8 இலட்சம் ரூபாவைச் செலவு செய்து ஆடம்பரமாகக் காதலர் தின கொண்டாடியவர் கைது!!

வீடுகளை உடைத்து தங்க நகைகளைத் கொள்ளையிட்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த சந்தேக நபர் ஒருவர் கம்பஹா கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், பல்வேறு அடகு மையங்களில் இருந்த சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

கடந்த பெப்ரவரி 12 ஆம் திகதி வீடு ஒன்றை உடைத்துத் கொள்ளையிட்ட நகைகளை அடகு வைத்து, அதிலிருந்து கிடைத்த 8 இலட்சம் ரூபாவைச் செலவு செய்து, பெப்ரவரி 14 ஆம் திகதி தனது மனைவியுடன் மிக ஆடம்பரமாகக் காதலர் தினத்தைக் கொண்டாடியுள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நிட்டம்புவ பகுதியில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர், ‘ஐஸ்’ போதைப்பொருளுக்குத் தீவிரமாக அடிமையானவர்.

தினசரி போதைப்பொருள் தேவைக்கான 50,000 ரூபாவைத் திரட்டுவதற்காகவே நிட்டம்புவ மற்றும் அத்தனகல்ல பகுதிகளில் தொடர்ச்சியாகக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட பணத்தில் வாங்கிய உந்துருளி மற்றும் 11 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது ஏற்கனவே 08 திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒரு குற்றவாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபருக்கு உதவிய மற்றுமொரு நபரும் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

20 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி விபத்து : விடுப்பு பார்க்க சென்றவரும் படுகாயம்!!

ஹட்டனில் இருந்து தங்கொட்டுவ நோக்கி பயணித்த லொறி ஒன்று வட்டவளை பகுதியில் வீதியை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து வட்டவளை சிங்களக் கல்லூரிக்கு அருகில் இன்று (21) அதிகாலை 2:00 மணியளவில் நிகழ்ந்துள்ளது.

லொறியில் பயணித்த சாரதி மற்றும் உதவியாளர் படுகாயமடைந்து வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஹட்டனில் இருந்து தங்கொட்டுவ நோக்கிச் சென்ற லொறி, எதிர் திசையில் சென்ற லொறி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி ஏற்படவிருந்த விபத்தைத் தவிர்க்க முயன்றபோது பிரதான வீதியை விட்டு விலகிச் சென்றுள்ளது.

விபத்து இடம்பெற்றபோது கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பயணித்த பயணியொருவர் விபத்தைப் பார்க்க சென்று மீண்டும் பேருந்தில் ஏற முயன்றபோது பயணி தவறி விழுந்து பேருந்தின் முன் சக்கரத்தின் கீழ் அவரது கால் சிக்கிக் கொண்டுள்ளது.

இதனால் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவரை மீட்டு நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டவளை போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் விபத்து தொடர்பில் வட்டவளை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் 15 வயது மாணவியைக் காணவில்லை!!

வவுனியாவில் 15 வயது மாணவி ஒருவரை காணவில்லை என முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய குறித்த மாணவி கடந்த திங்கட்கிழமை வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் வீடு திரும்பவில்லை என குறித்த முறைப்பாட்டில் தாயாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் டிலக்சிகா என்பவரே இவ்வாறு காணாமல் போனவர் ஆவார்.

இவர் தொடர்பாக தகவல் தெரிந்தோர் 0778060470 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ அல்லது வவுனியா பொலிஸாருக்கோ தகவல் வழஙாகுமாறு கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

எரிவாயு பற்றாக்குறையினால் கடும் நெருக்கடியில் நாட்டு மக்கள் : அரசு எடுக்கவுள்ள நடவடிக்கை!!

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் லிட்ரோ மற்றும் லாப்ஸ் எரிவாயு பற்றாக்குறையால் நுகர்வோர் கடுமையான சிரமங்களை எதிர்கொள்வதாக தெரியவந்துள்ளது.

எரிவாயு பற்றாக்குறை காரணமாக வணிக நடவடிக்கைகளும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க நேற்று செய்தியாளர் சந்திப்பை நடத்தியுள்ளார்.

இதன் போது தேவையான எரிவாயு இருப்புக்களை பொதுமக்களுக்கு விடுவிப்பது உரிய எரிவாயு நிறுவனங்களின் பொறுப்பு என குறிப்பிட்டுள்ளார்.

லாப்ஸ் எரிவாயு நிறுவனத்தால் திட்டமிட்ட வகையில் சமையல் எரிவாயுவை வழங்க முடியாவிட்டால், அது தொடர்பாக முடிவை எடுக்க அரசாங்கம் தயாராக உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாளாந்த தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு நாளைக்கு வெளியிடப்படும் எரிவாயு அடங்கிய சிலிண்டர்களின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் இந்த பற்றாக்குறையை சமாளிக்க எதிர்பார்த்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா : வணிகத்துறையில் 7 தங்கப் பதக்கங்கள் வென்ற சாதனைப் பெண்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா 2ஆம் நாளில் (20.02.2026) வணிகத் துறையில்,மாணவி செல்வி தங்கராசா ஜஸ்மின் யூலிற்றா 7 தங்கப்பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.

அதேவேளை நேற்றையதினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் மருத்துவத்துறையில் 8 தங்கப்பதக்கங்களை மருத்துவபீட மாணவி செல்வி அபிராமி நாகரட்ணம் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை (19) முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது .

 

நாட்டின் பல பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை : வளிமண்டலவியல் திணைக்களம்!!

நாட்டின் பல பகுதிகளில் கடும் மின்னல்தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் கடும் மின்னல் தாக்கத்துடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, குறித்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும்,

மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

 

அதிகாலை இடம்பெற்ற கொடூரம் : மனைவியின் தலையை துண்டித்த கணவன்!!

காலி – நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில், குடும்ப தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை (20) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு 32 வயதுடைய மூன்று குழந்தைகளின் தாயான மஹாபடகே இரேஷா மதுமாலி என்பவர் உயிரிழந்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட பெண் தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஒருவருடன் தொடர்பு வைத்திருந்தமை காரணமாக கொலை இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

தனது மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையை, வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள குறித்த பெண்ணுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டு முற்றத்தில் வீசியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து இன்று காலை அவர் தானாக முன்வந்து பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

34 வயதான குறித்த நபர் பெண்ணின் சட்ட ரீதியான கணவர் எனவும் அவர் முன்னாள் இராணுவ சிப்பாய் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சந்தேக நபர் இன்று (20) உடுகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

 

தென்னிலங்கையில் அதிசொகுசு மாளிகை அரசினால் பறிமுதல்!!

ஹம்பாந்தோட்டையில் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட 3 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை, சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் முடக்கியுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல் மூலம் சொத்துக்கள் பெற்றதாக சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் பேரில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

வலஸ்முல்ல, கடிகமுவ பகுதியிலுள்ள 3 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள மூன்று மாடி வீடு கொண்ட 14.1 பேர்ச் காணியை பணமோசடி தடுப்புச் சட்டத்திற்கமைய முடக்கப்பட்டுள்ளது.

கடந்த 19ஆம் திகதி முதல் 07 நாட்களுக்கு முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை அதிகரிப்பு!!

சந்தையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். அந்த வகையில் சந்தையில் ஒரு முட்டை 35 ரூபாவிற்கும் அதிகமான விலையில் விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை பல்பொருள் அங்காடிகளில் ஒரு முட்டை 55 – 60 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக தெரியவருகிறது.

இதேநேரம் சந்தையில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1300 ரூபாவிற்கு அதிக விலையில் விற்கப்படுவதாக தெரியவருகிறது.

விநியோகஸ்தர்கள் விலைகளை அதிகரித்ததால், அதிகரித்த விலையில் விற்க வேண்டியுள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். மேலும் இந்த நாட்களில் சந்தையில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விநியோகத்தில் பற்றாக்குறை இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

 

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வின் நிலை : புதிய காற்றுச் சுழற்சி குறித்து வெளியான தகவல்!!

குறைந்த அழுத்தப் பிரதேசமானது வலுவிழந்து, இலங்கைக்கு தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தால் இன்றைய தினம் (20.02.2026) பிற்பகல் 2 மணியளவில் வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி முதல் ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு முதல் திருகோணமலை வரையிலான கடற்கரையோர கடல் பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கைக்கு கிழக்காக வங்காள விரிகுடாவில் இன்று புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகுகின்றதாகவும், இது நாளை மறுநாள் தாழமுக்கமாக மாற்றமடையும் எனவும் யாழ். பல்கலைக்கழக புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வு கூறியுள்ளார்.

முதலாம் இணைப்பு

இலங்கைக்கு கிழக்காக வங்காள விரிகுடாவில் இன்று புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகுகின்றதாக யாழ். பல்கலைக்கழக புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வு கூறியுள்ளார்.

இது நாளை மறுநாள் தாழமுக்கமாக மாற்றமடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தனது முகப்புத்தகத்தில் இன்று (18.02.2026) இட்டுள்ள பதிவில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அதில் மேலும், இதனால் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வரும் மழை இன்றும் (20.02.2026), நாளையும் (21.02.2026) நாளை மறுநாளும் (22.02.2026) பரவலாக கன மழை முதல் மிகக் கனமழையாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

குறிப்பாக அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் பல பகுதிகளுக்கும் மேற்குறிப்பிட்ட மூன்று நாட்களிலும் அவ்வப்போது கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு

இதேவேளை குறைந்த அழுத்தப் பிரதேசமானது இலங்கைக்கு தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

 

பொலிஸ் நிலையத்தில் சினிமா பாணியில் நடந்த சம்பவம் : ஆபத்தான பெண் தப்பியோட்டம்!!

கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ பொலிஸ் தலைமையகத்தில் தடுப்புக்காவல் உத்தரவில் இருந்த பெண் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பாக இரண்டு பொலிஸ் சார்ஜென்ட்கள் மற்றும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இரவு நேரக் கடமை அதிகாரிகள் மற்றும் உதவியாளர்களாகப் பணியாற்றிய இரண்டு சார்ஜென்ட்களும், சந்தேக நபரின் பாதுகாப்பிற்காகப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளும் இடைநீக்கம் செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மொரட்டுவை பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை முகாமில் நிறுவப்பட்ட சிறப்பு நடவடிக்கைப் பிரிவின் குழுவினரால் குறித்த போதைப்பொருள் கடத்தல்காரர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.

இரத்மலானையில் உள்ள மெலிபன் சந்தி-அத்திடிய பிரதான வீதியில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடம் இருந்து 36,650 மில்லிகிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டது.

தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர், கடந்த 16 ஆம் திகதி பெண் கான்ஸ்டபிளுடன் கழிப்பறைக்கு சென்ற போது, ​​காவலில் இருந்து தப்பிச் சென்று, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளார்.

எனினும் தப்பியோடிய சந்தேக நபர் 8 மணி நேரத்திற்குப் பிறகு அதே நாளில் தலவதுகொடவின் கிம்புலா எல பகுதியில் சிறப்பு பொலிஸ் குழுவால் கைது செய்யப்பட்டார்.

 

யாழ். பல்கலைக்கழக மருத்துவப் பீட வரலாற்றில் மாணவி படைத்துள்ள சாதனை!!

யாழ். பல்கலைக்கழக மருத்துவப் பீட வரலாற்றில் ஒரே நேரத்தில் அதிக தங்கப் பதக்கங்களைப் பெற்று மாணவி ஒருவர் சாதனை படைத்துள்ளார். நேற்று (19.02.2026) நடைபெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த செல்வி.

அபிராமி நற்குணம் என்ற மாணவியே மருத்துவ கற்கையின் போது பல்வேறு துறைகளிலும் தனது சிறப்பான திறமையை வெளிப்படுத்தி 8 தங்கப் பதக்கங்களைப் பெற்றுக் கொண்டார்.

இவர், மருத்துவப் படிப்பின் அனைத்துக் கட்டங்களிலும் முதலிடம், சத்திரசிகிச்சை, மகப்பேற்றியல் மற்றும் குழந்தை மருத்துவம் உட்பட பல்வேறு துறைகளில் விசேட சித்தி மற்றும் மருத்துவப் பீடத்தின் சிறந்த மாணவி விருது ஆகிய பதக்கங்களைப் பெற்றுக் கொண்டார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவப் பீட வரலாற்றில் ஒரே நேரத்தில் அதிக தங்கப் பதக்கங்களை வென்ற மாணவி என்ற பெருமையை மருத்துவ பட்டதாரி அபிராமி நற்குணம் பெற்றுள்ளார்.

 

வெளிநாடொன்றில் இலங்கையருக்கு அடித்த பெரும் ஜாக்பொட் : கூப்பனால் கிடைத்த பல கோடி பெறுமதியான பரிசு!!

துபாயில் வசித்து வரும் இலங்கையர் ஒருவர், 12 லட்சம் ரூபாய்க்கு தங்கம் வாங்கியதற்காக வழங்கப்பட்ட கூப்பனில், 6.28 கோடி ரூபாய் மதிப்புள்ள ‘பென்ஸ்’ காரை பரிசாக வென்றுள்ளார்.

மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில், கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக, துபாயில் பணிபுரிந்து வரும் இலங்கையைச் சேர்ந்த சுமித் என்பவர் குறித்த காரினை வென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுமித், பிரபல நகைக்கடை ஒன்றில், இலங்கை மதிப்பில் 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கக்கட்டி ஒன்றை சமீபத்தில் வாங்கியுள்ளார். இதற்காக அவருக்கு பரிசு கூப்பன் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

துபாய் ஷாப்பிங் திருவிழாவின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட பரிசு குலுக்கலில், அவருக்கு, , இலங்கை மதிப்பில் 6.28 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நிற ‘மெர்சிடிஸ் பென்ஸ்’ கார் பரிசாக விழுந்துள்ளது.

அவர் வாங்கிய தங்கத்தின் விலையை விட, அவருக்கு பரிசாக கிடைத்த பென்ஸ் காரின் மதிப்பு 50 மடங்கு அதிகம்.

இது குறித்து சுமித் கூறுகையில், ”நான் என் சேமிப்பிற்காகவே தங்கம் வாங்கினேன். ஆனால், அது இவ்வளவு பெரிய பரிசை தரும் என நான் எதிர்பார்க்கவில்லை,” என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மேலும், பரிசாக கிடைத்த காரை விற்க போவதில்லை எனவும், தானே வைத்து ஓட்டப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய லொத்தர் பரிசுத் தொகை வெல்லப்பட்டது : 62 கோடியை வெற்றிபெற்ற நபர்!!

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய லொத்தர் பரிசுத் தொகை நேற்றைய சீட்டிழுப்பில் வெல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, தேசிய லொத்தர் சபையின் கப்ருக லொத்தர் சீட்டிழுப்பில் 62 கோடி ரூபாய் பெறுமதிமிக்க பரிசுத் தொகையே வெல்லப்பட்டுள்ளது.

இலங்கை லொத்தர் சபை வெளியிட்ட முடிவுகளின் படி 62 கோடியே 98 இலட்சத்து 55 ஆயிரத்து 919 ரூபாய் வெல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரலாற்றில் தனிநபர் வெற்றிக்கொள்ளப்பட்ட மிகப்பெரிய பரிசுத் தொகை இதுவென தெரிவிக்கப்படுகின்றது.

 

5 ஆண்டுகளாக வயிற்று வலியால் தவித்துவந்த பெண் : எக்ஸ்ரேயில் தெரிந்த அதிரவைத்த காட்சி!!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பெண்ணொருவர் ஐந்து ஆண்டுகளாக வயிற்று வலியால் தவித்துவந்த நிலையில், சமீபத்தில் அவரது மகன் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அவருக்கு எக்ஸ்ரே எடுத்தபோது, எக்ஸ்ரேயில் தெரிந்த காட்சி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கேரளாவிலுள்ள Punnapra என்னுமிடத்தைச் சேர்ந்த உஷா ஜோசப், கடந்த ஐந்து ஆண்டுகளாக வயிற்று வலியால் தவித்துவந்துள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கு முன் அவருக்கு ஆலப்புழா மருத்துவக்கல்லூரியில் அறுவை சிகிச்சை ஒன்று நடந்துள்ளது.

ஆகவே, அவருக்கு வயிற்று வலி ஏற்படும்போதெல்லாம் அவரது மகனான ஷிபின் அவரை மருத்துவக்கல்லூரிக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அவர்களால் உஷாவுக்கு என்ன பிரச்சினை என கண்டுபிடிக்கமுடியவில்லை.

ஒருவேளை தன் தாய்க்கு சிறுநீரகக் கல் ஏதாவது இருக்குமோ என சந்தேகப்பட்ட ஷிபின் அவரை மற்றொரு மருத்துவரிடம் அழைத்துச் செல்ல, அந்த மருத்துவர் உஷாவுக்கு எக்ஸ்ரே ஒன்றை எடுத்துள்ளார்.

எக்ஸ்ரேயில் தெரிந்த காட்சி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஆம், உஷாவின் வயிற்றுக்குள், forceps என்னும், அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் சிறிய இடுக்கி ஒன்று இருப்பது எக்ஸ்ரேயில் தெரியவந்துள்ளது.

தகவலறிந்த மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் தாங்கள் அதை அகற்றுவதாகக் கூற, ஆளைவிடுங்கள், நாங்கள் வேறு மருத்துவர்களைப் பார்த்துக்கொள்கிறோம் என்று கூறிவிட்டார் ஷிபின்.

இதற்கிடையில், உஷாவுக்கு அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படும் மருத்துவர், தான் அறுவை சிகிச்சை செய்யவில்லை என மறுக்க, செவிலியர்கள் மீது பழி போட முயற்சி மேற்கொள்ளப்பட்டுளது.

இந்நிலையில், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்தப்படும் என்றும், அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்க, இந்த விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

கர்ப்பிணிப்பெண்ணுக்கு முன்னாள் கணவரால் நேர்ந்த பயங்கரம்!!

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்திலுள்ள ஹைதராபாதில், கர்ப்பிணியான தன் முன்னாள் மனைவியை கொடூரமாகக் குத்திக் கொலை செய்துள்ளார் ஒருவர்.

தேவரகொண்டா மகேஷ் என்பவரும் சுனிதா (29) என்னும் பெண்ணும் 2022ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு கனடாவில் வாழ்ந்துவந்த நிலையில், ஆரம்பம் முதலே இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் இருந்துள்ளன.

2024ஆம் ஆண்டு விவாகரத்துக்கு விண்ணப்பித்த சுனிதா இந்தியா திரும்பிவிட்டார். சமீபத்தில் மீண்டும் திருமணம் செய்துகொண்டு, Vanasthalipuram என்னுமிடத்தில் தன் புது குடும்பத்துடன் வாழ்ந்துவந்துள்ளார் சுனிதா.

இந்நிலையில், புதன்கிழமையன்று சுனிதா வீட்டுக்கு வந்துள்ளார் மகேஷ். அவர் கையிலிருந்த பையில், இரண்டு கத்திகள், ஒரு போத்தலில் பெட்ரோல் மற்றும் ஒரு chainsaw ஆகியவை இருந்துள்ளன.

சுனிதா வீட்டிலிருந்தவண்ணம் வேலை செய்துவந்த நிலையில், அவரது மாமியார் மாடியில் துணி காயப்போட சென்றிருக்க, சுனிதாவின் அறைக்குள் நுழைந்த மகேஷ், கதவை உட்புறமாக தாழ்ப்பாள் போட்டுள்ளார்.

இருவருக்கும் வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. சுனிதாவை தலை முதல் பல்வேறு இடங்களில் சர்மாரியாக குத்திய மகேஷ், குளியலறைக்குள் சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டுள்ளார்.

சுனிதாவின் அலறல் சத்தம் கேட்டு அவரது குடும்பத்தினர் ஓடி வர, அவர் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழக்கும்போது, அவர் மூன்று மாத கர்ப்பமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மகேஷ், கடந்த ஆண்டு தன் தாயின் இறுதிச்சடங்குக்காக இந்தியா வந்துள்ளார். சுனிதா ஏற்கனவே அவர் மீது குடும்ப வன்முறை புகார் செய்திருந்ததால், மகேஷ் இந்தியா வந்ததும், விமான நிலையத்திலேயே அவரை மடக்கிய அதிகாரிகள், அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்துள்ளனர்.

ஏற்கனவே சுனிதா தன்னைப் பிரிந்து வேறொருவரை திருமணம் செய்ததால் ஆத்திரத்திலிருந்த மகேஷ், சுனிதாவால் தனது பாஸ்போர்ட் பறிக்கப்பட்டதால் மீண்டும் கனடாவுக்கு திரும்பிச் செல்ல இயலாத நிலை ஏற்படவே, சுனிதாவை பழிக்குப் பழி வாங்குவதற்காக, திட்டமிட்டு அவரை கொடூரமாக கொலை செய்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கிறார்கள்.

சுனிதாவைக் கத்தியால் குத்திவிட்டு மகேஷ் குளியலறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டதைத் தொடர்ந்து, குளியலறையின் கதவை உடைத்து அங்கிருந்த மகேஷை கைது செய்துள்ளனர்.

அவர் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.