நாட்டின் மீது படிப்படியாக நிலைபெற்று வரும் தென்மேற்கு பருவமழை : மக்களுக்கு விசேட அறிவுறுத்தல்!!

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினத்திற்கான (19.05.2026) காலநிலை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் மேலும், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு மாகாணத்திலும் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30 – 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

எரிபொருள் QR குறியீடு தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

எரிபொருள் விநியோகத்திற்காக விதிக்கப்பட்ட கியூஆர் குறியீடு தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என்று நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று (19) நாடாளுமன்றத்தில் பேசிய போதே அவர் இதனை கூறியுள்ளார். எரிபொருள் பயன்பாட்டை முடிந்தவரை குறைக்கும் நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, எரிபொருள் விநியோகத்தின் கட்டுப்பாடு மற்றும் நிர்வாகத்தை மேலும் சீரமைக்க கியூஆர் குறியீட்டு முறை பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்

இதற்கமைய, ஒவ்வொரு வகை வாகனத்திற்குமான எரிபொருள் ஒதுக்கீடு குறித்தும் அறிவித்துள்ளார்.

  • கார் – 25 லீற்றர்
  • முச்சக்கர வண்டி – 20 லீற்றர்
  • வேன் – 50 லீற்றர்
  • மோட்டார் சைக்கிள் – 8 லீற்றர்
  • பேருந்து – 100 லீற்றர்
  • நில வாகனம் – 40 லீற்றர்
  • லொரி – 200 லீற்றர்
  • சிறப்புப் பயன்பாட்டு வாகனம் – 40 லீற்றர்

இளம் பெண் எடுத்த விபரீத முடிவு : விசாரணையில் சிக்கிய கணவன்!!

இரத்தினபுரி பகுதியில் 24 வயது பெண் ஒருவர் முச்சக்கர வண்டியிலிருந்து திடீரென பாய்ந்து படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

தனது கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர் செலுத்திச்சென்ற முச்சக்கர வண்டியிலிருந்தே பாய்ந்து உயிரிழந்துள்ளதாக இரத்தினபுரி, பனமுரா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த பெண், புலுதோட்டா பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 12 ஆம் திகதி தனது கணவருடன் பெற்றோரை பார்க்க சென்றபோது, ​​கணவருடன் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், வாகனத்திலிருந்து குதித்துள்ளார்.

இதன்போது பலத்த காயமடைந்து நிலைமை கவலைக்கிடமாக இருந்த அப்பெண்ணை அவரது கணவர் பனமுரா மருத்துவமனையில் அனுமதித்த நிலையில்,

உடனடியாக காலி கராபிட்டிய போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைபெற்று வந்து சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். இந்த மரணம் தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தனக்கு தொடர்பில்லாத ஒரு பெண்ணுடன் திருமணத்திற்கு புறம்பான உறவு இருப்பதாக சந்தேகித்து, தனது மனைவி தன்னிடம் வாக்குவாதம் செய்து வாகனத்திலிருந்து பாய்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இருப்பினும், கவனக்குறைவால் மரணத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த பெண்ணின் பிரேத பரிசோதனைக்கு பின்னர் மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என்று பனமுரா பொலிஸ் தெரிவித்துள்ளது.

 

வவுனியா மாநகர முதல்வர், பிரதி முதல்வருக்கு எதிரான வழக்கு : தீர்ப்பு ஜூன் 19ம் திகதிக்கு ஒத்திவைப்பு!!

வவுனியா மாநகரசபையின் முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் ஆகியோர் பதவிகளை வகிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு தொடர்பான வழக்கின் தீர்ப்பு, அடுத்த மாதம் (ஜூன்) 19 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்றைய தினம் (19.05.2026) இந்த வழக்கு தீர்ப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதிபதி ஒருவர் சமூகமளிக்காத காரணத்தினால் தீர்ப்பு வழங்குவது எதிர்வரும் 19.06.2026 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்தது.

வவுனியா மாநகரசபையின் முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் தெரிவானது சட்டத்திற்கு முரணான வகையில் அமைந்துள்ளதாகக் கூறி, மாநகரசபை உறுப்பினர்களான க.பிரேமதாஸ் மற்றும் சு.விஜயகுமார் ஆகியோரால் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் ஆகியோரின் தெரிவுகள் சட்ட விதிமுறைகளுக்குப் புறம்பாக நடத்தப்பட்டுள்ளன மற்றும் பிரதி முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ப.கார்த்தீபன், வவுனியா மாநகரசபை எல்லைக்குள் வசிக்காத ஒருவர் என்பதால் அவர் அந்தப் பதவியை வகிக்கத் தகுதியற்றவர். இதனடிப்படையில், இவ்விருவரும் தத்தமது பதவிகளை வகிப்பது செல்லுபடியற்றது என அறிவிக்குமாறு மனுதாரர்கள் கோரியிருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம், கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் திகதி வவுனியா மாநகர முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் ஆகியோர் அந்தப் பதவிகளை வகிப்பதற்கு இடைக்காலத் தடை உத்தரவை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வழக்கின் பிரதிவாதிகளாக ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த மாநகர முதல்வர் சு.காண்டீபன் மற்றும் ஜனநாயக தேசிய கூட்டணியைச் சேர்ந்த பிரதி முதல்வர் ப.கார்த்தீபன் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

 

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிப்பு!!

இறுதி யுத்தத்தில் மரணித்தவர்களை நினைவு கூரும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளான இன்று வடக்கு கிழக்கில் பல்வேறு இடங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் வவுனியாவிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம் பெற்றிருந்தன.

வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வவுனியா குருமன்காடு பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

நிகழ்வில் பொதுமக்கள், அடியார்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு போரில் உயிரிழந்த மக்களுக்கு தீபமேற்றி ஆத்மசாந்தி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

ஓடிக்கொண்டிருந்த பேருந்திலிருந்து தவறிவீழ்ந்த இளைஞனுக்கு நேர்ந்த துயரம்!!

காலித் துறைமுகத்தில் இருந்து உடுகம நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றில் இருந்து, நகரும் போதே தவறி விழுந்து 26 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கடந்த மே 15 வெள்ளிக்கிழமை இரவு காலி, மகுலுவ சந்தி (Makuluwa Junction) பகுதிக்கு அருகே இந்தச் சோகமான விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த காலிப் பகுதியைச் சேர்ந்த இந்த இளைஞர், உடனடியாக கராப்பிட்டிய போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேருந்தின் சாரதியைக் காலித் துறைமுகப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விபத்துக்கான காரணம் மற்றும் நடத்துனரின் அலட்சியம் குறித்து காலித் துறைமுகப் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மன்னாரில் ஆடுகளை அடைக்கச் சென்ற இளைஞனுக்கு நடந்த துயரம்!!

மன்னார் பகுதியில் தனது ஆடுகளைப் பட்டியில் அடைக்கச் சென்ற இளைஞர் ஒருவர், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மன்னார், கள்ளிக்கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர், சனிக்கிழமை (16) அன்று வீட்டில் இருந்து ஆட்டுப்பட்டி இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றுள்ளார்.

அப்போது அப்பகுதியில் கடும் மழை பெய்துள்ளது. இந்த நிலையில், அவர் ஆட்டுப்பட்டிக்கு அருகில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞருக்கு அடிக்கடி வலிப்பு நோய் ஏற்படும் எனக் கூறப்படும் நிலையில், சனிக்கிழமையும் அவருக்கு வலிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

இதன் காரணமாகவே, அவர் அங்கு தேங்கிக் கிடந்த மழைநீரில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இவ்விபத்து மற்றும் மரணம் குறித்துப் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன

அதிசய வாழைக்குலையை காண குவியும் மக்கள்!!

நுவரெலியா மாவட்டம் கொட்டகலை பாத்தியாபுரம் பகுதியில் வீட்டுத் தோட்டத்தில் உள்ள வாழைமரத்தின் நடுப்பகுதியிலிருந்து வாழைக்குலை வெளிப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக வாழைமரத்தின் உச்சிப்பகுதியிலிருந்து உருவாகும் வாழைக்குலை, இம்முறை மரத்தின் நடுப்பகுதியில் தண்டுகளை துளைத்து வெளிவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அதிசய நிகழ்வை காண அப்பகுதி மக்கள் தொடர்ந்து வருகை தருவதுடன், இதனை இயற்கை விசித்திரம் அல்லது தெய்வீக நிகழ்வு என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் சமூக வலைத்தளங்களிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

இலங்கையில் வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்!!

அரசாங்கம் வாகன இறக்குமதிகளுக்கு 50 வீத மேலதிக வரி விதித்ததையடுத்து நாட்டில் வாகன விலைகள் கணிசமாக உயரக்கூடும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

இந்த புதிய வரி, நாணய மாற்று வீத உயர்வு மற்றும் ஏற்கனவே உள்ள வரிகள் சேர்ந்து வாகன மொடல்களுக்கு ஏற்ப 15 இலட்சம் முதல் 25 இலட்சம் ரூபா வரை விலை உயர்வு ஏற்படக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது

சிறிய ரக, நடுத்தர மற்றும் அதிநவீன SUV வாகனங்களின் விலைகளும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கலாம் என தொழில்துறை தரப்புகள் தெரிவித்துள்ளன.

இது முழுமையாக நுகர்வோருக்கு கூடுதல் சுமையாக மாறும் நிலை உருவாகும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

திருமண கொண்டாட்டத்தில் மஞ்சள் பூசியதால் உயிரிழந்த மணப்பெண் : உயிருக்கு போராடும் மணமகன்!!

மத்திய பிரரேசத்தில் நச்சு கலந்த மஞ்சளை பூசிய மணப்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் கர்கோனில் நடைபெற்ற திருமண கொண்டாட்டத்தின் போது நடைபெற்ற ஹால்டி(Haldi) என அழைக்கப்படும் மஞ்சள் பூசும் கொண்டாட்டத்தில் நச்சு கலந்த மஞ்சள் கலவை பயன்படுத்தப்பட்டதில் 21 வயது மணப்பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஏப்ரல் 26ம் திகதி நடைபெற இருந்த திருமண விழாவிற்கு முன்னதாக ஏப்ரல் 22ம் திகதி இந்த ஹால்டி கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. உடலில் மஞ்சள் கலவை பூசப்பட்ட சிறிது நேரத்திலேயே மணமகளுக்கு தீவிரமான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கர்கோனில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக இந்தூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இருப்பினும் துர்திஷ்டவசமாக அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த இளம் பெண் 21 வயது ராக்கி என அடையாளம் காணப்பட்டுள்ளது.

உயிரிழந்த மணப்பெண் ராக்கி-க்கு உதடு மற்றும் தொண்டை பகுதியில் கடுமையான வீக்கம், உடல் முழுவதும் சிவந்த தடிப்புகள் மற்றும் மூச்சு திணறல் ஆகியவை ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மஞ்சள் கலவை பூசப்பட்டதில் மணமகனும் திவீர உடல்நல குறைவுக்கு உள்ளாகியுள்ளார். அவர் தற்போது வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் கொண்டாட்டத்தின் போது மஞ்சளை தொட்டு பயன்படுத்திய பலருக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகன் மீது தந்தை விழுந்ததில் நேர்ந்த துயரம்!!

கம்பளை – நாரண்விட்ட பகுதியில் கூரை இருந்து தவறி விழுந்த தந்தையின் கீழ், சிக்கி மூன்று வயது சிறுவன் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கம்பளை – நாரண்விட்ட, பிஹில்லதெனிய பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர், வீட்டின் கூரை பகுதியில் இருந்த நீர் குழாயை எடுப்பதற்காக மேலே ஏறியுள்ளார்.

இதன்போது, தந்தை மேலே ஏறுவதை மூன்று வயது சிறுவன் கீழே நின்று பார்த்து கொண்டிருக்கையில், மாடிப்பகுதியிலிருந்த ஒரு பலகை உடைந்து, தந்தை சிறுவன் மேல் விழுந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, காயமடைந்த தந்தையும் மகனும் கம்பொல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த தந்தை தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக கம்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் : இளைஞன் பரிதாப மரணம்!!

கடுவன- புவகஸ்சார பாலத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது நேற்றையதினம்(17.5.2026) இடம்பெற்றுள்ளது.

கடுவன – புவகஸ்சார பிரதான வீதியில் பயணித்த தனியாருக்குச் சொந்தமான பயணிகள் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்து குறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

விபத்து இடம்பெறுவதற்கு பேருந்தின் அதிவேகம் காரணமா அல்லது கவனக்குறைவா என்பது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

சீனியின் விலையில் ஏற்படக்கூடிய அதிகரிப்பு குறித்து எச்சரிக்கை!!

இலங்கையில் சீனியின் விலையில் அதிகரிப்பு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் உள்நாட்டு நுகர்வுக்குத் தேவையான மொத்த சீனியில் சுமார் 63 சதவீதமானவை இந்தியாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன.

இந்நிலையில், கடந்த 15ஆம் திகதி முதல் இந்தியா சீனி ஏற்றுமதியை நிறுத்தியுள்ளதால், உள்நாட்டில் சீனியின் விலை கணிசமாக அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக புறக்கோட்டை மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழல் மற்றும் எல்-நினோ (El Nino) காலநிலை மாற்றம் போன்ற காரணங்களால், வரும் செப்டம்பர் 30ஆம் திகதி வரை சீனி ஏற்றுமதிக்கு இந்தியா தற்காலிகத் தடை விதித்துள்ளது. இலங்கையின் மாதாந்த சீனி நுகர்வுத் தேவை தோராயமாக 60000 மெட்ரிக் தொன் ஆகும்.

பெலவத்த மற்றும் செவனகல ஆகிய சர்க்கரை ஆலைகள் மூலம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவது (சிவப்பு சீனி) மொத்தத் தேவையில் 10 சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அதிகளவான சீனியை இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்வதுடன் அடுத்தபடியாக ஐக்கிய அரபு இராச்சியம், பிரேசில், போலந்து போன்ற நாடுகளிலிடமிருந்து இறக்குமதி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மாற்றுச் சந்தைகள் ஊடாக சீனியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இந்தியா சுத்திகரிக்கப்பட்ட சீனி (Refined Sugar) ஏற்றுமதிக்குத் தடை விதிக்கவில்லை. எனவே, அதன் விலை சற்று உயர்வாக இருந்தாலும், அதனை இறக்குமதி செய்வதில் சிக்கல் இல்லை. மேலும், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட சுமார் 80,000 மெட்ரிக் தொன் சீனி கையிருப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனினும், தற்போதைக்குத் தேவையான சீனி கையிருப்பில் உள்ள போதிலும், டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைதல் மற்றும் ஏனைய செலவீனங்கள் அதிகரிப்பு காரணமாக, இறக்குமதி செய்யப்படும் சீனியின் விலை அதிகரிப்பது தவிர்க்க முடியாத ஒன்று என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகலுக்கு பின்னர் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!!

நாட்டின் சில பகுதிகளில் இன்று(18.5.2026) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (18) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அதிகாலை விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுக மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

அநுராதபுர மாவட்டத்தில் இடைக்கிடையே மழை பெய்யும் வாய்ப்புள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

இலங்கையர்களுக்கு கனவாக மாறும் வாகன கொள்வனவு : இந்த அரசிலும் தொடரும் ஏமாற்றம்!!

இலங்கையில் வாகனங்களின் விலைகள் 15 முதல் 20 சதவீதம் வரை அதாவது 10 முதல் 15 லட்சம் ரூபாயால் அதிகரிக்கக்கூடும் என லங்கா வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதிக்காக அரசாங்கம் விதித்துள்ள புதிய வரிகள் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனைப் குறிப்பிட்டுள்ளார்.

“தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலையைக் கையாள்வதற்காக ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை எடுத்துள்ள கொள்கை ரீதியான முடிவுகள் பாராட்டுக்குரியவை.

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்ல இந்த முகாமைத்துவ நடவடிக்கைகள் உதவும்.

மே மாதம் 15 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் சுங்க வரியில் 50 சதவீதம் கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதியின் போது சுங்க வரி, உற்பத்தி வரி மற்றும் வற் வரி என மூன்று வகையான வரிகள் விதிக்கப்படும். இந்த நிலையில், இந்த புதிய திருத்தத்தின் காரணமாக சந்தையில் வாகனங்களின் விலைகள் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கமைய, சந்தையில் மக்களால் அதிகம் கொள்வனவு செய்யப்படும் வெசல் ரக வாகனங்களின் விலை 10 முதல் 12 லட்சம் ரூபாவினாலும், யாரிஸ் மற்றும் Passo போன்ற கார்களின் விலை 5 முதல் 6 லட்சம் ரூபாயினாலும் அதிகரிக்கும்.

சர்வதேச ரீதியிலான போர் சூழல், டொலரின் மதிப்பு உயர்வு, உலகளாவிய எரிபொருள் விலை ஏற்றம் மற்றும் நாட்டின் வெளிநாட்டு கையிருப்புப் பற்றாக்குறை போன்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டே அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

இந்த வரி அதிகரிப்பானது முதற்கட்டமாக மூன்று மாத காலத்திற்கே விதிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும், உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்தே இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதைத் தீர்மானிக்க முடியும்.

இந்த விலை உயர்வு காரணமாக சிறிய ரக வாகனங்களான எல்டோ மிரா ஆகியவற்றின் விலைகள் 5 முதல் 6 இலட்சம் ரூபாவினாலும், பிராடோ போன்ற சொகுசு ஜீப் ரக வாகனங்களின் விலை வரிகள் மற்றும் செலாவணிப் பிரச்சினைகளுடன் சேர்த்து சுமார் 30 முதல் 50 லட்சம் ரூபாய் வரையிலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எனவே, வாகனங்களை புதிதாக இறக்குமதி செய்து வாங்குவதை விட, தற்போது உள்நாட்டுச் சந்தையில் விற்பனைக்கு உள்ள வாகனங்களை கொள்வனவு செய்வதே மக்களுக்குச் சாதகமானது.

நாட்டு மக்களுக்கு மலிவு விலையில் வாகனங்களை வழங்கத் தங்களது சங்கம் தயாராக உள்ளது” என சம்பத் மெரெஞ்சிகே மேலும் தெரிவித்தார்.

இலங்கையர்களுக்கு வாக்காளர் பட்டியல் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!!

2026ஆம் ஆண்டிற்குரிய வாக்காளர் பெயர்ப்பட்டியல் பதிவு தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்த ஆண்டிற்குரிய வாக்காளர் பெயர்ப்பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத அல்லது முகவரி, பெயர் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கம் ஆகியவற்றில் திருத்தங்கள் காணப்படுகின்ற 01.02.2009 ஆம் திகதிக்கு முன்னர் பிறந்த நபர்கள் அது குறித்து தமது கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் விசாரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

எனவே பதிவுச்செயல்முறைக்கு முன்னர், தங்களது விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தங்கள் பகுதியில் உள்ள கிராம உத்தியோகத்தரை சந்தித்து, உரிய திருத்தங்களை செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

அதேபோல், தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்றும் தங்களது விபரங்கள் சரியானவையா என்பதை பரிசீலித்துப் பார்க்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.