சூறாவளியாக மாறவுள்ள காற்றழுத்தம் : இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

நாட்டின் வடகிழக்கு, தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து உருவாகி மேற்கு , வடமேற்கு நோக்கி நகரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று தென்கிழக்கு மற்றும் அருகிலுள்ள மத்திய வங்காள விரிகுடாவில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது நாளைக்குள் ஆழமான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாகவும், நாளை மறுநாள் சூறாவளியாகவும் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை இன்று காலை 06 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் களுத்துறை – நேபொட பகுதியில் 106 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

மேலும் பண்டாரகமவில் 85 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், பதுரலிய – மோல்காவில் 70 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது. இதேவேளை இந்தியாவின் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததையடுத்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாக செய்தி வெளியாகியுள்ளன.

இலங்கையில் ஆபத்தில் உள்ள இலட்சக்கணக்கானோர் : சுகாதார அதிகாரிகள் கூறும் அதிர்ச்சித் தகவல்!!

இலங்கையில் 150,000இற்கும் மேற்பட்டவர்கள், எச்.ஐ.வி மற்றும் பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் தொடர்பில் ஆபத்தில் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எதிர்வரும் ஆண்டுகளில் நாட்டில் எச்.ஐ.வி மற்றும் பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் சடுதியாக அதிகரிக்கும் என சுகாதார அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

சுகாதார அமைச்சின் கீழ் உள்ள தேசிய பாலியல் தொற்று/எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின்படி, இலங்கையில் 127,511 அதிக ஆபத்துள்ள நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதில் பெண் பாலியல் தொழிலாளர்கள், ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள், போதைப்பொருட்களை ஊசி மூலம் செலுத்துபவர்கள், பீச் போய்ஸ்(கடற்கரைகளில் சுற்றித்திரியும் ஆண்கள்) மற்றும் திருநங்கைகள் ஆகியோர் அடங்குவர்.

அத்துடன், மேல் மாகாணம், காலி, கண்டி, குருநாகல், அனுராதபுரம், மாத்தறை மற்றும் பதுளை ஆகிய இடங்களில் இருந்து அதிக எச்.ஐ.வி தொற்று விகிதங்கள் பதிவாகியுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவர்கள் சங்க கூட்டணியின் தலைவர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

மேலும், 2024ஆம் ஆண்டில், 39,547 நபர்கள் எச்.ஐ.வி உடன் வாழ்ந்து வருவதாகவும் 25,969 பேர் தங்கள் நிலையை அறிந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், பாடசாலைகளில் பாலியல் தொடர்பான கல்வியின் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.

விழிப்புணர்வு, பாதுகாப்பு மற்றும் ஆரம்ப பரிசோதனை இல்லாமல், வரும் ஆண்டுகளில் இலங்கையில் எச்.ஐ.வி மற்றும் பாலியல் தொடர்பான நோய்கள் கடுமையாக அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற கோரவிபத்து : ஆபத்தான நிலையில் ஒருவர்!!

யாழ்ப்பாணம் கோப்பாய் சந்தியில் இன்று (25) காலை வாகன விபத்து இடம்பெற்றுள்ளது . மினி வான் , ஹயஸ் வாகனம், டிப்பர் வாகனமும் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இந்த விபத்தில் ஒருவர் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் வாகனங்களுக்கும் சேதம் ஏற்பாடுள்ல நிலையில், சம்பவம் இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

உழவு இயந்திரத்தால் பிரிந்த உயிர் : தீவிரமாகும் விசாரணைகள்!!

களுத்துறையில் தொடங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலபட – புஹபுகொட வீதியின் மலபட சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தொடங்கொட பொலிஸார் தெரிவித்தள்ளனர். இந்த விபத்து நேற்று (24.10.2025) இடம்பெற்றுள்ளது.

புஹபுகொட நோக்கிப் பயணித்த உழவு இயந்திரம் ஒன்று எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் மற்றும் பின்புறத்தில் இருந்த இரண்டு பயணிகள் படுகாயமடைந்து நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, தொடங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் அதிகரிக்கும் மீற்றர் வட்டி மக்களிடம் அவசர கோரிக்கை!!

யாழில் அதிகரித்து வரும் மீற்றர் வட்டி மாபியாவுக்கு எதிராக மக்கள் தகவல்களை எனக்குத் தரலாம் என தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, மக்களிடம் அதிகமான காசோலைகளை பெற்றுக் கொண்டு அதை அடிப்படையாகக் கொண்டு மிரட்டி அல்லது சொத்துக்களை இழக்கச் செய்தவர்களும் என்னுடன் தொடர்பு கொள்ளலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பணத்திற்காக வன்முறை சம்பவங்களில் ஈடுபடுபவர்கள், போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடுபவர்கள், வட்டிக்கு பணம் வழங்கியவர்கள் தொடர்பில் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முதல் கட்டமாக 08 பேருக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார், அவர்களில் ஐவருக்கு எதிராக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில், மூவருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றிலும் வழக்குகள் தொடரப்படவுள்ளன.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதச் செயற்பாடுகளின் தீவிரத்தைக் குறைக்க அவசர நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆலோசனைக் குழுவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும், போதைப்பொருள் விற்பனையிலிருந்து பெறப்படும் பணம், சமூக விரோதச் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுவதுடன், மீட்டர் வட்டி வணிகம், ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, குழுச் சண்டைகள் போன்ற குற்றச் செயல்களிலும் சிலர் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்திற்கு குளிரூட்டப்பட்ட அறைகளை அமைக்குமாறு கோரிக்கை!!

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்திற்கு மேலதிக மரக்கறிகளை சேமித்து வைக்கக்கூடிய வகையில் குளிரூட்டப்பட்ட அறைகளை அமைத்துத்தருமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது அமைச்சிற்கு பொருளாதார மத்திய நிலையம் உற்படாது எனினும், விவசாயிகள் நன்மை கருதி 2026ஆம் ஆண்டு நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுப்பதாக விவசாயம், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற விவசாயம், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அமைச்சு சார் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டபோதே நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் இந்த கோரிக்கையினை முன்வைத்திருந்தார்.

மேலும் குறிப்பிடுகையில், “வவுனியா பொருளாதார மத்திய நிலையத்திற்கு பல்வேறு பகுதிகளிலிருந்தும் தினமும் தமது மரக்கறி உற்பத்தி பொருட்களை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளை வாங்கும் மொத்த வியாபாரிகள் அவற்றை பல இடங்களில் இருந்தும் கொள்வனவு செய்ய வரும், குறிப்பாக தம்புள்ளையை சேர்ந்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்கின்றனர்.

எவ்வாறிருப்பினும் தினமும் 4000 தொடக்கம் 5000 கிலோ வரையிலான மரக்கறிகள் அன்றைய தினம் விற்பனை செய்யப்பட முடியாத நிலையில் அதனை பாதுகாப்பாக சேமித்து வைக்கக்கூடிய வசதியின்மையால் பழுதடைகின்றன.

இதனால் பொருளாதார மத்திய நிலைய மொத்த வியாபாரிகள் அதிக நட்டத்தையும், பிரச்சினைகளையும் எதிர்கொள்கின்றனர்.

ஆகையினால், வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் தினமும் எஞ்சுகின்ற மேலதிக மரக்கறிகளை பாதுகாப்பாக சேமித்து வைக்கக்கூடிய நவீன வசதிகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட அறைகளை அமைக்கும் செயற்பாட்டை விவசாய அமைச்சின் 2026ம் ஆண்டுக்கான திட்டத்தில் உள்வாங்கி அவற்றை அமைத்துத்தர வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

மகளின் கனவை நிறைவேற்ற நாணயங்களை சேர்த்து ஸ்கூட்டர் வாங்கிக் கொடுத்த தந்தை!!

தந்தை ஒருவர் தனது மகளின் விருப்பத்தை நிறைவேற்ற நாணயங்களை சேர்த்து ஸ்கூட்டர் வாங்கி கொடுத்த சம்பவம் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலமான சத்தீஸ்கரின் ஜாஷ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு இரு சக்கர வாகன ஷோரூமில் நெகிழ வைக்கும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

அம்மாவட்டத்தைச் சேர்ந்த பஜ்ரங் ராமின் மகள் சம்பா பகத் என்பவர் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஸ்கூட்டரை விரும்பினார். ஏழை விவசாயியான பஜ்ரங் ராம் தனது மகளின் விருப்பத்தை நிறைவேற்ற ஒவ்வொரு நாளும் ஒரு தகரப் பெட்டியில் சில நாணயங்களைப் போடுவார்.

ஆறு மாதங்களுக்கும் மேலாக, தன்னால் முடிந்த அனைத்தையும் சேமித்து, நாணயங்களை ஒரு சாக்குப்பையில் போட்டு, ஹோண்டா ஷோரூமுக்கு எடுத்துச் சென்றார்.

அதனை பார்த்த ஊழியர்கள் ஆச்சரியப்பட்டார்கள், ஆனால் நாணயங்கள் நிறைந்த பைக்குப் பின்னால் இருந்த கதையைக் கேட்டபோது ஆச்சரியம் பிரமிப்பாக மாறியது.

ஷோரூம் இயக்குனர் ஆனந்த் குப்தா மிகவும் நெகிழ்ச்சியடைந்து “இது பணத்தைப் பற்றியது அல்ல. கடின உழைப்புக்கு மரியாதை அளிப்பது பற்றியது. அர்ப்பணிப்பைக் கொண்ட ஒருவருக்கு சேவை செய்வது ஒரு மரியாதை” என்றார்.

அவர்களை வரவேற்று தேநீர் வழங்கி, ஊழியர்களிடம் நாணயங்களை எண்ணத் தொடங்கச் சொன்னார் குப்தா. ரூ.40,000க்கு நாணயங்கள் இருந்த நிலையில் மீதமுள்ள தொகைக்கு கடன் பெறலாம் என்று பஜ்ரங் ராம் கூறினார்.

ஆவணங்கள் முடிந்ததும், அவரது மகளிடம் புதிய ஹோண்டா ஆக்டிவாவின் சாவி ஒப்படைக்கப்பட்டது. பின்னர், “இது என் வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாள்,” என்று சாவியை பிடித்தபடி கூறினார் விவசாயியின் மகள்.

பேருந்து தீ விபத்தில் தமிழ் இளைஞன் உட்பட 20 பேர் உடல் கருகி பலி!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் இருந்து 42 பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட ஆம்னி பேருந்து நேற்று (24.10.2025) அதிகாலை ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் அருகே தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக 20 பேர் உயிரிழந்தனர்.

இரு சக்கர வாகனம் பேருந்துடன் மோதியதில், பேருந்தின் இன்ஜின் பகுதியில் இருந்து திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலை நேரம் என்பதால் பேருந்தில் இருந்த பயணிகள் பெரும்பாலும் உறங்கிக் கொண்டிருந்தனர்.

தீ விபத்தின்போது ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உடனே பயணிகளை எழுப்பி வெளியேற்ற முயன்றனர். அதிலும் சிலர் மட்டும் அவசர வழியைப் பயன்படுத்தி வெளியேறினர்.

தீ திடீரென்று பரவியதால் 42 பயணிகளில் 15 பேர் உயிர் தப்பினர், மற்றவர்கள் தீயில் சிக்கி உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புக் குழுவினர் தீயைக் கட்டுப்படுத்தி, சிக்கிய பயணிகளை மீட்க முயன்றனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த யுவன் சங்கர் ராஜா (22) உட்பட பலர் உள்ளனர். லட்சுமி என்பவரது மகனான யுவன் சங்கர் ராஜா, ஹைதராபாத் மருத்துவ ஆய்வகத்தில் பணியாற்றி வந்தார்.

தீபாவளி பண்டிகைக்கு பிறகு பெற்றோரை பார்க்கச் சென்ற அவர் பேருந்தில் பயணம் செய்திருந்த போது இந்த பரிதாப சம்பவத்தில் உயிரிழந்தார். அவரது குடும்பம் மற்றும் உறவினர்கள் இதை அறிந்து ஆழமான சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் அறிமுகத்தில் காதல் : பரிதாபமாக பறிபோன இளைஞனின் உயிர்!!

இன்ஸ்டாகிராம் மூலமாக அறிமுகமாகி, நட்பு காதலாகி, கருத்து வேறுபாட்டால் சோகமாக மாறி இளைஞர் உயிரிழந்த சம்பவம் திருவாரூர் அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருதப்பட்டினம் பகுதியை சேர்ந்த பிரவீன் குமார் (23), பிபிஏ படித்த இளைஞர். கும்பகோணம் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஜெயஸ்ரீ (19) உடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி இருவரும் காதலித்து வந்தனர்.

சமீபத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், “இனி காதலை தொடர வேண்டாம்” என்று ஜெயஸ்ரீ தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உளைத்த பிரவீன் குமார் நேரில் பேச வேண்டும் எனக் கூறி, நேற்று கும்பகோணத்திற்கு சென்று ஜெயஸ்ரீயை சந்தித்து பைக்கில் திருவாரூருக்கு அழைத்துச் சென்றார்.

வழியில் திருக்கண்ணமங்கை அருகிலுள்ள சேட்டாக்குளம் கரையில் அமர்ந்து இருவரும் விவாதித்தபோது, காதலை முடிக்க ஜெயஸ்ரீ உறுதியாக இருந்ததாக தகவல்.

இதனால் மனவேதனைக்குள்ளான பிரவீன் திடீரென குளத்தில் குதித்தார். இதைக் கண்டு பதறிய ஜெயஸ்ரீ, அவரை காப்பாற்ற முயன்று தானும் குளத்தில் குதித்தார்.

அங்கிருந்த பொதுமக்கள் விரைந்து இருவரையும் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அங்கு சிகிச்சை பலனின்றி பிரவீன் உயிரிழந்தார். ஜெயஸ்ரீக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து குடவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

என் மகளுக்கு போட்டி : மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொலை செய்த மாணவியின் தாய்!!

பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சியில் படிப்பில் முன்னணியில் இருந்த மாணவரை கொலை செய்த சம்பவத்தில், சக மாணவியின் தாய்க்கு ஆயுள் சிறை வழங்கப்பட்டது.காரைக்கால் நேருநகர் பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் (48).

இவரது மனைவி மாலதி (40). இந்த தம்பதியரின் மகன் பாலமணிகண்டன் (13). பாலமணிகண்டன் காரைக்கால் நேரு நகரிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் 8ம் வகுப்பில் படித்து வந்தார்.

கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி, பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சியில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற பாலமணிகண்டன் வீடு திரும்பும் போது, சக மாணவியின் தாய் சகாயராணி விக்டோரி (46) வழங்கிய விஷம் கலந்த குளிர்பானத்தைக் குடித்துள்ளார்.

இதன் காரணமாக உடல் பாதிப்பு ஏற்பட்டு, செப். 3ம் தேதி இரவு பால மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்த போலீசாரின் விசாரணையில், இந்த சம்பவம் பள்ளியில் நடந்த போட்டியுடன் தொடர்புடையது என்றும், சகாயராணி விக்டோரி, பாலமணிகண்டனை போட்டியிலிருந்து வெளியேற்ற முயற்சி செய்ததாகவும், குளிர்பானத்தில் விஷம் கலந்து கொலை செய்து இருந்ததாகவும் தெரிய வந்தது.

இது குறித்து காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு, நீதிபதி ஆர். மோகன், சகாயராணி விக்டோரி மீது ஆயுள் சிறை மற்றும் ரூ.20,000 அபராதத்தை விதித்து தீர்ப்பு வழங்கினார். வழக்கில் அரசு வழக்கறிஞர் செல்வமுத்துக்குமார் ஆஜராகி இருந்தார்.

தென்னிலங்கையில் நடந்த பரபரப்பு : வெள்ளை வேனில் கடத்தப்பட்ட பெண்!!

பேருவளையில் வெள்ளை வேனில் முகமூடி அணிந்த ஒரு குழுவினரால் தனது மனைவி கடத்திய கணவர் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடத்தப்பட்ட பெண்ணின் தாய் சம்பவம் குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். பேருவளை, கரந்தகொட, தினாவத்தையைச் சேர்ந்த பெண்ணே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.

தனது கணவருடனான தகராறு காரணமாக தனது மகள் பல மாதங்களாக தனது வீட்டில் தங்கியிருப்பதாக கடத்தப்பட்ட பெண்ணின் தாயார் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி இரவு 11.00 மணியளவில், மகளின் கணவர் மற்றொரு குழுவுடன் வந்து, தனது மகளை வலுக்கட்டாயமாக வேனில் இழுத்துச் சென்றுவிட்டதாக அவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

அங்கு வந்த குழு முகமூடி அணிந்திருந்ததாகவும், அவர்களிடம் கைத்துப்பாக்கி மற்றும் கத்தி இருந்ததாகவும் கடத்தப்பட்ட பெண்ணின் தந்தை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக வடக்கு களுத்துறையின் பெல்பொல பகுதியில் உள்ள சந்தேக நபரின் கணவரின் வீட்டை பொலிஸார் சோதனை செய்துள்ளனர்.

ஆனால் அவர் அங்கு இல்லை. பின்னர், பொலிஸார் சந்தேக நபரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டபோது, ​​அவர் தனது மனைவியிடம் தொலைபேசியை கொடுத்தார்.

தனது சொந்த விருப்பத்தின் பேரில் தனது கணவருடன் இருப்பதாகவும், 22 ஆம் திகதி பொலிஸாருக்கு வந்து வாக்குமூலம் அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இருப்பினும், வாக்குமூலம் அளிக்க வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்ட போதிலும், 22 ஆம் திகதி இந்த தம்பதியினர் பொலிஸ் நிலையத்தில் வரவில்லை என்று பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் குறித்து பேருவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் நாளை காலை 6 மணிமுதல் மாலை 7 மணிவரை மின்வெட்டு!!

வடக்கிலுள்ள நான்கு மாவட்டங்களில் நாளை ஞாற்றுக்கிழமை (26.10.2025) மின்தடைப்படும் என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.

வவுனியா, மன்னார் 220kV மின் பரிமாற்ற வடத்தினை மாற்றியமைப்பதற்கான (Re-conductoring) வேலைகளிற்காக வடமாகாணத்திற்கான 132kV வவுனியா புதிய அநுராதபுர மின் பரிமாற்ற கட்டமைப்பானது எதிர்வரும் ஜப்பசி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ‘காலை 6.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை துண்டிக்கப்படுவதால்,

யாழ்ப்பாண மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம் , முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் வவுனியா மாவட்டம் முழுவதும் மின் விநியோகமானது துண்டிக்கப்படவுள்ளது.

மேலும் வேலைகள் பூர்த்தியாகியவுடன் மின் இணைப்பானது உடனடியாக மீள வழங்கப்படும் என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் 1 மணிக்குப் பின்னர் கொட்டித்தீர்க்கப் போகும் பலத்த மழை!!

இன்று (25.10.2025) பிற்பகல் 1 மணிக்குப் பிறகு நாட்டின் பிற பகுதிகளில் மழை ல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுத் துறை எதிர்வுகூறியுள்ளது.

வானிலை ஆய்வுத் துறையின் கூற்றுப்படி, மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 75 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், மேற்கு, வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இதற்கிடையில், இலங்கையின் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் வடகிழக்கே அமைந்துள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி மேலும் தீவிரமடைந்து மேற்கு-வடமேற்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று (25) அதிகாலை 5.00 மணிக்கு மட்டக்களப்பிலிருந்து வடகிழக்கே சுமார் 850 கி.மீ தொலைவில் அமைந்திருந்த இந்த குறைந்த காற்றழுத்தப் பகுதி, இன்று தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்காள விரிகுடாவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளது.

இந்த அமைப்பு நாளை (26) ஆம் திகதிக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், ஞாயிற்றுக்கிழமை (27) ஆம் திகதிக்குள் சூறாவளி புயலாகவும் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை வழியாக மட்டக்களப்பு வரையிலும், காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் கடற்கரைக்கு அப்பால் உள்ள ஆழமற்ற கடல் பகுதிகளில் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்படை மற்றும் மீன்பிடி சமூகங்கள் இது தொடர்பாக விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், இன்று திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை, மன்னார், கொழும்பு மற்றும் காலி வழியாக அம்பாந்தோட்டை வரையிலான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

தீவைச் சுற்றியுள்ள பிற கடல் பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். தென்மேற்கு அல்லது மேற்கு திசையில் இருந்து காற்று வீசும், மேலும் வேகம் மணிக்கு 30-40 கி.மீ. வரை இருக்கும்.

தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50-60 கி.மீ. வரை அதிகரிக்கும். தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகவும், கொந்தளிப்பாகவும் இருக்கும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மிகவும் கொந்தளிப்பான கடல் எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாலையில் பேருந்தில் பற்றிய தீ : 25 பேர் உயிருடன் எரிந்து மரணம்!!

ஆந்திர மாநிலத்தில் ஆம்னி பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து, படுக்கை வசதி கொண்ட தனியார் வால்வோ பேருந்து 40 பயணிகளுடன், நேற்று நள்ளிரவு பெங்களூருக்கு புறப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் கர்னூல் மாவட்டம் தெகுரு கிராமம் அருகே சென்று கொண்டிருந்த போது, பேருந்தின் மீது இருசக்கர வாகனம் ஒன்று மோதி அதன் அடியிலேயே சிக்கிக் கொண்டுள்ளது.

இதன் ,காரணமாக பேருந்தின் முன்பக்கத்தில் தீ பற்றிய நிலையில், தீ பேருந்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது. விபத்து நிகழ்ந்த உடன் பேருந்து ஓட்டுநரும், கிளீனரும் தப்பி ஓடி விட்டனர்.

பயணிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததால் பலருக்கு தீ பற்றியது உடனடியாக தெரியவில்லை.

தீ பற்றியதை அறிந்த பயணிகள் சிலர் ஜன்னல் கண்ணாடியை உடைத்து உயிர் தப்பியுள்ளனர். ஏசி பேருந்து என்பதால் ஜன்னல் கண்ணாடிகளை எளிதாக உடைக்க முடியாததன் காரணமாக பயணிகள் பலர் பேருந்தின் உள்ளே மாட்டிக்கொண்டனர்.

இந்த தீ விபத்தில் தற்போது வரை 25 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கண்ணாடியை உடைத்து தப்பித்த சிலர் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவலறிந்து தீயணைப்புதுறையினர் வந்து தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால் அதற்கு முன்னர் பேருந்து முற்றிலுமாக எரிந்து விட்டது. காவல்துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தீ விபத்து சம்பவத்திற்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சீரற்ற வானிலை : முச்சக்கரவண்டி மீது மரமொன்று முறிந்து விழுந்தது!!

காலி, அக்குரஸ்ஸ, ஹங்எல பிரதேசத்தில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (23.10.2025) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறிருப்பினும் இந்த விபத்தின் போது எந்தவித உயிர் சேதங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சில பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுவதால் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இரண்டு தேங்காய்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர்!!

இரண்டு தேங்காய்களை திருடியதாக கூறப்படும் நபர் ஓருவரை இரும்புக் கம்பியால் தாக்குதல் நடத்தி கொலை செய்த நபர் ஒருவருக்கு ஹோமகம நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த கொலைக் குற்றச்சாட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ரஞ்ஜித் தர்மசேன என்பவருக்கு ஹோமகம உயர்நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க மரண தண்டனை விதித்தார்.

ஹோமகம நீதிமன்ற பிரிவிற்கு உட்பட்ட நியதகல பகுதியிலுள்ள வயலில் இரும்புக் கம்பியால் ஒருவர் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்ததாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

சம்பவத்துடன் தொடர்புடைய சாட்சியங்கள் தெளிவாக குற்றவாளியை அடையாளம் காட்டுகின்றன. சாட்சிகளின் வாக்குமூலங்கள் விசாரணைகளின் போது எந்தவித முரண்பாடும் இன்றி காணப்பட்டன.

இரண்டாவது மற்றும் மூன்றாவது சாட்சிகள் இருவரும் குற்றவாளியை குற்றம் நிகழ்ந்த இடத்தில் கண்டதாகவும், பாதிக்கப்பட்டவரின் தலையில் இரும்புக் கம்பியால் அடித்ததாகவும் கூறியுள்ளனர். இச்சாட்சிகளில் எந்த சந்தேகமும் எழவில்லை என நீதிபதி தீர்ப்பின் போது தெரிவித்துள்ளார்.

நடவடிக்கையில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து சாட்சிகளையும் பரிசீலித்தபோது, குற்றவாளி ரஞ்ஜித் தர்மசேன மீது முன்வைக்கப்பட்ட கொலைக்குற்றம் நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

ஆனால் மற்ற இரண்டு சந்தேகநபர்களுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை. மூன்றாவது சந்தேகநபர் வழக்கு நடைமுறையிலேயே இறந்துவிட்டார்.

எனவே இரண்டாவது சந்தேகநபர் குற்றமற்றவர் எனவும் அவரை விடுவிப்பதாகவும் தீர்மானிக்கப்படுகிறது என நீதிபதி அறிவித்துள்ளார்.

முதன்மை குற்றவாளியான ரஞ்ஜித் தர்மசேன கொலை குற்றச்சாட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது என நீதிபதி அறிவித்துள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய குற்றப்பத்திரிகை 2001ஆம் ஆண்டிலேயே சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.