இலங்கையில் குறைந்தது வாகனங்களின் விலை!!

இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலை அதிகபட்சமாக ரூ.1.5 மில்லியன் வரை குறைந்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் (VIAL) தலைவர் இந்திக சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் வாகன விலை குறைந்ததையடுத்து, இலங்கையிலும் வாகனங்கள் விலை குறைந்துள்ளதாக அவர் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

அங்கீகரிக்கப்படாத வாகன இறக்குமதிகள் காரணமாக, பதிவு செய்யப்படாத வாகனங்கள் சந்தையில் குவிந்துள்ளன என்றும், இதனால் விற்பனையில் மந்தநிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2025 ஜனவரி முதல் ஓகஸ்ட் மாதம் வரை தனிப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக 705 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளன.

“விலை மாற்றங்களின் அடிப்படையில், பதிவு செய்யப்படாத ஹோண்டா வெசல் Z Play 2025 SUV தற்போது ரூ. 23.5 மில்லியனுக்கு விற்கப்படுகிறது. முன்னர் இது ரூ. 25.5 மில்லியனாக இருந்தது.

டொயோட்டா யாரிஸ் (Toyota Yaris)ரூ. 11.5 மில்லியனிலிருந்து ரூ. 10.5 மில்லியனாக குறைந்துள்ளது. சுசுகி ஆல்டோ ஹைப்ரிட் (Suzuki Alto Hybrid) தற்போது ரூ. 7.9 மில்லியனிலிருந்து ரூ. 7.3 மில்லியனாகவும், சுசுகி வாகன் ஆர் (Suzuki Wagon R) ரூ. 7.8 மில்லியனிலிருந்து ரூ. 7.3 மில்லியனாகவும் குறைந்துள்ளது,” என மெரிஞ்சிகே குறிப்பிட்டார்.

டொயோட்டா தற்போது இலங்கையின் இறக்குமதி வாகனச் சந்தையில் முன்னணியில் உள்ளது. ரைஸ் மற்றும் யாரிஸ் மொடல்கள் விற்பனையில் முதலிடத்தைப் பிடித்துள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

சிறிய வாகன பிரிவில் நிசான் (Nissan) பிராண்ட் விற்பனை வேகமாக உயர்ந்துள்ளதாகவும், ஆனால் சுசுகி வாகன் ஆர் (Suzuki Wagon R) மொடலில் புதிய பதிப்புகள் அறிமுகப்படுத்தப்படாததால் அதன் விற்பனை குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, மின்சார வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, தற்போது ஹோண்டா, வெசல் SUV பிரிவில் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளதாகவும் மெரிஞ்சிகே கூறினார்.

தாயாரின் ஆண் நண்பரால் சிறுமிக்கு சித்திரவதை : தமிழர் பகுதியில் சம்பவம்!!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் 5 வயது சிறுமி ஒருவரின் தாயாரின் ஆண் நண்பர் சிறுமிக்கு உடல் முழுக்க சூடு வைத்து அடித்து சித்திரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் சிறுமி படுகாயமடைந்த நிலையில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை (19) வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதுடன் சித்திரவதை செய்த சந்தேகநபர் தலைமறைவாகி யுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த திருமணம் முடித்து 5 வயது குழந்தை ஒன்றுக்குத் தாயான 23 வயதுப் பெண் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில், சிறுமியின் தாயார் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்குடா பகுதியைச் சேர்ந்த திருமணம் முடித்த ஆண் ஒருவருடன் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் குறித்த பெண்ணுக்கு கொழும்பில் வேலை பெற்றுத்தருவதாகத் தெரிவித்து குறித்த பெண்ணுடன் அவரது 5 வயது குழந்தையையும் கொழும்புக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கொழும்பில் தங்கியிருந்த விடுதியில் வைத்து அந்த நபர் , சிறுமிக்கு சூடு வைத்து அடித்து சித்திரவதை செய்துள்ளதையடுத்து சிறுமியின் வாய் மற்றும் கை ,கால், முதுகு உட்பட உடல் முழுக்க காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இதனையடுத்து சிறுமியுடன் தாயார் கொழும்பில் இருந்து மீண்டும் வீட்டுக்கு வந்த பின்னர் நேற்றுமுன்தினம் (19) சிறுமியை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் கொழும்பில் வைத்து தனக்கு அடித்துள்ளதாக சிறுமி தெரிவித்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, சிறுமிக்கு சூடு வைத்து அடித்த நபர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவித்த கொக்கட்டிச்சோலை பொலிஸார் , மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் மூன்று இலட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரையுடன் இளைஞர் கைது!!

வவுனியாவில் மூன்று இலட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் இன்று (20.10) தெரிவித்தனர்.

வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சோமரட்ண விஜயமுனி ஆலோசனையில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் விமல் பியரட்ண தலைமையிலான பொலிசார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே குறித்த போதை மாத்திரைக்கள் கைப்பற்றப்பட்டன.

வவுனியா, ஏ9 வீதி ஊடாக வவுனியா நகரை நோக்கி பயணித்த பொலிரோ ரக வாகனத்தை இ.போ.சபை சாலைக்கு அருகில் மறித்த பொலிசார் விசேட சோதனையை மேற்கொண்ட போது குறித்த வாகனத்தின் கருவாட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் போதை மாத்திரைகள் இருந்தமை கண்டு பிடிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த மாத்திரைகள் மற்றும் வாகனம் என்பன பொலிசாரால் கைப்பற்றப்பட்டதுடன் அதன் சாரதியும் கைது செய்யப்பட்டார்.

குறித்த வாகனத்தில் இருந்து மூன்று இலட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகள் மீட்கப்பட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞனும் கைது செய்யப்பட்டார்.

மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

ஆறாம் மாத நினைவஞ்சலி : அமரர். பொன்னுத்துரை உதயகுமாரன்!!

ஆறாம் மாத நினைவஞ்சலி : அமரர். பொன்னுத்துரை உதயகுமாரன்(குமார்)

மலர்வு : 17.10.1958 || உதிர்வு : 21.04.2025

பிறப்பிடம் : இணுவில் தெற்கு, யாழ்ப்பாணம்.

வசிப்பிடம் : இல- 18, பார்குழி வீதி, தோணிக்கல், வவுனியா.

ஆறாம் மாத நினைவில் எங்கள் அப்பா!!

அப்பா…!!
உங்கள் நகைச்சுவையான பேச்சைக் கேட்காததனால் எம் உலகம் வெறிச்சோடி இருக்கிறது…!

உங்கள் அறிவுரைகள் இல்லாமல் எம் வாழ்க்கை துடுப்பின்றி தத்தளிக்கின்றன படகைப் போல் இருக்கிறது..!!

“உங்கள் அப்பா மிக்க
நல்லவர்” – என உங்களைப்பற்றி
மற்றவர்கள் இன்றுவரை
சொல்லும் போது, கவலையையும் மீறிய கர்வம் எனக்குள்
எத்தனை பேருக்கு
கிடைக்காத அப்பா
எமக்கு மட்டும் கிடைத்திருக்கிறாறென..!!

அப்பா நீங்களா உயிரோடு இருந்தவரை
இழப்பு என்று எதுவுமில்லை.. – உங்கள்
இறப்புக்கு பின்
இழப்பதற்கு எதுவுமில்லை..!!

நெடுங்காலமாக எமக்காக உழைத்த நீங்கள் நிம்மதியாக ஓய்வெடுங்கள் அப்பா..!!

உங்கள் நினைவுகள் எம் இதயத்தில் அழியாத கவிதை…!!

கண்ணுக்குள் ஒளியாய்.. நெஞ்சத்தில் நினைவாய்.. இன்றைக்கும் என்றைக்கும் இறைவனாயிருந்து- எம்மை வழிநடத்திடுங்கள் அப்பா…!!

நீங்காத நினைவில்..
குடும்பத்தினர்.

 

பட்டா ரக வாகனம் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் காயம்!!

திருகோணமலை – மடத்தடி சந்தியில் பட்டா ரக வாகனம் மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்துச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) காலை இடம்பெற்றுள்ளது.

மடத்தடி சுற்றுவட்டத்தின் ஊடாக திருஞானசம்பந்தர் வீதிக்கு செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிள்மீது பிரதான வீதியின் வழியாக மடத்தடி சந்தியை நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் மோதியதில் இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்து இடம்பெற்ற இடத்தில் இருந்து சுமார் 15 மீற்றர் தூரம் மோட்டார் சைக்கிள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.

குறித்த விபத்துச் சம்பவத்தில் லிங்கநகர் பகுதியைச் சேர்ந்த தங்கராசா என்பவரே படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழர் பகுதியில் அதிகாலையில் நேர்ந்த விபத்து : மயிரிழையில் உயிர் தப்பிய தம்பதியினர்!!

திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆசாத்நகர் பகுதியில் காரொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது காரில் பயணித்த கணவன் மனைவி ஆகியோர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

இச் சம்பவம் திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் மின்சார சபையின் மின்கம்பங்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்பலகை என்பவற்றுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

அக்கரைப்பற்றில் இருந்து திருகோணமலைக்கு திருமண வீடொன்றுக்கு பயணித்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சாரதியின் தூக்க கலக்கமே விபத்துக்கான காரணமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் ஆழ்துளைக் கிணறுகள் : பிரதேச சபையின் அனுமதி அவசியம் : தவிசாளர்!!

வவுனியா தெற்கு தமிழ்பிரதேசசபை எல்லைக்குள் ஆழ்துளை கிணறுகளை அமைக்கும் போது பிரதேசசபையின் அனுமதியினையும் பெற்றுக்கொள்வதற்கான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபையின் தவிசாளர் பா.பாலேந்திரன் தெரிவித்தார்.

சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீரை பாதுகாக்கும் நிமித்தம் ஆழ்துளைகிணறுகள் அமைப்பதை தடைசெய்வது தொடர்பாக கடந்த சபை அமர்வில் கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய சில காணிகளில் பாறைகள் உள்ளமையால் சாதாரண கிணறுகள் அமைக்க முடியாத சந்தர்ப்பங்களும் பொதுமக்களுக்கு ஏற்ப்படுகின்றது. இதேவேளை சில பகுதிகளில் 200 அடிவரை ஆழ்துளை கிணறுகளை அமைக்கின்றனர். இவ்விடயங்கள் தொடர்பாக நாம் ஆராய்ந்துள்ளோம்.

எனவே இவற்றை கருத்தில்கொண்டு நிலத்தடி நீரை பாதுகாக்கும் நோக்குடன் இனிவரும் காலங்களில் சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் அமைப்பதாயின் பிரதேசசபையின் அனுமதியினையும் பெறுமாறு வலியுறுத்தி தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.

திருமணமாகி சில மாதங்களில் விபத்தொன்றில் பலியான இளைஞன்!!

புத்தளத்தில் திறக்கப்படவிருந்த மோட்டார் சைக்கிள் அறையை அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் புத்தளம் நகரைச் சேர்ந்த 24 வயதான தண்டநாராயண நவோத் கிம்ஹான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். புத்தளம் திலாடிய பகுதியில் மோட்டார் சைக்கிள் அறையை திறப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்.

இதன்போது, ​​அலங்காரத்திற்காக பயன்படுத்தப்படும் பலூன் வேறொரு இடத்தில் அமைந்துள்ள மின்சார கம்பியில் விழுந்ததில் மின்சாரம் தாக்கி இந்த இளைஞர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த இளைஞன் ஒரு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மின்சாரம் தாக்கி கடுமையாக பாதிக்கப்பட்ட இளைஞன் புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது ஏற்கனவே உயிரிழந்துளளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

காதலனுடன் சகோதரியை அழைத்து சென்ற காதலி பலி!!

கொழும்பு – குருநாகல் பிரதான வீதியின் வாரியகொட பகுதியில் இராணுவ கெப் வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில் 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் பலத்த காயங்களுடன் வாரகாபொல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் அலவ்வ பகுதியை சேர்ந்த இஷாரா தேவிந்தி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்து நடந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளில் மூன்று பேர் பயணித்துள்ளனர். நடுவில் இருந்த மாணவி விபத்தில் உயிரிழந்தாக தெரிவிக்கப்படுகிறது.

அலவ்வவிலிருந்து வரகாபொல நோக்கிச் சென்ற இராணுவ கெப் வண்டி, வரகாபொலவிலிருந்து அலவ்வ நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

வண்டியை ஓட்டி வந்த இராணுவ கோப்ரலும் காயமடைந்த நிலையில் வரகாபொல ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த மாணவி தனது காதலனுடன் திருமணத்திற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்ததாகவும், வழியில் தனது சகோதரனையும் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கு ஏற்பட்ட நித்திரையால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்த மாணவியின் உடல் வரகாபொல ஆதார மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் ஈழத்து சிறுமிக்கு கிடைத்த அங்கீகாரம்!!

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடைபெற்ற “International Art & Heart Film Festival – 2025” சர்வதேச குறுந்திரைப்பட விழாவில், மன்னாரைச் சேர்ந்த இளைஞர் கவிவர்மன் இயக்கிய “மடமை தகர்” எனும் குறுந்திரைப்படம் பெருமை சேர்த்துள்ளது.

இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரமாக நடித்த மன்னார் ஓலைத்தொடுவாய், சின்ன கரிசல் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ரஞ்சித் குருஸ் சுவேதா, “Best Monologue” என்ற விருதை வென்றுள்ளார்.

தற்கொலை என்பது ஒரு தீர்வல்ல என்பதை மையக்கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட “மடமை தகர்” குறுந்திரைப்படம், இதற்கு முன் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற சர்வதேச குறுந்திரைப்பட விழாவில் “சிறந்த இயக்குநர்” என்ற விருதையும் வென்றிருந்தது.

இப்போது மீண்டும் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளதால், மன்னார் மண்ணைச் சேர்ந்த இளம் திறமைசாலிகளுக்கு பெருமை சேர்த்துள்ளது.

சினிமா துறையில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற மன்னாரைச் சேர்ந்த சிறுமி சுவேதா, இவ்விருதின் மூலம் முதன்முறையாக ஒரு சர்வதேச நாட்டில் சிறந்த நடிப்பிற்கான விருதை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் ஒரே நாளில் சடுதியாக குறைந்த தங்கத்தின் விலை!!

நாட்டில் தற்போது தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஒப்பிடுகையில் பாரிய உச்சத்தை அடைந்து வருகின்றது. இதன்படி, இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றைய (17) தினத்துடன் ஒப்பிடும்போது ரூ.20,000 குறைந்துள்ளது.

அதன்படி, இன்று (18.10.2025) காலை கொழும்பு ஹெட்டியார் தெரு தங்கச்சந்தையில் ஒரு பவுண் “22 கரட்” தங்கத்தின் விலை ரூ.360,800 ஆக குறைந்துள்ளது. நேற்று, ரூ.379,200 என விலை நிர்ணயிக்கப்பட்டது.

இதற்கிடையில், நேற்று (17) ரூ.410,000 ஆக இருந்த “24 கரட்” தங்கத்தின் விலை இன்று ரூ.390,000 ஆக குறைந்துள்ளதாக கொழும்பு தங்கச்சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 4,230 அமெரிக்க டொலரை அடைந்துள்ளமையினால் இவ்வாறு தங்கம் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

கோர விபத்தில் ஒருவர் பலி : மூவர் காயம்!!

அநுராதபுரத்தில் கெப்பித்திகொல்லேவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹநெட்டியாவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக கெப்பித்திகொல்லேவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (17) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கெப்பித்திகொல்லாவ நோக்கிப் பயணித்த கெப் வாகனம் ஒன்று காருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது காரின் சாரதியும் அதில் பயணித்த இருவரும் கெப் வாகனத்தின் சாரதியும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கார் சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் எடவீரகொல்லேவ பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் ஆவார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கெப்பித்திகொல்லேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சொகுசுப் பேரூந்து – கார் மோதி விபத்து!!

புத்தளத்தில் ஆனமடு – நவகத்தேகம் வீதியில் பொத்திக்கட்டுவ கால்வாய்க்கு அருகில் உள்ள பாலத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று சனிக்கிழமை (18) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சொகுசு பஸ் ஒன்று காருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது சொகுசு பஸ்ஸின் சாரதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

இலங்கையில் பல மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய, வட-மத்திய, சபரகமுவ, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

இன்று இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும் வகையில், இந்த எச்சரிக்கையின்படி, 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 11 மாவட்டங்களுக்கு இளம் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே மின்னல் நடவடிக்கைகளால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இலங்கையில் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்த வகையில் இன்று மேற்கு, சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீட்டருக்கு மேல் கனமழை பெய்யக்கூடும்.

எனவே, இடியுடன் கூடிய மழை பெய்யும் போது கனமழை, பலத்த காற்று மற்றும் பலத்த மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

திடீரென்று நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல் : 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலி!!

பாகிஸ்தான் எல்லைக்கு அருகே நடந்த வான்வழித் தாக்குதலில் 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பக்திகா மாகாணத்தில், பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஷரானா என்ற இடத்தில், அடுத்த மாதம் பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் நடைபெறவிருந்த முத்தரப்பு கிரிக்கெட் தொடருக்காக, ஆப்கானிஸ்தான் வீரர்கள் தயாராகி வந்தனர்.

இந்த நிலையில், உர்குன் மாவட்டத்தைச் சேர்ந்த கபீர், சிப்கத்துல்லா மற்றும் ஹாரூன் ஆகிய மூன்று கிரிக்கெட் வீரர்கள், பயிற்சி முடிந்து தங்களது சொந்த ஊரான உர்குனுக்குத் திரும்பியுள்ளனர். அங்கு, அவர்கள் ஒரு கூட்டத்தில் பங்கேற்றிருந்தபோது, பாகிஸ்தான் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

“பாகிஸ்தான் ஆட்சியாளர்களால் நடத்தப்பட்ட இந்த கோழைத்தனமான தாக்குதலில்,” இந்த மூன்று வீரர்களுடன் மேலும் ஐந்து பேரும் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை (ACB) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தத் துயரச் சம்பவத்திற்குத் தனது கடும் கண்டனத்தைத் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

“பக்திகா மாகாணத்தைச் சேர்ந்த எங்களது துணிச்சலான கிரிக்கெட் வீரர்களின் சோகமான மரணத்திற்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை தனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது,” என்று ACB தனது (X) பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இதனையடுத்து, அடுத்த மாதம் பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் நடைபெறவிருந்த முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை (ACB) அறிவித்துள்ளது.

இருப்பினும், சில ஊடக அறிக்கைகளின்படி, கிரிக்கெட் வீரர்கள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டதாகவும், நான்கு பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் குறித்த மேலதிக விபரங்களை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை வழங்கவில்லை.”

பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில்”, அடுத்த மாதம் நவம்பர் 17 முதல் 29 வரை ராவல்பிண்டி மற்றும் லஹோரில் நடைபெறவுள்ள முத்தரப்பு T20I தொடரில் இருந்து விலகுவதற்கு முடிவெடுத்ததாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை கூறியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே சமீபத்தில் ஏற்பட்ட எல்லை மோதல்களைத் தொடர்ந்து, 48 மணி நேரப் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்தது. ஆனால், அந்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் இந்த வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக ஆப்கானிஸ்தான் அரசு குற்றம் சாட்டியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தைத் தணிப்பதற்காக தோஹாவில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவரும் நிலையில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம், ஆப்கானிஸ்தான் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் பெரும் கோபத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பஸல்ஹக் ஃபரூக்கி, முகமது நபி, ரசித் கான் ஆகியோர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

இந்தத் துயரச் சம்பவத்தால், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் உலகம் ஈடுசெய்ய முடியாத ஒரு இழப்பைச் சந்தித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) இதுவரை இந்த விவகாரத்தில் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வந்தி கைதின் பின்னணி : பொலிசாரின் கவனத்தை திசைதிருப்ப வகுத்த இரகசிய திட்டம்!!

கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ‘கணேமுல்லை சஞ்சீவ’ என்ற பாதாள உலக கும்பல் உறுப்பினரின் கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி கடந்த மே மாதம் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இடம்பெற்ற காலப்பகுதியில் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு தப்பிச்சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

‘கனேமுல்லை சஞ்சீவ’ கொலை செய்யப்பட்டதன் பின்னர் சுமார் மூன்று மாதங்களாக அவர் நாட்டினுள் ஒழிந்திருந்ததாகவும் இஷாரா செவ்வந்தி விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தின் பக்கம் பாதுகாப்பு அதிகாரிகளின் கவனம் திசை திரும்பியிருந்த போது, குறித்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

மித்தெனியவிலிருந்து தற்போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுபுன் என்னும் அரச அதிகாரியுடன் யாழ்ப்பாணத்துக்குச் சென்று அங்கிருந்து ஜே.கே. பாய் எனப்படும் கெனடி செபஸ்தியன் பிள்ளையுடன் மீன்பிடி படகின் மூலம் இந்தியாவுக்கு தப்பிச்சென்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் இஷாரா செவ்வந்தி நாட்டினுள் தலைமறைவாகியிருந்த காலப்பகுதியில் அவருக்கு அடைக்கலம் கொடுத்த பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட சந்தேகநபர்கள் மூவர் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பக்தபூர் திப்பஸ் பார்க் பிரதேசத்தில் வைத்து செவ்வந்தி உட்பட மேலும் ஐந்து சந்தேகநபர்கள் கடந்த 13 ஆம் திகதி கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.

நேபாளத்தில் அழைத்துவரப்பட்ட 6 பேரில், இஷாரா செவ்வந்தி (26), டம்மி இஷாரா என அறியப்படும் தக்ஷி நந்தகுமார் (23), ஜே.கே. பாய் எனப்படும் கெனடி செபஸ்தியன் பிள்ளை (35), ஜப்னா சுரேஷ் எனப்படும் ஜீவதாசன் கனகராசா ஆகியோரிடம் சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.