வவுனியாவில் க.பொ.த சாதாரண தர பரீட்சை ஆரம்பம் : 4063 பேர் தகுதி!!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாடு முழுவதும் இன்றையதினம் காலை 08.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. இதேவேளை வவுனியா மாவட்டத்தில் பரீ்ட்சைக்கான அனைத்து தயார்படுத்தல்களும் ஏற்கனவே பூர்த்திசெய்யப்பட்டிருந்தது.

அந்தவகையில் வவுனியா வடக்கு வலயம், மற்றும் தெற்கு வலயத்தில் இருந்து 3231 பாடசாலை மாணவர்கள் தோற்றுவதோடு, 832 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் குறித்த பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

மேலும் வவுனியா மாவட்டத்தில் 39 பரீட்சை மத்திய நிலையங்களும், 14 இணைப்புக்காரியாலயங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை வீழ்ச்சி!!

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை இன்றைய தினம் மூவாயிரம் ரூபாவால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பெப்ரவரி 14 ஆம் திதி 24 கரட் தங்கம் ஒரு பவுண் 395,000 ரூபாயாக விற்பனையாகியிருந்த நிலையில், இன்று அதன் விலையில் 3,000 ரூபாய் குறைவடைந்துள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 392,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 362,600 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 37,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 34,688 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. உலகச் சந்தையிலும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

அதேவேளை உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,000 டொலராகப் பதிவாகியுள்ளதுடன் வெள்ளியின் விலையும் சரிவைக் கண்டுள்ளதுடன், ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 76.35 டொலராகப் பதிவாகியுள்ளது.

 

2026 முதல் சூரிய கிரகணம் : உலகம் காத்திருக்கும் நெருப்பு வளையம்!!

2026ஆம் ஆண்டின் முதல் Annular Solar Eclipse of 17 February 2026 நாளை (17.02.2026) நிகழவுள்ளது. “நெருப்பு வளையம்” என அழைக்கப்படும் இந்த அபூர்வ காட்சியை காண விண்வெளி ஆர்வலர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த கிரகணத்தின் பிரதான பாதை Antarctica மற்றும் தெற்கு அரைக்கோளப் பகுதிகள் வழியாகச் செல்லும் என்பதால், இதனை இந்தியாவில் காண முடியாது என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை நேரப்படி (IST) மதியம் சுமார் 3:26 மணிக்கு தொடங்கும் இந்த கிரகணம், இரவு 7:57 மணி வரை நீடிக்கும். இதன் உச்சக்கட்டம் (Maximum Eclipse) 12:12 UTC மணியளவில் நிகழும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்டார்டிகாவில் முழுமையாகத் தெரியும் இந்த வளைய கிரகணத்தை South Africa, Zimbabwe, Tanzania, Namibia மற்றும் Mauritius போன்ற நாடுகளில் பகுதி நேரக் கிரகணமாகக் காண முடியும்.

சந்திரன் பூமியிலிருந்து ஒப்பீட்டளவில் அதிக தொலைவில் இருக்கும் நிலையில் சூரியனை மறைக்கும் போது, சூரியனின் விளிம்புகள் மட்டும் பிரகாசமான மோதிரம் போலத் தெரியும்.

இதுவே “நெருப்பு வளையம்” என அழைக்கப்படும் வளைய சூரிய கிரகணத்தின் தனிச்சிறப்பாகும். ஜோதிட ரீதியாக, இந்த கிரகணம் கும்ப ராசியில், அவிட்டம் நட்சத்திரத்தில் நிகழ்வதாகக் கூறப்படுகிறது.

ராகு–சூரியன் சேர்க்கையாகக் கருதப்படும் இந்த காலப்பகுதியில், குறிப்பிட்ட ராசிக்காரர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ஜோதிட வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மன்னார் இளைஞன் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்?

கொழும்பு ஜிந்துபிட்டியவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொட்டஞ்சேனை உள்ள மகா வித்யாலய மாவத்தையில் மோட்டார் சைக்கிள் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு பதாள உலக கும்பல்களுக்கு இடையிலான மோதலின் விளைவாக துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

ஜிந்துபிட்டியவில் உள்ள ஒரு கட்டிடத்தின் மேல் தளத்தில் அமைந்துள்ள ஒரு சிகையலங்கார நிலைத்தில் நடத்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன் நான்கு பேர் காயமடைந்திருந்தனர்.

சம்பவத்தின் போது, உயிரிழந்தவர் மன்னாரை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் என தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர்கள் முறையே 19, 27 மற்றும் 28 வயதுடையவர்கள் என்றும் அவர்கள் சிலாவத்துறை, கிராண்ட்பாஸ் மற்றும் கொட்டஞ்சேனையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தைத் தொடர்ந்து, காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பூட்டிய காரில் சடலமாக மீட்கப்பட்ட காதல் ஜோடி : காதலர் தினத்தில் நடந்தது என்ன?

பூட்டிய காரில் சடலமாக மீட்க்கப்பட்ட காதலர்கள்; சம்பவத்தால் அதிர்ச்சி இந்தியாவின் உத்திர பிரதேசத்தில் பூட்டிய காருக்குள் காதலர்கள் சலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலர்கள் இருவரும் துப்பாகியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் மேலும் குறிபிட்டுள்ளதாவது,

26 வயதான ரேகா மற்றும் 32 வயதான சுமித்தும் 15 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இருவரும் காதலர் தினம் கொண்டாடுவதற்கு வெள்ளிக்கிழமை (13.02.2026) அன்று சந்தித்துக்கொண்டனர்.

இவ்வாறு சந்தித்து கொண்ட காதலர்கள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அத்துடன், செல்போன் அழைப்பையும் எடுக்கவில்லை. இதனால் பதறிப்போன இருவரின் பெற்றொரும் பொலிஸில் புகாரளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படியில், உத்தரப் பிரதேசம் மாநிலம் நொய்டாவை சேர்ந்த ரேகா – டெல்லியை சேர்ந்த சுமித் இருவரையும் தேடி விசாரணையில் இறங்யுள்ளனர். அதன்படி, நொய்டாவின் 39ஆவது செக்டார் பகுதியில், காணாமல் போன சுமித்தின் கார், வீதியோரம் நின்றிருந்ததைக் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

அப்போது, அதிகாரிகள் காரை சோதனை செய்தபோது உள்ளே ரேகா மற்றும் சுமித் இருவரும் சடலங்களாக கிடந்ததுள்ளனர். இருவரின் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்ட அடையாளம் தென்பட்டதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், சுமித்தின் கையில் ஒரு துப்பாக்கி இருந்ததை, பார்த்த பொலிஸார், தடயவியல் வல்லுநர்கள் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து ஆய்வு செய்துள்ளனர்.

அதன் பின்னர் இருவரின் சடலங்களையும் உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர்.

காதலர் தினத்தன்று சந்தித்துக் கொண்ட ஜோடிகள், ரேகாவை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு, சுமித், தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து இருவரின் பெற்றோரிடம் விசாரணை செய்ததில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது, 15 ஆண்டுகளாக காதலித்து வந்த ரேகா – சுமித் இருவருக்கும், சமீபத்தில் ‘பிரேக் அப்’ ஆகியுள்ளது. இந்நிலையில், ரேகா, வேறொருவரைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாக சமீபத்தில் காதலனுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அதில் ஏற்பட்ட விரக்தியில், கடைசியாக நேரில் சந்தித்து பேச வேண்டும் எனக்கூறி ரேகாவை, சுமித் அவர் வரவழைத்துள்ளார். அப்போது சம்பவ இடத்தில் காரை ஓரங்கட்டி பேசிக்கொண்டிருந்த போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது துப்பாக்கியால் காதலியைச் சுட்டுக் கொன்ற சுமித், தன்னை தானே சுட்டு உயிரை மாய்த்துள்ளார். இச்சம்பவம் உத்தரப்பிரதேசத்தில், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டுமொரு தாழமுக்கம் : நாளை முதல் கடும் மழை!!

தெற்கு வங்காள விரிகுடாவில் காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளதால் இனிவரும் நாட்களில் அது தாழமுக்கமாக மாறி வடக்கு, வட மேற்கு திசை நோக்கி நகரும் என வானிலை ஆய்வாளர், பேராசிரியருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இதன்படி, பெப்ரவரி மாதத்தில் இத்தகைய தாழமுக்க நிகழ்வுகள் தோன்றுவது மிக அரிதாக இருப்பின், நாளை (17.02.2026) முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் மழை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழையானது, எதிர்வரும் 24.02.2026 வரை தொடரவும் வாய்ப்புள்ளது.

அதேவேளை ஊவா, மத்திய, வட மத்திய, மேல், சபரகமுவா மற்றும் தென் மாகாணங்களுக்கும் இம்மழை நாளை முதல் (17.02.2026) எதிர்வரும் 24.02.2026 வரை பரவலாக மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அறுவடைச் செயற்பாடுகளை மேற்கொள்பவர்கள் இந்த மழை நாட்களைக் கருத்தில் கொண்டு தமது அறுவடைச் செயற்பாடுகளை மேற்கொள்வது சிறந்தது.

அதேவேளை, ஏற்கெனவே மழை கிடைத்து வரும் மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களில் மழை தொடரும் வாய்ப்புள்ளதோடு,

நாளை முதல் மேற்குறிப்பிட்ட மாகாணங்களின் பல பகுதிகளிலும் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதால் நிலச்சரிவு நிகழ்வுகள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நாளை முதல் (17.02.2026) எதிர்வரும் 24.02.2026 வரையான காலப்பகுதியில் ஏனைய பகுதிகளை விட கிழக்கு, வடக்கு ,ஊவா மத்திய மாகாணங்கள் திரட்டிய மழை வீழ்ச்சி அதிகமாகக் கிடைக்கும் என்பதனால் இந்த மாகாணங்களின் குளங்கள் வான் பாயும் வாய்ப்புள்ளது. எனவே, இது தொடர்பாகவும் மக்கள் அவதானமாக இருப்பது அவசியம்.

 

யாழ். பல்கலைக்கழகம் செல்லும் வீதியில் விபத்து : பரிதாபமாக உயிரிழந்த முதியவர்!!

முல்லைத்தீவு மாவட்டம், மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருமுருகண்டி ஏ9 பிரதான வீதி, அறிவியல் நகர் யாழ் பல்கலைக்கழகம் செல்லும் வீதி அண்மித்த பகுதியில் இன்று (15.02.2026) பகல் 1.50 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் காயமடைந்துள்ளார்.

கிளிநொச்சி பகுதியில் இருந்து முறிகண்டி நோக்கி பயணித்த மகிழுந்து கார் மற்றும் முறிகண்டி பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த சிறிய ரக மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் கடுமையாக காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், கிளிநொச்சி இரத்தினபுரத்தைச் சேர்ந்த 60 வயதுடைய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொருவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து நடைபெற்ற இடத்திலிருந்து மகிழுந்து காரில் காயமடைந்த நபரை ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், வாகனத்தை செலுத்தி வந்தவர் திருக்கோணமலை வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அவர் காயமடைந்த நபரை அவசர சிகிச்சைப் பிரிவில் ஒப்படைத்த பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பில் காதலனை தந்தையென கூப்பிட மறுத்த பிள்ளையை கொலை செய்த இளம் தாய்!!

கொழும்பின் புறநகர் பகுதியான ஹோமாகம பிரதேசத்தில் தனது கணவரை தந்தை என அழைக்காததற்காக தாயாரால் அடித்துக் கொல்லப்பட்ட மூன்று வயது சிறுமியின் உடலில் 75க்கும் மேற்பட்ட வெளிப்புற மற்றும் உள் காயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுமியை அவரது தாயார் பல சந்தர்ப்பங்களில் உலுக்கி தரையில் அடித்துள்ளதாகவும், கைகள், கால்கள் மற்றும் பல்வேறு பொருட்களால் தாக்கியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மத்தேகொடவில் உள்ள மாகம்மன சமகி மாவத்தை பகுதியைச் சேர்ந்த பெண், தனது மூன்று வயது மகளின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து மத்தேகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அந்தப் பெண் சிறிது காலத்திற்கு முன்பு தனது கணவரைப் பிரிந்து, சுமார் மூன்று மாதங்களாக ஒரு வாடகை வாகன ஓட்டுநருடன் வாழ்ந்து, அவருடன் நெருங்கிய உறவைப் பேணி வந்தார்.

அந்த தம்பதியினர் மூன்று வயது சிறுமியை பல்வேறு வழிகளில் சித்திரவதை செய்து தாக்கியதாக புகைப்படங்கள் மற்றும் ஆதாரங்களுடன் பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர்.

தந்தை என்று அழைக்காததற்காக சிறுமியின் தாயும், அந்த நபரும் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இவ்வாறு தாக்கப்பட்ட சிறுமி, ஒவ்வாமை காரணமாக ஹோமாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

பிரேத பரிசோதனையில், சிறுமி தாக்குதலின் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும், தாக்குதலில் ஈடுபட்ட சந்தேகநபரான தாயின் கணவர் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மத்தேகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இந்திக குமார உள்ளிட்ட அதிகாரிகள் குழு சந்தேக நபரைக் கைது செய்ய விரிவான விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.

ஏற்ற இறக்கத்துடன் பதிவாகும் தங்கத்தின் விலை : இன்று பதிவாகியுள்ள நிலவரம்!!

உலக சந்தையில் தங்கத்தின் விலையானது தளம்பல் நிலையிலேயே உள்ளதுடன் இன்றைய தினம் சிறியதொரு வீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதன்படி, உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை ஐயாயிரம் டொலராக பதிவாகியுள்ளது.

அதேநேரம், வெள்ளியின் விலையும் இன்றைய தினம் வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது. இதற்கமைய, ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 76.35 டொலராக பதிவாகியுள்ளது.

இந்தநிலையில், கொழும்பு செட்டியார் தெரு தகவல்களின் படி இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 362600 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 392000 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

க.பொ.த சாதாரண தரப் பரீட்சார்த்திகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!!

2025 (2026) க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான அட்டவணையில் சிறப்பு கவனம் செலுத்துமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே, பரீட்சார்த்திகளுக்கு அறிவிப்பு விடுத்துள்ளார்.

நாளை (17) தொடங்கவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர்,

இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளம் மற்றும் உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கில் கிடைக்கும் அட்டவணைக்கு மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

நாளை (17) காலை 8.30 மணிக்குப் பரீட்சை தொடங்கும் என்றும், பரீட்சார்த்திகள் பரீட்சை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே பரீட்சை மையங்களை அடைய வேண்டும் என்றும் இந்திகா குமாரி குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், பரீட்சை மண்டபங்களுக்கு மொபைல் போன், புளூடூத், ஸ்மார்ட் வாட்ச், குறிப்புகள் அல்லது ஆவணங்களை எடுத்துச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும், ஒவ்வொரு பரீட்சார்த்தியும் பரீட்சை முடியும் வரை தங்கள் அடையாள அட்டையை வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அதற்காக, பாடசாலை பரீட்சார்த்திகள் தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டைப் பயன்படுத்தலாம்.

அதே நேரத்தில் தனியார் பரீட்சார்த்திகள் கிராம அதிகாரியால் சான்றளிக்கப்பட்ட இரண்டு புகைப்படங்களுடன் கூடிய தற்காலிக அடையாள அட்டையைப் பயன்படுத்தலாம் என்று தேர்வு ஆணையர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும், அனைத்துப் பரீட்சார்த்திகளும் முதலில் வினாத்தாளின் வழிமுறைகளை கவனமாகப் படித்து, அனைத்துப் பகுதிகளும் தனக்குக் கிடைத்ததா என்று பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்ட பரீட்சை ஆணையர் நாயகம்,

நேரத்தை நன்றாக நிர்வகிக்கவும், பரீட்சை எண்ணை சரியாகக் குறிப்பிட்டு பரீட்சை வினாக்களுக்கு பதிலளிக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கையெழுத்தை தெளிவாக எழுதவும், எந்த சூழ்நிலையிலும் டிபெக்ஸ் பயன்படுத்த வேண்டாம் என்றும், தவறு இருந்தால், அதை ஒரு கோட்டால் வெட்டி மீண்டும் பதிலளிக்கவும், விடைத்தாளை சரியாக இணைக்கவும் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

 

வெளிநாட்டில் கொல்லப்பட்ட இந்தியரின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு!!

வெளிநாடொன்றில் பொலிசாருக்கும் குற்றவாளிகளுக்குமிடையிலான மோதலில் அப்பாவி இந்தியர் ஒருவர் தவறுதலாக கொல்லப்பட்டார். இந்நிலையில், அவரது உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுத்துவிட்டனர்.

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து சவுதி அரேபியாவுக்கு வேலைக்காக சென்றவர் விஜய் குமார் மஹாட்டோ.

கடந்த அக்டோபர் மாதம், சவுதியில் பொலிசாருக்கும் குற்றவாளி கும்பல் ஒன்றிற்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தவறுதலாக விஜய் குமார் மீது குண்டு பாய்ந்துவிட்டது.

படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து, தன் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு, தான் பிழைக்கமாட்டேன் என்று கூறும் வீடியோ மற்றும் ஆடியோ செய்திகளை அனுப்பிய விஜய் குமார் பின்னர் உயிரிழந்துவிட்டார்.

இந்நிலையில், விஜய் குமாரின் உடல் சவுதியிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அவரது உடல் ஜார்க்கண்டிலுள்ள ராஞ்சி நகரிலுள்ள மருத்துவமனை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், விஜய் குமாரின் குடும்பத்தினர் அவரது உடலை வாங்க மறுத்துவிட்டார்கள். விஜய் குமார் வேலை செய்த நிறுவனம் அவருக்கு இழப்பீடு வழங்குவதாக எழுத்துவடிவில் உறுதியளித்தால் மட்டுமே அவரது உடலை வாங்குவோம் என்றும் அவரது குடும்பத்தினர் கூறிவிட்டார்கள்.

விஜய் குமாருக்கு மனைவியும், ஐந்து மற்றும் மூன்று வயதே ஆன இரண்டு பிள்ளைகளும், வயதான பெற்றோரும் இருக்கிறார்கள்.

ஆக, இந்த இழப்பீடு என்பது அவர்களைப் பொருத்தவரை, தவறுதலாக கொல்லப்பட்ட விஜய் குமாரின் மரணத்துக்கான இழப்பீடு மட்டுமல்ல, அவரது குடும்பத்தின் எதிர்கால பாதுகாப்புக்கான விடயமும் என்பதாலேயே அவரது குடும்பத்தினர் அவரது உடலை வாங்க மறுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்து பேருக்கு மறுவாழ்வு அளித்த 10 மாத பெண்குழந்தை!!

இந்தியா – கேரளாவில், சாலை விபத்தில் உயிரிழந்த 10 மாத பெண் குழந்தையின் உடலுறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளன.

உயிரிழந்த குழந்தையின் உடல் உறுப்புக்கள் தானம் வழங்கப்பட்ட நிலையில் உறுப்பு தானத்திற்காக காத்திருந்த ஐந்து பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள மலப்பள்ளி என்ற பகுதியைச் சேர்ந்த அருண் ஆபிரகாம் மனைவி ஷெரின் அன்ஜான் ஆகியோருக்கு அலின் ஷெரின் ஆபிரகாம் என்ற 10 மாத பெண் குழந்தை இருந்துள்ளது.

கோட்டயம் அருகே பள்ளம் பகுதியில் தாய் மற்றும் தாய்வழி பாட்டி, தாத்தாவுடன் பயணித்த போது சாலை விபத்தில் படுகாயம் அடைந்த பெண் குழந்தை, கொச்சியில் உள்ள அம்ரிதா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

இதையடுத்து, பெற்றோர் ஒப்புதலுடன் குழந்தையின் உறுப்புகள் தானம் பெறப்பட்டன. இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.

குழந்தையின் இதயம் திருவனந்தபுரத்தில் உள்ள சித்திரை திருநாள் மருத்துவமனைக்கும், கல்லீரல் கிம்ஸ் மருத்துவமனைக்கும், சிறுநீரகங்கள் அரசு மருத்துவக் கல்லுாரிக்கும் எடுத்துச் செல்லப்பட்டு, நான்கு பேருக்கு பொருத்தப்பட்டன.

குழந்தையின் கண்கள் கண் வங்கிக்கு தானமாக தரப்பட்டன. மறுவாழ்வு பெற்ற நான்கு பேரின் குடும்பத்தினர் பெண் குழந்தையின் பெற்றோருக்கு நன்றி தெரிவித்தனர்.

அதேவேளை உடலுறுப்பு தானம் மூலம், கேரளாவின் இளம் வயதில் உறுப்பு தானம் செய்தவராக குழந்தை அலின் ஷெரின் ஆபிரகாம் மாறியுள்ளார்.

 

மனைவியை தீ வைத்து எரித்த கணவன் : குடும்பப் பிரச்சினையால் பறிபோன உயிர்!!

குடும்பத் தகராறு முற்றியதில் கணவன் தனது மனைவியை தீ வைத்து எரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று(13.02.2026) பரசன்கஸ்வெவ – மெதகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் பரசன்கஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய பெண் என்றும் தெரியவந்துள்ளது.

பரசன்கஸ்வெவ பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், குடும்பத் தகராறு காரணமாகவே கணவன் இந்தக் கொலையைச் செய்துள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, சந்தேக நபரைக் கைது செய்வதற்காக பரசன்கஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

ஐரோப்பாவில் கோர விபத்து : இலங்கை இளைஞன் பரிதாபமாக பலி!!

ஐரோப்பிய நாடான ருமேனியாவின் தலைநகரான புக்கரெஸ்டில் உள்ள செக்டர் 3 பகுதியில், ஸ்கூட்டரில் உணவு விநியோகம் செய்து கொண்டிருந்த இலங்கை இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த வாரம் எதிர்பாராத விதமாக வீதி விபத்தில் சிக்கி படுகாயமடைந்த இலங்கையர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மகேஷ் தனஞ்சய ஹெட்டிகே என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் தனது மனைவியுடன் ருமேனியா சென்ற நிலையில் அங்கு அவருக்கு குழந்தையும் பிறந்துள்ளது.

சம்பவத்தன்று, குறித்த ஊழியர் தனது ஸ்கூட்டரில் வாடிக்கையாளருக்கு உணவை விநியோகம் செய்யச் சென்று கொண்டிருந்தார். இதன்போது மற்றொரு வாகனத்துடன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நிலைதடுமாறி விழுந்த ஊழியருக்கு உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன், சம்பவ இடத்திற்கு சென்ற அவசர மருத்துவக் குழுவினர், காயமடைந்த ஊழியருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் செல்லப்பட்ட போதிலும் அவரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.

உணவு விநியோக ஊழியர்கள் நேரக்கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், இத்தகைய விபத்துகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாகச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அக்குரேகொடவில் தம்பதி கொல்லப்பட்ட சம்பவம் : களமிறக்கப்பட்ட 10 பொலிஸ் குழு!!

தலங்கம, அக்குரேகொடவில் ஒரு தம்பதியினர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க, காவல்துறை மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், பத்து சிறப்பு போலீஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் கூறுகின்றன.

நேற்றையதினம் பிப்ரவரி 13 ஆம் தேதி மாலை அப்பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியின் வாகன நிறுத்துமிடத்தில் இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

காரில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள், தம்பதியினர் தங்கள் வாகனத்திற்குள் இருந்தபோது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் அதுருகிரியவைச் சேர்ந்த 44 வயது வழக்கறிஞர் மற்றும் அவரது 42 வயது மனைவி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். வழக்கறிஞர் புத்திக மல்லவராச்சி, கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முதன்மையாக சட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

துப்பாக்கிச் சூட்டில் T56 துப்பாக்கி மற்றும் ஒரு கைத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. நீதவானின் விசாரணைக்குப் பிறகு, சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன.

புலனாய்வாளர்கள் பல சாத்தியமான காரணங்களை ஆராய்ந்து வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த கால வழக்குகளில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பல நபர்களின் சார்பாக மல்லவராச்சி ஆஜரானதாகக் கூறப்படுகிறது,

மேலும் அவரது தொழில்முறை ஈடுபாடுகள் துப்பாக்கிச் சூட்டில் ஏதேனும் தொடர்புள்ளதா என்பதை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், எந்த முடிவுகளும் எட்டப்படவில்லை என்றும் போலீசார் வலியுறுத்தினர்.

இதற்கிடையில், இலங்கை வழக்கறிஞர்கள் சங்கம் (BASL) வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், இந்தக் கொலையைக் கடுமையாகக் கண்டித்து, இது சட்டத்தின் ஆட்சிக்கு பெரும் அச்சுறுத்தலாகக் கருதப்பட்டது.

காவல்துறையினர் முழுமையான மற்றும் விரைவான விசாரணையை நடத்தி, குற்றவாளிகளைக் கைது செய்து, அவர்கள் தாமதமின்றி சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று BASL வலியுறுத்தியது.

மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க சட்ட அமலாக்க அதிகாரிகள் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அது அழைப்பு விடுத்தது.

 

பல கோடி ரூபா பெறுமதியான திமிங்கில வாந்தியுடன் கைதான நபர்!!

களுத்துறை பிரதேசத்தில் பல கோடி ரூபா பெறுமதியான திமிங்கில வாந்தியுடன் சந்தேக நபர் ஒருவர் களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் பொக்குனுவிட, வெலிகட பிரதேசத்தில் வசிப்பவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரிடமிருந்து 9 கிலோ 930 மில்லிகிராம் திமிங்கில வாந்தி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட திமிங்கில வாந்தி பல கோடி ரூபா பெறுமதியானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரை களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸ் குற்றப் புலய்வு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.