சூதாட்டத்தில் தோற்ற நண்பனுக்காக மாணவர்கள் செய்த முகம்சுழிக்கும் செயல் : வாடகைக் காரில் அரங்கேறிய சம்பவம்!!

சூதாட்டத்தில் பணத்தை இழந்த தனது நண்பருக்கு உதவுவதற்காக, வாடகைக்கு கார் எடுத்து எருமைக்கன்றுகளைத் திருடி, அவற்றை ஆட்டு இறைச்சி என விற்பனை செய்து வந்த பாடசாலை மாணவர் ஒருவரை அம்பலாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக அம்பலாங்கொடை பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த மாடு திருட்டு தொடர்பான முறைப்பாடுகளை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தல்கஸ்கொட – கொடஹேன பகுதியில் வைத்து குறித்த மாணவர் கைது செய்யப்பட்டார்.

அம்பலாங்கொடையிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் பயிலும் அந்த மாணவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், மேலும் இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அம்பலாங்கொடை மற்றும் வதுகெதர பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களான இந்த மாணவர்கள் திலகபுர பகுதியில் 3 மற்றும் 8 மாத வயதுடைய இரு எருமைக்கன்றுகளை இரு கார்களில் ஏற்றிச் சென்று, கரந்தெனிய – பனாபிட்டிய பகுதியிலுள்ள ஒருவருக்கு விற்பனை செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவரையும் கைது செய்த பொலிஸார், காட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த இரு எருமைக்கன்றுகளையும் மீட்டுள்ளனர். மாடுகளைக் கடத்தப் பயன்படுத்தப்பட்ட இரு கார்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவை படப்பொல பகுதியிலுள்ள வாகன வாடகை நிலையமொன்றிலிருந்து பெறப்பட்டவை எனத் தெரியவந்துள்ளது. விசாரணையின் போது, ​​சந்தேக நபர்கள் சில காலமாக ஆடுகளையும் திருடி வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆட்டுக்கறி விலை உயர்ந்ததாக இருப்பதால், கன்றுகளைக் கொன்று அவற்றை ஆட்டுக்கறி என்று கூறி விற்கும் இந்த மோசடி இவ்வாறு நடத்தப்பட்டதாக அம்பலங்கொட பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் பாலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மாமியாரை பார்க்க சென்று காணாமல் போன மருமகள் : கணவர் மீது சந்தேகம் இருப்பதாக தாயார் முறைப்பாடு!!

மன்னாரில் கணவர் வீட்டுக்கு சென்ற மகள் மற்றும் 10 மாதம் முடிந்த பேரப்பிள்ளை இருவரும் காணாமல் போயுள்ளதாக பெண்ணின் தாய் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான முறைப்பாடு நேற்று(08.05.2026) பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பெரிய மடு கிராமத்தைச் சேர்ந்த றெனோயன் றெ யாழினி (வயது 18) மற்றும் அவரது 10 மாத குழந்தை ஆகிய இருவருமே காணாமல் போயுள்ளதாக குறித்த பெண்ணின் தாயார் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தனது மகளின் கணவர் தனது தாய்க்கு சுகயீனம் எனக் கூறி கடந்த 2ஆம் திகதி அவரது சொந்த இடமான மட்டக்களப்பிற்கு செல்வதாக கூறி மன்னாரில் இருந்து தனது மகளையும் பேர பிள்ளையையும் அழைத்துச் சென்றுள்ளார். மன்னாரில் இருந்து வவுனியா சென்று அங்கிருந்து மட்டக்களப்பிற்கு செல்வதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் மகளும் பேரப்பிள்ளையும் காணாமல் போயுள்ளனர். எனினும் தனது மருமகன் மட்டக்களப்பில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ள போதும் தனது மகளும் பேரப்பிள்ளையும் அங்கு செல்லாத நிலையில், காணாமல் போயுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தனது மருமகன் மட்டக்களப்பில் உள்ள அவரது தாயார் வீட்டில் இருப்பதாகவும், தொலைபேசியில் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மகள் மற்றும் பேரப்பிள்ளை தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் 0775841705 மற்றும் 0776902536 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அல்லது பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இடது காலுக்கு பதில் வலது காலில் மாற்றி அறுவை சிகிச்சை!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியில் உள்ள மதுரா தாஸ் மாத்தூர் (MDM) அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் கவனக்குறைவால் 66 வயது மூதாட்டிக்குத் தவறான காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சண்டையினால் ஏற்பட்ட காயம் காரணமாகச் சம்பா தேவி என்ற அந்த மூதாட்டியின் இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு மாவுக்கட்டு போடப்பட்டிருந்தது.

அவருக்கு இடது காலில் அறுவை சிகிச்சை செய்யத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், டாக்டர்கள் தவறுதலாக அவரது வலது காலில் அறுவை சிகிச்சையைச் செய்துள்ளனர்.

அறுவை சிகிச்சை முடிந்த பின்னரே, தவறு நடந்திருப்பதை உணர்ந்த உறவினர்கள் மருத்துவமனையில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.

முதலில் மூதாட்டிக்கு இரண்டு கால்களிலும் சிகிச்சை தேவைப்படுவதால் தான் வலது காலில் சிகிச்சை அளித்ததாகக் கூறி டாக்டர்கள் சமாளிக்க முயன்றனர்.

இருப்பினும், முறையான வழிகாட்டுதல்களைப் (SOP) பின்பற்றாமல் இந்தத் தவறு நடந்தது விசாரணையில் அம்பலமானது.

இந்த விவகாரம் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியது.

இந்தக் கொடூரமான மருத்துவ அலட்சியம் குறித்து விசாரணை நடத்த மருத்துவமனை நிர்வாகம் ஒரு சிறப்புக் குழுவை அமைத்தது.

அந்த விசாரணைக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், அறுவை சிகிச்சையை மேற்கொண்ட உதவிப் பேராசிரியர் அந்தஸ்தில் உள்ள டாக்டர் சவுத்ரி என்பவர் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

மேலும், அவர் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவக் கல்வித் துறைக்கு மாற்றப்பட்டு மேல் நடவடிக்கைக்காகக் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அரசு மருத்துவமனையில் நடந்த இந்தச் சம்பவம் நோயாளிகளின் பாதுகாப்பு குறித்த பெரும் கேள்விக்குறியை எழுப்பியுள்ளது.

 

சிறுமி கொலை வழக்கில் திடீர் திருப்பம் : தாயே கொன்றது அம்பலம்!!

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே 10 வயது மகளைக் கொலை செய்துவிட்டு, மர்ம நபர்கள் நகைக்காகக் கொன்றுவிட்டதாக நாடகமாடிய தாய் சத்யாவை (30) போலீசார் கைது செய்துள்ளனர்.

முருகவேல் – சத்யா தம்பதியின் மகள் வர்ஷினி, கண்டாச்சிபுரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்திருந்த போது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நேற்று வர்ஷினி மர்மமான முறையில் சடலமாகக் கிடந்த நிலையில், அவரது கழுத்தில் இருந்த நகை திருடு போயிருந்ததால் போலீசார் முதலில் மர்ம நபர்களைத் தேடி வந்தனர்.

இருப்பினும், சிறுமியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவரது வாயில் துணி நூல்கள் இருந்தது கண்டறியப்பட்டதால் போலீசாருக்குத் தாய் மீது சந்தேகம் எழுந்தது.

இதனையடுத்து சத்யாவிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு மற்றும் மன உளைச்சல் காரணமாக மகளின் வாயில் துணியை வைத்து அமுக்கிக் கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.

பின்னர் இந்தக் கொலையை மறைப்பதற்காக மகளின் கம்மல்களைக் கழற்றி எறிந்துவிட்டு, நகைக்காக யாரோ கொன்றுவிட்டதாக ஊர் மக்களை நம்ப வைத்ததும் தெரியவந்தது.

மகளையும் கொன்று விட்டுத் தானும் தற்கொலை செய்ய முயன்றதாகவும், ஆனால் பயம் காரணமாக அந்த எண்ணத்தைக் கைவிட்டு நாடகமாடியதாகவும் சத்யா தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அவரைக் கைது செய்த கண்டாச்சிபுரம் போலீசார், அவரை வேடம்பட்டு சிறையில் அடைத்தனர்.

பெற்ற தாயே தனது மகளை இவ்வளவு கொடூரமான முறையில் கொலை செய்துள்ள சம்பவம், திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

இலங்கை ரூபாவுக்கு எதிராக 325 ரூபாவை தாண்டிய அமெரிக்க டொலரின் பெறுமதி!!

அமெரிக்க டொலரின் விற்பனை விலை நேற்று 325 ரூபாவை தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதற்கமைய, நேற்று முன்தினம் 324.87 ரூபாயாக இருந்த அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்று 325.53 ரூபாவாக அதிகரித்துள்ளது.

அதேபோல், முன்தினம் 317.26 ரூபாயாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்வனவு விலையும், நேற்று 317.86 ரூபாயாக அதிகரித்துள்ளது.

2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22ஆம் திகதிக்கு பின்னர் முதன்முறையாக, ரூபாயின் விற்பனை விலை நேற்று 325 ரூபாய் என்ற பெறுமதியை தாண்டியுள்ளது.

இதேவேளை 2026ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் இலங்கை ரூபாயின் மதிப்பு அமெரிக்க டொலருக்கு நிகராக 2.9 சதவீதம் சரிந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

 

தென்னிலங்கையை அச்சுறுத்தும் நோய்த் தொற்று : பல மாணவர்கள் பாதிப்பு!!

மாத்தறை, தெனியாயா பகுதியில் பாடசாலை மாணவர்களிடையே பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் 47 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் துறை நிபுணர் பாலித கருணபெம தெரிவித்துள்ளார்.

தற்போது வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம் குறைந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த வைரஸ் காய்ச்சல் ஒரு மாத காலமாக நீடித்து வருகிறது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற பின்னர் பல குழந்தைகள் வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த மூன்று அல்லது நான்கு நாட்களில் நோய் பரவியிருந்தாலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இந்த வைரஸ் பெரும்பாலும் அசுத்தமான நீர் அல்லது உணவு மூலம் பரவுவதாக சந்தேகிக்கப்படுகிறது. தெனியாயா பகுதி மக்கள் கொதிக்க வைத்த நீரைக் குடிக்கவும், சுத்தமான உணவை உட்கொள்ளவும் கேட்டுக்கொள்கிறோம்.

காய்ச்சல், கடுமையான தலைவலி, வாந்தி போன்ற அறிகுறிகள் இருந்தால், சம்பந்தப்பட்ட மருத்துவரை நாடுங்கள். இந்த நோயாளிகள் தெனியாயா பகுதியிலிருந்து மட்டுமே பதிவாகியுள்ளதாக வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலைமை குறித்து பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை. நோய்ப்பரவியல் திணைக்களத்தை சேர்ந்த மருத்துவ நிபுணர் குழுவினர் நேற்று தெனியாயா பகுதிக்குச் சென்று, தேவையான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் சடுதியாக அதிகரிக்கப்பட்ட மின்சாரக்கட்டணம்!!

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்கு அமைவாக, 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் வீட்டுப் பிரிவினரின் மின்சாரக் கட்டணத்தை 18 சதவீதத்தால் அதிகரிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் கே.பி.எல். சந்திரலால், குறைந்த மின்சாரத்தை நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்தத் திருத்தம் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், 180 அலகுகளுக்குக் குறைவாகப் பயன்படுத்தும் வீட்டுப் பிரிவினரின் மின்சாரக் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மின் உற்பத்திச் செலவு அதிகரித்தமையால் இந்த மற்றும் அடுத்த காலாண்டுகளில் சுமார் 38 பில்லியன் ரூபாய் பற்றாக்குறை தொகை ஏற்படுகின்றமை உள்ளிட்ட மூன்று பிரதான காரணிகளை முன்னிலைப்படுத்தி மின் கட்டணத்தை 18 சதவீதத்தால் உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 180 அலகுகளுக்குக் குறைவாக மின்சாரத்தைப் பயன்படுத்தும் சாதாரண நுகர்வோருக்கு எவ்வித கட்டண அதிகரிப்பும் ஏற்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு சுமார் 18 சதவீதம் வரை கட்டண அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மேலதிக கட்டணம் அறவீடு

புதிய மதிப்பீடுகளின் அடிப்படையில், 180 முதல் 210 அலகுகள் வரை பயன்படுத்துவோருக்கு 1,760 ரூபாயும், 210 முதல் 240 அலகுகள் வரை பயன்படுத்துவோருக்கு 2,210 ரூபாயும் மேலதிகக் கட்டணமாக அறவிடப்படவுள்ளது.

அத்துடன் 270 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்துவோருக்கு 2,600 ரூபாயும், 300 அலகுகளுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு 3,110 ரூபாயும் மேலதிகக் கட்டணமாக விதிக்கப்படவுள்ளதோடு, நுகர்வோர் பயன்படுத்தும் மேலதிக அலகுகளைப் பொறுத்து இத்தொகையில் மாற்றங்கள் ஏற்படக்கூடும். இதற்கமைய, அனைத்து அரச நிறுவனங்களுக்கும் 18% மின் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா ஹோட்டல்கள்: H1 மற்றும் H2 பிரிவுகளில் குறைந்த மின் நுகர்வுக்குக் கட்டண உயர்வு இல்லை.அதிக மின் நுகர்வு காணப்படுமாயின் 18% அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிறு மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில்களுக்குக் கட்டண அதிகரிப்பு இல்லை. பாரிய அளவிலான கைத்தொழில்களுக்கு 18% அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வழிபாட்டுத் தலங்கள்: 180 அலகுகளுக்குக் குறைவாகப் பயன்படுத்தும் வழிபாட்டுத் தலங்களுக்குக் கட்டண உயர்வு இல்லை. 180 அலகுகளுக்கு மேல் பயன்படுத்தினால் 18% அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அரசாங்கம் 15 பில்லியன் ரூபாய் நிவாரணத்தை வழங்க எழுத்துப்பூர்வமாக இணங்கியுள்ளதால், இந்த அதிகரிப்பு 5 சதவீதமான மின் நுகர்வோரை மாத்திரமே தாக்கம் செலுத்தும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டின் 95 சதவீதமான மின் நுகர்வோருக்கு இந்த மின்சாரக் கட்டண அதிகரிப்பு பொருந்தாது என ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோருக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை!!

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் நபர்கள் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் பத்திராஜ தெரிவித்துள்ளார்.

சைபர் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நாடுகளிலிருந்து வருவோரே இவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சைபர் குற்றங்களுக்காக வெளிநாட்டவர்கள், ஏற்கனவே கைது செய்யப்பட்ட நாடுகளிலிருந்து வருபவர்கள் மீது மேலதிக கண்காணிப்பு முன்னெடுக்கப்படும்.

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் உண்மையான நோக்கம் குறித்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அதிகாரிகள் தீவிரமாக ஆராய்வார்கள்.

அவர்கள் சட்டபூர்வமான சுற்றுலா அல்லது அங்கீகரிக்கப்பட்ட காரணங்களுக்காகவே வருகிறார்களா என்பது உறுதி செய்யப்படும்.

விமான நிலையக் கண்காணிப்புக்கு மேலதிகமாக, ஏற்கனவே இலங்கைக்குள் தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகள் குறித்தும் பொலிஸாரும், குடிவரவு அதிகாரிகளும் தனித்தனியாகப் பரிசோதனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் மூலம் சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி சட்டவிரோத சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்களைக் கண்டறியத் திட்டமிடப்பட்டுள்ளது.

சைபர் குற்றங்களில் ஈடுபடுவது கண்டறியப்படும் எந்தவொரு வெளிநாட்டவரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

அதன் பின்னர் அவர்கள் இலங்கையிலிருந்து நாடுகடத்தப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

15 வயது சிறுவனிடம் காரை ஓட்டக் கொடுத்தவரின் உயிரை பறித்த சோகம்!!

மாவனெல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவனெல்லை – அளுத்நுவர வீதியின் அழுபத்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த முதியவர் தனது காரை ஓட்டிச் சென்று, வீட்டின் அருகே வந்ததும் அதிலிருந்த 15 வயது சிறுவனிடம் காரை ஓட்டக் கொடுத்துள்ளார்.

பின்னர் அவர் காரின் முன்பக்கமாக வீதியை கடக்க முயன்றபோது, கார் முன்னோக்கி நகர்ந்ததால் அவர் மீது கார் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் மாவனெல்லை பகுதியைச் சேர்ந்த 86 வயதுடைய முதியவர் என தெரியவந்துள்ளது.

விபத்தின்போது காரை செலுத்திய 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

வவுனியாவில் சர்வதேச செஞ்சிலுவை தினத்தை முன்னிட்டு இரத்த தான முகாம்!!

சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை தினத்தை முன்னிட்டு இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் வவுனியா கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட இரத்த தான முகாம் சிறப்பாக நடைபெற்றது.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த முகாம் இடம்பெற்றது.

தற்போதைய அவசரத் தேவைகளைக் கருத்திற்கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த முகாமில், 25-க்கும் மேற்பட்ட கொடையாளர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு இரத்த தானம் வழங்கினர்.

இரத்த தானம் என்பது ஒரு மனிதன் சக மனிதனுக்குச் செய்யக்கூடிய மிக உயரிய அறச்செயலாகும். மருத்துவ ரீதியாகவும், சமூக ரீதியாகவும் இதன் பங்களிப்பு அளப்பரியது.

விபத்துக்கள், பிரசவ கால சிக்கல்கள், பாரிய அறுவை சிகிச்சைகள் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களினால் பாதிக்கப்படுபவர்களுக்கு இரத்தம் ஒரு வரப்பிரசாதமாகும்.

நவீன மருத்துவ உலகில் எத்தனையோ முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும், மனித இரத்தத்திற்கு மாற்றீடாகச் செயற்கை முறையில் எதனையும் இன்னும் உருவாக்க முடியவில்லை. எனவே, தன்னார்வக் கொடையாளர்களே நோயாளிகளின் ஒரே நம்பிக்கை.

இரத்த தானம் செய்வதன் மூலம் கொடையாளியின் உடலில் புதிய இரத்த அணுக்கள் உற்பத்தியாவது தூண்டப்படுகிறது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடலில் இரும்புச் சத்தின் அளவைச் சீராக வைத்திருக்கவும் உதவுகிறது.

சர்வதேச செஞ்சிலுவை தினத்தில் இவ்வாறான மனிதாபிமானப் பணிகள் முன்னெடுக்கப்படுவது, சமூகத்தில் இரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், பல உயிர்களைக் காப்பதற்கான உந்துசக்தியாகவும் அமைகின்றது.

வவுனியாவில் மாவட்ட கைத்தொழில் சம்மேளனத்தை உருவாக்குவதற்கான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல்!!

வவுனியா மாவட்டத்தின் தொழில்துறை வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கோடும், மாவட்டத்திற்கான பிரத்யேக கைத்தொழில் சம்மேளனத்தை (Chamber of Industries) உருவாக்கும் நோக்கத்தோடும் முக்கிய கலந்துரையாடல் நிகழ்வொன்று வவுனியா மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் P.A.சரத் சந்திர தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை வட மாகாண கைத்தொழில் சம்மேளனம் (Northern Chamber of Industries) மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்து வழிநடத்தியது.

இதில் தொழில்துறை சார்ந்த அரச உயர்மட்ட அதிகாரிகள், முன்னணி தொழில் முனைவோர், சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் (MSME) பிரதிநிதிகள், அபிவிருத்தி சார் பங்குதாரர்கள் மற்றும் முதலீட்டு ஆலோசகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் வவுனியா மாவட்டத்திற்கென ஒரு பலமான கைத்தொழில் சம்மேளனத்தை அமைப்பது குறித்த விரிவான திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.

குறிப்பாக தொழில் முனைவோர் மற்றும் அரச துறையினரை ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்து, நிர்வாக ரீதியான தடைகளை களைதல், மாவட்டத்தின் வளங்களைப் பயன்படுத்தி புதிய முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் புதிய தொழில் வாய்ப்புகளைக் கண்டறிதல், சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் (SME) நீண்டகால வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய்தல் போன்ற விடயங்கள் ஆராயப்பட்டன.

வவுனியா மாவட்டத்தின் அமைவிடம் மற்றும் வளங்களைக் கருத்தில் கொண்டு, இயந்திர தொழில்நுட்பம் மற்றும் நவீன கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதன் மூலம் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையிலான ஒரு வலுவான வலையமைப்பை உருவாக்குவதும் இந்த சம்மேளனத்தின் எதிர்கால இலக்காகக் கொள்ளப்பட்டது.

இந்த முன்னெடுப்பானது வவுனியா மாவட்டத்தின் பொருளாதாரத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடக்கி வைப்பதாக அமைந்துள்ளது. அரசாங்கமும் தனியார் துறையும் கைகோர்த்துச் செயல்படும் போது, மாவட்டத்தின் தொழில்துறை வளர்ச்சி சர்வதேச தரத்திற்கு உயரும் என நம்பிக்கை வெளியிடப்பட்டது.

 

இந்த எண்களில் அழைப்புக்கள் வந்தால் அவதானம் : பொதுமக்களுக்கு மீண்டும் பொலிசார் எச்சரிக்கை!!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய ஒரு மோசடி மொபைல் செயலி தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு தவறுதலாக சேர்க்கப்பட்டிருந்த ஒரு தொலைபேசி எண்ணை திருத்தி அறிக்கையை வெளியிட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப்பிரிவின் முந்தைய அறிக்கையில் (D/Media/Out/649/2026) வாட்ஸ்அப் வழியாக “ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்” என்ற பெயரை பயன்படுத்தி ஆள்மாறாட்டம் செய்யும் மோசடியுடன் தொடர்புடைய எண்களில் 011‑7771979 என்ற எண்ணும் பட்டியலிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் லிமிடெட், 011‑7771979 என்பது தனது அதிகாரப்பூர்வமான, சட்டப்பூர்வமான தொடர்பு எண் என்று தெளிவுபடுத்தி, அந்த எண்ணை அறிக்கையிலிருந்து நீக்குமாறு கோரியுள்ளது.

விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியின் இந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து, பொலிஸ் ஊடகப்பிரிவு சட்டப்பூர்வமான எண்ணை நீக்கிவிட்டு, தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த மோசடி குறித்து பொதுமக்களை மீண்டும் எச்சரித்துள்ளது.

குறித்த மோசடிக்காரர்கள்(srilankan[.]wuozgo[.]cc),(srilankan[.]vaco[.]cc), மற்றும் (srilankan[.]krgo[.]cc) ஆகிய மூன்று போலி இணையதளங்களை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுகின்றமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச்செயலியை நிறுவியவுடன், பணப்பரிமாற்றம் செய்வதற்காக ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொற்கள் (OTPs), வங்கிக் கணக்கு விபரங்கள் மற்றும் தரவுகள் திருடப்படுகின்றன.

இந்த மோசடி நடவடிக்கையுடன் தொடர்புடைய எண்கள் 077‑4558361 074‑1142208 077‑5791209 074‑3268200 தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தனிநபர்களும் குழுக்களும் இதுபோன்ற திட்டங்கள் மூலம் பொதுமக்களைத் தொடர்ந்து சுரண்டி வருவதாகவும்,பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

வரதட்சணையாக Black Scorpio கேட்ட மாப்பிள்ளை : பெண்வீட்டார் கொடுத்த அதிர்ச்சி!!

இந்தியாவில் திருமணத்திற்கு முன்னதாக மாப்பிள்ளை தரப்பில் மாபிள்ளைக்கு வரதட்சணையாக ஒரு “Black Scorpio” சிற்றுந்து வேண்டும் என மாப்பிள்ளை ஒற்றைக்காலில் நின்றுள்ளார்.

பெண் வீட்டாரும் “சரி, பார்த்துக்கொள்ளலாம்” என கூறியுள்ளனர். இந்நிலையில் , மாப்பிள்ளை பெரும் கனவுகளோடு திருமண மேடை ஏறியுள்ளார்.

முகூர்த்த நேரத்தில் சிற்றுந்து சாவி கைக்கு வரும் என எதிர்பார்த்திருந்த மாப்பிள்ளைக்கு, பெண் வீட்டார் ஒரு பெரிய பார்சலை வழங்கியுள்ளனர். ஆவலோடு அதனைப் பிரித்த மாப்பிள்ளைக்கு அதிர்ச்சி காத்திருந்தது. உள்ளே இருந்தது அவர் ஆசைப்பட்ட அதே கருப்பு நிற ஸ்கார்பியோதான்.

ஆனால், அது சாலையில் ஓடும் சிற்றுந்து அல்ல, தரையில் ஓடும் விளையாட்டு பொம்மை சிற்றுந்தாகும். நீ கேட்டது கிடைச்சிருச்சு மாப்பிள்ளே என்பது போல பெண் வீட்டார் அந்தப் பொம்மை சிற்றுந்தை வழங்கிய புகைப்படம் இப்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பிரியாணி சாப்பிட்ட பின் தார்பூசணியால் பலியான நால்வர் : திடீர் திருப்பம்!!

மும்பையில் பிரியாணி சாப்பிட்ட பின்னர் தார்ப்பூசணி உண்ட ஒரே குடும்பத்தை சேர்த நால்வர் உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

அவர்கள் உட்கொண்ட தர்பூசணியில் எலி விஷம் கலக்கப்பட்டிருந்தது என தடயவியல் பகுப்பாய்வில் தெரியவந்துள்ளது.

மும்பையின் பைதோனியில் உள்ள 40 வயதான அப்துல்லா டோகாடியா, அவரது மனைவி 35 வயதான நசீம், மற்றும் அவர்களது இரண்டு மகள்களான 16 வயதான ஆயிஷா,

13 வயதான ஜைனப் ஆகிய நான்கு பேரும், ஏப்ரல் 26 அன்று தெற்கு மும்பையில் உள்ள அவர்களது இல்லத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.

இந்நிலையில் யஉயிரிழந்தவர்களின் உள்ளுறுப்பு மாதிரிகள் மற்றும் தர்பூசணிசேகரிக்கப்பட்டது.

அம்மாதிரிகளில், பொதுவாக எலி விஷத்தில் பயன்படுத்தப்படும் துத்தநாக பாஸ்பைடு கண்டறியப்பட்டது என்று தடயவியல் அறிவியல் ஆய்வகம் வியாழக்கிழமை (07.05) மும்பை பொலிஸார் சமர்ப்பித்த தடயவியல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துத்தநாக பாஸ்பைடு, எலிகள் போன்ற கொறித்துண்ணிகளைக் கட்டுப்படுத்தவும், விவசாய நிலங்கள் அல்லது சேமிக்கப்பட்ட தானியங்களில் ஒற்றை டோஸ் விஷமாகவும் பயன்படுத்தப்படுகிறது.

துத்தநாக பாஸ்பைடு அதிக நச்சுத்தன்மை வாய்ந்தது என்றும், அதுவே அந்தக் குடும்பத்தின் மரணத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாட்டில் சில மாவட்டங்களில் 100 மில்லிமீட்டர் மேல் மழை : பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!

இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் காணப்படும் தளம்பல் நிலை காரணமாக, நாடு முழுவதும் நிலவுகின்ற மழையுடனான வானிலை அடுத்த சில தினங்களிலும் தொடரக்கூடும் என வானிலை ஆய்வு துறை தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீட்டருக்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை நேரத்திலும் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பகல் நேரத்தில் அதிக வெப்பநிலை உணரப்படக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய நிலை இருப்பதால், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நடனப் பயிற்சியின் போது திடீரென இடிந்து விழுந்த கட்டிடம் : 3 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!!

கிழக்கு பல்கலைக்கழக மாணவிகள் நடனப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, கட்டிடத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்ததில் 3 மாணவிகள் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் (06.05.2026) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்த இசை மற்றும் நடனக் கல்லூரியில் உள்ள மேல் மாடிக் கட்டிடம், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், கட்டிடம் உறுதியற்ற நிலையில் இருந்தபோதிலும், மாணவர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் இறுதியாண்டு மாணவிகள் நடனப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது,

திடீரென மாடிக் கட்டிடத்தின் மேல் தரையின் ஒரு பகுதி இடிந்து அவர்கள் மீது விழுந்துள்ளது. இதனால் 3 மாணவிகள் படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, கட்டிடத்தின் நிர்மாணத் தரம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரி ஒருவர் பதவி விலகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.