வவுனியா சிங்கள பிரதேச செயலகத்தில் பிறப்பு – இறப்பு சான்றிதழ்கள் பெறுவதில் சிரமம் ஏற்பட்டமையால் அவற்றை பெற்றுக்கொள்ள செல்லும் பொதுமக்கள் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
வவுனியா சிங்கள பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள மேலதிக மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு பிறப்பு – இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்காக செல்லும் பொதுமக்களை அங்குள்ள உத்தியோகத்தர்கள்,
சான்றிதழ்களில் கையொப்பம் இடுவதற்கு அதிகாரிகள் இல்லை என வேறு பிரதேச செயலங்களுக்கு செல்லுமாறு தெரிவித்துள்ளமையுடன் தமக்கு நிரந்தர பதிவாளர் இன்மையினால் அடிக்கடி இந்த நிலமை ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனால் பல தடவைகள் ஏமாற்றத்துடன் மக்கள் திரும்ப வேண்டிய நிலமையும் உருவாகியுள்ளமையுடன் இவை பொதுமக்களை அலைக்கழிக்கும் செயலாகவும் அமைந்துள்ளது.
எனவே இவ்விடயத்தில் உயர் அதிகாரிகள் தலையிட்டு மக்களுக்கு திறன்பட சேவையினை வழங்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கு முன்னரும் நிரந்த பதிவாளர் இன்மையினால் மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர் என செய்திகள் ஊடகங்களில் வெளியாகி ஒரு வருடத்திற்கு மேலாகியும் இன்று வரை மக்களை அலைக்கழிக்கும் செயற்பாடே வவுனியா சிங்கள பிரதேச செயலகத்தில் இடம்பெற்று வருகின்றது.
வவுனியாவில் கடந்த சிலநாட்களாக லிற்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனால் பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்ப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த சனிக்கிழமையில் இருந்து இந்த தட்டுப்பாட்டு நிலமை காணப்படுவதுடன் நகரத்தில் உள்ள அநேகமான விற்பனை நிலையங்களில் எரிவாயு சிலிண்டர்கள் முற்றாக தீர்ந்துள்ளது.
நிறுவனத்தில் இருந்து வருகின்ற லொறிகள் வரவில்லை என விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளதுடன் ஒரு சில நாட்களில் அது சீராகும் என தெரிவிக்கின்றனர்.
மொனரகல புத்தல பகுதியில் வீட்டின் அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை, தாய் மற்றும் மூன்று வயது மகள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் மொனராகல வீதியின் நாமண்டிய பகுதியிலுள்ள வீட்டின் அறையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த அனர்த்தம் காரணமாக 29 வயதான தந்தை திலுக்ஷ மதுசங்க, 26 வயதான தாய் சுராஜி சகுந்தலா மற்றும் 3 வயது மகள் ஒனல்யா ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.
மூவரும் மொனராகல மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் தாயும் மகளும் கராபிட்டிய போதனா மருத்துவமனைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பில் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பு – ஜிந்துபிட்டியவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வழங்கியுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதலானது, கடந்த சனிக்கிழமை இரவு (14) இடம்பெற்றிருந்த நிலையில் மன்னாரை சேர்ந்த இளைஞன் ஒருவர் இந்த தாக்குதலில் உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் கடமை தவறியதற்காக நடமாடும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐவர் மீது துப்பாக்கிச் சூடு
சிகை அலங்கார நிலையமொன்றை இலக்காகக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமானது, ரணசிங்க ஆராச்சிகே சங்க ஷிரந்த எனப்படும் புளூமெண்டல் சங்க என்பவரின் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் நால்வர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
உயிரிழந்த இளைஞர் மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பண்டாரவெளி – வெள்ளிமலை பகுதியை சேர்ந்த என தெரிய வந்துள்ளது.
தீவிர விசாரணை
குறித்த இளைஞர் கொழும்பில் தொழில் செய்து வருவதாகவும், சம்பவ தினம் சிகை அலங்கரிப்புக்கு சென்ற நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் சிகை அலங்கார நிலையம் ஒன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த பலர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் ஐவர் காயமடைந்து சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.
சம்பவத்தில் 20 வயதுடைய மன்னார், முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பண்டாரவெளி வெள்ளிமலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தலங்கம, அக்குரேகொடவில் வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவி மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்கள் பொலிஸாரிடம் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
நவகமுவ பகுதியினை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்கள் நேற்று (16) பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் பல முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
வாக்குமூலத்தில் வெளியான தகவல்
வழக்கறிஞரின் வாகனம் இருந்த இடம் குறித்த தகவல்களை இந்த இரண்டு சகோதரர்களும் வழங்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேற்கு தெற்கு குற்றப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு, நேற்று மதியம் கொட்டாவ பகுதியில் மோட்டார் வாகனத்தில் பயணித்த இரண்டு இளைஞர்களை கைது செய்தனர்.
குறித்த இருவரும் நவகமுவ பகுதியைச் சேர்ந்த 20 மற்றும் 27 வயதுடைய நதுன் கவீஷ மற்றும் சனோஜ் கோகில என தெரிவிக்கப்படுகிறது.
வழக்கறிஞரின் கொலை தொடர்பான பல முக்கிய தகவல்கள் இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளன.
வெளிநாட்டில் உள்ள குற்றவாளிகளான தரிந்து மதுசங்கா அல்லது “டுட்டு” மற்றும் “மோதர நிபுனா” ஆகியோரின் ஐஸ் கடத்தல் நடவடிக்கையை இரண்டு சகோதரர்களும் நடத்தி வருகின்றமை தெரியவந்துள்ளது.
வெளிநாட்டில் இருக்கும் இரண்டு குற்றவாளிகள் இந்த சகோதரர்களைத் தொடர்பு கொண்டு, “7 நாட்களுக்கு ஒரு வாகனத்தை வாடகைக்கு விடுங்கள், சுத்த ஐயாவுக்கு வேலை இருக்கிறது, அதை செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளனர்.
உளவு நடவடிக்கை
அதன்படி, இரண்டு சகோதரர்களும் கொட்டாவையில் உள்ள ஒரு நிறுவனத்திற்குச் சென்று ஒரு கருப்பு நிற காரை வாடகைக்கு எடுத்துள்ளனர். இதன் பின்னர், மற்றொரு நபர் சகோதரர்களைத் தொடர்பு கொண்டு,
கொட்டிகாவத்தையில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று, அங்கு முச்சக்கர வண்டியில் டெலிவரி செய்யப்படும் துப்பாக்கிகள் அடங்கிய பொதியை பெறுமாறு கூறியுள்ளார்.
குறித்த நபர், இரண்டு சகோதரர்களையும் அதை எடுத்துக்கொண்டு வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட சூப்பர் மார்க்கெட்டுக்கு அருகில் செல்லுமாறு கூறியுள்ளார்.
இதன்பின்னர், துப்பாக்கிச் சூடு நடந்த நாளில், சம்பவத்திற்கு சில மணி நேரத்திற்கு முன்பு, அவர்கள் அக்குரேகொட பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்று, துப்பாக்கி அடங்கிய பொதியினை அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு காரில் ஒப்படைத்தனர்.
இந்த துப்பாக்கிகளைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் கொல்லப்படுவார் என்பது இரண்டு சகோதரர்களுக்கும் ஒரு வாரமாகத் தெரியும் என்று பொலிஸ் தெரிவித்துள்ளது.
மேலும், வழக்கறிஞர் தனது மனைவியை அவரது அலுவலகத்திலிருந்து அழைத்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் மாலை 4.30 மணி முதல் 5 மணிககுள் வீடு திரும்புவார் என்பதினையும் இரண்டு சகோதரர்களும் உளவு பார்த்திருந்தனர்,
மேலும் துப்பாக்கிச்சூடு நடந்த நாளில் வாகனம் சூப்பர் மார்க்கெட் கார் நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்ததாக துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு சகோதரர்களே தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து இரண்டு சகோதரர்களும் அங்கிருந்து வெளியேறி ஹோகந்தரா நோக்கிச் சென்றுள்ளனர்.
சிசிடிவி காட்சிகள் மற்றும் கொலை தொடர்பான தகவல்
சிசிடிவி காட்சிகள் மற்றும் கொலை தொடர்பான பல உண்மைகளின் அடிப்படையில் விசாரணைகளை நடத்திய தென்மேற்கு குற்றப்பிரிவு, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு இந்த காரில் இருந்து துப்பாக்கிகள் வழங்கப்பட்டமை தெரியவந்துள்ளது.
அதன்படி, இரண்டு சகோதரர்களும் நேற்று மதியம் 7 நாட்களுக்கு வாடகைக்கு எடுத்த காரை திருப்பித் தருவதற்காக கொட்டாவ பகுதியில் உள்ள நிறுவனத்திற்கு சென்றபோது, அவர்களைப் பின்தொடர்ந்த பொலிஸ்அதிகாரிகள் இரண்டு சகோதரர்களையும் கைது செய்துள்ளனர்.
இரண்டு சந்தேகநபர்களின் விசாரணையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தொடர்பான தகவல்களும் வெளியாகியுள்ளன.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு பன்னிப்பிட்டியவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வந்து இரண்டு சகோதரர்களுக்கும், துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு ஐஸ் மற்றும் தேவையான வசதிகளை வழங்கியுள்ளார்.
ஐஸ் போதைப்பொருள் கடத்தல்
அதன்படி, கொலைக்கு உதவ சகோதரர்கள் எந்தப் பணத்தையும் பெறவில்லை எனவும், அவர்களுக்கு ஐஸ் போதைப்பொருள் வழங்கப்பட்டமையும் தெரியவந்துள்ளது.
ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்தும் சந்தேகத்திற்குரிய இரண்டு சகோதரர்களும் ஐஸ் கடத்தலில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கு தெற்கு குற்றப்பிரிவு, ஐஜிபி பிரியந்த வீரசூரியவின் நேரடி மேற்பார்வையின் கீழ்,
மேற்கு மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த டிஐஜி சஜீவ மெதவத்தேவின் வழிகாட்டுதலின் கீழ், மேற்கு தெற்கு மாவட்டத்திற்குப் பொறுப்பான டிஐஜி சமந்த விஜேசேகரவின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தி வருகின்றது.
சர்வதேச சந்தையில், நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கம் நேற்று ஐயாயிரம் டொலராக பதிவாகியிருந்த நிலையில், இன்று 4,924 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அதேநேரம், வெள்ளியின் விலையும் இன்றைய தினம் வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது. இதற்கமைய, நேற்று ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 76.35 டொலராக பதிவாகியிருந்த நிலையில், இன்று 73.4 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அந்தவகையில், இலங்கையில் தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 394,560 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 361,600ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை .49,320 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,200 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச மற்றும் உள்ளூர் சந்தை நிலவரங்களுக்கு அமைவாகவே இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் பொத்துவிலிலிருந்து சுமார் 930 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வுத் துறையின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க இன்று (17) இதனை தெரிவித்துள்ளார்.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வளர்ச்சியடைவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும், ஆனால் வரும் நாட்களில் நாட்டின் சில பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழை பெய்யும் என்றும் கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று முதல் மழை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவையிலும் சில இடங்களில் 75 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்.
பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மற்ற இடங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும், சில பகுதிகளில் சுமார் 75 மி.மீட்டர் பலத்த மழை பெய்யக்கூடும்.
வடமத்திய, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை நேரங்களில் மூடுபனி நிலவக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய சேதங்களைக் குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும்,
வானிலை ஆய்வுத் துறையால் வெளியிடப்படும் புதுப்பிப்புகள் மற்றும் வானிலை ஆலோசனைகள் குறித்து விழிப்புடன் இருக்கவும் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.
சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL)விதிப்பு முறையில் திருத்தம் கொண்டு வருவது வாகன இறக்குமதி வரிகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
புதிய வரிகள் எதுவும் அறிமுகப்படுத்தப்படாது என்று அரசாங்கம் கூறியிருந்தாலும், இந்த தொழில்நுட்ப மாற்றத்தின் மூலம் நுகர்வோர் மீதான வரிச்சுமை இரகசியமாக அதிகரிக்கும் என்று அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.
தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த நேற்று வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
வாகன விலைகள் அதிகரிக்காது, ஏமாறாதீர்கள் தங்கள் வாகனங்களை விற்gனை செய்ய மக்களை பயமுறுத்த முயற்சிக்கிறார்கள். வாகன விலைகள் குறையும் என்று அமைச்சர் கூறுகின்றார்.
தற்போதைய முறையின் கீழ், 2.5% ஆக இருக்கும் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி, வருவாயில் 50% மட்டுமே பொருந்தும், நடைமுறையில், இது 1.25% வரியாகும்.
இருப்பினும், புதிய திட்டத்தின்படி, வரி விதிப்பு விற்பனை மட்டத்திலிருந்து சுங்க நிலைக்கு மாறும், மேலும் 100% விற்று முதலுக்கு 2.5% முழு வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த 2.5% வரி மதிப்பு கூட்டலின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.மற்றும் 18% மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) என்பது பொதுமக்களால் புரிந்து கொள்ள முடியாத ஒரு சிக்கலான வரி அதிகரிப்பு என்று இறக்குமதியாளர்கள் சங்கம் கூறுகின்றது.
இருப்பினும், ஏப்ரல் 1, 2026 முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள புதிய வரி வசூல் முறையின் காரணமாக, வாகனங்களுக்கு செலுத்த வேண்டிய மொத்த சுங்க வரி எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும் என்று தொழில்துறை பிரதிநிதிகள் எச்சரிக்கின்றனர். இது இறுதியில் வாகனங்களின் விலையை நேரடியாக பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் இன்றைய தினம் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சி அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார இந்த விடயத்தை நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.
இதன்படி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதிய கொடுப்பனவு இனி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இதுவரையில் ஓய்வூதியம் பெற்றுக்கொண்ட தொகைகள் மீள அறவீடு செய்யப்படும் என சிலர் வதந்திகளை கிளப்பி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இதுவரையில் செலுத்தப்பட்ட தொகைகள் எதுவும் மீள அறவீடு செய்யப்படாது என அமைச்சர் நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் போலவே தற்பொழுது நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்கும் ஓய்வூதியம் கிடையாது என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஓய்வு பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மூன்று கோடியே 44 லட்சம் ரூபாய் ஓய்வூதிய கொடுப்பனவே வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் இவ்வாறு ஓய்வூதியம் பெற்றுக் கொள்வது நியாயம் இல்லை என்பதே தமது நிலைப்பாடு என அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
முச்சக்கர வண்டி ஒன்று தீப்பற்றி எரிந்த சம்பவம் வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்கு அண்மித்த மருதங்கேணி பருத்தித்துறை வீதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியின் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பற்றி எரிந்துள்ளது.
இதில் பயணித்துக் கொண்டிருந்த பயணிகளும் சாரதியும் தெய்வாதீனமாக காப்பாற்றப்பட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டி தீப்பற்றி எரிந்த நிலையில் பாதையில் சென்று கொண்டிருந்தவர்கள் முச்சக்கர வண்டியின் தீப்பரவலை கட்டுப்படுத்தி ஓரளவு பாதுகாத்துள்ளனர்.
தனக்கு 12 வயது இருக்கும்போது பாக்கெட்டில் 12 ரூபாயுடன் தன் கிராமத்திலிருந்து ரயில் ஏறிய ஒருவர், இன்று சுமார் 15,000 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தின் உரிமையாளராக உள்ளார்.
குஜராத்திலுள்ள துதாலா என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் Savji Dholakia. தனக்கு 12 வயது இருக்கும்போது பாக்கெட்டில் 12 ரூபாயுடன் தன் கிராமத்திலிருந்து சூரத் நகருக்கு ரயில் ஏறியுள்ளார் அவர்.
தன் உறவினர் ஒருவரிடம் கடன் வாங்கி ஹரி கிருஷ்னா எக்ஸ்போர்ட்டர்ஸ் என்னும் நிறுவனத்தைத் துவக்கிய Dholakia, தன் கடின உழைப்பால் அதை 15,000 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனமாக மாற்றியுள்ளார்.
விடயம் என்னவென்றால், மற்றவர்களுக்குக் கொடுத்து அதன் மூலம் மகிழ்ச்சி அடையும் குணம் கொண்டவர் Dholakia.
தன் நிறுவன ஊழியர்களுக்கு பண்டிகை காலங்களில் அடுக்குமாடிக் குடியிருப்பு, கார் மற்றும் நகைகளை பரிசாக கொடுப்பது Dholakiaவின் வழக்கம்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், எங்கள் ஊழியர்கள் அனைவருக்கும் சொந்த வீடும் காரும் இருக்கவேண்டும் என்பது எங்கள் நோக்கம், அதனால்தான் அவர்களுக்கு வீடு மற்றும் கார் வழங்க முடிவுசெய்தோம் என்கிறார் அவர்.
Dholakia, 50 ஏக்கர் பரப்பிலான வீடு ஒன்றில் தன் குடும்பத்தினர் 64 பேருடன் வாழ்கிறார். மூன்று தலைமுறையினர் அந்த வீட்டில் ஒன்றாக வாழ்கிறார்கள்.
வாங்குவதை விட கொடுப்பதில்தான் மகிழ்ச்சி என்று கூறும் Dholakia, தன் லாபத்தில் கொஞ்சம் குறையும் வகையில் அதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும்போது, மேஜிக் நடக்கும் என தான் நம்புவதாக கூறுகிறார்.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, வேற்றுக்கிரகவாசிகள் (Aliens) இருப்பது குறித்து தான் கூறிய கருத்துக்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அண்மையில் யூடியூபர் பிரையன் டைலர் கோவன் (Brian Tyler Cohen) நடத்திய நேர்காணலில் கலந்துகொண்டார்.
இதன்போது கேட்கப்பட்ட விரைவான கேள்வி-பதில் பகுதியில், “ஏலியன்கள் இருப்பது உண்மையா?” என்ற கேள்விக்கு, “அவர்கள் உண்மைதான், ஆனால் நான் அவர்களைப் பார்த்ததில்லை” என்று பதிலளித்தார்.
ஒபாமாவின் இந்த ஒற்றை வரிப் பதில் உலகெங்கும் உள்ள ஊடகங்களில் வைரலாகி, அவர் ஏலியன்கள் இருப்பதை உறுதிப்படுத்திவிட்டதாகப் பெரும் விவாதம் கிளம்பியது.
மேலும், நெவாடாவில் உள்ள இரகசிய இராணுவத் தளமான ‘ஏரியா 51’இல் (Area 51) ஏலியன்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சதித் திட்டக் கோட்பாடுகள் மீண்டும் சூடுபிடித்தன.
இதனைத் தொடர்ந்து, ஒபாமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு விளக்கத்தைப் பதிவிட்டுள்ளார். அதில்,
“விரைவான கேள்வி-பதில் பகுதியில் நான் கூறிய பதில் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. புள்ளிவிவரப்படி, இந்த உலகம் மிகப் பெரியது என்பதால் எங்காவது உயிர் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம்.
ஆனால், விண்மீன் மண்டலங்களுக்கு இடையிலான தூரம் மிக அதிகம் என்பதால், அவர்கள் பூமிக்கு வந்து நம்மைச் சந்தித்திருக்க வாய்ப்பு குறைவு.
எனது ஆட்சிக் காலத்தில் வேற்றுக்கிரகவாசிகள் எங்களைச் சந்தித்ததற்கான எந்த ஆதாரத்தையும் நான் காணவில்லை, இதுவே உண்மை” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், ‘ஏரியா 51’ தளத்தில் ஏலியன்கள் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதையும் அவர் மறுத்துள்ளார்.
“ஜனாதிபதி ஒருவருக்குத் தெரியாமல் இவ்வளவு பெரிய இரகசியத்தைப் பாதுகாக்கும் அளவிற்கு அங்கு எந்த நிலத்தடி வசதிகளும் இல்லை” என்று அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.
2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இரகசிய ஆவணங்களின்படி, ‘ஏரியா 51’ என்பது உளவுப் போர் விமானங்களைப் பரிசோதிக்கப் பயன்படும் ஒரு தளம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
கம்பஹா மாவட்டம், நீர்கொழும்பு பகுதியில் நேற்று இரவு மின்சாரம் தாக்கியதில் 27 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கொழும்பு – கொலன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த இளைஞர் நீர்கொழும்பிலுள்ள தனியார் வங்கியொன்றில் பணியாற்றி வந்த நிலையில், தொழில் நிமித்தம் அப்பகுதியில் வாடகை வீட்டில் தங்கி வந்துள்ளார்.
நேற்று இரவு தங்கியிருந்த வீட்டில் பழுதடைந்த மின்விசிறியைத் திருத்த முயன்றபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உடல் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காலி – பத்தேகம, அகலிய பகுதியில் தீயில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட, சந்தேகத்துக்குரிய காரை பரிசோதிக்கும் நடவடிக்கையில் அரச பகுப்பாய்வாளர் திணைக்கள அதிகாரிகள் இன்று (17) ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 13ஆம் திகதி அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி துப்பாக்கிப் பிரயோகத் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகள் குறித்த காரை பயன்படுத்தியிருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) காலி, அகலிய – குட்டியாவத்தையில் உள்ள உள்வீதியில் வைத்தே இந்தக் காரை நுகேகொடை பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர்.
அக்குரேகொடயில் இடம்பெற்ற குறித்த இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கார் அகலிய பகுதியில் கைவிடப்பட்டிருந்ததாக,
தமக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், குறித்த இடத்துக்குச் சென்று பொலிஸார் பார்வையிட்டபோது அந்தக் கார் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.