யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த யுவதி ஒருவரை காணவில்லை என பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த யுவதி கடந்த 27 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா செல்வதாக சென்ற நிலையிலேயே காணாமல் போயுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தகவல் தெரிந்தோர் 0773828845 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா கற்பகபுரம் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய சுவந்தன் திவ்யா என்ற யுவதியே இவ்வாறு காணாமல் போனவர் ஆவார். இது தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இலங்கையின் வடகிழக்கில் நிலவும் குறைந்த காற்றழுத்தப் பகுதியால் பல மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆறுகள் மற்றும் பிற நீர்நிலைகளில் மழைநீர் வெளியேறும் அபாயம் உள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் நீர் விளையாட்டு, பொழுதுபோக்கு, படகு சவாரி போன்றவற்றில் ஈடுபட வேண்டாம் என்றும் அவதானமாக இருக்குமாறும் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், கனமழையின் காரணமாக 37 நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிகின்றன என்று நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியாளர் எம். எம். பி. எஸ். டி. ஹெரத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்காக, இலங்கை கடற்படையும் விமானப்படையும் 24 மணி நேரமும் எச்சரிக்கை நிலையில் இருப்பதாக இலங்கை கடற்படையும் விமானப்படையும் அறிவித்துள்ளன.
தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக அவசர நிலை ஏற்பட்டால், உடனடியாக உதவ ஹெலிகொப்டர்கள் தயார் நிலையில் உள்ளதாக இலங்கை விமானப்படையின் புதிய ஊடகப் பேச்சாளராக குரூப் கெப்டன் நலின் வேவகும்புர கூறியுள்ளார்.
கனமழையால் இடம்பெயர்ந்தவர்கள் குறித்தோ அல்லது பேரிடர் நிலைமை குறித்தோ பேரிடர் மேலாண்மை மையத்திற்குத் தகவல் வழங்கினால் உடனடியாக பதிலளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதற்காக 412 மற்றும் 212 ஹெலிகொப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நலின் வேவகும்புர தெரிவித்தார்.
இதேவேளை, மோசமான வானிலை காரணமாக, 4 மாவட்டங்களைச் சேர்ந்த 17 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள மக்கள் நேற்று (13) பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பாதுகாப்பற்ற இடங்களாக அடையாளம் காணப்பட்ட வீடுகளில் தங்கியிருந்த 17 பேர் பாதுகாப்பான மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
ஆறுகள் மற்றும் பிற நீர்நிலைகளில் மழைநீர் வெளியேறும் அபாயம் உள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் நீர் விளையாட்டு, பொழுதுபோக்கு, படகு சவாரி போன்றவற்றில் ஈடுபட வேண்டாம் என்றும் அவதானமாக இருக்குமாறும் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, புத்தளம் மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் அந்த பகுதிகளில் உள்ள மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இதற்கிடையில், இந்த மோசமான வானிலைக்குக் காரணமான குறைந்த காற்றழுத்தப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் இலங்கையை விட்டு விலகிச்சென்று படிப்படியாக வலுவிழக்கும் என்று வானிலை நிலையம் வெளியிட்ட வானிலை முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, காலி மாவட்டத்தின் பதுளை மாவட்டம் மற்றும் நெலுவ பிரதேச செயலகங்களுக்கும், களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை, பதுரலியா, மத்துகம, ஹொரண மற்றும் வலல்லவிட்ட பிரதேச செயலகங்களுக்கும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
மேலும், இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி மற்றும் பெல்மதுளை பிரதேச செயலகங்களுக்கு இரண்டாம் கட்ட நிலச்சரிவு எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
எல்ல பிரதேசத்தில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஒன்பது வளைவு பாலத்தை பார்வையிட வரும் காதல் ஜோடிகளை அச்சுறுத்தி, குற்ற புலனாய்வு அதிகாரிகள் என அடையாளப்படுத்தி கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 6300 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன், கொள்ளையடிக்கப்பட்ட பல லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் கொள்ளையிட்ட சுமார் 482,000 ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்களை பதுளை நகரிலுள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைத்துள்ளனர்.
மேலும், கொள்ளையடிக்கப்பட்ட இரண்டு கைத்தொலைபேசிகளை ரிதிமாலியத்த மற்றும் பெத்தியாகொட ஆகிய பகுதிகளில் உள்ள இருவருக்கு விற்பனை செய்துள்ளனர்.
திருட்டுப் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த இரு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹாலி எல, அந்தலாவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இந்த கொள்ளைச் சம்பவங்களின் முக்கிய நபராகும்.
அவருக்கு எதிராக கதிர்காமம் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் 60 லட்சம் ரூபாய் கொள்ளையிட்டமை, ஹாலி எல மற்றும் பதுளை பகுதிகளில் வீடுகளை உடைத்து திருடியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
2025ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் ஒன்பது வளைவு பாலத்தைப் பார்க்க வந்த காதல் ஜோடியை அச்சுறுத்தி, 18 வயதுடைய யுவதியை பலவந்தமாக காடுகளுக்குள் இழுத்துச் சென்று பாலியல் சீண்டல் செய்த சம்பவத்துடனும் அவருக்கு தொடர்பிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எல்ல நகரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார், சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய ஒருவரை சோதனையிட்டபோது, அவரிடமிருந்து 4125 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் அடகு பற்றுச்சீட்டுக்கள் மீட்கப்பட்டன.
அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையைத் தொடர்ந்து, மற்றைய சந்தேகநபரான 26 வயதுடைய இளைஞர் தெமோதர பகுதியில் வைத்து 2175 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டார்.
சந்தேநபர்கள் போதைப்பொருள் மற்றும் சூதாட்டத்திற்கு அடிமையானவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அசர்பைஜானில் வைத்து கைது செய்யப்பட்டு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இலங்கையரிடம் பெருந்தொகை தங்கம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு இழுத்து வரப்பட்ட மனோஜ் சுரங்க லியனகே எனப்படும் பட்டுவத்தே சாமர எனும் சந்தேகநபர், கைது செய்யப்படும் போது ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தங்க ஆபரணங்களை அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
BRAVE என எழுதப்பட்ட பென்டனுடன் கூடிய 30 கிராமுக்கும் அதிக எடையுள்ள 50 சென்டிமீட்டர் நீளமான தங்க சங்கிலி, நீல நிற மாணிக்கக்கல் பதிக்கப்பட்ட 11 கிராமுக்கும் அதிக எடையுள்ள தங்க மோதிரம்,
93 கிராம் எடையுள்ள 23 சென்டிமீட்டர் சுற்றளவு கொண்ட தங்கக் காப்பு, 06 கிராம் எடையுள்ள இரண்டு தோடுகள் மற்றும் ரோலக்ஸ் ரக கைக்கடிகாரம் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சம்பவத்தின் 32வது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள அவரை, கடந்த 11ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களக் குழுவினர் அசர்பைஜானில் இருந்து இலங்கைக்கு அழைத்து வந்து கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.
வெளிநாட்டில் இருந்துகொண்டு கணேமுல்ல சஞ்சீவ கொலைக்காக துப்பாக்கியை வழங்கி, கொலைக்கு உதவி மற்றும் அனுசரணை வழங்கியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தேகநபரை, மேலும் 14 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு பெற்று விசாரணை செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி நகரத்தில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றும் ஒன்பது ஊழியர்கள் மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் கண்டி சிறப்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி நகரத்தில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றின் ஊழியர்கள் 09 பேர், போலி ஆவணங்களைத் தயாரித்து அந்த வங்கியின் வாடிக்கையாளர்களது பெயரில்
மோசடியான முறையில் கடன் பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பில் கண்டிப் பொலிஸில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தனியார் வங்கியின் ஆறு ஆண் அதிகாரிகள் மற்றும் மூன்று பெண் அதிகாரிகள் உட்பட ஒன்பது ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனியார் வங்கியின் கிளையிலிருந்து 2012 முதல் 2019 வரை பெறப்பட்ட கடன்கள் தொடர்பான கடன் விண்ணப்பப் படிவங்களையும் கடன் ஒப்பந்தங்களையும் போலியாக தயாரித்துள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
32 முதல் 58 வயதுக்குட்பட்ட சந்தேகநபர்கள், கண்டி, பேராதெனிய, கட்டுகஸ்தோட்டா, புஸ்ஸெல்லாவ, ஹீரசகல, குருநாகல், பிலிமத்தலாவ, ஹல்லோலுவ மற்றும் குருதெனிய ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட வங்கி ஊழியர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், இந்த வழக்கு செப்டம்பர் 23 அன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
மத்திய வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை எதிர்பார்த்த வேகத்தில் நகராமல் கடந்த பல மணி நேரங்களாக குறிப்பிட்ட இடத்திலேயே நிலை கொண்டிருப்பதனால்
இலங்கையை விட்டு விலகும் என்று எதிர்பார்க்கப்பட்ட மழையுடனான வானிலை அடுத்த 48 மணி நேரத்திற்கு பின்னரே விலகும் வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இதனால் இன்றும் இலங்கையின் வடக்கு, மேற்கு, வட மேற்கு, மத்திய, வட மத்திய கிழக்கு மற்றும் மாகாணங்களின் பல பகுதிகளுக்கு மிதமானது முதல் சற்று கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இன்று கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல் மாவட்டங்களின் பல பகுதிகளுக்கும் கனமானது முதல் மிகக்கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
இதனால் இந்த மாவட்டங்களின் சில பகுதிகள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்படக்கூடும்.
நாளைய தினமும்(15.05.2026) வடக்கு, கிழக்கு வடமத்திய மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக கனமானது முதல் மிகக் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
குறிப்பாக வடக்கு மாகாணம் பரவலாக கனமான மழையைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களின் பல பகுதிகளுக்கும் நாளை கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
எதிர்வரும் 16.05.2026 அன்றும் மேற்கு,வட மேற்கு ,வடக்கு, கிழக்கு வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளுக்கு மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
குறிப்பாக மேற்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் சற்று கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
வவுனியா செட்டிகுளம் பிரதேச சபையின் 11வது சாதாரண சபை அமர்வு நேற்று நடைபெற்ற போது முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்து உருக்கமான நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
சபை அமர்வின் ஆரம்பத்தில் தவிசாளர் முகமட் இம்தீயாஸ் மற்றும் உப தவிசாளர் தேவசகாயம் சிவானந்தராசா ஆகியோர் அஞ்சலி உரைகளை நிகழ்த்தினர். மே மாதம் என்பது தமிழர் நெஞ்சங்களில் என்றும் ஆறாத ரணமாக உறைந்து போயுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
சபையின் சார்பில் அதிகாரப்பூர்வ அஞ்சலி உரையை உறுப்பினர் சங்கரன் சசிக்குமார் பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து போரில் உயிரிழந்த அனைத்து உறவுகளுக்காகவும் சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து உரையாற்றிய உப தவிசாளர் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதுடன் மட்டும் நின்றுவிடாமல் அவர்களுக்கான நீதியைப் பெற்றுத்தர சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் என வலியுறுத்தினார்.
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது போர்க்குற்றம் என்றும் அதற்கு முறையான சர்வதேச விசாரணை அவசியமென்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும் மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால் நிகழாதிருக்க நிலையான அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும் எனவும் சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இறுதியாக உயிரிழந்த உறவுகளுக்கு வீரவணக்கம் செலுத்தியதுடன் ‘நாம் மறக்கவில்லை மன்னிக்கவும் மாட்டோம்’ என்ற முழக்கத்துடன் நினைவேந்தல் நிகழ்வு நிறைவுபெற்றது.
இந்நிகழ்வில் தவிசாளர் உப தவிசாளர் மற்றும் சபையின் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
வவுனியா வடக்கு, புதூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் முன்னாயத்த வேலைத்திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்றைய தினம் நடைபெற்றது.
வவுனியா வடக்கு பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், பிரதேச சபை தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.
ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கான குடிநீர் வசதி, தற்காலிக வீதி புனரமைப்பு, மின்விளக்கு வசதிகள், வாகன தரிப்பிட வசதி மற்றும் சுகாதார நடைமுறைகளை கையாளுதல் போன்ற விடயங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
குறிப்பாக, உற்சவ காலத்தில் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுகளும் இன்றி சேவைகளை வழங்குவது தொடர்பாக உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் பிரதேச சபையின் ஏனைய உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டு, தத்தமது பிரிவுகளின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டிய பணிகள் குறித்து கலந்துரையாடினர்.
ஆலய உற்சவத்தை மிகச்சிறப்பான முறையில் முன்னெடுப்பதற்கு சபை முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என இதன்போது உறுதி அளிக்கப்பட்டது.
கொழும்பு – கதிர்காம பிரதான சாலையில், திக்வெல்ல, பொல்கஹமுல்ல பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று காலை ( 13) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நடந்தபோது, பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்து அம்பலந்தொட்டையிலிருந்தும், இலங்கை போக்குவரத்து சபை பேருந்து கதிர்காமம் நோக்கியும் சென்று கொண்டிருந்தன. குறித்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இலங்கையில் டெங்கு மற்றும் மலேரியா நோயாளிகளின் போக்கு அதிகரித்து வருவதாக வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.
டெங்கு மற்றும் மலேரியா ஆகிய இரண்டு தொற்றுநோய்களும் நாட்டிலிருந்து ஒழிக்கப்பட்டிருந்தாலும் கூட நாட்டில் அவ்வப்போது டெங்கு மற்றும் மலேரியா நோயாளிகள் அடையாளம் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
2025ஆம் ஆண்டின் 12 மாதங்களில் டெங்கு நோயால் 29 பேர் உயிரிழந்திருந்த நிலையில் இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 14 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.
அதிக காய்ச்சல், உடல் வலி, கண்களுக்குக் கீழ் வலி, வாந்தி, குமட்டல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டு, 48 மணி நேரத்திற்குள் காய்ச்சல் குறையவில்லை என்றால்,
உடனடியாக மருத்துவரை அணுகி மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்றும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
டெங்கு மற்றும் மலேரியா ஆகிய இரண்டு தொற்றுநோய்களும் நாட்டிலிருந்து ஒழிக்கப்பட்டிருந்தாலும், நாட்டில் அவ்வப்போது டெங்கு மற்றும் மலேரியா நோயாளிகள் அடையாளம் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
2016 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு (WHO) நாட்டை டெங்கு இல்லாத நாடாக அறிவித்திருந்தாலும், 2025-ஆம் ஆண்டில் நாட்டில் 68 டெங்கு நோயாளிகள் கண்டறியப்பட்டதாகவும் டெங்கு நோய் பிரிவின் பணிப்பாளர் பிரசங்க செரசிங்க கூறியுள்ளார்.
இவர்களில் 34 பேர் நாட்டிற்கு வந்த இந்திய நாட்டினர் என்றும், மீதமுள்ள 34 பேர் இலங்கையர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மலேரியா பரவல்
மலேரியாவால் பாதிக்கப்பட்ட ஒருவரை கடிக்கும் நுளம்பு மற்றொருவருக்கும் நோயைப் பரப்பக்கூடும் என்பதால், ஏதேனும் சந்தேகம் எழுந்தால்,
ஒவ்வொரு மாவட்டத்தையும் உள்ளடக்கும் வகையில் நிறுவப்பட்ட மையங்களில் உரிய பரிசோதனைகளை மேற்கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2016 ஆம் ஆண்டில் நாட்டில் இருந்து மலேரியா முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட போதிலும், வெளிநாட்டினர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்குத் திரும்புபவர்கள் மூலம் மலேரியா நோயாளிகள் இன்னும் கண்டறியப்படுகின்றனர் என்றும் வைத்தியர் அருண் குமார் கூறியுள்ளார்.
அதன்படி, 2025 ஆம் ஆண்டில், வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வந்த 42 பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டனர். மேலும் மூவர் மலேரியாவால் உயிரிழந்தனர் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு, நாட்டில் 11 மலேரியா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர், அவர்கள் அனைவரும் வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர்கள் என்றும் வைத்தியர் அருண் குமார் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் இன்றைய தினம் (13.05.2026) தங்கத்தின் விலையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4701.32 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
இது முன்னைய விலையுடன் ஒப்பிடுகையில் 22.17 டொலர்கள் (+0.47%) அதிகரிப்பாகும் என தெரியவருகிறது.
இந்தநிலையில் இலங்கையில் தங்க விலை எவ்வித மாற்றமும் இன்றி, நேற்றைய விலையிலேயே இன்றும் (13) விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 395,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, 22 கரட் தங்கம் ஒரு பவுண் 363,400 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,375 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,425 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
யாழ்ப்பாணம் 10 கிராம் ஹெரோயினை விழுங்கிய 21 வயதுடைய இளைஞர் ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – கல்லவேம்படி பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞனை வட்டுக்கோட்டை பொலிஸார் நேற்று(12.05.2026) 2 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று பொலிஸ் தடுப்பு காவலில் வைத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று(13.05.2026) காலை அவருக்கு உடல் சுகயீனம் ஏற்பட்டுள்ளார். அதன்பின்னரே, பொலிஸார் தன்னை கைது செய்ய வரும்போது 10 கிராம் எடையுடைய ஹெரோயினை பொலித்தீன் பையுடன் விழுங்கிய விடயத்தை கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பொலிஸார் அவரை சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, இளைஞனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த இளைஞன் இதற்கு முன்னரும் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றதாக பொலிஸ் தெரிவித்துள்ளனர்.
குருணாகலில் மாணவன் ஒருவர் உயிரை மாய்த்துள்ள நிலையில், அதன் பின்னணி குறித்து பொலிஸார் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.
கையடக்க தொலைபேசியில் விளையாட்டு ரீதியான சூதாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், யாரின் அறிவுறுத்தலுக்கு அமைய உயிரை மாய்த்துக் கொண்டான என்பது குறித்து குற்றப் புலனாய்வு பிரிவி விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
குருணாகல் நகரின் பிரபல சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த 16 வயதுடைய சந்தரூ தெவ்மிண பண்டார என்ற மாணவன் 4 மாடி கட்டிடத்தின் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
மிகவும் திறமையான மாணவன், கடந்த 8ஆம் திகதி அதிகாலை தான் வசித்து வந்த குருநாகல் உடவல்பொல வீதியிலுள்ள வீட்டிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சட்டத்தரணியான தந்தைக்கும் ஆசிரியையான தாய்க்கும் பிறந்த குடும்பத்தின் மூத்த மகனான சந்தரூ, கல்வியில் காட்டிய சிறப்பான திறமை காரணமாக பாடசாலையில் இரண்டு வகுப்புகள் தரமுயர்த்தப்பட்டவராகும்.
பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காகவே குறித்த அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை அடிப்படையில் மாணவன் அவரது 2 தங்கைகள் மற்றும் பெற்றோர் வசித்து வந்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை அதிகாலை 5.00 மணியளவில் கட்டிடத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் மாணவனின் உடல் கீழே விழுந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
மாணவன் உயிரிழந்த இடத்தில் இருந்த அவரது தந்தையின் கையடக்கத் தொலைபேசியில் இணையத்தள சூதாட்ட விளையாட்டு இயங்கிக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தாய்க்குத் தெரியாமல் அறையை விட்டு வெளியே சென்ற மாணவன், உயிரிழப்பதற்கு முன்னர் நீண்ட நேரம் தந்தையின் தொலைபேசியில் இந்த இணைய விளையாட்டில் ஈடுபட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 3.35 மணியளவில் கேட்டதாகக் கூறப்படும் ஒரு பயங்கரமான சத்தத்துடன்,
இரும்பு வேலியிலும் மோதி கீழே விழுந்த இந்த மாணவனின் மரணம் ஒரு விபத்தா அல்லது கையடக்கத் தொலைபேசி ஊடாக வழங்கப்பட்ட கட்டளைக்குக் கீழ்ப்படிந்தமையா என்ற பலத்த சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
தலை மற்றும் மார்பில் ஏற்பட்ட பலத்த காயங்கள் மற்றும் அதிக இரத்தப்போக்கு மரணத்திற்குக் காரணமாக இருந்தாலும், குற்றத்தல புலனாய்வுப் பிரிவினரின் தீவிர கவனத்திற்குள்ளான குறித்த தொலைபேசி விளையாட்டு,
சில நேரங்களில் விளையாடுபவரின் மனதை விகாரப்படுத்தி உயிரை மாய்க்க கட்டளையிடும் அல்லது அதற்குத் தூண்டும் தன்மையைக் கொண்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
தன்னால் கட்டுப்படுத்த முடியாத ஒரு மனநிலையின் காரணமாக அவர் தனது உயிரைத் மாய்த்துக் கொண்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களுக்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பலத்த மழை குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் நிலவும் குறைந்த அழுத்தப் பிராந்தியத்தின் தாக்கம் காரணமாக, தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மி.மீ-க்கும் அதிகமான அதிதீவிர மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் 100 மி.மீ அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நாடு முழுவதும் சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்த நிலைமைகளை கருத்திற்கொண்டு, தயார்நிலை மற்றும் மீட்புக் குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடகப் பேச்சாளர் பிரதீப் கொடிப்புலி தெரிவித்துள்ளார்.
எந்தவொரு அவசர நிலையிலும் அனர்த்த காமைத்துவ மத்திய நிலையத்தின் 117 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
குறித்த விசேட இலக்கம் 24 மணிநேரமும் இயங்கும் என அவர் குறிப்பிட்டார். அனைத்து மாவட்ட அனர்த்த மேலாண்மை நிலையங்களும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
“200 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும். எனவே, கனமழையுடன் நிலச்சரிவுக்கான அறிகுறிகள் குறித்து அவதானமாக இருக்கவும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் பாதுகாப்பற்ற இடங்களில் நீராடுவது மிகவும் ஆபத்தானது. கடந்த சில நாட்களில் பாதுகாப்பற்ற இடங்களில் நீராடியதால் பல மரணங்கள் பதிவாகியுள்ளன.
இடி, மின்னல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும்.. திறந்தவெளிகளில் விளையாடுவதோ அல்லது வேலை செய்வதோ தவிர்த்தல் வேண்டும். அத்துடன் நிலையான தொலைபேசிகளை பயன்படுத்துவது அபாயகரமானது.
வீடுகளில் இருக்கும் போது மின்சார உபகரணங்களின் இணைப்புகளைத் துண்டித்து வைப்பது பாதுகாப்பானது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
புதிய இணைப்பு : இலங்கையின் வடகிழக்கில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம் அடுத்த 48 மணி நேரத்தில் இலங்கையை விட்டு விலகிச்செல்லும்போது படிப்படியாக வலுவிழக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (13) பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, தற்போது நிலவும் சீரற்ற மழையுடனான வானிலை அடுத்த 2 நாட்களுக்குத் தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும், அனுராதபுர மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கு மேல் கனமழை பெய்யக்கூடும். பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
முதலாம் இணைப்பு : நாட்டைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக, தற்போது நிலவும் மழையுடனான காலநிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று காலை 6:30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த விசேட அறிவித்தல் மாலை 3:30 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 200 மில்லி மீற்றருக்கும் அதிகமான மிகத் கடுமையான மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லி மீற்றர் அளவிலான பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது.
மேல், சபரகமுவ, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களும், திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் பாதிப்புக்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல் வெளியிட்டுள்ளது.
இடி மின்னலுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.