போதைப்பொருள் விற்ற அங்கவீனமுடைய பெண் : பொலிஸார் திகைப்பு!!

பதுளை – ஹாலிஎல, ஜெயகம பகுதியில் ஹெரோயின் போதைபொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவரை ஹாலிஎல பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சம்பவத்தில் ஹாலிஎல, ஜெயகமபகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய அங்கவீனமுடைய பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹாலிஎல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபரின் வீட்டை சோதனைக்கு உட்படுத்தி இருந்தனர்.

இதன்போது மறைத்து வைத்திருந்த 5,270 மில்லிகிராம் ஹெரோயின் போதைபொருள் மீட்கப்பட்டுள்ளனர். அதோடு ஹெரோயின் போதைப்பொருள் பாவனைக்கு பயன்படுத்தப்படும் சில உபகரணங்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

ஹெரோயின் போதைபொருள் பாவிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் வீட்டில் செய்யப்பட்டிருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் அவரை பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இலங்கையில் கழுத்தறுத்து பெண்கள் கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு : மற்றுமொரு கொடூர சம்பவம்!!

நாவலப்பிட்டி – இம்புல்பிட்டி தோட்டத்தில் கைவிடப்பட்ட பங்களாவுக்குள் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணை கொலை செய்ததாக தெரிவிக்கப்படும் முறையற்ற காதலன் கம்பளையில் பொலிஸில் சரணடைந்துள்ள நிலையில், பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக நாவலப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

குறித்த பெண்ணை கூர்மையான ஆயுதத்தால் காயப்படுத்தி அந்த இடத்திற்கு அழைத்து வந்ததாக சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார். உயிரிழந்த பெண் நாவலப்பிட்டி இம்புல்பிட்டி தோட்டத்தைச் சேர்ந்த 39 வயதான மூன்று பிள்ளைகளின் தாய் என தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண், சந்தேக நபருடன் கம்பளை புஸ்ஸல்லாவ பகுதியில் சுமார் 09 மாதங்கள் வசித்து வந்த பின்னர் தனது சட்டப்பூர்வ கணவரின் வீட்டிற்குத் திரும்பிச் சென்றுள்ளார்.

வீட்டில் இருந்த குறித்த பெண், அவ்வப்போது சந்தேக நபருக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு, வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்லத் தயாராகி வந்துள்ளார்.

பொலிஸார் நடத்திய விசாரணைகளில் சந்தேக நபர் வெளிநாடு செல்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண் வெளிநாடு செல்வதற்காக கிராம சேவகர் சான்றிதழ் பெறச் சென்றபோது, சந்தேக நபர் அவரை தொலைபேசியில் அழைத்து பாழடைந்த வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ள நிலையில், அங்கு வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!!

இந்தியாவின் கெலிகட் சர்வதேச விமான நிலையத்திலிருந்து டோஹாவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் திருப்பி விடப்பப்பட்டுள்ளது.

இதனை கெலிகட் சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் திருப்பி விடப்பட்ட விமானத்தில் பணியாளர்கள் மற்றும் விமானிகள் உட்பட 188 பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

IX 375 என்ற குறித்த விமானம், காலை 9.07 மணியளவில் கெலிகட் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளது. இருப்பினும், கெபின் ஏர் கண்டிஷனிங் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக காலை மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அஹமதாபாத் ஏர் இந்திய விமான விபத்துக்கு பின்னர், ஏர் இந்திய நிறுவனத்தின் விமானங்களின் பாதுகாப்பு குறித்து சர்ச்சைகள் அதிகரித்து வரும் நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமையால் மேலும் கடும் விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன.

பூமியை ஆளப்போகும் இருள் : 21ஆம் நூற்றாண்டின் நீளமான சூரியக் கிரகணம்!!

21ஆம் நூற்றாண்டின் நீளமான சூரிய கிரகணம் அடுத்த ஆண்டு ஓகஸ்ட் 2ஆம் திகதி நிகழவுள்ளது.

குறித்த கிரகணத்தின் போது ஸ்பெய்ன், எகிப்து, லிபியா மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் முழுவதுமாக இருளில் மூழ்கும் என கூறப்படுகின்றது.

அத்துடன் வழக்கமாக நிகழும் கிரகணங்கள் 3 நிமிடங்களுக்குள் முடிந்துவிடும் நிலையில், இந்த கிரகணம் 6 நிமிடங்கள் வரை நிகழும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காதலனின் வெறிச்செயலால் உயிர் மாய்ப்பு- காதலி படுகொலை – தாய், தந்தையர் படுகாயம்!!

அம்பாறையில் இளைஞர் ஒருவர் தனது காதலியை கொலை செய்துவிட்டு பின்னர் தானும் உயிரை மாய்த்துள்ளார். பதியதலாவ, மரங்கல பகுதியில் வசிக்கும் ஒரு இளம் பெண் இன்று அதிகாலை அவரது காதலனால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் அவரே அவரது கழுத்தை அறுத்து உயிரை மாய்த்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்த இளைஞன், இளம் பெண்ணின் தாய் மற்றும் தந்தை மீதும் வெட்டுக்காயங்களை ஏற்படுத்தியுள்ளார்.

காயமடைந்த தாயும் தந்தையும் தற்போது மஹா ஓயா ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர் 23 வயதுடைய சரோஜா உதயங்கனி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அதே நேரத்தில் கொலையை செய்த இளைஞன் மொனராகலை பகுதியைச் சேர்ந்தவராகும். சம்பவம் குறித்து பதியதலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கி அதிரடி அறிவிப்பு!!

வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கமோ அல்லது மத்திய வங்கியோ எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இன்று (23) மத்திய வங்கியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதில் மத்திய வங்கி எந்தக் கவனமும் செலுத்தவில்லை. திறக்கப்பட்டுள்ள சந்தை தொடர்ந்து திறந்திருக்கும். அரசாங்கத்திற்கு அத்தகைய நோக்கம் இல்லை.

எனக்குத் தெரிந்தவரை, வாகன இறக்குமதி குறித்து அமைச்சர் அறிக்கையில் அத்தகைய மாற்றத்தைச் செய்வார் என்று நான் நினைக்கவில்லை.

இது ஒரு இரத்து என்று நாங்கள் எதிர்பார்க்க முடியாது” என நந்தலால் வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

வவுனியா உட்பட 14 மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!!

14 மாவட்டங்களில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களுக்கும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கும் வரும் 24 மணி நேர காலத்திற்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நிலவும் தென்மேற்கு பருவமழை காரணமாக, குறித்த மாவட்டங்களில் சில நேரங்களில் மணிக்கு 55-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

அதேவேளை, நாட்டின் பிற பகுதிகளில் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பொதுமக்கள் அனைவரும் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

கிண்ணியாவில் விபத்து : மூவர் காயம்!!

திருகோணமலையில் கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உப்பாறு பாலத்தில் செவ்வாய்க்கிழமை (22) இரவு இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கிண்ணியாவில் இருந்து பயணித்த வேன் ஒன்றும் மூதூரில் இருந்து பயணித்த முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று நேருக்குநேர் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் வேன் சாரதி உட்பட முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரும் காயங்களுக்குள்ளாகி கிண்ணியா வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் கிண்ணியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது!!

கொழும்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் வழங்கிய தகவலின்படி வவுனியா, நேரியகுளம் பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பரல் ஒன்றில் நிலத்தின் கீழ் புதைக்கப்பட்ட 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் வவுனியா மாவட்டக் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவு பொலிஸாரால் நேற்று (22.07.2025) கைது செய்யப்பட்டார்.

நேற்று முன்தினம் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி போராளி வழங்கிய தகவலின் அடிப்படையில் கொழும்பில் இருந்து வருகை தந்த புலனாய்வுத்துறை அதிகாரிகளோடு,

வவுனியா மாவட்ட குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவு பொலிஸாரும் இணைந்து செட்டிகுளம் – துட்டுவாகை மற்றும் நேரியகுளம் பகுதிகளில் உள்ள இரு வீடுகளில் சோதனையை மேற்கொண்டனர்.

இதன்போது, நேரியகுளத்தில் வீடு ஒன்றின் அருகாமையில் பிளாஸ்டிக் பரல் ஒன்றினுள் 86 கைக்குண்டுகள், ரி – 56 ரக துப்பாக்கிக்கான ரவைகள், கைத்துப்பாக்கிக்கான மூன்று ரவைகள், 5 ஆயிரத்து 600 போதை மாத்திரைகள், 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன நிலத்தின் கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன.

இதனை அடிப்படையாகக் கொண்டு அந்த வீட்டின் உரிமையாளரான 22 வயது இளைஞர் கைது செய்யப்பட்டு செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதிகளின் கண்களில் மிளகாய் பொடி தூவி முச்சக்கரவண்டிகள் கொள்ளை : பெண் உட்பட இருவர் கைது!!

பல்வேறு பிரதேசங்களில் சாரதிகளின் கண்களில் மிளகாய் பொடியை தூவி முச்சக்கரவண்டிகளை கொள்ளையிட்டு வந்த பெண் உட்பட மூவர் கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று திங்கட்கிழமை (21.07.2025) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் கஹடுதுவை – பொல்கஸ்ஸோவிட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேக நபர்கள் இருவரும் பல்வேறு பிரதேசங்களில் முச்சக்கரவண்டிகளை கொள்ளையிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவரது மனைவி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர்கள் கலவானை மற்றும் கஹதுடுவை ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 24 மற்றும் 27 வயதுடைய இரண்டு ஆண்களும் 29 வயதுடைய பெண்ணும் ஆவர்.

சந்தேக நபர்கள் மூவரும் கஹதுடுவை, பொரலஸ்கமுவ , மொரகஹஹேன ஆகிய பிரதேசங்களில் சாரதிகளின் கண்களில் மிளகாய் பொடியை தூவி முச்சக்கரவண்டிகளை கொள்ளையிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கொள்ளையிடப்பட்ட 4 முச்சக்கரவண்டிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

சந்திரனிலிருந்து எடுத்து வரப்பட்ட மண் : கொழும்பில் பார்வையிடலாம்!!

சந்திரனில் இருந்து எடுத்து வரப்பட்ட மண் மற்றும் பாறைகளின் மாதிரிகளை நேற்று (21.07.2025) தொடக்கம் கொழும்பில் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய சுவடிக்கூடத் திணைக்களத்தின் இயற்கை விஞ்ஞான நூதனசாலையில் அதற்கான பார்வைக் கூடம் திறக்கப்பட்டுள்ளது.

1969ஆம் ஆண்டு ஜுலை 21ஆம் திகதி நிலவில் முதல் மனிதராக நீல் ஆம்ஸ்ட்ரோங் காலடியெடுத்து வைத்த போது எடுத்து வரப்பட்ட மண் மற்றும் பாறைகளின் மாதிரிகளே இவ்வாறு காட்சிப்படுத்தப்படவுள்ளன.

தேசிய நூதனசாலையில் மிக விரைவில் சந்திரன் மற்றும் நிலவுக்கான மனிதர்களின் பயணம் குறித்த விபரங்கள் உள்ளடங்கிய காட்சிக் கூடம் ஒன்றும் இன்னும் ஓரிரு மாதங்களில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியும் நவீன தொழில்நுட்பம் சார்ந்த ஆர்தர் சி கிளார்க் நிலையத்தின் தலைவருமான பேராசிரியர் சந்தன ஜயரத்ன மற்றும் தேசிய நூதனசாலையின் பணிப்பாளர் சனோஜா கஸ்தூரிஆரச்சி ஆகியோர் இணைந்து இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

 

15 வயது மாணவியை தூக்கிச் சென்று உயிரோடு தீ வைத்து எரித்த இளைஞர்கள்!!

ஒடிஷா மாநிலத்தின் பூரி மாவட்டம் நிமபாடா தெஹ்ஸிலில் உள்ள பயாபர் பகுதியில், 15 வயது மாணவி ஒருவர் அடையாளம் தெரியாத 3 இளைஞர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை 8:30 மணிக்கு அந்த சிறுமி தனது தோழியிடம் புத்தகங்களை வழங்க சென்று கொண்டிருந்த போது இந்த கொடூரமான சம்பவம் நடந்தது.

பார்கவி நதி சாலையில் உள்ள வெறிச்சோடிய பகுதியில் 3 இளைஞர்கள் சிறுமியை கடத்திச் சென்று, தூக்கி வைத்து தீ மூட்டியதாக தெரிகிறது.

இந்த கொடூர தாக்குதலில் சிறுமியின் கைகள், கால்கள் மற்றும் உடலின் பல பகுதிகள் தீக்காயங்களால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தின் போது மாணவியின் அலறல் சத்தத்தை கேட்டு மக்கள் விரைந்து சென்று தீயை அணைத்து, முதலில் பிபிலி CHC மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தற்போது சிறுமி புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்துள்ளார். இவ்வளவு மோசமான தாக்குதல் நடந்தாலும் இது வரை ஒருவரும் கைது செய்யப்படவில்லை. இச்சம்பவம் பலங்கா காவல் நிலையத்திலிருந்து வெறும் 1.5 கி.மீ தூரத்தில் நடந்தது.

இது குறித்து சிறுமியின் குடும்பத்தினர் கூறுகையில், சிறுமிக்கு எவருடனும் எந்தவிதமான தனிப்பட்ட தகராறுகளும் இல்லை.

இது காதல் பழிவாங்கும் குற்றம் அல்ல என தெரிவித்துள்ளனர். இது போன்ற கொடூரமான தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், சிறுமியின் பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுந்து வருகின்றன.

இச்சம்பவம் குறித்து ஒடிஷா துணை முதல்வர் பரவதி பரிதா கடும் கண்டனமும் தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட சிறுமியின் சிகிச்சை செலவினங்களை மாநில அரசு முழுமையாக ஏற்கும் எனவும் அறிவித்துள்ளார்.

மாடியிலிருந்து விழுந்தால் காப்பாற்றுவாயா? விளையாட்டாக கேட்ட மனைவிக்கு நடந்த சோகம்!!

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் குருகிராம் பகுதியில் வசித்து வரும் தம்பதி துரியோதன ராவ், பார்வதி. இவர்கள் குருகிராம் பகுதியில் அமைந்துள்ள 4 மாடி கட்டிடத்தில் வசித்து வந்தனர். இதில் ராய் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் பார்வதி கால் சென்டரில் பணிபுரிந்து வந்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இருவரும் இரவு உணவு சமைத்து முடித்த பின் குளிர்ந்த காற்றை அனுபவிப்பதற்காக இரவு 10:30 மணிக்கு வீட்டின் மேல் மாடிக்கு சென்றுவிட்டனர்.

அப்போது அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, பார்வதி மொட்டை மாடி சுவரின் விளிம்பில் ஏறி இருபுறமும் கால் தொங்கியபடி அமர்ந்தபடி ராயிடம் “நான் கீழே விழுந்தால் நீ என்னை காப்பாற்றுவாயா? என விளையாட்டாக கேட்டார்.

அதற்கு ராய் “நீ கீழே இறங்குவாயா?” என சொல்லிக்கொண்டே அவரை பிடிக்க முற்பட்டார். ஆனால் பார்வதி நிலை தடுமாறியதால் ராய் அவரை தனது கையில் பிடித்து மேலே இழுக்க முயற்சித்தார்.

அவர்கள் இருவரும் சத்தமிட்ட போதும் யாரும் வரவில்லை. 2 நிமிடங்கள் பார்வதியை ராய் இழுக்க முயற்சித்தும் எதிர்பாராதவிதமாக கையில் இருந்து தவறிய பார்வதி கீழே விழுந்து விட்டார்.

உடனடியாக ராவ் பார்வதியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், பலத்த உள் காயங்கள் ஏற்பட்டதால் செல்லும் வழியிலேயே பார்வதி உயிரிழந்து விட்டார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை கணவரின் உடலில் காயங்கள் இருந்ததன்

மூலம் அவர் மனைவியை காப்பாற்ற முற்பட்டதை உறுதி செய்ததாக தெரிவித்துள்ளனர். அத்துடன் பார்வதியின் குடும்பத்தினரும் தங்களுக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை எனக் கூறியுள்ளனர்.

எட்டு வருடங்களாக காதலர்கள் : காதலியை கத்தியால் குத்தி கொலை செய்த காதலன்!!

நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த சௌந்தர்யா என்ற பெண் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். தான் வேலை செய்யும் நிறுவனத்திற்கு அருகிலேயே தாது நபர்களுடன் வீடு எடுத்து தங்கி வசித்து வந்துள்ளார்.

அதே சமயம் சௌந்தர்யாவின் வீட்டுற்கு அருகில் நாகபட்டினத்தை சேர்ந்த தினேஷ் வீடு எடுத்து தங்கி வசித்து வந்துள்ளார். தினேஷுக்கு சௌந்தர்யாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இருவரும் ஒருவருக்கு ஒருவர் கடந்த எட்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் அவரது காதலை பற்றி பெற்றோர்களிடம் தெரிவித்த நிலையில் இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

பின்னர் வழக்கம் போல் இருவரும் அவர்களது அறையில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் சௌந்தர்யா வேறு ஒரு ஆண் நண்பருடன் பழகி வந்தது தினேஷுக்கு தெரியவந்துள்ளது.

இதனால் சௌந்தர்யாவை தினேஷ் பலமுறை கண்டித்துள்ளார். இருப்பினும் சௌந்தர்யா தன்னை மாற்றிக் கொள்ளாததாக சொல்லப்படுகிறது. தினேஷ் இதை பற்றி சௌந்தர்யாவிடம் வாக்குவாதம் செய்ததால் சௌந்தர்யா தினேஷின் எண்ணை பிளாக் செய்துள்ளார்.

எனவே ஆத்திரம் அடைந்த தினேஷ் நேற்று இரவு சௌந்தர்யாவின் அறையில் யாரும் இல்லாததை தெரிந்து கொண்டு அவரிடம் நேரில் சென்று வாக்குவாதம் செய்துள்ளார். இருவருக்கு இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் தினேஷ் சௌந்தர்யாவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சௌந்தர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சௌந்தர்யாவை கொலை செய்து தப்பி சென்ற தினேஷை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

காதலித்து நிச்சயம் செய்து கொண்ட பெண்ணை காதலன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாடசாலையில் வகுப்பறையில் 30 பாம்புகுட்டிகள் : அச்சத்தில் உறைந்த மாணவர்கள்!!

குருநாகல் மாவட்டத்தில் போகமுவ மத்திய மகா வித்தியாலயத்தில், ஆரம்பப் பிரிவில் உள்ள வெளிப்புற வகுப்பறையில் இருந்து 30 பாம்புக்குட்டிகள், மூன்று பெரிய பாம்புகள் மற்றும் 55 பாம்பு முட்டைகள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாடசாலையில் பாம்புகள் தென்படுவதாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் புதிதாக நியமிக்கப்பட்ட அதிபருக்கு அறிவித்தனர்.

இதனை தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் 27 ஆம் திகதி அன்று கடமைகளைப் பொறுப்பேற்ற அதிபர் தலைமையில் சோதனை செய்யப்பட்டதில் 30 பாம்புக்குட்டிகள், மூன்று பெரிய பாம்புகள் மற்றும் 55 பாம்பு முட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.

அதேவேளை போகமுவ மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 1 முதல் 13 வரை சுமார் 2,000 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். அதில், 153 மாணவர்கள் ஆரம்ப பிரிவில் உள்ளனர்.

இந்நிலையில் பாடசாலை நிர்வாகம் விரைவாக நடவடிக்கை எடுத்தமையினால் பிள்ளைகள் மற்றும் ஊழியர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய அரபு இராட்சியத்தில் கணவனால் படுகொலை செய்யப்பட்ட பெண்!!

ஐக்கிய அரபு இராட்சியத்தில், கேரள பெண் ஒருவர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கேரளாவின், கொல்லம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய பெண், திருமணத்திற்குப் பின்பு கணவருடன் ஐக்கிய அரபு இராட்சியத்தில் வசித்து வந்தார். இந்நிலையில், இரு நாட்களுக்கு முன்பு, குறித்த பெண் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது குறித்து உயிரிழந்த பெண்ணின் தாயார் பொலிஸில் முறைப்பாடு அளித்தார். அந்தப் முறைப்பாட்டில், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் வரதட்சணை கேட்டு என் மகளை அவரது கணவர் துன்புறுத்தி வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், 43 பவுண் தங்க நகைகளை நாங்கள் வரதட்சணையாகக் கொடுத்த போதிலும், கூடுதலாக வரதட்சணை கேட்டு என் மகளை அவரது கணவர் அடித்துக் கொடுமைப்படுத்தியுள்ளார். என் மகளின் குரல்வளையை நெரித்தும், வயிற்றில் எட்டி உதைத்தும் துன்புறுத்தியுள்ளார்.

அத்துடன், சாப்பிடும் தட்டால் தலையைத் தாக்கியதிலேயே எனது மகள் உயிரிழந்தார். இந்த சம்பவம் கடந்த 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் நடந்துள்ளது, எனக் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் தாயார் கொடுத்த முறைப்பாட்டின் பேரில், கேரள காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.