வடக்கு – கிழக்கில் கொட்டித் தீர்க்கவுள்ள மழை!!

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் இன்று (13.12.2025) பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று(13) காலை வெளியிடப்பட்ட சமீபத்திய வானிலை முன்னறிவிப்பின்படி, நாட்டின் பிற பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பிறகு பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு சுமார் (30-40) கி.மீ வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக்கூடும்.

சப்ரகமுவ, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை நேரங்களில் மூடுபனி நிலவக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணகொடுப்பனவு : வெளியான அறிவிப்பு!!

அரச அதிகாரிகளுக்கு அடுத்த ஆண்டுக்காக 4,000 ரூபாயிற்கு மிகாத விசேட முற்பணத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அலோக பண்டார  வெளியிட்ட சுற்றறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கையின்படி, அரச ஊழியர்களுக்கு 4,000 ரூபாய் வரை சிறப்பு முற்பணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சிறப்பு வங்கிக் கடன்கள் அல்லது முன்னர் பெறப்பட்ட சிறப்பு முன்பணங்களுக்கான தவணைகளை திருப்பிச் செலுத்தத் தவறிய எந்தவொரு அரசு அதிகாரிக்கும் இந்தக் கொடுப்பனவு பொருந்தாது என்று சுற்றறிக்கை தெளிவுபடுத்துகிறது.

இந்தக் கொடுப்பனவுகள் அடுத்த வருடம் ஜனவரி 1 முதல் பெப்ரவரி 28 வரை வழங்கப்படும் என கூறப்படுகின்றது.

இந்த தொகை பத்து சமமான மாதாந்திர தவணைகளில் வசூலிக்கப்படும் என்றும், வருடாந்திர வட்டி 8 சதவீதமாக வசூலிக்கப்படும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்காசியாவில் முன்னிலை வகிக்கும் இலங்கையர்கள்!!

2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, தெற்காசியாவில் இலங்கையர்கள் 102 என்ற சராசரி IQ(நுண்ணறிவு)அளவை கொண்டுள்ளனர். இதன்படி, உலகின் மிக உயர்ந்த சராசரி IQ அளவைக் கொண்ட முதல் 12 நாடுகளில் இலங்கையும் ஒன்றாகவும் உள்ளது என்று சர்வதேச IQ தரவுகள் தெரிவிக்கின்றன.

IIQஇன் படி, உலகளாவிய சராசரி IQ நிலை 100 ஆகும், இலங்கையில் இருந்து மொத்தம் 2840 பங்கேற்பாளர்கள் ஒரு நிலையான IQ சோதனையின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் சீனாவே உலகின் மிக உயர்ந்த சராசரி IQ மட்டத்தில் 107 என்ற அளவுடன் சராசரியுடன் முதலிடத்தில் உள்ளது.

2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், நல்ல உணவுப் பழக்கம் உள்ள சிறுவர்கள் மற்ற சிறுவர்களை விட அதிக IQவைக் கொண்டுள்ளனர் என்பதைக் காட்டுகிறது.

தொடர்ந்து சதுரங்கம் விளையாடுவது சிறுவர்களின் IQக்களை அதிகரிக்கும் என்று 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்விலும் கண்டறியப்பட்டுள்ளது.

லண்டனில் 15 வயது சிறுமியை கடத்தி துஸ்பிரயோகம் : இலங்கை இளைஞன் மீது குற்றசாட்டு!!

அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட புகலிட விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கையின் குடியேறி ஒருவர்,மேற்கு லண்டனில் 15 வயது சிறுமியைக் கடத்தி, துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

எனினும்,சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டை, குறித்த இலங்கையர் மறுத்துள்ளார் 20 வயதான யாஷின் ஹிமாசார என்ற அவர், ஐல்வொர்த் கிரவுன் நீதிமன்றத்தில் காணொளி இணைப்பு மூலம் முன்னிலையானார்.

இதன்போது, சிங்கள மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் சாட்சியம் அளித்த ஹிமாசார, கடத்தல், துஸ்பிரயோகம், சிறுவர் துஸ்பிரயோக செயற்பாடு மற்றும் உள்ளிட்ட ஏழு குற்றச்சாட்டுகளில் தாம் குற்றமற்றவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் நவம்பர் 1 ஆம் திகதி மேற்கு லண்டனில் உள்ள ஃபெல்தாமில் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

ஹிமாசார, புகலிடம் கோருபவர்களை தங்க வைக்க அரசாங்கத்தால் பயன்படுத்தப்படும் மூன்று நட்சத்திர வசதியான செயிண்ட் கில்ஸ் விருந்தகத்தில் வசித்து வரும் நிலையிலேயே இந்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார்.

இந்த நிலையில், ஹிமாசாரவை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் மேலதிக விசாரணையை 2026 ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதிக்கு, நீதிபதி ஒத்திவைத்ததாக பிரித்தானிய தகவல்கள் கூறுகின்றன.

டுபாயிலிருந்து வந்த இலங்கையர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!!

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 69 வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால், இன்று (13) காலை இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று (13) அதிகாலை 12.30 மணிக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் EK – 648 மூலம் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.

இதன்போது கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளுக்கமைய, கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மினுவங்கொடை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

மேலும் சந்தேகநபர் மற்றும் அவர் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த விமதுபான போத்தல்களுடன் (12/15 ) திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமானநிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.

அநுர அரசின் அதிரடி நடவடிக்கை : கோடிக்கணக்கான சொத்துகள், 354 பவுன், வாகனங்கள் பறிமுதல்!!

அநுர அரசாங்கத்தின் கீழ் சட்டவிரோதமான முறையில் பெற்றப்பட்ட சொத்துக்கள் மற்றும் உடமைகளை அரச சொத்தமாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஆரம்பகட்ட ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்தார்.

நாட்டில் திட்டமிட்ட குற்றவாளிகளால் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்களைத் தடை செய்வதற்கும், அவற்றை அரசுடமையாக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களில் 354 பவுன் தங்கம், 77 வாகனங்கள், 35 கோடி ரூபா பணம் மற்றும் ஒரு கோடி ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான பல்வேறு சொத்துக்களை அரசுடமையாக்கப்படவுள்ளது.

இதில் 2024ஆம் ஆண்டில் மாத்திரம் 150 பவுன் தங்கம், 64 வாகனங்கள், 6 கோடி ரூபா பணம் மற்றும் 61 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் அரசுடமையாக்குவதற்காகத் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளன.

2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 204 பவுன் தங்கம், 13 வாகனங்கள், 67 கோடியே 78 இலட்சம் ரூபா பெறுமதியான காணி மற்றும் ஏனைய சொத்துக்கள், மற்றும் 18 வீடுகள் எனச் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட பெருமளவிலான சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

வவுனியா விபத்தில் உயிரிழந்த இளைஞனின் உடல் உறுப்புக்கள் தானம் : இருவருக்கு கிடைத்த வாழ்க்கை!!

வவுனியாவில் விபத்தில் உயிரிழந்த தமிழ் இளைஞனின் உடல் உறுப்புக்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளதாக யாழ் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கடந்த எட்டாம் திகதி சம்பவித்த விபத்தில் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த ரவிராஜ் ராஜ்கிரன் விபத்தில் சிக்கிக் கொண்டார். எந்த முன்னறிவிப்பும் இன்றி அவரது தலையில் ஏற்பட்ட கடுமையான அடிபட்ட காயம் காரணமாக அவர் மயக்கநிலைக்கு தள்ளப்பட்டார்.

உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

யாழ்ப்பாணத்தில் சிடி ஸ்கான் உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. தலையில் ஏற்பட்ட காயம் கடுமையான வீக்கம் மற்றும் உள்இரத்தக் கசிவுகளை ஏற்படுத்தியிருந்தது என்பதும் நரம்பு சத்திர மருத்துவர்க மூலம் உறுதிசெய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவர் யாழ் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு, உயிரை காக்க தேவையான அனைத்து சிகிச்சைகளும் தொடர்ச்சியாக வழங்கப்பட்டன.

ஆனால், மருத்துவர், தாதியர் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் முழு முயற்சியையும் எடுத்தபோதிலும், தலையில் ஏற்பட்ட கடுமையான காயத்தின் தாக்கத்தை தாங்க முடியாமல், அவரது மூளைச் செயற்பாடுகள் படிப்படியாக குறைந்து, இறுதியில் மூளை இறப்பு உறுதிசெய்யப்பட்டது.

இந்த இக்கட்டான நிலையிலும் அவர்களின் குடும்பத்தினர் அவரது இரண்டு சிறுநீரகங்களையும் தானம் செய்ய முன் வந்தனர். இதனிடையே இலங்கையில் சிறுநீரக செயலிழப்பால் மாற்றுச் சிறுநீரகத்திற்காக பலர் உயிர்ப்போராட்டத்தில் இருக்கின்றனர்.

அந்தநிலையில், மரணமடைந்த இளைஞனின் இரண்டு சிறுநீரகங்களையும் மருத்துவக் குழு இன்று வெற்றிகரமாக சத்திரசிகிச்சை மூலம் அகற்றி, அவை இரண்டு நோயாளிகளுக்கு மாற்று சிறுநீரகமாக வெற்றிகரமாக பொருத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரிடரின் போது பலரின் உயிர்களை காப்பாற்றிய இளம் யுவதி திடீரென மரணம்!!

அண்மையில் ஏற்பட்ட பேரிடரின் போது பலரின் உயிரை காப்பாற்றிய இளம் யுவதி ஒருவர் திடீரென உயிரிழந்தமை அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

களனி கங்கையின் ராணியாக முடிசூட்டப்பட்ட சேதவத்தை, கோட்விலாவைச் சேர்ந்த யுவதியான ஓஷாதி வியாமா என்பவரே இவ்வாறு உயிரிந்துள்ளார்.

நேற்றையதினம் திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. கொழும்பு விசாகா வித்தியாலயத்தில் படித்து வந்த அவர் 19 வயதில் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

சமீபத்திய வெள்ளத்தின் போது இடம்பெயர்ந்த தனது அண்டை வீட்டு மக்களை காப்பாற்றவும், அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் கொண்டு செல்ல, இரவுபகலாக படகில் பணியாற்றி, பெரிய தியாகத்தை செய்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளார்.

ஓஷாதி தனது 3 வயதிலிருந்தே நீச்சல் கற்றுக்கொண்டார். குறித்த யுவதி தனது 7 வயதில் 14 நிமிடங்கள் 41 வினாடிகளில் களனி ஆற்றின் குறுக்கே 1000 மீட்டர் நீந்தி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.

ஓஷாதியின் சாதனையை காண கிராமவாசிகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் அன்றையதினம் களனி ஆற்றின் இருபுறமும் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

திருக்கோவில் விபத்தில் யாழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு!!

அம்பாறை திருக்கோவில் பொத்துவில் பிரதான வீதியில் வாகன விபத்து விநாயகபுரம் பகுதியை சேர்ந்த பொலிஸ் உத்தியோத்தர் உயிரிழந்துள்ளார்.

திருக்கோவில் காஞ்சரன்குடா அண்மித்த பகுதியில் நேற்று முன் தினம் (10) இரவு இடம்பெற்ற வாகனவிபத்தில் பொலிஸ் உத்தியோத்தர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பொலிஸ் உத்தியோத்தர் பத்பநாதன் யதர்ஷன் (வயது-31) என்பவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

பிரதேச வீதியில் முச்சக்கர வண்டி ஒன்று வேக கட்டு பட்டை இழந்து வீதியில் கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ள தாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸ்சார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

கரையொதுங்கிய 2 டன் ராட்சத சுறா : படையெடுக்கும் மக்கள்!!

தமிழகத்தின் கன்னியாகுமரி, கீழ் மிடாலம் கடற்கரை பகுதியில் 2 டன் எடை கொண்ட ராட்சத புள்ளி சுறா கரையொதுங்கியுள்ளது. குறித்த பகுதி மீனவர்கள் வீசிய கரைமடி வலையில் சிக்கி இறந்த நிலையில் குறித்த சுறா மீன் கரையொதுங்கியுள்ளது.

குறித்த சுறா மீனை பார்வையிட்ட மீனவர்கள் அந்த மீனுடன் நின்று புகைப்படங்களைப் பதிவு செய்துள்ளனர். அத்துடன் சுறா மீனை அந்தப் பகுதி மக்களும் பள்ளி மாணவ மாணவிகளும் ஆர்வமுடன் பார்த்து புகைப்படங்கள் எடுத்துள்ளனர்.

2 டன் எடை கொண்ட சுறா மீனைப் பார்த்ததும் மாணவர்கள், குழந்தைகள் ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்ந்துள்ளனர். சுறா மீனுடன் மாணவர்களும் பொதுமக்களும் ஓடிச் சென்று புகைப்படம் எடுக்கும் காணொளி வைரலாகி வருகின்றது.

பாரிய விபத்தில் இருந்து பயணிகளின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர்!!

பதுளையிலிருந்து இன்று காலை அனுராதபுரம் நோக்கிச் சென்ற கெகிராவ இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் ஓட்டுநர், 14 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளார்.

பதுளையில் இருந்து புறப்பட்ட பேருந்து, பதுளை-மஹியங்கனை வீதிக்கு சென்று கொண்டிருந்தபோது, ​​பதுளையில் உள்ள துன்ஹிந்த வளைவுக்கு அருகில் பேருந்தின் பிரேக்குகள் செயலிழந்துள்ளது.

உடனடியாக பேருந்தினை பாதுகாப்பு துணின் மீது மோதுண்டு நிறுத்தியதாக ஓட்டுநர் ஜனக துஷார தெரிவித்தார். இதன்போது அனைத்து பயணிகளின் உயிரையும் எந்த காயமும் இல்லாமல் காப்பாற்றியுள்ளார்.

அவ்வாறு செய்யாதிருந்தால் ஆயிரக்கணக்கான அடி உயரமுள்ள ஒரு பாறையில் விழுந்து பெரிய விபத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயணிகளை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளுமாறு பேருந்து நடத்துனரிடம் கூறியதனையடுத்து ஓட்டுநர் பேருந்தை அணைக்குள் இழுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீதியில் கடந்த காலங்களில் பல ஆபத்தான விபத்துகள் நடந்துள்ளன, மேலும் அவை அனைத்தும் பிரேக் குறைபாடுகளால் ஏற்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் காதலிகளை குஷிப்படுத்துவதற்காக திருட்டில் ஈடுபட்ட இளைஞன்!!

தனது காதலிகளுக்கு பரிசுகளை வழங்கவும், ஒன்லைனில் பணத்தை முதலீடு செய்யவும் திருட்டில் ஈடுபட்ட 18 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள ஒரு சுப்பர் மார்க்கெட்டில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். இதன்போது, ​​உறவினர் ஒருவரின் வீட்டில் இருந்து திருடப்பட்ட 61 இரத்தினக் கற்கள் அவரது வசம் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருடப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி தனது காதலியான 27 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் மற்றும் டிக்டோக் மூலம் அவர் அடையாளம் கண்ட இரண்டு காதலிகளுக்கு கையடக்க தொலைபேசி வழங்கியதும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இலங்கை புகையிரத சேவையில் இனி பெண்களுக்கும் வேலை!!

இலங்கை ரயில் சேவையில் உள்ள அனைத்து பதவிகளுக்கும் பெண்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (12) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

இலங்கை ரயில் சேவையின் ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு பெண்கள் விண்ணப்பிப்பதைத் தடுத்து வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி, இரண்டு பெண்களால் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி இந்த அறிவிப்பை விடுத்தார்.

இலங்கையில் மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!!

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ள அதேவேளை, அதற்கு இணையாக உள்நாட்டு தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. இன்றைய தினம் (12.12.2025) உலக தங்க விலை 4,266 டொலராக அதிகரித்துள்ளது.

உள்நாட்டு தங்க விலை நேற்றுடன் (11) ஒப்பிடுகையில் இன்று (12) 3,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது. அதற்கமைய, இன்று காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் “22 கரட்” தங்கப் பவுன் ஒன்றின் விலை 312,000 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் இதன் விலை 309,200 ரூபாவாக காணப்பட்டது. இதேவேளை, நேற்று 336,000 ரூபாவாகக் காணப்பட்ட “24 கரட்” தங்கப் பவுன் ஒன்றின் விலை இன்று 339,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நுவரெலியாவுக்கு இரவில் செல்ல வேண்டாம்!!

நுவரெலியாவுக்குச் செல்லும் எந்தவொரு வீதியிலும் இரவு நேரங்களில் வாகனங்களை செலுத்த வேண்டாம் என நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் அறிவுறுத்தியுள்ளார்.

நேற்று (11.12.2025) நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

கம்பளை – நுவரெலியா பிரதான வீதியின் கட்டுகிந்துல பகுதியிலிருந்து போக்குவரத்துக்கு திறக்கப்பட்ட பிரதான வீதியில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. நிலவும் வானிலை காரணமாக வீதிகளில் மேலும் மண் மேடுகள் சரிந்து விழும் அபாயம் உள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் ‘தித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உணவுப் பொருட்கள் உட்பட தேவையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தை சங்கடப்படுத்தும் நோக்கில் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படாத சிலர் கூறும் சில அறிக்கைகளில் எந்த உண்மையும் இல்லை எனவும் நுவரெலியா மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

தமிழர் பகுதியில் அதிகாலையில் நேர்ந்த விபத்து : குடைசாய்ந்த கப்ரக வாகனம்!!

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை கோழிகளை ஏற்றிவந்த கப் ரக வாகனம், மாட்டுடன் மோதி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

கோழிகளை ஏற்றிக்கொண்டு கல்முனை சாலை வழியே கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த குறித்த வாகனம் புதுக்குடியிருப்பு பகுதியூடாக பயணிக்கும் போது வீதியில் நின்ற மாட்டுடன் மோதி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் சிக்கிய மாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு கோழிகளை ஏற்றிவந்த வாகனத்தில் பயணித்தோரும் காயமடைந்துள்ளனர்.

இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.