மொரட்டுவை, கொரலவெல்ல ஜூபிலி வீதி கடற்கரை பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மரணம் தொடர்பில் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மொரட்டுவை, கொரலவெல்ல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவரது மரணம் தொடர்பான மர்மத்தைக் கண்டறிய மொரட்டுவை பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த மரணம் ஒரு திட்டமிடப்பட்ட படுகொலையா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் முதற்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்த பெண்ணுடன் அண்மையில் தனிப்பட்ட தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று பெண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது அவர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருகின்றன.
மேற்படி பெண் தனிப்பட்ட குரோதம் காரணமாகக் கொலை செய்யப்பட்டாரா அல்லது கடலில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டாரா என்பது குறித்துப் பொலிஸார் பல கோணங்களில் ஆராய்ந்து வருகின்றனர்.
“மரணத்துக்கான உண்மையான காரணம் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையின் பின்னரே உறுதிப்படுத்தப்படும்” என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மொரட்டுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியா – பண்டாரிக்குளம் பகுதியில் பல்பொருள் அங்காடி ஒன்றுக்குள் புகுந்து பெண் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், கத்திக்குத்து சம்பவத்துடன் தொடர்புடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பண்டாரிகுளம், முனியப்பர் கோயில் வீதியில் உள்ள அடுக்குமாடி வளவுக்குள் அமைந்துள்ள கடையில் இந்தக் கத்திக்குத்து சம்பவம் நேற்று (23.02) இடம்பெற்றிருந்தது.
சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளர், வவுனியா பொலிஸ் நிலைய குற்றத் தடுப்புப் பிரிவில் முறைப்பாட்டை பதிவு செய்திருந்தார்..
இந்த முறைப்பாட்டுக்கமைய, வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.எஸ்.வீரரத்தின வழிகாட்டலில், வவுனியா பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி இலங்கசிங்க தலைமையில்,
பொலிஸ் சார்ஜன்டுகளான திஸாநாயக்க (37348), ரேவத (40878) பொலிஸ் கொன்ஸ்தாபிள நவகீதன் (8098) உள்ளடங்கிய பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு துரிதமாகச் செயல்பட்டு கத்தித்குத்தை மேற்கொண்ட பெண்ணை உடனடியாக கைது செய்தனர்.
கூமாங்குளம் பகுதியில் வசிக்கும் 50 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
இதனையடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அடிப்படையில், அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக துப்பரவு வேலை செய்து வந்ததாகவும்,
அங்கு வாடகை அடிப்படையில் தங்கியிருந்த 64 வயதுடைய பெண் ஒருவருக்கும் அங்கு துப்பரவு பணி வேலை செய்துவரும் குறித்த சந்தேகநபருக்கும் இடையில் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக சந்தேகநபரை அடுக்குமாடிக் குடியிருப்பின் உரிமையாளர் வேலையில் இருந்து நிறுத்தியுள்ளார்.
இந்த முரண்பாடு காரணமாகவே வேலையால் நிறுத்தப்பட்ட பெண்ணால் குறித்த கத்திக்குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கத்திக்குத்துக்கு இலக்கான பெண் ஆபத்தான நிலையில் வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின் கைது செய்யப்பட்ட பெண்ணை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
மனைவி மற்றும் பிள்ளைகள் இலங்கைக்கு வந்த நிலையில், இத்தாலியின் பெசாரோவில் நடந்த வீதி விபத்தில் இலங்கையர் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகி உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் இலங்கையை சேர்ந்த 48 வயதான அஞ்சு ஜெயசிங்க எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கடந்த 16 ஆம் திகதி அதிகாலை 5.20 மணியளவில், தனது பணியிடத்திற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, வேகமாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது.
இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய வாகனம் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் அதே வழியில் பயணித்த குப்பை அகற்கும் தொழிலாளர்கள் குழு, இலங்கையர் காயங்களுடன் வீதியோரத்தில் கிடப்பதைக் கண்டு அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
எனினும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இலங்கையர் சுமார் 15 ஆண்டுகளாக இத்தாலியில் பணிபுரிந்து வருவதாக கூறப்படும் நிலையில், விபத்தை ஏற்படுத்திய சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
களுத்துறை வாத்துவ – மொரந்துடுவ வீதியின் மெலேகம பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்து நேர்ந்த போது இரண்டு பேருந்துகளிலும் பயணிகள் எவரும் இருக்கவில்லை எனவும், விபத்தில் காயமடைந்த இரண்டு பேருந்து சாரதிகளும் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
விபத்தில் சிக்கிய சாரதி ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாத்துவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கிரிபெரியவைச் சேர்ந்த 81 வயதான நிமல் சில்வா, க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் கணித பாடத்தில் தோற்றியுள்ளமை பேசுபொருளாக மாறியுள்ளது இது ஒரு தனிப்பட்ட சாதனையாக மட்டுமல்லாமல், தேசிய கல்வி முறையின் நிலை குறித்து அரசாங்கத்திற்கு ஒரு வலுவான செய்தியை அனுப்புவதையும் நோக்கமாக கொண்ட நடவடிக்கையாகும்.
நடைமுறை வாழ்க்கைக்கு அவசியமானது என்று அவர் நம்பும் அடிப்படை எண்கணிதத்திலிருந்து விலகிச் செல்வதற்காக தற்போதைய பாடத்திட்டத்தை சில்வா வினவினார்.
“கடந்த காலத்தில், மாணவர்கள் முக்கிய திறன்களை மையமாகக் கொண்ட ஒரு அர்ப்பணிப்புள்ள எண்கணித வினாத்தாளினைக் கொண்டிருந்தனர் என அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இன்றைய தேர்வுகள் பல தேர்வு கேள்விகள் மற்றும் சிக்கலான வடிவங்களால் ஆதிக்கம் செலுத்துகின்றன, அவை மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதை விட குழப்பத்தை ஏற்படுத்துகின்றன.
சீர்திருத்தத்திற்கு அழைப்பு விடுத்த சில்வா, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு அதே வினாத்தாளில் தேர்ச்சி பெற முடியுமா என்று பார்க்க, அவர்களையும் முயற்சிக்குமாறு சவால் விடுத்துள்ளார்.
புத்தளம் – அடப்பனாவில்லு பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில், சிறுவனொருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரத்மல் ஓயா பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனொருவனே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கூரிய ஆயுதத்தால் தாக்கி 72 வயதான முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் நேற்று கொலை செய்யப்பட்டார்.
முச்சக்கர வண்டியில் பயணித்த போதே இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். சம்பவத்தின் பின்னர், முச்சக்கரவண்டியுடன், சாரதியிடமிருந்த பணத்தையும் திருடிக் கொண்டு சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார்.
இந்த நிலையில், முச்சக்கர வண்டி மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரான சிறுவனும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கபப்ட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடம் நவம்பர் மாதம் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் நுவரெலியா, லிந்துலை மெராயா பகுதியிலிருந்து ஹென்போல்ட் தோட்டத்திற்கு செல்லும் பகுதியில் ஆக்ரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இரும்பு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்தது. இதன் காரணமாக, அந்தப் பகுதியில் போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால், லிந்துலை – ஹென்போல்ட் தோட்டத்திற்கு கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள மிளகுசேனை, ஊட்டுவெளி, சென்ட்ரல் கிளாஸ் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 800-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக ஆபத்தான முறையில் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
சிறியளவில் மழை பெய்தாலே ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து, மக்கள் அந்த வழியாகச் செல்ல முடியாத நிலை உருவாகிறது.
இவ்வாறான சூழ்நிலைகளில், அவர்கள் 5 கிலோ மீற்றர் தூரம் சுற்றுச் வீதியை பயன்படுத்த வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் நாட்களில் பலத்த மழை பெய்து திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், கிராம மக்கள் முழுமையாக வெளியேற முடியாத அபாய நிலையும் உருவாகலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
இதன் தாக்கம் கல்வித்துறையிலும் கடுமையாக வெளிப்படுகிறது. லிந்துலை மெராயா தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 450-க்கும் மேற்பட்ட மாணவர்கள், தினமும் ஆற்றைக் கடக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
மாணவர்கள் தமது பாதணிகளை கையில் எடுத்துக்கொண்டு ஆற்றை கடந்து, மறுபுறம் கால்களை சுத்தம் செய்து மீண்டும் பாதணிகளை அணிந்து பாடசாலைக்குச் செல்கின்ற காட்சிகள் பரவலாகக் காணப்படுகின்றன.
ஆசிரியர்கள், அரச மற்றும் தனியார் அலுவலக உத்தியோகத்தர்களும் இதே முறையில் பயணம் மேற்கொள்கின்றனர்.
குறிப்பாக, சிறுவயது மாணவர்களை பெற்றோர் தோளில் தூக்கிச் சுமந்து, ஆற்றின் நடுவே கடந்து பாடசாலைக்கு அனுப்பி வைக்கும் அவல நிலை தொடர்கிறது. இதுதொடர்பாக கிராம மக்கள் தெரிவிக்கையில்,
“விவசாயமே எங்களின் வாழ்வாதாரம். உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளைப் பெற நுவரெலியா பிரதான நகரம் அல்லது மெராயா நகரத்திற்குச் செல்ல வேண்டியுள்ளது.
ஆனால், வெள்ளத்தில் சேதமடைந்த பாலம் இதுவரை புனரமைக்கப்படாததால், ஆற்றில் இறங்கி பெரும் சிரமங்களுக்கிடையே பயணம் செய்கிறோம்.
அத்தியாவசிய மற்றும் விவசாயப் பொருட்களை வாங்கிய பின்னர், அவற்றை தலைச்சுமையாக ஆற்றைக் கடந்து கொண்டு வருவது மிகுந்த சிரமமாக உள்ளது.
பல நேரங்களில் முதியவர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் சில பொருட்களை ஆற்றில் தவறவிடும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.
நீர்மட்டம் அதிகரிக்கும் நேரங்களில், முச்சக்கரவண்டி அல்லது இருசக்கர வாகனங்களில் 5 கிலோமீற்றர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது” என்றனர்.
எனவே, உடனடியாக தற்காலிக பாலம் ஒன்றை அமைத்து பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்தக் கோரிக்கை நீண்ட காலமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததால், மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.
வவுனியா ஈரற்பெரியகுளம் மயானத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்தப்பகுதியில் சடலம் ஒன்று உள்ளமை தொடர்பாக ஈரற்பெரியகுளம் பொலிசாருக்கு இன்று காலை தகவல் வழங்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து அந்தபகுதிக்கு சென்ற பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சுமார் 40-45 வயது மதிக்கத்தக்க ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் இதுவரை சடலம் அடையாளம் காணப்படவில்லை என பொலிசார் தெரிவித்தனர். அவரது உடலில் சிறுபகுதி தீயினால் எரிந்துள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மொனராகலையிலுள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக காயமடைந்த சிசிச்சை பெற்று வந்த நிலையில் தாயை அடுத்து மகளும் உயிரிழந்துள்ளார்.
புத்தல-மொனராகலை வீதி உள்ள நமண்டியபகுதியில் உள்ள அவர்களின் வீட்டின் அறையில் தீ விபத்து ஏற்பட்டிருந்தது. உயிரிழந்தவர் ஜே.எம். ஒனெல்யா என்ற 03 வயதுடையவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த 16 ஆம் திகதி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தந்தை, தாய் மற்றும் மகள் ஆகியோர் தீ விபத்தில் காயமடைந்து மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கராபிட்டிய போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் சுராஜி சகுந்தலா 26 வயதான தாய் உயிரிழந்தார். கராபிட்டிய போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று மாலை உயிரிழந்தார்.
தந்தை தொடர்ந்தும் கராபிட்டிய போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பில் புத்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் மருத்துவராக பணியாற்றி வந்த 31 வயதான மருத்துவர் செல்வராஜா பிரணவசோதி MBBS திடீர் மரணம் மட்டக்களப்பு மக்களுக்கு பெரும் துயரத்தை ஏறடுத்தியுள்ளது.
மருத்துவர் செல்வராஜா பிரணவசோதி சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் (20) உயிரிழந்துள்ளார் .
அம்பாறை காரதீவை பிறப்பிடமாக கொண்ட மருத்துவர் செல்வராஜா பிரணவசோதி மட்டக்களப்பு அரசடியில் வசித்து வந்துள்ள நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சேவையாற்றி வந்துள்ளார்.
கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மருத்துவ படிப்பை நிறைவு செய்து பின் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் கடமையாற்றி பின் மட்டக்களப்பு வைத்தியசாலையில் கடமையாற்றிவந்த திறமையான ஒரு மருத்துவர் ஆவார்.
இந்நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இளம் மருத்துவரின் திடீர் மரணம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
தனித்து , குரங்கு பொம்மையுடன் திரிந்து பெருமளவு இணையவாசிகளின் மன்ம் கவர்ந்த குரங்குட்டி தற்போது குரங்கு கூட்டத்துடன் இணைந்துள்ள காணொளி வெளியாகியுள்ளது.
ஜப்பானில் உள்ள ஓர் உயிரியல் பூங்காவில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மக்காவ் வகை குரங்கு குட்டிகளை ஈன்றது. இதில் ஒரு குட்டியை மட்டும் அந்த தாய் குரங்கு விரட்டியது.
உயிரியல் பூங்கா நிர்வாகிகள் அந்தக் குட்டிக் குரங்குக்கு தனியிடத்தை ஏற்பாடு செய்து அது விளையாடி மகிழ உர்ராங் உடான் வகை குரங்கு பொம்மையைக் கொடுத்தனர்.
இந்தக் குரங்குக் குட்டிக்கு `பஞ்ச்’ என்று பெயர் வைத்தனர். அந்த பொம்மையுடன் குட்டிக் குரங்கு விளையாடி வந்த வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது .
மக்காவ் குரங்குகள் மிகவும் புத்தி கூர்மையானவை. பனி பிரதேசத்தில் வாழும் இவை, உணவுகளை கழுவி உண்ணவும், உப்பு சுவைக்காக கடல் நீரை சேர்த்துக்கொள்ளவும் தெரிந்து வைத்துள்ளன. மனிதர்களை போல உடலை சூடாக வைத்துக்கொள்ள வெந்நீர் தொட்டிகளில் இவை குளிக்கின்றன.
இது குறித்து உயிரியல் பூங்கா காப்பாளர் கோசுக்கே ஷிகானோ கூறும்போது, “பஞ்ச் குரங்குக்குட்டிக்கு இப்போது ரசிகர்கள் அதிகமாகி விட்டனர். உர்ராங் உடான் குரங்கு பொம்மையுடன் பஞ்ச் விளையாடி வருகிறது.
பிற்காலத்தில் இது தனது இனத்தோடு சேர்ந்து வாழ இந்த பொம்மை உதவும்” என்றார். குரங்குக்குட்டியை வாங்குவதற்கு பிரபல தொழிலதிபர் டிரிஸ்டன் டேட் முன்வந்துள்ளார். இதற்காக 25 ஆயிரம் டாலர் தரவும் அவர் முன்வந்தார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஊடகவியலாளரும், தொழிலதிபருமான எமோரி ஆண்ட்ரூ டேட்டின் தம்பிதான் இந்த டிரிஸ்டன் டேட். இந்நிலையில் குட்டிக்குரங்கு பஞ்ச் தனது குரங்குக் கூட்டத்துடன் மீண்டும் ஒன்றிணைந்துள்ளது.
குரங்குக் கூட்டத்தில் உள்ள குரங்குகளுடன் அது இணைந்து விளையாடி வருகிறது. இதுதொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளன.
மொரட்டுவ கடற்கரையில் நேற்று பெண்ணின் சடலம் வீசப்பட்ட நிலையில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். மொரட்டுவ, கொரலவெல்ல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணின் சடலமே கண்டெடுக்கப்பட்டது.
இதனிடையே, உயிரிழந்த பெண்ணுடன் தனிப்பட்ட தகராறு இருந்ததாக சந்தேகிக்கப்படும் மூன்று பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது கொலையா என்பதைத் தீர்மானிக்க விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் மொரட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சர்வதேச சந்தையில் இன்றைய தினம் (23.02.2026) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5107 டொலர்களாக உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வார இறுதியைக் காட்டிலும் இன்று 44 டொலர்கள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது 0.95 சதவீத உயர்வாகும் என தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் சூழல்கள் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில் இன்று இந்த பெறுமதி பதிவாகியுள்ளது.
வெள்ளியின் விலையும் சர்வதேச சந்தையில் 2 டொலர்களால் அதிகரித்து, தற்போது ஒரு அவுன்ஸ் வெள்ளி 85 டொலராக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த வார இறுதியில் கொழும்பு சந்தையில் 24 கரட் தங்க பவுணொன்றின் விலை 396000 ரூபாவாகவும், 22 கரட் தங்க பவுணொன்றின் விலை 366300 ரூபாவாகவும் இருந்தது.
சர்வதேசச் சந்தை நிலவரங்களுக்கு அமைய உள்நாட்டுச் சந்தையிலும் இன்று (23.02.2026) தங்கத்தின் விலை 4,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 400,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 370,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
சமகாலத்தில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறையாவது குளிக்க வேண்டும் என்று கொழும்பு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த நாட்களில் காலையிலும் மாலையிலும் தலா 20 நிமிடங்கள் சிறுவர்கள் குளிப்பதே பொருத்தமானது என அவர் கூறியுள்ளார். பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சூரியனின் உச்சம் காரணமாக, வெப்பமான வானிலை நாட்டை பாதிக்கும்.
இந்த வானிலை காரணமாக அதிகப்படியான நீர் மற்றும் உப்பு இழப்பு சக்தி ஏற்பட்டால், சிலர் தங்கள் உயிரை கூட இழக்க நேரிடும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
உடலில் இருந்து அதிகப்படியான நீர் மற்றும் உப்பு இழப்பு வெப்ப பக்கவாதத்திற்கு வழிவகுக்கும். இந்த நிலை நீரிழப்பு காரணமாக ஏற்படுகிறது.
பாடசாலை விளையாட்டுப் போட்டிகள், மரதன் மற்றும் புத்தாண்டு விளையாட்டுகள் இந்த நாட்களில் நடத்தப்படுகின்றன.
இந்த போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து இளைஞர்களும் முதியவர்களும் ஏராளமான தண்ணீர் மற்றும் திரவங்களை குடிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
லிட்ரோ எரிவாயு நிறுவனம் 300,000 எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் பணியை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று (23.02.2026) முதல் சம்பந்தப்பட்ட எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வெளியிடுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
3,900 மெட்ரிக் டன் எரிவாயுவை ஏற்றிச் சென்ற கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாகவும், எரிவாயு இறக்கும் நடவடிக்கைகள் நேற்று தொடங்கியதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், மேலும் இரண்டு எரிவாயு கப்பல்கள் 25 மற்றும் 28 ஆம் திகதிகளில் நாட்டிற்கு வர உள்ளன. சமீபத்திய நாட்களில் எதிர்பாராத விதமாக எரிவாயு தேவை அதிகரித்ததால், நாட்டின் எரிவாயு சந்தையில் லிட்ரோ எரிவாயு விநியோகம் தடைபட்டுள்ளது.
இருப்பினும், இன்று முதல் தினமும் 100,000 எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், அதன்படி, சந்தையில் எரிவாயு பற்றாக்குறை படிப்படியாக நீங்கும் என்றும் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
பெப்ரவரி மாத இறுதிக்குள் எரிவாயு கப்பல்கள் நாட்டிற்கு வந்து சேரும் என திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மார்ச் 12 ஆம் திகதி முதல் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக, நாட்டின் பல பகுதிகளில் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு பற்றாக்குறை இருப்பதாக நுகர்வோர் முறைப்பாடு அளித்துள்ளனர்.
இருப்பினும், 300,000 எரிவாயு சிலிண்டர்களை வழங்கும் செயல்முறை தற்போது தொடங்கியுள்ளதால், தற்போதைய எரிவாயு பற்றாக்குறை படிப்படியாக நீங்கும் என்று லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் முன்னணி மருத்துவப் பல்கலைக்கழகங்களில் மருத்துவக் கல்வியைத் (MBBS) தொடர்வதற்காக 25 இலங்கை மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அலாமா இக்பால் (Allama Iqbal) புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் பாகிஸ்தானைச் சென்றடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மருத்துவக் கல்விக்காக கராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த மாணவர்களுக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் பாகிஸ்தான் மற்றும் இலங்கை உயர்கல்வி ஒத்துழைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.
அதே போன்று, இந்த திட்டத்தை பாகிஸ்தானின் உயர்கல்வி ஆணைக்குழு (HEC) நிர்வகித்து வருகின்றது.
இந்நிலையில், மாணவர்கள் கராச்சியில் உள்ள முதலிட சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் (DUHS) மற்றும் லியாகுத் மருத்துவ மற்றும் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் (LUMHS) ஆகியவற்றில் தமது கல்வியைத் தொடரவுள்ளனர்.
மேற்கூறப்பட்ட இரண்டு பல்கலைக்கழகங்களும் இலங்கை மருத்துவ சபையினால் (SLMC) முறையாக அங்கீகரிக்கப்பட்டவை என்பதால், அங்கு பெறப்படும் பட்டங்கள் சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்றவை.
430 மாணவர்களுக்கு வாய்ப்பு
தற்போது பாகிஸ்தானைச் சென்றடைந்துள்ள மாணவர்களைத் தவிர, ஏற்கனவே 430-க்கும் மேற்பட்ட இலங்கை மாணவர்கள் இப்புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் பாகிஸ்தானில் கல்வி பயின்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செல்லும் மாணவர்கள் மருத்துவக் கல்வி மாத்திரமல்லாது பொறியியல், வணிகக் கல்வி, இயற்கை அறிவியல் மற்றும் சமூக அறிவியல் போன்ற பல்வேறு துறைகளிலும் கல்வி கற்கிறார்கள்.
பாகிஸ்தானின் உயர்கல்வி நிறுவனங்களுக்கான தகுதி அளவுகோல்களின்படி, மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த நேர்முகத் தேர்வுகள் மற்றும் பரீட்சைகள் மூலமே இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதே திட்டத்தின் கீழ், மேலும் 100 இலங்கை மாணவர்கள் விரைவில் பாகிஸ்தானுக்குச் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.