ஒன்லைன் மூலம் கடன் பெறுபவர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!!

இணையதளம் மூலமாகவும், தொலைபேசிகள் மூலமாகவும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு, சில சமயங்களில் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு, பிணையில்லாமல் உடனடியாகக் கடன் வழங்க முடியும் என்று கூறி கடன் வழங்குவதற்காக முன்வந்த பெரும் எண்ணிக்கையிலான நிறுவனங்கள் இலங்கை பொலிஸாரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

அத்தகைய நிறுவனங்களிடமிருந்து தொலைபேசிகள் மூலம் கடன் வாங்கும் போது செலுத்த வேண்டிய வட்டி வீதம் மற்றும் கடன் கால அவகாசம் குறித்து உரிய கவனம் செலுத்தாமல் கடன் வாங்குவதால் பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளாகியிருப்பது இலங்கை பொலிஸாருக்கு கிடைக்கும் முறைப்பாடுகளில் கண்காணிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான சமயங்களில் கடனைத் திருப்பிச் செலுத்தும் போது எதிர்பாராதவிதமாக அதிக வட்டி செலுத்த நேரிடுவதுடன், அந்தக் கடன் நிறுவனங்கள் கடனை வசூலிக்க கடன் பெற்றவர்களை மன உளைச்சலுக்குள்ளாக்கும் வகையில் அழைப்புகள் விடுப்பது மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக அவமானகரமான பிரச்சாரங்களை மேற்கொள்வது தொடர்பாகவும் இலங்கை பொலிஸாருக்கு நாளாந்தம் முறைப்பாடுகள் வந்து கொண்டிருக்கின்றன.

இதற்கமைய, இவ்வாறாக இணையம் மற்றும் தொலைபேசிகள் மூலம் கடன் வழங்கும் நிறுவனங்கள் குறித்து இலங்கை பொலிஸாரால் இலங்கை மத்திய வங்கியின் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மேற்பார்வைப் பிரிவில் வினவியபோது,

அத்தகைய நிறுவனங்களில் பெரும்பாலானவை இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குமுறைக்கு உட்பட்டவை அல்ல என்றும், கடன் வழங்கும் நிறுவனங்களை ஒழுங்கு முறைப்படுத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் எப்போதும் இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குமுறைக்கு உட்பட்ட நிறுவனங்களிடம் மட்டுமே தங்கள் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாணவியின் கழுத்தை அறுத்து கொன்ற ஒருதலை காதலன் : பட்டப்பகலில் நடந்த பயங்கரம்!!

பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஸ்ரீராமபுரம் பகுதியில் கோபால், வரலட்சுமி தம்பதிக்கு பிரசாந்த், 22, என்ற மகனும், யாமினி பிரியா, 20, என்ற மகளும் இருந்தனர்.

கோபாலின் சொந்த ஊர் தமிழகத்தின் வேலுார் மாவட்டம், படவேடு கிராமம். பல ஆண்டுகளாக பெங்களூரில் குடும்பத்துடன் வசிக்கிறார்.

இவரது மகள் யாமினி தனியார் கல்லுாரியில், 2ம் ஆண்டு படித்து வந்தார். இவரை, எதிர்வீட்டில் வசிக்கும் விக்னேஷ், 25, என்பவர் ஒருதலையாக காதலித்தார். பல முறை தன் காதலை வெளிப்படுத்தியபோதும், அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

கடந்த ஏப்ரல் மாதம் ஸ்ரீராமபுரத்தில் நடந்த திரவுபதி கோவில் கரக ஊர்வலத்தின்போது, யாமினி கழுத்தில், விக்னேஷ் வலுக்கட்டாயமாக மஞ்சள் கயிறை கட்டி உள்ளார். பின், அந்த கயிறை அவர் கழற்றிவிட்டார்.

யாமினி, கல்லுாரி முடிந்ததும் மெட்ரோ ரயிலில் வந்து, மல்லேஸ்வரம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கி, வீட்டிற்கு நடந்து சென்றார். அவரை பின்தொடர்ந்து சென்ற விக்னேஷ், வழிமறித்து தகராறு செய்தார்.

திடீரென தான் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை எடுத்து யாமினியின் கண்ணில் துாவி, அவரது கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு, அங்கிருந்து தப்பினார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய யாமினி, சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தகவல் அறிந்த பெற்றோர், சம்பவ இடத்திற்கு வந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். தலைமறைவாக உள்ள விக்னேஷை பொலிஸார் தேடிவருகின்றனர்.

கொழும்பில் இருந்து யாழ். நோக்கி சென்ற தொடருந்தில் பயணித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

சாவகச்சேரிப் பகுதியில் தொடருந்திலிருந்து இறங்க முற்பட்ட குடும்பப் பெண் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து யாழ். நோக்கி வந்த தொடருந்து சாவகச்சேரி – சங்கத்தானையை அடைந்ததும் குறித்த பெண் தொடருந்திலிருந்து இறங்க முற்பட்டுள்ளார்.

இருப்பினும் அவர் இருந்த பெட்டியின் வாயில் ஊடாக இறங்குவதற்கு இறங்கு தளம் இல்லாத காரணத்தால் வேறு பெட்டி ஊடாக சென்று இறங்க முற்பட்ட வேளையில் தொடருந்து நகர்ந்ததால் பெண் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்த பெண்ணை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பல்கலைக்கழகம் ஒன்றில் கற்கும் மகனிடம் சென்று மீண்டும் வீடு திரும்பிய போதே இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் சாவகச்சேரி கோவிற்குடியிருப்பைச் சேர்ந்த 53 வயதான சு.சுபாசினி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

மேற்படி விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சங்குப்பிட்டி பெண் கொலையில் சிக்கிய இருவர் : ஒருவர் பெண்!!

யாழ்ப்பாணம், சங்குப்பிட்டிப் பாலத்துக்கு அருகாமையில் பெண்ணொருவரின் சடலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், காரைநகர் பகுதியைச் சேர்ந்த, 2 பிள்ளைகளின் தாயாரான சுரேஷ்குமார் குலதீபா (வயது 36) என்ற பெண்ணே சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

சடலத்தின் மீதான உடற்கூற்றுப் பரிசோதனைகளில் அவர் சித்திரவதை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார் என்ற விடயம் தெரியவந்தது.

இதையடுத்து சம்பவம் தொடர்பில் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையிலேயே தற்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் பெண் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் நீதிமன்ற உத்தரவுக்க அமைய அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

கொழும்பு சென்ற யாழ் பெண் விபத்தில் உயிரிழப்பு : திருமணமாகி ஒருவருடத்தில் நேர்ந்த துயரம்!!

யாழ்ப்பாணம் ஏழாலையை சேர்ந்த திருமணமான இளம் பெண் வாகன விபத்தில் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சென்றபோது இன்று அதிகாலை 3:00 மணியவில் அனுராதபுரதிற்கு அண்மையில் அவர்கள் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகின்றது.

விபத்தில் யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியைச் சேர்ந்த 25 என்ற இளம் குடும்பப் பெண்ணே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் திருமணம் செய்து ஒரு வருடமான நிலையில் இந்த துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்து சம்பவத்தில் மேலும் ஒரு வயோதிபப் பெண்ணும் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படும் நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது.

கொழும்பு நீதிமன்றில் இஷாராவின் கையை பிடித்து கதறிய பெண் : கொலைக்கு முன் நடந்த சம்பவம்!!

குற்றச்செயலுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் நேபளாத்தில் பதுங்கியிருந்த நிலையில், நாட்டுக்கு இழுத்து வரப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் குற்ற புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பு நீதிமன்றத்தில் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்படுவதற்கு முன்னர் நிதி வசதியில்லாத பெண் ஒருவருக்கு பண உதவி செய்ததாக இஷாரா தெரிவித்துள்ளார்.

சஞ்சீவ கொலையின் போது நீதிமன்றத்திற்கு சென்ற தன்னை உண்மையான வழக்கறிஞர் என எண்ணிய பெண் தன்னை வழக்கு ஒன்றை வாதாட அழைத்ததாக இஷாரா தெரிவித்துள்ளார்.

“கணேமுல்ல சஞ்சீவவை சுட கமாண்டோ சலிந்துவுடன் நீதிமன்றத்திற்கு வந்தபோது, ​​வழக்கறிஞர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஓய்வு அறையில் இருந்தேன். அங்கு வந்த மிகவும் உதவியற்ற தோற்றமுடைய ஒரு பெண் என்னிடம் பேசினார்.

நான் ஒரு வழக்கறிஞர் என்று அவர் நினைத்தார். அந்தப் பெண்ணின் கணவர் அவரை மோசமாக அடிப்பதாகவும் வழக்கு புதுக்கடை நீதிமன்றத்தில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தன்னிடம் ஆயிரம் ரூபாய் மட்டுமே உள்ளது. அந்தத் தொகைக்கு வழக்கில் வாதாட முடியுமா எனவும் குறித்த பெண் தன்னிடம் கேட்டதாக செவ்வந்தி தெரிவித்துள்ளார்.

அந்த நேரத்தில் அந்தப் பெண்ணுக்காக நான் மிகவும் வருத்தப்பட்டேன். நான் வேறொரு வழக்கிறக்காக வாதாடவுள்ளதாக கூறினேன்.

அதனால் நான் அந்த பெண்ணின் வழக்கை அங்கிருந்த மற்றுமொரு பெண்மணியிடம் கொடுக்கச் சொல்லிவிட்டு, என் பார்வையில் இருந்த மற்றொரு பெண் வழக்கறிஞரிடம் அழைத்துச் சென்றேன்.

அந்தப் பெண் வழக்கறிஞரிடம் சென்று தனது கதையைச் சொன்னார். வழக்கில் முன்னிலையாக 2000 ரூபாய் கேட்டார். அந்த பெண் மிகவும் உதவியற்றவராக என்னைப் பார்த்தார்.

நான் அவரை அறையிலிருந்து வெளியே அழைத்து, என்னிடம் இருந்த 5000 ரூபாயை கொடுத்து, அந்தப் பெண் சட்டத்தரணியை வழக்கில் வாதாட அழைக்குமாறு கோரினேன். அந்த பெண் என் கைகளைப் பிடித்து, வணங்கி பணத்தை பெற்றுக் கொண்டார்” என இஷாரா குறிப்பிட்டுள்ளார்.

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி : குப்பையில் கொட்டப்படும் சோகம்!!

நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் கடந்த சில நாட்களாக மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளது.

நாளாந்தம் கிடைக்கும் மரக்கறிகளின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக மரக்கறிகளின் மொத்த விலை குறைவடைந்துள்ளதாக, விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் விற்பனை குறைந்துள்ளது எனவும் தேங்கி அழுகும் மரக்கறிகளை குப்பையில் கொட்டப்படுகிறது.

இதில் தக்காளி, லீக்ஸ், கத்தரிக்காய், பயிற்றங்காய், வெள்ளரிக்காய், கோவா, நோக்கோல், முள்ளங்கி, பீட்ரூட், கறி மிளகாய், பச்சை மிளகாய் கரட், போஞ்சி, ஆகியவற்றின் விலை அதிகளவு குறைவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் மரக்கறி விற்பனை நிலையங்களில் பாவனைக்குதவாத அழுகிய நிலையில் மரக்கறிகளை வர்த்தக நிலையங்களுக்கு முன் சேர்த்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இவற்றை அப்புறப்படுத்த முடியாது, நகரசபையின் ஊழியர்கள் உள்ளடங்கலாகப் பலரும் பாரிய திண்டாட்டங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இவற்றை காலை நேரங்களில் மட்டக்குதிரை உள்ளிட்ட சில கால்நடைகள் தீவனமாக உண்ணும் நிலை அதிகரித்துள்ளது.

நாட்டில் அதிகளவில் மரக்கறி உற்பத்தி செய்யப்படுகின்ற மாவட்டங்களில் நுவரெலியாவும் ஒன்றாகும். எனினும் தற்போது நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல இடங்களில்

விவசாய செய்கைகள் கைவிடப்பட்ட நிலையில் இன்று காட்சியளிக்கின்றன. மரக்கறி வகைகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத வீழ்ச்சியால் இந்த நிலைமை ஏற்பட்டதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், பாரிய முதலீட்டுடனேயே, மரக்கறிச் செய்கைகளை மேற்கொண்டதாகத் தெரிவிக்கும் விவசாயிகள், மரக்கறிகளின் சந்தைப் பெறுமதி குறைவடைந்துள்ளதால், தாம் பாரிய நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

 

முரசுமோட்டையில் விபத்து : மூன்று பேர் காயம்!!

பரந்தன் – முல்லைத்தீவு, A35 வீதி முரசுமோட்டை பகுதியில் டிப்பர் மற்றும் உழவு இயந்திரம் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று புதன்கிழமை (15) இரவு 9 மணியளவில் பரந்தன் பகுதியிலிருந்து முரசுமோட்டை நோக்கி சீமெந்து கற்களை ஏற்றி பயணித்த உழவு இயந்திரமும் எதிர்த்திசையில் வந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றது.

உழவு இயந்திரத்துடன் மோதிய டிப்பர் வீதியில் குறுக்காக தடம் புரண்டது. உழவு இயந்திரத்தில் ஒரு பெண் உட்பட மூன்று பேர் பயணித்திருந்த நிலையில் மூவரும் காயங்களுக்குள்ளான நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டிப்பர் சாரதி சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாக தெரியவருகின்றது. விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகை பியுமியின் கிறீம் தொடர்பில் சீ.ஐ.டி விசாரணை!!

பிரபல நடிகை மற்றும் மாடல் அழகியுமான பியுமி ஹன்சமாலிக்கு சொந்தமான லோலியா ஸ்கின் கம்பெனி என்ற கிரீம் உற்பத்தி நிறுவனம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் கிரீம் வகையின் தரம் மற்றும் ஆரோக்கிய நிலை தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்ற புலனாய்வு திணைக்களம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசாங்க ரசாயன பகுப்பாய்வு நிறுவனத்திற்கு இந்த விசாரணையை நடத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.

குற்ற புலனாய்வு திணைக்களத்தின் திட்டமிட்ட குற்றச் செயல் பிரிவின் கீழ் இயங்கும் சட்டவிரோத சொத்துக் குவிப்பு பிரிவினால் பியுமியின் கிரீம் உற்பத்தி நிறுவனம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த கிரீம் வகைகள் தர நிர்ணயங்களுக்கு உட்பட்டதா என்பதை நிர்ணயம் செய்வதற்கு அனுமதி அளிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் கிரீமின் தரம் குறித்தும் அது அதன் பாதுகாப்பு தன்மை குறித்தும் சோதனை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.

பிரபல நடிகை பியும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களுடன் நெருங்கி பழகி, குறுகிய காலத்தில் பெருமளவு சொத்துக்களை குவித்துள்ளதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதி அறையில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் மீட்பு!!

கம்பஹா, பலகல்ல பகுதியிலுள்ள தற்காலிக விடுதி அறையில் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் அநுராதபுரத்தை சேர்ந்த 26 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் திவுலப்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் நீதவான் பரிசோதனைக்குப் பின்னர் சடலம் கம்பஹா மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. திவுலப்பிட்டிய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இஷாரா செவ்வந்தி மீதான விசாரணைகள் தொடர்பில் வெளியான தகவல்!!

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட ஆறு சந்தேகநபர்களிடம் மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன.

கொழும்பு நீதிமன்றத்தில் இடம்பெற்ற கணேமுல்ல சஞ்சீவ கொலை விவகாரம் தொடர்பில் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் கைது செய்யப்பட்டு நேற்றையதினம்(15.10.2025) இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.

இந்நிலையில், அவர் உட்பட 6 பேர் மீது மூன்று குழுக்களை கொண்ட பொலிஸ் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இஷாரா செவ்வந்தி வீரசிங்க பின்புர தேவகே (26), கிளிநொச்சி- பளையை சேர்ந்த ஜீவதாசன் கனகராசா – சுரேஸ் (33), யாழ்ப்பாணம் மிருசுவிலை சேர்ந்த தக்சி நந்தகுமார் (23), தினேஷ் ஷ்யாமந்த டி சில்வா (49)

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கெனடி பஸ்தியாம்பிள்ளை- ஜே.கே.பாய் (35) மற்றும் தினேஷ் நிசாந்த குமார விக்ரம ஆராச்சிகே (43) ஆகிய 6 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

இதில் இஷாரா செவ்வந்தி, உள்ளிட்ட நால்வர் கொழும்பு குற்ற விசாரணைப்பிரிவிலும் ஏனைய இருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பேலியகொட பிரிவிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சஞ்சீவவை கொலை செய்த விதம் : செவ்வந்தியின் அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலங்கள்!!

நீதிமன்றத்தின் படிக்கட்டில் வைத்தே குற்றவியல் சட்டக்கோவை புத்தகத்தில் மறைத்துக் கொண்டு வந்த துப்பாக்கியை கமாண்டோ சமிந்துவுக்கு வழங்கியதாக நேபாளத்தில் இருந்து கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி தெரிவித்துள்ளார்.

இஷாரா செவ்வந்தி உட்பட்ட குழுவினர் நேபாளத்திலிருந்து நேற்று மாலை கொழும்புக்கு அழைத்து வரப்பட்டனர்.

இலங்கை விமானம் யு.எல். 182 விமானம் நேபாளத்தின் காத்மண்டுவிலிருந்து நேற்று (15) மாலை 6.55 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இந்த குழுவினர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றவியல் விசாரணை பிரிவில் பாரப்படுத்தப்பட்ட இஷாரா பொலிஸாரிடம் வாக்குமூலம் அளிக்கும் போதே மேற்கண்வடாறு குறிப்பிட்டுள்ளார்.

செவ்வந்தி வழங்கிய வாக்குமூலத்தில், துப்பாக்கியதாரியான கமாண்டோ சமிந்து துப்பாக்கியை இடுப்பில் செருக்கிக் கொண்டு செவ்வந்தியுடன் நீதிமன்றத்திற்குள் சென்று சட்டத்தரணிகள் அமரும் இருக்கையில் அமர்ந்துள்ளார்.

நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ குற்றவாளி கூண்டில் ஏறியபோது கமாண்டோ சமிந்து துப்பாக்கியை எடுத்து சஞ்சீவவை நோக்கி பிரயோகித்துள்ளார்.

பின்னர் அவர்கள் இருவரும் சஞ்ஜீவ மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது என்று சத்தமிட்டவாறே வெளியில் ஓடிச் சென்றதாக தெரிவித்துள்ளார்.

இஷாரா செவ்வந்தி கைது : அடுத்தக் கட்ட நடவடிக்கைக்கு தயாராகும் பொலிஸார்!!

இஷாரா செவ்வந்தி உட்பட நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட ஐந்து பேரிடம் மேலும் விசாரணைகளை நடத்துவதற்கு தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அளுத்கடை நீதிமன்ற வளாகத்தில் பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலைக்குப் பின்னணியில் இருந்ததாகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி,

நேபாளத்தின் பக்தபூர் மாவட்டத்தில் உள்ள திப்போஸ் பூங்காவில் உள்ள ஒரு ஆடம்பரமான வீட்டில் மறைந்திருந்தபோது நேற்று முன்தினம் (13) இரவு கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபருடன் பாதாள உலக உறுப்பினர்கள் உட்பட மேலும் நான்கு பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நேற்று மாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இஷாரா செவ்வந்தி வீரசிங்க பின்புர தேவகே (26), கிளிநொச்சி- பளையை சேர்ந்த ஜீவதாசன் கனகராசா- சுரேஸ் (33), யாழ்ப்பாணம் மிருசுவிலை சேர்ந்த தக்ஷி நந்தகுமார் (23), தினேஷ் ஷ்யாமந்த டி சில்வா (49),

யாழ்ப்பாணத்தை சேர்ந்த கெனடி பஸ்தியாம்பிள்ளை- ஜே.கே.பாய் (35) மற்றும் தினேஷ் நிசாந்த குமார விக்ரம ஆராச்சிகே (43) ஆகியோரே கைது செய்யப்பட்டனர்.

இதில் இஷாரா செவ்வந்தி, உள்ளிட்ட நால்வர் கொழும்பு குற்ற விசாரணைப்பிரிவிலும் மற்றைய இரு சந்தேகநபர்களும் குற்றப் புலனாய்வு பிரிவின் பேலியகொட பிரிவிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கணேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி உட்பட ஆறு பேரிடமும் மூன்று பொலிஸ் குழுக்கள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றன.

தற்போது இவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்குத் தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பிரித்தானியாவில் அறிமுகமாகியுள்ள புதிய சட்டம் :சிக்கலில் புலம்பெயர்ந்தோர்!!

பிரித்தானியாவில் வேலை செய்ய விரும்பும் புலம்பெயர்ந்தோர், ஆங்கிலப்புலமை இல்லாவிட்டால் வேலை செய்யமுடியாதவகையில் சட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி,குறித்த சட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியா தொடர்ந்து சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த விரும்புவதாக தெரிவித்து வருகின்றது.

எனினும், பிரித்தானியா சட்டப்படி வருபவர்கள் மீதும் கடினமான கட்டுப்பாடுகளை விதித்தவண்ணம் உள்ளது. இந்தவகையில் பிரித்தானியாவில் வேலை செய்ய விரும்பும் புலம்பெயர்ந்தோர், Secure English Language Test (SELT) என்னும் தேர்வை எழுதி வெற்றி பெறவேண்டும்.

சில குறிப்பிட்ட சட்டப்படியான வழிமுறைகள் மூலம் விண்ணப்பிக்கும் புலம்பெயர்ந்தோர், பேசுதல், கவனித்தல், வாசித்தல் மற்றும் எழுதுதலில், A மட்டத்தில் ஆங்கிலப்புலமை கொண்டவர்களாக இருக்கவேண்டும்.

இந்த புதிய விதி, 2026ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 8ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

முச்சக்கரவண்டி கவிழ்ந்து தந்தை கண்முன்னே மகள் துடிதுடித்து பலி!!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த தில்லாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். அவருக்கு 9 வயதான மகள் கிரேசிகா மற்றும் 7 வயதான மகன் லிதன் ராம் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சமீபத்தில் ராஜ்குமார் புதிய ஆட்டோ ஒன்றை வாங்கியிருந்தார். அதை குழந்தைகளுக்கு காட்டி சுற்றி வர வேண்டும் என்ற ஆர்வத்தில், நேற்று குழந்தைகளுடன் புறப்பட்டார்.

சுற்றி வந்தபோது தில்லாம்பட்டி அருகே உள்ள வெள்ளகுளம் பகுதியில் திடீரென ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் கிரேசிகா படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ராஜ்குமாரும் அவரது மகன் லிதன் ராமும் காயங்களுடன் உயிர் தப்பினர். மகளின் துயர மரணத்தால் ராஜ்குமார் திடீரென சோகத்தில் மூழ்கி, அழுது துடித்த காட்சி அங்கிருந்தவர்களின் கண்களில் நீர் வரவைத்தது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கிரேசிகாவின் உடலை மீட்டு, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதிய ஆட்டோவின் விபத்து உயிர்பலியாக மாறியுள்ளதால், திருச்சி பகுதி மக்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர் : சிக்கியது எப்படி?

இந்தியாவின் பெங்களூருவில் மருத்துவர் ஒருவரின் மனைவி திடீரென மரணமடைந்த நிலையில், அது இயற்கை மரணம் என அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

இந்நிலையில், அந்தப் பெண்ணின் கணவரான மருத்துவரை பொலிசார் தற்போது கைது செய்துள்ளார்கள். பெங்களூருவிலுள்ள விக்டோரியா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரிபவர் மஹேந்திர ரெட்டி (32).

மஹேந்திர ரெட்டியின் மனைவி, மருத்துவர் கிருத்திகா ரெட்டி (23). தம்பதியருக்கு கடந்த ஆண்டு, அதாவது, 2024ஆம் ஆண்டு மே மாதம்தான் திருமணம் ஆனது.

இந்நிலையில், இந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கிருத்திகாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மனைவியை பரிசோதித்த மஹேந்திர ரெட்டி, அவருக்கு குளூக்கோஸ் ஏற்றும் குழாய் (intravenous, IV) மூலம் மருந்தொன்றைக் கொடுத்துள்ளார்.

மறுநாள் மனைவியை அவரது தாய் வீட்டுக்கு அழைத்துச் சென்ற மஹேந்திர ரெட்டி, அன்றும் அதே மருந்தை குழாய் மூலம் ஏற்றியுள்ளார்.

23ஆம் திகதி, ஊசி குத்தப்பட்டுள்ள இடத்தில் வலி இருப்பதாக கிருத்திகா கூறியும், அன்று இரவு மீண்டும் ஒரு டோஸ் மருந்தை மனைவி உடலில் ஏற்றியுள்ளார் மஹேந்திர ரெட்டி.

மறுநாள், அதாவது, ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி காலை, கிருத்திகா சுயநினைவிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

ஒரு அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தும், தன் மனைவிக்கு உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சை (CPR) செய்யாத மஹேந்திர ரெட்டி, மனைவியை அருகிலுள்ள மருத்துவமனை ஒன்றிற்குக் கொண்டு சென்றுள்ளார்.

அங்கு கிருத்திகாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்கள்.

மரணத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் எதுவும் இல்லை, அல்லது விவரிக்க இயலாத இயற்கை மரணம் என அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்ட நிலையில், ஆறு மாதங்களுக்குப் பிறகு மருத்துவர் மஹேந்திர ரெட்டி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரேத பரிசோதனையில், கிருத்திகாவின் உடல் உள்ளுறுப்புகளில் மயக்க மருந்து கலந்திருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, அது இயற்கை மரணம் அல்ல என தெரியவந்துள்ளதையடுத்து, வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது, மஹேந்திர ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.

கிருத்திகாவுக்கு நீண்ட காலமாக வயிற்று உபாதைகளும், வளர்சிதை மாற்றப் பிரச்சினைகளும் இருந்துள்ளன. அவற்றை மறைத்து அவரது பெற்றோர் கிருத்திகாவை தனக்கு திருமணம் செய்துவைத்துவிட்டதை அறிந்த மஹேந்திர ரெட்டிக்கு மனவருத்தம் ஏற்பட்டுள்ளது.

மாதக்கணக்கில் கசப்பும் வெறுப்பும் தொடர, கவனமாக திட்டமிட்டு மனைவிக்கு விஷம் கொடுக்க முடிவு செய்துள்ளார் மஹேந்திர ரெட்டி.

மனைவிக்கு ஏற்கனவே வயிற்றுவலி இருந்ததை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, அவருக்கு விஷம் கொடுத்து அதனால் ஏற்பட்ட வலியை வழக்கமான வயிற்றுவலி எனக் கூறி, அவருக்கு மருந்து கொடுப்பதுபோல் கொடுத்து, கடைசியில் அவரைக் காப்பாற்ற வாய்ப்பிருந்தும் காப்பாற்றாமல் சாக விட்டிருக்கிறார் மஹேந்திர ரெட்டி.

தனது மருத்துவ அறிவைப் பயன்படுத்தி, ஒரு கொலையை உடல் நலக்குறைவால் ஏற்பட்ட மரணம் போல் மறைக்க முயன்ற மஹேந்திர ரெட்டி, தற்போது வசமாக சிக்கிக்கொண்டுள்ளார்.