டுபாயிலிருந்து வந்த இலங்கையர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!!

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 69 வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால், இன்று (13) காலை இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று (13) அதிகாலை 12.30 மணிக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் EK – 648 மூலம் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.

இதன்போது கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளுக்கமைய, கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மினுவங்கொடை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

மேலும் சந்தேகநபர் மற்றும் அவர் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த விமதுபான போத்தல்களுடன் (12/15 ) திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமானநிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.

அநுர அரசின் அதிரடி நடவடிக்கை : கோடிக்கணக்கான சொத்துகள், 354 பவுன், வாகனங்கள் பறிமுதல்!!

அநுர அரசாங்கத்தின் கீழ் சட்டவிரோதமான முறையில் பெற்றப்பட்ட சொத்துக்கள் மற்றும் உடமைகளை அரச சொத்தமாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஆரம்பகட்ட ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்தார்.

நாட்டில் திட்டமிட்ட குற்றவாளிகளால் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்களைத் தடை செய்வதற்கும், அவற்றை அரசுடமையாக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களில் 354 பவுன் தங்கம், 77 வாகனங்கள், 35 கோடி ரூபா பணம் மற்றும் ஒரு கோடி ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான பல்வேறு சொத்துக்களை அரசுடமையாக்கப்படவுள்ளது.

இதில் 2024ஆம் ஆண்டில் மாத்திரம் 150 பவுன் தங்கம், 64 வாகனங்கள், 6 கோடி ரூபா பணம் மற்றும் 61 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் அரசுடமையாக்குவதற்காகத் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளன.

2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 204 பவுன் தங்கம், 13 வாகனங்கள், 67 கோடியே 78 இலட்சம் ரூபா பெறுமதியான காணி மற்றும் ஏனைய சொத்துக்கள், மற்றும் 18 வீடுகள் எனச் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட பெருமளவிலான சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

வவுனியா விபத்தில் உயிரிழந்த இளைஞனின் உடல் உறுப்புக்கள் தானம் : இருவருக்கு கிடைத்த வாழ்க்கை!!

வவுனியாவில் விபத்தில் உயிரிழந்த தமிழ் இளைஞனின் உடல் உறுப்புக்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளதாக யாழ் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கடந்த எட்டாம் திகதி சம்பவித்த விபத்தில் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த ரவிராஜ் ராஜ்கிரன் விபத்தில் சிக்கிக் கொண்டார். எந்த முன்னறிவிப்பும் இன்றி அவரது தலையில் ஏற்பட்ட கடுமையான அடிபட்ட காயம் காரணமாக அவர் மயக்கநிலைக்கு தள்ளப்பட்டார்.

உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

யாழ்ப்பாணத்தில் சிடி ஸ்கான் உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. தலையில் ஏற்பட்ட காயம் கடுமையான வீக்கம் மற்றும் உள்இரத்தக் கசிவுகளை ஏற்படுத்தியிருந்தது என்பதும் நரம்பு சத்திர மருத்துவர்க மூலம் உறுதிசெய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவர் யாழ் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு, உயிரை காக்க தேவையான அனைத்து சிகிச்சைகளும் தொடர்ச்சியாக வழங்கப்பட்டன.

ஆனால், மருத்துவர், தாதியர் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் முழு முயற்சியையும் எடுத்தபோதிலும், தலையில் ஏற்பட்ட கடுமையான காயத்தின் தாக்கத்தை தாங்க முடியாமல், அவரது மூளைச் செயற்பாடுகள் படிப்படியாக குறைந்து, இறுதியில் மூளை இறப்பு உறுதிசெய்யப்பட்டது.

இந்த இக்கட்டான நிலையிலும் அவர்களின் குடும்பத்தினர் அவரது இரண்டு சிறுநீரகங்களையும் தானம் செய்ய முன் வந்தனர். இதனிடையே இலங்கையில் சிறுநீரக செயலிழப்பால் மாற்றுச் சிறுநீரகத்திற்காக பலர் உயிர்ப்போராட்டத்தில் இருக்கின்றனர்.

அந்தநிலையில், மரணமடைந்த இளைஞனின் இரண்டு சிறுநீரகங்களையும் மருத்துவக் குழு இன்று வெற்றிகரமாக சத்திரசிகிச்சை மூலம் அகற்றி, அவை இரண்டு நோயாளிகளுக்கு மாற்று சிறுநீரகமாக வெற்றிகரமாக பொருத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரிடரின் போது பலரின் உயிர்களை காப்பாற்றிய இளம் யுவதி திடீரென மரணம்!!

அண்மையில் ஏற்பட்ட பேரிடரின் போது பலரின் உயிரை காப்பாற்றிய இளம் யுவதி ஒருவர் திடீரென உயிரிழந்தமை அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

களனி கங்கையின் ராணியாக முடிசூட்டப்பட்ட சேதவத்தை, கோட்விலாவைச் சேர்ந்த யுவதியான ஓஷாதி வியாமா என்பவரே இவ்வாறு உயிரிந்துள்ளார்.

நேற்றையதினம் திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. கொழும்பு விசாகா வித்தியாலயத்தில் படித்து வந்த அவர் 19 வயதில் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

சமீபத்திய வெள்ளத்தின் போது இடம்பெயர்ந்த தனது அண்டை வீட்டு மக்களை காப்பாற்றவும், அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் கொண்டு செல்ல, இரவுபகலாக படகில் பணியாற்றி, பெரிய தியாகத்தை செய்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளார்.

ஓஷாதி தனது 3 வயதிலிருந்தே நீச்சல் கற்றுக்கொண்டார். குறித்த யுவதி தனது 7 வயதில் 14 நிமிடங்கள் 41 வினாடிகளில் களனி ஆற்றின் குறுக்கே 1000 மீட்டர் நீந்தி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.

ஓஷாதியின் சாதனையை காண கிராமவாசிகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் அன்றையதினம் களனி ஆற்றின் இருபுறமும் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

திருக்கோவில் விபத்தில் யாழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு!!

அம்பாறை திருக்கோவில் பொத்துவில் பிரதான வீதியில் வாகன விபத்து விநாயகபுரம் பகுதியை சேர்ந்த பொலிஸ் உத்தியோத்தர் உயிரிழந்துள்ளார்.

திருக்கோவில் காஞ்சரன்குடா அண்மித்த பகுதியில் நேற்று முன் தினம் (10) இரவு இடம்பெற்ற வாகனவிபத்தில் பொலிஸ் உத்தியோத்தர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பொலிஸ் உத்தியோத்தர் பத்பநாதன் யதர்ஷன் (வயது-31) என்பவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

பிரதேச வீதியில் முச்சக்கர வண்டி ஒன்று வேக கட்டு பட்டை இழந்து வீதியில் கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ள தாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸ்சார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

கரையொதுங்கிய 2 டன் ராட்சத சுறா : படையெடுக்கும் மக்கள்!!

தமிழகத்தின் கன்னியாகுமரி, கீழ் மிடாலம் கடற்கரை பகுதியில் 2 டன் எடை கொண்ட ராட்சத புள்ளி சுறா கரையொதுங்கியுள்ளது. குறித்த பகுதி மீனவர்கள் வீசிய கரைமடி வலையில் சிக்கி இறந்த நிலையில் குறித்த சுறா மீன் கரையொதுங்கியுள்ளது.

குறித்த சுறா மீனை பார்வையிட்ட மீனவர்கள் அந்த மீனுடன் நின்று புகைப்படங்களைப் பதிவு செய்துள்ளனர். அத்துடன் சுறா மீனை அந்தப் பகுதி மக்களும் பள்ளி மாணவ மாணவிகளும் ஆர்வமுடன் பார்த்து புகைப்படங்கள் எடுத்துள்ளனர்.

2 டன் எடை கொண்ட சுறா மீனைப் பார்த்ததும் மாணவர்கள், குழந்தைகள் ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்ந்துள்ளனர். சுறா மீனுடன் மாணவர்களும் பொதுமக்களும் ஓடிச் சென்று புகைப்படம் எடுக்கும் காணொளி வைரலாகி வருகின்றது.

பாரிய விபத்தில் இருந்து பயணிகளின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர்!!

பதுளையிலிருந்து இன்று காலை அனுராதபுரம் நோக்கிச் சென்ற கெகிராவ இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் ஓட்டுநர், 14 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளார்.

பதுளையில் இருந்து புறப்பட்ட பேருந்து, பதுளை-மஹியங்கனை வீதிக்கு சென்று கொண்டிருந்தபோது, ​​பதுளையில் உள்ள துன்ஹிந்த வளைவுக்கு அருகில் பேருந்தின் பிரேக்குகள் செயலிழந்துள்ளது.

உடனடியாக பேருந்தினை பாதுகாப்பு துணின் மீது மோதுண்டு நிறுத்தியதாக ஓட்டுநர் ஜனக துஷார தெரிவித்தார். இதன்போது அனைத்து பயணிகளின் உயிரையும் எந்த காயமும் இல்லாமல் காப்பாற்றியுள்ளார்.

அவ்வாறு செய்யாதிருந்தால் ஆயிரக்கணக்கான அடி உயரமுள்ள ஒரு பாறையில் விழுந்து பெரிய விபத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயணிகளை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளுமாறு பேருந்து நடத்துனரிடம் கூறியதனையடுத்து ஓட்டுநர் பேருந்தை அணைக்குள் இழுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீதியில் கடந்த காலங்களில் பல ஆபத்தான விபத்துகள் நடந்துள்ளன, மேலும் அவை அனைத்தும் பிரேக் குறைபாடுகளால் ஏற்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் காதலிகளை குஷிப்படுத்துவதற்காக திருட்டில் ஈடுபட்ட இளைஞன்!!

தனது காதலிகளுக்கு பரிசுகளை வழங்கவும், ஒன்லைனில் பணத்தை முதலீடு செய்யவும் திருட்டில் ஈடுபட்ட 18 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள ஒரு சுப்பர் மார்க்கெட்டில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். இதன்போது, ​​உறவினர் ஒருவரின் வீட்டில் இருந்து திருடப்பட்ட 61 இரத்தினக் கற்கள் அவரது வசம் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருடப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி தனது காதலியான 27 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் மற்றும் டிக்டோக் மூலம் அவர் அடையாளம் கண்ட இரண்டு காதலிகளுக்கு கையடக்க தொலைபேசி வழங்கியதும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இலங்கை புகையிரத சேவையில் இனி பெண்களுக்கும் வேலை!!

இலங்கை ரயில் சேவையில் உள்ள அனைத்து பதவிகளுக்கும் பெண்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (12) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

இலங்கை ரயில் சேவையின் ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு பெண்கள் விண்ணப்பிப்பதைத் தடுத்து வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி, இரண்டு பெண்களால் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி இந்த அறிவிப்பை விடுத்தார்.

இலங்கையில் மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!!

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ள அதேவேளை, அதற்கு இணையாக உள்நாட்டு தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. இன்றைய தினம் (12.12.2025) உலக தங்க விலை 4,266 டொலராக அதிகரித்துள்ளது.

உள்நாட்டு தங்க விலை நேற்றுடன் (11) ஒப்பிடுகையில் இன்று (12) 3,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது. அதற்கமைய, இன்று காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் “22 கரட்” தங்கப் பவுன் ஒன்றின் விலை 312,000 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் இதன் விலை 309,200 ரூபாவாக காணப்பட்டது. இதேவேளை, நேற்று 336,000 ரூபாவாகக் காணப்பட்ட “24 கரட்” தங்கப் பவுன் ஒன்றின் விலை இன்று 339,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நுவரெலியாவுக்கு இரவில் செல்ல வேண்டாம்!!

நுவரெலியாவுக்குச் செல்லும் எந்தவொரு வீதியிலும் இரவு நேரங்களில் வாகனங்களை செலுத்த வேண்டாம் என நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் அறிவுறுத்தியுள்ளார்.

நேற்று (11.12.2025) நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

கம்பளை – நுவரெலியா பிரதான வீதியின் கட்டுகிந்துல பகுதியிலிருந்து போக்குவரத்துக்கு திறக்கப்பட்ட பிரதான வீதியில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. நிலவும் வானிலை காரணமாக வீதிகளில் மேலும் மண் மேடுகள் சரிந்து விழும் அபாயம் உள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் ‘தித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உணவுப் பொருட்கள் உட்பட தேவையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தை சங்கடப்படுத்தும் நோக்கில் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படாத சிலர் கூறும் சில அறிக்கைகளில் எந்த உண்மையும் இல்லை எனவும் நுவரெலியா மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

தமிழர் பகுதியில் அதிகாலையில் நேர்ந்த விபத்து : குடைசாய்ந்த கப்ரக வாகனம்!!

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை கோழிகளை ஏற்றிவந்த கப் ரக வாகனம், மாட்டுடன் மோதி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

கோழிகளை ஏற்றிக்கொண்டு கல்முனை சாலை வழியே கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த குறித்த வாகனம் புதுக்குடியிருப்பு பகுதியூடாக பயணிக்கும் போது வீதியில் நின்ற மாட்டுடன் மோதி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் சிக்கிய மாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு கோழிகளை ஏற்றிவந்த வாகனத்தில் பயணித்தோரும் காயமடைந்துள்ளனர்.

இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கடுமையான மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!

களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு இன்று (12) மதியம் 12.30 மணிக்கு வெளியிடப்பட்டதுடன், இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, ​​அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்னலால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வானிலை ஆய்வு மையம் பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றது.

பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு கல்வியமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

அனர்த்த நிலைமை காரணமாக தங்கள் இருப்பிடத்தை மாற்றியுள்ள மாணவர்களுக்கு, வசதியான பரீட்சை மண்டபங்களில் பரீட்சை எழுதும் வாய்ப்பை வழங்க பரீட்சை திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

பரீட்சை திகதிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கை பரீட்சை திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட வேண்டும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக லியனகே தெரிவித்துள்ளார்.

பாடசாலை விண்ணப்பதாரியின் இருப்பிடம் மாற்றப்பட்டிருந்தால் அதிபர், வலயக் கல்வி பணிப்பாளர் மூலம் பரீட்சை திணைக்களத்திற்கு அறிவிக்கலாம்.

தனியார் விண்ணப்பதாரராக இருந்தால், அவர்கள் பரீட்சை திணைக்களத்தின் தொடர்பு இலக்கமாக 1911 அல்லது 0112784537, 0112786616, 0112784208 என்ற தொலைபேசி எண்களுக்கு அழைத்து அவர்களுக்குத் தெரிவிக்கலாம் என ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஒரு பாடசாலை அல்லது தனியார் விண்ணப்பதாரரின் தேர்வு அனுமதி அட்டை தொலைந்து போயிருந்தால், www.doenets.lk என்ற வலைத்தளத்திலிருந்து அதனை பதிவிறக்கம் செய்யலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை விண்ணப்பதாரர்கள் அதை அதிபர் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். தனியார் விண்ணப்பதாரர்கள் நேரில் அனுமதி அட்டைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஒரு மாணவரின் அடையாள அட்டை தொலைந்து போயிருந்தால், அவர்கள் இரண்டு கடவுச்சீட்டு அளவிலான புகைப்படங்களில் அதிபர் மற்றும் வலய கல்வி பணிப்பாளரின் கையொப்பத்தைப் பெறலாம்.

ஒரு தனியார் விண்ணப்பதாரராக இருந்தால், அவர்கள் புகைப்படங்களில் கிராம அலுவலர் மற்றும் பிரதேச செயலாளரால் கையொப்பமிடப்பட்டு, அவற்றை தற்காலிக அடையாள அட்டைகளாகப் பயன்படுத்தலாம்.

பரீட்சை எழுதும் மாணவர்களின் பாடகுறிப்புகள் தொலைந்து போயிருந்தால், சமூகத்தில் உள்ளவர்கள் அவர்களுக்கு உதவுவது பொருத்தமானது என்பதையும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெளிவுபடுத்தியுள்ளார்.

இலங்கை இன்னும் ஆபத்தான நிலையில் : விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!!

நாட்டின் 4 மாவட்டங்களில் உள்ள 33 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு வழங்கப்பட்ட நிலச்சரிவு வெளியேற்ற சிவப்பு அறிவிப்புகளை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO)நீட்டித்துள்ளது.

கடந்த சில நாட்களாக பதுளை மற்றும் கண்டி மாவட்டங்களில் சில இடங்களில் 75 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்ததால் இந்த நிலச்சரிவு சிவப்பு அறிவிப்புகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) மூத்த புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

மீகஹகிவுல மற்றும் டெமோதர பகுதிகளில் நேற்று (11) நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தொடர்புடைய பகுதிகளில் ஆபத்தான சூழ்நிலை இருப்பதால், வானிலை முன்னறிவிப்பைக் கருத்தில் கொண்டு, நிலை 2 இன் கீழ் வழங்கப்பட்ட நிலச்சரிவு எச்சரிக்கை, 5 மாவட்டங்களில் உள்ள 38 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் நடைமுறையில் உள்ளது.

மேலும், நிலை 1 இன் கீழ் வழங்கப்பட்ட நிலச்சரிவு எச்சரிக்கை மூன்று மாவட்டங்களில் உள்ள 17 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

இந்த எச்சரிக்கைகள் மாறக்கூடும் என்பதால், சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே பல உயிர்கள் பலியாகியுள்ள சூழலில், பேரிடர் மேலாண்மை மையம், நீர்ப்பாசனத் துறை, கட்டிட ஆராய்ச்சி நஜறுவனம் அல்லது வானிலை ஆய்வு நிலையம் ஆகியவற்றால் வெளியிடப்பட்ட எச்சரிக்கைகளுக்கு மக்கள் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்றும்,

இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை மீண்டும் ஏற்படாமல் தடுக்க வழங்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றுமாறு மக்களை வலியுறுத்தியுள்ளார்.

நவம்பர் 20 ஆம் திகதி முதல் இன்று (12) வரை, ஆபத்தான இடங்களை ஆராய தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திற்கு 2,716 கோரிக்கைகள் வந்துள்ளன, அவற்றில் 589 கோரிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

நாட்டில் தற்போது நிலவும் பேரிடர் சூழ்நிலையில் செய்ய வேண்டிய சிறந்த விஷயம், தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து பாதுகாப்பான இடத்தில் தங்குவது தான்.

வார இறுதி சுற்றுலா செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மக்களிடமிருந்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பல தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

நாடு இன்னும் ஆபத்தான நிலையில் இருப்பதால், “இது சுற்றுலா செல்வதற்கான வாய்ப்பல்ல… நாம் ஆபத்தான சூழ்நிலையில் இருக்கிறோம்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கோர விபத்து : பேருந்து கவிழ்ந்ததில் 9 பேர் பலி!!

இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் இன்று (12) காலை ஏற்பட்ட பேருந்து விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அல்லூரி மாவட்டத்தில் உள்ள ஒரு மலைப் பகுதியில் பயணித்த பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சரிவில் கவிழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் இரண்டு ஓட்டுநர்கள் மற்றும் பல உதவியாளர்கள் உட்பட 35 பேர் இருந்தனர்.

காட்டுப் பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து, ஒரு வளைவில் பயணித்துக் கொண்டிருந்தபோது வீதியை விட்டு விலகி விபத்தில் சிக்கியுள்ளது.

விபத்து நடந்த நேரத்தில் கடும் மூடுபனி இருந்ததாகவும், இதன் விளைவாக, பேருந்து ஓட்டுநருக்கு விபத்து நடந்த இடத்தில் ஒரு வளைவைப் பார்க்க முடியாமல் போயிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க முடிவு செய்துள்ளார்.

காயமடைந்தவர்களுக்கு உள்ளூர் பணத்தில் 50,000 ரூபாய் வழங்கவும் இந்திய அரசு முடிவு செய்துள்ளது.