செருப்பு போடும் போது 12 வது மாடியிலிருந்து தவறி விழுந்து பலியான 3 வயதுச் சிறுமி!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பால்கர் மாவட்டம் நாலசோபரா கிழக்கில் உள்ள ஒரு உயரமான குடியிருப்பு அமைந்துள்ளது.

இந்தக் குடியிருப்பில் 3 வயது சிறுமி, 12வது மாடியில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயர சம்பவம் தற்போது பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜூலை 22ம் தேதி இரவு 8.20 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பும் போது தாயார் சிறுமிக்கு காலணிகள் அணிவித்துள்ளார். அப்போது அவளை காலணி பெட்டியில் நிற்க வைத்துள்ளார்.

ஆனால் அந்த பெட்டியின் பின்புறம் திறந்திருந்ததால், சிறுமி சமநிலையை இழந்து நேராக 12வது மாடியிலிருந்து கீழே விழுந்துவிட்டதாக தெரிகிறது.

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும், வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 174ன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது ஒரு விபத்துச் சம்பவம் என்றும், யாரையும் குற்றவாளியாக கருதவில்லை என்றும் சிறுமியின் தந்தை வாக்குமூலம் அளித்துள்ளார். இந்நிகழ்வு, உயர கட்டிடங்களில் சிறுவர் பாதுகாப்பு குறித்து சிந்திக்க வைக்கும் முக்கியமான நினைவூட்டலாக கருதப்படுகிறது.

கோர விபத்தில் இரு பாடசாலை மாணவர்கள் உட்பட 5 பேர் காயம்!!

அநுராதபுரம் – குருணாகல் பிரதான வீதியில் 2ஆவது மைல்கல் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இரு பாடசாலை மாணவர்கள் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (25.07) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பஸ் மற்றும் கெப் வாகனம் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது கெப் வாகனத்தின் சாரதியும் பஸ்ஸில் பயணித்த நால்வரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் பாடசாலை மாணவர்கள் இருவரும் ஆசிரியை ஒருவரும் காயப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பிறந்த குழந்தை!!

மும்பை நோக்கி புறப்பட்ட ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தாய்லாந்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணொருவருக்கு திடீர் பிரச வலி ஏற்பட்டு வானில் பறந்து கொண்டிருந்த விமானத்திலேயே குழந்தையை பெற்றெடுத்தார்.

ஓமன் தலைநகரான மஸ்கட்டில் இருந்து மும்பை நோக்கி புறப்பட்ட ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்,

கடந்த திங்கள் அதிகாலை 3.15 மணியளவில் வானில் பறந்து கொண்டிருந்தபோது, தாய்லாந்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணொருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு பரபரப்பான சூழல் நிலவியது.

வழக்கமாகக் கேபினில் கிடைக்கும் வசதிகள் இவற்றுக்கு போதுமானதல்ல என்றாலும், விமான ஊழியர்கள் உடனடியாக செயல்பட்டு, விமானக் கேபினில் ஒரு தனியறையை தயார் செய்தனர். மேலும், விமானி மும்பை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசர தகவல் அனுப்பினார்.

இந்த நேரத்தில் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த மருத்துவ துறையைச் சேர்ந்த தாதி ஒருவர் முன்வந்து, விமான ஊழியர்களின் உதவியுடன் கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பாதுகாப்பான முறையில் பிரசவம் பார்த்துள்ளார். இதில் அப்பெண்ணுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இதைப்பார்த்த பயணிகள் அனைவரும் ஆரவாரம் செய்தனர்.

இந்தநிலையில் விமானம் மும்பையில் தரையிறங்கிய உடன் தாய், குழந்தை இருவரும் அங்கு தயாராக இருந்த நோய்காவு வண்டியில் ஏற்றப்பட்டு அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

தாய், சேய்க்கு தேவையான உதவிகளை செய்ய தாய்லாந்து தூதரகத்துடன் தொடர்பில் இருப்பதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தெரிவித்து உள்ளது.

அதிகாலையில் பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த இளம்பெண்ணின் பொம்மை!!

சீதுவ பொலிஸ் பிரிவின் ராஜபக்ஷபுர பகுதியில் இன்று (26.07.2025) அதிகாலை 29 வயதுடைய யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார், ராஜபக்ஷபுர பகுதியில் இன்று அதிகாலை விசேட தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் விடுதிகள் ஆய்வு செய்யப்பட்டன. அந்த நேரத்தில், ஒரு விடுதி அறையில் இருந்த ஒரு பெண், ஒரு பொம்மையை எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியேறியபோது, பொலிஸ் அதிகாரிகளால் சந்தேகிக்கப்பட்டார்.

அந்த சந்தேகத்தின் அடிப்படையில், அந்தப் பெண்ணின் வசம் இருந்த பொம்மையை ஆய்வு செய்தபோது, பொம்மைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் ஐஸ் மற்றும் கேரள கஞ்சாவை கண்டுபிடிக்க முடிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் போதைப்பொருள் சோதனைக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருப்பதை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவ யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சிறப்பு நடவடிக்கையின் போது, 19 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இளைஞன் கழுத்து நெரித்து கொலை : பொலிஸ் வலையில் சிக்கிய நால்வர்!!

இளைஞன் ஒருவனை கழுத்து நெரித்து கொலை செய்து சடலத்தை ஹோமாகம மாற்று வீதியில் வீசிச் சென்ற சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் நேற்று (25) இரவு நுகேகொடை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த கொலை சம்பவம் ஜூலை 10 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 35 வயது மதிக்கத்தக்க இளைஞனே கொலைசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சந்தேக நபர்கள் நால்வரும் கொழும்பு மாதம்பிட்டி மற்றும் கிராண்ட்பாஸ் ஆகிய பிரதேசங்களில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் கொழும்பு 14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 18 மற்றும் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் ஆவர். கொலை செய்யப்பட்ட இளைஞனின் கார் கேகாலை – மாவனெல்லை பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட நால்வரும் மேலதிக விசாரணைகளுக்காக ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இத்தாலியில் நெடுங்சாலையில் விழுந்த விமானம்!!

வடக்கு இத்தாலியில் கடந்த 24ஆம் திகயதியன்று, ஒரு இத்தாலிய ஃப்ரீசியா RG ரக விமானம் நெடுஞ்சாலையில் செங்குத்தாக விழுந்துள்ளது. பெரும் தீப்பிழம்புடன் வெடித்துச் சிதறிய திகிலூட்டும் இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் காணொளியில் பதிவு செய்துள்ளனர்.

காணொளியில், விமானம் வான்வழி சாகசங்களை செய்து கொண்டிருந்து விட்டு, திடீரென பிரெசியா நெடுஞ்சாலையில் செங்குத்தாக விழுவது பதிவாகியுள்ளது. இந்த துயர சம்பவத்தில் விமானத்தில் இருந்த இருவர் உயிரிழந்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் மிலானைச் சேர்ந்த 75 வயது விமானி செர்ஜியோ ரவக்லியா (Sergio Ravaglia) மற்றும் அவரது பயணி, 60 வயது அன்ன மரியா டி ஸ்டெபனோ (Ann Maria De Stefano) என தெரியவந்துள்ளது.

இத்தாலிய செய்தி நிறுவனமான ஜியோர்னாலே டி பிரெசியா (Giornale di Brescia) பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை வெளியிட்டுள்ளது.

யாழில் 10 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட 62 வயது முதியவர்!!

யாழில் 10 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டமை தொடர்பிலான சந்தேகத்தின் பேரில் வேலணை துறையூர் பகுதியைச் சேர்ந்த ஒருவரை ஊர்காவற்றுறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் வேலணை துறையூர் பகுதியில் நேற்றைய தினம் (25) இடம்பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை (19) அன்று குறித்த சிறுமி துறையூர் கடற்றொழில் சங்கத்திற்கு அயலில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.

கடையின் உரிமையாளரான 62 வயது மதிக்கத்தக்க நபர் குறித்த சிறுமியை கடையின் உள்ளே அழைத்து குளிரூட்டியினுள் இருக்கும் குளிர்பானத்தை எடுக்குமாறு கூறியுள்ளார்.

இதன்போது குறித்த கடையின் உரிமையாளரான சந்தேகநபர் சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முற்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாயார் கடந்த 23ஆம் திகதியன்று தனது பகுதி கிராமசேவகருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து 24ஆம் திகதியன்று வேலணை பிரதேச செயலகத்திலுள்ள சிறுவர் நன்நடத்தை அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் அன்றையதினமே முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்ததுடன், அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

 

 

பாலூட்டும் போத்தல் அடையாளம் கண்ட பகுதியில் குழந்தையின் என்புத் தொகுதி ஒன்று அகழ்ந்தெடுப்பு!!

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியிள் இருந்து குழந்தைகளுக்குப் பாலூட்டும் போத்தல் அடையாளம் காணப்பட்ட பகுதியில் குழந்தையின் என்புத் தொகுதி ஒன்றும் இன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழிக்கு அருகில் மேலும் புதைகுழிகள் இருக்கலாம் எனச் செய்மதிப் படங்கள் மூலம் சில பகுதிகள் சந்தேகத்தின் அடிப்படையில் அடையாளப்படுத்தப்பட்டு தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவினால் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்து.

அந்தப் பகுதி தடயவியல் அகழ்வாய்வுத் தளம் இரண்டு என நீதிமன்றத்தால் பிரகடனப்படுத்தப்பட்டு அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 17ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றபோது குழந்தைகளுக்குப் பாலூட்டும் போத்தல் ஒன்றும், வெள்ளை நிற ஆடை ஒன்றும் அடையாளம் காணப்பட்டிருந்தன.

இந்நிலையில், அந்தப் பகுதியில் இருந்து குழந்தையின் என்புத் தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டு இன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

 

கடவுச்சொற்களை பகிர வேண்டாம் : இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

இலங்கையில் சைபர் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையின் கணனி அவசர பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

குறித்த பிரிவின் அறிக்கையின்படி 2025ஆம் ஆண்டில் மாத்திரம் 5400க்கும் மேற்பட்ட சைபர் குற்றங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. Facebook, WhatsApp, Instagram, Snapchat மற்றும் TikTok போன்ற சமூக ஊடக தளங்களை மையப்படுத்தியே இந்த குற்றங்கள் பதிவாகியுள்ளன.

அதிலும் Facebook உடன் தொடர்புடையதாக 90 வீதக்குற்றங்கள் பதிவாகியுள்ளன.

AI என்ற செயற்கை நுண்ணறிவு கருவிகளின் தவறான பயன்பாடும் இந்த குற்றங்களில் அடங்கியுள்ளதாக கணினி அவசர சேவைப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதனை கருத்திற்கொண்டு பயனர்கள் கடவுச்சொற்களை ஒருபோதும் பகிர வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

வவுனியாவிலும் சர்வதேச நீதிப்பொறிமுறையை வலியுறுத்தி போராட்டம்!!

ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இன அழிப்பிற்கு சர்வதேசநீதிப் பொறிமுறை வேண்டும் என்பதை வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் இன்றைய தினம் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அந்தவகையில் வவுனியா புதியபேருந்து நிலையப்பகுதிக்கு முன்பாகவும் குறித்த போராட்டம் இடம்பெற்றது.

வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்போராட்டமானது இலங்கையில் மனித குலத்திற்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எடுக்கப்படும் இலங்கை தொடர்பான தீர்மானத்தை வலுப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படுவதாக ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக ஈழத்தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட இனஅழிப்பிற்கு பன்னாட்டு நீதிப் பொறிமுறை ஊடான விசாரணைகள் உடன் மேற்கொள்ளப்படல் வேண்டும், இனப்படுகொலைகளுக்கான நடவடிக்கைகள் காலம் தாழ்த்தப்படாமல் உடன் மேற்கொள்ளப்படல் வேண்டும்,

தமிழர்களுக்கு எதிராக ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற இன அழிப்பு உட்பட, பன்னாட்டு குற்றங்களை விசாரிக்கவும் குற்றவாளிகளை விசாரணைக்கு உட்படுத்தவும் ஒரு பன்னாட்டு குற்றவியல் நீதித்துறை அமைப்பை உருவாக்கவேண்டும்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியை சர்வதேசம் கால இழுத்தடிப்பு செய்யாமல் உடன் சர்வதேச நீதிப் பொறிமுறையை மேற்கொள்ள வழி செய்ய வேண்டும், தமிழ் இன அழிப்பு நடந்ததை சர்வதேசம் ஏற்றுக் கொள்ள வேண்டும்,

செம்மணி, மன்னார் மற்றும் பிற பகுதிகளில் காணப்படும் பெரும்பாலான மனிதப் புதை குழிகள் தொடர்பாக பன்னாட்டு தணிக்கை நிபுணர்களை விசாரணைக்காக அனுப்ப வேண்டும்.

தமிழர் பாரம்பரியப் பண்பாட்டுச் சின்னங்களை அழிக்கும் நடவடிக்கைகளை மற்றும் நில ஆக்கிரமிப்புக்களை உடன் நிறுத்தவேண்டும், தமிழ் அரசியல் கைதிகள் உடன் விடுதலை செய்யப்படல் வேண்டும்,

பயங்கர வாத தடை சட்டம் மற்றும் நிகழ் நிலை சட்டம் (PTA & Online Safety Act) இரத்து செய்ய ஸ்ரீலங்கா அரசிக்கு பன்னாட்டு சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும். போன்ற கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்திருந்தனர். இதேவேளை பன்னாட்டு நீதிபொறிமுறையை வலியுறுத்தி கைஎழுத்தும் திரட்டப்பட்டது.

குறித்த ஆர்பாட்டத்தில் வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், சமூக செயற்ப்பாட்டாளர்கள், தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள்,பொது அமைப்புக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியா மாநகரசபை மாட்டுத் தொழுவத்தில் ஒரு மாதத்தில் மாத்திரம் 801 மாடுகள் இறைச்சிக்காக அறுப்பு!!

வவுனியா மாநகரசபையின் மாடு வெட்டும் தொழுவத்தில் ஒரு மாதத்தில் மாத்திரம் 801 மாடுகள் இறைச்சிக்காக அறுக்கப்பட்டுள்ளமை தொடர்பிலான ஆவணம் வெளியாகியுள்ளது.

கடந்த 5ம் மாதத்தில் மாநகரசபையின் மாடு வெட்டும் தொழுவத்தில் வவுனியா நகரத்திற்கு என 172 மாடுகளும், கொழும்புக்கு என 602 மாடுகளும், குருமன்காட்டிற்கு என 27 மாடுகளும் என மொத்தமாக 5ம் மாதத்தில் மாத்திரம் 801 மாடுகள் இறைச்சிக்காக அறுக்கப்பட்டுள்ளமையுடன் வவுனியா நகரத்திற்கு என 34 ஆடுகளும் அறுக்கப்பட்டுள்ளன.

எனவே பிரதேச தேவைக்கு 199 மாடுகளும் வெளிமாவட்டத்திற்கு 602 மாடுகளும் இறைச்சிக்காக அறுக்கப்பட்டுள்ளது. மாவட்ட தேவைக்கேன குறைந்தளவிலான மாடுகளே இறைச்சிக்காக அறுக்கப்படுகின்றது. வெளிமாவட்ட தேவைக்கென அதிகளவில் மாடுகள் அறுக்கப்படுவதனால் மாவட்டத்தின் மாடுகளின் எண்ணிக்கை குறைவடைந்து பால் உற்பத்தியும் கேள்விக்குறியாகும் நிலமை உருவாகியுள்ளது.

எனவே உரிய அதிகாரிகள் இவ்விடயத்தினை கருத்தில் கொண்டு பாலின் உற்பத்தியினை அதிகரிக்கவும் பாலின் விலையினை குறைக்கவும் வழிமுறைகளை ஏற்படுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த மாட்டுத்தொழுவத்தில் கடந்த சில வாரத்திற்கு முன்னர் மாநகரசபையினரின் சுகாதாரக் குழு திடீர் விஜயம் ஒன்றினை முன்னெடுத்து மாட்டுத்தொழுவத்திற்கு சென்றிருந்தனர்.

இதன் போது சுகாதார பரிசோதகரின் அனுமதியினை மீறி அதிகளவில் மாடு வெட்டப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தமையுடன் சுகாதார சீர்கேட்டுடன் குறித்த பகுதி காணப்பட்டமை தொடர்பிலான சர்ச்சைகளுக்கு மத்தியில் இவ் ஆவணம் வெளியாகியுள்ளது.

கார் 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : மூவர் காயம்!!

பசறை பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (24) 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் பதுளை பகுதியைச் சேர்ந்த 64, 58 மற்றும் 22 வயதுடைய இரண்டு பெண்களும் ஒரு ஆணுமே இவ்வாறு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளையில் இருந்து ஒக்கம்பிட்டி பகுதிக்கு தான நிகழ்வொன்றிற்கு சென்று மீண்டும் பதுளைக்கு திரும்பும் போது பசறை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கார் விபத்துக்குள்ளாகும் போது காரில் ஐவர் பயணித்ததாகவும் அதில் மூவர் பலத்த காயமடைந்த நிலையில் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன்,

பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பாடசாலை மாணவனால் விபத்து : பெண்ணின் கால் துண்டிக்கப்பட்டு புதரில் வீசி சென்ற கொடூரம்!!

இலங்கையின் காலி ஹினிடும்கொட கனிஷ்டக் கல்லூரிக்கு அருகில் நடந்த ஒரு கோரமான விபத்து, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

15 வயதுப் பாடசாலை மாணவன் ஒருவன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளால் மோதப்பட்டு, 40 வயதுடைய பெண் ஒருவர் காலை இழந்த சம்பவம் வெளியாகி உள்ளது.

இந்த விபத்தில் பெண்னிணி ஒருகால் துண்டிக்கப்பட்ட நிலையில், மாணவர் பெண்ணின் காலை புதிரில் வீசி சென்ற சம்பவம் பதைபதைக்க வைத்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சம்பவத்தின் போது, பாதிக்கப்பட்ட பெண் தனது குழந்தைகளை பாடசாலைக்கு அழைத்துச் செல்வதற்காக பாடசாலைக்கு அருகில் வீதியோரத்தில் காத்திருந்தார்.

அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் குறித்த பெண் மீது மோதியுள்ளது. இதன்போது பெண்ணின் முழங்காலுக்குக் கீழ் இருந்த ஒரு கால் துண்டாகி, உடல் பகுதியிலிருந்து முழுமையாகத் துண்டிக்கப்பட்டது.

சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவன் என்பதை அடையாளம் கண்டுள்ளனர். இதனையடுத்து உடனடியாக அந்த மாணவனின் வீட்டிற்குச் சென்று தகவலைத் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவத்தின் மிகவும் திகிலூட்டும் அம்சம் என்னவென்றால், விபத்தின் போது துண்டிக்கப்பட்ட பெண்ணின் கால், மோட்டார் சைக்கிளில் சிக்கிக் கொண்டது.

விபத்தை ஏற்படுத்திவிட்டுச் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய அந்தச் சிறுவன், பின்னர் துண்டிக்கப்பட்ட காலை அருகிலிருந்த ஒரு புதரில் வீசிவிட்டுச் சென்றுள்ளான். மாணவன் அளித்த தகவலின் அடிப்படையில், அப்பகுதி மக்களாலேயே பெண்ணின் துண்டிக்கப்பட்ட கால் பின்னர் மீட்கப்பட்டுள்ளது.

விபத்தில் கலை இழந்த பெண் பெண் தற்போது காலிய தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய 15 வயதுச் சிறுவன் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளான். இந்தச் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் நேர்ந்த நெகிழ்ச்சி சம்பவம் : சுற்றுலா பயணியின் மனதை வென்ற உள்ளூர்வாசி!!

பேருந்து ஒன்றில் தவறவிடப்பட்ட 1,50000 பெறுமதியான கைக்கடிகாரத்தை உரியவரிடம் ஒப்படைத்த பேருந்து நடத்துநருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இது தொடர்பில் தெரிய வருவதாவது,

ஸ்பெயினைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இருவர் கண்டியிலிருந்து நுவரஹம நோக்கிச் செல்லும் தனியார் பேருந்தில் மஹியங்கனை நோக்கிப் பயணித்துள்ளர்.

பயணத்தின் போது 150000 ஆயிரம் பெறுமதியான கைக்கடிகாரம் ஒன்றை பேருந்தில் தவற விட்டுச் சென்றுள்னர். குறித்த சுற்றுலாப் பயணிகள் இருவரும் பேருந்திலிருந்து இறங்கி மஹியங்கனையில் உள்ள ஹோட்டலுக்குச் சென்றனர்.

அதன்பின்னரே கடிகாரத்தை தவறவிடப்பட்டுள்ளது என்பதை அறிந்தனர். இதனையடுத்து ஹோட்டல் உரிமையாளர்களிடம் விடயத்தைத் தெரிவித்துள்ளனர்.

அதன்பின்னர் பேருந்தின் ரிக்கெட்டில் இருந்த தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்புகொண்டு கைக்கடிகாரம் தவறவிடப்பட்டதை ஹோட்டல் உரிமையாளர் பேருந்தின் உரிமையாளருக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.

பேருந்தை துப்புரவு செய்த போது கைக்கடிகாரத்தை நடத்துநர் கண்டெடுத்தாகவும் அதனை உரியவரிடம் மறுநாள் ஒப்படைப்பதாகவும் பேருந்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

மறுநாளான நேற்று மஹியங்கனையில் சுற்றுலாப் பயணிகள் வரவழைக்கப்பட்டு குறித்த கடிகாரம் நடத்துநரால் ஒப்படைக்கப்பட்டது.

கடிகாரத்தைப் பெற்றதன் பின்னர் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தி குறித்த நடத்துநருக்கு நன்றி தெரிவித்துச் சென்றுள்ளனர்.

150000 ரூபா பெறுமதியான கடிகாரத்தைக் கண்டெடுத்தும் அதன் மீது ஆசை கொள்ளாமல் உரிமையாளர்களிடம் ஒப்படைத்த கண்டியைச் சேர்ந்த நடத்துநரின் மனிதநேயமிக்க செயற்பாட்டிற்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

17 வருடங்களாக தந்தைக்காக காத்திருக்கும் ஒரு மகளின் கண்ணீர்க் குரல் : இரக்கம் காட்டுவாரா ஜனாதிபதி?

தனது தந்தையின் வருகைக்காக 17 வருடங்களாகக் காத்துக்கொண்டிருக்கும் ஒரு மகளின் கண்ணீர்க் குரல் ஜனாதிபதி அனுரகுமார அரசாங்கத்தின் காதுகளிள் விழாதா என தனது பிஞ்சு காலங்களில் தந்தை சிறையில் இருந்த தாயை காலன் கொண்டு சென்ற நிலையில் மகளின் கண்ணீர்க் குரல் கேட்பவர் நெஞ்சங்களை உருக வைத்துள்ளது.

2008 ஆம் ஆண்டு கிளிநொச்சி மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையான சச்சிதானந்தம் – ஆனந்த சுதாகர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டார்.

ஒன்பது நீண்ட வருடங்கள் கழித்து, அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த 17 வருடங்களாக கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

2018 ஆம் ஆண்டு ஆனந்த சுதாகரின் 36 வயதான மனைவி யோகராணி, உயிரிழந்தார். தனது மனைவியின் இறுதிச் சடங்கிற்காக ஆனந்த சுதாகர் சிறைச்சாலையிலிருந்து அழைத்து வரப்பட்டபோது நடந்த ஒரு சம்பவம், பார்த்தவர்களின் மனதை உலுக்கியது.

தனது தந்தையுடன் தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற ஏக்கத்துடன், அவரது மகள் சங்கீதா, சிறைச்சாலை பேருந்திலேயே ஏறிச் செல்ல முயற்சி செய்த காட்சி, அங்கிருந்த அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியது.

தாய் இல்லாத நிலையில், தந்தையின் அரவணைப்பிற்காக ஏங்கித் தவிக்கும் சங்கீதா, இந்த அரசாங்கமாவது தனது தந்தையை விடுதலை செய்ய வேண்டும் என்று உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.

யூடியூப் பார்த்து உடல் எடையை குறைக்க முயன்ற மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு!!

உலகம் முழுவதும் இயந்திரகதியாகி இருக்கும் நிலையில், பலரும் கூகுள் டாக்டர்களையும், யூ-ட்யூப் வீடியோக்களையும் அப்படியே நம்பி வருகின்றனர். வியூவ்ஸ்களை அள்ளுவதற்காக இந்த உணவகத்தில் உணவு வேற லெவல் என்பதில் துவங்கி,

சித்த மருத்துவ குறிப்புகள் வரையில் வாய்க்கு வந்ததை பலரும் வீடியோக்களாக பதிவிட்டு பணம் சம்பாதிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். அதை உண்மை என்று நம்பி பலரும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

இந்நிலையில் யூடியூப் பார்த்து உடல் எடையை குறைக்க முயன்ற மாணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடந்த 3 மாதங்களாக, மாணவர் எந்தவிதமான திட உணவு வகைகளையும் சாப்பிடாமல் பழச்சாறு மட்டும் குடித்து உடற்பயிற்சி செய்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் பர்ணட்டிவிளையை சேர்ந்தவர் நாகராஜன், சுங்கவரி துறையில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.

இவருடைய மகன் சக்தீஷ்வர் (17). இவர் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று என்ஜினீயரிங் கல்லூரியில் சேர தயாராகி வந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டில் இருந்த சக்தீஷ்வர் திடீரென மூச்சு திணறி மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த குளச்சல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது. அதாவது மாணவன் சக்தீஷ்வர் உடல் பருமனால் அவதியுற்று வந்துள்ளார்.

தற்போது மேற்படிப்பிற்காக கல்லூரிக்கு செல்ல இருந்த நிலையில் உடல் பருமனை பார்த்து சக மாணவர்கள் கேலி, கிண்டல் செய்யலாம் என நினைத்துள்ளார்.

எனவே உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள் குறித்து யூடியூபில் தேடியுள்ளார். அதில் கிடைத்த தகவலின்படி கடுமையான உணவு கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து வந்துள்ளார்.

அதாவது கடந்த 3 மாதங்களாக திட உணவு சாப்பிடாமல் பழச்சாறு மட்டும் குடித்து உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். தொடர்ந்து பழச்சாறு குடித்து வந்ததால் சளித் தொல்லைக்கு ஆளாகி மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.