வெளிநாடு செல்வதற்காக தாயை கொலை செய்த மகள்!!

அநுராதபுரம் மாவட்டத்தில் திருப்பனை பிரதேசத்தில் தாயை கொடூரமாக கொலை செய்த மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பனை நகர எல்லையில் உள்ள அதுங்கம சந்திக்கு அருகில் வசித்து வந்த 65 வயதுடைய தாயைக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 32 வயதுடைய இளைய மகளும், அவரின் காதலன் எனக்கூறப்படும் 25 வயதுடைய இளைஞனும் நேற்று முன்தினம் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது சந்தேக நபர்களை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண் தொழிலின் மூலம் சம்பளமாக பணம் மற்றும் தங்க நகைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் பத்மலதா என்ற இரு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த தாயின் இளைய மகளும், அவரது காதலனும் திருப்பனை அதுங்கம வீதியிலுள்ள வீடொன்றில் குறுகிய காலம் ஒன்றாக வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், இவர்களுக்குள் ஏற்பட்ட பணத்தகராறு காரணமாகவே இந்தக்கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

உயிரிழந்த தாய் சுமார் 24 வருடங்களாக வெளிநாட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்துள்ளார். அவர் வெளிநாட்டில் பணிபுரிந்த காலத்தில், தனது இளைய மகளுக்கு திருமணமாகிய பின்னர் அவரையும் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அதற்கமைய, மகளும் சுமார் 14 வருடங்கள் வெளிநாட்டில் வசித்துள்ளார் என பொலிஸார் கூறியுள்ளனர். இவற்றுக்கு இடைப்பட்ட காலத்தில், மகளின் திருமண வாழ்க்கை தோல்வியடைந்தது.

தோழி ஒருவரின் ஊடாக குருநாகல், இப்பாகமுவ பகுதியைச் சேர்ந்த இராணுவத்தில் இருந்து தப்பியோடிய சிப்பாய் ஒருவரான சந்தேகநபருடன் பழகத் தொடங்கியுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் மகள் நாட்டிற்கு வந்து தனது சித்தியின் வீட்டில் தங்கியிருந்த போது, மகளையும் அவரது காதலனையும் திருப்பனை வீட்டிற்கு வந்து வாழுமாறு உயிரிழந்த தாய் அழைப்பு விடுத்துள்ளார்.

அதற்கமைய, கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதியளவில் அவர்கள் இருவரும் அந்த வீட்டிற்கு வந்து ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இக்காலப்பகுதியில் வீட்டைச் சுற்றி மதில் கட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதில் உதவியாளராகவும் இந்த சந்தேகநபர் வேலை செய்துள்ளார்.

இவ்வாறு ஒரே வீட்டில் வசித்து வந்த போதிலும், மூவருக்கும் இடையில் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 11 ஆம் திகதி, மகளின் காதலனை வீட்டை விட்டு வெளியேறுமாறு தாய் கூறியுள்ளார். அவரும் தனது சொந்த ஊரான இப்பாகமுவவிற்குச் செல்வதாகக் கூறிவிட்டு, சித்தியின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அதற்கு அடுத்த நாள், சந்தேகநபரான மகளும் வெளிநாடு செல்வதற்கான கடவுச்சீட்டைத் தயாரிப்பதற்காக சித்தியின் வீட்டிற்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

அதன்பின்னர், 12 ஆம் திகதி இரவு 7 மணியளவில் வாடகை முச்சக்கரவண்டி ஒன்றின் மூலம் திருப்பனை வீட்டிற்கு மகள் வந்துள்ளார்.

காதலனும் திருப்பனையிலுள்ள உணவகம் ஒன்றில் மதுவருந்திவிட்டு அன்றைய தினமே வீட்டிற்குள் நுழைந்து இந்தக் கொலையைச் செய்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலையின் பின்னர் இருவரும் பேருந்து மூலம் தம்புள்ளை பகுதிக்குச் சென்று அங்குள்ள விடுதியொன்றில் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மறுநாள், தாய்க்கு தொலைபேசி அழைப்பு எடுத்தும் பதில் கிடைக்காததால் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, தாய் நோய்வாய்ப்பட்ட நிலையில் படுக்கையில் உயிரிழந்து கிடப்பதாக மகள் திருப்பனைப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

திருப்பனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜயதிலகவின் அறிவுறுத்தலின் பேரில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது,

குடும்ப உறவினர்கள் வழங்கிய சாட்சியங்கள் முரண்பாடாக இருந்ததால் சந்தேகம் ஏற்பட்டு, சடலம் அனுராதபுரம் சட்ட மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

பிரேத பரிசோதனையின் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக உடற்பாகங்கள் அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. அனுராதபுரம் நீதவான் நீதிமன்ற நீதவானும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பரிசோதனை மேற்கொண்டார்.

அத்துடன் அப்பகுதியின் சிசிடிவி காட்சிகளைப் பரிசோதித்து பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டனர்.

கடந்த 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை உயிரிழந்த பெண்ணின் இறுதிக்கிரியைகள் திருப்பனை பொது மயானத்தில் நடைபெற்றன. சடலம் வீட்டிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட உடனேயே மகள், அவரது காதலன் மற்றும் சித்தி ஆகியோர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில், உயிரிழந்த தாயிடம் இருந்த 10 லட்சம் ரூபா பணம் மற்றும் தங்க நகைகளை கொலைக்கு முன்னர் திருடியுள்ளதாகவும்,

இவ்வாறு பணம் மற்றும் நகைகளைப் பெற்றுக்கொண்டு வெளிநாடு செல்லும் நோக்கிலேயே இந்தக் கொலையைச் செய்ததாகவும் அந்த மகள் மற்றும் காதலன் ஒப்புக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டில் தாய் : இலங்கையில் மகனின் விபரீத முடிவு!!

கம்பஹா, பியகம பகுதியில் பாடசாலை மாணவன் தனது வீட்டின் அறைக்குள் உயிரை மாய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பியகம, ஜயந்தி மாவத்தையைச் சேர்ந்த 14 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவனின் தாய் வெளிநாட்டில் வசிப்பதாகவும், வீட்டில் மாணவன், அவரது அண்ணா, தந்தை, தாத்தா மற்றும் தாம் வசித்து வந்ததாகவும் சிறுவனின் பாட்டி பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவத்தன்று மாணவன் பாடசாலைக்குச் செல்லவில்லை. ஏனையவர்கள் வேலைக்குச் சென்றிருந்த வேளையில், தாம் கடைக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய வேளையில் இந்த விபரீதம் நடந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர் மாய்ப்புக்கான காரணம் எதுவும் தமக்குத் தெரியவில்லை. மரணத்தில் எவ்வித சந்தேகமும் இல்லை என அவர் சாட்சியமளித்தார்.

இது உயிரிழந்த மாணவனின் பிரேத பரிசோதனை ராகம போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரி ஆர்.எம்.ஏ. ரத்நாயக்கவினால் மேற்கொள்ளப்பட்டது.

உயிர் மாய்ப்பால் ஏற்பட்ட மரணம் என திடீர் மரண விசாரணை அதிகாரி, அறிவித்துள்ளார். இந்த நிலையில் மரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆபத்தான கட்டத்தில் இலங்கை : மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை!!

சர்வதேச ரீதியில் தற்போது நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் பதற்றமான நிலைமைகள் காரணமாக, நாட்டின் எதிர்காலம் மிகவும் நிச்சயமற்றதாக மாறியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் நிதிக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு அல்லது சர்வதேச ரீதியில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, எரிபொருள் நுகர்வைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதனை மத்திய வங்கி ஆளுநர் நினைவு கூர்ந்தார். “இந்தியாவிடம் சுமார் 700 பில்லியன் டொலர் கையிருப்பு இருந்த போதிலும், அவர்கள் இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

உலகில் நிலவும் இந்த துரதிர்ஷ்டவசமான மற்றும் நிச்சயமற்ற நிலை நீடித்தால், இலங்கை மேலும் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் உள்ளது.

தற்போதைய வேகமான மாற்றங்களுக்கு மத்தியில், அடுத்த மூன்று மாதங்களுக்குள் என்ன நடக்கும் என்பதைக்கூட துல்லியமாகக் கணிப்பது கடினம்” என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நிலைமையைக் கட்டுப்படுத்த இந்தியாவில் ஏற்கனவே அரசு ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நிதிக்குழுவின் தற்காலிகத் தலைவர் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.

இலங்கையிலும் இதுபோன்ற மாற்று வழிமுறைகள் குறித்து நிதி அமைச்சு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

லொறி விபத்து : பின் தட்டு கழன்று விழுந்து சேதம்!!

கந்தளாய், அக்போபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கித்துளுத்து பகுதியில் இன்று (16) அதிகாலை மினரல் வாட்டர் போத்தல்களை ஏற்றிச்சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று அதிகாலை சுமார் 5.00 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில், லொறியின் பின்பக்க தட்டு (Loading Bed) கழன்று வீதியில் தலைகீழாக விழுந்து நொறுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி கம்பளை வழியாக திருகோணமலை நோக்கி மினரல் வாட்டர் போத்தல்களை ஏற்றிச்சென்ற லொறி, அக்போபுர கித்துளுத்து பகுதியை அண்மித்தபோது சாரதிக்கு ஏற்பட்ட திடீர் தூக்கக் கலக்கம் காரணமாக வீதியை விட்டு விலகிச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, லொறியை மீண்டும் வீதிக்கு திருப்ப முயன்ற வேளையில் சாரதி கட்டுப்பாட்டை இழந்ததால், லொறியின் பின்பக்க தட்டு திடீரென கழன்று விழுந்துள்ளது.

இந்த விபத்தில், லொறியில் ஏற்றிச் செல்லப்பட்ட பெருமளவிலான மினரல் வாட்டர் போத்தல்கள் வீதியில் சிதறி உடைந்து சேதமடைந்துள்ளன.

சாரதியும் உதவியாளரும் உயிர் தப்பியுள்ளதுடன், எவருக்கும் பாரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

இலங்கையில் புதிதாக வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான அதிர்ச்சி செய்தி!!

புதிய இணைப்பு

கடந்த இரண்டு மாதங்களில் வாகன இறக்குமதி செலவுகள் வேகமாக அதிகரித்தமையினால் வாகன இறக்குமதி மீது 50% கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% கூடுதல் வரி குறித்து இன்று (16) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்துள்ளார்.தொடர்ந்தும் பேசிய அமைச்சர்,

கடந்த இரண்டு மாதங்களில் இறக்குமதி செலவுகள் வேகமாக அதிகரித்துள்ளதாகவும், அதற்கேற்ப நாட்டில் உள்ள கையிருப்பை நிர்வகிப்பதற்காக இந்த நடவடிக்கை 3 மாதங்களுக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இருப்பினும், வாகன இறக்குமதிக்கு எந்த தடையோ அல்லது கட்டுப்பாடோ இல்லை என்றும், இந்த நடவடிக்கை மூன்று மாத காலத்திற்கு மாத்திரம் எடுக்கப்பட்டுள்ளதென்றும்,

ஆனால் இந்த நேரத்தில் யாராவது ஒரு வாகனத்தை இறக்குமதி செய்ய விரும்பினால், அவர்கள் கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நடவடிக்கை 3 மாத காலத்திற்கு மட்டுமே நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதால், வாகனங்களின் இறக்குமதியை 3 மாதங்கள் வரை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு :  இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்குரிய சுங்க இறக்குமதி வரியின் மீது 50% மேலதிக வரியை விதிப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி, இறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகனங்கள் மீது விதிக்கப்பட்டு வந்த 30% சுங்க இறக்குமதி வரியின் மீது கூடுதலாக 50% வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட சிறப்பு வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் 50% வரி இன்று (16) முதல் மூன்று மாத காலத்திற்கு விதிக்கப்பட உள்ளது.

இருப்பினும், மே 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் கடன் கடிதங்கள் பெறப்பட்ட வாகனங்களுக்கு இந்த புதிய 50% சுங்க வரி பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை : வத்தளை உள்ளிட்ட பல பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

இலங்கையில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக அதிகரித்திருந்த ஆறுகளின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில், மழை வீழ்ச்சி குறைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்ப்பாசன பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

இருப்பினும், களு கங்கையின் மில்லகந்த நிலையத்தின் தரவுகளுக்கு அமைவாக, இதுவரையில் சிறு வெள்ள நிலைமை நிலவி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அத்தனகலு ஓயா பகுதியில் இதுவரையிலும் சிறு வெள்ள நிலைமை காணப்படுவதால், அத்தனகலு ஓயாவின் கீழ்நிலப் பகுதிகளான கம்பஹா, கட்டான, வத்தளை போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது குறித்து அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

களனி கங்கையை ஒட்டிய ஹங்வெல்ல பகுதியில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதாகவும், அதற்கமைய இன்றைய தினமும் மழை பெய்யக்கூடிய வானிலை காணப்படுவதால் ஆறுகளின் நீர்மட்டம் குறித்து அவதானத்துடன் இருக்குமாறும் பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று (15) மாலை நிலவரப்படி 73 பிரதான நீர்த்தேக்கங்களில் சுமார் 22 நீர்த்தேக்கங்களும், 19 நடுத்தர அளவிலான குளங்களும் வான்பாய்ந்துள்ளது.

எனவே எதிர்வரும் மழைவீழ்ச்சி நிலவரங்களைக் கருத்திற்கொண்டு வான் கதவுகள் திறக்கப்படுவது குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.

வங்காள விரிகுடாவை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வுநிலை : கனமான மழை பெய்ய வாய்ப்பு!!

இன்று (16.05.2026) வடக்கு, கிழக்கு, மேற்கு, வட மேற்கு, மத்திய, சப்ரகமுவா, ஊவா, தெற்கு மாகாணங்கள் கனமான மழையைப் பெறும் வாய்ப்புள்ளது என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும், வானிலை ஆய்வாளருமான நாகமுத்து பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், நாளை (17.05.2026) மேற்கு, சபரகமுவ, தெற்கு, வடமேற்கு மாகாணங்கள் கனமழையையும் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்கள் மிதமான மழையைப் பெறும் வாய்ப்புள்ளது.

மத்திய வங்காள விரிகுடாவில் இலங்கையின் பருத்தித்துறைக்கு வடக்கு, வடகிழக்கு திசையில் 309 கி.மீ. தூரத்திலும் இந்தியாவின் கடலூருக்கு கிழக்காக 219 கி.மீ. தூரத்திலும் மையம் கொண்டிருக்கும் நன்கமைந்த காற்றழுத்த தாழ்வுநிலையின்( Well Marked Low Pressure )

அமுக்க சாய்வு விசையின்( Pressure Gradient Force – PGF) பற்றாக்குறையின் காரணமாக பல மணித்தியாலங்களாக ஒரே இடத்தில் நிலைகொண்டு தற்போது மிக மிகக் குறைவான வேகத்தில் நகருகின்றது. ஆனாலும் அதன் சுழற்சி வேகமாக இயங்குகின்றது.

இதனால் அதன் மையம் அதிக ஈரப்பதனை உள்நோக்கி ஈர்க்கின்றது. இந்த தாழ்வு நிலையின் மையம் ஈர்க்கின்ற அதிகளவிலான ஈரப்பதன் அரபிக் கடலிலிருந்து இலங்கையூடாக வங்காள விரிகுடாவை நோக்கி நகர்கின்றது. இதனால் இலங்கையின் பல பகுதிகளும் பரவலாக கனமழையைப் பெறுகின்றன.

குறிப்பாக அரபிக்கடலிலிருந்து ஈரப்பதன் உள்நுழைகின்ற இலங்கையின் நிலப்பகுதிகளும் ( மேல் மாகாணம், தென் மாகாணம், வடமேல் மாகாணம், வட மாகாணம்,

சப்ரகமுவ மாகாணம்) இலங்கையிலிருந்து ஈரப்பதன் வங்காள விரிகுடாவுக்கு வெளியேறுகின்ற இலங்கையின் நிலப்பகுதிகளும்( கிழக்கு, வடக்கு, ஊவா) பகுதிகளும் கனமழையைப் பெறுகின்றன.

இந்த நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலை எதிர்வரும் 17.05.2026 வரை வங்காள விரிகுடாவில் நிலவும் என்பதனால் நாளை( 16.05.2026) வடக்கு, கிழக்கு, மேற்கு, வட மேற்கு, மத்திய, சப்ரகமுவா, ஊவா, தெற்கு மாகாணங்கள் கனமான மழையைப் பெறும் வாய்ப்புள்ளது.

நாளை மறுதினம்( 17.05.2026) மேற்கு, சபரகமுவா, தெற்கு, வடமேற்கு மாகாணங்கள் கனமழையையும் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்கள் மிதமான மழையைப் பெறும் வாய்ப்புள்ளது.

ஏற்கனவே தொடர்ச்சியாக மழை கிடைக்கும் பகுதிகளுக்கு இன்றும் நாளையும் மழை கிடைக்கும் என்பதனால் இப்பிரதேசங்களின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ள அனர்த்தம் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம்.

அதேவேளை மத்திய, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் நாளையும் நாளை மறுதினமும் மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதனால் இம்மாகாணங்களின் சில பகுதிகளில் நிலச்சரிவு அனர்த்தங்கள் இடம்பெறக்கூடும் என்பதனால் மக்கள் மிக அவதானமாக இருப்பது மிகவும் அவசியம்.

எதிர்வரும் 18.05.2026 காலை வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் கடற்றொழிலாளர்கள் அதுவரை கடலுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

புகையிரதம் தடம் புரண்ட சம்பவம் : ஆணியைக் கழற்றியவர் கைது!!

இன்று (16) காலை ரயில் விபத்து இடம்பெற்ற இடத்தில், ரயில் தண்டவாளத்தில் ஆணிகளைக் கழற்றியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேலியகொட பொலிஸாரினால் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கைதானவர் கடுமையான போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தண்டவாளத்தில் கழற்றப்பட்ட ஆணிகளை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு சென்ற நபர் இவரே என்பது பொலிஸார் நடத்திய ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபரைக் கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

இரவு பெற்றோருடன் சென்ற 4 வயதுச் சிறுவனுக்கு நடந்த சோகம் : நடுவீதியில் பிரிந்த உயிர்!!

மாத்தறை, வெலிகமை பிரதேசத்தில் முச்சக்கர வண்டி வீதியில் தடம்புரண்டு இடம்பெற்ற விபத்தில் 4 வயதுச் சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

மேற்படி சிறுவன் இரவு தனது பெற்றோருடன் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போதே, அந்த முச்சக்கர வண்டி கட்டுப்பாட்டை இழந்து வீதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

விபத்தில் பலத்த காயமடைந்த 4 வயதுச் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுவனின் பெற்றோரும், முச்சக்கர வண்டி சாரதியும் காயமடைந்துள்ளனர்.

அவர்கள் மூவரும் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

5 நாட்கள் சுகப்பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்ற தாய் : ஆச்சர்ய சம்பவம்!!

இந்தியாவில் 5 நாட்கள் சுகப்பிரசவத்தில் தாய் ஒருவர் நாங்கு குழந்தைகளை பிரசவித்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது,

இந்தியா உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டம் ஓவரி கிராமத்தைச் சேர்ந்தவர் அமீனா. இவர் பிரசவத்துக்காக லோதிப்பூரில் உள்ள தீர்த்தங்கர் மகாவீர் பல்கலைக்கழக மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி சேர்க்கப்பட்டார்.

கர்ப்ப காலத்தின்போது அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் அவரது வயிற்றில் 4 குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. அதனால் மருத்துவர்கள் அதிக எச்சரிக்கையுடன் அவருக்கு பிரசவம் பார்த்தனர்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதல் நாள் இரவே அவருக்கு முதல் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்தது. அமீனாவுக்கு உடல்நிலை பாதிப்படைந்து இருந்ததால் அவருக்கு சிசேரியன் சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொள்ளவில்லை.

அவர் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 14-ம் தேதி மேலும் 3 குழந்தைகளை சுகப்பிரசவத்தில் அவர் பெற்றெடுத்தார். அதாவது 5 நாட்களாக நடந்த சுகப்பிரசவத்தில் 4 குழந்தைகளை அவர் பெற்றெடுத்தார்.

தற்போது தாயும், 4 குழந்தைகளும் நலமாக உள்ளனர். இதில் 2 குழந்தைகள் ஆண், 2 குழந்தைகள் பெண். இதுகுறித்து அமீனாவுக்கு பிரசவம் பார்த்த மருத்துவக் குழுவின் தலைவர் டாக்டர் ஷுப்ரா அகர்வால் கூறும்போது,

“இந்த மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் சுகப்பிரசவத்தில் பிறந்தது இதுவே முதல்முறை.

அதிக ரிஸ்க் இருந்தபோதும் அவரை அதிக கவனத்துடன் சிகிச்சை அளித்து குழந்தைகளை சுகப்பிரசவத்திலேயே பெறச் செய்தோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4 குழந்தைகளும் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்,

அதிகாலையில் இடம்பெற்ற அசம்பாவிதம் : ரயில் தடம் புரண்டு 12 பயணிகள் காயம்!!

களுத்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த புகையிரம், வனவாஸல மற்றும் ஹூணுபிட்டிய இடையே ரயில் மார்க்கத்தில் இன்று (16) அதிகாலை ரயில் ஒன்று தடம் புரண்டு, பயணிகள் பெட்டி ஒன்று கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 12 பயணிகள் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள தனியார் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

காயமடைந்தவர்களில் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.

இன்று அதிகாலை 3:25 மணிக்கு பொல்கஹவெலையிலிருந்து புறப்பட்ட இந்த ரயிலானது, தெற்கு களுத்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஒரு ரயிலாகும் என தெரிவிக்கப்படுகிறது.

 

அடினோ வைரஸ் பாதிப்பால் 4 வயதுச் சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!!

நெல்லை மேலப்பாளையத்தில் அடினோ வைரஸ் பாதிப்பால் 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மேலப்பாளையம் பெரிய குத்பா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த ரசூல் என்பவரின் மகள் பாத்திமா (4). இந்தச் சிறுமிக்குக் கடந்த சில நாட்களாகக் கடும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, நெல்லை பெருமாள்புரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த 20 நாட்களுக்கும் மேலாகத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சிகிச்சையின் போது சிறுமியின் நுரையீரல் பகுதியில் பலத்த பாதிப்பு ஏற்பட்டிருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதற்காகத் தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதிலும், இன்று சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

சிறுமி உயிரிழந்ததைத் தொடர்ந்து சுகாதாரத் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சில அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன:

சிறுமியின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியே அவருக்கு எதிராக மாறியது கண்டறியப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனை நடத்திய பரிசோதனை ஆவணங்களில், சிறுமிக்கு அடினோ வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமி இறந்ததற்கான துல்லியமான காரணம் மற்றும் உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து விரிவான விளக்கம் அளிக்குமாறு தனியார் மருத்துவமனை நிர்வாகத்திற்குச் சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே கோடை கால நோய்கள் பரவி வரும் நிலையில், அடினோ வைரஸ் பாதிப்பால் சிறுமி உயிரிழந்திருப்பது மேலப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகளிடம் காய்ச்சல் அல்லது சுவாசப் பாதிப்புகள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகளை அணுகுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து தடம்புரண்டு விபத்து : விசாரணையில் தெரியவந்த தகவல்!!

புதிய இணைப்பு : இன்று அதிகாலை இடம்பெற்ற தொடருந்து தடம் புரண்ட விபத்திற்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி, தொடருந்து பாதையில் பொருத்தப்பட்டிருந்த இயக்க மற்றும் பூட்டு தண்டு இணைப்பிகளை இரும்பு திருடர்கள் திருடிச் சென்றதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

முதலாம் இணைப்பு : பொல்கஹாவெலவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து ஒன்று தடம் புரண்டு, அதன் ஒரு பெட்டி தண்டவாளத்தில் கவிழ்ந்ததில் 12 பயணிகள் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை இந்த விபத்து வனவாஸல மற்றும் ஹுனுபிட்டிய தொடருந்து நிலையங்களுக்கு இடையே இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை 3.25 மணிக்கு பொல்கஹாவெலவிலிருந்து புறப்பட்ட இந்த தொடருந்து, விபத்து நடக்கும் போது களுத்துறை தெற்கு நோக்கி பயணித்துக் கொண்டிருந்ததாக தெரிவிப்படுகின்றது.

காயமடைந்த பயணிகள் விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் F.U.வூட்லர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பலத்த காயமடைந்த ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

 

இலங்கையில் வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்!!

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதியில் 10 சதவீதமளவில் உயர்வடையும் என அகில இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

டொலரின் பெறுமதி உயர்வு, சமூக பாதுகாப்பு உதவித்தொகை அறவீடு சட்டத்திருத்தம் ஆகிய காரணங்களால் இவ்வாறு விலை உயர்த்தப்பட்டுள்ளதாக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அகில இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் கூறுகையில்,

இலங்கை ரூபாவுக்கு நிகராக அமெரிக்க டொலரின் பெறுமதி சடுதியாக உயர்வடைந்துள்ளது. சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவீடு சட்டத்திருத்தம் செய்யப்பட்டு வரி தொகையிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் ஹய்பிரிட் டொயோடா ரைசா ரக காருக்கான சமூக பாதுகாப்பு உதவுத்தொகை வரி 30 இலட்சமாக காணப்பட்டது. ஆனால் புதிய திருத்தத்துக்கமைய அந்த வரி 63 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 140 இலட்சம் ரூபா பெறுமதியான ரைசா ரக காருக்கான சமூக பாதுகாப்பு உதவுத்தொகை வரி 8 இலட்சம் முதல் 10 இலட்சம் ரூபா வரையில் உயர்வடையும்.

அதேபோல் யாரிஸ் ரக வாகனத்தின் உதவுத்தொகை வரி 4 அல்லது 5 இலட்சத்தாலும், வெசல் ரக காரின் உதவுத்தொகை வரி 12 இலட்சத்தாலும், லேன்ட் க்ரய்சர் காரின் உதவுத்தொகை வரி 30 இலட்சத்தாலும் உயர்வடையும்.

இதற்கமைய இறக்குமதி செய்யப்படும் சகல வாகனங்களின் விலைகளும் 10 சதவீதமளவில் உயர்வடையும். எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வார காலப்பகுதிகளில் வாகனங்களின் விலை சடுதியாக உயர்வடையும் என தெரிவித்தார்.

 

நடிகை தேவி பிரியாவின் கார் ஓட்டுநர் பலி : விபத்து நடந்த இடத்தில் ஓட்டுநருக்குக் கண்ணீர் அஞ்சலி!!

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தனது நடிப்பால் முத்திரை பதித்த நடிகை தேவி பிரியா, தனது கார் ஓட்டுநரின் மறைவால் ஏற்பட்ட துயரத்திலிருந்து மீள முடியாமல் தவித்து வருகிறார்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்த அந்தப் பயங்கர விபத்தின் நினைவுகள் இன்றும் அவரை வாட்டி வதைத்து வருகின்றன.

கடந்த மார்ச் மாதம் சென்னையிலிருந்து தேவி பிரியா தனது சொந்த ஊரான தேனிக்குக் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நேரிட்ட விபத்தில்,

அவரது கார் ஓட்டுநர் முத்துகணேஷ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இந்தச் சம்பவம் நடிகை தேவி பிரியாவைப் பெரும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியது.

ஓட்டுநர் முத்துகணேஷின் மறைவை ஏற்க முடியாமல் தவித்து வந்த தேவி பிரியா, விபத்து நடந்த அதே இடத்திற்கு நேரில் சென்றுள்ளார். முத்துகணேஷ் எங்கு உயிரிழந்தாரோ,

அதே இடத்தில் நின்று அவரை நினைத்துக் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். தான் உயிர் பிழைத்த இடத்தில், தனக்காக உழைத்த ஒருவர் உயிர் இழந்ததை நினைத்து அவர் உருக்கமான அஞ்சலியைச் செலுத்தியுள்ளார்.

இந்த உணர்ச்சிகரமான தருணங்களை வீடியோவாகப் பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தேவி பிரியா பகிர்ந்துள்ளார். “என்னை வாழ வைத்துவிட்டு அவர் சென்றுவிட்டார்”

என்ற தொனியில் அவர் பதிவிட்டுள்ள கருத்துக்கள் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. வெறும் ஓட்டுநராக மட்டும் பார்க்காமல், அவரைத் தனது குடும்ப உறுப்பினரைப் போலக் கருதி தேவி பிரியா காட்டிய இந்த அன்பு சமூக வலைதளங்களில் பலரது பாராட்டைப் பெற்று வருகிறது.

விபத்து நேர்ந்து பல நாட்கள் கடந்தாலும், தனக்காக உயிரைத் தியாகம் செய்த ஓட்டுநரை மறக்காமல் தேவி பிரியா செய்துள்ள இந்தச் செயல்,

திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முத்துகணேஷின் குடும்பத்தினருக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் எனப் பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

 

இலங்கை ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சி: இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு புதிய அதிர்ச்சி!!

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி இன்றும் (15) பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்று இன்றைய தினம் 331 ரூபாய் 15 சதத்திற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

மத்திய வங்கியினால் இன்று (15) வெளியிடப்பட்ட நாளாந்த நாணய மாற்று விகித அறிக்கையின்படி, ஒரு அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 323.53 ரூபாயாகவும், விற்பனை விலை 331.15 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 05 ஆம் திகதிக்குப் பின்னர், டொலரின் கொள்முதல் விலை 323 ரூபாயையும் விற்பனை விலை 331 ரூபாயையும் தாண்டிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

2023 டிசம்பர் 05 ஆம் திகதியன்று டொலரின் கொள்வனவு விலை 323 ரூபாயாகப் பதிவாகியிருந்ததுடன், அதன் விற்பனை விலை 333.20 ரூபாயாகக் காணப்பட்டது.

அதன்படி, 2023 டிசம்பர் 05 ஆம் திகதிக்குப் பின்னர், இரண்டு வருடங்கள் கழித்து டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் அதிகூடிய பெறுமதியைப் பதிவு செய்த முதல் சந்தர்ப்பமாக இன்றைய நாள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.