மாத்தளை, கைக்காவல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் கிராம உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று சனிக்கிழமை (16) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனியார் பஸ் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் மாத்தளை – ரத்தொட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய கிராம உத்தியோகத்தர் ஒருவர் ஆவார். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கண்டி மாவட்டத்தில் உள்ள ஒரு பிராந்திய வைத்தியசாலையில், ஆம்புலன்ஸ் சாரதி ஒருவர், ஆம்புலன்ஸில் பெண் சுகாதார ஊழியரை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து கண்டி மாவட்ட சுகாதார சேவைகள் இயக்குநரகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
பிராந்திய வைத்தியசாலையில் இருந்து கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட இளம் பெண்ணை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸில் பெண் சுகாதார ஊழியர் வந்ததாகவும்,
வைத்தியசாலையில் இருந்து திரும்பி வரும் போது ஓட்டுநர் வெறிச்சோடிய இடத்தில் அவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பெண் சுகாதார ஊழியர் பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லை. சாரதியின் அச்சுறுத்தல் காரணமாகவே அவர் முறைப்பாடு செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து ஏற்கனவே விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட சுகாதார சேவைகள் இயக்குநர் வைத்தியர் சேனக தலகலவை தொடர்பு கொண்டபோது, பெண் சுகாதார ஊழியர் பொலிஸில் நேற்று முறைப்பாடு அளித்துள்ளார்.
முறைப்பாடு குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும், அந்தப் பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக கம்பளை வைத்திசாலைக்கு அனுப்பியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மதுரங்குளிய, கரிகட்டிய பகுதியில் உள்ள பாடசாலை மாணவர் ஒருவர், மதுரங்குளிய, வெலாசிய கெமுனு ஏரியில் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக மதுரங்குளிய பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 12 வயது சிறுவன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
வேலாசிய கெமுனு ஏரியில் நீந்துவதற்காக கரிகட்டிய பகுதியில் உள்ள ஒரு உறவினர் வீட்டிற்குச் சென்ற மாணவன், வழுக்கி விழுந்து ஏரியின் படிகளில் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டான்.
குழந்தை நீரில் மூழ்கி தண்ணீரில் இழுத்துச் செல்லப்படுவதைக் கண்ட அவரது அத்தை தண்ணீரில் குதித்து குழந்தையைக் காப்பாற்ற முயன்றார்,
ஆனால் நீந்தத் தெரியாததால் அவரும் நீரில் மூழ்கினர். அத்தையும் குழந்தையும் தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருந்தபோது, சம்பவ இடத்தில் இருந்தவர்கள் அலறினர்.
அருகில் இருந்தவர்கள் விரைந்து ஓடி வந்து குழந்தையையும் அத்தையும் மீட்டு புத்தளம் ஆதார மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இருப்பினும், குழந்தையை காப்பாற்ற முடியவில்லை, அத்தை ஆபத்தான நிலையில் புத்தளம் ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது
யாழ்ப்பாணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்து ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. நல்லூர் – கிட்டுப்பூங்கா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்றிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பேருந்தில் தீ பற்றியதைத் தொடர்ந்து யாழ். மாநகர சபையின் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வட ஆப்பிரிக்க நாடான அல்ஜிரியாவின் தலைநகர் அல்ஜியர்ஸ். இங்குள்ள ஆற்றில் பயணிகள் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு படையினர், நீண்ட நேரம் போராடி மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த, 18 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. அதிவேகமாக சென்ற பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது என்பது விசாரணையில் தெரியவந்தது.
நோயாளின் கண்ணின் கீழே முளைத்திருந்த பல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தின், சிவான் மாவட்டத்தை சேர்ந்த 45 வயதான நபர் ஒருவர், பல மாதங்களாக முக வீக்கம் மற்றும் கண் பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்த பாதிப்பு மோசமடைந்த நிலையில், அவரது குடும்பத்தினர் பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அனுமதித்துள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரின் கண்ணுக்கு கீழே உள்ள எலும்பில் பல் ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அந்த பல்லின் வேர், கண்ணின் குழியை நெருங்குவதை பார்த்த அவர்கள், அதனை அறுவை சிகிச்சை செய்து அகற்ற முடிவெடுத்தனர்.
பல் மருத்துவத்துறை தலைவர் மருத்துவர் நிம்மி சிங்கின் மேற்பார்வையில், சிறப்பு அறுவை சிகிச்சை குழு இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.
பல்லின் வேர் உள்ள சரியான நிலை மற்றும் ஆழத்தை கண்டறிய மேம்பட்ட CBCT ஸ்கேன் செய்யப்பட்டது.
பல மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின்னர், கண்ணுக்கு எந்த சேதமும் ஏற்படாமல், பல் அகற்றப்பட்டது. அதன் பின்னர் அவரின் முக வீக்கமும் குறைந்தது.
பொதுவாக பற்கள் வாயின் உள்ளே வளரும், இவருக்கு கண்ணின் கீழே வளர்ந்துள்ளது இது அரிதான ஒன்று என மருத்துவர் நிம்மி தெரிவித்துள்ளார்.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை எல்லைக்குட்பட்ட முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை வாய்ப்பை வழங்கும் முகமாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைனால் 17.08.2025 ஆம் திகதியிலிருந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் வாராந்த சந்தை ஒன்றினை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் பாலகிருஸ்ணன் பாலேந்திரன் அறிவித்துள்ளார்.
“இச்சந்தையில் எமது பிரதேச முயற்சியாளர்களின் விவசாயத்துறை, கைத்தொழிற்துறைசார் உற்பத்திப்பொருட்களை வாராந்தம் விற்பனை செய்யமுடியும் எனவும்,
இதனூடாக உற்பத்தியாளர்களின் இடைத்தரகர்களுக்கான செலவீனம் குறைக்கப்படுவதுடன் எதிர்காலத்தில் நுகர்வோரின் தேவைக்கேற்றவாறு உற்பத்தி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு அவர்கள் தமது பொருளாதாரத்தில் முன்னேற்றமடைவதுடன் ஏனையவர்களுக்கும் வேலைவாய்ப்பை வழங்க முடியும்” எனவும் தவிசாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தை பின்பற்றி பயன்பெற விரும்பும் முயற்சியாளர்கள், “வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, நேரியகுளம் வீதி, நெளுக்குளம், வவுனியா” எனும் அலுவலக முகவரிக்கு நேரடியாக தொடர்பு கொண்டு அல்லது அலுவலக நேரத்தில் 024 2225737 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தமது முன்பதிவுகளை மேற்கொள்வதுடன் மேலதிக விபரங்களையும் பெற்றுக்கொள்ள முடியும் என தவிசாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பதினெட்டாம் திகதி இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்ட ஹர்த்தால் தொடர்பில் வவுனியா வர்த்தகர் சங்கம் எடுத்த தீர்மானத்தில் எந்தவித மாற்றமும் வராது என வவுனியா வர்த்தகர் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
வவுனியா வர்த்தகர் சங்கம் ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவிக்காது எனவும் கடைகள் வழமை போன்று திறக்கும் எனவும் வர்த்தகர் சங்க நிர்வாக கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் சிலர் வர்த்தக சங்கம் மீளவும் ஆராய்ந்து முடிவை மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் வர்த்தகர் சங்கத்தின் தலைவரிடம் கேட்டபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
வர்த்தகர் சங்க நிர்வாக சபை கூடி ஒரு முடிவினை எடுத்து அறிவித்துள்ளது. அதில் எந்தவித மாற்றத்திற்கும் இனி இடம் இருக்காது. ஹர்த்தாலுக்கு நாம் ஆதரவு தெரிவிக்க போவதில்லை. இது வர்த்தகர்களுடைய கருத்துக்களின் பிரகாரம் எடுக்கப்பட்ட முடிவுவாக காணப்படுகிறது.
ஆகவே எவர் எவ்வாறான கருத்துக்களை பரிமாறினாலும் எமது தீர்மானத்தில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. நாம் ஆராய்ந்து இந்த தீர்மானங்களை எடுத்து வெளியிட்டுள்ளோம் எனவும் தெரிவித்தார்.
எதிர்வரும் திங்கட்கிழமை அனுஸ்டிக்கப்படவுள்ள பொதுமுடக்கத்திற்கு வடகிழக்கு மக்கள் பூரண ஆதரவினை வழங்க வேண்டும் என்று முன்னாள் வடக்குமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள ஊடக குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..
போர் முடிவுற்று 16 வருடங்கள் கடந்த போதும் வடகிழக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்படவில்லை. அவர்களின் பிரச்சன்னமும் குறைக்கப்படவில்லை. மாறாக பொதுமக்களின் காணிகளை கபளீகரம் செய்த அவர்கள் அங்கு நிலையான இராணுவ கட்டுமானங்களை அமைத்தனர்.
அந்தகாலம் தொட்டு தமிழ்மக்களின் அன்றாட வாழ்வில் இராணுவத்தின் தலையீடனாது பல்வேறு பாதிப்புக்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றது. அவ்வாறான ஒரு சம்பவமே கடந்தவாரம் முல்லைத்தீவு முத்தையன் கட்டுபகுதியிலும் இடம்பெற்றுள்ளது.
தமிழர்தாயக பகுதிகளில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றி மக்களின் சுதந்திரமான வாழ்வுரிமையை உறுதிப்படுத்தவேண்டிய நிலைமையை ஆட்சிக்குவந்த பேரினவாத அரசுகள் சிறிதளவேனும் செய்யவில்லை.
தொடர்ச்சியாக அதிகாரவர்க்கமானது தமிழ்மக்களை அடிமை மனோநிலையில் நடாத்துகின்ற இந்த நிலைக்கு வடகிழக்கு மக்கள் தமது பூரண எதிர்ப்பை காட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
அந்தவகையில் தமிழர்தாயக பகுதிகளில் இடம்பெறும் அதிகாரவர்க்கத்தின் எதேச்சியதிகாரப்போக்கிற்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை(18) அனுஸ்டிக்கப்படவுள்ள பொதுமுடக்கத்திற்கு வடகிழக்கு தமிழ்மக்கள், தங்களது பூரண ஒத்துழைப்பை நல்கி சர்வதேச சமூகத்திற்கும்,அரசுக்கும் எமது நிலைப்பாட்டை உறுதிபடவெளிப்படுத்த வேண்டும் என்று குறித்த அறிக்கையில் உள்ளது.
மன்னார் மடு தேவாலயத்தின் ஆவணித் திருவிழா திருப்பலி இடம்பெற்றிருந்த நிலையில் அதில் கலந்து கொண்டுவிட்டு யாழ் – மன்னார் வீதியூடாக யாழைச் சேர்ந்த பக்தர்கள் பேரூந்து ஒன்றில்,
யாழுக்கு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் அதே வழித்தடத்தில் யாழிலிருந்து மன்னார் நோக்கிப் பயணித்த டிப்பர் ரக வாகனமும் மன்னார் இலுப்பைக்கடவை பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதியதில்,
பேரூந்தின் சாரதி பலத்த காயத்துடன் பள்ளமடு வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் விராலிமலை முருகன் கோவில் ராஜகோபுரத்தில் உச்சியில் தேசியக் கொடியுடன் போராட்டம் நடத்திய நபர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
தமிழ்நாட்டின், புதுக்கோட்டை விராலிமலை அருகே உள்ள கொடும்பலூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம், சமூக ஆர்வலரான இவர் விராலிமலை முருகன் கோவிலுக்கு சொந்தமான மலையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி விராலிமலை செல்போன் கோபுரத்தில் ஏறி கடந்த ஆண்டு போராட்டம் நடத்தினார்.
அப்போது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அவரை சமாதானம் செய்தனர். இந்த நிலையில் இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தின நாளான வெள்ளிக்கிழமை (15) காலை சுமார் 5 மணி அளவில் விராலிமலை முருகன் கோவில் ராஜகோபுரத்தில் உச்சியில் அவர் தேசியக் கொடியுடன் திடீரென்று ஏறினார்.
கோவில் நில ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். கலெக்டர் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று கூறி கோஷம் எழுப்பியவாறு அங்கு நின்றவாறு போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவல் அறிந்த விராலிமலை வட்டாட்சியர் ரமேஷ், கோவில் செயல் அலுவலர் சுதா, விராலி மலை காவல் ஆய்வாளர் லதா, இலுப்பூர் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை அலுவலர்கள் தொடர்ந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தீயணைப்புத் துறையினர் மாற்றுத்திறனாளி ஆறுமுகத்தை மீட்க கோவில் கோபுரம் மீது ஏறியபோது தானே வருவதாக கூறி உள்ளார். இதையடுத்து இறங்க முற்பட்டபோது தவறி விழுந்த அவர் உயிரிழந்தார்.
கோவில் கோபுரத்தில் இருந்து இறங்கியபோது மாற்றுத்திறனாளி ஆறுமுகம் தவறி விழுந்து உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ராவணன் அருவி அருகே முச்சக்கர வண்டியும், சிறிய ரக வேன் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
எல்ல – வெல்லவாய பிரதான வீதியில், ராவணன் நீர்வீழ்ச்சிக்கு மேலே உள்ள பகுதியில், முச்சக்கர வண்டியும் சொகுசு சிறிய ரக வேனும் மோதியதில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் தெமோதரை மற்றும் பண்டாரவளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் பதுளை பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பதுளை – மகியங்கனை வீதியில் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (15) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளையிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த சொகுசு பஸ் ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தின் போது சொகுசு பஸ்ஸில் பயணித்த 7 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா வேப்பங்குளம் காளி கோவிலில்இருந்து நல்லூர் கந்தசாமி கோவிலை நோக்கி பாதயாத்திரை நேற்று (14.08.2025)ஆரம்பமானது.
வருடாந்தம் நல்லூர் உற்சவ காலத்தில் குறித்த பாதயாத்திரையானது ஆலயத்தின் தர்மகர்த்தா சாமி அம்மா தலைமையில் இடம்பெற்று வருகின்றது.
இந்தநிலையில், நேற்று ஆரம்பமான பாதயாத்திரை நல்லூர் கந்தசாமி கோவிலின் தேர் திருவிழா அன்று நல்லூரை சென்றடையும்.
இதனையடுத்து, நேற்று காலை கோவிலில் விசேட பூஜைகள் இடம் பெற்றதன் பின்னர் பக்தர்கள் புடைசூழ வவுனியாவில் உள்ள பல்வேறு ஆலயங்களையும் தரிசித்து பாதயாத்திரை ஆரம்பமாகியது.
பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று நாயுடன் மோதியதில் காயமடைந்த ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.
நேற்று அதிகாலை 2.15 மணியளவில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் மீகஹகிவுல பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பதுலுஓயா, பகுதியை சேர்ந்த 26 வயதுடைய மிலிந்த மதுமல் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது. மீகஹகிவுல பகுதியில் இருந்து கரமெட்டியவில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பி கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.
விபத்தில் காயமடைந்த இளைஞர் மீகஹகிவுல பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
விபத்து நடந்த இடத்திலேயே நாயும் உயிரிழந்ததாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். மோட்டார் சைக்கிள் சிறிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
விபத்து குறித்து கந்தகெட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.