அவுஸ்திரேலிய சிட்னி சம்பவம் : ரியல் ஹீரோவுக்கு குவியும் நன்கொடைகள்!!

சிட்னியின் பொண்டாய் கடற்கரையில் நடந்த துப்பாக்கிச்சூட்டின் போது, தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரிடமிருந்து துப்பாக்கியைப் பறித்த நபருக்காக அவுஸ்திரேலியா முழுவதிலும் இருந்து நன்கொடைகள் குவிந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அவருக்காக வழங்கப்பட்ட நன்கொடையின் மொத்தத் தொகை தற்போது 1.1 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை (744,000 அமெரிக்க டொலர்கள்) தாண்டியுள்ளது.

மூன்று தசாப்தங்களில் மிக மோசமான துப்பாக்கிச்சூடு

அதேவேளை துப்பாகிதாரியிடம் இருந்து துப்பாக்கியைப் பறித்த அஹ்மத்துக்கு ஆதரவாக அமைக்கப்பட்ட ‘GoFundMe’ பிரசாரம், ஒரே நாளில் 1.1 மில்லியன் அவுஸ்திரேலிய டொலருக்கும் அதிகமாக நிதி திரட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

துப்பாக்கிக் காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்டு மருத்துவமனையில் அவர் குணமடைந்து வரும் நிலையில், இந்த நன்கொடை அதிகரித்துள்ளது.

சம்பவம் இடம்பெற்றபோது இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான 43 வயதான அஹ்மத் அல் அஹ்மத், பதுங்கி இருந்து, துப்பாக்கிதாரிகளில் ஒருவரைப் பின்புறமாகத் தாக்கிப் பாய்ந்தார்.

தாக்குதல் நடத்தியவரின் துப்பாக்கியைப் பறித்து, அவரைத் தரையில் தள்ளிய அஹ்மத்தின் செயல், பல உயிர் இழப்புகளைத் தடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலிய காவல்துறை திங்களன்று வெளியிட்ட அறிக்கையில், இந்தத் தாக்குதலை 50 வயதுடைய தந்தையும் அவரது 24 வயது மகனும் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த யூத கொண்டாட்டத்தின் போது நிகழ்த்தியதாகத் தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று தசாப்தங்களில் நாட்டில் நடந்த மிக மோசமான துப்பாக்கிச்சூடு இது என்று அதிகாரிகள் விவரித்துள்ளனர்.

மூன்றாம் தவணை பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்!!

2025ஆம் கல்வி ஆண்டின் மூன்றாம் தவணைக்காக தவணைப் பரீட்சைகளை நடத்த வேண்டாம் என வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தரம் 6 முதல் தரம் 10 வரையான மாணவர்களுக்கான மூன்றாம் தவணை பரீட்சைகளை நடத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள், குறிப்பாக அனைத்துப் பாடசாலை அதிபர்களும் இந்த அறிவுறுத்தலை கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களை அடுத்த தரங்களுக்கு உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், 11 ஆம் தர மாணவர்களுக்கான மூன்றாம் தவணை பரீட்சையை நடத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் இன்று ஆரம்பமான பாடசாலைகள் : விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

டிட்வா சூறாவளியின் பின்னர் மூடப்பட்ட அனைத்து பாடசாலைகளும் இன்று(16) திறக்கப்பட்டாலும் மீண்டும் பண்டிகையை முன்னிட்டு மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று(16) திறக்கப்படும் பாடசாலைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக மீண்டும் மூடப்படவுள்ளன. மீண்டும் 29 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதனையடுத்து அனைத்து பாடசாலைகளும் மீண்டும் ஜனவரி மாதம் 12 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இடைநிறுத்தப்பட்டுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை கருத்திற்கொண்டு இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சையை கருத்திற்கொண்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 02 ஆம் திகதி வரை மீண்டும் பாடசாலைகள் மூடப்படவுள்ளன.

அத்துடன், பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மாணவர்கள் வழக்கமான தமது பாடசாலைக்குச் செல்வது அவசியமில்லை எனவும் தமது வீட்டுக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்குச் செல்ல முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாணவர்கள் பாடசாலை சீருடை அணிய வேண்டிய அவசியமில்லை, மேலும் இந்தக் காலகட்டத்தில் ஆசிரியர்களும் முறையான உடையை அணிய வேண்டிய அவசியமில்லை.

பாடசாலைகள் மூடப்படுவதால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், வழக்கமான பாடசாலைகள் எதுவாக இருந்தாலும், வழக்கமான செயல்பாடுகள் மீண்டும் தொடங்கும் வரை, தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசாங்க ஊழியர்களுக்கு விசேட விடுமுறை அறிவிப்பு!!

அரசாங்க ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்குவதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக சேவைக்கு வர முடியாத அரசாங்க ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

குறித்த சுற்றறிக்கை திங்கட்கிழமை (15) அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கையில், டித்வா’ புயல் காரணமாக தமது வதிவிடத்திலிருந்து சேவை நிலையத்திற்கு பொதுப் போக்குவரத்துச் சேவைகள் தடைப்பட்டதால் சேவைக்கு சமுகமளிக்க முடியாத உத்தியோகத்தர்கள்,

வீதித் தடைகள் காரணமாக அல்லது அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டமை காரணமாக சேவைக்கு சமுகமளிக்க முடியாத உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு இந்த விசேட விடுமுறை வழங்கப்படுகின்றது.

அரசாங்க உத்தியோகத்தர்கள் தாம் கடமைக்கு சமுகமளிக்க முடியாத காரணத்தைக் குறிப்பிட்டு, பிரதேச செயலாளரால் சான்றுப்படுத்தப்பட்ட தமது பகுதியின் கிராம உத்தியோகத்தரின் பரிந்துரையுடன் கூடிய விண்ணப்பத்தை நிறுவனத் தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

பிரதேச செயலாளரால் சான்றுப்படுத்தப்பட்ட உத்தியோகத்தரின் விண்ணப்பத்தை நிறுவனத் தலைவர் பரிசீலித்து, அதன் சரியான தன்மை குறித்து தனிப்பட்ட ரீதியில் திருப்தியடைந்தால் மட்டுமே,

சேவைக்கு சமுகமளிக்க முடியாத நாட்களின் எண்ணிக்கைக்கான விசேட விடுமுறையை அங்கீகரிப்பதற்காக திணைக்களத் தலைவருக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விசேட விடுமுறை வழங்குதல் நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களுக்கு மாத்திரம் பொருத்தமான வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையில் இளம் குடும்பஸ்தர் திடீர் உயிரிழப்பு!!

சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த திருகோணமலை இளம் குடும்பஸ்தர் சுகயீனமுற்று உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு வருடத்திற்கு முன் திருமணம் செய்த நிலையில் ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளதாக கூறப்படுவதுடன், குறித்த குடும்பஸ்தர் திருகோணமலையில் வீடியோ கடையை நடாத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவத்தில் திருகோணமலை அலஸ்தோட்டத்தைச் சேர்ந்த 34 வயதான செல்வநாயகம் சத்தியகுமார் குடும்பஸ்தரே உயிரிழந்தவர் ஆவார் . இந்நிலையில் இளம் குடும்பஸ்தரின் மரணம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

பிரான்ஸில் கோர விபத்து : ஸ்தலத்தில் பலியான ஈழத்தமிழ் இளைஞன்!!

பிரான்ஸில் ஏற்பட்ட கோர விபத்தில் ஈழத்தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கடந்த ஏழாம் திகதி Seine-et-Marne மாவட்டத்திற்குட்பட்ட Mitry-Moryஇல் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட 21 வயதான சதீஸ்குமார் அபிசன் என்பவரே உயிரிழந்துள்ளார். காலை வேளையில் இலத்திரனியல் உந்துருளியில் பயணித்து கொண்டிருந்து போது, எதிரே வந்த கார் ஒன்று மோதித்தள்ளியுள்ளது.

விபத்தினை ஏற்படுத்திய 30 வயதான சாரதி தப்பிச் சென்றுள்ளார். எனினும் தான் பணியாற்றும் நிறுவன உரிமையாளரிடம் விபத்து தொடர்பில் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய உரிமையாளர் வழங்கிய தகவலுக்கு அமைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான சாரதிக்கு மேற்கொண்ட இரத்த பரிசோதனையில் 1.5 கிராம் மதுபானம் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய சாரதி பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

இரண்டு பிள்ளைகளையும் மல்வத்து ஓயாவில் தள்ளிவிட்டு கொலைசெய்த தாய்க்கு விளக்கமறியல்!!

அநுராதபுரத்தில் டிசம்பர் 02ஆம் திகதி அதிகாலையில் தனது இரண்டு பிள்ளைகளையும் மல்வத்து ஓயாவில் தள்ளிவிட்டு கொலைசெய்த தாயாரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் பிரதான நீதவான் சியபத் சசிந்து விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார்.

அநுராதபுரத்தில் 40 வயதுடைய தாய் ஒருவர், தனது 04 வயதுடைய மகள் மற்றும் 08 வயதுடைய மகனை மல்வத்து ஓயாவில் தள்ளிவிட்டுள்ளார்.

மல்வத்து ஓயாவில் தள்ளிவிடப்பட்ட இரண்டு பிள்ளைகளும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சில நாட்களின் பின்னர் அவர்களின் சடலங்கள் கரை ஒதுங்கியன.

குடும்பத் தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதனையடுத்து சந்தேக நபரான தாயார் கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளியை காப்பாற்ற முயன்று உயிரிழந்த இளைஞன்!!

பெங்களூரு நகரில் செல்லப்பிராணியை காப்பாற்ற முயன்று இளைஞர் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் ரூ.2.5 மதிப்புள்ள செல்லப்பிராணியான மக்காவ்(Macaw) வகை கிளியை காப்பாற்ற முயன்று பெங்களூருவைச் சேர்ந்த 32 வயது தொழிலதிபர் அருண் குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

செல்லப்பிராணி மக்காவ் வெள்ளிக்கிழமை குமாரின் வீட்டில் இருந்து தப்பிச் சென்று அருகில் இருந்த மின் கம்பத்தின் மீது அமர்ந்துள்ளது. உடனடியாக அதை மீட்க வேண்டும் என்று உரிமையாளர் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார்.

அப்போது எஃகு குழாய் ஒன்றை (Steel Pipe) எடுத்துக் கொண்டு மீட்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக எஃகு குழாய் ஆனது மின்னழுத்த கம்பியில் பட்டுள்ளது.

அப்போது உயர் மின்சாரம் தாக்கி 32 வயது தொழிலதிபர் அருண் குமார் உயிரிழந்தார் என மூத்த காவல்துறை அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

30 லட்ச ரூபாய் வேலையை விட்ட பெண் கூறும் காரணம்!!

சென்னையைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர், பிரபல கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் ஆண்டொன்றிற்கு 30 லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலை செய்துவந்துள்ளார். ஆனால், தான் அந்த வேலையை விட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளார் அவர்.

என்ன காரணம்?

இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள இடுகை ஒன்றில், கல்வி கற்று, ஒரு நல்ல வேலை கிடைத்து, சொந்தமாக ஒரு வீடு கட்டி, திருமணமும் செய்து வாழ்ந்துவந்த நிலையிலும், ஏதோ வாழ்க்கையில் மிஸ் ஆவதை உணர்ந்ததாகத் தெரிவிக்கிறார் அந்தப் பெண்.

பயணம் செய்தல் மலையேறுதல் போன்ற விடயங்களில் ஆர்வம் கொண்ட அவர், வார இறுதிகளில் அத்தகைய விடயங்களில் ஈடுபட்டாலும், மற்ற நாட்களில் தினமும் காலை முதல் மாலை வரை ஒரே வேலையைச் செய்தாக வேண்டியுள்ளதே என்னும் ரீதியில் யோசிக்கத் துவங்கியுள்ளார்.

ஆகவே, தனக்குப் பிடித்த வாழ்க்கையைத் தொடர்வதற்காக, தனது முழு நேர வேலையை விட்டுவிட்டதாகத் தெரிவிக்கும் அவர், ஐந்து ஆண்டுகள் ஆனாலும் வேலை கிடைக்கும், ஆனால், அப்போது இதே இளமையும் சக்தியும் இருக்குமா என கேள்வி எழுப்புகிறார்.

தனக்குப் பிடித்ததைச் செய்ய, தனக்காக வாழ முடிவெடுத்த அவருக்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

காய்ச்சலில் காப்பாற்றியவர் இவரே : விசித்திர திருமணம் செய்துக்கொண்ட பெண்!!

உத்தர பிரதேசத்தில் கிருஷ்ணர் மீது கொண்ட அதீத பக்தியால் உறவினர்கள் முன் அவரது சிலைக்கு மாலை அணிவித்து பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்டார்.

அண்மையில் காய்ச்சல் வந்தபோது கிருஷ்ணருக்கு பூஜை செய்ததாகவும் அதன்பின்னர் காய்ச்சல் குணமாகியதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, தனது வாழ்க்கையில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்தன எனக்கூறிய அவர், இதனால் கிருஷ்ணரையே திருமணம் செய்துகொள்ளப் போகிறேன் என பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

அவரது குடும்பத்தினர் முதலில் சம்மதம் தெரிவிக்க மறுத்து இருந்தாலும் அவர் தனது முடிவில் உறுதியாக இருந்ததால், பின்னர் அவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, பாரம்பரிய சடங்குகளுடன் கிருஷ்ணருக்கும் அவருக்கும் திருமணம் நடைபெற்றது.

வழக்கமான திருமண நிகழ்ச்சி போன்றே கிருஷ்ணர் சிலைக்கும், அந்த பெண்ணுக்கும் அவரது உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. இது தொடர்பான காணொளிகளும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.

இந்நிலையில் நவநாகரீக உலகில் இன்றும் இவ்வாறான விநோத செயற்பாடுகள் இருக்கத்தான் செய்வதாக பலரும் கூறிவருகின்றனர்.

விபத்தில் சிக்கிய வெளிநாட்டுப் பிரஜைகள்!!

யால எட்டுல்ல பிரதேசத்தில் கெப் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இரண்டு வெளிநாட்டு சுற்றலுாப் பயணிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (15) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு சுற்றுலாப் பயணிகளும் யால தேசிய பூங்காவுக்கு சுற்றுலா சென்று விட்டு மீண்டும் விடுதியை நோக்கி பயணித்த போதே விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த சுற்றலா பயணிகளும் கிரிந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

டிக்டொக் நண்பனை நம்பியதால் யுவதிக்கு காத்திருந்த அதிர்ச்சி : சீரழியும் இளம் சமுதாயம்!!

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள வீரமாநகர் பகுதியைச் சேர்ந்த 24 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் ஈச்சிலம்பற்று பொலிஸாரால் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் அனைவரும் ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளின் படி, டிக்டொக் சமூக வலைத்தளத்தின் மூலம் இளைஞர் ஒருவர் குறித்த பெண்ணுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு நேரில் சந்தித்துள்ளார்.

இதன் பின்னர், குறித்த இடத்திற்கு அவரது நண்பர்கள் வருகை தந்ததுடன், யுவதி மீது குழுவாக பாலியல் பலாத்காரம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை மக்களுக்காக பெருந்தொகை நிதியை வழங்கியுள்ள ஐரோப்பா வாழ் இளைஞன்!!

பேரிடரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு ஐரோப்பா வாழ் இலங்கையர் ஒருவர் 4.2 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளார்.

சுவீடனில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் தனது உணவகம் மூலம் கிடைக்கும் வருமானத்தையு, சுவீடன் நாட்டு மக்களின் மூலம் கிடைத்த பணத்தையும் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக, இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக சுவீடனில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த சமையல் கலைஞரான ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் சோகமாக இருக்கும் போது, நாம் இருக்கும் இடத்திலிருந்தே உதவ வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த உன்னத முயற்சிக்கு சுவீடன் மக்களிடமிருந்தும் பெரும் ஆதரவு கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளர்.

தொலைவில் வாழ்ந்தாலும், தங்கள் தாயக மக்கள் மீதான ஆழமான அக்கறை காரணமாக இவ்வாறான செயற்பாட்டை முன்னெடுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த உதவி மனப்பான்மை புலம்பெயர் சமூகத்தின் நாட்டுப்பற்று மற்றும் மனிதநேயத்தை வெளிப்படுத்துவதாக இலங்கை மக்கள் சமூக வலைத்தளங்களில் நன்றி தெரிவித்துள்ளனர்.

2 வாரங்களுக்கு பின் மண்ணுக்குள்ளிருந்து தோண்டப்பட்ட சிறுமி : நெஞ்சை உலுக்கிய சம்பவம்!!

தன்வத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் காணாமல் போன 7 வயது மாணவியின் சடலம் 2 வாரங்களுக்கு பின்னர் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 27ஆம் திகதி மதியம் யட்டியந்தோட்ட பிரதேச செயலகப் பிரிவின் பெரன்னாவயில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி குறித்த சிறுமி மண்ணுக்குள் புதையுண்டு இருந்துள்ளார்.

பெரன்னாவ மகா வித்தியாலயத்தில் இரண்டாம் வகுப்பில் கல்வி பயிலும், நேதுகி சஹான்யாவின் உடல் நேற்று (14.12.2025) மதியம் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் கண்டெடுக்கப்பட்டதாக யட்டியந்தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தென்னவத்தையிலிருந்து பத்தனேகல வரையிலான வீதியை சுத்தம் செய்யும் போது, ​​அருகில் ஒரு நாய் மண்ணை தோண்டுவதை கவனித்த குழுவினர், சோதனை நடத்தியபோது, ​​கிதுல் மரத்தின் கிளைகளுக்கு அடியில் இறந்த சிறுமியின் உடலைக் கண்டெடுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, சடலம் பிரேத பரிசோதனைக்காக கருவனெல்ல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அந்த நிலச்சரிவில் சிறுமியின் தாய், தந்தை, தம்பி மற்றும் பாட்டி ஆகியோர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இரண்டு நாட்களுக்குப் முன்னரே சிறுமியின் தாயின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தந்தையை காப்பாற்றச் சென்று உயிரிழந்த மகன்!!

குருணாகல், மஹாவ – நாகொல்லாகம பிரதேசத்தில் காட்டுப்பன்றிகளைப் பிடிக்க பொருத்தப்பட்ட மின்சார கம்பியில் சிக்கிய தனது தந்தையைக் காப்பாற்றச் சென்ற 17 வயது மகன் உயிரிழந்துள்ளார்.

க.பொ.த. உயர்தரப் படிப்பிற்கு தயாராகி கொண்டிருந்த நாகொல்லாகம பொலிஸ் பிரிவின் கரம்பே, பிடிவில்லாவைச் சேர்ந்த 17 வயதான எதிரிசிங்க ஆராச்சிலாகே கவிஷ்க எதிரிசிங்க என்ற மாணவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

அயல்வீட்டில் வசிக்கும் குடும்பம், காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக பிரதான மின் கம்பியில் இருந்து சட்டவிரோதமாக மின்சாரம் எடுத்து இழுக்கப்பட்ட மின்சார கம்பியில் தற்செயலாக மோதியதில் தந்தை மீது மின்சாரம் தாக்கியுள்ளார்.

அப்போது தனது தந்தையைக் காப்பாற்ற முயன்ற மகன் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மின்சாரம் தாக்கப்பட்டதற்கு காரணமாக இருந்த மின்சார கம்பியை பொருத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் நேற்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

பொல்பித்திகம ஆதார மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டபோது மகன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகவும், உயிரிழந்த மகனின் தந்தை சுமார் 44 வயதுடையவர் எனவும் அவர் ஆபத்தான நிலையில் இருந்ததாகவும்,

மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் மருத்துவமனை ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் இரவு 11.00 மணியளவில் தந்தை வீட்டிலிருந்து அருகிலுள்ள தோட்டத்திற்குச் சென்றிருந்தார். ஆனால் அவர் திரும்பி வராததால், அவரைப் பார்க்கச் சென்ற மகன் சம்பவத்தில் உயிரிழந்தார்.

மேலும் அவரது தந்தை இரவில் அந்த இடத்திற்கு ஏன் சென்றார் என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. சந்தேகநபர் மஹாவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். சம்பவம் குறித்து நாகொல்லாகம போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் வார தொடக்கத்தில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலை மாற்றம் கண்டுவருகின்றது. அதற்கமைய கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது, இன்றையதினம்(2025.12.15) தங்கத்தின் விலை சற்று உயர்வடைந்துள்ளது.

தங்க விலை நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது1,340,283 ரூபாவாக காணப்படுகின்றது. 24 கரட் தங்கம் ஒரு கிராமின்(24 karat gold 1 grams) விலை 47,280 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்று 378,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.  அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராமின்(22 karat gold 1 grams) விலையானது 43,340 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுணொன்றின்( 22 karat gold 8 grams) விலையானது 346,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams) 41,370 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று(21 karat gold 8 grams) 331,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்கள் அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின் இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண்(22 karat gold 8 grams) ஒன்றின் விலையானது 314,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை மேற்குறிப்பிட்ட விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.