தாய் நாட்டுக்கு வைரஸ் பரவி விடும் என்பதால் வரவில்லை : வெளிநாடு வாழ் இலங்கையர்கள்!!

இலங்கையர்கள்

கொரோனா வைரஸ் தற்போது 170நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. இந்நாடுகளில் பல நாடுகள் சர்வதேச ரீதியாக மூடப்பட்டுள்ளதுடன் விமான பயணங்களும் துண்டிக்கப்பட்டுள்ளன.

இலங்கையர்கள் பலர் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். கல்வி, தொழில் அல்லது வேறு காரணங்களுக்காக இவர்கள் இந்த நாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர்.

குறைந்தது 26 லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவி வரும் ஐரோப்பிய நாடுகளான அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெய்ன், பிரித்தானியா, பிரான்ஸ் உட்பட பல நாடுகளில் இலங்கையர்கள் வசித்து வருகின்றனர்.

இலங்கையர்கள் தமது தாய் நாடு அல்லாத வேறு நாடுகளில் இருந்து கொண்டு கொரோனா வைரஸ் நிலைமையை எதிர்கொள்வது உலகம் முழுவதும் வாழும் இலங்கையர்கள் எதிர்நோக்கும் உணர்ச்சிபூர்வமான நிலைமையாகும்.

தாம் ஊடாக தாய் நாட்டுக்கு கொரோனா வைரஸ் பரவி விடும் என்ற காரணத்தினால் தாம் இலங்கைக்கு செல்லவில்லை என வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவி வருவது காரணமாக பல நாடுகள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை எடுத்து பணிகளை முடக்கியுள்ளதால், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தமது வீடுகளுக்குள் இருக்கின்றனர்.

தீர்மானமிக்க நாட்களில் பயணிக்கும் இலங்கை : வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!!

கொரோனா..

இலங்கையில் கடந்த நாட்களாக கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை பாரியளவு அதிகரித்துள்ளதாக இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் இலங்கை தீர்மானமிக்க நாட்களில் பயணிப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலைமையை கட்டுப்படுத்த கூடிய விரைவில் நோயாளிகளை அடையாளம் காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சங்கத்தின் ஊடக பேச்சாளர் வைத்தியர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.

அதற்கமைய சந்தேகத்திற்குரிய நோயாளிகளை விரைவில் சோதனையிடுவதற்கு சுகாதார பிரிவு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவது தொடர்பில் தங்கள் சங்கம் இதற்கு முன்னர் மேற்கொண்ட கணிப்பு தற்போது உண்மையாகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இதுவரை 151 கொரோனா நோயாளர்கள் இனங்கண்டுள்ள நிலையில், 4 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனாவைக் கட்டுப்படுத்த இலங்கைக்கு நிதி வழங்க உலக வங்கி இணக்கம்!!

உலக வங்கி..

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மனிதர்களிடையே பரவி, தொற்றி, உயிரிழப்புக்களை சந்தித்துக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரம்பலைக் கட்டுப்படுத்த போராடிக் கொண்டிருக்கும் இலங்கைக்கும் 128.60 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை உலக வங்கி வழங்குகிறது.

இலங்கை கோவிட் -19 அவசரகால வெளிப்பாடு மற்றும் சுகாதார அமைப்புகள் தயார்நிலை திட்டத்தின் கீழ் இந்த நிதியை கடனாக வழங்க உலக வங்கியின் பணிப்பாளர் சபையால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

கோரவிட் -19 நோய் தொற்றை கண்டறிதல், கட்டுப்படுத்தல் மற்றும் பொதுச் சுகாதார சேவையை மேம்படுத்தல் ஆகிய தேவைகளுக்கு இந்த நிதியைப் பயன்படுத்த உலக வங்கி அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இதுபோன்று இந்தியாவுக்கும் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உலக வங்கி ஒப்புக்கொண்டுள்ளது. நோயாளிகளை கண்டறிதல், தனி படுக்கை வசதிகளை உருவாக்குதல், கொரோனா குறித்த ஆய்வு மற்றும் மருத்துவ கருவிகளை வாங்குவதற்கு இந்த நிதி உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரொனா வைரஸால் உயிரிழந்தவர்கள் தொடர்பில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவல்!!

கொரோனா வைரஸ்..

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்றுவரை உலகளாவிய ரீதியில் பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புக்களை நாளாந்தம் ஏற்படுத்தி வருகின்றது. இருப்பினும் ஐரோப்பிய நாடுகளிலேயே கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. உலகளாவிய மொத்த உயிரிழப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு ஐரோப்பாவில் நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில், ஐரோப்பாவில் உள்ள உலக சுகாதார அமைப்பு அலுவலகத்தின் தலைவர் டாக்டா ஹன்ஸ் க்ளுஜ், கோபன்ஹேகன் நகரில் நேற்று நடந்த ஊடக சந்திப்பில் காணொளி காட்சி மூலம் பேசினார்.

“கொரோனா வைரசுக்கு ஐரோப்பாவில் 35 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி இருப்பதாகவும், 5 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு புள்ளிவிவரத்தில், ஐரோப்பாவில் பலியானோரில் 95 சதவீதத்துக்கு மேற்பட்டோர் 60 வயதை கடந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இவர்களில் பாதிக்கு மேற்பட்டோர் 80 வயதை தாண்டியவர்கள்.

அதற்காக கொரோனா தாக்குவதற்கு வயது மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. வயதானவர்களை மட்டுமே கொரோனா தாக்கும் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. அது தவறானது.

ஐரோப்பாவில், 50 வயதுக்கு உட்பட்ட கொரோனா நோயாளிகளில் 10 முதல் 15 சதவீதம் பேருக்கு மிதமான அல்லது கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வளர் இளம் பருவத்தினர் மற்றும் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களும் தீவிர கண்காணிப்பு தேவைப்படும் அளவுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் உயிரிழந்துள்ளனர்.

அதே சமயத்தில், நூறு வயதை தாண்டிய ஒரு சிலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்திருப்பது நல்ல அம்சம் ஆகும் என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 950 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பதால், சாவு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது. பலி எண்ணிக்கையில், இத்தாலிக்கு அடுத்த இடத்தில் ஸ்பெயின் இருக்கிறது.

பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 10 ஆயிரத்தை தாண்டி விட்டது. அதுபோல், இத்தாலியில், பலியானோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியது. உலக அளவில் கொரோனாவுக்கு இறந்தவர்கள் எண்ணிக்கை 54 ஆயிரத்தை எட்டியது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டி வந்துள்ளது.

முதலை கடித்து சிறுவன் பலி!!

முதலை கடித்து..

வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புணாணை, மைலந்தனை பிரதேசத்தில் முதலை கடித்த நிலையில் சிறுவன் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக ஊடரங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்ட நிலையில் உணவுக்காக மைலந்தனை பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத நிலையில் சிறுவனை முதலை கடித்து இழுத்து சென்றதாக இவருடன் மீன்பிடிக்க சென்ற நண்பர்கள் தெரிவித்தனர்.

புணாணை, மைலந்தனை பகுதியைச் சேர்ந்த தியாகராஜா கஜேந்திரன் என்ற 15 வயதுடைய சிறுவனே இவ்வாறு முதலை கடித்து மரணமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் மருத்துவ பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் தற்போதைய நிலையில் எவரையும் நம்ப வேண்டாம் : ஜனாதிபதி விசேட அறிவித்தல்!!

ஜனாதிபதி விசேட அறிவித்தல்

நாட்டின் தற்போதைய அவசகால நிலையில், தன்னால் கூறப்பட்டதாக போலியான பல தகவல்கள் சில இணையத்தளங்களிலும், தொலைபேசி வாயிலாகவும், ஏனை சமூக ஊடகங்கள் வாயிலாகவும், பரப்பப்படுகின்றன.

இந்த நடவடிக்கை தவறான கருத்துக்களை சமூகத்தினரிடையே கொண்டு செல்வதனால் மக்கள் ஏமாற்றம் அல்லது விரக்தி அடைய கூடும்.

எனது அதிகாரபூர்வ அறிவிப்புக்கள் மற்றும் அறிக்கைகள் என்பன உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களின் பக்கங்கள் வாயிலாக மாத்திரமே பகிரப்படும் என்பதனை அறியத்தருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

எனவே தனிநபர்களால் தெரிவிக்கப்படும் தகவல்கள் மற்றும் அச்சுறுத்தலான விடயங்களை நம்ப வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சம் : மருந்தகங்கள் திறக்கப்படும் என்று அறிவித்தும் வெளியே வராத மக்கள்!!

கொரோனா வைரஸ்

நாட்டில் தொடர்ச்சியான கொரோனா வைரஸ் நோயாளர்கள் அடையாளம் கண்டுவருகின்ற நிலையில் அச்சம் மக்களிடையே அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சமூக இடைவெளிக்கு மக்கள் அதீத முக்கியத்துவம் கொடுத்து வருவதை அவதானிக்க முடிகிறது.

அந்த வகையில் கண்டி நகரில் நேற்று அத்தியாவசிய தேவைக்காக பொலிஸாரின் அனுமதிப் பெற்று நகரிற்குள் வந்த சிலர் சமூக இடைவெளியை பேணியுள்ளனர். இதேவேளை கண்டி நகரம் நேற்றும் வெறிச்சோடியது.

ஊரடங்குச் சட்டம் கண்டி மாவட்டத்திற்கும் அடுத்த அறிவிப்புவரை நீடிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பாக எப்போதும் காணப்படும் கண்டி நகரம், வர்த்தக நிலையங்கள், ஸ்ரீ தலதா மாளிகை, அஸ்கிரிய மற்றும் மல்வத்துப்பீட நுழைவாயில்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

வெளிநாடு ஒன்றில் இலங்கை பெண் உட்பட நால்வர் பலி!!

நால்வர் பலி

கட்டார் நாட்டில் இடம்பெற்ற தீ விபத்தில் இலங்கை பெண் ஒருவர் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் 30ஆம் திகதி இடம்பெற்ற தீ விபத்தில் இலங்கை பணி பெண் ஒருவரும் பிலிப்பைன்ஸ் பெண்கள் மூவரும் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கட்டார் நாட்டில் Al Khor பகுதியில் உள்ள வீட்டில் ஒரே அறையில் வசித்து வந்த பணிப்பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த பெண்கள் சில காலங்களாக அங்கு பணி செய்து வந்துள்ளனர். குறித்த பணிகள் பெண்கள் வசிக்கும் வீட்டின் உரிமையாளரும் வீட்டவர்களும் தீவிபத்தில் இருந்து தப்பியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மின் கசிவினால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த தீவிபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

2 ஆயிரம் கொரோனா நோயாளர்களை எதிர்கொள்ள தயாராகும் இலங்கை!!

கொரோனா வைரஸ்..

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகும் 2000 நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளதாக சுகாதார சேவை பிரிவு தெரிவித்துள்ளது.

அடுத்து வரும் வாரங்களில் ஏற்படப் போகும் நிலைமையை கருத்திற் கொண்டு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தற்போதைய நோய் பரவலை கணக்கிட்டு இந்த எண்ணிக்கை மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஏப்ரல் மாதம் முதலாம் திகதி இலங்கையில் காணப்பட்ட நிலைமைக்கமைய ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி வரையில் நோயாளிகளின் எண்ணிக்கை 165 ஆக அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி அளவில் நோயாளிகளின் எண்ணிக்கை 340ஐ பதிவு செய்யும் என கணக்கிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆபத்தான நிலையில் இலங்கை? அமெரிக்கா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை!!

ஆபத்தான நிலையில் இலங்கை?

இலங்கையில் அடுத்த வாரத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் குறித்து அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் பிரசித்திபெற்ற ஆய்வுப் பல்கலைக்கழங்களில் ஒன்றான ஜோன்ஸ் ஹோப்கிங்ஸ் என்கிற பல்கலைக்கழகம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதன்படி, அடுத்தவாரத்தில் இலங்கையில் புதிதாக 244 கொரோனா வைரஸ் நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படலாம் என்கிற எதிர்வுகூறலை அந்த பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுதல் குறித்து கருத்து வெளியிட்டிருக்கும் அமெரிக்கப் ஜோன்ஸ் ஹோப்கிங்ஸ் பல்கலைக்கழகம்,

அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளை விடவும் ஆரம்ப 20 நாட்களில் இலங்கையில் தீவிரமாக வைரஸ் பரவியிருக்கின்றது. எனினும், தற்போது அமெரிக்காவின் நிலைமை படுமோசமாகிவிட்டது. அமெரிக்காவில் ஆரம்ப 20 நாட்களில் 20 பேரே கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டிருந்தனர்.

பிரித்தானியாவில் 9 நபர்கள் அடையாளம் காணப்பட்டனர். எனினும், இலங்கையில் கடந்த 20 நாட்களில் 150 பேர் இனங்காணப்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில், தற்போது 151 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 21 பேர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர். நால்வர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸில் பெரும் சோகம் : ஒரே நாளில் 1355 பேர் மரணம்!!

பிரான்ஸில்..

பிரான்ஸில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 355 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை வெளியான தகவலின் அடிப்படையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒருநாளில் உயிரிழந்தவர்களின் அதிகபடியாக எண்ணிக்கை இதுவென கவலை வெளியிடப்பட்டுள்ளது. நேற்றைய தினம் 509 மரணங்கள் பதிவான நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் அது மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

பிரான்ஸில் வைரஸ் தாக்கம் காரணமாக 59 ஆயிரத்து 105 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 12 ஆயிரத்து 400 பேர் பூரண குணமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 387. ஆபத்தான நிலையில் 6 ஆயிரத்து 399 பேர் உள்ளனர்.

இதேவேளை உலகளாவிய ரீதியில் 1 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா பரவலினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 52 ஆயிரத்து 982 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவக் காரணமாக இருந்தவர்கள் யார்? பொலிஸார் தகவல்!!

கொரோனா வைரஸ்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பெருமளவு பரவுவதற்கு 19 பேரே காரணமாக இருந்தார்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாது கொரோனா நோயாளியான சுற்றுலா வழிக்காட்டி மற்றும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட போதகர் உட்பட 19 பேரால் இந்த கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்த கொரோனா பரவல் காரணமாக 60 மற்றும் 70 வயதுடையவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் ஓய்வூதியம் பெற செல்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். ATM இயந்திரம் ஊடாக பணம் பெறுபவர்கள் பணம் பெற்ற பின்னர் கைகளை கழுவுதல் என்பது மிக முக்கியமாக விடயமாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் விசேட அறிவித்தல்!

வவுனியா மாவட்டத்தில் மரக்கறிகளை விற்பனை செய்ய முடியாத விவசாயிகளுக்கு விற்பனை தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் வீட்டில் உள்ள அனைவருக்கும் வீட்டுத் தோட்டம் செய்வதற்கான விதைகள் மற்றும் மரக்கறி கன்றுகளை மானிய விலை அடிப்படையில் வழங்கும் செயற்றிட்டங்களுக்கான அறிவிப்பு – 02.04.2020

வவுனியாவில் விவசாயிகள் தங்களது பொருட்களை விற்பனை செய்ய முடியாத நிலை காணப்படின் அவர்கள் எமது துரித எண் 0242225511 இனை அழைத்து (காலை 9 தொடக்கம் 4 மணிவரை) விபரங்களை வழங்கவும். மொத்த கொள்வனவாளர்களுடன் விற்பதற்கான இணைப்பை ஏற்படுத்தி தரப்படும்.

தற்போதைய நாட்டின் சூழ் நிலையினால் எல்லோரும் வீட்டில் உள்ளனர். எனவே வீட்டில் இருக்கும் இக் காலப்குதியில் வீட்டுத் தோட்டத்தினை அபிவிருத்தி செய்வும் முகமாகவும் எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் உணவுத் தட்டுப்பாட்டினை எதிர்கொள்ளும் முகமாவும் விவசாய அமைச்சினால் வீட்டுத் தோட்டத்தினை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கமநல அபிவிருத்தி திணைக்களம் மற்றும் விவசாய திணைக்களம் இணைந்து மேற்கொள்ளும் இச் செயற்றிட்டத்தில் வவுனியா மாவட்டத்தில் சுகாதார திணைக்களமும் இணைந்துள்ளனர்.

வீட்டுத் தோட்டத்திற்கான விதைகள் மற்றும் மரக்கறி கன்றுகளை மானிய அடிப்படையில் வழங்கும் செயற்பாடு எதிர்வரும் திங்கள்கிழமை 06.04.2020 தொடக்கம் ஆரம்பிக்கப்பட உள்ளது. வவுனியா நகர சபைக்குட்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகள் மற்றும் பிரதேச சபைக்குட்பட்ட மக்கள் அதிகம் வாழும் கிராமங்கள் முதற்கட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களுக்கு 0242221053 எனும் எண்ணை தொடர்பு கொள்ளவும்.

மாவட்ட உதவி ஆணையாளர், கமநல அபிவிருத்தி திணைக்களம், வவுனியா

இலங்கையில் நான்காவது கொரோனா நோயாளி மரணம் : மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை!!

நான்காவது கொரோனா நோயாளி

கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தால் விரைவாக சுகாதார பிரிவை தொடர்பு கொள்ளுமாறு சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கம் தெரிவித்துள்ளார்.

தாமதமாக சிகிச்சை பெற சென்றால் குறித்த நோயாளி ஆபத்தான நிலைமைக்கு முகம் கொடுக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுளள்ளார். கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் நேற்று ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளதாக பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று 58 வயதான நபர் உயிரிழந்திருந்தார். இவருக்கு வேறு நோய்கள் இருந்தமைக்கான சான்றுகள் இல்லை. கொரோனா வைரஸ் தொற்றியிருந்த போதும் தாமதாக சிகிச்சை பெற்றமையினாலேயே அவர் உயிரிழந்ததாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் தினக் கூலித் தொழிலாளர்களுக்கு V4U அமைப்பின் விசேட வேலைத்திட்டம்!

வவுனியா மாவட்டத்தில் உள்ள தினக் கூலித்தொழிலாளர்கள் வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியாது மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளனர். அத்துடன் எதிர்வரும் மாதங்களில் ஏற்பட இருக்கும் உணவு தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் முகமாவும் வவுனியா மாவட்டத்தில் உள்ள தினக் கூலித்தொழிலாளர்கள் தங்களுடைய வீட்டில் இருந்து வருமானத்தை பெற்றுக்கொள்ள கூடிய சந்தர்ப்பம் ஒன்றினை V4U அமைப்பினர் (பொறியியலாளர்கள் மற்றும் வைத்தியர்களை உள்ளடக்கிய அமைப்பு) ஆரம்பித்துள்ளனர்.

தினக் கூலித்தொழிலாளர்கள் தங்களது வீட்டுடன் இருக்கும் காணிகளில் பயிர்செய்வதற்கு தேவையான விதைகளை அவர்கள் வழங்குவார்கள். அத்துடன் ஒரு நாளைக்கு 500 ரூபா அடிப்படையில் வாரத்துக்கு 4 நாட்கள் எனும் ரீதியில் 2 வாரத்துக்கு உங்களுடைய காணிகளில் நீங்கள் பயிர்செய்வதற்கு உங்களுக்கு சம்பளம் தருவார்கள்.

இரண்டாம் வாரமளவில் அவர்களுடைய தன்னார்வ தொண்டர்கள் உங்களுடைய காணியினை பார்வையிட்டு நீங்கள் சிறப்பாக பயிர்செய்தால் உங்களுடைய அறுவடையினை விற்பனையின் போதான கொள்வனவு விலையில் கொள்வனவு செய்வதற்குரிய உத்தரவாதத்தினை தந்து உங்களுக்கு தேவையெனின் முற்பணத்தினையும் வழங்குவர். நீங்கள் சிறப்பாக பயிர் செய்யாது விடின் 2ஆம் வாரத்தின் பின்னர் எதனையும் வழங்க மாட்டார்கள்.

நேரடியாக அவர்களை(V4U) தொடர்பு கொள்ள 0776970294 எனும் இலக்கத்தை அழைக்கவும்.

அல்லது எமது துரித எண் 0242225511 அழைத்து தங்களை தகவல்களை வழங்க முடியும். இத் திட்டத்தில் இணைத்துக் கொள்வதற்காக தகவல்கள் V4U அமைப்பினருக்கு வழங்கப்படும்.

தகவல்:மாவட்ட உதவி ஆணையாளர்,

கமநல அபிவிருத்தி திணைக்களம்,

வவுனியா

(0242225511 )

பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று : கணவன், பிள்ளைகள் சுயதனிமை!!

கொரோனா தொற்று

கொரோனா வைரஸ் தொற்றியதாக நேற்று உறுதி செய்யப்பட்ட குருநாகல் பெண்ணினால் வங்கி கிளை ஒன்று மூடப்பட்டுள்ளது.

48 வயதுடைய குறித்த பெண், இதற்கு முன்னர் கொரோனா தொற்றியதாக உறுதி செய்யப்பட்ட நாத்தன்டிய பிரதேசத்தை சேர்ந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த பெண் கட்டுபத்த இலங்கை வங்கியில் கொடுக்கல் வாங்கல் மேற்கொண்டமையினால் எதிர்வரும் 14 நாட்களுக்கு வங்கி கிளை மூடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் குறித்த பெண்ணின் வீடு அமைந்து மடலெஸ்ஸ சந்தி பகுதிக்கு நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 30ஆம் திகதி இந்த பெண் தனது நோய் தொடர்பில் சிகிச்சை பெறுவதற்காக தனியார் வைத்தியர் ஒருவரை சந்தித்துள்ளார் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த பெண்ணின் கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.