கணவனின் தொடர் கேலியால் 25 கிலோ உடல் எடையை குறைத்த இளம் மனைவி எடுத்த அதிரடி முடிவு!!

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண், தனது கணவனின் தொடர்ச்சியான மன உளைச்சல் மற்றும் உடல் கேலி காரணமாக தற்பொழுது ஒரு அதிரடியான முடிவை எடுத்துள்ளார்.

திருமணமான நாள் முதலே அந்தப் பெண் சற்று பருமனான உடல் அமைப்பைக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனைப் பெரிதாகக் காட்டி அவதூறாகப் பேசி வந்த அவரது கணவர், நீ குண்டாக இருப்பதால் நமக்குக் குழந்தையே பிறக்காது எனப் பொதுமக்களின் முன்னிலையிலும், உறவினர்கள் மத்தியிலும் மிகக் கொடூரமாகக் கேலி செய்து வந்துள்ளார்.

கணவனின் இந்தத் தொடர்ச்சியான அநாகரிகமான பேச்சுக்கள் மற்றும் மனிதாபிமானமற்ற உடல் கேலியால் (பாடி ஷேமிங்) அந்த இளம்பெண் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்.

இருப்பினும், அவரது பேச்சால் முடங்கிப் போகாமல், அதனை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு தற்பொழுது தீவிர உடல் பயிற்சி மற்றும் முறையான உணவுப் பழக்கவழக்கங்களை அவர் மேற்கொண்டார்.

இதன் மூலம் குறுகிய காலத்திலேயே அவர் தனது உடல் எடையில் சுமார் 25 கிலோவை அதிரடியாகக் குறைத்து ஒட்டுமொத்த உறவினர்களையும் வியப்பில் ஆழ்த்தினார்.

தனது அழகிய தோற்ற மாற்றத்திற்குப் பிறகும், தன்னை மதிக்காத அந்தக் கணவருடன் இனிமேல் வாழ்வது அர்த்தமற்றது எனத் தீர்மானித்த அந்தப் பெண் தற்பொழுது ஒரு விசித்திரமான அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

அதன்படி, அவர் குடும்ப நல நீதிமன்றம் மூலமாகத் தனது கணவருக்கு அதிகாரப்பூர்வ விவாகரத்து நோட்டீஸை அதிரடியாக அனுப்பி வைத்துள்ளார்.

உருவத்தைக் கேலி செய்த கணவனுக்குப் பாடம் புகட்டும் வகையில், உடல் எடையைக் குறைத்துக் காட்டிவிட்டு விவாகரத்து கோரியுள்ள அந்தப் பெண்ணின் இந்தத் துணிச்சலான முடிவு தற்பொழுது இணையதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

 

கிளிநொச்சியில் கோர விபத்து : மூன்று நாட்களுக்கு பின் உயிரிழந்த மாணவன்!!

கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் சிக்கி படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் பரந்தன் பகுதியில் தனது சைக்கிளில் வழமை போன்று பயணித்துக் கொண்டிருந்தபோதே கடந்த 17ஆம் திகதி இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவனின் சைக்கிளுக்குப் பின்னால் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிர்பாராத விதமாகக் கட்டுப்பாட்டை இழந்து சைக்கிள் மீது மிகக் கொடூரமாக மோதித் தள்ளியுள்ளது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு தலை மற்றும் உடலில் பலத்த காயங்களுக்குள்ளான மாணவனை, அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக மீட்டு கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அது பலனளிக்காமல் மாணவன் உயிரிழந்துள்ளார்.

விபத்துத் தொடர்பாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபரைக் கிளிநொச்சி பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளின் அதிவேகமே இந்த விபத்துக்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடுதியாக அதிகரித்த பால் மாவின் விலை : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!!

இறக்குமதி செய்யப்படும் பால் மா விலை அடுத்த வாரத்திற்குள் உரிய விலையில் சந்தைக்கு வெளியிடப்படும் என்று அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

தற்போது சந்தையில் உள்ள எந்தவொரு இறக்குமதி செய்யப்பட்ட பால்மா பைக்கட்டின் விலை அதிகரிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதாலும், டொலரின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதாலும், எதிர்காலத்தில் பல இறக்குமதிப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என்று சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். புதிய விலை திருத்தத்தின்படி, 400 கிராம் பால் மா பக்கெட்டின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒரு கிலோ கிராம் பால் மா பக்கெட்டின் விலை 125 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது. அதன்படி, புதிய கையிருப்புகள் சந்தைக்கு வரும்போது விலை உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் பெறுமதியிழப்பைச் சந்தித்துள்ள இலங்கை ரூபா : அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்கிறது!!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை பாரியளவில் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரூபாவின் பெறுமதி கடுமையாக வலுவிழந்து, டொலரின் பெறுமதி வேகமாக உயர்ந்து வருவதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், எதிர்காலத்தில் இறக்குமதிப் பொருட்கள் பலவற்றின் விலைகள் அதிகரிக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன.

குறிப்பாக இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையில் பாரிய அதிகரிப்பை எதிர்நோக்கக் கூடும் என்று அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, சீனி, பருப்பு, அரிசி உள்ளிட்ட பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கக் கூடும் என்று அந்த எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!!

இலங்கையின் இன்று (20) தங்கத்தின் விலையில் சிறிய வீழ்ச்சி பதிவாகியுள்ளது. நாட்டில் நேற்றைய தினம் (19) 393,000 ரூபாயாக விற்பனையான 24 கரட் தங்கம் ஒரு பவுண், இன்று 1,000 ரூபாயால் குறைவடைந்து 392,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

தற்போதைய சந்தை நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 392,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, 22 கரட் தங்கம் ஒரு பவுண் 360,600 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 49,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 45,075 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக, மேலும் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சாரதியின் அசமந்தம் : பேருந்து சில்லில் சிக்குண்டு இளைஞன் உயிரிழப்பு!!

பொகவந்தலாவ பேருந்து நிலையத்திலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணிக்கத் தயாராக இருந்த தனியார் பேருந்தின் சில்லில் சிக்குண்டு இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாகப் பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் துயர சம்பவம் இன்று (20) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பொகவந்தலாவ பேருந்து நிலையத்திலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணிக்கத் தயாராக இருந்த தனியார் பேருந்தை இயக்கச் செய்துவிட்டு, சாரதி கீழே இறங்கியுள்ளார்.

அப்போது பேருந்தின் தடையாளி சரியாக இயங்காததன் காரணமாக, பேருந்துக்கு முன்னால் நின்றுகொண்டிருந்த இளைஞன் மீது பேருந்தின் சக்கரம் ஏறி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் 27 வயதுடைய புஷ்பகுமார சிந்துஜன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் நோர்வூட், சென்ஜோன் டிலரி மேல்பிரிவு தோட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்றும், திருமணம் முடித்து வவுனியா, செட்டிக்குளம் பகுதியில் வசித்து வந்தவர் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குழாய் நீர் அகழும் வேலைத்திட்டத்திற்காகத் தன் குழுவினருடன் வவுனியாவிலிருந்து பொகவந்தலாவ பகுதிக்கு அவர் வருகை தந்திருந்தபோதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி பொகவந்தலாவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் தற்போது பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் அதிர்ச்சி : நடத்துனர் இன்றி பயணிகளுடன் பயணித்த இ.போ.ச பேருந்து!!

வவுனியாவில் இருந்து செட்டிகுளம் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான (இ.போ.ச) பேருந்து ஒன்று, நடத்துனர் இல்லாமலேயே பயணிகளுடன் பயணித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து மாலை 6.30 மணியளவில் செட்டிக்குளம் நோக்கிப் பயணிப்பதற்காக இ.போ.ச பேருந்து ஒன்று தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.

இப்பேருந்து வீரபுரம் வீதி ஊடாகச் சென்றுகொண்டிருந்த போது, அதில் கடமையில் இருந்த நடத்துனர் மதுபோதையில் இருப்பதாக செட்டிக்குளம் பிரதேச சபையின் உப தவிசாளர் தேவசகாயம் சிவானந்தராசா அவர்களுக்குத் தொலைபேசி ஊடாகப் பயணிகள் தரப்பில் இருந்து முறைப்பாடு ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, உப தவிசாளர் சிவானந்தராசாவின் தலையீட்டுடன், செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் பொலிசாரின் உதவியோடு குறித்த பேருந்து மறிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது, பேருந்தினுள் நடத்துனர் எவரும் இல்லை என்ற அதிர்ச்சித் தகவல் கண்டறியப்பட்டது.

இது குறித்து பேருந்தின் சாரதியிடம் வினவியபோது, “நடத்துனர் தனது தனிப்பட்ட காரணத்திற்காக வழியிலேயே பேருந்தை விட்டு இறங்கிச் சென்றுவிட்டார்” என அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அரச போக்குவரத்துச் சபையின் விதிகளின்படி, நடத்துனர் இன்றி பயணிகள் பேருந்து ஒன்றை இயக்குவது முற்றிலும் சட்டத்திற்கு முரணான செயலாகும்.

இவ்வாறானதொரு பொறுப்பற்ற சம்பவம் இடம்பெற்ற போதிலும், இதுவரை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

யாசகம் பெற்று தமிழ்நாடு அரசுக்கு 1 கோடி வழங்கிய முதியவர்!!

முதியவர் ஒருவர் யாசகம் பெற்று தமிழ்நாடு அரசுக்கு சுமார் ரூ.1 கோடி வழங்கியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகாவின் ஆங்கினார் கிராமத்த்தை சேர்ந்தவர் 75 வயதான பூல் பாண்டியன்.

இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உண்டு. மும்பையில் பணியாற்றிய இவர், குழந்தைகளுக்கு திருமணம் செய்து தனது இல்லற கடமைகளை முடித்த பின்னர், அவரது மனைவி இறந்து விட்டார்.

மனைவி இறந்த பின்னர் வீட்டை விட்டு வெளியேறி யாசகம் பெற்று வாழ்க்கையை நடத்த தொடங்கிய இவர், யாசகம் மூலம் கிடைத்த பணத்தை வைத்து சுமார் 40 அரசு பள்ளிகளுக்கு நாற்காலி, விளையாட்டு உபகரணங்கள் குடிநீர் இயந்திரங்கள் போன்றவற்றை வழங்கியுள்ளார்.

கொரோனா காலத்தில் மதுரையில் இருந்த இவர், யாசகம் பெற்று ஒவ்வொரு மாதமும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.10,000 மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளார். இவ்வாறாக 10 மாதங்களில் ரூ.1 லட்சம் வழங்கினார்.

அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் வினய், சுதந்திர தினவிழாவில் அவருக்கு சிறப்பு விருது வழங்கி கவுரவித்தார். யாசகர் ஒருவர், இதுபோன்ற அரசு விழாவில் கவுரவிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

அதைத்தொடர்ந்து, கள்ளக்குறிச்சி தவிர்த்து தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் நிவராண நிதி வழங்கியுள்ளார்.

கொரோனா நிவாரண நிதி, வெள்ள நிவாரண நிதி, இலங்கை தமிழர் நிவாரண நிதி என தமிழக அரசுக்கு இதுவரை சுமார் ரூ.1.60 கோடி வழங்கியுள்ளார்.

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், தற்போது ரூ10,000 முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.

 

2 மில்லியன் ரூபாயை மோசடி செய்த கட்டார் ஏர்வேஸ் : விசாரணையை தொடங்கிய கோட்டை பொலிசார்!!

பணம் பெற்றுக் கொண்டு விமான சேவை வசதிகளை வழங்காத குற்றச்சாட்டின் கீழ் கட்டார் விமான சேவைக்கு எதிராக பொலிஸாரிடம் முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து இலண்டன் மற்றும் இலண்டனில் இருந்து கொழும்பு வரைக்கும் பயணங்களை மேற்கொள்வதற்கு பயணிகள் சிலர் கொழும்பில் உள்ள தனாடா ட்ராவல் நிறுவனத்தின் ஊடாக கட்டார் விமான சேவையில் விமானப் பயணச் சீட்டுக்களை கொள்வனவு செய்திருந்தனர்.

மத்திய கிழக்கு யுத்த நிலையைக் காரணம் காட்டி குறித்த விமான வழித்தடத்தில் பயணங்களை இடைநிறுத்திய கட்டார் விமான சேவை நிறுவனம்,

விமானப் பயணிகளின் முன்பதிவுக்கான கட்டணங்களை கடந்த இரண்டு மாதங்களாக திரும்ப வழங்கவில்லை என்று கூறப்படுகின்றது. சுமாராக இரண்டு மில்லியன் ரூபா பணம் அவ்வாறு திரும்ப வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதாகவும்,

பல்வேறு தடவைகளில் அதனை ஞாபகமூட்டியபோதும் கட்டார் விமான சேவை நிறுவனம் தட்டிக் கழித்து வருவதாகவும் குறித்த ட்ராவல் நிறுவனம் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளது.

அதன் பிரகாரம் கொழும்பு கோட்டை பொலிஸார், கட்டார் விமான சேவைக்கு எதிரான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வாகன இறக்குமதி கட்டுப்பாடு குறித்து வெளியான அறிவிப்பு!!

இவ்வாண்டின் ஏப்ரல் மாத இறுதி வரையான காலப்பகுதியில் மொத்தம் 178,000 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் வைத்து நேற்றைய தினம் (18.05.2026) அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த இறக்குமதித் தொகையினுள் மோட்டார்சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வெளிவாரிச் சூழல்களைக் கருத்திற் கொண்டு, வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சுங்கத் தீர்வை மீதான 50 சதவீத கூடுதல் கட்டணம் மூன்று மாத காலத்திற்கு விதிக்கப்பட்டிருந்ததாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதலாம் இணைப்பு

2026ஆம் ஆண்டில் இலங்கையில் வாகன இறக்குமதிக்காக அதிகளவிலான அந்நியச் செலாவணி செலவிடப்பட வாய்ப்புள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், கடந்த ஆண்டில் வாகன இறக்குமதிக்காக முன்னதாகக் கணிக்கப்பட்ட 1.5 பில்லியன் முதல் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை விடவும் அதிகமாக, தலா 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை செலவிடப்பட்டுள்ளது.

இவ்வாறான அதிகளவிலான இறக்குமதி காரணமாக, வாகன இறக்குமதி வரி மற்றும் தீர்வுகள் மூலம் திறைசேரிக்குக் கிடைக்கும் வருவாயும் அதிகரித்துள்ளது.

2026ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் (முதலாம் காலாண்டில்) மட்டும் வாகன இறக்குமதிக்காக ஏற்கனவே சுமார் 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.

தற்போது நிலவும் இதே போக்கு இந்த ஆண்டின் எஞ்சிய மாதங்களிலும் தொடருமானால், 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் மொத்த வாகன இறக்குமதிச் செலவு தோராயமாக 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டக்கூடும்.

இது கடந்த ஆண்டின் ஒட்டுமொத்த செலவினத்தையும் விட அதிகமாகும். நிதி அமைச்சானது கடந்த ஆண்டை விடவும் 2026இல் வாகன இறக்குமதி குறையும் என்றே கணித்திருந்தது.

எனினும் தற்போதைய தரவுகள் அந்த எதிர்பார்ப்புகளையும் தாண்டி இறக்குமதி அதிகரிக்கலாம் என்பதைக் காட்டுகிறது.

இருப்பினும், இந்த வாகன இறக்குமதி அதிகரிப்பானது அரசாங்கத்தின் வருவாய் இலக்குகளில் எந்தவொரு எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்பதற்கான அறிகுறி எதுவும் தற்போது வரை இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாடு ஆசை : காதலனுடன் சேர்ந்து தாயை கொன்ற மகள் : பொலிஸ் விசாரணையில் புதிய தகவல்கள்!!

அநுராதபுரம் திருப்பனை பகுதியில் 65 வயது தாயை கொடூரமாக கொலை செய்ததாக அவரது 32 வயது இளைய மகளும், அவரது காதலன் என கூறப்படும் 25 வயது இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் அனுராதபுரம் நீதிமன்றத்தில் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகளில், உயிரிழந்த தாய் சுமார் 24 ஆண்டுகளாக வெளிநாட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்ததாகவும், சமீபத்தில் நாட்டுக்கு திரும்பியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், கொலைக்கு முன்னதாக தாயிடம் இருந்த சுமார் 10 லட்சம் ரூபா பணம் மற்றும் தங்க நகைகளை திருடியுள்ளதாகவும், அந்த பணம் மற்றும் நகைகளை எடுத்துக்கொண்டு வெளிநாடு செல்லும் திட்டத்துடன் இந்தக் கொலை சம்பவம் மேற்கொள்ளப்பட்டதாகவும் சந்தேகநபர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரச பேருந்தின் பின்னால் தறிகெட்டு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த துயரம்!!

திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியபாலம் பகுதியில் இன்று (19) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவர் காயமடைந்துள்ளார்.

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த அரச பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தோப்பூரிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த அரச பேருந்தின் பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள், வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் பேருந்தின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மீண்டும் சிக்கலை ஏற்படுத்தும் வாகன இறக்குமதி விவகாரம் : அதிக விலையால் ஏற்படவுள்ள கடும் பாதிப்பு!!

வாகன இறக்குமதி தொடர்பான எதிர்காலக் கொள்கைகள், தேவையின் அடிப்படையில் மட்டுமே இறக்குமதியை அனுமதிக்கும் வகையில் வகுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் திணைக்களத்தின் பொருளியல் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

உண்மையான தேவை இல்லாமல் வாகனங்களை இறக்குமதி செய்வது, நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்புக்கு தேவையற்ற செலவினத்தை ஏற்படுத்துகிறது என்று பேராசிரியர் துனுசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், வாகன இறக்குமதியாளர்கள் சமீபகாலமாக அதிக எண்ணிக்கையில் வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதால், வாகன விற்பனையகங்களில் விற்கப்படாத வாகனங்கள் குவிந்து கிடப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய கூடுதல் கட்டணக் கட்டமைப்பின் காரணமாக, இறக்குமதியாளர்கள் வாகனங்களை அதிக விலைக்கு விற்பதன் மூலம் அதிக இலாபம் ஈட்டுவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளனர் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

எனவே, உண்மையான தேவைகளுக்கு ஏற்ப மட்டுமே வாகன இறக்குமதி அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், பற்றாக்குறையாக உள்ள அந்நியச் செலாவணியைச் சுரண்டும் வகையில் அது இருக்கக்கூடாது என்றும் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கட்டுப்பாடற்ற இறக்குமதியை அனுமதிப்பது, விற்பனையகங்களில் வாகனங்கள் குவிக்கப்படுவதற்கும், அதே நேரத்தில் அதிக சந்தை விலையில் அதீத இலாபம் ஈட்டுவதற்கும் வழிவகுக்கும் என்று அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

பியர் தயாரிப்பிற்கு அரிசி – சீனியை பயன்படுத்த தடை விதிக்குமாறு கோரி வழக்கு!!

பியர் தயாரிப்பிற்கான பிரதான மூலப்பொருட்களாக அரிசி மற்றும் சர்க்கரையைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என கலால் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட தரப்பினருக்கு உத்தரவிடக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அனுமதிப்பத்திரம் பெற்ற மதுபான சில்லறை விற்பனையாளர்கள் குழுவொன்றினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில் சிலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம், கலால் திணைக்கள அதிகாரிகள், இலங்கை தரநிர்ணய நிறுவனம், சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட சிலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

கலால் கட்டளைச் சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ், பியர் என்பது தானியத்திலிருந்து தயாரிக்கப்படும் ஒரு புளித்த மதுபானம்’ என வரையறுக்கப்பட்டுள்ளது.

எனினும், தற்போதுள்ள பெரும்பாலான உற்பத்தியாளர்கள் பியர் தயாரிப்பில் அரிசி மற்றும் சர்க்கரையை முக்கிய பொருட்களாகப் பயன்படுத்துகின்றனர்.

இது கலால் சட்ட விதிகளுக்கு முற்றிலும் முரணானது என மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரச நிதியுதவி மற்றும் பெருமளவிலான மானியங்களுடன் உற்பத்தி செய்யப்படும் அரிசி, பியர் தயாரிப்பு போன்ற வணிகத் தொழில்களுக்குத் திருப்பிவிடப்படுவதால், அது தேசியப் பொருளாதாரத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதாக அவர்கள் வாதிட்டுள்ளனர்.

இத்தகைய நடைமுறைகளால், அரிசி உற்பத்தியில் இலங்கை தன்னிறைவை அடைவதில் பெரும் சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என மனுதாரர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மதுபான உற்பத்தித் தரங்களைக் கண்காணிப்பதற்கான தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப, இலங்கை கட்டளைகள் நிறுவனம் தனது ஒழுங்குமுறை கட்டமைப்பைப் புதுப்பிக்கவில்லை எனவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எனவே, பியர் தயாரிப்பில் அரிசி மற்றும் சர்க்கரையை முதன்மைப் பொருட்களாகப் பயன்படுத்துவதற்கு, கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் அனுமதி வழங்குவதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு மனுதாரர்கள் நீதிமன்றத்திடம் கோரியுள்ளனர்.

யாழில் தங்க சங்கிலியுடன் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி : விரைந்து செயற்பட்ட பொலிசார்!!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் நெல்லியடி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று(18.05.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பருத்தித்துறை பகுதியில் வீதியில் நின்ற பெண்ணொருவரின் ஒரு பவுண் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அறுத்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்களை வீதியில் நின்ற ஏனையவர்கள் மடக்கி பிடிக்க முற்பட்ட போதிலும், அவர்கள் தமது நவீன ரக மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி சென்றுள்ளனர்.

இருந்த போதிலும், மோட்டார் சைக்கிள் இலக்கத்தை குறித்துக் கொண்டுவார்கள், அது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

விரைந்து செயற்பட்ட பொலிஸார் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு சம்பவம் தொடர்பில் அறிவித்ததையடுத்து , நெல்லியடி பகுதி ஊடாக குறித்த மோட்டார் சைக்கிளில் இருவரும் தப்பி செல்வதை கண்ணுற்று, நெல்லியடி பொலிஸார் இருவரையும் மடக்கி பிடித்துள்ளனர்.

விசாரணைகளின் போது, அறுக்கப்பட்ட தங்க சங்கிலி அவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் TIN எண் பெறுவோருக்கு அவசர எச்சரிக்கை!!

வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN – Taxpayer Identification Number) பெறுவோருக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி தவறான தகவல்களை சமர்ப்பித்து வரி செலுத்துவோர் அடையாள எண்ணைப் பெறும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இன்றுவரை, வரி செலுத்துவோர் அடையாள எண்ணுக்காகப் பதிவுசெய்த நபர்களின் எண்ணிக்கை 13 மில்லியனைத் தாண்டியுள்ளதாக தெரியவருகிறது.

வரி செலுத்துவோர் அடையாள எண் என்பது இலங்கையில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (Inland Revenue Department – IRD) வழங்கும் தனித்துவமான அடையாள எண்ணாகும்.

வரி தொடர்பான செயல்பாடுகள், வருமான வரி தாக்கல், வேலைவாய்ப்பு, வங்கி பரிவர்த்தனைகள், இறக்குமதி/ஏற்றுமதி போன்றவற்றுக்கு இது கட்டாயமாகத் தேவைப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.