யாழில் வீடொன்றில் இன்று அதிகாலை நிகழ்ந்த பயங்கரம்!!

யாழ்ப்பாணம், கொழும்புத்துறை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் இன்று (15) அதிகாலை 5 மணி அளவில் இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பணியாற்றும் சிறைக் காவலாளி ஒருவரின் வீட்டின் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வீடு தீப்பற்றி எரிந்ததை அடுத்து , வீட்டில் உறக்கத்தில் இருந்தவர்கள் எழுந்து தீயினை அணைத்துள்ளதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவி பிள்ளைகள் வெளிநாட்டில் : யாழ் வந்த பிரான்ஸ் வாழ் குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம்!!

பிரான்சில் இருந்து வருகைதந்து மயிலிட்டியில் தங்கியிருந்த குடும்பஸ்தர் ஒருவர் படுக்கையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பிரான்ஸ் வாழ் ,மயிலிட்டி வடக்கைச் சேர்ந்த 54 வயதானவர் என கூறப்படுகின்றது.

மனைவி பிள்ளைகள் பிரான்சில் வசித்துவரும் நிலையில் மூன்று மாதத்திற்கு முன்னர் குறித்த நபர் தாயகம் வந்ததாஅக தெரியவருகின்றது.

இந்நிலையில் மயிலிட்டியில் தங்கியிருந்த போது படுக்கையில் உயிரிழந்த நிலையில் நேற்று (14.07.2025) சடலமாக காணப்பட்டார்.

சடலம் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து : இருவர் பலி!!

மஹியங்கனை – பதுளை பிரதான வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை (15) காலை பயணித்த கார் ஒன்று மஹியங்கனை 17வது மைல்கல்லுக்கு அருகில் வியன கால்வாயினுள் கவிழ்ந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து சம்பவம் இன்று காலை 06:50 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மஹியங்கனை பொலிஸ் பயிற்சி பாடசாலையின் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கால்வாயில் கால்வாயில் கவிழ்ந்த காரை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட வாகனத்தின் உள்ளே இருவர் இருந்துள்ளனர்.

அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மஹியங்கனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அனுமதிக்கப்பட்ட நேரத்தில் இருவரும் உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

உயிரிழந்த இருவரும் மொனராகலை, ஒக்கம்பிட்டியவைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலாடை இன்றி வீதியில் நடந்து சென்ற வெளிநாட்டுப் பெண் கைது!!

அம்பாறை, பொத்துவில் அறுகம் குடா சுற்றுலா தளத்தில் மேலாடை இன்றி நிர்வாணமாக வீதியில் நடந்து சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் பொத்துவில் பொலிஸ் மகளிர் பணியகத்தினால் நேற்று திங்கட்கிழமை (14.07) பிற்பகல் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வெளிநாட்டுப் பெண் அறுகம் குடா சுற்றுலா தளத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்து மற்றுமொரு ஹோட்டலுக்கு மேலாடை இன்றி நிர்வாணமாக நடந்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட வெளிநாட்டுப் பெண் இன்று செவ்வாய்க்கிழமை (15) பொத்துவில் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா மாநகரசபைக்கும் நடைபாதை வியாபாரிகளுக்கும் இடையே முறுகல் நிலமை!!

வவுனியா நகரை அழகுற மாற்றுவதுடன் நகரின் போக்குவரத்து, மக்களின் பாதுகாப்பு ஆகியவற்றினை கருத்தில் கொண்டு வவுனியா மாநகரசபையினால் கடந்த சில வாரங்களாக நடைபாதை வியாபாரம், வர்த்தக நிலையத்திற்கு மேலதிக கூரைகள், அனுமதியற்ற விளம்பர பலகைகள் போன்றன அகற்றப்பட்டு வந்தன.

அந்த வகையில் வவுனியா இலுப்பையடி சந்தி, வைத்தியசாலை வீதி ஆகியவற்றில் நடைபாதையில் கொட்டகை அமைத்து வியாபாரத்தில் ஈடுபடுபவர்களை அவ்விடத்திலிந்து அகன்று போலிஸ் நிலையம் முன்பாக அல்லது மாநகரசபை முன்பாக அமைந்துள்ள மாநகர சபைக்கு உரித்தான வளாகத்தில் வியாபாரத்தில் ஈடுபடுமாறு மாநகரசபை அறிவித்தல் வழங்கியிருந்தமையுடன்,

கடந்த திங்கட்கிழமை அவர்களுடன் மாநகரசபையினர் கலந்துரையாடி இன்று 14.07.2025ம் திகதிக்கு முன்பாக நடைபாதை வியாபாரங்களை அகற்றுமாறும் கால அவகாசம் வழங்கியிருந்தமையுடன் இதற்கு முன்னரும் பல தடவைகள் நடைபாதை வியாபாரத்தினை அகற்றுமாறு தெரிவித்திருத்தமையும் மாநகரசபையினர் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இந்நிலையில் இன்றையதினம் (14.07.2025) பொலிசார் சகிதம் மாநகரசபையினர் குறித்த இடத்திலுள்ள நடைபாதை வியாபார நிலையங்களை அகற்றுவதற்கு சென்றிருந்தனர்.

இதன் போது குறித்த நடைபாதை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டமையுடன் குறித்த வியாபார நிலையங்களை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

எனினும் மாநகரசபையினர் குறித்த நடைபாதை வியாபார நிலையங்களை அகற்றமுற்பட்ட சமயத்தில் மாநகர சபையினருக்கும் நடைபாதை வியாபாரிகளுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முறுகல் நிலமைக்கு சென்றது. அதன் பின்னர் பொலிசார் தலையிட்டு முறுகல் நிலமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பின்னர் பொலிசார் மாநகர முதல்வரிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக நடைபாதை வியாபார இடங்களை அகற்றுவதற்கு இன்று இரவு வரை காலஅவகாசம் வழங்கப்பட்டதுடன் குறித்த நடைபாதை வியாபாரிகளின் கொட்டகைளை அகற்றுவதற்கு மாநகரசபை ஊழியர்களின் ஒத்துழைப்பும் வழங்கப்பட்டது.

அவ்விடத்திலிருந்த சில நடைபாதை வியாபார கொட்டகைகளை வியாபாரிகள் உடனே அகற்றியிருந்தமையுடன் ஏனைய நடைபாதை வியாபார கொட்டகைகள் வியாபாரிகளினால் அகற்றப்பட்டு மாநகர சபையினரினால் ஒதுக்கப்பட்ட இடத்திற்கு செல்வதை அவதானிக்க முடிகின்றது.

61 வயதில் யாழ்ப்பாண நபர் படைத்த சாதனை : வியப்பில் மக்கள்!!

பல்வேறு சாதனைகளை புரிந்து வரும் மட்டுவிலைச் சேர்ந்த செல்லையா திருச்செல்வம் (வயது – 61) என்பவர் நேற்று (13) மட்டுவில் சந்திரபுரத்தில் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

இவர் தனது இரு காதுகளையும் பயன்படுத்தி 2 ஆயிரத்து 50 கிலோ எடை கொண்ட பிக்கப் ரக வாகனத்தை 50 மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் சாதனை புரிந்துள்ளார்.

உலக சாதனையை நிகழ்த்துவதற்காக அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளதுடன் அவர் தனது தாடியால் அதே வாகனத்தை 50 மீட்டர் தூரத்துக்கு இழுத்து மீண்டும் ஒரு சாதனை படைத்துள்ளார்.

 

30 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற முன்னாள் துணை பொலிஸ் அத்தியட்சகருக்கு 14 ஆண்டுகள் கடூழிய சிறை!!

மசாஜ் நிலையம் ஒன்றை இடையூறு இன்றி நடாத்தி செல்வதற்கு 30 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற முன்னாள் துணை பொலிஸ் அத்தியட்சகர் ஒருவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வென்னப்புவ பிரதேசத்தின் முன்னாள் துணை பொலிஸ் அத்தியட்சகருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மசாஜ் நிலையத்தை இடையூறு இன்றி நடாத்திச் செல்ல வேண்டுமானால் இலஞ்சம் வழங்குமாறு பொலிஸ் அதிகாரி கோரியுள்ளார். இதன் அடிப்படையில் மசாஜ் நிலையத்தின் உரிமையாளரான பெண், பொலிஸ் உத்தியோகத்தருக்கு 30000 இலஞ்சம் வழங்கியுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றம் குறித்த உயர் பொலிஸ் அதிகாரிக்கு 14 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை விதித்ததுடன் லஞ்சமாக பெற்றுக்கொண்ட 30000 ரூபாய் குறித்த பெண்ணுக்கு திருப்பி செலுத்த வேண்டும் எனவும் அபராதமாக 30000 ரூபா செலுத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுக்கள் சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 8ம் திகதி ஆயுர்வேத மசாஜ் நிலையம் ஒன்றை இடையூறின்றி நடத்திச் செல்வதற்காக நிலையத்தின் உரிமையாளரிடம் பொலிஸ் உயர் அதிகாரி, 40000 ரூபா லஞ்சமாக கோரியுள்ளார்.

எனினும் அந்த தொகையை குறைத்து குறித்த பெண், பொலிஸ் அதிகாரிக்கு 30000 லஞ்சமாக வழங்கியுள்ளார்.

இலஞ்சம் பெற்றுக்கொண்டமை உள்ளிட்ட 6 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் குறித்த அதிகாரிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நீண்ட வழக்கு விசாரணை பின்னர் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குடும்ப பெண்ணை பலியெடுத்த விபத்து : விசாரணைகள் தீவிரம்!!

கம்பஹாவில் நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீரிகம – பஸ்யால வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (13) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணை

மீரிகமவிலிருந்து பஸ்யால நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த வேனுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெவலபொல பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடையவரும் நிகஹெட்டிகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய பெண்ணொருவருமே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து வேன் சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை அரச அதிகாரிகளுக்கு அதிர்ச்சி செய்தி : சம்பளத்தில் அறவிடப்படும் அபராதம்!!

சொத்து மதிப்பீட்டறிக்கையை சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளுக்கு இன்று(14) முதல் அபராதம் விதிக்கப்படும் என்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மேலும், பல அதிகாரிகள் தங்களது சொத்து மதிப்பீட்டறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாகவும், நாளைய(15) தினத்திற்குப் பின்னர் விபரங்களை சமர்ப்பிக்கும் அரச அதிகாரிகளிடம் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இறுதி முடிவு இன்று

ஆணைக்குழு அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இது தொடர்பில் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அபராதம் விதிப்பது தொடர்பில் இறுதி முடிவு இன்று அறிவிக்கப்படும் என்று ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் தாமதமாகும் நாட்களுக்கான அபராதம் அவர்களின் சம்பளத்தில் அறவிடப்படும்.

ஜூன் 30 ஆம் திகதிக்குள் சொத்து மதிப்பீட்டறிக்கையை சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளுக்கு, மேலும் 02 வாரங்கள் அவகாசம் வழங்கப்பட்டது. அந்தக் காலத்தில் மதிப்பீட்டறிக்கைகளைச் சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எச்சரிக்கை கடிதங்கள் வழங்கப்படும் என்று ஆணைக்குழு அறிவித்துள்ளது.

சலுகைக் காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், மேலும் மதிப்பீட்டறிக்கையை சமர்ப்பிக்காத அதிகாரிகளின் பெயர் பட்டியலை நிறுவனத் தலைவர்கள் எதிர்வரும் நாட்களில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று அறிவித்துள்ளது.

வாகன இறக்குமதியால் ஏற்பட்டுள்ள சிக்கல் : ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்களுக்கு பாதிப்பு!!

இறக்குமதி செய்யப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இன்னும் துறைமுகங்களில் சிக்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.

அவற்றை விடுவிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், அதற்கு உரிய பதிலும் கிடைக்கவில்லை என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் நடத்துமாறு கோரிய போதிலும், இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த வாகனங்களை விடுவிக்காமல் கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களில் வைத்திருப்பதால், தாமத கட்டணங்களை இறக்குமதியாளர்கள் செலுத்த வேண்டியிருக்கும்.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் வேறொரு நாட்டிற்குச் சொந்தமானது என்பதால், செலுத்தப்படும் தாமதக் கட்டணங்கள் அந்த நாடுகளுக்கு டொலர்களில் மாற்றப்படுகின்றன .

கொழும்பு துறைமுகத்தில் உள்ள பெரும்பாலான வாகன நிறுத்துமிடங்களும் தனியார் துறையை சேர்ந்தவை என்பதால், அந்த தாமதக் கட்டணங்களும் அவர்களுக்கு செல்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை மற்றும் கொழும்பு துறைமுகங்களில் சுமார் இரண்டு மாதங்களாக சுமார் 1000 வாகனங்களை விடுவிக்க முடியவில்லை. அதற்கு முன்பு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர்களை செலவிட்ட பின்னர் 1.7 பில்லியன் டொலர் வருமானத்தை அரசாங்கம் எதிர்பார்ப்பதாக சங்கத்தின் செயலாளர் பிரசாத் குலதுங்க தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கையில் ரிக்ரொக் காதலனால் சிறுமிக்கு நேர்ந்த கதி : அதிர்ச்சியில் பெற்றோர்!!

களுத்துறையில் டிக்டொக் மூலம் அறிமுகமான காதலன் ஒருவர் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தப்பியோடிய காதலனை கைது செய்ய பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். வடக்கு களுத்துறை பொலிஸ் பிரிவில் வசிக்கும் மாணவி, ஜனவரி மாதம் ரிக்ரொக் மூலம் ஒருவருடன் அறிமுகமானார்.

இந்நிலையில் பெப்ரவரி மாதம் சிறுமி ரிக்ரொக் காதலனை தனது வீட்டிற்கு அழைத்து வந்து, தமது காதலை வெளிப்படுத்தியுள்ளார். சிறுமியின் பெற்றோரும் அவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் சிறுமியின் வீட்டில் காதலன் இரவை கழித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 10 ஆம் திகதி குறித்த சிறுமி உடல்நலக்குறைவு காரணமாக தனது தந்தையுடன் ஹொரணை மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

இதன் போது சிறுமி கர்ப்பம் தரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ரிக்ரொக் காதலனின் முழுப் பெயரோ முகவரியோ தனக்கு தெரியாது என சிறுமி குறிப்பிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வடக்கு களுத்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துஷார டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் காத்திருந்தவருக்கு அதிர்ச்சி!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்தின் குற்றப் புலனாய்வு பிரிவினால் நேற்று மாலை 150 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்களுடன் இந்திய நாட்டவர் கைது செய்யப்பட்டார்.

49 வயதான இந்தியர் இந்தியாவிலிருந்து இலங்கை வழியாக டுபாயிற்கு பயணம் செய்து கொண்டிருந்தார்.

அவர் இந்தியாவில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து டுபாய்க்கு விமானத்தில் ஏற விமான நிலையத்தில் காத்திருந்தபோது கைது செய்யப்பட்டார்.

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்திற்குள் பணம் மற்றும் தங்க நகைகளுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாகவும் இது தொடர்பாக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இந்திய பிரஜையிடம் 45 மில்லியன் ரூபாவுக்கும் மேல் மதிப்புள்ள 1,500 கிராம் தங்கம், 30 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள 103,700 அமெரிக்க டொலர்கள், 50 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 688,000 சவுதி ரியால்,

15 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள 335,000 திர்ஹாம்கள் மற்றும் 7 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள 21,500 யூரோக்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

 

இந்தியாவில் விவாகரத்து பெற்றதை கொண்டாடும் வகையில் பால் குளியல்!!

இந்தியாவை சேர்ந்த நபரொருவர், தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றதைக் கொண்டாடும் விதமாக 40 லீற்றர் பாலில் குளிக்கும் வகையில், வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.

இந்தியாவின் அசாம் மாநிலத்தின் நல்பாரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணிக் அலி என்பவரே தனது விவாகரத்தை இவ்வாறு கொண்டாடியுள்ளார்.

மாணிக் அலி பாலில் குளித்தவாறு “நான் விடுதலையாகிவிட்டேன்” எனக் கூறி வெளியிட்டுள்ள இந்த காணொளி 3 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.

அவரின் இந்த செயலை சிலர் பாராட்டி வருவதுடன், ஏனையோர் பாலை வீணடித்ததாக அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

 

ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட பேருந்துகள் : நால்வர் படுகாயம்!!

மஹரகம, நாவின்ன பகுதியில் இன்று (14) மணியளவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.

நாவின்ன பேருந்து நிறுத்தத்திலிருந்து பிரதான வீதிக்குள் நுழைந்த பேருந்து, மஹரகமவிலிருந்து கொழும்பு நோக்கி பிரதான வீதியில் பயணித்த மற்றொரு பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் தற்போது களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது விபத்துக்குள்ளான பேருந்து பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதோடு, மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லைத்தீவில் இளம் குடும்பஸ்தரின் மரணத்தால் சோகத்தில் தவிக்கும் குடும்பம்!!

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரந்தன் – முல்லைத்தீவு வீதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பரந்தனில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கிய பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்திசையில் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இருவர் மற்றும் பின் இருக்கையில் பணித்த நபர் ஒருவர் சிகிச்சைக்காக மூங்கிலாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு,

பின்னர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.​ சம்பவத்தில் 37 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் தற்போது மாஞ்சோலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கடலில் மூழ்கிய இரு வெளிநாட்டுப் பிரஜைகள் மீட்பு!!

மிரிஸ்ஸ கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இரண்டு வெளிநாட்டுப் பிரஜைகள் கொடவில பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) காலை இடம்பெற்றுள்ளது. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவனும் 17 வயதுடைய யுவதியுமே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் மிரிஸ்ஸ கடலில் நீராடிக்கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கியுள்ளனர். இதன்போது அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த கொடவில பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர், கடலில் மூழ்கிய இரு வெளிநாட்டுப் பிரஜைகளையும் காப்பாற்றி அவர்களுக்கு முதலுதவி அளித்துள்ளனர்.