இலங்கையில் புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை நேரங்கள் மற்றும் இடைவேளை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன.
அதன்படி, பாடசாலைகள் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நடைபெறும், மேலும் இரண்டு இடைவேளைகளை வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 1 ஆம் திகதியிலிருந்து பாடசாலை நேரம் ஒரு நாளைக்கு 50 நிமிடங்கள் அதிகரிக்கும் என்பதால், மாணவர்களால் அதைத் தாங்க முடியாது.
எனவே தினமும் காலை 10.10 மணி முதல் காலை 10.30 மணி வரை மற்றும் மதியம் 12.10 மணி முதல் மதியம் 12.20 மணி வரை இரண்டு இடைவேளை வழங்கப்பட்டுள்ளதாக தேசிய கல்வி நிறுவனத்தின் உதவி பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசோக டி சில்வா தெரிவித்தார்.
அதன்படி, காலை 7.40 முதல் 8.30 மணி வரை, காலை 8.30-9.20 மணி வரை, காலை 9.20 -10.10 மணி வரை, காலை 10.30 -11.20 மணி வரை, காலை 11.20 முதல் மதியம் 12.10 மணி வரை மற்றும் மதியம் 12.20 -1.10 மணி வரை, பிற்பகல் 1.10-2.00 மணி வரை என நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
நாட்டில் முட்டை விலை குறைந்திருந்தாலும், முட்டை ரொட்டி மற்றும் கொத்து ரொட்டியின் விலை முன்பு போலவே இருப்பதாக நுகர்வோர் கூறுகின்றனர்.
ஒரு முட்டையின் விலை 45 முதல் 50 ரூபாய் வரை இருந்தபோது, ஒரு முட்டை ரொட்டியின் விலையை 125 முதல் 130 ரூபாய் வரை உயர்த்த ஹோட்டல் உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்தனர்.
ஆனால், தற்போது ஒரு முட்டையின் விலை 29 மற்றும் 32 ரூபாய் வரை குறைந்துள்ள போதும், முட்டை ரொட்டி இன்னும் அதே விலையில் விற்கப்படுவதாக சுட்டிகட்டப்பட்டுள்ளது.
இலங்கை புகையிரத சாரதிகள் நாளை நள்ளிரவு முதல் 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். லோகோமோட்டிவ் (LOCOMOTIVE) இயந்திர பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.ஏ.யு. கோந்தசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒழுங்கற்ற சமிஞ்சை கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படாததால் குறித்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பணிப்புறக்கணிப்பு காரணமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து தொடருந்துகளும் சேவையில் ஈடுபடாது என்றும் LOCOMOTIVE இயந்திர பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டை எதிர்த்துப் போராடுவதற்காக பாடசாலை மட்டத்தில் குழுக்களை நிறுவுவதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையுடன் இணைந்து இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
1080 பாடசாலைகளில் ஏற்கனவே இதுபோன்ற குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு குழுவிலும் பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையன் பிரதிநிதி ஆகியோர் அடங்குவர்.
முயற்சியின் நோக்கம்
25 மாவட்டங்களிலும் உள்ள பாடசாலைகளின் போதைப்பொருள் பரவுவதைத் தடுப்பதே இந்த முயற்சியின் நோக்கமாகும் எனவும் பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாவட்டத்தில், திருமணமான 3 ஆண்டுகளில் மகள் உயிரிழந்ததால், வரதட்சணையாக வழங்கப்பட்ட ரூ.50 லட்சம் பணம், 35 சவரன் தங்க நகையை திருப்பிக் கொடுக்கக் கோரி பெண்ணின் உறவினர்கள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது கணவர் சுரேஷ் உடன் ஏற்பட்ட பிரச்னையில் பெற்றோர் வீட்டுக்குச் சென்ற பெண், தனது தந்தையுடன் பைக்கில் சென்றுக் கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே தந்தையும், மகளும் உயிரிழந்தனர்.
இந்நிலையில் உயிரிழந்த இளம்பெண்ணின் உறவினர்கள், சுரேஷ் வீட்டின் முன் இருவரது சடலங்களையும் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
இந்தியாவில் சிறிய எழுத்துப்பிழை காரணமாக 22 நாள் சிறை சென்றவருக்கு 17 வருட துன்பத்திற்கு பிறகு இறுதியாக விடுதலை கிடைத்துள்ளது.
இந்தியாவின் மெயின்புரி என்ற பகுதியை சேர்ந்த 55 வயதான ராஜவீர் சிங் யாதவ் அதிர்ச்சியூட்டும் அடையாளம் குழப்பம் மற்றும் அதிகாரிகளின் கவனக்குறைவு காரணமாக 17 வருட நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ராஜவீர் குற்றமற்றவர் என மெயின்புரி நீதிமன்றம் சனிக்கிழமை அறிவித்ததுடன், அவரைக் கைது செய்ய உண்மையில் எண்ணாத காவல்துறை அதிகாரிகளின் “கடும் அலட்சியம்” கிட்டத்தட்ட இரண்டு தசாப்த கால துன்பத்திற்கு வழிவகுத்ததற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
ஆகஸ்ட் 2008 இல் நக்லா பண்ட் கிராமத்தில் நடந்த மோதல் தொடர்பாக ராஜவீரின் சகோதரர் ராம்வீர் சிங் யாதவை பொலிஸார் தேடி வந்தனர்.
ஆனால், “கும்பல் பட்டியல்” தயாரிக்கப்பட்டபோது, அப்போதைய மெயின்புரி கோட்வாலி எஸ்.எச்.ஓ ஓம்பிரகாஷ், ராம்வீருக்குப் பதிலாக ராஜவீர் சிங் யாதவ் என தவறுதலாக பதிவு செய்துள்ளார்.
இதையடுத்து ராஜவீர் 2008 டிசம்பர் 1 அன்று கைது செய்யப்பட்டார். சிறையிலிருந்தபடியே, தான் நிரபராதி என்பதை வலியுறுத்தி ஆக்ராவில் உள்ள சிறப்பு குண்டர் சட்ட நீதிமன்றத்தில் உடனடியாக ஒரு மனு தாக்கல் செய்தார்.
சில வாரங்களுக்குள், டிசம்பர் 22 அன்று, இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ், ராஜவீரின் பெயர் “தவறுதலாக சேர்க்கப்பட்டது” என்று நீதிபதியிடம் ஒப்புக்கொண்டார். நீதிமன்றம் உடனடியாக அவரை விடுவிக்க உத்தரவிட்டது.
மேலும், அப்போதைய குண்டர் சட்ட வழக்குகளை விசாரித்து வந்த நீதிபதி முகமது இக்பால், அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்து மெயின்புரி எஸ்.எஸ்.பிக்கு கடிதம் எழுதினார்.
ஆயினும்கூட, இந்த ஒப்புதல் மற்றும் நீதிபதியின் எச்சரிக்கையையும் மீறி, சப்-இன்ஸ்பெக்டர் சிவசாகர் தீட்சித் ராஜவீருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார், இதனால் அவருக்கு எதிரான தவறான வழக்கு தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டது.
இந்த வழக்கு கிட்டத்தட்ட 17 வருடங்கள் இழுக்கப்பட்ட நிலையில் அதனை எதிர்த்து விடாமல் போராடி ராஜ்வீர் வெற்றி கண்டுள்ளார். இந்நிலையில், அவரது பெயர் இறுதியாக விடுவிக்கப்பட்ட நிலையில், ராஜவீர் பொறுப்புக்கூறலையும் இழப்பீட்டையும் நாடுகிறார்.
“இதை எனக்குச் செய்த அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். குறைந்தபட்சம், நான் பட்ட துன்பங்களுக்கு எனக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒரு வயது குழந்தை பொம்மை என நினைத்து பாம்பை கடித்துள்ளது. பீகார் மாநிலம் மேற்கு சாம்பரான் மாவட்டத்தின் பங்கட்வா கிராமத்தில் உள்ள தனது வீட்டில், கடந்த வெள்ளிக்கிழமை, ஒரு வயதான கோவிந்தா என்ற குழந்தை விளையாடி கொண்டிருந்தது.
குழந்தையின் பெற்றோர் வீட்டில் இல்லாத நிலையில், குழந்தை பாட்டியின் கண்காணிப்பில் இருந்துள்ளது. அப்போது 2 அடி நீளமுள்ள நாகப்பாம்பு ஒன்று, குழந்தையின் அருகே ஊர்ந்து வந்துள்ளது.
குழந்தை அதை கண்டுகொள்ளாமல் விளையாடிக்கொண்டிருந்த போது, அது குழந்தையின் கையை சுற்ற ஆரம்பித்துள்ளது. பொம்மை என நினைத்த குழந்தை, பாம்பை பிடித்து கடிக்க தொடங்கியுள்ளது.
பாம்பை கடிப்பதை பார்த்த குழந்தையின் பாட்டி, பதறியடித்து கொண்டு வந்து பார்த்த போது, குழந்தை கடித்ததில், பாம்பு இரண்டு துண்டுகளாகி இறந்து விட்டது. குழந்தையும் உடனே மயங்கி விட்டது.
உடனடியாக, அருகே உள்ள மஜௌலியா ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆரம்ப சிகிச்சைக்குப் பிறகு, குழந்தை மேல் சிகிச்சைக்காக பெட்டியா அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இது மிகவும் அசாதாரணமானது என கூறிய மருத்துவர், “விஷத்தின் பாதிப்பு சிறிய அளவில் உள்ளதால் குழந்தைக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லை. குழந்தை மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளது” என தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து பயணிக்கின்ற அதிசொகுசு சுற்றுலா கப்பலான Cordelia Cruises எதிர்வரும் ஆகஸ்ட் 15 மற்றும் 22 ஆகிய திகதிகளில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல் 2023ஆம் ஆண்டில் 9 முறையும் 2024ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 6 முறையும் இலங்கைக்கு வந்துள்ளது.
அதனையடுத்து, இந்த ஆண்டின் முக்கியமான பயணமாக ஆகஸ்ட் மாதத்தில் இந்த கப்பல் மீண்டும் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சுற்றுலா கப்பல், காலை வேளையில் காங்கேசன் துறைமுகத்திற்கு வருகைதரும். இதில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள், யாழ்ப்பாணம், கோட்டை உள்ளிட்ட முக்கியமான இடங்களை பார்வையிட்டு, அதன் பின்னர் மீண்டும் இந்தியாவை நோக்கி புறப்படவுள்ளனர்.
Cordelia Cruises கப்பல் மிகவும் பிரமாண்டமான மற்றும் அதிநவீன வசதிகள் கொண்ட சுற்றுலாப் பயணிகள் கப்பலாக காணப்படுகிறது
வவுனியா மாநகரசபையின் கோரிக்கையினை ஏற்று நேற்று ஞாற்றுக்கிழமை ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கிய வர்த்தகப்பெருமக்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக வவுனியா மாநகரசபையின் முதல்வர் சு.காண்டீபன் தெரிவித்துள்ளதுடன் மாநகரசபைக்குட்பட்ட தாண்டிக்குளம் மாடுவெட்டும் மடுவத்தை மூடுமாறு இதுவரை சபையால் எந்தவித உத்தரவும் பிறப்பிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்.. ஞாயிறு தினமான இன்று மாநகரசபையின் கோரிக்கையினை ஏற்று வவுனியா வர்த்தகர்கள் தங்களுடைய வியாபார நிலையங்களை மூடி பணியாளர்களுக்கு விடுமுறையினை வழங்கியுள்னர்.
எமது கோரிக்கையினை ஏற்று ஒத்துழைப்பு வழங்கிய மாநகரத்தின் வர்த்தகப்பெருமக்கள் மற்றும் ஊழியர்களுக்கு மாநகரசபை சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அதேபோல தனியார் கல்விநிலையங்களும் இன்று மூடப்பட்டு தமது ஒத்துழைப்பினை வழங்கியிருக்கின்றன. எனவே அதுசார்ந்த கல்விச் சமூகத்திற்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். இது கல்வி நிலையங்களின் வருமானத்தை வீழ்ச்சியடையச்செய்வதற்கான ஒரு செயற்ப்பாடு அல்ல.
மாறாக மாணவர்களிற்கு அறநெறிக்கல்வியை ஊட்டி அதனுடன் கலை, கலாசாரம் தொடர்பான விடயங்களிலும் அவர்கள் முன்நோக்கிச் செல்லவேண்டும் என்பதற்காகவே இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை தற்போது பிரச்சனையாகியுள்ள எமது சபைக்குட்பட்ட மாட்டுத்தொழுவத்தை நாங்கள் ஒருபோதும் மூடவில்லை. அங்கு கடந்த சனிக்கிழமை மின்சாரம் தடைப்பட்டபோதும் சபையின் ஒத்துழைப்புடன் மாடுகள் வெட்டப்பட்டு கடைகளுக்கு இறைச்சி அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால் மறுநாள் ஞாயிற்றுகிழமை எந்தவித அறிவித்தலும் இல்லாமல் தொழுவத்தையும் இறைச்சிக்கடைகளையும் அவர்களாக மூடியுள்ளனர். நாங்கள் அதனை மூடுமாறு எந்தவித உத்தியோகபூர்வ உத்தரவையும் இன்றுவரை பிறப்பிக்கவில்லை. என்பதை எமது மாநகர மக்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
இந்த செயற்பாடு மாட்டிறைச்சி தேவையுடைய மக்களை குழப்பும் விதத்திலும் இங்கு ஒரு பிரச்சனையை ஏற்படுத்தும் விதமாகவே அவர்களால் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக எதிர்வரும் கிழமைகளில் நடைபெறவுள்ள சபைக்கூட்டத்தில் முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்படும். அன்றய அமர்வில் எமது சமூகத்தால் ஏற்றுக்கொள்ளமுடியாத பல விடயங்களும் வெளிவரும் என்றார்.
‘மக்களுடன் ஊராட்சி’ என்ற உயரிய நோக்கத்திற்காக மக்களுக்கான சேவையை மக்களிடம் சென்று வழங்குவதே இந்த நடமாடும் சேவையின் நோக்கமாகும்.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசம் என்பது பரந்து விரிந்தது. எனவே எமது சபைக்கு மக்கள் வருகைதந்து சேவையினை பெற்றுக்கொள்வதில் உள்ள சிரமங்களை இலகுபடுத்துவதற்காக ‘மக்களுடன் ஊராட்சி’ திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம் என வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் பா.பாலேந்திரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் ஊடக அறிக்கையில்,
முதற்கட்டமாக கந்தபுரம் வட்டாரத்தில் எதிர்வரும் 28,29 ம் திகதிகளில் நடமாடும் சேவையை நடாத்தவுள்ளோம். எதிர்காலத்தில் ஏனைய வட்டாரங்களுக்கும் இந்த நடமாடும் சேவையினை விஸ்தரிக்கவுள்ளோம்.
விளம்பரப்பலகை கட்டணம், சோலைவரி, ஆதனப்பெயர் மாற்றம் ஆலோசனைகள், எல்லைக்கோட்டு சான்றிதழ் சேவை, வியாபார உரிமம், வியாபார வரி, வியாபார பெயர்ப்பதிவு, வழி அனுமதிப்பத்திர ஆலோசனைகள், கட்டட அனுமதி ஆலோசனைகள், கழிவகற்றல் சேவை, வீதி விளக்கு கோரிக்கைகள், ஆயுர்வேத மருத்துவ சேவை,
நூலக நடமாடும் சேவையும் அங்கத்துவ படிவம் வழங்கலும், முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளல், தலைவர் மற்றும் உறுப்பினர்களுடனான சந்திப்பு, 2026ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் பெறல் உள்ளிட்ட மேலும் பல சேவைகளை இதன்போது பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த வகையில் எதிர்வரும் 28, 29ம் திகதிகளில் கந்தபுரம் வட்டாரத்திற்குட்பட்ட தோணிக்கல் RDS மண்டபத்தில் காலை 9 மணி தொடக்கம் மாலை 3.00 மணி வரையில் நடைபெறும் இந்த சேவையில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு வட்டாரத்திற்குட்பட்ட பொதுமக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா- பரசங்குளம், ஏ9 வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தானது நேற்று (27.07.2025) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலையில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் பரசங்குளம் பகுதியில் பயணித்த போது கட்டுப்பாட்டை இழந்து மின்சார கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் குறித்த மோட்டார் சைக்கிள் சாரதியான கிளிநொச்சி, பாரதிபுரத்தை சேர்ந்த 23 வயதுடைய ஜெயசீலன் திவாகரன் பலியாகியுள்ளார்.
சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
வவுனியா மாநகரசபையினால் வீதிகளில் நடமாடித்திரிந்த 60க்கு மேற்பட்ட கட்டாக்காலி மாடுகள் நேற்று (26.07.2025) இரவு பிடிக்கப்பட்டன.
வவுனியா மாநகர எல்லைக்குட்பட்ட வீதிகளில் இரவு மற்றும் பகல் வேளைகளில் நடமாடும் கால்நடைகளால் அதிகளவான விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றன.
இதனையடுத்து மாநகரசபைக்குள்ள அதிகாரங்களை கொண்டு மாநகர முதல்வரின் உத்தரவிக்கமைய கால்நடைகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் வீதிகளில் பொது போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற 60க்கும் மேற்பட்ட கால்நடைகள் மாநகர சபையினரால் பிடிக்கப்பட்டது.
எனவே கால்நடை உரிமையாளர்கள் தமது கால்நடைகளுக்குரிய அடையாளத்தினை உறுதிப்படுத்தியபின் தண்டப்பணத்தினைச் செலுத்தி அவற்றை மீளப்பெற்றுச்செல்லுமாறு சபையினால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
10 நாட்களுக்குள் உரிமை கோரப்படாத கால்நடைகள் பகிரங்க ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகரசபை அறிவித்துள்ளது.
வவுனியா மாநகர சபைக்குட்பட்ட வர்த்தக நிலையங்களை ஞாயிற்றுக்கிழமைகளில் பூட்டி ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகரசபையினர் விடுத்த கோரிக்கைக்கமைவாக வர்த்தகர்கள் வர்த்தக நிலையங்களை இன்று (27.07.2025) ஞாயிற்றுக்கிழமை பூட்டி தமது ஒத்துழைப்பினை வழங்கியிருந்தனர்.
வர்த்தக நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களுக்கு வாரத்தில் ஒர் நாள் எனினும் விடுமுறை வழங்கி அவர்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக அந்த நாளை கழிப்பதற்கும் அவர்களின் அயராத உழைப்புக்கு ஒர் நாள் ஒய்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கமைவாக,
வவுனியா மாநகர சபையின் கடந்த அமர்வின் போது ஞாயிற்றுக்கிழமைகளில் மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய தேவை தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்களை மூடுவது தொடர்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவை நிறைவேற்றப்பட்டன.
அந்தவகையில் வவுனியா மாநகரசபையினரினால் ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தியாவசிய தேவை தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்களை மூடி மாநகரசபைக்கு ஒத்துழைப்பு நல்குமாறு ஒலிவாங்கி மூலம் அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தன.
அதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை (27.07.2025) இன்று வவுனியா மாநகரசபைக்குட்பட்ட அத்தியாவசிய தேவை தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்களாக ஆடையகம், பலசரக்கு பொருட்கள் விற்பனை நிலையம், காட்வெயார், இலத்திரனியல் விற்பனை நிறுவனங்கள், அழகு சாதன நிலையம் போன்ற பலரும் தமது வர்த்தக நிலையங்களை மூடி தமது ஆதரவினை வழங்கியமையினை அவதானிக்க முடிந்தது.
வவுனியா பஜார் வீதி, தர்மலிங்கம் வீதி, கொரவப்பொத்தானை வீதி, முதலாம் மற்றும் இரண்டாம்குறுக்குத்தெரு வீதி, பழைய பேரூந்து நிலையம், மில் வீதி, புகையிரத நிலைய வீதி, குருமன்காடு, மன்னார் வீதி போன்ற மாநகரசபைக்குட்பட்ட அனைத்து இடங்களிலும் வர்த்தகர்கள் வர்த்தக நிலையங்களை மூடியிருந்தனர்.
மாநகரசபையின் இச் செயற்பாட்டிற்கு ஊழியர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் உட்பட பலரும் தமது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.
ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலை சொந்தம் கொண்டாடுவதில் தாய்லாந்து – கம்போடியா இடையே ஏற்பட்டுள்ள மோதலால் தென்கிழக்கு ஆசியாவில் பதற்றம் நிலவுகிறது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லைப் பகுதியான Preah Vihear-ல் உள்ள தா மோன் தாம் கோயில் மற்றும் 817 கிலோ மீட்டர் பரப்பளவு நிலத்தை உரிமை கொள்வதில் நீண்டகாலமாக சிக்கல் நிலவுகிறது.
ஆயிரத்து நூறு ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் கம்போடியாவுக்கு சொந்தமானது என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், அதற்கு பாரம்பரிய அந்தஸ்து கோரி யுனெஸ்கோவை கம்போடிய அரசு அணுகியதால் தாய்லாந்தில் போராட்டங்கள் வெடித்தன.
இந்நிலையில், கடந்த மே மாதம் இருநாடுகளுக்கும் இடையே நடந்த மோதலில் கம்போடியா ராணுவ வீரர் கொல்லப்பட்டார். இதனால் தாய்லாந்து உடனான உறவை கம்போடியா முறித்துக் கொண்டது. இருப்பினும் அவ்வப்போது இருநாடுகளும் எல்லையில் மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இரு நாடுகளின் எல்லையோர கிராமங்கள் காலி செய்யப்பட்டு ஏறத்தாழ 40 ஆயிரம் பேர் இடம் மாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
ரஷ்யா – உக்ரைன், இஸ்ரேல் – காஸா என அடுத்தடுத்த போர்களால் உலகம் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ள நிலையில், கம்போடியா – தாய்லாந்து இடையிலான பதற்றம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மூதூர் பொழுதுப் போக்கு பூங்காவில் காணாமல் போன 4 கிராம் தங்க கைச் சங்கிலி உரியவரிடம் நேற்று(25) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தம்பலகாமத்தைச் சேர்ந்த புதிய தம்பதியினர் மூதூர் பொழுதுப் போக்குவக்கு வந்திருந்த சமயம் அவர்களுடைய தங்க கைச் சங்கிலி காணாமல் போயிருந்தது. இது தொடர்பாக மூதூர் பிரதேச சபையில் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் மூதூர் பொழுது போக்கு பூங்காவில் நேற்று காலை உடற்பயிற்சியில் ஈடுபட்ட சிலர் தங்கக் சங்கிலியை கண்டெடுத்து மூதூர் பிரதேச சபையில் ஒப்படைத்துள்ளனர்.
இதனையடுத்து மூதூர் பிரதேச சபையின் தவிசாளர், உதவித் தவிசாளர் முன்னிலையில் தங்கச் சங்கிலியை கண்டெடுத்த நபர்கள் உரியவரிடம் ஒப்படைத்துள்ளனர்.
நாடு முழுவதும் சமீப காலங்களாக வரதட்சணை கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், வரதட்சணைக் கேட்டு தன்னுடைய மனைவியை மிரட்டுவதற்காக,
தன்னுடைய 8 மாத குழந்தையை தலைகீழாக ரோட்டில் கணவன் தூக்கிச் சென்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், போலீசார் குழந்தையைத் தலைகீழாக தூக்கிச் சென்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சஞ்சு. இவருக்கு கடந்த 2023ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.
இதற்கிடையில் தனது மனைவியிடம் வரதட்சணையாக பணம் மற்றும் கார் வேண்டும் என்று கேட்டு சஞ்சு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
சஞ்சுவின் குடும்பத்தினரும், சஞ்சுவின் மனைவியிடம் வரதட்சணை கேட்டு அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், வரதட்சணை கேட்டு தனது மனைவியை மிரட்டுவதற்காக, பிறந்து 8 மாதங்களே ஆன தனது குழந்தையை தலைகீழாக பிடித்து தூக்கியபடி சஞ்சு ரோட்டில் நடந்து சென்றுள்ளார்.
இதனை பார்த்த ஊர்மக்கள் இது குறித்து கேட்டபோது, தனக்கு பணம் வேண்டும் என்றும், இதை வீடியோ எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் சஞ்சு கூறியுள்ளார்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலான நிலையில், போலீசார் சஞ்சு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதே சமயம், சஞ்சுவின் குழந்தை தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், குழந்தையின் இடுப்பு எலும்பு இடம் பெயர்ந்துள்ளதாகவும் சஞ்சுவின் மனைவி தெரிவித்துள்ளார்.