“சுகாதாரத் தரப்பினர் வழங்கும் ஆலோசனைகளின்படி பொதுமக்கள் செயற்படுவார்களாயின், இம்மாத இறுதிக்குள் கொரோனா பரவலை முற்றாகத் தடுக்கலாம்.
அத்துடன் பிரதேச ரீதியில் தனிமைப்படுத்தல் நிலையங்களை உருவாக்குமாறு ஆலோசனையும் அரசுக்கு வழங்கியுள்ளோம்.”
இவ்வாறு இலங்கைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும்போது, அதற்கான வசதிகள் சில வீடுகளில் இல்லாதுள்ளதால், அந்த வீடுகளிலுள்ள ஏனையோருக்கும் சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது என்று இலங்கைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் சுக்காட்டியுள்ளது.
பிரதேச ரீதியில் தனிமைப்படுத்தல் நிலையங்களை உருவாக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ள அந்தச் சங்கம், இதனூடாக, வீடுகளிலுள்ள ஏனையவர்களுக்கும் தொற்று ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.
சுகாதாரத் தரப்பினர் வழங்கும் ஆலோசனைகளின்படி பொதுமக்கள் செயற்படுவார்களாயின், இம்மாத இறுதிக்குள் கொரோனாப் பரவலை முற்றாகத் தடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – நெடுந்தீவை சேர்ந்த பாலச்சந்திரன் கமலாம்பிகை என்பவரே நேற்று உயிரிழந்துள்ளார்.
இவர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னாள் உள்துறை அமைச்சரும், சபாநாயகரும், உறுப்பினருமாகிய பாலச்சந்திரன் நாகலிங்கத்தின் துணைவியாராகும்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில், தற்போது 16 லட்சம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 95 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
பிரான்சில் இதுவரையில், 117,749 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 12,210 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் நிலவும் காலநிலை காரணமாக கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றிடம் இருந்து இலங்கையை காப்பாற்ற காலநிலையும் ஒரு முக்கிய காரணமாகியுள்ளதாக அவுஸ்திரேலிய ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சமகாலத்தில் இலங்கையில் நிலவும் அதிக வெப்ப நிலை மற்றும் காற்றில் அதிக ஈரப்பதம் காரணமாக கொரோனா வைரஸ் பரவலின் அளவை கட்டுப்படுத்த முடிந்துள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இலங்கை குடும்ப உறுப்பினர்களுக்கு இடையில் வைரஸ் பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதென இந்த ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் அதிகாரிகள் வைரஸ் பரவலை தடுப்பது குறித்து தீவிர அவதானம் செலுத்த வேண்டும் என மெல்பேர்னை அடிப்படையாக கொண்ட ஆய்வாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பதுங்கியிருந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் 49 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
24 மணி நேரத்தில் பொலிஸார் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கை மூலம் இவர்கள் சிக்கியதாக பொலிஸ் தலைமையகத்தின் விசேட பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
49 பேரும் கடந்த மார்ச் மாதத்தில் இலங்கைக்கு வந்த நிலையில் மறைந்திருந்ததாக தகவல் கிடைத்தது. இதற்கமைய பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன வழங்கிய உத்தரவிற்கமைய இந்த நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
இந்த 49 பேரின் பெயர் பட்டியலில் அதிகளவானோர் மாத்தளையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அந்த பிரதேசத்தில் இருந்து 10 பேர் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நபர்களில் 15 பேர் கட்டார் நாட்டிலும் மேலும் 15 பேர் இந்தோனிஷியாவிலும், 4 பேர் ஜோர்தான் நாட்டிலும், 8 பேர் சோமாலியா நாட்டிலும் 4 பேர் இந்தியாவில் இருந்தும் வந்துள்ளனர்.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டவர்களில் அம்பாறை, அக்கரைப்பற்று பிரதேசத்தில் ஒருவரும், களுத்துறை பேருவளை பிரதேசத்தில் ஒருவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார பிரிவு இதுவரையில் உறுதி செய்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட தேவிபுரம் சந்திக்கு அண்மையில் உள்ள பாற்சாலை மதில் இடிந்து விழுந்துள்ளது.
இதன் போது இளைஞன் ஒருவர் பால் கொள்வனவு செய்துவிட்டு மதில் மீது ஏறி வெளியேற முற்பட்டபோது மதில் உடைந்து வீழ்ந்துள்ளது. ஊரடங்கு சட்டம் என்பதால் மக்கள் நடமாட்டம் எதுவும் இல்லாததால் குறித்த இளைஞர் நீண்ட நேரமாக இரத்தம் வெளியேறியதாலேயே உயிரிழந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
பல மணி நேரத்தின் பின்னரேயே அவர் அவதானிக்கப்பட்டு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது. சம்பவத்தில் உயிரிழந்தவர் புளியங்குளம்,ஓட்சுட்டான் பகுதியைச் சேர்ந்த சவுந்தரராஜா சயனந்தன் (வயது 23) என்று தெரிவிக்கப்படுகிறது.
சிலாபம், முந்தல், புளிச்சக்குளம் சமூர்த்தி சங்கத்தின் நிர்வாக சபையின் செயலாளரின் காதை கடித்தை ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக உடப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 52 வயதான நபரே இவ்வாறு இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூர்த்தி உதவி தொகையை பெற்றுக்கொள்வது தொடர்பாக புளிச்சகுளம் சமூர்த்தி வங்கி முகாமையாளர் மற்றும் சங்கத்தின் நிர்வாக சபை செயலாளர் ஆகியோருடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால், பணத்தை பெற்றுக்கொள்ள வந்த நபர், சங்கத்தின் செயலாளரது காதை கடித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் நாளை சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாக உடப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளன.
இதன் காரணமாக வறுமை கோட்டின் கீழ் வாழும் சமூர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கம் நிதியுதவியை வழங்கி வருகிறமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தொற்றியவர்கள் வெளிநாடுகளில் இருந்து படகுகள் மூலம் இரகசியமாக இலங்கைக்குள் பிரவேசிக்கும் ஆபத்து இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாக சந்தேகத்திற்குரிய படகுகள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கும் நோக்கில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரையான கடற்பிராந்தியத்தை அடிப்படையாக கொண்டு விமானப்படையினர் வான்வழி சோதனைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவ்விதமாக இந்தியாவில் இருந்து கொரோனா நோயாளிகள் வரும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக புலனாய்வுப் பிரிவினர் கூறியுள்ளனர்.
அதேவேளை கடற்படையினர் நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்பின் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதுடன் கண்காணிப்புகளையும் அதிகரித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்கா மற்றும் முக்கியமான சில ஐரோப்பிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்படடுள்ளமை வேர்ல்ட் மீற்றர் இன்ஃபே இணையத்தளத்தின் புள்ளி விபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்க தற்போது மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 4 லட்சத்து 35 ஆயிரத்து 160 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக அங்கு இதுவரை 14 ஆயிரத்து 797 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினத்தில் மாத்திரம் அமெரிக்காவில் ஆயிரத்து 940 பேர் உயிரிழந்ததுடன் கொரோனா வைரஸ் தொற்றிய 31 ஆயிரத்து 935 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டனர்.
ஐரோப்பிய நாடுகளான ஸ்பெய்ன், இத்தாலி, ஜேர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகளும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. ஸ்பெய்னில் ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 220 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதுடன் அங்கு 14 ஆயிரத்து 792 பேர் இறந்துள்ளனர்.
இத்தாலியில் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 422 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் அங்கு 17 ஆயிரத்து 669 பேர் உயிரிழந்துள்ளனர். ஜேர்மனியில் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 286 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதுடன் அவர்களில் 2 ஆயிரத்து 349 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரான்சில் ஒரு லட்சத்து 12 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதுடன் அங்கு 10 ஆயிரத்து 869 பேர் இறந்துள்ளனர். பிரித்தானியாவில் 60 ஆயிரத்து 733 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதுடன் அங்கு 7 ஆயிரத்து 97 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த சீனாவில் கொரோனா காரணமாக இரண்டு பேர் புதிதாக இறந்துள்ளனர். சீனாவில் மொத்தமாக 81 ஆயிரத்து 802 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் அவர்களில் 3 ஆயிரத்து 333 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். புதிதாக அந்த நாட்டில் 62 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் 15 லட்சத்து 19 ஆயிரத்து 571 கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 88 ஆயிரத்து 550 பேர் உயிரிழந்துள்ளனர். 3 லட்சத்து 31 ஆயிரத்து 11 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இதனை தவிர ஈரானில் 64 ஆயிரத்து 586 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதுடன் அங்கு 3 ஆயிரத்து 993 பேர் உயிரிழந்துள்ளனர்.
எது எப்படி இருந்த போதிலும் கொரோனா வைரஸ் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலேயே அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக இறந்தவர்களில் 79 வீதமானவர்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் என்பது இங்கு முக்கியமானது.
மன்னார் – மதவாச்சி பிரதான வீதியின், பரப்பாங்கண்டன் பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் பெண்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மன்னாரில் இருந்து சென்ற மோட்டார்சைக்கிளும், முருங்கன் பிரதான வீதியூடாக மன்னார் நோக்கி வந்த பிக்கப் ரக வாகனமும் மோதியதில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
சம்பவத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்த குறித்த இரு பெண்களுமே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த இரு பெண்களும் உடன் பிறந்த சகோதரிகளான மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் சந்தியோகு லிண்டா, மன்னார் அஞ்சல் அலுவலகத்தில் கடமையாற்றும் சந்தியோகு டெரன்சி என தெரியவருகிறது.
குறித்த இருவரும் கடமை முடிந்த நிலையில் மன்னாரில் இருந்து கட்டை அடம்பன் பகுதியில் உள்ள அவர்களுடைய வீட்டிற்கு மோட்டார்சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த போதே விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த குறித்த இரு பெண்களினதும் சடலம் மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் குறித்த பிக்கப் ரக வாகனத்தின் சாரதி முருங்கன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை உயிழங்குளம் மற்றும் மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மின் பாவனையாளர்கள் தமது மின் கட்டணத்தைச் செலுத்த வேண்டிய சலுகைக் காலம் ஏப்ரல் 30ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நாட்டில் கோரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசால் முன்னெடுக்கப்பட்டுள்ள கட்டுபாடுகளைத் தொடர்ந்து பெப்ரவரி மாத மின் கண்டனத்தைச் செலுத்த மார்ச் 31ஆம் திகதிவரை சலுகைக் காலம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் சலுகைக்காலம் ஏப்ரல் 30ஆம் திகதிவரை நீடிக்கபட்டுள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் மகிந்த அமரவீர அறிவித்துள்ளார்.
இதன்மூலம் மின்பட்டியலை குறிப்பிட்ட தவணைக்குள் செலுத்தாவிடின் மின் பட்டியலில் சேர்க்கப்படும் வட்டி அறவீடு மற்றும் மின் துண்டிப்பு என்பன இந்தக் காலப்பகுதிக்குள் இடம்பெறாது என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியா நெடுங்கேணிபகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்று (09.04.2020) காலை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் அதிரடியாக செயற்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2000 கிலோ அரிசியினை மீட்டெடுத்துள்ளனர்.
அரசாங்கத்தின் உத்தரவாத விலையையும் விட கூடுதலான விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை சோதனைக்குட்படுத்தும் நடவடிக்கையில் வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதியில் வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது நெடுங்கேணிபகுதியில் அமைந்துள்ள ஓர் வர்த்தக நிலையத்தினுள் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட சமயத்தில் 10 கிலோ அரிசி 200 மூடை (உற்பத்தி திகதி, காலாவதி திகதி, நிறுவனத்தின் பெயர், விலை என்பன முற்றிலும் இல்லாமல்), 1 கிலோ மிளகாய் தூள் 18 பக்கட் (உற்பத்தி திகதி, காலாவதி திகதி, நிறுவனத்தின் பெயர், விலை என்பன முற்றிலும் இல்லாமல்) பதுக்கி வைக்கப்பட்ட நிலையில் குறித்த வர்த்தக நிலையத்திலிருந்து கைப்பற்றியுள்ளனர்.
இதன் போது குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் சோதனையில் ஈடுபட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகளை தரங்குறைவான வார்த்தைப்பிரயோகங்களினால் பேசியதுடன் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர்.
அதன் பின்னர் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியதினையடுத்து பொலிஸாரின் உத்தரவின் பேரில் வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் அழைத்து வரப்பட்டதுடன் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரினால் வர்த்தக நிலைய உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
10 கிலோஅரிசி 25 மூடை (250KG) மற்றும் 1 கிலோ மிளகாய் தூள் 18 பைக்கட் (18KG) ஆகியவற்றினை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்காக எடுத்துச் சென்றதுடன் மிகுதி 10கிலோ அரிசி 175 மூடைகளை மக்களுக்கு கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்யுமாறு தெரிவித்து வழங்கி வந்தனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரனா தொற்றையடுத்து அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் வவுனியா மாவட்டத்தில் 10 மணிநேரம் தளர்த்தப்பட்ட நிலையில் மக்களின் நலனில் கருத்தில் கொண்டு வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரின் இச் செயற்பாடு மக்கள் மத்தியில் பாரிய வரவேற்பினை பெற்றுள்ளது.
உலகளாவிய ரீதியில் பல நாடுகள் கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக போராடி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை பெற்றுள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் நோயாளிகளை விரைவாக காப்பாற்றும் நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாமிடத்தில் உள்ளனது.
அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற வல்லரசு நாடுகள் கொரோனாவுக்கு எதிராக போராடும் நிலையில் இலங்கை வலுவாக உள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. கொரோனா நோயாளர்களை விரைவாக காப்பாற்றும் பட்டியலில் ஜேர்மன் முன்னிலையில் உள்ளது. அதற்கமைய ஜேர்மனியில் 33 வீத நோயாளர்கள் காப்பாற்றப்படுகின்றனர்.
இந்த பட்டியலில் அடுத்த நிலையிலுள்ள ஸ்பெயினில் 32.74 வீதமான நோயாளிகள் காப்பாற்றப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது. மூன்றாம் நிலையிலுள்ள இலங்கையில் 23.28 வீதமான நோயாளிகள் காப்பாற்றப்படுவதாக புதிய புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் இன்றுவரையில் 189 பேர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 47 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த பட்டியலில் இத்தாலி, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் முறையே அடுத்த நிலைகளை வகிக்கின்றன.
இலங்கையில் கொரோனா வைரஸின் மூன்றாம் கட்ட விரிவாக்கம் சமகாலத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 7ஆம் திகதி வரையில் சுமார் 350 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்படலாம் என சுகாதாரதுறை பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்திருந்தார்.
எனினும் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக அந்த எண்ணிக்கையில் அரைவாசி அளவான நோயாளர்களே இனங்காணப்பட்டுள்ளனர். கொரோனா பரவலுக்கு எதிராக அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து மக்கள் மன நிம்மதி அடைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
அடுத்த இரண்டு வாரங்களில் நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை தவிர்க்க முடியாது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
வைரஸ் தொற்றியவர்களை அடையாளம் காண பரிசோதனைகளை அதிகரிக்குமாறு வழங்கப்பட்ட ஆலோசனையை கவனத்தில் கொள்ளாது சுகாதார அமைச்சு செயற்பட்டுள்ளதால்,
கொரோனா வைரஸ் நான்காம் கட்டத்திற்கு வந்து முழு சமூகத்திற்குள்ளும் பரவும் ஆபத்து இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ஹரித்த அளுத்கே தெரிவித்துள்ளார்.
நாட்டில் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்ட போது, எதிர்காலத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்பதால், பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என சுட்டிக்காட்டிய போதிலும் அதிகாரிகள் அது குறித்து அக்கறை காட்டவில்லை என்பதால்,
கொரோனா வைரஸ் பயங்கரமான வகையில் சமூகத்தை பாதிக்கும் ஆபத்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றியவர்களை அடையாளம் காண தினமும் ஆயிரத்து 500 பரிசோதனைகளை நடத்த வேண்டும்.
எனினும் தற்போது தினமும் சுமார் 300 பரிசோதனைகளே நடத்தப்பட்டு வருவதாகவும் அளுத்கே மேலும் தெரிவித்துள்ளார்.
நாடாளவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் வெளியில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அத்தியாவசிய கடமைகளில் ஈடுபடும் பொது மற்றும் தனியார் துறைகளின் ஊழியர்களுக்கு அவர்களின் உத்தியோகபூர்வ அடையாள அட்டையுடன் மேலதிகமாக பணியிடத் தலைவரின் கடிதமும் வைத்திருக்க வேண்டுமென பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்த புதிய நடைமுறை நாளை முதல் நடைமுறைக்கு வரும். இது வைத்தியர்கள் மற்றும் ஊடகத் துறையினருக்கு பொருந்தாது என்று தெரிவித்தார்.
அத்தியாவசிய கடமைகளில் ஈடுபடும் பொது மற்றும் தனியார் துறையின் உறுப்பினர்களுக்கும் அவர்களின் தேசிய அடையாள அட்டையுடன் இந்த சேவை கடிதம் கட்டாயமானது என்று தெரிவித்தார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் ஒரு சில தரப்பினர் சட்டத்தையும் மீறி வெளியில் செல்வதால் இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.