மீண்டும் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை : நாகமுத்து பிரதீபராஜா விடுத்துள்ள எச்சரிக்கை!!

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கு திசையில் இன்று இரவு உருவாகும் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக நாளை முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை வடக்கு,

கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளில் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில் மேலும் குறிப்பிடுகையில், இன்று இரவு (11.02.2026) வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கு திசையில் உருவாகும் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக நாளை (12.02.2026) முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை வடக்கு,

கிழக்கு, மத்திய, ஊவா, மேற்கு, வட மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் சற்றுக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

குறிப்பாக நாளை இரவு யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் சற்று கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அதேவேளை நாளை மறுதினம் கிழக்கு, மத்திய, மேல், வடமத்திய மற்றும் தென் மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

மீளவும் எதிர்வரும் 16ம் திகதியளவில் வங்காள விரிகுடாவில் மீண்டும் ஒரு காற்றுச் சுழற்சி உருவாகும் வாய்ப்புள்ளது.

இதனால் மீண்டும் 16 ம் திகதி முதல் 19 ம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அதேவேளை இலங்கைக்கு அதிக மழை கிடைக்க காரணமாக விளங்குகின்ற மேடன் ஜுலியன் அலைவானது (MJO) எதிர்வரும் நாட்களில் வங்காள விரிகுடாக் கடற்பகுதிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதனால்

எதிர்வரும் பெப்ரவரி மாதத்தின் இறுதி நாட்களிலும் மார்ச் மாதத்தின் ஆரம்ப நாட்களிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளில் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

எனினும் இதனை அடுத்த சில நாட்களிலேயே உறுதிப்படுத்த முடியும். எனவே இந்த நாட்களைக் கருத்தில் கொண்டு விவசாயிகள் தங்கள் அறுவடை மற்றும் அறுவடைக்கு பின்னான செயற்பாடுகளை மேற்கொள்வது சிறந்தது என தெரிவித்துள்ளார்.

யாழில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சிறுவன் : சடலத்துடன் வீதியில் போராடிய உறவுகள்!!

புதிய இணைப்பு

யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பலியான சிறுவனின் சடலமானது வழுக்கையாறு இந்து மயானத்தில் சற்றுமுன்னர் புதைக்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு

யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனின் மரணத்திற்கு நீதிக்கோரி சடலத்துடன் உறவுகள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி செலுத்தி சென்ற வாகனத்தின் மீது நேற்று முன் தினம்(10.02.2026) பொலிஸார் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டிருந்தனர்.

பொலிஸாரை கைது செய்யுமாறு கோரி போராட்டம்

இந்த சம்பவத்தில் காயமடைந்த வட்டுக்கோட்டையை சேர்ந்த அருள்பயஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

இந்நிலையில், சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பொலிஸாரை கைது செய்யுமாறு கோரி சடலத்துடன் வீதியில் போராடியுள்ளனர்

இறுதிக்கிரியைகள்

அல்லைப்பிட்டியில் வைத்து ஊர்காவற்துறை பொலிஸாரால் சுட்டுப்படுகொவை செய்யப்பட்ட சிறுவனின் இறுதிக் கிரியைகள் இன்றையதினம் வட்டுக்கோட்டை – சித்தங்கேணியில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது.

அதன்பின்னர் பதாகைகளை தாங்கியவாறு சடலத்துடன் வந்த உறவுகள் வீதியில் இருந்து “பொலிஸாரை கைது செய், எமது பிள்ளைக்கு நீதி வேண்டும், பொலிஸாரின் அராஜகம் தொடர்கிறது” என கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்போது உடலம் நவாலி இந்து மயானத்தில் புதைப்பதற்காக கொண்டு செல்லப்படுகிறது.

 

அடுத்த 10 நாட்களில் தங்கம் விலையில் அதிரடி மாற்றம் : முதலீடு செய்பவர்களுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை!!

உலக சந்தையில் தங்க விலை மீண்டும் அதிகரித்து வரும் நிலையில்,அடுத்த வாரம் வெளியாக உள்ள அமெரிக்க பணவீக்க தரவுகள் மற்றும் பொருளாதார முடிவுகள் தங்கத்தின் விலையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக தங்க சந்தையில் அடுத்த 10 நாட்கள் முக்கியம் என்றும் கூறப்படுகின்றது சர்வதேச சந்தையில் (Comex), தங்கம் கடந்த வாரத்தில் மட்டும் ஒரு அவுன்ஸ் $234.70 (சுமார் 5%) அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் $4,400 என்ற குறைந்த விலைக்குச் சென்ற தங்கம், தற்போது மீண்டும் $5,000 என்ற நிலையை எட்டியுள்ளது.

சமீபத்தில் தங்கம் விலை கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவைச் சந்தித்த நிலையில், அமெரிக்க டொலரின் மதிப்பு உயர்ந்தது மற்றும் வட்டி விகித குறைப்பு குறித்த எதிர்பார்ப்புகளில் மாற்றம் ஏற்பட்டதே இந்த சரிவுக்குக் காரணமாக கூறப்படுகின்றது.

தங்கம் விலை உயர்ந்தாலும், வெள்ளி விலை இன்னும் அழுத்தத்திலேயே உள்ளதுடன், சர்வதேச சந்தையில் வெள்ளி விலை 2.08% குறைந்துள்ளது. ஜனவரி மாத இறுதியில் வெள்ளி விலை மிக உயர்ந்த நிலையில் இருந்து திடீரென சரிவைச் சந்தித்தது.

இந்த ஏற்ற இறக்கங்கள் இன்னும் சில காலம் தொடரலாம் என்பதால், வெள்ளியில் முதலீடு செய்பவர்கள் சற்று எச்சரிக்கையாக இருக்குமாறு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் பொருளாதார சூழல்கள் காரணமாக தற்போது தங்கத்தின் மீதான ஆர்வம் குறையாது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அந்த வகையில், இலங்கையில் தங்கத்தின் விலையிலும் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன்,இதன்படி, தற்போதைய நிலவரப்படி ஒரு பவுண் 24 கரட் தங்கம் 405,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.

அத்துடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 370,900ரூபாயாக, விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 21 கரட் தங்கம் பவுண் ஒன்று 354,300 ரூபாயாக, விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனைவி, இரு குழந்தைகளுக்கு விஷம் கலந்த கேக் கொடுத்து கணவா் எடுத்த விபரீத முடிவு!!

சென்னை பெரம்பூர் சங்கர மடம் பகுதியை சேர்ந்த சகாய செபாஸ்டின் தனியார் கையிருப்பு கிடங்கில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ரெக்ஸி பியூலா புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார்.

பல சிகிச்சைகள் எடுத்தும் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் குடும்பம் முழுவதும் சோகத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த செபாஸ்டின் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்ததாக தெரிகிறது.

நேற்று இரவு வீட்டருகே உள்ள கடையில் இருந்து ‘ஹேப்பி பேமிலி டே’ என்று எழுதப்பட்ட கேக் வாங்கி வந்து குடும்பத்துடன் வெட்டியுள்ளார். கேக் சாப்பிட்ட சில நிமிடங்களில் மகன் இமான் ஆண்டோ மயங்கி விழுந்தார்.

தொடர்ந்து மனைவி மற்றும் மகளும் மயங்கி விழுந்ததை பார்த்த செபாஸ்டின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நான்கு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு செபாஸ்டின் மற்றும் அவரது மகன் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பியூலா மற்றும் மகள் இவாஞ்சலின் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முதற்கட்ட விசாரணையில் கேக்கில் விஷம் கலந்து குடும்பத்துடன் தற்கொலை செய்ய முயன்றது தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

கணவனைக் காப்பாற்ற ஓடும் ரயிலில் இருந்து குதித்த மனைவி பரிதாபமாக உயிரிழப்பு!!

ஓடும் ரயிலில் கதவருகே நின்று பயணித்த கணவன், தவறி விழுந்த நிலையில், கணவனைக் காப்பாற்ற சற்றும் தாமதிக்காமல் ஓடும் ரயிலில் இருந்து குதித்த மனைவி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பதி – ராமேஸ்வரம் விரைவு ரயிலில் பயணம் செய்துக் கொண்டிருந்த தம்பதியர், வேலூர் மாவட்டம், காட்பாடி மற்றும் அரக்கோணம் இடையே ரயில் சென்று கொண்டிருந்த போது,

ரயிலின் கதவு அருகே நின்று கொண்டிருந்த கணவர், ரயில் ஒரு வளைவில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி தண்டவாளத்தில் விழுந்துள்ளார்.

தன் கண் எதிரே ரயிலில் இருந்து கணவன் தவறி கீழே விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, ஒரு நொடி கூட யோசிக்காமல் தனது கணவனைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், வேகமாகச் சென்று கொண்டிருந்த ரயிலில் இருந்து கீழே குதித்துள்ளார்.

ரயிலில் இருந்த மற்ற பயணிகள் உடனடியாக அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர்.

தண்டவாளப் பகுதியில் தேடியபோது பலத்த வேகத்தில் ரயிலில் இருந்து குதித்ததில், அந்தப் பெண் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தண்டவாளத்தில் விழுந்த கணவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்குத் துடித்த நிலையில் மீட்கப்பட்டார்.

இது குறித்து தகவலறிந்து வந்த ரயில்வே போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர், காயமடைந்த கணவரை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். உயிரிழந்த பெண்ணின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ரயில்வே நிர்வாகம் இது குறித்து மீண்டும் ஒருமுறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஓடும் ரயிலில் கதவு அருகே அமர்ந்தோ அல்லது நின்றோ பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

குறிப்பாக வளைவுகளில் ரயில் திரும்பும்போது கதவு அருகே இருப்பவர்கள் நிலைதடுமாற வாய்ப்புள்ளது என்பதால் கூடுதல் கவனம் தேவை.

கணவன் கண்ணெதிரே விழுந்ததைக் கண்டு, உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் குதித்த மனைவியின் இந்தச் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

260 பேரை பலிகொண்ட அகமதாபாத் விமான விபத்து : இத்தாலி நாளிதழ் வெளியிட்ட பரபரப்புத் தகவல்!!

இந்தியா அகமதாபாத் விமான விபத்து ஒரு தொழில்நுட்பக் கோளாறு அல்ல, மாறாக விமானியின் திட்டமிட்டச் செயல் என இத்தாலிய நாளிதழான ‘கொரியர் டெல்லா செரா’ வெளியிட்டுள்ள செய்தி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2025 ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி, , இந்தியாவின் குஜராத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI171 என்ற விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது.

புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மேகானி நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள பயிற்சி மருத்துவர் குடியிருப்பில் மோதி விமானம் விபத்துக்குள்ளானது.

விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில், அதில் விஸ்வேஷ் குமார் ரமேஷ் என்பவர் மட்டும் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தார். விமானத்தில் பயணித்தவர்களைத் தவிர அந்த கட்டடத்தில் இருந்தவர்கள் என மொத்தம் 260 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது உலகம் முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, புலனாய்வுப் பணியகம் (AAIB) விசாரணை நடத்தி, முதற்கட்ட அறிக்கையை வெளியிட்டது.

அதில்,’இரண்டு என்ஜின்களுக்கான எரிபொருள் கட்ஆஃப் சுவிட்சுகள், 1 வினாடி இடைவெளியில், உயரத்தில், ஒன்றன்பின் ஒன்றாக கட்ஆஃப் நிலைக்கு நகர்த்தப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக இரண்டு விமானிகள் பேசிய விமானத்தின் காக்பிட்டில் இருந்த குரல் பதிவும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், பலதரப்பிலும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

அதாவது, இந்த விபத்துக்குக் காரணமாக விமானி இருந்திருக்கலாம் எனக் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு விமான வல்லுநர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மத்திய அரசும் இந்தக் கூற்றை மறுத்திருந்தது.

இந்த நிலையில், ‘அகமதாபாத் விமான விபத்து ஒரு தொழில்நுட்பக் கோளாறு அல்ல, மாறாக விமானியின் திட்டமிட்டச் செயல்’ என்று இத்தாலிய நாளிதழான ‘கொரியர் டெல்லா செரா’ வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆதாரங்களை மேற்கோள் காட்டி, விமானி இயந்திர எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளை அணைத்ததால் விமானம் சக்தியை இழந்து தரையில் விழுந்ததாக புலனாய்வாளர்கள் நம்புவதாக அது தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டனில் ஆய்வு செய்யப்பட்ட விமானத்தின் காக்பிட் குரல் பதிவு தரவுகள் மூலம், விமானத்தின் தலைமை விமானி கேப்டன் சுமித் சபர்வாலே என்ஜின்களை அணைத்ததாக தெரியவருவதாக கொரியர் டெல்லா செரா அறிக்கை கூறுகிறது.

மேலும் விமானி மன அழுத்தத்தில் இருந்தது விபத்து நடந்து ஒரு மாதத்திற்குப் பின் தெரிய வந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரியர் டெல்லா செராவின் கூற்றுப்படி,

இறுதி விசாரணை அறிக்கையில் விமானிகளின் தொடர்ச்சியான உளவியல் மதிப்பீடு மற்றும் மனநல கண்காணிப்பு குறித்த பரிந்துரைகளும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை முன்னதாக, அமெரிக்க ஊடகமான வால் ஸ்ட்ரீட் ஜர்னல், அகமதாபாத் விமான விபத்துக்கு காரணமான எரிபொருள் கட்டுப்பாட்டு ஸ்விட்சுகளை கேப்டன் அணைத்ததாகச் சுட்டிக்காட்டி ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் முதலாவது குரங்கு தடுப்பு மையம் : 150 ஏக்கரில் தனி உலகம்!!

மாத்தளை மாவட்டத்தில் உள்ள களுங்கங்கை நீர்த்தேக்கத்திற்கு அருகில் இலங்கையின் முதலாவது குரங்கு தடுப்பு மற்றும் பராமரிப்பு மையத்தை (Monkey Detention Centre) நிர்மாணிப்பதற்கு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் (DWC) இடத்தை அடையாளம் கண்டுள்ளது.

இந்த மையம் 150 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது. இதில் குரங்குகளுக்கான உணவு, நீர் மற்றும் போதிய பாதுகாப்பு வசதிகள் இங்கு ஏற்படுத்தப்படும். மேலும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பரிந்துரைக்கு இணங்க, மாத்தளை மாவட்ட அபிவிருத்திக் குழு இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.

மாத்தளை நகருக்குள் புகுந்து பொதுமக்களுக்குத் தொல்லை கொடுத்து வரும் குரங்கு கூட்டங்கள் பாதுகாப்பான முறையில் பிடிக்கப்பட்டு இந்த மையத்திற்கு மாற்றப்படும்.

இவை மீண்டும் காடுகளுக்குள் தப்பிச் செல்வதைத் தடுக்க பலமான பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படவுள்ளன.

குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்காக, பெண் குரங்குகளின் கருப்பையில் சிறிய அளவிலான கருத்தடை வளையங்களை (Contraceptive Loops) பொருத்தும் நவீன மருத்துவ முறை பயன்படுத்தப்படவுள்ளது.

ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒரு தடுப்பு மையம் வீதம், நாடு முழுவதும் 9 மையங்களை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரி சமத் லக்ஷ்மன் பெரேரா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடவுச்சீட்டு பெற காத்திருந்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடவுச்சீட்டு வழங்கல் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொழிநுட்பக் கோளாறு காரணமாக இன்று (12) காலை இந்த செயல்முறையை இடைநிறுத்த முடிவு செய்திருந்தனர்.

இருப்பினும், தொழிநுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளதால், கடவுச்சீட்டுகள் வழக்கம்போல் வழங்கப்படும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

முதலாம் இணைப்பு : இலங்கையில் கடவுச்சீட்டு வழங்கல் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் ஏற்பட்ட கணினி செயலிழப்பால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விரைவில் சேவைகளை மீட்டெடுக்க அதிகாரிகள் பணியாற்றி வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் ஊடகப் பேச்சாளர் கூறுகையில், இந்த அமைப்பை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

 

எடை குறைப்பு முதல் இதயம் ஆரோக்கியம் வரை : சர்க்கரைவள்ளிக் கிழங்கின் நன்மைகள்!!

சர்க்கரை வள்ளிக் கிழங்கு (Sweet Potato) நார்ச்சத்து, வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்த ஒரு ஆரோக்கியமான உணவாகும். இது மலச்சிக்கலை நீக்கி, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இபோமோயா பட்டடாஸ் (Ipomoea batatas) என்று அழைக்கப்படும் இது, இனிப்பு சுவையுடையது, உடல் எடை குறைப்பு மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

உடலில் சதை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவும் இதனை வயது வித்தியாசமில்லாமல் அனைவரும் சாப்பிடலாம்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உடலில் குளூக்கோஸ் அளவை அதிகரிக்கும் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக இருப்பதால் சர்க்கரை நோய் உள்ளவர்களும் இதைச் சாப்பிடலாம்.

நார்சத்து நிறைந்துள்ளதால் குடலின் ஆரோக்கியம் மேம்படுத்தப்படுகிறது. இதனால் மலச்சிக்கல் உள்ளிட்ட குடல் சாந்த பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.

இதிலுள்ள வைட்டமின் பி அதிரோஸ்கிளிரோசிஸ் என சொல்லப்படும் பெருந்தமனி தடிப்பு வராமல் தடுக்கிறது. இதனால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறைகிறது.

பெருந்தமனி தடிப்பு புகைப்பிடித்தல், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மது அருந்துதல், அதிக எடை ஆகியவை காரணமாக ஏற்படுகிறது.

அதுமட்டுமல்லாது இதிலுள்ள பொட்டாசியம், மாங்கனீசு, மெக்னீசியம், கரோட்டினாய்ட்ஸ், பீட்டா கரோட்டின் ஆகியவை வாய் முதல் ஆசனவாய் வரையிலான உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய்க்கான செல்களை அழித்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

இது உள் உறுப்புகளின் வீக்கத்தைக் குறைத்து, இயற்கையாகவே உடலை சுத்தம் செய்யும் பண்புகளை கொண்டுள்ளது. இதிலுள்ள வைட்டமின் ஏ கண், தோல்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்தான போலிக் அமிலமானது சர்க்கரை வள்ளி கிழங்கு மூலம் எளிதாக கிடைக்கிறது. இதனை அதிகம் சாப்பிட்டால் கருவில் உள்ள குழந்தைக்கும் மிக நல்லது என கூறப்படுகின்றது.

இந்தியாவில் சமூக ஊடகங்களுக்கு புதிய கட்டுப்பாடு!!

இந்தியாவில் சமூக ஊடகங்களுக்கு மிகக்கடுமையான புதிய கட்டுப்பாடுகளை இந்தியா விதித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடு எதிர்வரும் 20ஆம் திகதி நடைமுறைக்கு வரவுள்ளது.

சட்டவிரோதமானதாகக் கருதப்படும் பதிவுகளை வெறும் 03 மணித்தியாலங்களுக்குள் நீக்க வேண்டும் என்பதே இந்தப் புதிய கட்டுப்பாடாகும். இதற்கு முன்னர் நிறுவனங்களுக்கு 36 மணித்தியாலங்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.

இனி வரும் காலங்களில் நீதிமன்றம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க அதிகாரி உத்தரவிட்ட 03 மணித்தியாலங்களுக்குள் அந்தப் பதிவை நீக்க வேண்டும்.

சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவும் டீப்ஃபேக் (Deepfake) எனப்படும் போலி வீடியோக்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் தவறான தகவல்களைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு செய்தி வைரலாகி சமூகப் பதற்றத்தை உருவாக்கும் முன்பே அதை முடக்குவதே அரசின் நோக்கம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை இந்தியாவின் புதிய கட்டுப்பாடுகளை செயல்படுவது மெட்டா, யூடியூப் மற்றும் எக்ஸ் போன்ற சமூக ஊடக நிறுவனங்களுக்கு சவாலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

கீரி கடித்ததால் 7 வயதுச் சிறுவன் பரிதாபமாக பலி!!

திருவாரூர் அருகே கீரிப்பிள்ளை கடித்து 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன் கீரிப்பிள்ளை கடித்த நிலையில், திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

திருவாரூர் அருகே கீரிப்பிள்ளை கடித்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் அண்மைகாலமாக தெருநாய் கடி பிரச்சனை அதிகரித்துள்ளது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.இதற்கு ஒருபடி மேல 100 க்கும் மேற்பட்டவர்கள் தெருக்நாய்கடி மற்றும் ரேயிஸ் நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இத்தகைய சூழலில், தமிழ்நாட்டில் கீரிப்பிள்ளை கடித்து 7 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

திருவாரூர் அம்மையப்பன் புதுத்தெருவைச் சேர்ந்த முத்து மற்றும் தேவி தம்பதியரின் மூத்த மகன் நவீன், அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் முதலாம் வகுப்பு கல்வி பயின்று வருகிறார்.

7 வயதான நவீனுக்கு சில நாட்களுக்கு முன் திடீரென உடல்நலப் பிரச்சனை ஏற்பட்டது. அதிக காய்ச்சலுடன் மூச்சு விட சிரமப்பட்டதால், பெற்றோர் உடனடியாக சிறுவனை திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்

அங்கு சிறுவன் நவீனுக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து அவசர சிகிச்சை அளித்துள்ளனர்.பின்னர், சிறுவனுக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலப் பிரச்சனைக்கான காரணத்தை மருத்துவர்கள் கேட்டுள்ளனர்.

அப்போது, சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு நவீனை கீரிப்பிள்ளை கடித்த சம்பவம் நடந்ததாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

முத்து தனது வீட்டில் கோழிகளை வளர்த்து வந்த நிலையில், அவற்றை பிடிக்க இரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த கீரிப்பிள்ளை, தூங்கிக்கொண்டிருந்த நவீனின் கையை கடித்ததாக கூறப்படுகிறது.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் சிறுவனின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அதன்பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.தொடர்ந்து சிறுவன் நவீனுக்கு கீரிப்பிள்ளை கடித்த இடத்தில் அடிக்கடி வலி ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், சம்பவத்தன்று கடுமையான வலியால் சிறுவன் துடித்ததுள்ளான்.

அப்போது அருகிலிருந்த மருந்தகத்திற்கு சென்ற பெற்றோர் அவசரமாக ஒரு ஊசி போட்டதாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னர் சிறுவனுக்கு வலி சற்று குறைந்துள்ளது.

ஆனால் மூன்று மாதங்கள் கழித்து, சிறுவனின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது.தொடர்ந்து, அதிக காய்ச்சல், உடல் சோர்வு, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டதால்,

அவசரமாக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தனிப்பிரிவில் வைத்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

ஆனால் சிறுவன் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்தது. தொடர்ந்து, சுவாசிக்க சிரமப்பட்ட சிறுவன், உடல் பகுதிகள் செயல் இழந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

பின்னர், சுகாதார அதிகாரிகள் முன்னிலையில் உடல் அடக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கீரிப்பிள்ளை கடித்த சம்பவத்துக்குப் பிறகு ஏற்பட்ட இந்த துயர மரணம், அந்தப் பகுதியில் உள்ள மக்களிடம் பெரும் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் உயிரிழந்த குடும்பங்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், வனத்துறையினர் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் அடிக்கடி ரோந்து பணிகளில் ஈடுப்பட்டு மக்கள் பாதுக்காப்பை உறுதிச் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

கணவன் வீட்டுச் செலவுக்கு பணம் தராததால் இரு மகள்களுடன் தாய் எடுத்த விபரீத முடிவு!!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புத்தூர் கிருஷ்ணா நகரில் தாய் ஒருவர் தனது 2 மகள்களை கொன்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீசிட்டி தொழிற்பூங்காவில் வேலை பார்த்து வரும் சிவசங்கரின் மனைவி பத்மா (32) இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கு தேஜாஸ்ரீ (7), லாஸ்யா (5) என்ற 2 மகள்கள் இருந்தனர்.

காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிகள் தனியாக வாழ்ந்து வந்தனர்.

கணவர் சரியாக வேலைக்கு செல்லாமல், வீட்டு செலவுக்கு பணம் தரவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த பத்மா, தனது 2 மகள்களையும் கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இரவு வீட்டிற்கு வந்த சிவசங்கர் சம்பவத்தை கண்டு போலீசாருக்கு தகவல் அளித்தார். போலீசார் உடல்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மேலும், பத்மா எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

பெற்றோர்களே அவதானம் : பேன் தொல்லையால் 12 வயதுச் சிறுமி பலி!!

ஒடிசா மாநிலம் பூரி பலங்கா பகுதியில் சேர்ந்த 12 வயது சிறுமி லட்சுமிப்ரியா சாஹு, கடுமையான பேன் தொல்லையால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமியின் தலையில் பல மாதங்களாக பேன்கள் இருந்ததாகவும், சிகிச்சை எடுத்தும் குணமாகவில்லை என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தலையில் ஏற்பட்ட துர்நாற்றம் காரணமாக வெளியே செல்வதையும் சிறுமி நிறுத்தியதாக கூறப்படுகிறது.

தனது உடல்நிலை பிரச்சினையை குடும்பத்தினரிடமிருந்து சிறுமி மறைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மூன்று நாட்களுக்கு முன்பு சிறுமி திடீரென இரத்த வாந்தி எடுத்ததால், உடனடியாக பூரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு சிறுமி உயிரிழந்தார்.

சிறுமியின் தலையை மொட்டையடிக்க ஆசிரியர்கள் அறிவுறுத்தியதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்கு சிறுமி சம்மதிக்காமல் அழுததாக கூறப்படுகிறது.

சிகிச்சையளிக்கப்படாத பேன் தொல்லையின் ஆபத்தை இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

 

தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றம் : விலை நிலவரம் வரலாற்றில் புதிய உச்சத்தை தொடுமா?

உலக சந்தையில் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகிறது. அந்த வகையில் முன்னதாக 5ஆயிரம் அமெரிக்க டொலரை தாண்டியிருந்த ஒரு அவுண்ஸ் தங்கத்தின் பெறுமதி 4750 டொலர்கள் என்ற மட்டத்தை அடைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் ஏறு முகத்தை கண்டு வருகிறது.

இந்த நிலையில் இன்றைய தினத்தின் அடிப்படையில் உலக சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தை பார்க்கும் போது சுமார் 5050 முதல் 5070 அமெரிக்க டொலர்கள் என்ற நிலையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது பதிவாகியுள்ளது.

இது தொடர்பில் வர்த்தக அவதானிகள் கூறுகையில், இவ்வருடத்தில் உலக சந்தையில் தங்கத்தின் விலையானது 6000 அமெரிக்க டொலர்களை தொடும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான சூழலில் இலங்கையிலும் தங்தக்தின் விலையானது ஏற்ற இறக்கமாகவே காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 395000 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 365400 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

என்ற போதும் இலங்கையில் இன்றைய தினம் தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

சர்வதேச சந்தை மற்றும் உள்ளூர் சந்தை நிலவரங்களுக்கு அமைவாக, இன்று தங்கத்தின் விலையில் அதிகரிப்போ அல்லது குறைவோ ஏற்படாது ஸ்திரமான நிலையில் காணப்படுவதாக அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

கனடாவில் பாடசாலையில் பதற்றம் : 10 பேர் சுட்டுக்கொலை – பலர் படுகாயம்!!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள டம்ப்ளர் ரிட்ஜ் பகுதியில் அமைந்துள்ள மேல்நிலைப் பாடசாலையில் செவ்வாய்க்கிழமை மதியம் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சந்தேக நபரான துப்பாக்கிதாரி உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

7 முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவர்கள் பயிலும் டம்ப்ளர் ரிட்ஜ் மேல்நிலைப் பாடசாலையில் மதியம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு குறித்த தகவல் கிடைத்தவுடன், பொலிஸார் உடனடியாக அந்தப் பகுதியில் அவசரகால எச்சரிக்கையை விடுத்தனர்.

பொலிஸார் உடனடியாக பாடசாலைக்கு நுழைந்து சோதனை செய்தபோது, பாடசாலை வளாகத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். மற்றொரு இடத்தில் மேலும் 2 உடல்கள் மீட்கப்பட்டன.

மருத்துவமனை செல்லும் வழியில் படுகாயமடைந்த ஒருவர் உயிரிழந்தார். இந்த நிலையில் சந்தேக நபர், தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்த நிலையில் பாடசாலை வளாகத்தில் மீட்கப்பட்டுள்ளார்.

பூனையை மனிதாபிமானமற்ற முறையில் துன்புறுத்தியவருக்கு நேர்ந்த கதி!!

கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்திய காணொளி குறித்து விசாரணையை முன்னெடுத்த வலப்பனை பொலிஸார், அந்த காணொளியுடன் தொடர்புடைய சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.

பூனையை மனிதாபிமானமற்ற முறையில் துன்புறுத்தும் நபர் பற்றிய காணொளி சமூக ஊடகங்களில் பரவியது. இதனையடுத்து விலங்கு உரிமை அமைப்புகள் உட்பட பல தரப்பினர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அதற்கமைய, காணொளியில் தோன்றும் சந்தேக நபர் வலப்பனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் திப்பட்டுகொட பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பூனையின் உரிமையாளர் ஆவார்.

குறித்த நபரை வலப்பனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

சந்தேக நபரின் மனநிலையை பரிசோதித்து மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.