வவுனியாவில் வீதிகளில் திரிந்த கால்நடைகள் செட்டிகுளம் பிரதேச சபையினால் கையகப்படுத்தல் : உரிமையாளர்களுக்கு அவசர அறிவித்தல்!!

வவுனியா செட்டிகுளம் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக வீதிகளில் திரிந்த பெருமளவிலான கட்டாக்காலி கால்நடைகள் பிரதேச சபையினால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

நேற்று (10.05.2026) மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் மூலம் இந்த கால்நடைகள் பிடிக்கப்பட்டுள்ளதாக வெங்கலசெட்டிகுளம் பிரதேச சபை தவிசாளர் அறிவித்துள்ளார்.

செட்டிகுளம் , சின்னசிப்பிக்குளம், முதலியார்குளம் மற்றும் ஆனைவிழுந்தான் ஆகிய பிரதான வீதிகளில் அலைந்து திரிந்த கால்நடைகளே இவ்வாறு பிடிக்கப்பட்டுள்ளன.

இவை தற்போது சின்னசிப்பிக்குளம், ஆனைவிழுந்தான் மற்றும் வெங்கலசெட்டிகுளம் ஆகிய பிரதேச சபை வளாகங்களில் கட்டிவைக்கப்பட்டுள்ளன.

கால்நடைகளின் உரிமையாளர்கள் அவற்றுக்கான உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து, சட்டரீதியான தண்டப்பணத்தைச் செலுத்தித் தமது கால்நடைகளை மீளப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கால்நடைகள் உரிமையாளர்களினால் பத்து நாட்களுக்குள் மீளப் பெறப்படாவிட்டால், 1987ஆம் ஆண்டு 15ம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின்படி அவை அரசுடமையாக்கப்படும். அவ்வாறு அரசுடமையாக்கப்படும் கால்நடைகள் பின்னர் பகிரங்க ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் என சபை அறிவித்துள்ளது.

மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள விரும்பும் உரிமையாளர்கள் 024-2260914 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகத் தொடர்புகொள்ளுமாறு பிரதேச சபையினர் தெரிவித்துள்ளனர்.

ஒரே மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணியாமல் மாஸ் காட்டிய 3 யுவதிகளுக்கு நேர்ந்த சோகம்!!

தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று யுவதிகளின் வீடியோ கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வந்தது.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசேட விசாரணையை ஆரம்பித்திருந்த நிலையில், மூன்று சந்தேகநபர்களையும் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

தொடர்ந்து, மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற யுவதியையும், அந்த மோட்டார் சைக்கிளையும் புத்தல பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன், மோட்டார் சைக்கிளின் உரிமையாளருக்கு எதிராகவும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட சந்தேகநபர்கள் ஹிதிகிவுல, உனவடுன மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், மோட்டார் சைக்கிளை ஓட்டிய யுவதியிடம் ஓட்டுநர் உரிமம் கூட இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட யுவதி இன்று (11) வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

அடுத்த 48 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!!

இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் நிலவும் தளம்பல் நிலை, அடுத்த 48 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (11) தெரிவித்துள்ளது.

இன்று (11) இரவு 11.30 மணி வரை இந்த அறிக்கை அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, குறித்த பிரதேசங்களில் இன்று பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும்.

இதன் காரணமாக, நாடு முழுவதும் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்குத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

மேல், சபரகமுவ, மத்திய, தெற்கு, வடமேல் மற்றும் வட மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதோடு, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

பெற்றோல் இல்லை, தங்கம் வாங்க வேண்டாம் : இந்திய பிரதமர் அதிரடி!!

மேற்கு ஆசிய நெருக்கடியின் பின்னணியில், பெற்றோலியப் பொருட்களைக் கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் என கூறிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மக்கள் தங்கம் வாங்குவதை குறைத்துக்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

நேற்று (10)தெலுங்கானாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி மற்றும் தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி,

இறக்குமதி செய்யப்படும் பெற்றோலியப் பொருட்களைத் தேவைக்கேற்ப மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும்,

இது அந்நியச் செலாவணியைச் சேமிப்பது மட்டுமல்லாமல், போரினால் ஏற்படும் மோசமான பாதிப்புகளைக் குறைக்கவும் உதவும் என்றும் கூறினார்.

கடந்த சில ஆண்டுகளில் சூரிய சக்தி உற்பத்தியில் இந்தியா உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாகத் திகழ்வதைக் குறிப்பிட்ட அவர், பெற்றோலில் எத்தனால் கலப்பதில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

முதலில் 100 சதவீத எல்பிஜி (LPG) இணைப்பை வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியது, தற்போது குறைந்த விலையில் குழாய் மூலம் எரிவாயு வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது.

சிஎன்ஜி (CNG) அடிப்படையிலான அமைப்பையும் அரசாங்கம் ஊக்குவித்து வருகிறது. இத்தகைய முயற்சிகளால், உலகில் நிலவும் பெரும் எரிசக்தி நெருக்கடியை இந்தியா சமாளித்து வருவதாக அவர் கூறினார்.

இன்றைய சூழலில் பெற்றோல், எரிவாயு, டீசல் போன்றவற்றை மிகுந்த கட்டுப்பாட்டுடன் பயன்படுத்துவது காலத்தின் தேவையாக உள்ளது. இறக்குமதி செய்யப்படும் பெற்றோலியப் பொருட்களைத் தேவைக்கேற்ப மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இது அந்நியச் செலாவணியைச் சேமிப்பதோடு, போரின் பாதிப்புகளையும் குறைக்கும்,” என்று அவர் தெரிவித்தார்.

அதேபோல், போக்குவரத்தைக் குறைக்க தனியார் நிறுவனங்கள் மீண்டும் Work from Home முறையைச் செயல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

மெட்ரோ ரயில் வசதி உள்ள நகரங்களில் பொதுமக்கள் அதனைப் பயன்படுத்த வேண்டும். சர்வதேச சந்தையில் பெற்றோல், டீசல் விலை உயர்ந்துள்ளதால், அவற்றை வாங்குவதற்காகச் செலவிடப்படும் அந்நியச் செலாவணியைச் சேமிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை.

நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பைப் பாதுகாக்க, தங்கம் வாங்குவதை மக்கள் ஓராண்டு குறைக்க வேண்டும் எனவும் மோடி வலியுறுத்தினார். முன்பு போர் காலங்களில் மக்கள் தங்கத்தை தானமாக வழங்கினர்.

இன்று தானம் தேவையில்லை, ஆனால் அடுத்த ஒரு ஆண்டிற்கு அவசியமின்றி தங்கம் வாங்க மாட்டோம் என்ற உறுதிமொழியை ஏற்க வேண்டும்” என்றும் இதம்ன்போது பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

தமிழர் பகுதி வயல் வெளியில் சடலம் மீட்பு : பொலிசார் தீவிர விசாரணை!!

மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி, சின்னவத்தை பிரதேசத்தில் உள்ள வயல் நிலமொன்றில் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்து கிடப்பதாக வெல்லாவெளி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

குறித்த நபர் கடந்த 08 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்தவர் என்பது இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் சின்னவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழப்புக்கான காரணம் வெளியாகத நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் : இலங்கையிலும் சடுதியாக அதிகரிக்கவுள்ள விலை!!

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் மத்திய கிழக்கில் போர் சூழல் காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று (11) கணிசமாக அதிகரித்துள்ளன.

சமீபத்திய அறிக்கைகளின்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,700 – 4,730 அமெரிக்க டொலராகவும், ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 80 – 90 அமெரிக்க டொலராகவும் அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள விலை உயர்வின் காரணமாக இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அமெரிக்க டொலரின் மதிப்பு வலுவடைதல் மற்றும் சர்வதேச அரசியல் சூழலில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணிகளாக கருதப்படுகின்றன.

இந்த நிலையில், இலங்கையில் 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 393,050 ரூபாவாகவும், 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 360,300 ஆகவும் பதிவாகியுள்ளது. மேலும் 21 கரட் தங்கத்தின் விலை 343,950 ரூபாயாக பதிவாகியுள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீராடச் சென்ற 15 வயதுச் சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!!

கேகாலை மாவனெல்லை – ஹேலிஸ்வத்த பகுதியில் மா ஓயாவில் நீராடச் சென்ற 15 வயதுடைய சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மாவனெல்லைப் பகுதியைச் சேர்ந்த மேற்படி சிறுவன், தனது நண்பன் ஒருவனுடன் இணைந்து மா ஓயாவில் நேற்று(10.05.2026) நீராடிக்கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது என்று முதற்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நீரோட்டத்தில் சிக்கிய சிறுவன் நீரில் மூழ்கியதைக் கண்டு அருகில் இருந்தவர்கள் மீட்க முயன்றும் பலனின்றிப் போயுள்ளது. மீட்கப்பட்ட சிறுவனின் சடலம் அரநாயக்க வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து மாவனெல்லை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மாவனெல்லையின் பல பகுதிகளில் மா ஓயாவின் நீர்மட்டம் மற்றும் நீரோட்டம் ஆபத்தான நிலையில் காணப்படுவதால், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் நீர்நிலைகளில் நீராடும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இன்ஸ்டகிராம் காதலால் விபரீதம் : பெண்ணின் நெருக்கடியால் இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா அருகே இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட காதலால் இளைஞர் ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சோகமான சம்பவம் நடந்துள்ளது.

திப்பசாமி (28) என்ற வாலிபருக்கும், ஏற்கனவே திருமணமாகி கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த பிரியங்கா என்ற பெண்ணுக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் இது காதலாக மாறவே, இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் தங்கி வாழ்ந்து வந்துள்ளனர்.

ஒன்றாக வாழ்ந்து வந்த சூழலில், குடும்பச் செலவுகளைக் கவனிப்பதில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

பிரியங்கா தனது ஆடம்பரச் செலவுகளுக்காகத் திப்பசாமியைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகவும், பணத்திற்காக அவருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

பெண்ணின் இந்தத் தொடர் தொந்தரவுகளையும் பொருளாதார நெருக்கடியையும் சமாளிக்க முடியாமல் திப்பசாமி திணறி வந்துள்ளார்.

இதனால் கடும் மனவேதனை அடைந்த திப்பசாமி, வாழ்க்கையில் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொண்டதாகக் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தற்கொலைக்குத் தூண்டியதாகப் பிரியங்காவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் ஏற்படும் அறிமுகங்கள் எத்தகைய விபரீதங்களை உண்டாக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்றாக அமைந்துள்ளது.

சாலை விபத்தில் நடிகர் பரத் காந்த் உயிரிழப்பு!!

சாலை விபத்தில் நடிகர் பரத்காந்த் உயிரிழந்துள்ளர். ஆந்திராவை சேர்ந்த 31 வயதான பரத்காந்த், டெனென்ட் ‘ மற்றும் ‘கிராமம்’ உள்ளிட்ட தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் இவரை சுமார் 40,000 பேர் பின்தொடர்கின்றனர்.

இந்நிலையில், நேற்று இரவு தனது நண்பரான ஒளிப்பதிவாளர் சாய் திரிலோக் என்பவருடன் அடிபட்லா அருகே உள்ள வெளிவட்டச் சாலையில் (ORR) காரில் பயணித்துள்ளார்.

காரை ஒட்டிய பரத்காந்த், கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதி, விபத்தில் சிக்கியுள்ளார். இதில், காரில் பயணித்த இருவரும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உயிரிழந்த பரத்காந்த் மற்றும் சாய் திரிலோக்கிற்கு தெலுங்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் பரவி வந்த இளம் பெண்களின் காணொளி : அதிரடியாக கைது செய்த பொலிசார்!!

பாதுகாப்பு தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளை செலுத்தி சமூக வலைதளங்களில் காணொளியை பதிவிட்ட யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று யுவதிகளின் காணொளி கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசேட விசாரணையை ஆரம்பித்திருந்த நிலையில், தொடர்புடைய மோட்டார் சைக்கிள் மற்றும் மூன்று யுவதிகளையும் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, குறித்த மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்ற யுவதியையும், அந்த மோட்டார் சைக்கிளையும் மொனராகலை, புத்தல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் ஹிதிகிவுல, உனவடுன மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

மோட்டார் சைக்கிளை செலுத்திய யுவதியிடம் சாரதி உரிமம் கூட இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அத்துடன், மோட்டார் சைக்கிளின் உரிமையாளருக்கு எதிராகவும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த யுவதி இன்று (11) வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய மின்சாரக் கட்டணத் திருத்தம்!!

இந்த ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்குரிய மின்சாரக் கட்டணத் திருத்தம் இன்று (11.05.2026) முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தத்தை ஏப்ரல் 01ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.

இதன்போது மின்சாரக் கட்டணங்களை 8வீதமட முதல் 14.4வீதம் வரையிலான சதவீதத்தில் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறான பின்னணியில், எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக மின் உற்பத்திக்கான செலவு அதிகரித்துள்ளதைக் கருத்திற் கொண்டு,

இரண்டாம் காலாண்டிற்கான திருத்தப்பட்ட மின்சாரச் செலவு மதிப்பீட்டை ‘நேஷனல் சிஸ்டம் ஆப்பரேட்டர்’ நிறுவனம் கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்திருந்தது.

எவ்வாறாயினும், மின்சாரக் கட்டண அதிகரிப்பால் நுகர்வோர் பாதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக, 15 பில்லியன் ரூபா மானியத்தை வழங்குவதற்கு அரசாங்கம் எழுத்து பூர்வமாக ஆணைக்குழுவிடம் உடன்பட்டுள்ளது.

இதன்படி, இந்த மின்சாரக் கட்டண அதிகரிப்பானது நாட்டின் 95 சதவீத மின் நுகர்வோருக்குப் பொருந்தாது. அதாவது, வீட்டுப் பிரிவில் 0 முதல் 180 அலகுகள் வரை மின்சாரத்தைப் பயன்படுத்துவோருக்கு எந்தவிதக் கட்டண அதிகரிப்பும் கிடையாது.

ஆனால், 180 அலகுகளுக்கு மேல் பயன்படுத்துவோருக்கான கட்டணங்கள் பின்வருமாறு அதிகரிக்கப்பட்டுள்ளன:

210 அலகுகள்: இதுவரை இருந்த ரூ. 9,570 கட்டணம், ரூ. 1,760 ஆல் அதிகரிக்கப்பட்டு ரூ. 11,330 ஆக மாறும்.

240 அலகுகள்: இதுவரை இருந்த ரூ. 12,120 கட்டணம், ரூ. 2,210 ஆல் அதிகரிக்கப்பட்டு ரூ. 14,330 ஆக மாறும்.

270 அலகுகள்: இவர்களுக்கான கட்டணம் ரூ. 2,660 ஆல் அதிகரிக்கும்.

300 அலகுகள்: இவர்களுக்கான மாதாந்தக் கட்டணம் ரூ. 3,110 ஆல் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லொறியுடன் மோதிய மோட்டார் சைக்கிள் : பரிதாபமாக பறிபோன உயிர்!!

கண்டி – மஹியங்கனை பிரதான வீதியின் உடுதும்பர, நிசருவ பகுதியில் இன்று (10) முற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.

கண்டியிலிருந்து மஹியங்கனை நோக்கி பயணித்த லொறி ஒன்றும், அதற்கு எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை உடுதும்பர வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்த போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு உயிரிழந்தவர் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவராவார்.

விபத்து தொடர்பில் லொறி சாரதி தற்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன், உடுதும்பர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு : அடுத்த சில நாட்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

புதிய இணைப்பு : இலங்கையில் நிலவும் குறைந்த காற்றழுத்தப் பகுதி குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, வங்காள விரிகுடாவில் நிலவிய கீழ் வளிமண்டலக் கொந்தளிப்பு, 10.1° வடக்கு, 82.5° கிழக்கு என்ற அட்சரேகை மற்றும் தீர்க்கரேகைக்கு அருகில் ஒரு குறைந்த காற்றழுத்தப் பகுதியாக உருவாகியுள்ளது.

இந்த அமைப்பின் தாக்கத்தால், நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்குத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலாம் இணைப்பு : சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும், குருநாகல், முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கும் கடுமையான மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு இன்று (11.05.2026) இரவு 11.30 மணி வரை நடைமுறையில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று பிற்பகல் 1 மணிக்கு மேல் குறிப்பிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழையும் பலத்த மின்னலும் ஏற்படும். அந்த நேரத்தில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

எனவே மின்னல் அபாயங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

வவுனியா செட்டிக்குளம் துடரிக்குளம் வீதி துப்பரவு : மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றம்!!

வவுனியா செட்டிகுளம் பிரதேச சபைக்குட்பட்ட துடரிக்குளம் பகுதியில் நீண்டகாலமாகப் பற்றைகள் மண்டிப் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்த வீதி தற்போது முழுமையாகத் துப்பரவு செய்யப்பட்டுள்ளது.

செட்டிகுளம் பிரதேச சபைக்குட்பட்ட துடரிக்குளம் உள்ளக வீதி இலக்கம் 06-இன் இருமருங்கிலும் பற்றைகள் அடர்ந்து வளர்ந்து காணப்பட்டது.

இது தொடர்பாகப் பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, உப தவிசாளர் தேவசகாயம் சிவானந்தராசா தவிசாளரிடம் முன்வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து இப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

தவிசாளர் முகம்மது இம்தீயாஸின் உடனடி அனுமதியுடன், கனரக வாகனங்கள் மற்றும் மோட்டர் கிரேடர் (Motor Grader) இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, வீதியின் இருமருங்கிலும் இருந்த பற்றைகள் அகற்றப்பட்டு வீதி சீரமைக்கப்பட்டது.

இந்த வீதி துப்பரவு செய்யப்பட்டதன் மூலம் இப்பகுதிப் போக்குவரத்து இலகுபடுத்தப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் கடத்தி தாக்கப்பட்டமை தொடர்பில் 3 ஆட்டோ சாரதிகள் கைது!!

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் கடத்தி தாதக்கப்பட்டமை தொடர்பில் 3 ஆட்டோ சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, புதிய பேரூந்து நிலையத்தில் பேரூந்து ஒன்றில் இருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த வியாழக்கிழமை முச்சக்கர வண்டியில் கடத்தப்பட்டு புதிய பேரூந்து நிலையத்திற்கும், சோயா வீதிக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள வயல் நிலப் பகுதியில் மூன்று மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு தாக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார்.

குறித்த சம்பவத்தின் போது அவரிடம் இருந்து கடிதம் ஒன்றில் கையொப்பம் பெறப்பட்டிருந்ததுடன், அவரது தொலைபேசியில் இருந்த ஆவணங்களும் அழிக்கப்பட்டிருந்ததாக பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிசார் குறித்த கடத்தல் மற்றும் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக 3 முச்சக்கர வண்டி சாரதிகளை கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

முல்லைத்தீவில் ஆசிரியரின் சைக்கிள் திருட்டு : சிசிடிவி காட்சியில் சிக்கிய நபர்!!

முல்லைத்தீவு – வள்ளுவர்புரம், விசுவமடு பகுதியில் ஆசிரியர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று(08.05.2026) இடம்பெற்றுள்ளது.

வீட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திருடிச் செல்லும் காட்சி, வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் ஆசிரியர் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.