கட்டிக்கொண்டிருக்கும் போதே தரைமட்டமாக இடிந்து விழுந்த 7 மாடி கட்டிடம் : 18 பேர் பலி!!

தரைமட்டமாக இடிந்து விழுந்த 7 மாடி கட்டிடம்

கம்போடியா நாட்டின் தென்மேற்கு பகுதியில் கட்டிடம் இடிந்து தரைமட்டமான விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. தென்கிழக்கு ஆசிய கண்டத்தில் அமைந்துள்ள நாடு கம்போடியா. இந்நாட்டின் சிஹானோக்வில்லி நகரில், சீனாவை சேர்ந்த ஒரு நிறுவனம் 7 மாடிகளைக் கொண்ட புதிய கட்டிடத்தை உருவாக்கி வருகிறது.

இந்த கட்டிடத்தின் 80 சதவித பணி நிறைவடைந்த நிலையில், தொழிலாளர்கள் நேற்று வழக்கம்போல் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மொத்த கட்டிடமும் சில நொடிகளில் நொறுங்கி விழுந்து தரைமட்டமானது.

இந்த கோர விபத்தில் வேலையில் ஈடுபட்டிருந்த சுமார் 50 தொழிலாளர்கள் சிக்கினர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டனர். அவர்களில் 20க்கும் அதிகமானவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக, உள்ளூர் ஊடகங்கள் முதல் கட்டமாக செய்தி வெளியிட்டன.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காயமடைந்தவர்களில், சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன்மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 24 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கவனக்குறைவு காரணமாகவே இந்த துயர சம்பவம் நடந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு தலா 10 ஆயிரம் டொலர்கள் இழப்பீட்டை அரசு வழங்கும் என்றும், அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.

உணவுக்குழாய் இல்லாமலே பிறந்து முதன்முறையாக உணவை சுவைக்க போகும் குழந்தை!!

பஞ்சாப் மாநிலத்தில் உணவுக்குழாய் இல்லாமலே பிறந்த ஏஞ்சல் என்கிற குழந்தை முதன்முறையாக உணவை சுவைக்க உள்ளார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஏஞ்சல் என்கிற குழந்தை பிறக்கும் போதே உணவுக்குழாய் இல்லாமல் பிறந்துள்ளார்.

அவரது உடலுடன் வெளிப்புறமாக இணைக்கப்பட்ட செயற்கை குழாய் மூலமாகவே திரவ உணவு பெற்று வந்தார். மகளின் அறுவை சிகிச்சைக்காக அவருடைய தந்தை சொந்த வீட்டையே அடமானம் வைக்க தயாராகியிருந்தார். இதனை அறிந்த சமூகநல அமைப்புகள் பல தாமாக உதவ முன்வந்தன.

இந்த நிலையில் இரண்டரை வருடங்களுக்கு பின் முதன்முறையாக ஏஞ்சலிற்கு முழு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவருடைய மாமா பங்கஜ் கூறுகையில், ஏஞ்சல் மற்ற குழந்தைகள் போலவே இருக்க ஆசைப்பட்டாள். அவர்கள் உணவு சுவைப்பதை பார்த்துவிட்டு அடிக்கடி சமைலயறைக்கு ஓடிவருவாள்.

பலகட்ட அறுவைசிகிச்சைக்கு பின் முதன்முறையாக உணவை சுவைக்க இருக்கிறாள். அவளுடைய அறுவை சிகிச்சைக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

லண்டனில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட மனைவி : விசாரணையில் கணவனின் உண்மை முகம் அம்பலம்!!

கொலை செய்யப்பட்ட மனைவி

பிரித்தானியாவில் மனைவியை கொடூரமாக கொலை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தலைநகரான லண்டனின் Ilford பகுதியைச் சேர்ந்தவர் Muhammad Javed. 59 வயதாகும் இவருக்கு Saeeda Hussain என்ற 54 வயது மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஐந்து பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு 13-ஆம் திகதி பிப்ரவரி மாதம் Muhammad Javed தன்னுடைய மனைவியை கொலை செய்துவிட்டேன் என்று கூறி காவல்நிலையத்தில் சரணடைந்தார். பாகிஸ்தான் விமானப்படையில் 20 ஆண்டுகள் பணியாற்றிய இவர் அதன் பின் பிரித்தானியாவிற்கு குடி பெயர்ந்துள்ளார்.

இதையடுத்து இவரை கைது செய்த பொலிசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் இது தொடர்பான வழக்கு விசாரணையும் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. Saeeda Hussain சின்ன டெய்லரிங் தொழில் செய்து வந்துள்ளார். அப்போது அவரிடம் வரும் வாடிக்கையாளர்களிடம் இவர் சகஜமாக பேசி பழகியுள்ளார். இதைக் கண்ட Muhammad Javed-வுக்கு மனைவி மீது சந்தேகம் ஏற்பட, தொடர்ந்து அவரை பாலியல் ரீதியாக மற்றும் உடல் ரீதியாக தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார்.

திருமணம் ஆன 30 ஆண்டுகளில் பல ஆண்டுகள் அவர் இந்த கொடுமையை சந்தித்து வந்துள்ளார். இது குறித்து பொலிசாரிடம் புகார் அளித்தால், கணவர் நாடு கடத்தப்படலாம், இது அவமானமாக இருக்கும் என்று கருதி அவர் கூறாமல் இருந்து வந்துள்ளார்.

அப்படி ஒரு கட்டத்தில் இருவரும் ஒரே அறையில் தூங்கும் போது, தன் மனைவி Saeeda Hussain-னின் முதுகில் ஏதோ ஒன்று ஒரு வித அடையாளத்தை கண்டுள்ளார். இதனால் சந்தேகத்தின் உச்சிக்கு சென்ற அவர் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சுத்தியலால் அவரை தாக்கி கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார்.

அதன் பின் சம்பவ தினத்தன்று மாலை 6 மணிக்கு காவல்நிலையத்தில் மனைவியை கொலை செய்துவிட்டேன் என்று கூறி சரணடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்த போது, அவரது மகள் Sidra Hussain கூறுகையில், என்னுடைய அம்மா நல்லவர், என் அப்பா தான் அவரை கொலை செய்துவிட்டார். எங்களுடைய குடும்பத்திற்காகவே என் அம்மா வாழ்ந்து வந்தார் என்று கண்ணீருடன் கூறியுள்ளார். இதையடுத்து நீதிபதி Muhammad Javed-வுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

விவகாரத்து வாங்கிய மனைவிக்கு அடித்த அதிர்ஷ்டம் : நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!!

அர்ஜெண்டினாவைச் சேர்ந்த பெண் ஒருவர் விவாகரத்து வாங்கிய நிலையில், அவர் தன்னுடைய முன்னாள் மனைவிக்கு 145,000 டொலர் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

அர்ஜெண்டினாவின் Comodoro Rivadavia பகுதியைச் சேர்ந்த தம்பதி கடந்த 1982-ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர்.

சுமார் 30 ஆண்டு காலம் மகிழ்ச்சியாக சென்ற இவர்கள் வாழ்க்கையில், கடந்த 2011-ஆம் ஆண்டு விவகாரத்திற்கு முடிவு செய்துள்ளனர். ஆனால் என்ன காரணத்திற்காக விவகரத்து என்ற தகவல் இல்லை.

இத்தனை ஆண்டுகள் மனைவி எங்கும் வேலைக்கு செல்லாமல் தொடர்ந்து வீட்டு வேலை செய்து வந்ததால், அவர் தற்போது வயதான நிலையில்(60 வயது) உள்ளதால், இனி எங்கும் வேலைக்கு செல்ல முடியாது, பிள்ளைகளும் அவருடன் செல்ல விரும்பாததால் அவர்களுக்கு தேவையான செலவு மற்றும் திருமணம் ஆகியவற்றின் அடிப்படையில் கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் விவாகரத்து வாங்கிய போதும், மனைவியின் வயதை கருத்தில் கொண்டும், அவரின் எதிர்காலம் மற்றும் பொருளாதார தேவைகளின் அடிப்படையில் அவர் 145,000 டொலர் அவர் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

கனடாவில் இந்திய இளம்பெண் கொலை வழக்கில் புதிய திருப்பம்!!

இளம்பெண் கொலை

கனடாவில் வாழ்ந்து வந்த இந்திய இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளிக்கு உதவியதாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கனடாவின் சர்ரே பகுதியில் வசித்து வந்த பஞ்சாபைச் சேர்ந்த பவ்கிரண் தேசி (19) கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 1 ஆம் திகதி வெளியே சென்று வருவதாக தனது பெற்றோரிடம் கூறி விட்டு சென்றவர் அதற்குப்பின் வீடு திரும்பவில்லை.

பின்னர் எரிந்த நிலையில் இருந்த அவரது காருக்குள் உயிரற்ற நிலையில் தேசியின் உடல் கண்டு பிடிக்கப்பட்டது. அவரது உடலில் இருந்த காயங்களின் அடிப்படையில், பொலிசார், தேசி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர்.

இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக மே மாதம் 10ஆம் திகதி ஹர்ஜோத் சிங் டியோ (21) என்பவர் பொலிசாரிடம் சிக்கினார். ஹர்ஜோத் சிங் டியோவும் பவ்கிரண் தேசியும் காதலித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், ஹர்ஜோத் சிங் டியோவின் தாயாகிய Manjit Kaur Deo (53), கிரண் தேசியின் கொலைக்கு உதவியதாக கைது செய்யப்பட்டார்.

பின்னர் ஹர்ஜோத் சிங் டியோவின் சகோதரியும் Manjit Kaur Deoவின் மகளுமான Inderdeep Kaur Deo, (23) என்பவரும் கைது செய்யப்பட்டார். அதன் பின்னரும் மேலும் சிலருக்கு இந்த சம்பவத்துடன் தொடர்பு இருப்பது தங்களுக்கு தெரியும் என்றும், அவர்கள் தாங்களாகவே வந்து சரணடையுமாறும் பொலிசார் கோரியிருந்தனர்.

இந்நிலையில் மேலும் இருவர் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்தாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர்கள் Gurvinder Singh Deo (25) மற்றும் Talwinder Singh Khun Khun (22) என நீதிமன்ற ஆவணங்களிலிருந்து தெரியவந்துள்ளது. இந்த இருவர் மீதும், கொலைக்குப் பின் கொலையாளிக்கு உதவியது மற்றும் இறந்த உடல் ஒன்றை தகாத முறையில் நடத்தியது ஆகிய குற்றங்கள் சாட்டப்பட்டுள்ளன.

இதற்கிடையில், பல ஆண்டுகளாக டயாலிசிஸ் சிகிச்சை, மற்றும் பல அறுவை சிகிச்சைகளுக்கு உள்ளான தேசிக்கு, இறப்பதற்கு முன் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

திருணம் முடிந்த 30 வினாடிகளில் குழந்தை பெற்றெடுத்த மணப்பெண்!!

குழந்தை பெற்றெடுத்த மணப்பெண்

அமெரிக்காவின் நியூஜெர்ஸியை மாகாணத்தை சேர்ந்த தம்பதிக்கு திருமணம் முடிந்த 30 வினாடிகளிலேயே குழந்தை பிறந்துள்ளது. அமெரிக்காவில் “இது எங்கள் கதை என்று எங்களால் நம்ப முடியவில்லை” என்னும் தலைப்பின் கீழ் ஒவ்வொரு வாரமும் வெளியாகும் கதைகளில், இந்த வாரம், மைக்கேல் கல்லார்டோ மற்றும் மேரி மார்கரிடோண்டோ தம்பதியினர் தங்களுடைய வாழ்வில் நடந்த நிகழ்வினை பகிர்ந்துள்ளனர்.

நியூஜெர்ஸியை மாகாணத்தை சேர்ந்த மைக்கேல் கல்லார்டோ மற்றும் மேரி மார்கரிடோண்டோ என்கிற தம்பதியினர் தங்களுக்கு குழந்தை பிறப்பதற்கு முன்பே திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவு செய்துள்ளனர். ஆனால் மூன்று வாரத்திற்கும் முன்னதாகவே திடீரென மேரிக்கு நீர்க்குடம் உடைந்தது. உடனடியாக மேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு குழந்தை பிறப்பதற்கு முன் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என தம்பதியினர் விரும்பியுள்ளனர். இதனை கேட்ட செவிலியர்கள் வேகமாக ஆளுக்கொரு திசையில் ஓடி, திருமணத்திற்கான வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தனர்.

பின்னர் திருமணம் முடிந்த உடனே மேரி அறுவை சிகிச்சை பிரிவிற்கு கொண்டு செல்லப்பட்டார். அடுத்த 30 வினாடிகளில் அவருக்கு மைக்கேல் என்கிற அழகிய குழந்தை பிறந்ததாக தெரிவித்துள்ளனர்.

சுவிஸில் 130 ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்பட்ட துயரம் : எச்சரித்தும் தடுக்கத் தவறிய நிர்வாகம்!!

130 ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்பட்ட துயரம்

சுவிட்சர்லாந்தின் போண்டோ கிராமத்தில் ஏற்பட்ட மிக மோசமான நிலச்சரிவானது அதிகாரிகளின் மெத்தனத்தால் ஏற்பட்டது என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சார்ப்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. குறித்த நிலச்சரிவில் சிக்கி ஜேர்மனி, ஆஸ்திரியா, சுவிஸ் நாட்டவர்கள் 8 பேர் கொல்லப்பட்டதுடன் ஏராளமான குடியிருப்புகள் இந்த பேரழிவில் சேதமடைந்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நடந்த இந்த பேரழிவானது முன்னறிவிக்கப்படவில்லை எனவும், இதனால் மண்டல நிர்வாகத்தின் மெத்தனம் என எவரையும் குற்றஞ்சாட்ட முடியாது எனவும் Graubunden மண்டல நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் வெள்ளியன்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் சார்பாக வழக்கறிஞர் ஒருவர், போண்டோ கிராமத்தில் ஏற்பட்ட பேரழிவானது முன்னெச்சரிக்கை விடுத்தும், மண்டல நிர்வாகத்தால் எந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என ஆதாரத்துடன் முறையிட்டுள்ளார்.

நிலச்சரிவு ஏற்படுவதற்கு 2 வாரங்கள் முன்னரே அதற்கான அறிகுறிகள் Piz Cengalo மலைப்பகுதியில் தென்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து, ஒரு வாரத்தில் அல்லது 30 நாட்களில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளமையும் நிபுணர்களால் கணிக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் மண்டல நிர்வாகம் அதை கருத்தில் கொள்ளவில்லை எனவும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள தவறியது எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். கிழக்கு சுவிட்சர்லாந்தில் உள்ள போண்டோ கிராமத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் Piz Cengalo மலைப்பகுதியில் இருந்து சுமார் மூன்று மில்லியன் கன மீற்றர் அளவுக்கு பாறை கீழே விழுந்தது.

இது அப்பகுதியில் பெரும் நிலச்சரிவை ஏற்படுத்தியது. சுவிஸ் வரலாற்றில் கடந்த 130 ஆண்டுகளில் நடந்த மிக மோசமான நிலச்சரிவு இது எனவும் நிபுணர்களால் பதிவு செய்யப்பட்டது. வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 8 பேர் கொல்லப்பட்டதுடன், சுமார் 500,000 கன மீற்றர் அளவுக்கு இடிபாடுகளும் மண்ணும் கீழே பாய்ந்தன.

இளைஞரை மூக்கால் காலணியை துடைக்க வைத்த கொடூரம் : அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம்!!

இந்தியாவில் இளைஞர் ஒருவரை மூக்கால் காலணியை துடைக்க வைத்து கொடுமை செய்த வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மாண்ட்சர் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் இளைஞர்களிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் இளைஞர் ஒருவரை தனது மூக்கின் மூலம் அங்கிருந்தவர்களின் காலணிகளை துடைக்க சொல்லி கொடுமைப் படுத்தியுள்ளனர்.

இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்த இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இந்த சம்பவத்தை அடுத்து பாதிக்கப்பட்ட இளைஞர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஒரு வாரமாக இளைஞர் வீடு திரும்பாததால் பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் எதற்காக அந்த இளைஞரை மூக்கால் காலணியை துடைக்க சொல்லி கொடுமை படுத்தினர் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலிஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

இதனிடையே இளைஞரை மூக்கால் காலணியை துடைக்க சொல்லி கொடுமை படுத்திய வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி பல அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

மனைவிக்கு மார்பக புற்றுநோய் : கணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு : ஒரு தாயாரின் கலங்கவைக்கும் பதிவு!!

அவுஸ்திரேலிய தாயார் ஒருவர், தமது கணவர் இரு பிள்ளைகளுடன் தம்மையும் தவிக்கவிட்டு சென்ற காரணத்தை வெளிப்படுத்தியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் பெர்த் பகுதியை சேர்ந்தவர் காமிலே. மார்பக புற்றுநோயில் இருந்து மீண்ட இவர், தமது போராட்டத்தை தனியார் செய்தி ஊடகம் ஒன்றிற்கு பகிர்ந்துள்ளார்.

அதில், தமது இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்த சில நாட்களில், சந்தேகத்தின் பேரில் பரிசோதனை மேற்கொண்ட போது, தமக்கு மார்பக புற்றுநோய் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்ததாக தெரிவித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தாம் மேற்கொண்ட சோதனைகளில் இது தெரியவந்தது என கூறும் காமிலே,

திருமணம் முடிந்து பல ஆண்டுகள் குழந்தை இல்லாத நிலையில், நீண்ட 3 ஆண்டுகள் செயற்கை கருவுறுதலுக்காக முயற்சித்து தோல்வி கண்டதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் அதன் பின்னர் இருமுறை இயற்கையாகவே கருவுற்று தற்போது இரு பிள்ளைகளையும் பெற்றெடுத்துள்ளதாக கூறும் காமிலே,

தமது மகளுக்கு பாலூட்டும் போதே, மார்பில் கட்டி இருப்பதாக உணர்ந்துள்ளார். ஆனால் அதை அவர் கருத்தில் கொள்ளவில்லை.

இந்த நிலையில் சுமார் 10 மாதங்களுக்கு பின்னர், தமது இரண்டாவது மகனை பிரசவிப்பதற்கு ஒரு வாரம் முன்னர், இன்னொரு கட்டி இருப்பதாக கண்டறிந்துள்ளார் காமிலே.

இதை தமது செவிலியரிடம் தெரிவித்து மருத்துவ சோதனைக்கும் தம்மை உட்படுத்தியுள்ளார்.

இது ஒருபுறமிருக்க, தமது கணவரிடம் இருந்து எவ்வித ஆதரவும் தமக்கு கிடைப்பதில்லை என்ற நிலை ஏற்பட்டது அவருக்கு.

மட்டுமின்றி, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதையே அவர் மறுத்துள்ளார். மேலும், இது வெறும் மார்பக புற்றுநோய் தானே என ஏளனமாக பதிலளித்துள்ளார்.

இதனையடுத்து காமிலே கணவர் தமது நிறுவனத்திலேயே அதிக நேரம் செலவிட துவங்கியுள்ளார். காமிலே, புற்றுநோய்க்கான சிகிச்சையுடன், இரு பிள்ளைகளையும் கவனிக்கும் பொறுக்கு தள்ளப்பட்டார்.

மட்டுமின்றி, கவலை, பதட்டம் காரணமாக சிறப்பு சிகிச்சையும் எடுத்துக் கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

இந்த காலகட்டத்தில், கடவுள் துணைபோன்று, அவரது தோழிகளும் உறவினர்களும் வந்து உதவி செய்துள்ளனர்.

மார்பக புற்றுநோயில் இருந்து மீண்ட காமிலே தற்போது, தமது நிலை குறித்து மொத்தமும் தெரிந்த ஒரு நபரை திருமணம் செய்துகொள்ளும் முடிவில் இருக்கிறார்.

அந்த புகைப்படத்தை நீக்கிவிடுங்கள் : பெற்ற தாயிடம் கண்ணீர் விட்டு அழுத மகள் : நடந்தது என்ன?

இந்தியாவில் மத்திய அமைச்சராக இருக்கும் ஸ்மிருதி இரானி தன் மகளுடன் எடுத்த புகைப்படத்தை நீக்கிவிட்டு அதற்கான காரணத்தை ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.

சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில், அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியைத் தோற்கடித்து, மத்திய அமைச்சராகியிருப்பவர் ஸ்மிருதி இரானி.

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, ஜவுளித்துறை அமைச்சராக இருக்கும் ஸ்மிருதி இரானி தன் மகள் ஜோயிஷ் இரானியுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார்.

அதை வைத்து பள்ளிக்கூடத்தில் சக மாணவர்கள் ஜோயிஷ் இரானியைக் கேலியும் கிண்டலும் செய்துள்ளனர். அவருடைய முகத்தோற்றம் குறித்து ஏளனமாக கமென்ட் அடித்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த ஜோயிஷ் இரானி, தன் தாயிடம் கண்ணீருடன் அது பற்றி தெரிவித்ததுள்ளார். மேலும், அந்த செல்பி புகைப்படத்தை நீக்குமாறும் கூறியிருக்கிறார்.

அதைக் கேட்டுக் கோபமடைந்த ஸ்மிருதி இரானி, உடனே அந்தப் புகைப்படத்தை நீக்கிவிட்டார். வகுப்பறையில் ஒரு முட்டாள் கேலிசெய்ததால், என் மகளுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை நீக்கிவிட்டேன் என்று இன்ஸ்டாகிராமில் ஸ்மிருதி தெரிவித்தார்.

அதே நேரத்தில், அந்தப் படத்தை இன்ஸ்டாகிராமிலிருந்து நீக்கியது, தவறான அந்த நபருக்குச் சாதகமான விஷயம் என்பதைப் பிறகு உணர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

கடலில் மூழ்கி தந்தை, இரு மகள்மார் பரிதாபமாக மரணம் : உயிரிழந்தவர்களின் விபரம் வெளியானது!!

உயிரிழந்தவர்களின் விபரம்

கிரிந்த கடலில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரில் தந்தை மற்றும் இரண்டு மகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

திஸ்ஸமாராம கிரிந்த கடலில் நீராட சென்ற குடும்பத்தினர் கடல் அலையில் சிக்குண்டு கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதன்போது தந்தையும் ஒரு மகளும் பலியானதுடன் தாயும் மற்றுமொரு மகளும் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி மற்றைய மகளும் உயிரிழந்துள்ளார்.

பாதிப்படைந்த தாய் மேலதிக சிகிச்சைக்களுக்காக ஹெலிகொப்டர் உதவியுடன் அம்பாறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த அனர்த்தம் காரணமாக ஹட்டன் பகுதியை சேர்ந்த 42 வயதான விஜேசூரிய என்பவரின் குடும்பமே பாதிக்கப்பட்டுள்ளது. எட்டு மற்றும் நான்கரை வயதுடைய பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவரின் மனைவி நுவரெலியாவிலுள்ள வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருவதாகவும் கடந்த வெள்ளி கிழமை வங்கியில் பணி புரியும் ஊழியர்களுடன் யால பகுதிக்கு சுற்றுலா சென்றதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை கிரிந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்த சிறுவர்களின் தற்போதைய நிலை!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வரும் 7 சிறுவர்களுக்கு நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை இதனை அறிவித்துள்ளது.

எனவே உதவி செய்ய விரும்புவோர் 0112778911 அல்லது 2778912 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர். குறித்த சிறுவர்கள் 7 பேருக்கும் மண்டையோடுகளில் பாரிய காயங்கள் ஏற்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் 23 சிறுவர்கள் கொல்லப்பட்டனர். 72 சிறுவர்கள் காயமடைந்தனர். இவர்களுக்கு மனநல ஆலோசனைகள் தேவைப்படுவதாக சிறுவர் அதிகாரசபையின் தலைவர் எச்.எம்.அபேரட்ன தெரிவித்துள்ளார்.

இன்று காலையில் நடந்த பெரும் சோகம் : தந்தையும் மகளும் பலி : தாயும் மற்றுமொரு மகளும் மீட்பு!!

நடந்த பெரும் சோகம்

கிரிந்த – யால கடற்பரப்பில் நீராட சென்ற தந்தை மற்றும் மகள் அலையில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த அனர்த்தத்தின் போது தாயும் மற்றுமொரு மகளும் மீட்கப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியாவை சேர்ந்த குடும்பம் ஒன்றே இந்த அனர்தத்திற்கு முகங்கொடுத்துள்ளது. இந்த சோகமான சம்பவம் இன்று காலையில் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையில் பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ள புதிய நடைமுறை!!

பேஸ்புக்

வெறுப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய கருத்துகளை பரப்பும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் சிறந்த முறையில் தொழில்படும் முயற்சியை பேஸ்புக் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கின் இந்த நடவடிக்கைகள் தற்போது இலங்கை மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான செய்திகள் சென்றடைபவர்களின் எண்ணிக்கையினை 5 ஆக பேஸ்புக் மட்டுப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருட ஆரம்பத்தில வட்ஸ் அப் சமூக வலைதளம் செய்தி பரிமாற்றலை மட்டுப்படுத்தியுள்ளது.

ஏனைய நாடுகளில் 20 பாவனையாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்தலாம் என்ற நிலையில், இந்தியாவில் ஆக கூடியது 4 பேருக்கு மட்டுமே இந்தக் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பூமியோடு தொடர்பு கொள்ள முயற்சிக்கும் வேற்றுகிரகவாசிகள்!!

வேற்றுகிரகவாசிகள்

பூமியோடு தொடர்பு கொள்ளும் முயற்சியாக, வேற்றுகிரகத்தில் இருந்து மூன்று விரிவான தகவல்கள் பூமிக்கு வந்துள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விடயத்தை சுட்டிக்காட்டி அரச ஊடகமொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும், கலிபோர்னியாவில் உள்ள வேற்று கிரக நுண்ணறிவுகளை (SETI) தேடும் திட்ட அமைப்பு, வேற்றுகிரகவாசிகள் குறித்த ஆழமான விண்வெளி ஆய்வுகளின் தொகுப்பை இதுவரை இல்லாத அளவுக்கு வெளியிட்டுள்ளது.

இந்த அமைப்பு செயற்கை சமிக்ஞைகள், வானொலி அலைகள் மற்றும் விண்வெளியில் மேம்பட்ட வாழ்க்கைக்கான ஆதாரம் ஆகியவற்றிற்காக 1,300இற்கும் மேற்பட்ட அன்னிய நட்சத்திரங்களை SETI ஸ்கேன் பகுப்பாய்வு செய்து தகவல்களை வெளியிட்டுள்ளது.

10,73,741,824 மெகாபைட் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதுடன், இது 1,600 ஆண்டுகள் தொடர்ந்து இசை கேட்க கூடிய தகவல் கொள்ளளவு ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியோடு தொடர்பு கொள்ளும் முயற்சியாக வேற்றுகிரகத்தை சேர்ந்த உயிரினங்கள் மூன்று விரிவான தகவல்களை பூமிக்கு அனுப்பியுள்ளதாக திட்ட விஞ்ஞானி டாக்டர் டேனி பிரைஸ் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் நாசா, ரஷ்ய நாட்டை சேர்ந்த விண்வெளி ஆய்வு நிலையம் ஆகிய இரண்டு அமைப்புகளும் தான் வேற்றுகிரக உயிரினங்கள் அனுப்பிய தகவல்களை பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், கிடைத்த தகவல்கள் குறித்து விண்வெளி ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த தகவல்கள் குறித்து அவர்களால் தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை. பூமியை விட்டு மிக தொலைவில் உள்ள விண்மீன் ஒன்றிலிருந்து கிடைத்துள்ள குறித்த சமிக்ஞைகள் குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து 8000 பேரை நாடு கடத்த நடவடிக்கை!!

இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் 8000 வெளிநாட்டவர்களை நாடுகடத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக உள்நாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

விசா நிறைவடைந்த நிலையிலும் நாட்டில் தங்கியிருக்கும் சுமார் 8000 வெளிநாட்டவர்களை நாடு கடத்துவதற்கும், அவர்களிடம் அபராதம் வசூலிப்பதற்கும் அமைச்சரவையின் அனுமதி பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் புலனாய்வு பிரிவினால் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது 7,900 வெளிநாட்டவர்கள் தங்கள் விசா நிறைவடைந்தும் இலங்கையில் தங்கியிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டு பணிப்பாளர் பசான் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதிகமானவர்கள் சுற்றுலா விசாக்களில் இலங்கை வந்திருந்த போதிலும், தற்போது கட்டுமான தளங்கள், உணவகங்கள், விவசாயத் துறை மற்றும் வணிக நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் எனவும், அவர்களில் பெரும்பாலோர் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பசான் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இவர்களில் 1,680 பேர் இந்தியாவில் இருந்தும், 936 பேர் பாகிஸ்தானில் இருந்தும், 683 பேர் சீனாவில் இருந்தும், 291 பேர் மாலைத்தீவில் இருந்தும், 152 பேர் பங்களாதேஷில் இருந்தும், 42 ஜப்பானில் இருந்தும் வந்துள்ளனர்.

ஏனைய 541 பேர் நெதர்லாந்தில் இருந்தும், 167 பேர் உக்ரைனில் இருந்தும், 172 பேர் சவுதி அரேபியாவில் இருந்தும், 157 பேர் ரஷ்யாவில் இருந்தும், 157 லெபனானில் இருந்தும், 155 பேர் அவுஸ்திரேலியாவில் இருந்தும், 130 பேர் நைஜீரியாவில் இருந்தும், 110 பேர் பிரான்ஸில் இருந்தும், 44 பேர் பிரித்தானியாவில் இருந்து வந்தவர்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

அமைச்சரவை ஒப்புதல் பெற்றதன் பின்னர், குறித்த வெளிநாட்டவர்கள் கொழும்பில் ஒரு இடத்திற்கு அழைத்து வரப்பட்டு நாடுகடத்தப்படும் வரை அங்கேயே தடுத்து வைக்கப்படுவார்கள் எனவும் பசான் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.