வவுனியா பறங்கியாற்று பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று(22.02.2026) மாலை இடம்பெற்றுள்ளது.
அதிகாலையில் பறங்கியாற்று பகுதிக்கு சென்றவர் வீடு திரும்பாத நிலையில், குடும்பத்தவர் மற்றும் அயலவர்களுடன் இணைந்து தேடுதலில் ஈடுபட்ட நிலையில் ஆற்றினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பறங்கியாற்று பகுதியை சேர்ந்த 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த நபர் வனவிலங்குக்காக வைக்கப்பட்ட சட்டவிரோத மின் கம்பியில் சிக்குண்டு இறந்துள்ளாரா என்ற அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், உடற்கூற்று பரிசோதனை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் விளையாட்டு வளாகத்தின் அனைத்து நிர்மாணப் பணிகளையும், சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கும் வரை உடனடியாக நிறுத்துமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபை உத்தரவிட்டுள்ளது.
இந்தத் திட்டம் தொடர்பான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறையின் ஒரு பகுதியாக, ‘திட்ட வரைபு அறிக்கை’ ஒன்றை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் கபில மஹேஷ் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மைதானத்திற்காக ஒதுக்கப்பட்ட 48 ஏக்கர் காணி, பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிக்குள் வரவில்லை என்பதை வனப் பாதுகாப்புத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
இருப்பினும், முறையான சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையை ஸ்ரீலங்கா கிரிக்கெட் சமர்ப்பிக்கும் வரை பணிகளைத் தொடர முடியாது.
சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படுவதற்கு முன்னரே அங்கு நிலத்தை சமப்படுத்தும் பணிகள் நடைபெற்றுள்ளதாகக் கிடைத்த முறைப்பாடுகளையடுத்து, யாழ்ப்பாண அலுவலக அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டனர்.
1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின் கீழ், அனுமதி இன்றி இத்தகைய திட்டங்களை முன்னெடுப்பது சட்டவிரோதமாகும்.
இதன்படி, கடந்த பெப்ரவரி 18 ஆம் திகதி பணிகளை நிறுத்துமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கம், இந்தத் திட்டம் கட்டாய சுற்றுச்சூழல் அனுமதியின்றி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அதனை உடனடியாக நிறுத்துமாறு அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தனது காதலனை சந்திக்க சென்ற காதலி கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மதியம் போதைப்பொருள் கலந்த பால் தேனீர் கொடுக்க முயன்றபோது பிலியந்தலை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டார். தனது காதலனுக்குக் கொடுப்பதற்காக அவர் கொண்டு வந்த பாணிலும் போதைப்பொருள் மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டது.
பொல்கசோவிட்டவைச் சேர்ந்த சந்தேக நபரான காதலன் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரான இளைஞனைச் சந்தித்தபோது, போதைப்பொருள் குற்றச்சாட்டில் காதலியும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறிது நேரம் அந்த இளைஞனுடன் பேசிய பெண், பொலிஸ் நிலைய அதிகாரிகளின் அனுமதியுடன் வெளியேறி, பால் தேநீர் அடங்கிய சிறிய பையுடன் பொலிஸ் நிலையத்திற்குத் திரும்பினார்.
இதன்போது ரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸ் அதிகாரி பெண் கொண்டு வந்த பால் தேநீர் மற்றும் பாணை பரிசோதனைக்கு உட்படுத்தினார்.
இதன்போது போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரான பெண் களுபோவில பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
காலி- நெலுவ, மில்லவ பிரதேசத்தில் ஏற்பட்ட காணித்தகராறு ஒன்றின் நபர் ஒருவர் அடித்து கொலைச் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று(21.02.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொரவக்க – பொல்கஸ்ஓவிட்ட பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய கடேவத்த வெலிகமகே ஜவன் என்ற முதியவரே இவ்வாறு உயிரழந்துள்ளார் என காலி மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, உயிரிழந்த நபர் தனது மனைவியுடன் இணைந்து பஹல மில்லவ பிரதேசத்தில் தமக்குச் சொந்தமான காணியில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த மொரவக்க பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு நபருடன் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தர்க்கம் முற்றிய நிலையில், அந்த நபர் தடியால் தாக்கியதில் முதியவர் உயிரிழந்துள்ளார். இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவரின் மனைவியும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
தப்பியோடியுள்ள சந்தேகநபரைக் கைது செய்வதற்காக, காலி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எச்.சி. புஷ்பகுமாரவின் ஆலோசனைக்கமைய, நெலுவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பதிஜீவ தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குலசேகரப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (25) என்பவரின் 2 வயது மகன் கபிலேஷ் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடை முன்பு விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை கூல்டிரிங் குடிக்க வந்த தம்பதி ஒருவர் கொஞ்சியபடி தூக்கிச் சென்றனர்.
பின்னர் திடீரென பைக்கில் குழந்தையுடன் புறப்பட்டனர். அதிர்ச்சியடைந்த தாய் முத்துச்செல்வி போலீசில் புகார் அளித்தார்.
விரைந்து செயல்பட்ட குலசேகரப்பட்டினம் காவல்நிலைய போலீசார்,காரைக்கால் அம்மையார் கோவில் அருகே பைக்கை நிறுத்தி குழந்தையை சமாதானப்படுத்திக் கொண்டிருந்த தம்பதியை மடக்கினர்.
விசாரணையில் அவர்கள் சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த லிங்கதுரை (35), ஜெயந்தி (33) என்பதும் தெரியவந்தது.
திருமணமாகி 11 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால் இச்செயலில் ஈடுபட்டது வெளிச்சம் பார்த்தது. 20 நிமிடங்களிலேயே குழந்தையை மீட்ட போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாப்பிள்ளை கண் எதிரிலேயே ஊர்வலத்தின் போது, நடுரோட்டில் வைத்து துப்பாக்கி முனையில் மணக்கோலத்தில் இருந்த மணமகளை திரைப்பட பாணியில் முன்னாள் காதலன் கடத்திச் சென்ற சம்பவம் ஒடிசா மாநிலம், பலங்கீர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பலங்கீர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் இளைஞர் ஒருவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. சடங்குகள் முடிந்து மணமக்கள் இருவரும் காரில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது மணமக்களின் வாகனத்தை இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் வழிமறித்தது. அதில் அந்தப் பெண்ணின் முன்னாள் காதலனும் இருந்ததாகக் கூறப்படுகிறது.
மணமகனைத் துப்பாக்கி முனையில் மிரட்டி காரிலிருந்து இறக்கிய அந்தக் கும்பல், மணக்கோலத்தில் இருந்த மணமகளை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று தங்களது வாகனத்தில் கடத்திச் சென்றனர்.
தனது கண் முன்னாலேயே மனைவி கடத்தப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மணமகன், உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள பலங்கீர் மாவட்ட போலீசார், அந்தப் பகுதியின் எல்லைகளை மூடித் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னாள் காதலன் திருமணத்தை நிறுத்தத் திட்டமிட்டாரா அல்லது முன்விரோதம் காரணமா என்பது குறித்துப் போலீசார் விசாரித்து வருகின்றனர். மணக்கோலத்தில் இருந்த பெண்ணைக் கடத்திய இந்தச் சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பச்சனம்பட்டியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி தாமோதரனின் மகள் பிரதீபா (15). இவர் கடகத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, பிரதீபா தனது தாயின் செல்போனை வாங்கி அதில் வீடியோக்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த அவரது தாய், “பொதுத்தேர்வு நெருங்கும் நேரத்தில் படிக்காமல் ஏன் எப்போதும் வீடியோ பார்த்துக் கொண்டிருக்கிறாய்?” என்று கண்டித்துள்ளார்.
தாயின் பேச்சால் ஆத்திரமடைந்த பிரதீபா, “நான் படிக்கப் போகிறேன்” என்று கோபமாகச் சொல்லிவிட்டு வீட்டு அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டார்.
நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், ஜன்னல் வழியாகப் பார்த்தபோது பிரதீபா தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக கதவை உடைத்து உள்ளே சென்ற உறவினர்கள், உயிருக்குப்போராடிய பிரதீபாவை மீட்டு தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காகத் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி, பிரதீபா பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்துத் தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் பயன்பாட்டைக் கண்டித்ததற்காக ஒரு சிறுமி தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைக்கு வடகிழக்கே வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு நோக்கி நகர்ந்து மேலும் பலவீனமடையும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்கம் காரணமாக, கடற்பரப்பில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மேலும் கடல் பகுதிகள் கொந்தளிப்பாகக் காணப்படும்.
இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிவிப்புகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, அந்தக் கடற்பரப்புகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும், பின்னர் அந்தக் கடற்பரப்புகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாக மாறக்கூடும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை நடத்தும் இலங்கை மற்றும் இந்தியா அணிகள் தற்போது தொடரின் சூப்பர் 08 சுற்றுகளிலிருந்து வெளியேறும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்திடம் தோற்ற இலங்கை அணியும், தென்னாபிரிக்காவிடம் தோற்ற இந்தியா அணியும் மோசமான நிகர ஓட்ட விகிதத்தைக் கொண்டுள்ளன.
மீதமுள்ள இரண்டு போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் தோல்வியடைந்தால், குறித்த இரு அணிகளும் சூப்பர் எட்டு சுற்றுகளில் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.
புள்ளிகள் சமநிலையில் இருப்பதால், தற்போதைய மோசமான நிகர ஓட்ட விகிதம் இலங்கை மற்றும் இந்திய அணி இரண்டிற்கும் பாதகமாக இருக்க வாய்ப்புள்ளது.
இருப்பினும், குறித்த அணிகள் மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால், போட்டியில் அரையிறுதி செல்வதற்கான இடத்தைப் பிடிக்கும் வாய்ப்பைப் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் பிரிந்து வாழ்ந்த தனது மனைவி வேறொருவருடன் பழகியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில், அவரை வாகன நிறுத்துமிடத்தில் கத்தியால் குத்திக்கொலை செய்த 37 வயதுடைய இலங்கை நபர் ஒருவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
32 வயதுடைய நிரோதா என அழைக்கப்படும் நிவுன்ஹெல்லகே தோனா நிரோதா கல்பனி நிவுன்ஹெல்லா, 2025 ஆகஸ்ட் 21 அன்று கார்டிப்பின் (Cardiff) ரிவர்சைட் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடம் ஒன்றில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
பல மாதங்களாக நிரோதாவைப் பிரிந்து வாழ்ந்த திசர வேரகலகே என்ற நபர், ஆரம்பத்தில் இக்குற்றச்சாட்டை மறுத்த போதிலும், பின்னர் ஜனவரி மாதம் நியூபோர்ட் கிரவுன் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
கார்டிப் கிரவுன் நீதிமன்றத்தில் தீர்ப்பை வழங்கிய நீதிபதி டேனியல் வில்லியம்ஸ், வேரகலகேயின் “கொடூரமான சுயநலம்” நிரோதாவின் வாழ்க்கையைச் சுருக்கிவிட்டதாகக் குறிப்பிட்டார்.
தாக்குதல் நடந்த அன்று காலை, நிரோதா அங்கு இருப்பார் என்பதை அறிந்து வேரகலகே 15 செ.மீ நீளமுள்ள சமையலறைக் கத்தியுடன் வாகன நிறுத்துமிடத்திற்குச் சென்றுள்ளார்.
அங்கு நிரோதாவின் முகம், கழுத்து, மார்பு, கை மற்றும் கால்களில் மிகக் கொடூரமான முறையில் கத்தியால் குத்தியுள்ளார். இந்தத் தாக்குதல் எவ்வளவு தீவிரமாக இருந்ததென்றால், பயன்படுத்தப்பட்ட கத்தியின் கைப்பிடி உடைந்து போனது.
இரண்டு கார்களுக்கு இடையில் இரத்த வெள்ளத்தில் கிடந்த நிரோதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கொலைக்குப் பிறகு தனது காரில் வேகமாகத் தப்பிச் சென்ற வேரகலகே, சிறிது நேரத்தில் லொறி ஒன்றின் முன்னால் விழுந்து தற்கொலைக்கு முயன்றார். எனினும், அவர் உயிருடன் மீட்கப்பட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அவரது காரில் இரத்தக் கறையுடன் கூடிய கையுறைகளும், கத்திகள் அடங்கிய பொதியும் கண்டெடுக்கப்பட்டன.
விசாரணையில், இந்தத் தம்பதியினர் 2017 ஆம் ஆண்டு இலங்கையில் திருமணம் செய்து கொண்டு, பின்னர் 2022 இல் பிரித்தானியாவிற்கு குடிபெயர்ந்தமை தெரியவந்தது.
அங்கு அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக 2025 ஏப்ரல் முதல் அவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதற்கிடையில் நிரோதா தனது சக ஊழியர் ஒருவருடன் பழகத் தொடங்கியதைக் கண்டு பொறாமையடைந்த வேரகலகே, இந்தத் திட்டமிட்ட கொலையைச் செய்துள்ளார்.
“நிரோதா தனது குடும்பத்தினரால் மிகவும் நேசிக்கப்பட்டவர். ஒரு கோழைத்தனமான மற்றும் பொறாமை கொண்ட நபரால் அவரது வாழ்க்கை முடிக்கப்பட்டுள்ளது” என்று தெற்கு வேல்ஸ் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் நிரோதாவின் குடும்பத்தினர் அவருக்கு விடுத்துள்ள அஞ்சலியில், அவர் அனைவரிடமும் அன்பாகவும் கனிவாகவும் பழகிய ஒரு சிறந்த பெண் என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளனர்.
கம்பளை-நாவலப்பிட்டி வீதியில் நேற்று சம்பவித்த வாகன விபத்தில் சிறுமி உயிரிழந்துள்ளார். கம்பளை நோக்கி பயணித்த கார், பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் காயமடைந்த நிலையில் கம்பளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும் சிகிச்சையின் பயனின்றி சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 03 வயது சிறுமி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மோட்டார் சைக்கிளை தாயார் ஓட்டிச் சென்றதாகவும், காயமடைந்த தாயும் மற்ற 07 வயது சிறுமியும் சிகிச்சை பெற்று மருத்துவமனையில் இருந்து வெளியேறியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட காரின் சாரதி இன்று(21) கம்பளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கமாக பதிவாகி வரும் நிலையில் உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.
அதன்படி, உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,106 டொலராக பதிவாகியுள்ளது. உலக சந்தையில் நேற்றைய தினம் (20.02.2026) ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,010 டொலராக பதிவாகியிருந்தது.
அதேநேரம், ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலையும் அதிகரித்து, 84.59 டொலர்களாக பதிவாகியுள்ளது.
இந்தநிலையில், இந்த நிலையில் கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 396000 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 366300 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கேகாலையில் இந்திய சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற ஒன்று வீதியை விட்டு விலகி வீடொன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது. யாட்டியாந்தோட்ட, ஹக்பெல்லாவக்க பகுதியில் நேற்று மாலை 3.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன் போது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், வீட்டில் இருந்த மூன்று சிறுவர்கள் மற்றும் பேருந்தில் பயணித்த மூன்று இந்தியப் பிரஜைகள் காயமடைந்து கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாட்டியாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த ஆண்டு 23,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை நியமிக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு ஆட்சேர்ப்பு செயல்முறையை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சக ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பிரதமர் இதனை கூறியுள்ளார்.
இந்த திட்டம் தற்போதைய ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் ஆசிரியர் இடமாற்றங்கள் தொடர்பான சிக்கல்களை கணிசமாகக் குறைக்கும் என்றும், அதன்படி, திறந்த மற்றும் வரையறுக்கப்பட்ட அடிப்படையில்பரீட்சைகளை நடத்தி பட்டதாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி தொடர்பான அமைச்சு ஆலோசனைக்குழுவின் கீழ் கல்வி கவுன்சிலை நிறுவுவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை, பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க, அமைச்சர் ஆலோசனைக் குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் அமைச்சகத்துடன் தொடர்புடைய விஷயங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு எதிர்கால நடவடிக்கைகளுக்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் நாய் குரைத்ததால் வெடித்த பிரச்சனையால் காதல் திருமணம் நின்றது பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தர பிரதேச மாநிலம் காகா கோட்வாலி பகுதியில் சுமித் கேஷர்வானி என்ற நபருக்கும், அவரது காதலிக்கும் திருமணம் நடைபெற இருந்தது.
இருவரின் குடும்பத்தினரின் சம்மதத்துடன் இந்த திருமணம் முடிவு செய்யப்பட்டது. மணமகள் சார்பில் அவரது உறவினர்கள் பலர் வாகனங்களில் வந்திருந்தனர்.
திருமணத்திற்கான அனைத்து சடங்குகளும் நடக்க, மணமேடைக்கு அருகே மணப்பெண்ணின் வளர்ப்பு நாய் குரைக்கத் தொடங்கியது. இதனால் கோபமுற்ற சுமித் தரப்பு இளைஞர் ஒருவர் அந்நாயை அடித்துள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மணமகள் வீட்டார் சத்தம்போட, இருதரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் பலர் காயமடைந்த நிலையில் தகவல் அறிந்து வந்த பொலிஸார் அவர்களை அமைதிப்படுத்தினர்.
பின்னர் நடந்த விசாரணையில் மணமகள் சுமத்தை திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை என்று கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து திருமணம் நிறுத்தப்பட, இருதரப்பில் இருந்தும் பரிசுகள் மற்றும் பணப்பரிமாற்றங்கள் திருப்பித் தரப்பட்டன.
கணவன் மனைவி இடையே இருக்கும் உறவு என்பது மிகவும் அழகானது. பல வருடங்கள் தன்னுடன் ஒன்றாக வாழ்ந்த கணவன் இறந்ததால் அந்த அதிர்ச்சி தாங்க முடியாமல் அடுத்த நிமிடமே இறந்து போன மனைவிகளும் இங்கே இருக்கிறார்கள். அதே போல் மனைவி இறந்ததால் உடனே இறந்து போன கணவர்களும் இருக்கிறார்கள்.
இந்நிலையில்தான், அமெரிக்காவில் இறந்து போன தந்த கணவரின் சாம்பலை பல வருடங்களாக சாப்பிட்டு வரும் ஒரு பெண் தொடர்பான செய்தி மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
இங்கிலாந்தில் வசிக்கும் அந்த பெண்ணின் கணவர் 2011ம் வருடம் ஆஸ்துமா நோயால் மரணம் அடைந்தார்.
அவரின் சாம்பலை வீட்டில் வைத்திருந்தார் அவரின் மனைவி. ஒருநாள் எதேச்சையாக அந்த சாம்பலில் கைவிரல் பட்டுவிட அதை தொடைக்க விரும்பாத அவர் வாயில் வைத்து சுவைத்து பார்த்திருக்கிறார்.
தன் கணவரே தன்னுடன் இருப்பது போல உணர்ந்த அந்த பெண் தினமும் ஐந்து முறைக்கு மேல் அந்த சாம்பலை சாப்பிட்டு வந்திருக்கிறார். நாளடைவில் சாம்பலின் சுவைக்கு அவர் அடிமையாக மாறிவிட்டார்.
சுமார் 5 பவுண்ட் எடை வரை தனது கணவனின் சாம்பலை சாப்பிடுவதாக கூறி திகில் கிளப்பியிருக்கிறார் அந்த பெண். தற்போது அந்த பெண்ணுக்கு மருத்துவ மற்றும் மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.