி நகர் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்து வந்தார்.
ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால், லதா, ரஞ்சித் இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலிக்க தொடங்கினர். இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு 2 பேரின் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் ரஞ்சித் திருமணத்தை தள்ளிப்போட்டு வந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் அவரது நடத்தையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதாவது லதாவுடன் முன்புபோல் பேசி, பழகுவதை அவர் தவிர்த்ததாக தெரிகிறது. இதனால் காதலர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
அதுபோல் நேற்று முன்தினம் இரவும் லதா-ரஞ்சித் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த லதா, தான் தங்கியிருந்த வாடகை வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் சுப்பிரமணிய நகர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் காதலர்கள் இடையே ஏற்பட்ட சண்டையில் விரக்தி அடைந்து லதா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து லதா உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நேபாளத்தில் போராட்டகாரர்களுக்கு பயந்து அதிகாரிகள் ஹெலிகாப்டரில் தொங்கிய அதிர்ச்சியூட்டும் காணொளி வைரலாகி வருகிறது.
அதில், மூத்த அரசு அதிகாரிகள் அவசரகால ஹெலிகாப்டரில் கட்டப்பட்ட கயிறுகளில் ஒட்டிக்கொண்டு, ஆத்திரமடைந்த போராட்டக்காரர்களின் கூட்டத்திலிருந்து தப்பிக்க முயற்சிப்பதைக் காட்டுகிறது.
ஹெலிகாப்டர் புறப்பட்டவுடன் கூட்டத்திலிருந்து தப்பிக்க அதிகாரிகள் ஹெலிகாப்டரில் தொங்கிய காணொளி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போராட்டக்காரர்களால் வேரூன்றிய ஊழல் மற்றும் தவறான நிர்வாகத்திற்காக குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள், கோபமடைந்த கூட்டத்தினரால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் அவசரமாக தப்பிச் சென்றனர்.
நேபாளத்தில் சமூக ஊடகங்களை அரசாங்கம் தடை செய்ததை எதிர்த்து அங்கு மக்கள் போராட்டம் வெடித்ததுடன், கலவரங்களும் இடம்பெற்றது.
ஊழல் முறைகேடுகள், வேலையின்மை, கருத்துச் சுந்திரத்துக்கு கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து நேபாளத்தில் அரசுக்கு எதிராக வெடித்த இளைஞர்களின் போராட்டத்தால் பதற்றம் நீடித்து வருகிறது.
நேபாளத்தில் ‘ஜென் ஸீ’ இளைஞர்கள் நடத்திய தீவிர போராட்டங்களால் பிரதமர் கே.பி.சர்மா ஒலி (73) தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு கவிழ்ந்தது. அவருடன் சேர்ந்து, நாட்டின் அதிபராக இருந்த ராம்சந்திர பவுடேலும் ராஜினாமா செய்தார்.
நேபாளத்தில் நிலவி வரும் அரசியல் பதற்றமான சூழ்நிலை காரணமாக சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மேலும், நாட்டின் தலைநகர் காத்மாண்டு உட்பட பல்வேறு பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்கின்றன.
ஊழல் அரசியல்வாதிகளின் வசிப்பிடங்களைக் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. நேபாளத்தில் அமைதி திரும்பாத நிலையில், பல்வேறு நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை இலங்கையிலும் 2022 ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்கள் வெடித்த நிலையில் ராஜபக்க்ஷர்கள் ஆட்சியில் இருந்து மக்களால் விடட்டி அடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு பல்கலைக்கழக மாணவி ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். கடந்த மாதம் 29ஆம் திகதி தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மாணவி நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிந்துள்ளார். ஹம்பாந்தோட்ட, பந்தகிரிய பகுதியை சேர்ந்த 22 வயதுடைய நெத்மி பிரபோதா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பந்தகிரிய பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் செல்லும் வழியில் தந்தையும் மகளும் விபத்துக்குள்ளாகியுள்ளனர். ஒகஸ்ட் 29 ஆம் திகதி, என் மகள் கொழும்பு பல்கலைக்கழகத்திலிருந்து வீட்டிற்கு வந்தார்.
மாலையில் பேருந்து இல்லாததால், அவரை நான் என் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றேன். மகள் தலைக்கவசம் அணியவில்லை. எங்களுக்கு முன்னால் ஒரு முச்சக்கர வண்டி வந்தது.
பின்னால் வந்த ஒரு வேன் திடீரென வலதுபுறம் திரும்பி முச்சக்கர வண்டியைக் கடந்து சென்றது. நாங்கள் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் எங்கள் முன்னால் இருந்த வேனின் வலது பக்கத்தில் மோதியதால் நாங்கள் தூக்கி வீசப்பட்டோம்.
எனக்கு சுயநினைவு திரும்பிய போது, நான் மருத்துவமனையில் இருந்தேன். எனது வலது காலும் வலது கையும் காயமடைந்தன.
எனது மகளின் தலையில் இருந்து இரத்தம் கசிந்திருந்தது. 9 நாட்கள் சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும் 8ஆம் திகதி மகள் உயிரிழந்து விட்டார்.” என உயிரிழந்த மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.
மொனராகலை பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த இளம் பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உள்ளதென கணவர் தெரிவித்துள்ளார். மொனராகலை சிரி விஜயபுரத்தைச் சேர்ந்த பி. ஷியாமலி மதுஷானி என்ற 24 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஒரு குழந்தையின் தாயான தனது மனைவியின் மரணம் குறித்து முறையான விசாரணை நடத்துமாறு கணவர் நுவன் லக்மின மருத்துவமனை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பல்வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் தனது கணவருடன் மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்ததால், மருத்துவமனையின் ஆறாவது வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் திடீரென உயிரிழந்துள்ளார். தனது மனைவியின் மரணத்திற்கான காரணத்தை தெளிவுபடுத்துமாறு கணவன் கோரிக்கை விடுத்துள்ளார். சம்பவம் குறித்து நியாயமான விசாரணை நடத்துமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 5ஆம் திகதி எல்ல-வெல்லவாய வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தின் போது தைரியமாக செயல்பட்டு காயமடைந்த பயணிகளுக்கு உடனடி உதவிகளை வழங்கியதற்காக, பிரித்தானிய பெண் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானிய பிரஜையான எமி விக்டோரியா கிப் என்பவர் நாடாளுமன்றத்தில் சிறப்பு அங்கீகாரத்துடன் கௌரவிக்கப்பட்டார்.
இந்த அங்கீகாரம் சுற்றுலா அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது அவசர சேவைகள் வரும் வரை பயணிகளுக்கு மருத்துவ உதவி மற்றும் ஆறுதல் வழங்கிய அவரது சேவையை பாராட்டும் வகையில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
விபத்தின் போது உடனடியாக செயற்பட்ட அவரது செயல்கள், பேருந்தில் இருந்தவர்களின் உயிர்களை காப்பாற்றுவதில் முக்கிய பங்காற்றின என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய சுற்றுலா பிரதி அமைச்சர், “மனித குலத்திற்கு எல்லைகள் இல்லை என்பதை அவரது தன்னலமற்ற செயல் நமக்கு நினைவூட்டுகிறது.
மேலும், கிப்பின் இரக்கமும் தைரியமும் நெருக்கடியான தருணத்தில் உண்மையான மனிதத்துவத்தை வெளிப்படுத்தியது.
இந்த அங்கீகாரம், அசாதாரண சூழ்நிலைகளில் சாதாரண நபர்கள் வழங்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை எடுத்துக்காட்டுகின்றது. உலகளாவிய ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தும் இலங்கையின் பாராட்டையும் பிரதிபலிக்கின்றது” என குறிப்பிட்டுள்ளார்
யாழ்ப்பாணம் – மருதனார்மடம், காங்கேசன்துறை வீதியில் இன்றையதினம் மூன்று உந்துருளிகளும், துவிச்சக்கர வண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், வீதியில் பயணித்துக் கொண்டிருந்த துவிச்சக்கர வண்டி ஒன்று வீதியைக் கடக்க முற்பட்ட வேளை, பின்பக்கமாக வந்த உந்துருளியுடன் மோதியது.
பின்னர் அந்த உந்துருளி நிலைகுலைந்து பக்கம் மாறி வலது பக்கம் சென்று எதிர்த்திசையில் வந்த இரண்டு உந்துருளிகளின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் சிக்கியவர்களில் ஐந்து பேர் காயங்களுக்கு உள்ளாகி தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை சுன்னாகம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கைதான எல்ல – வெல்வாய வீதியில் விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்ட நிலையில் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளராக அவர் அதனை உரிய வகையில் பராமரிக்காமை காரணமாகவே இன்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்தார்.
கடந்த 4 ஆம் திகதி இரவு, சுற்றுலா சென்று மீண்டும் திரும்பிக் கொண்டிருந்த தங்காலை நகரசபை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஏற்றிச் சென்ற பேருந்து, எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் 24வது மைல்கல் பகுதியில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் பேருந்தின் சாரதி உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் தங்காலை நகரசபையின் செயலாளர் டி.டபிள்யூ.கே. ரூபசேன உட்பட 12 ஊழியர்கள் உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த 17 பேர் பதுளை, பண்டாரவளை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
மலேசியாவில் மன்னரைக் கட்டியணைக்க முயன்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியாவில், ஆகத்து மாதம் 31ஆம் திகதி, சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்திருக்கின்றன.
தேசிய கீதம் பாடப்படும்போது, திடீரென மன்னர் Perak Sultan Nazrin Shahஐ நோக்கி ஒரு பெண் ஓடியுள்ளார். அவர் மன்னரைக் கட்டியணைக்க முயல, உடனடியாக மன்னரின் பாதுகாவலர்கள் அவரை கைது செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளார்கள்.
அந்தப் பெண்ணின் பெயர் Nurhaswani Afni Mohamad Zorki (41). அவர் மீது மலேசிய சட்டப்படி தாக்குதல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர் schizophrenia என்னும் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுவதால், அவரை விசாரணைக்குட்படுத்த முடியுமா என்பதை அறிவதற்காக அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படும் நிலையில், Nurhaswani மூன்று மாதங்கள் வரை சிறையில் அடைக்கப்படுவதுடன் 1,000 Malaysian Ringgit அபராதமும் செலுத்தவேண்டிவரலாம். இலங்கை மதிப்பில் அது 71,489.64 ரூபாய் ஆகும்.
சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்த ஒரு இந்திய தம்பதி சீன ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்த நிலையில், அந்த ஹொட்டல் ஊழியர்கள் தங்களைத் தாக்கியதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளார்கள்.
கனடாவில் வாழும் இந்தியர்களான கரண் மற்றும் நிகிதா தம்பதியர் சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், Seehotel Schwert என்னும் ஹொட்டலில் தங்கியிருந்திருக்கிறார்கள்.
அந்த ஹொட்டலில் ஒரு இரவு தங்குவதற்கான கட்டணம் இந்திய மதிப்பில் 28,000 ரூபாய் முதல் 42,000 ரூபாய் வரை ஆகும்.
அவர்கள் தங்கியிருந்த ஹொட்டலில் ஏசி இல்லாததால் ஃபேன்கள் கேட்டுள்ளார்கள் தம்பதியர். ஃபேன்கள் கொடுக்கப்பட்ட நிலையில், பின் இவர்களிடம் கேட்காமலே ஊழியர் ஒருவர் ஃபேனை எடுத்துச் சென்றுவிட்டாராம்.
அவர்கள் மீண்டும் ஃபேனை கேட்க, அவர் இவர்களை முட்டாள் என திட்டியதாகவும், அதைத் தொடர்ந்து பின்னரும் அந்த நபருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதை நிகிதா மொபைலில் வீடியோ எடுக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
அந்த ஊழியர் நிகிதாவின் மொபைலைப் பறித்ததுடன் அவரையும் கரணையும் தாக்கியதாகவும், கனமான செராமிக் மக் ஒன்றை தூக்கி நிகிதா மீது வீசியதாகவும்,
அதில் அவரது பல் ஒன்று உடைந்ததுடன், தாடையும் சேதமடைந்துள்ளதாகவும், மீண்டும் அவரது தாடை முழுமையாக சரியாக செயல்படாது என மருத்துவர்கள் கூறியதாகவும் தம்பதியர் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால், கரண், நிகிதா தம்பதியம் ஆரம்பம் முதலே முரட்டுத்தனமாக நாட்ந்துகொண்டதாகவும், 60 வயது ஊழியர் ஒருவரை தாக்கி காயம் ஏற்படுத்தியதாகவும் ஹொட்டல் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
தற்காப்புக்காக அவர் ஒரு கப்பை எடுத்து வீசியதாகவும் அது நிகிதாவை தாக்கிவிட்டதாகவும் ஹொட்டல் ஊழியர்கள் கூறியுள்ளார்கள்.
ஆனால், வெள்ளையர்களையும் ஜேர்மன் மொழி பேசியவர்களையும் அந்த ஹொட்டல் ஊழியர்கள் மரியாதையுடன் நடத்தியதாகவும், தங்களை மட்டுமே மோசமாக நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார் நிகிதா.
இந்த விடயம் தொடர்பில் பொலிசாரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளதாக கரண் தெரிவித்துள்ளார்.
திரையரங்கிற்கு படம் பார்க்க கணவன் தன்னை அழைத்து செல்லாததால், 21 வயதான புதுப்பெண் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் படியாண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜீவா. சரக்கு ஆட்டோ டிரைவர். அவருடைய மனைவி சவுமியா. இவர், காங்கயத்தில் உள்ள செருப்பு கடையில் வேலை செய்து வந்தார். இவர்கள் 2 பேருக்கும், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
புதுப்பெண்ணான சவுமியா, தனது கணவர் ஜீவாவிடம் சினிமா பார்க்க தியேட்டருக்கு அழைத்து செல்லுமாறு கடந்த ஒருவாரமாக வற்புறுத்தி வந்தார்.
ஆனால் அவர், வேலை காரணமாக மனைவியை சினிமா பார்க்க அழைத்து செல்லாமல் இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து சவுமியா, தனது தாயிடம் செல்போனில் கூறி அழுதார்.
மேலும், மிகுந்த மனவேதனையில் அவர் இருந்தார். நேற்று காலை ஜீவா சரக்கு ஆட்டோவை எடுத்துக் கொண்டு வேலை விஷயமாக காங்கயம் சென்று விட்டார்.
சவுமியா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவர், திடீரென வீட்டின் விட்டத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு தொங்கினார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த ஜீவா, மனைவி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே சவுமியா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் சந்திரநல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் 32 வயது கலைச்செல்வன். இவரது தந்தை ராமன் உயிரிழந்து விட்டார். கலைச்செல்வன் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார்.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே வடகம்பட்டியில் வசித்து வரும் முருகன் மகள் பிரியராகினி தொப்பூரில் உள்ள சகோதரி வீட்டுக்கு செல்லும் போது, கலைச்செல்வனுடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது.
5 ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களது காதலுக்கு பிரியராகினியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் செப்டம்பர் 4ம் தேதி, காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி, கிருஷ்ணகிரியில் உள்ள முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டது. பிரியராகினியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், காதல் ஜோடியை தேடத் தொடங்கினர்.
உடனடியாக காதல் ஜோடி, சேலம் மாவட்ட எஸ்.பி ஆபீசில் தஞ்சம் அடையலாம் என காரில் புறப்பட்டனர்.
டோல்கேட்டில் வைத்து, அவர்களை பிடிப்பதற்காக சிலர் தயாராக இருந்தனர். கார் மாற்றுப்பாதையில் பறந்தது. அங்கும் ஒரு வேறு கும்பல் காத்திருந்து விரட்டத் தொடங்கியது.
மண் சாலையில் சென்ற கார் நடுவழியில் நின்று விட்டதால், காரில் இறந்து கீழே இறங்கி ஓடத் தொடங்கிய காதல் ஜோடியை துரத்திச் சென்று மடக்கி பிடித்த கும்பல், சரமாரியாக தாக்கினர். இந்த தாக்குதலில் கலைச்செல்வன் மயங்கி சரிந்தார்.
பிரியராகினி கழுத்தில் இருந்த தாலியை அறுத்து எறிந்தது. அப்பகுதி மக்கள் ஓடி வந்து, காயமடைந்த கலைச்செல்வனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்பாறை – சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு பகுதியில் சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
தனது சகோதரனுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் அருகில் உள்ள ஆற்றில் விழுந்த நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் 2 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளார்.
சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் டி.கருணாகரனின் உத்தரவின் பேரில் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச்.அல்-ஜவாஹிர், மரண விசாரணை மேற்கொண்டு சடலத்தை உறவினரிடம் நேற்று மாலை ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.