அம்பாந்தோட்டையில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் குழிதோண்டி புதைக்கப்பட்டிருந்த மனித கால் வலஸ்முல்ல பொலிஸாரால் நேற்று மீட்கப்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டை, வலஸ்முல்ல, ரம்மல வராப்பிட்டிய ஹல்தொலகந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலேயே இவ்வாறு மனித கால் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட மனித கால், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் காணாமல்போன 51 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையின் காலாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
ஐந்து பிள்ளைகளின் தந்தையை கொலை செய்து சடலத்தை வீட்டின் பின்புறத்தில் புதைத்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இவர் தினமும் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபடுவதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தந்தையின் குடும்பத்தினர் வலஸ்முல்ல பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் வீட்டின் பின்புறத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் புதைக்கப்பட்டிருந்த மனித கால் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புதைக்கப்பட்டுள்ள சடலத்தின் மீதி பாகங்களை மீட்கும் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வலஸ்முல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த கன்சிகா என்ற மாணவி தனிம வரிசை அட்டவணையில் உள்ள 118 தனிமங்களின் பெயர்கள்,
மனித உடலின் உள் உறுப்புகள் பலவற்றின் பெயர்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் மிகவும் குறைந்த நேரத்தில் கூறி சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டம் கந்தப்பொல ரிலாமுல்ல தொடக்கப் பள்ளியில் 5ஆம் தரத்தில் இவர் பயின்று வருகிறார்.
குறித்த மாணவி, தனிம வரிசை அட்டவணையில் உள்ள 118 தனிமங்களின் பெயர்களை 24 நொடிகளில் கூறியுள்ளதுடன், மனித உடலின் உள் உறுப்புகள் 168 இன் பெயர்களைத் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் 4 நிமிடங்களில் கூறியுள்ளார்.
ஆப்பிள் (Apple) நிறுவனம், மடிக்கக்கூடிய ஐபோனை (IPHONE) 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சேம்சங் (Samsung) உட்பட பல நிறுவனங்கள் தங்கள் மடிக்கக்கூடிய தொலைபேசிகளை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், மடிக்கக்கூடிய ஐபோனுக்கான (IPHONE) எதிர்பார்ப்பு சந்தைகளில் பன்மடங்கு அதிகரித்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விபரங்கள்
அத்துடன் வெளியாகியுள்ள தகவல்களின் பிரகாரம், இந்த சாதனம், iPhone 18 தொடரின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
முதல் தலைமுறை மடிக்கக்கூடிய ஐபோன் 2,000 அமெரிக்க டொலர் முதல் 2,500 அமெரிக்க டொலரிற்கும் மேல் விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த மடிக்கக்கூடிய ஐபோனின் முதன்மை திரை 7.9 முதல் 8.3 அங்குலங்கள் வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தம்புள்ளையில் உயிருக்கு போராடும் யானை ஒன்றை அந்தப் பகுதி மக்கள் பராமரித்து வருகின்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கண்டலமே அழகி என்று அழைக்கப்படும் காட்டு யானை, அதன் முன் காலில் துப்பாக்கிச் சூட்டு காயம் ஏற்பட்டுள்ளதால் மிகுந்த வேதனையில் இருப்பதாக பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறித்த யானைக்கு வனவிலங்கு அதிகாரிகள் பல மாதங்களாக சிகிச்சை அளித்து வருகின்றனர். எனினும் இதுவரை குணமடையவில்லை.
இந்நிலையில் காயம் அடைந்துள்ள காட்டு யானைக்கு உணவளிக்க வேண்டாம் என்று வனவிலங்கு அதிகாரிகள், அந்தப் பகுதி மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். எனினும் துப்பாக்கிச் சூட்டுக் காயம் காரணமாக யானையால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கண்டலம் குளத்திற்கு அருகிலேயே யானை உள்ளதால் அதற்கான உணவினை தேடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, காட்டு யானை இருக்கும் இடத்தில் பல பிரதேசவாசிகள் முடிந்தவரை குறைந்த உணவை வழங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், காட்டு யானையின் பாதுகாப்பிற்காக பொலிஸ் அதிகாரிகளும் நிறுத்தப்பட்டுள்ளனர். அண்மையில் அந்தப் பகுதிக்கு சென்ற சுற்றாடல் அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் யானையின் நிலைமையை ஆராய்ந்துள்ளனர்.
காட்டு யானையின் உயிரைக் காப்பாற்ற வனவிலங்கு அதிகாரிகள் பல்வேறு சிகிச்சைகளை வழங்கி வருகின்றனர்.
இலங்கையில் யானைகளின் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாக உள்ளதுடன், அது அதிகளவான சுற்றுலா பயணிகளை கவர்ந்தவையாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கல்வி நோக்கங்களுக்காக TikTok சமூக வலைத்தளத்தை டிஜிட்டல் கருவியாக எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று TikTok சமூக ஊடகத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரிக்கும் இடையே ஒரு சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
பொழுதுபோக்குக்கு அப்பால் பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்துவதும் இந்த கலந்துரையாடலின் முக்கிய அம்சமாகும்.
டிஜிட்டல் கல்வி பற்றிய அறிவை வழங்க பாடத்திட்டம், ஆராய்ச்சி மற்றும் ஒழுங்குமுறைகளில் தேவையான திருத்தங்களை சேர்ப்பதன் முக்கியத்துவத்தையும்,
டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பொறுப்புடன் பயன்படுத்தி TikTok மூலம் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் அதன் பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர்.
கல்வித் துறையில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் சீர்திருத்தங்களுடன் இத்தகைய ஒத்துழைப்புகளைப் பாராட்டிய பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, டிஜிட்டல்மயமாக்கல் செயல்முறையை விரைவில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை மேலும் வலியுறுத்தினார்.
இந்தக் கலந்துரையாடலில் தெற்காசிய TikTok நிறுவனத்தின் அரசு உறவுகள் தலைவர் மற்றும் தெற்காசிய மக்கள் விவகாரத் தலைவர் ஃபெர்டூஸ் அல் மொட்டகின் (Ferdous Al Mottakin), பிரதமரின் மேலதிக செயலாளர்கள் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.
சமூக ஊடகங்கள் மூலம் பெண்ணொருவரிடமிருந்து 4.7 மில்லியன் ரூபாவுக்கு மேல் மோசடி செய்த ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
சந்தேக நபர் மருதானையில் வசிக்கும் 43 வயதுடையவர் என்று குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து பரிசுப் பொதியை பெற்றதாக கூறி, சமூக ஊடகங்கள் மூலம் பல்வேறு நபர்களை இணைத்து மோசடி செய்யும் வலையமைப்பில் ஈடுபட்ட ஒரு பெண்ணையும் குற்றப் புலனாய்வுத்துறை கைது செய்துள்ளது.
59 வயதான அந்தப் பெண், கிராண்ட்பாஸ், ஹேனமுல்ல பகுதியை சேர்ந்தவராகும். மோசடி செய்யப்பட்ட பணம் அவருக்கு சொந்தமான கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடி குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணையை ஆரம்பித்தது.
இதனையடுத்து நாட்டை விட்டு வெளியேறும் நோக்கத்துடன் அவர் நேற்று முன்தினம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.
முன்கூட்டியே நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டு, அவருக்கு பயணத் தடை விதிக்கப்பட்டிருந்ததால், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விமான நிலையப் பிரிவின் அதிகாரிகள் அவரைக் கைது செய்து, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைத்துள்ளனர்.
அவரது விசாரணையின் போது பல முக்கிய தகவல்கள் வெளிவரும் என்றும், அதன்படி, மேலும் பலர் கைது செய்யப்பட உள்ளனர் என்றும் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மாநகரசபையின் புதிய ஆணையாளர் பொ.வாகீசன் இன்று (17.07.2025) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.
வவுனியா நகரசபையாக இருந்து மாநகரசபையாக தரமுயர்த்தப்பட்டுள்ள நிலையில் அதன் ஆணையாளராக இதுவரை வவுனியா பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தெ.ரதீஸ்வரன் செயற்பட்டிருந்தார்.
இந்தநிலையில் புதிய ஆணையாளராக வடமாகாண மகளீர் விவகாரம் மற்றும் கூட்டுறவு அமைச்சின் செயலாளராக இதுவரை கடமையாற்றிய பொ.வாகீசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வடமாகாண ஆளுனர் நா.வேதநாயகத்தினால் குறித்த நியமனம் நேற்றயதினம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய புதிய ஆணையாளர் இன்றையதினம் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.
ஆடிப்பிறப்பு விழா நிகழ்வு வவுனியா தர்மலிங்கம் வீதியில் அமைந்துள்ள நவாலியூர் சோமசுந்தரப்புலவர் சிலையடியில் இன்று (17.07.2025) இடம்பெற்றது.
வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் ஏற்ப்பாட்டில் மாநகரசபையின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில் சோமசுந்தரபுலவரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, விபுலாநந்தா கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்வுகள் நடைபெற்றது., ஆடிப்பிறப்பு தொடர்பான சிறப்புரைகளை கலாசார உத்தியோகத்தர் சி.கஜேந்திரகுமார், மற்றும் ஆசிரியர் வரதன் ஆகியோர் நிகழ்த்தியிருந்தனர்.
நிகழ்வில் மாநகரசபை முதல்வர் சு.காண்டீபன், மாநகர ஆணையாளர் வாகீசன், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத் தலைவர் ரவீந்திரன், மாநகரசபை உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள், பொது அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
வவுனியா புகையிரத நிலையத்தில் தொடரூந்தில் மோதுண்டு நேற்று (16.07) இரவு ஒருவர் பலியாகியுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத்திலேயே குறித்த நபர் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
இம் மரணம் தற்கொலையா அல்லது விபத்தா என்ற மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், லாரி மீது பைக் மோதி விபத்திற்குள்ளானதில், பைக்கில் சென்ற அரசு மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரைப் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா நவதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன். மாரியம்மன் கோவில் பூசாரியான இவருடைய மகன் மதன் (14). மத்திகிரி கூட்டு ரோடு அருகில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படித்து வந்த மதன்,
அதே பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த ஆரியன் சிங் (13), அதே பகுதியைச் சேர்ந்த 9ம் வகுப்பு படித்து வந்த ஹரீஷ் (14) ஆகிய 3 பேரும் நண்பர்கள்.
இந்நிலையில் நேற்று மாலை, பள்ளிக்கு செல்லாத மதன், தனது தந்தையின் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு பள்ளி அருகில் சென்றுள்ளான்.
அங்கு ஆரியன் சிங்கை ஏற்றிக் கொண்டு அந்திவாடி சென்று, அங்கிருந்த ஹரீசை ஏற்றிக் கொண்டு 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
இவர்களது வாகனம் மத்திகிரி கூட்டு ரோடு பக்கமாக சென்றுக் கொண்டிருந்த போது, அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லாரி ஒன்றின் பின்புறம் பயங்கரமாக மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அதில் ஆரியன்சிங் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தான்.
மற்ற இருவரும் பலத்த காயமடைந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மதன், ஹரீஷ் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்ததும் மத்திகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் 3 மாணவர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் 3 மாணவர்கள் பலியான தகவல் அறிந்து கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர், ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அனில் அக்ஷய் வாகரே ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.
இது தொடர்பாக மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஓசூர் அருகே லாரியின் பின்புறம் மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் 3 பள்ளி மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் தனியார் பள்ளியில் படித்து வரும் 3ம் வகுப்பு மாணவி ஆதித்ரி சிங். இவர், கடந்த சனிக்கிழமை தண்ணீர் குடிக்க முயற்சித்த போது பாட்டிலின் பிளாஸ்டிக் ஸ்க்ரூ மூடியில் அவரது நாக்கு சிக்கிக்கொண்டது.
இது ஒரு சாதாரண விஷயம் போலத் தோன்றினாலும், சிறுமி மூடியை அகற்ற முயற்சிக்கும்போது, நாக்கு மேலும் சிக்கிக்கொண்டு வலியால் கதறித் துடித்தார். சிறுமியின் அழுகையை பார்த்து வகுப்பு ஆசிரியர் உடனே உதவி செய்தார்.
ஆனாலும், மூடியை எடுக்க முடியவில்லை. உடனடியாக பள்ளி நிர்வாகம் மாணவியை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது.
அங்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலையில், ராஜேந்திர நகரில் உள்ள ஈ.என்டி நிபுணர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
நுட்பமான அறுவை சிகிச்சை மூலம், மருத்துவர் மூடியை வெட்டி, நாக்கை பாதுகாப்பாக வெளியே எடுத்து, சிறுமியின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். தற்போது மாணவி முழுமையாக மீண்டு, ஆரோக்கியமாக உள்ளார்.
இச்சம்பவம் பெற்றோர்களிடமும் பள்ளிகளிடமும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் தந்தை வினீத் சிங், “பள்ளி ஆசிரியர்களின் சிக்கன நடவடிக்கையும், மருத்துவரின் தன்னலமற்ற சேவையும் என் மகளின் உயிரை காப்பாற்றியது,” என நன்றி தெரிவித்துள்ளார்.
சாதாரணமாகத் தோன்றும் ஒரு விஷயம் கூட குழந்தைகளுக்கு பெரிய ஆபத்தில் முடியலாம் என்பதற்கு ஒரு சரியான எடுத்துக்காட்டு என சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அநுராதபுரத்தில் கெக்கிராவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏ9 வீதியில் மிரிஸ்வத்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் தந்தை உயிரிழந்துள்ளதுடன் தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் படுகாயமடைந்துள்ளதாக கெக்கிராவை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (15.07.2025) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கெக்கிராவையிலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. .
விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த தந்தையும் தாயும் இரண்டு பிள்ளைகளும் படுகாயமடைந்துள்ள நிலையில் கெக்கிராவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கெக்கிராவை பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கெக்கிராவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பாறை அக்கரைப்பற்று பகுதியில் உள்ள மீரா ஓடை குளத்தில் விழுந்து 2 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
தண்ணீரில் மிதந்த குழந்தையை அவதானித்த உறவினர்கள், குழந்தையை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போதும் குழந்தை உயிரிழந்தது.
இன்று தனது இரண்டாவது பிறந்தநாளை கொண்டாடவிருந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது. கடந்த ஜனவரி மாதமும் மீரா ஓடை குளத்தில் விழுந்து 6 வயது பிள்ளையொன்று உயிரிழந்திருந்தது.
இந்த இறப்புகளால் பெரும் சோகத்திற்கு உள்ளாகியுன்ன அப்பகுதி மக்கள், நேற்று (15) மாலை, “மீரா ஓடை குளத்தை சுற்றி பாதுகாப்பு வேலி அல்லது சுவர் கட்டப்பட வேண்டும்” என்று கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.
மாதுளை பழம் மிகவும் சுவையான, சத்துக்கள் நிறைந்த பழம் தான். தினமும் சிறிதளவு சாப்பிடுவது நல்லதுதான். ஹீமோகுளோபின் அதிகரிப்பது முதல் ரத்தத்தை சுத்தப்படுத்துவது வரை நிறைய நன்மைகளை தரும்.
ஆனால் அதை நீங்கள் தப்பா தான் சாப்பிடறீங்கனு உங்களுக்கு தெரியுமா? மாதுளை பழம் சாப்பிடும்போது பொதுவாக செய்யும் 5 தவறுகள் என்ன? அதை ஏன் செய்யக்கூடாது? என்பது பற்றி நாம் இங்கு பார்க்கலாம்.
நிறைய பேர் மாதுளை பழத்தை நறுக்கும்போது ஒழுங்காக நறுக்கத் தெரியாமல் அதன் சாறு முழுக்க கீழே சிந்திவிடுவார்கள். அதிலேயே பாதி சத்துக்கள் வீணாகி போய்விடும். அதோடு பழத்தை மென்று விட்டு அதன் விதைகளை தூக்கி கீழே வீசி விடுவார்கள். அப்படி செய்ய கூடாது.
மாதுளை பழத்தை பொறுத்தவரை அதன் விதைகளையும் சேர்த்து தான் சாப்பிட வேண்டும். அதில்தான் நிறைய ஆண்டி அக்கிட்சிட்டுங்கள் இருக்கின்றன. குறிப்பாக குழந்தைகளுக்கு கொடுக்கும்போது அவர்களுக்கு விதைகளோடு சாப்பிட கற்றுக் கொடுங்கள். பெரும்பாலான குழந்தைகள் விதைகளை துப்பி விடுகிறார்கள்.
மாதுளை சாப்பிடும்போது செய்யும் இரண்டாவது தவறு என்னவென்றால் மாதுளையின் மேல் பகுதி தோலை உரித்தவுடன் அதன் உட்புறத்தில் இருக்கும் மெலிதான வெள்ளை நிற தோல்களை நீக்கிவிட்டு மாதுளையின் முத்துக்களை மட்டும் சாப்பிடுவார்கள். அது மிக மிகத் தவறு.
மாதுளையின் உட்புறத்தில் இருக்கும் மெல்லிய தோலில் உள்ள துவர்ப்புத் தன்மை தான் அந்த பழத்தின் ஒட்டுமொத்த பயன்களையுமே தாங்கி இருக்கிறது. குறிப்பாக அந்த பகுதியில் தான் நார்ச்சத்து இருக்கிறது. அது செரிமான ஆற்றலை மேம்படுத்த உதவி செய்யும். அதை நீக்கிவிட்டால் அதிலுள்ள நார்ச்சத்துக்கள் முழுமையாக நீங்கிவிடும்.
மாதுளை பழம் மட்டுமல்ல எந்த வகை பழமாக இருந்தாலும் அது உடலுக்கு நல்லது என்பதற்காக நிறைய சாப்பிடக் கூடாது. ஏனென்றால் பழங்களில் இயற்கையாகவே சர்க்கரை இருக்கும். அது ரத்தத்தின் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்து விடும்.
குறிப்பாக மாதுளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம். அதிலும் சிலருக்கு குடல் சென்சிடிவிட்டி அதிகமாக இருக்கும். அவர்களுக்கு இந்த அஜீரணக் கோளாறு சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும்.
மற்ற பழங்களையாவது நறுக்குவதற்கு முன்போ பின்போ கழுவிவிட்டு சாப்பிடுவோம். ஆனால் நன்கு யோசித்துப் பாருங்கள். மாதுளை பழத்தை நாம் கழுவுவதே கிடையாது. மாதுளை முத்துக்கள் உள்ளுக்குள் தானே இருக்கிறது என்று உரித்து அப்படியே சாப்பிடுகிறோம். அப்படி செய்யக்கூடாது.
மாதுளை பழத்தின் தோலில் நிறைய பாக்டீரியாக்கள் இருக்கும். அதேபோல பழங்களில் நிறைய பூச்சிக்கொல்லிகள் தெளித்து இருப்பார்கள். அதனால் மாதுளை வெட்டுவதற்கு முன் பழத்தை நன்கு கழுவிவிட்டு தான் நறுக்க வேண்டும்.
இந்தியாவின் மகாராஷ்டிராவில் ஓடும் பேருந்திலேயே டெலிவரி பார்த்து குழந்தையை சாலையில் வீசிக் கொன்ற 19 வயது இளம்பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மகாராஷ்டிராவில் உள்ள பர்பானி பகுதியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண் ரிக்கிகா தேரே. இவரும் அல்தாப் ஷேக் என்ற இளைஞரும் ஸ்லீப்பர் கோச் பஸ் ஒன்றில் புனேயில் இருந்து பர்பானிக்கு பயணம் செய்துள்ளனர்.
ரித்திகா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் பேருந்தில் ஏறிய பிறகு ரித்திகாவிற்கு பிரசவ வலி எடுத்துள்ளது. ஆனால் சத்தமே இல்லாமல் ஸ்லீப்பர் கோச்சுக்குள் அல்தாப் ஷேக்கின் உதவியோடு குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார் ரித்திகா.
அதன்பின்னர் குழந்தையை ஒரு துணியில் சுற்றி ஜன்னல் வழியாக சாலையில் வீசியுள்ளனர். ஜன்னல் வழியாக எதையோ வீசுவதை கண்டு டிரைவர் என்னவென்று விசாரித்தபோது மனைவி வாந்தி எடுத்ததாகவும், அதை கவரில் வைத்து வீசியதாகவும் சமாளித்துள்ளார்.
அல்தாப் ஷேக். ஆனால் குழந்தை துணியில் சுற்றப்பட்டு வீசப்பட்டதை சாலையில் சென்ற ஒரு நபர் பார்த்துள்ளார். பிறந்த சிசு அதில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக அதை போலீஸுக்கு தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் பேருந்தை துரத்தி சென்று நிறுத்திய போலீஸ் அதுகுறித்து பேருந்தில் இருந்தவர்களிடம் விசாரித்தனர். அப்போது ரித்திகா பேருந்தில் ஏறியபோது கர்ப்பமாக இருந்ததும், தற்போது வெறும் வயிறாக இருப்பதையும் கண்டு டிரைவரும், நடத்துனரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பின்னர் ரித்திகாவையும், அல்தாப் ஷேக்கையும் அழைத்துச் சென்று போலீஸார் விசாரித்ததில் அவர்கள் இருவரும் திருமணமானவர்கள் எனக் கூறியுள்ளனர்.
ஆனால் அதற்கு அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. தொடர்ந்து விசாரித்ததில் இருவரும் உல்லாசமாக இருந்ததில் கரு உருவாகிவிட்டதாகவும், அதை ரகசியமாக வெளியேற்ற ஆம்னி பஸ்ஸில் சென்றதாகவும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
சாலையில் வீசப்பட்டதில் அந்த குழந்தை இறந்துவிட்டதாக கூறப்படும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடா அனுப்புவதாக முகவர் ஒருவர் ஏமாற்றிய நிலையில், இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு 8 மில்லியன் ரூபாய் வழங்கிய நிலையில் ஏமாற்றப்பட்ட நபரே உயிரை மாய்த்துள்ளார்.
புங்குடுதீவை சேர்ந்த 34 வயதான செல்வராசா பாஸ்கரன் என்பவரே உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடா அனுப்புவதாக வெளிநாட்டு முகவர் நிறுவனம் ஒன்று எட்டு மில்லியன் ரூபாவை அவரிடமிருந்து பெற்றுள்ளது.
எனினும் இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதும், கனடாவுக்கு அனுப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படாத நிலையில், தனது பணத்தை மீள கேட்டுள்ளார்.
இந்நிலையில் பணத்தை வழங்குவதில் நிறுவனம் இழுத்தடிப்பு செய்து வந்ததுடன், அது குழுவொன்றினால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளம் குடும்பஸ்தர் உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.