கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை பிடித்துக் கொடுத்த மக்கள் : பொலிஸார் பாராட்டு!!

வெலிகம பிரதேச சபைத் தலைவரை சுட்டுக்கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர் பொது மக்களின் ஒத்துழைப்புடன் நேற்று கைது செய்யப்பட்டார்.

மஹரகம நாவின்ன பகுதியிலுள்ள மக்களுடன், பொலிஸாரின் சிறப்பு குழுக்கள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய பொது மக்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கு பொலிஸ் ஊடகப் பிரிவு பாராட்டு தெரிவித்துள்ளது.

கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளுக்காக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம், சந்தேக நபர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பிரதான சந்தேக நபர் நேற்றிரவு மஹரகம பகுதியில் கைது செய்யப்பட்டதுடன், ஏனைய மூன்ற பேரும் அனுராதபுரத்தின் கெகிராவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

வெலிகம பிரதேச சபைத் தலைவரின் துப்பாக்கிச் சூடு மற்றும் கொலை தொடர்பான விசாரணை, பொலிஸ் மா அதிபரின் முழு மேற்பார்வையின் கீழ் பல குழுக்களால் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பி.டி. உஷாவின் சாதனையை முறியடித்த இலங்கை வீராங்கனை சுஃபியா மிக்!!

இந்தியாவின் ராஞ்சியில் இன்று (26) நடைபெறும் 4வது தெற்காசிய தடகள செம்பியன்ஷிப் போட்டியில், பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் இலங்கை வீராங்கனை சஃபியா யமிக் தங்கப் பதக்கம் வென்றார்.

இந்தப் போட்டியை 23.58 வினாடிகளில் முடித்து புதிய சாதனை படைத்தார். 27 ஆண்டுகளுக்கு முன்பு, 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் பி.டி. உஷா படைத்த சாதனையை அவர் முறியடித்தார்.

அத்துடன் சஃபியா யமிக் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் தங்கப் பதக்கம் வென்று தெற்காசியாவின் வேகமான தடகள வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றதுடன், 4×100 மீட்டர் அஞ்சல் ஓட்டப்போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

அவர் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் 11.53 வினாடிகளில் ஓடி தங்கப் பதக்கம் வென்றார். அதன்படி, இந்த செம்பியன்ஷிப்பில் சஃபியா யமிக் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாமனார் மருமகன் மோதலில் நடந்தேறிய கொடூரம் : துடிதுடித்து பிரிந்த உயிர்!!

அநுராதபுரத்தில் கலென்பிந்துனுவெவ – இஹலகம பகுதியில் மாமனாரின் கட்டுத்துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மருமகன் உயிரிழந்துள்ளதாக கலென்பிந்துனுவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (26) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் இஹலகம, கலென்பிந்துனுவெவ பகுதியைச் சேர்ந்த 57 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் மாமனார் மருமகனை கட்டுத்துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்தியுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் கலென்பிந்துனுவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் கலென்பிந்துனுவெவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று தங்கத்தின் விலையில் பதிவான மாற்றம்!!

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் பதிவாகி இருந்த நிலையில் இன்றையதினம்(27.10.2025) அதன் விலையில் சிறிய மாற்றம் பதிவாகியுள்ளது.

இந்தநிலையில், இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,240,854ரூபாவாக காணப்படுகின்றது. அதன்படி, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 43,770 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 350,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 40,13 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 321,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 38,300 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 306,400 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முறைகேடான சொத்துக் குவிப்பு : யாழில் 11 பேருக்கு எதிரான விசாரணை தீவிரம்!!

வாள்வெட்டு மற்றும் போதைப்பொருள் கடத்தல் என்பவற்றில் ஈடுபட்டு, சட்டவிரோதமாகவும், முறைகேடாகவும் சொத்துச் சேர்த்த சந்தேகத்தில் 11 பேருக்கு எதிராக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்று யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.பி.எஸ்.ஜெயமஹா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது, “போதைப்பொருள் கடத்தல், வன்முறைகள், வட்டிக்கு விடுதல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுச் சொத்துச் சேர்த்தவர்களுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் அண்மைக்காலமாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இதுவரை 11 பேர் இந்த விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களுக்குச் சொந்தமான சொகுசுக் கார்கள், ஆடம்பர விடுதிகள், இறால் பண்ணைகள், உள்ளூரிலும் வெளிமாவட்டங்களிலும் பல்பொருள் அடங்காடிகள் என்பன உள்ளன.

அந்தச் சொத்துக்கள் தொடர்பில் முழுமையான புலன் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. அவை சட்டவிரோதமாகப் பெறப்பட்டவை என்பது உறுதிப்படுத்தப்பட்டால் அந்தச் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்படும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தங்கத்தின் விலை குறித்து பாபா வங்காவின் அதிர்ச்சிதரும் கணிப்பு!!

பாபா வங்காவின் பல்வேறு கணிப்புகள் உண்மையான நிலையில் தற்போது 2026ஆம் ஆண்டு தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது குறித்த அவரது கணிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ஆண்டு (2025) உலகில் பல பகுதிகளில் நிலநடுக்கமும், வெள்ளமும் ஏற்பட்டு உலக அழிவு தொடங்கும் என்றும், பெரிய மோதல்கள், இனக்கலவரங்கள், சோகமான சம்பவங்கள் நடைபெறும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளார்.

அவர் கணித்தது போன்றே பல்வேறு நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதுடன் மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இந்நிலையில், உலக பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் நிலையற்ற சூழ்நிலைகள் காரணமாக, முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

உலக பொருளாதார நிலை, பணவீக்கம், வட்டி விகிதங்கள், அரசியல் பதற்றங்கள் என தங்கத்தின் விலை பல காரணங்களால் பாதிக்கப்படுகிறது. இந்த காரணிகள் கடந்த சில ஆண்டுகளில் தங்கத்தின் தேவை அதிகரிக்க காரணமாக இருந்துள்ளன.

2026இல் பெரும் மந்த நிலை அல்லது போர் போன்ற சூழ்நிலைகள் ஏற்பட்டால், தங்கத்தின் விலை உண்மையாகவே உயர வாய்ப்பு உள்ளது.

பாபா வங்காவின் கணிப்புகள் பல முறை சரியாக இருந்தாலும், சிலர் அவற்றை யதார்த்தமாக எடுத்துக்கொள்கிறார்கள், மற்றவர்கள் சீரான சந்தை ஆய்வை முன்னிலைப்படுத்துகிறார்கள்.

சவுதி அரேபிய பாலைவனத்தில் சிக்கிய இந்தியர் : நாடு திரும்ப உதவுங்கள் என கண்ணீர் கோரிக்கை!!

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பகிர்ந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியதால் இந்திய தூதரகம் கவனத்திற்கு சென்றுள்ளது.

இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசம், ஹாண்​டியா பகு​தி​யைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சவுதி அரேபியாவில் உள்ள பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் வேலை பார்த்து வருகிறார்.

தான் பார்க்கும் வேலை சிரமமாக இருப்பதால் மீண்டும் தாய் நாட்டிற்கே திரும்ப முடிவு செய்துள்ளார் அந்த இளைஞர். ஆனால், அவரது முதலாளி அவரது பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக்கொண்டு கொன்று விடுவதாக மிரட்டுவதாகவும் இளைஞர் கூறியுள்ளார்

டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் பகிர்ந்து கொண்ட காணொளியில், போஜ்புரி மொழியில் பேசும் இந்த நபர் பிரதமர் நரேந்திர மோடியிடம் உதவி கோருகிறார்.

அந்த வீடியோவில் இளைஞர் கூறுகையில், “எனது கிராமம் அலகா​பாத். நான் சவுதி அரேபியாவில் வேலை பார்க்க வந்துள்ளேன்.

ஆனால், நான் நாடு திரும்ப நினைப்பதால் என்னுடைய முதலாளி பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக்கொண்டு கொன்று விடுவதாக மிரட்டுகிறார்.

எனக்கு பிரதமர் நரேந்திர மோடி​யும், வெளி​யுறவுத்​துறை அமைச்​சரும் உதவ வேண்​டும். இல்​லை​யென்​றால் நான் இறந்​து விடுவேன்” என்கிறார்.

இந்த வீடியோ வைரலாகி பரவலான கவனத்தைப் பெற்றதால், சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் அந்த நபரைக் கண்டுபிடிக்க முயற்சிப்பதாகக் கூறியது.

இந்​திய தூதரகம் விடுத்​துள்ள செய்​தி​யில், “அந்த நபரைக் கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறோம். சவுதி அரேபியாவின் இருப்பிடம்/மாகாணம் பற்றிய எந்த விவரங்களோ, தொடர்பு எண் அல்லது முதலாளியின் விவரங்களோ வீடியோவில் இல்லை” என்று தெரிவித்துள்ளது.

19 பேர் பலியான பேருந்து தீ விபத்து : உயிரிழப்பிற்கு 234 ஸ்மார்ட்போன்கள் காரணமா?

19 பேர் பலியான கர்னூல் பேருந்து தீ விபத்து குறித்து பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் தெகுரு கிராமம் அருகே நேற்று அதிகாலையில், பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தில், இரு சக்கர வாகனம் மோதியதில் பேருந்தின் டீசல் டேங்க் சேதமடைந்து தீ விபத்து ஏற்பட்டது.

தீயில் கருகி, திருப்பூரை சேர்ந்த 22 வயதான யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட 19 பேர் உயிரிழந்தனர். இந்த ஆம்னி பேருந்தின் மீது ஏற்கனவே 16 விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இருக்கைக்கு அனுமதி பெற்று, படுக்கை வசதி கொண்ட பேருந்தாக மாற்றியதும் தெரிய வந்துள்ளது.

அதே போல், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த சிவசங்கர் மதுபோதையில் இருந்துள்ளார். அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ஆம்னி வால்வோ பேருந்து ஓட்டுநரான மிரியாலா லக்ஸ்மையா, 5ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள நிலையில், 10ம் வகுப்பு படித்ததாக போலி சான்றிதழ் கொடுத்து லைசென்ஸ் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

இவர், 2004 ஆம் ஆண்டில் ஒரு லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்தபோது அருகிலுள்ள மரத்தில் மோதியதில், கிளீனர் உயிரிழந்துள்ளார்.ஆனால் லட்சுமையா உயிர் தப்பினார்.

இதே போல், பேருந்தில் தீ அதிகளவில் பற்றியதற்கு பேருந்தில் 234 ஸ்மார்ட்போன்கள் காரணமாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த மங்கநாத் என்ற தொழிலதிபர், வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக பெங்களூருவில் அமைந்துள்ள இ-காமர்ஸ் நிறுவனத்திற்கு 234 ஸ்மார்ட்போன்களை அனுப்பியுள்ளார். அத்துடன் பேருந்தின் ஏசிக்கு பயன்படுத்தும் பேட்டேரிகளிலும் தீ பற்றியுள்ளது.

பேருந்தில் தீ அதிகரித்ததற்கு பேட்டரி மற்றும் செல்போன்கள் வெடித்தது காரணமாக இருக்கலாம் என தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வாகன எடையைக் குறைத்து வேகத்தை அதிகரிக்கப் பயன்படுத்தப்படும் இரும்பிற்குப் பதிலாக இலகுரக அலுமினியத்தைப் பயன்படுத்தியதும் விபத்தின் தீவிரத்தை அதிகரித்துள்ளது என ஆந்திர பிரதேச தீயணைப்புத் துறை தலைமை இயக்குநர் பி. வெங்கடரமணா தெரிவித்துள்ளார்.

 

வவுனியா – கனகராயன்குளத்தில் மின்சாரம் தாக்கி யானை பலி!!

வவுனியா – கனகராயன்குளம் குறிசுட்டகுளம் பகுதியில் தோட்ட காணி ஒன்றுக்கு போடப்பட்டிருந்த யானை வேலியில் பாய்ந்த மின்சாரம் தாக்கியதில் யானை ஒன்று பலியாகி உள்ளது.

இன்று (27.10.2025) காலை தோட்டத்திற்குச் சென்ற விவசாயி யானை ஒன்று இறந்து கிடந்ததை அவதானித்துள்ளார்.

அதனை அடுத்து அயலவர்களுக்கும் கனகராயன்குளம் பொலிஸாருக்கும் தகவலை வழங்கியதை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் பார்வையிட்ட போது யானை இறந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் வன ஜீவராசிகள் திணைக்களத்தற்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், கனகராயன்குளம் பொலிஸார் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இளம் பெண் சட்டத்தரணி கொலை : நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!

2024 ஆம் ஆண்டு மிரிஹானவில் உள்ள அவரது வீட்டில் 36 வயதுடைய பெண் சட்டத்தரணி கொல்லப்பட்ட வழக்கில் ஒரு வருடத்திற்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒரு சாரதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் திங்கட்கிழமை (27) பிணை வழங்கியது.

வழக்கு விசாரணை மற்றும் பிரதிவாதிகள் இருவரின் சமர்ப்பிப்புகளையும் பரிசீலித்த மேல் நீதிமன்ற நீதிபதி , சந்தேகநபரை கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்க உத்தரவிட்டார்.

அதன்படி, சந்தேகநபரை தலா 1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மூன்று சரீரப் பிணைகளுடன் ரூ. 500,000 ரொக்கப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

சந்தேகநபருக்கு பயணத் தடையையும் விதித்த நீதிமன்றம், நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை மீறினால் பிணை ரத்து செய்யப்படும் என்று எச்சரித்தது.

கொழும்பில் கார் விபத்தை ஏற்படுத்திய பிரபல நடிகை : இரண்டு பெண்கள் படுகாயம்!!

கொழும்பில் கார் விபத்தை ஏற்படுத்திய பிரபல நடிகை ஆயிஷா திசாநாயக்க வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 20 ஆம் திகதி காலை 11.00 மணியளவில் பத்தரமுல்லையில் உள்ள வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டல் கார் நிறுத்துமிடத்தில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் 26 மற்றும் 37 வயதுடைய இரண்டு பெண்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த பெண்களில் ஒருவர் கொழும்பு தேசிய மருத்துவமனையிலும், மற்றொருவர் ஜெயவர்தனபுர பொது மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸாரால் தெரிவித்தனர்.

நடிகை ஆயிஷா திசாநாயக்க ஓட்டிச் சென்ற கார், வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டல் கார் நிறுத்துமிடத்தில் திடீரென பின்னோக்கிச் சென்று, இரண்டு பெண்கள் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் ஹோட்டலில் பணிபுரியும் இரண்டு ஊழியர்கள் பலத்த காயமடைந்ததாக பொலிஸாரால் மேலும் தெரிவித்தனர். விபத்தில் ஒரு பெண்ணின் முதுகெலும்பும், மற்றொரு பெண்ணின் கால்களும் பலத்த சேதமடைந்துள்ளன.

இதற்கிடையில், விபத்தை ஏற்படுத்த காரணமாக காரை ஓட்டி வந்த நடிகையும் மாரடைப்பு ஏற்பட்டதாக கூறி 1990 அம்புலன்ஸில் ஜெயவர்தனபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரான நடிகை, கடந்த 23 ஆம் திகதி கங்கோடவில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

விபத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் 250,000 ரூபாய் பணமும் வழங்க நடிகை ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு எதிர்வரும் 29 ஆம் திகதி கொழும்பில் உள்ள புதுக்கடை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இளம் பெண்ணின் உள்ளாடைக்குள் சிக்கிய ஒரு கிலோ தங்கம் : அதிர்ந்துபோன விமான நிலைய அதிகாரிகள்!!

வெளிநாட்டு இளம் பெண் ஒருவர் உள்ளாடைக்குள் ஒழித்து வைத்து ஒருகிலோ தங்கத்தை டெல்லி விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியா டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், உள்ளாடைக்குள் மறைத்து தங்க கட்டிகளைக் கடத்தி வர முயன்ற மியான்மர் நாட்டை சேர்ந்த இளம் பெண் பயணி ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

மியான்மரின் யாங்கூன் நகரில் இருந்து டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்த விமானத்தில் வந்திறங்கிய பெண் பயணி ஒருவர், சுங்க வரி செலுத்த தேவையில்லாத வழியை பயன்படுத்தி சென்றபோது, அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதனையடுத்து பயணியை மறித்த சுங்க அதிகாரிகள், தனியிடத்துக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர். சோதனையில் அவர் தனது உள்ளாடைக்குள் 6 தங்க கட்டிகளை தனித்தனியாக மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

அதிகாரிகள் கைப்பற்றிய தங்கக் கட்டிகளின் மொத்த எடை 997.5 கிராம் ஆகும். சுங்க இலாகா அந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த தங்கக் கடத்தல் தொடர்பாக அந்த பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.

சுமத்ரா தீவுக்கு அருகில் நிலநடுக்கங்கள் : சுனாமி அபாயம் தொடர்பில் எச்சரிக்கை!!

நாடு முழுவதினையும் உள்ளடக்கி நவம்பர் 5 ஆம் திகதி சுனாமி தயார்நிலைப் பயிற்சியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட (ஓய்வு) தெரிவித்துள்ளார்.

முப்படையினர், பொலிஸார் அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் அதிகாரிகளுடன் சுனாமி தயார்நிலைப் பயிற்சி குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றபோது இவ்வாறு கூறியுள்ளார்.

கடந்த ஒரு மாதமாக சுமத்ரா தீவுக்கு அருகில் பல சிறிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

நவம்பர் 5 ஆம் திகதி நடைபெறவிருக்கும் சுனாமி தயார்நிலைப் பயிற்சி, இந்தியப் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள 28 நாடுகளை உள்ளடக்கிய ஒரு பிராந்திய அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுனாமிக்கான தயாரிப்புகளின் முக்கிய பகுதியாக களுத்துறை, மாத்தறை, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய 4 மாவட்டங்களில் இந்த பயிற்சி நடத்தப்படும் என்றும், மற்ற மாவட்டங்களையும் உள்ளடக்கும் என்றும் மையம் தெரிவித்துள்ளது.

சுமத்ரா தீவில் 6.5 ரிக்டர் அளவுகோலுக்கு மேல் நிலநடுக்கம் ஏற்பட்டால், நாட்டில் சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளது என்றும், அதற்கு முன் தயாரிப்பு அவசியம் என்றும் பேரிடர் மேலாண்மை மையத்தின் இயக்குநர் ஜெனரல் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்துள்ளார்.

இளம் யுவதியின் மோசமான செயல் அம்பலம்!!

போலியான பேஸ்புக் கணக்கை உருவாக்கி, நிர்வாண படங்களுடன் வேறு பெண்ணின் முகத்தை இணைத்து புகைப்படங்களை வெளியிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட யுவதி கண்டி பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவராகும்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கண்டி கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் தொடங்கப்பட்டன.

அதற்கமைய, நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டதாகக் கூறப்படும் யுவதி கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். மேலும் சந்தேக நபரின் இந்த செயல் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மோசமான வானிலை : வெள்ளப்பெருக்கு தொடர்பில் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!!

அதிக மழை வீழ்ச்சி காரணமாக நாட்டின் பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மேலும் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

களனி, அத்தனகலு, கிங், பென்தர ஆகிய பகுதிகளில் கிட்டத்தட்ட 50 மி.மீ மழை பெய்துள்ளதாகவும், களு கங்கைப் பகுதியே மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் கூறியுள்ளது.

அதன்படி, களு கங்கையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்துள்ளதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

களு கங்கையின் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக, இரத்தினபுரி, மில்லகந்த மற்றும் அல்லகாவ பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாகவும், வெள்ளப்பெருக்கை எட்டும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக நீர்த்தேக்கங்களுக்கு அருகில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொள்கிறது.

காலி, மாத்தறை, களுத்துறை, கொழும்பு, கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் அதிக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பெண் பொலிஸ் அதிகாரி!!

கொழும்பில் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவரினால் தவற விடப்பட்ட பணப் பொதியை மீண்டும் அவரிடம் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் கையளித்துள்ளார்.

கொழும்பு, திம்பிரிகஸ்யாய வீதியில் தொலைந்து போன பணப்பையை, அதன் உரிமையாளரான பிரித்தானிய சுற்றுலாப் பயணி ஒருவரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பிரதமர் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றும் இரண்டு பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள், இந்த நேர்மையான செயற்பாட்டினை மேற்கொண்டுள்ளனர்.

யமுனா தம்மிகா குமாரி எதிரிசிங்க மற்றும் சம்மன்மாலி என்ற பெண் அதிகாரிகள், இந்த செயற்பாட்டை முன்னெடுத்தாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பணப்பொதியை தவறவிட்ட சப்ரீனா கேமரூன் என்ற பிரித்தானிய பிரஜை, பிரதமர் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு அவரின் உடமைகள் கையளிக்கப்பட்டன. குறித்த பெண் தவறவிட்ட பணப்பொதியில் பெருந்தொகை உள்ளுர் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.