பெங்களூருவில் மதிய உணவுக்காக வெளியே சென்ற வங்கி ஊழியர் சாலை விபத்தில் உயிரிழந்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு பெங்களூருவின் ராராஜி நகர் பகுதியில் யோகேஸ்வரி என்ற 27 வயது வங்கி ஊழியர் மதிய உணவிற்காக வெளியே சென்றிருந்த போது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
யோகேஸ்வரி பரபரப்பான ராஜ்குமார் சாலையை கடக்க முயன்ற போது அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்துள்ளார். பெண்ணின் மீது மோதிய வேகத்தில் இருசக்கர வாகன ஓட்டியும் கீழே தள்ளப்பட்டார்.
கெம்பேகவுடா லே அவுட் பகுதிக்கு சேர்ந்த யோகேஸ்வரி, விபத்து நடைபெற்ற உடனே அருகில் உள்ள சுகுணா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் அதிகப்படியான இரத்தப்போக்கு காரணமாக அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். உடனடியாக யோகேஸ்வரி உடல் பிரேத பரிசோதனைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.
விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் 22 வயது தீபன் என்பது தெரியவந்துள்ளது. அவர் தற்போது பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பாக உள்ளூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்தின் போது வாகனம் எவ்வளவு வேகத்தில் வந்தது என்பது போன்ற விவரங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு, இன்ஸ்டாகிராமில், மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரின் நட்பு கிடைத்துள்ளது.
நட்பு காதலாக, தன் ஊரை விட்டு விட்டு, தன் காதலர் வீட்டுக்கே வந்துவிட்டார் அந்தப்பெண்.
கோண்டியா என்னுமிடத்தைச் சேர்ந்த அஷ்ரஃபா என்னும் சியா, மஹாராஷ்ட்ரா மாநிலத்தை விட்டு, மத்தியப்பிரதேசத்தின் போபாலில் வாழும் சமீர் என்னும் தன் காதலர் வீட்டுக்கு வந்தபோதுதான் அவருக்கு அந்த உண்மை தெரியவந்தது.
ஆம், சமீர் ஏற்கனவே திருமணமானவர், அவருக்கு இரண்டு பிள்ளைகளும் இருக்கிறார்கள். மூன்று மாதங்களாக சியா சமீரின் வீட்டில் வாழ்ந்துவரும் நிலையில், அவருக்கும் சமீருடைய மனைவிக்கும் அடிக்கடி சண்டை நடக்கும், சத்தமாக வாக்குவாதம் நடக்கும் என்கிறார்கள் அக்கம்பக்கத்தவர்கள்.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை மாலை வழக்கம்போல, இருவருக்கும் சண்டை வந்துள்ளது.
ஆத்திரத்தில் சமீர் சியாவின் கழுத்தை நெறிக்க, அவர் உயிரிழந்துள்ளார். உடனே, தன் சகோதரர், சகோதரி மற்றும் தாய் உதவியுடன், சியாவின் உடலை ஒரு இரும்புப் பெட்டியில் அடைத்து, அருகிலுள்ள தண்ணீர்த்தொட்டி ஒன்றில் வீசியுள்ளார் சமீர்.
வியாழக்கிழமை, அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த பிள்ளைகள் ஏதோ துர்நாற்றம் அடிப்பதை உணர்ந்து பெரியவர்களுக்குச் சொல்ல, பொலிசார் அழைக்கப்பட்டுள்ளார்கள்.
அப்போது தண்ணீர்த்தொட்டி ஒன்றிற்குள் கிடந்த இரும்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அதற்குள் சியாவின் உடல் இருக்க, விசாரணையில் சமீர் அவரைக் கொன்றது தெரியவர, பொலிசார் அவர் வீட்டுக்குச் சென்றுள்ளார்கள்.
ஆனால், சமீர் தலைமறைவாகிவிட்டார். பொலிசார் அவருடைய தாய், சகோதரர் மற்றும் சகோதரியை கைது செய்துள்ளார்கள்.
இன்ஸ்டாகிராம் காதலால் தன் வாழ்வையே இழந்துவிட்டார் சியா.
3,000 ஆண்டுகள் பழமையான ஒரு பிரம்மாண்டமான “தங்க நகரம்” எகிப்தின் கிழக்கு பாலைவனப் பகுதியில் அமைந்துள்ள சுகாரி (Sukari) மலைத்தொடரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது வெறும் தங்கச் சுரங்கம் மட்டுமல்லாது, அக்காலத்தில் மக்கள் செழிப்பாக வாழ்ந்த ஒரு முழுமையான குடியிருப்புப் பகுதியாகவும் விளங்கியது.
தூதன்காமுனின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டதற்கு இணையாக இந்த கண்டுபிடிப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
எகிப்திய சுற்றுலா மற்றும் தொல்பொருள் அமைச்சகத்தின் “பண்டைய தங்க நகரத்தை மீட்டெடுத்தல்” என்ற திட்டத்தின் கீழ் இந்த அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
பாறைகளைத் தகர்த்து தங்கத்தைப் பிரித்தெடுக்கப் பயன்படுத்தப்பட்ட அரைக்கும் கற்கள், வடிகட்டுதல் குளங்கள் மற்றும் தங்கத்தை உருக்கி சுத்திகரிக்கப் பயன்படுத்தப்பட்ட களிமண் உலைகள் போன்றவை நல்ல நிலையில் கண்டறியப்பட்டுள்ளன.
சுரங்கப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் வாழ்ந்த வீடுகள், பட்டறைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் ஆகியவை முறையாகத் திட்டமிடப்பட்டுக் கட்டப்பட்டுள்ளன. இது அந்த காலத்திலேயே எகிப்தியர்கள் எவ்வளவு மேம்பட்ட நிர்வாகத்திறன் கொண்டிருந்தனர் என்பதைக் காட்டுகிறது.
பிரித்தானியாவின் நார்த்தாம்ப்டன் பகுதியைச் சேர்ந்த சிறுவன் எல்ஃபி பிலிப்ஸ் ஒரு நவீன அறுவை சிகிச்சை மூலம் தனது காலின் நீளத்தை அதிகரித்துக் கொண்ட முதல் சிறுவன் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
‘ஃபிபுலர் ஹெமிமீலியா’ என்ற அரிய வகை பிறவிக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட எல்ஃபியின் வலது கால், இடது காலை விட ஒரு அங்குலத்திற்கும் மேலாகக் குட்டையாக இருந்தது.
40,000 பிறப்புகளில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படும் இந்த பாதிப்பிற்கு, லிவர்பூலில் உள்ள எல்டர் ஹே குழந்தைகள் வைத்தியசாலை நிபுணர்கள் முன்னோடி சிகிச்சை அளித்தனர்.
வழக்கமாக குழந்தைகளுக்கு எலும்பின் வெளிப்பகுதியில் உலோகக் கருவிகளைப் பொருத்தியே காலின் நீளம் அதிகரிக்கப்படும்.
ஆனால், அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட இந்த புதிய முறையில், எல்ஃபியின் தொடை எலும்பின் மேற்பரப்பில் ‘மோட்டாரைஸ்டு டெலஸ்கோபிக் நெயில்’எனப்படும் ஒரு விசேஷ ஆணி பொருத்தப்பட்டது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு, ஒரு மாத காலத்திற்குத் தினமும் மூன்று முறை ஆல்ஃபியின் காலில் ஒரு காந்தக் கருவி வைக்கப்பட்டது.
இந்தக் காந்த விசை, காலில் பொருத்தப்பட்ட ஆணியை மெதுவாக (ஒரு நாளைக்கு சுமார் 1 மி.மீ) பிரித்தது. அந்த இடைவெளியை உடல் இயற்கையாகவே புதிய எலும்பு திசுக்களால் நிரப்பியது. இந்தச் சிகிச்சையின் மூலம் எல்ஃபியின் கால் 3 செ.மீ நீளமாக்கப்பட்டது.
அறுவை சிகிச்சை முடிந்து ஒரு வருடத்திற்குள், எல்ஃபி இப்போது கூடைப்பந்து விளையாடுவது மற்றும் ஓடிப் பிடித்து விளையாடுவது எனத் தனது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளார்.
நிபுணர் நிக் பீட்டர்சன் கூறுகையில், வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு எலும்பு வளர்ச்சித் தட்டுகள் பாதிக்கப்படக்கூடாது என்பதால் இதுவரை இத்தகைய உள்-ஆணி சிகிச்சைகள் வழங்கப்படவில்லை.
ஆனால் எல்ஃபியின் வெற்றி, இனிவரும் காலங்களில் மற்ற குழந்தைகளுக்கும் அதிக வலியற்ற, பாதுகாப்பான இந்த சிகிச்சை முறைக்கு வழிவகுத்துள்ளது எனக் குறிப்பிட்டார்.
தற்போது எல்டர் ஹே வைத்தியசாலையில் மேலும் மூன்று குழந்தைகளுக்கு இந்த சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு காத்தான்குடியிலிருந்து சென்ற பேருந்து புனானையில் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் எவருக்கும் பாதிப்பில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (18) காலை மட்டக்களப்பு வாழைச்சேனை புனானை பகுதியில் இவ் விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது.
காத்தான்குடியிலிருந்து பொலன்னறுவை நோக்கி பயணித்த பேருந்தும் பொலன்னறுவையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த லொறியும் புனானை பகுதில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்தில் இரு வாகனங்களும் சேதமடைந்துள்ள நிலையில் எவருக்கும் பாதிப்பில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இப் பகுதியில் மழையுடனான வானிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
இந்தியாவின் வேலூர், பாலாற்றங்கரையில் ஆண்டுத்தோறும் நடத்தப்படும் மயானக்கொள்ளை தேர்த்திருவிழா இம்முறையும் நடைபெற்றது.
இதில் காளி தேவியாக எழுந்தருளிய அம்மன் திருத்தேரில் மைதானத்திற்கு புறப்பட்டு சென்றார். வழிநெடுகிலும் இருந்த பக்தர்கள் அம்மனை மனமுருக தரிசனம் செய்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக 60 அடி உயர தேரானது கீழே சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் அறிந்த மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தியதோடு, இனி இதுபோன்ற சம்பவம் நடக்கக்கூடாது என விழா குழுவினருக்கு எச்சரிக்கை விடுத்தார்.
2026 ஆம் ஆண்டில் உலகம் சந்திக்கப் போகும் பொருளாதார மாற்றங்கள் குறித்து பல்கேரியாவின் புகழ்பெற்ற தீர்க்கதரிசியான பாபா வங்காவின் கணிப்புகள் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
பாபா வங்காவின் கணிப்புகள் குறித்து சில சந்தேகம் இருந்தாலும், அவரது கணிப்புகள் சில நிஜமாகியுள்ளன.இவை தொடர்ந்தும் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் பாபா வங்காவின் கணிப்புப்படி, எதிர்காலத்தில் பணத்தின் மதிப்பு உலகளவில் வீழ்ச்சியடையும். இதனால் பணப்புழக்கம் குறைந்து, மக்கள் பணத்தின் மீதான நம்பிக்கையை இழப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026ல் நிலநடுக்கங்கள் மற்றும் காலநிலை மாற்றங்கள் உலக சங்கிலியை பாதித்து பொருட்களின் விலையை கணிசமாக உயர்த்தும். செயற்கை நுண்ணறிவின் அதீத வளர்ச்சியால் வேலைவாய்ப்புகள் மற்றும் பொருளாதார முறைகள் பெரும் மாற்றத்தை சந்திக்கும் என்று பாபா வங்கா கூறியுள்ளார்.
பொருளாதார வீழ்ச்சியின் பொழுது முதலீட்டாளர்கள் பாதுகாப்பான புகலிடமாக உலோகங்களை தேர்ந்தெடுப்பார்கள் என்று பாபா வங்கா கூறியுள்ளார்.
தங்கம் வெள்ளி மற்றும் செப்பு ஆகியவற்றின் விலைகள் இதுவரை கண்டிராத அளவிற்கு உச்சத்தை தொட வாய்ப்பு இருப்பதாகவும், வெள்ளி மற்றும் செப்பு ஆகியவை தங்கத்திற்கு இணையான முக்கியத்துவம் பெறும் என்றும் அவர் கணித்துள்ளார்.
செப்பின் தேவை அதிகரிப்பதால் செப்பு ‘புதிய தங்கம்’ என்று அழைக்கப்படும் அளவிற்கு மதிப்பு பெறும் என்று அவர் கணித்துள்ளார்.
இவ்வாறான பின்னணியில், தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வந்த நிலையில், திடீரென விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகின்றது.
தங்கம் தற்போது வரை பாதுகாப்பான புகலிடமாக மாறியுள்ளதுடன், வெள்ளி விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் அவற்றில் அதிகளவு முதலீடு செய்து வருகின்றார்.
தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் நிலையான தன்மை இல்லாத காரணத்தினால் முதலீட்டாளர்களின் பார்வை செப்பு பக்கம் திரும்பியுள்ளது. ஆண்டு இறுதிக்குள் தங்கம் ஒரு அவுன்ஸ் (மதிப்பீடு) $4,900க்கு அருகில் இருக்கும் என்று கணித்துள்ளன.
இந்த மாற்றம் ஒரு தற்காலிக யோசனை மட்டுமல்ல, நீண்டகால உத்தியாக மாறி வருவதாகவும்,இந்த சூழலில், செப்பு அடுத்த தங்கமாக மாறும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதேபோல், செப்பின் முக்கியத்துவமும் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதுவரை, செப்பு முக்கியமாக தொழில்துறையில் மட்டுமே பயன்படுத்தப்படும் உலோகமாக இருந்து நிலையில், தற்போது மாறிவரும் உலகப் பொருளாதார சூழ்நிலையில், செப்பு தற்போது முதலீட்டிற்கு சாதகமான உலோகமாக மாறி வருகின்றது.
எதிர்காலத்தில் செப்பும் முதலீட்டாளர்களுக்கு நல்ல இலாபத்தை வழங்கும் என்று சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இந்த சூழலில், செப்பு வேகமாக வளர்ந்து வருகிறது.மின்சார வாகனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள், ஸ்மார்ட் பவர் கிரிட் அமைப்புகள் மற்றும் தரவு மையங்களின் விரிவாக்கம் போன்ற அனைத்து எதிர்கால தொழில்நுட்பத் துறைகளிலும் செப்பு ஒரு முக்கிய மூலப்பொருளாக மாறியுள்ளது.
இந்தத் துறைகளில் முதலீடுகள் அதிகரிக்கும் போது, தாமிரத்திற்கான தேவையும் கணிசமாக அதிகரித்து வருகின்றது.
இதனால் சந்தையில் தற்போதைய சரிவு மற்றும் ஏற்ற இறக்கத்தை அச்சுறுத்தலாகப் பார்க்கக்கூடாது என்றும், மாறாக ஒரு முதலீட்டு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பாபா வங்காவின் கணிப்புகள் பலமுறை உண்மையாக இருந்தாலும் இவை அனைத்தும் ஒரு வழிகாட்டுதலே தவிர உறுதியான முடிவுகள் அல்ல. மேலும் பாபா வங்காவின் கணிப்புகள் எழுத்துப்பூர்வமானவை கிடையாது.
அவரின் வாய்மொழி கணிப்புகள் அவர்களது சீடர்களால் குறிப்பு எடுக்கப்பட்டவை என்பதால் இதன் உண்மைத் தன்மை குறித்து கேள்விகள் உள்ளது.
இலங்கையில் பின்தங்கிய பகுதிகளில் வீதிகளை புனரமைக்கும் பணிகளில் ஜப்பானிய மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வெலிகந்த, சுசிரிகம கிராமத்தில் 15 ஜப்பானிய மாணவர்களின் தலைமையில் நேற்று வீதி அமைக்கும் பணி நடைபெற்றது.
15 ஜப்பானிய பல்கலைக்கழக மாணவர்கள் வெலிகந்த, சுசிரிகம கிராமத்தில் 10 நாட்கள் தங்கி, அப்பகுதியை ஆய்வு செய்துள்ளனர்.
அதற்கமைய நேற்று சுசிரிகம கிராமத்தில் ஒரு பாழடைந்த வீதியை தங்கள் சொந்த செலவில் அமைத்து கொன்கிரீட் போடும் பணியைத் தொடங்கினர் என திட்ட இயக்குநர் ஜெயதிலக பெரேரா தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் 15 பேர் சுசிரிகம கிராமத்தின் சிறுவர்கள் மற்றும் பெற்றோருடன் சிரமதானத்தில் ஈடுபடும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
கேகாலையில் க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதவிருந்த மாணவி குழந்தை பிரசவித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 16 வயதுடைய மாணவியே இவ்வாறு குழந்தை பிரசவித்துள்ளார்.
இந்த மாணவியின் தந்தை சிறிது காலத்திற்கு முன்னர் உடல் நல பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மாணவியின் சகோதரன் குடும்ப வறுமை காரணமாக கொழும்பில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றுவதற்காக சென்றுள்ளார்.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் பாடசாலை செல்லும் மாணவன் ஒருவருடன் குறித்த மாணவிக்கு காதல் தொடர்பு ஏற்பட்டமையால் தாய்மை அடைந்துள்ளார்.
குழந்தை பிரசவித்த மாணவியை சாதாரண தர பரீட்சை எழுதுவதற்காக வைத்தியசாலையில் இருந்து அனுப்பி வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த குழந்தை பிரசவிக்க காரணமாக இருந்த காதலனை பொலிஸார் தேடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், வீட்டில் தீக்காயங்களுக்குள்ளாகி உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக சாட்சிய விசாரணையை மே 5 ஆம் திகதி மீண்டும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் லியான் வருஷவிதான நேற்று(17.02.2026) இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, இறந்த சிறுமியின் சகோதரர், இரண்டாவது சாட்சி, நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளனர்.
இதன்போது, சம்பவம் தொடர்பான மேலதிக சாட்சிய விசாரணை மே 5 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் நான்காவது சந்தேகநபரான ரிஷாத் பதியுதீன் மற்றும் ஐந்தாவது சந்தேகநபரான பதியுதீன் அப்துல் ரிஷாத் ஆகிய இரு சந்தேகநபர்களுக்கும் எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லாததால் அவர்களை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய 16 வயதான ஜூட் குமார் ஹிசாலினி என்ற சிறுமி கடந்த 2021 ஆம் ஆண்டு தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 12 நாட்களின் பின்னர் உயிரிழந்திருந்தார்.
இவரின் மரணம் சந்தேகத்தை ஏற்படுத்தியதை அடுத்து, 2021 ஜூலை மாதம் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த மரணத்திற்கு நீதி கோரி பரவலான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இதேவேளை, சிறுமி தற்கொலை செய்துகொண்டமைக்கான தெளிவான ஆதாரங்கள் இல்லை என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்திருந்திருந்தது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் சுமார் 40 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது.
அத்துடன், ரிஷாட் பதியூதீனின் வீட்டில் இடம்பெற்றதாக கூறப்படும் மற்றுமொரு பாலியல் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் ரிஷாட் பதியூதீனின் மனைவியின் சகோதரனும் அன்றைய தினமே கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் சம்பவம் தொடர்பில் ரிஷாட் பதியுதீனின் மனைவி, மாமனார் மற்றும் சிறுமியை வேலைக்கு அழைத்துச் சென்ற தரகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் காணி மற்றும் வீடுகளின் விலைகள் கட்டுப்பாடின்றி அதிகரித்து வருவதைத் தடுப்பதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை பிரதி அமைச்சர் டி.பி.சரத் தெரிவித்துள்ளார்.
அதன்படி இந்தத் துறையில் நிலவும் விலை மாபியாக்களை ஒடுக்குவதற்கும் புதிய ஒழுங்குமுறை அமைப்பொன்றை உருவாக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை காணி அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து முன்னெடுக்கத் தயாராக உள்ளது.
நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளுக்கு இணங்க, காணி மற்றும் வீட்டுத் திட்டங்களின் விலைகளைக் கண்காணிப்பதற்கான ஒரு ஒழுங்குமுறை அமைப்பு நாட்டின் எதிர்காலத்திற்கு மிக அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னதாக இது குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, முறையான ஒழுங்குமுறை அமைப்பு இல்லாததால் சொத்துக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், இதனை ஒரு மாபியா எனக் கருதலாம் என்றும் சுட்டிக்காட்டினார்.
2022 பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் சொத்துச் சந்தையில் ஏற்பட்ட அதிரடி மாற்றங்களால், சாதாரண மக்கள் ஒரு வீட்டினை வாங்குவது எட்டாக்கனியாக மாறியுள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான சர்வதேச சுட்டெண்ணின் படி, உலகிலேயே வீடு வாங்குவதற்குச் செலவு கூடிய நகரங்களின் பட்டியலில் கொழும்பு முதலிடத்தைப் பிடித்துள்ளது.
கொழும்பில் ஒரு சாதாரண அடுக்குமாடி குடியிருப்பினை வாங்குவதற்கு, ஒரு குடும்பம் தனது முழு வருமானத்தையும் எவ்வித செலவுமின்றி சுமார் 55 ஆண்டுகள் சேமிக்க வேண்டியுள்ளதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த அசாதாரண விலை உயர்வைத் தடுத்து, சாதாரண மக்களும் வீட்டு உரிமையாளர்களாவதை உறுதிப்படுத்தவே இந்த புதிய சட்டச் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு நிபுணர்களுக்கான புதிய டிஜிட்டல் நோமாட் விசா (DNV) வகையை அறிமுகப்படுத்துவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவித்துள்ளது.
தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும், தொலைதூர வேலைகளுக்கான முதன்மையான சர்வதேச இடமாக இலங்கையை ஊக்குவிப்பதற்கும் ஒரு மைல்கல் நடவடிக்கையாக இந்த திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு வெளிநாட்டவரும், அவர்களின் மனைவி மற்றும் சார்ந்திருப்பவர்களுடன் சேர்ந்து, இந்தப் பிரிவின் கீழ் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ற போதும் விண்ணப்பதாரர் இலங்கைக்கு வெளியே பதிவு செய்யப்பட்ட ஒரு வணிகத்தில் பணிபுரிபவராகவோ அல்லது சொந்தமாகவோ இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் முதன்மை விண்ணப்பதாரர் இலங்கைக்கு குறைந்தபட்சம் மாதத்திற்கு 2,000 அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு நாணயத்தை அனுப்ப வேண்டும். இரண்டுக்கும் மேற்பட்ட சார்புடையவர்கள் இருந்தால், ஒவ்வொரு கூடுதல் நபருக்கும் மாதத்திற்கு 500 அமெரிக்க டொலர்கள் கூடுதலாக அனுப்பப்பட வேண்டும்.
கூடுதலாக, விண்ணப்பதாரர்கள் பொலிஸ் அனுமதி அறிக்கைகள், சர்வதேச சுகாதார காப்பீடு மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சகத்தின் பரிந்துரை உட்பட பல ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஒரு நபருக்கு ஆண்டு கட்டணம் 500 அமெரிக்க டொலர்கள் மற்றும் விசா ஒரு வருட காலத்திற்கு இது செல்லுபடியாகும்.
புதுப்பிக்கப்பட்டவுடன், உள்நாட்டு வருவாய்த்துறையில் வரிப் பதிவு கட்டாயமாகும். மேலும் தகவலுக்கு மற்றும் விண்ணப்பப் படிவங்களைப் பெற, விண்ணப்பதாரர்கள் www.immigration.gov.lk என்ற இணையத்தை அனுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உலக சந்தையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் திருத்தப்பட்டு வருவதால், இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இந்த நிலையில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று(18) தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் பதிவாகிய இன்றைய தங்கவிலை நிலவரப்படி, 24 கரட் தங்கத்தின் 1 கிராம் ரூ. 49,000 ஆகவும், 22 கரட் தங்கத்தின் 1 கிராம் ரூ. 44,940 ஆகவும், 21 கரட் தங்கத்தின் 1 கிராம் ரூ. 42,880 ஆகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய,24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 392,000 ரூபாவாகவும்,22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம் 359,520 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கையில் ஏழு மாவட்டங்களுக்கு கனமழை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தால் சற்று முன் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த எச்சரிக்கையானது நாளை (19.02.2026) மதியம் 01 மணி வரை செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிப்புக்களை குறைத்து கொள்ள இது தொடர்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்கள் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு : இலங்கைக்கு தென்கிழக்காக தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளுக்கு மேலாக உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இத்தொகுதியின் நடத்தையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது, எனவே கடலில் பயணம் செய்வோரும் கடற்தொழிலாளர் சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்றைய நாளுக்கான (18.02.2026) வானிலை அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
களுத்துறையிலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு
அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
களுத்துறையிலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
மேலும் இது தொடர்பில் நேற்று (17.02.2026) பிற்பகல் 3 மணியளவில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பில் இத்தொகுதியின் தாக்கம் காரணமாக கடல் பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதுடன்,
பலத்த காற்றும் வீசும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன், நேற்றைய தரவுகளின் அடிப்படையில் அடுத்த 168 மணித்தியாலங்களில் குறித்த தொகுதியானது சூறாவளியாக வலுவடையும் சாத்தியம் இல்லை எனவும் தெரிவிக்ப்பட்டிருந்தது.
மொனராகல, புத்தல பகுதியை சேர்ந்த இளைஞர் தனது தந்தை தனது கால்நடைகளை விற்றதால் மனமுடைந்து உயிரை மாய்த்துள்ளார். புஹுல்கொட்டுவ பகுதியை சேர்ந்த 23 வயதான லஹிரு உதயங்க என்ற இளைஞனே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்துக் கொண்ட நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது. அவரது தந்தை கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார், மேலும் அவரது மகன் கால்நடைகளை பராமரித்து வருகிறார்.
நான்கு எருமை மாடுகளை சில வாரங்களுக்கு முன்பு அவரது தந்தை மகனுக்கு தெரிவிக்காமல் விற்பனை செய்துள்ளார்.
இதனால் வருத்தமடைந்த இளைஞன், கடிதம் எழுதி, தனது வீட்டிற்கு அருகிலுள்ள நெல் வயலுக்கு அருகிலுள்ள மரத்தில் தூக்கில் தொங்கி உயிரை மாய்துள்ளார்.
சம்பவம் குறித்து அறிந்ததும், அவரது மனைவி விஷம் குடித்து மொனராகலை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புத்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.
வவுனியா பண்டாரிக்குளம் உக்குளாங்குளம் பகுதியில் வீட்டில் தனிமையிலிருந்து 16 வயது பாடசாலை மாணவியான கெங்காதரன் ஹரிஸ்ணவி கடந்த 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்0.
எனினும் கடந்த பத்து வருடங்களாக இடம்பெற்று வரும் வழக்கு விசாரணைகளில் எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஒவ்வொரு வழக்குகளும் தவணை இடப்பட்டு கடந்து செல்கின்றதே தவிர குற்றவாளி கண்டு பிடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படவில்லை.
இவ்விடயம் குறித்து உறவினர்கள் தெரிவிக்கையில், பண்டாரிக்குளம் பாடசாலை மாணவியான ஹரிஸ்ணவியின் படுகொலையுடன் தொடர்புபட்டவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த செயலைச் செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. இப்படுகொலைக்கு நியாயமான தீர்வு கிடைக்கவில்லை. நீதித்துறை மீது நம்பிக்கை கொண்டுள்ள குடும்பத்தினர் உட்பட உறவினர்களுக்கு பத்து வருடங்கள் நிறைவடைந்திருந்த நிலையிலும் நீதி நிலை நாட்டப்படவிலை. இதனால் பெரும் ஏமாற்றமடைந்துள்ளோம்.
ஹரிஸ்ணவியின் குடும்பத்தினர் இதனால் பெரும் அதிர்ச்சியும் ஏமாற்றமடைந்துள்ளனர். ஹரிஸ்ணவியின் படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரையிலும் நாங்கள் போராடி வருகின்றோம்.
இனியும் காலங்களை கடத்தி குற்றவாளி சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதற்கு இடமளியாமல் நீதித்துறை இப்படுகொலைக்கு உரிய தீர்வு பெற்றுத்தரும் என்றும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக மேலும் தெரிவித்துள்ளனர் .