யாழ்ப்பாணம் புங்குடுதீவு, வாணர் பாலத்திற்கு அருகே இன்று இடம்பெற்ற கோர வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
புங்குடுதீவு வாணர் பாலம் பகுதி, மடத்துவெளி கடற்படை முகாமிற்கு அருகாமையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
புங்குடுதீவில் இருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞர் மீது, எதிர் திசையில் வந்த சொகுசுப் பேருந்து பலமாக மோதியுள்ளது குறித்த பேருந்து மிக அதிவேகமாகப் பயணித்ததே இந்த உயிரிழப்பிற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞர் துரதிர்ஷ்டவசமாகச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், பேருந்து ஓட்டுநரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த மூன்று நாட்களில் இணையவழிக் குற்றங்கள் தொடர்பாக 157 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, இலங்கை வேலைவாய்ப்பு இணையதளங்களில் வெளியிடப்பட்ட பல இணையவழி வேலை விளம்பரங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த விளம்பரங்கள் குறைந்த தகுதிகளுடன், வழக்கத்திற்கு மாறாக அதிக சம்பளத்தை ரூ. 100,000 ஐத் தாண்டி வழங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வேலைவாய்ப்புகளை பெற சாதாரண தகுதிகள் கூட போதுமானவை என்றும் கூறப்பட்டு மோசடியில் ஈடுபடுகின்றமை தெரியவந்துள்ளது.
மியான்மர் மற்றும் துபாயில் செயல்படும் இணையக்குற்றக்கும்பல்கள், தகவல் தொழில்நுட்பம் தொடர்பான வேலைவாய்ப்பு என்ற போர்வையில் இவ்வாறு இளைஞர்களைக் குறிவைத்து செயற்படுகி்ன்றமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்காக இணையவழிக் குற்றவாளிகள் ஆட்சேர்ப்பு உத்திகளை விளம்பரங்கள் மூலம் மேற்கொள்வதாகவும் புலனாய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இரத்தினபுரி – பெல்மதுல்ல வீதியில் உள்ள பதக்கடா சந்திப்புப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்தானது இன்று (06.05.2026) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்கள் ஹாலி எல பகுதியைச் சேர்ந்த 49 மற்றும் 28 வயதுடைய தாயும் மகனும் என தெரியவந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி, இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பாதாள உலகக்குழுத்தலைவர் பாணந்துறை குடு சலிந்துவின் உதவியாளரின் பெருந்தொகை சொத்துக்கள் இன்று (05) முடக்கப்பட்டுள்ளன.
இவர் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
பாணந்துறை குடு சலிந்துவின் (சலிந்து மல்சித்த) பிரதான உதவியாளரான துபாய் அசிதா, போதைப்பொருள் வலையமைப்பின் மூலம் சம்பாதித்ததாகக் கூறப்படும் சொத்துக்களை முடக்கியுள்ளதாக சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, ரூ. 40 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள சொத்துக்கள், இரண்டு மாடி வீடு, 10 பேர்ச் நிலப்பரப்பில் கட்டப்பட்டு வரும் வீடு, 10 பேர்ச் நிலப்பரப்பு கொண்ட மற்றொரு காணி,
சுமார் 106 கிராம் எடையுள்ள தங்க நகைகள் மற்றும் ரூ. 1 மில்லியன் மதிப்புள்ள பணம் ஆகியவை சொத்துக்களில் அடங்கும் என்று புலனாய்வுப்பிரிவு தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் பாதாள உலகக்குழுத்தலைவரான பாணந்துறை குடு சலிந்து வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ளார்.
இவருடன் தொடர்புடையவர்கள் மற்றும் உதவியாளர்கள் அவ்வப்போது சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
வட மற்றும் தென் அரைக்கோளக் காற்று சங்கமிக்கும் மண்டலமான இடைவெப்பமண்டல சங்கம மண்டலம், நாட்டின் வானிலையைப் பாதித்து வருவதாக வானிலை ஆய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் விளைவாக, இன்று (06) முதல் நாட்டில் மழைப்பொழிவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக துறை தெரிவித்துள்ளது. அதன்படி, பிற்பகல் சுமார் 1:00 மணிக்குப் பிறகு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
குறிப்பாக மேற்கு, சபரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மாவட்டத்திலும் மேகமூட்டத்துடன் காணப்படும், மேலும் காலையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு, காலி, மாத்தறை மற்றும் பொலன்னறுவ மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீற்றருக்கு மேல் கனமழை பெய்யக்கூடும்.
மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை நேரங்களில் பனிமூட்டமான சூழல் நிலவக்கூடும் என வானிலை ஆய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை ஆய்வுத் துறை பொதுமக்களை வலியுறுத்துகிறது.
வவுனியா, மரக்காரம்பளை கிராமத்தில் தோட்ட நிலத்திற்குள் உட்புகுந்த காட்டு யானைகள் காய்க்கும் நிலையில் இருந்த பெருமளவு தென்னை பயிர்களையும் வாழை மரங்களையும் சேதமாக்கிச் சென்றுள்ளது.
குறித்த கிராமத்தினுள் உட்புகுந்த யானைகள் காய்க்கும் நிலையில் இருந்து பதினெட்டுக்கும் மேற்பட்ட தென்னைபயிர்களையும், ஐம்பதுக்கும் மேற்பட்ட வாழைமரங்களையும் நாசமாக்கிச் சென்றுள்ளது.
நகரின் எல்லைக் கிராமமான குறித்த கிராமத்தில் யானைகளின் தொல்லை காணப்படாத நிலையிலே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளமையால் கிராம மக்கள் பெரும் அச்சத்தின் மத்தியில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தமது கிராமத்தினை சூழ யானை வேலியை அமைத்து தருமாறு கிராமமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (06) அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
24 கரட் தங்கம் பவுண் ஒன்று நேற்று 388,000 ரூபாவாக காணப்பட்ட நிலையில், இன்று 7000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 395,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 363,400 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
முதலாம் இணைப்பு : தங்கத்தின் விலையில் இன்றைய தினம் (06.05.2026) அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது. அந்த வகையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4625.24 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அதேவேளை, வெள்ளி ஒரு அவுண்ஸ் விலை 74.93 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில்,
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த உயர்வு காரணமாக, இலங்கையிலும் தங்க விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இடைவெப்பமண்டல ஒருங்கிணப்பு வலயத்தின் தாக்கம் மற்றும் இலங்கைக்கு அருகில் உருவாகக்கூடிய கீழ் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக காலநிலையில் இன்று முதல் மாற்றம் ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (06.05.2026) முதல் அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் மழை வீழ்ச்சி அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டமான வானிலை நிலவும் வாய்ப்பும் உள்ளதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்க்கத் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வளிமண்டலவியல் திணைக்களம் இத்தொகுதியின் உருவாக்கம் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருகின்றது.
இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகள் தொடர்பாக பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள் என வளிமண்டலவில் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வாகனங்களின் விலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி 1.25 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக உயர்த்தப்பட்டதை தொடர்ந்து அனைத்து இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலைகளும் மே 1 முதல் கணிசமாக அதிகரித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய வரி திருத்தம், தனிநபர் மற்றும் பதிவு செய்யப்பட்ட இறக்குமதியாளர்களுக்கு இடையிலான வரிவிதிப்பு நடைமுறைகளை சீரமைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னர் தனிநபர் இறக்குமதியாளர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்த இந்த வரி, தற்போது அனைத்து இறக்குமதியாளர்களுக்கும் சுங்க அனுமதி புள்ளியிலேயே அறவிடப்படுகிறது.
இறக்குமதி செய்யப்படும் சிறிய ரக வாகனங்களின் விலை 130,000 ரூபாய் முதல் 215,000 ரூபாய் வரையிலும், நடுத்தர ரக வாகனங்களின் விலை 345,000 ரூபாய் முதல் 510,000 ரூபா வரையிலும் உயர்ந்துள்ளது.
டொயோட்டா லேண்ட் க்ரூஸர் (Land Cruiser) போன்ற உயர் ரக வாகனங்களின் விலை 980,000 ரூபாய் முதல் 1.45 மில்லியன் ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகவும் தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டை உலுக்கிய புங்குடுதீவு வித்யா படுகொலை வழக்கில், சுவிஸ் குமார் உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று(06.05.2026) உறுதி செய்துள்ளது.
2015ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த படுகொலை சம்பவம் நாட்டில் பாரியளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததுடன், குற்றவாளிகளாக கண்டறியப்பட்டவர்களுக்கு, முன்னாள் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உள்ளிட்ட மூவரடங்கிய ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்தது.
இந்தநிலையில், தங்களை விடுவிக்கக் கோரி குற்றவாளிகள் மேன்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இதன்படி, பிரதம நீதிபதி பத்மன சூரசேன தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு குற்றவாளிகளின் மேன்முறையீடுகளை விசாரணை செய்து நான்கு குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்து இன்று தீர்மானத்தை அறிவித்துள்ளது.
மேலும், இரு பிரதிவாதிகளின் தண்டனையை நீக்குவதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தீர்ப்பு அறிவிக்கப்பட்ட போது, மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த மூவர் ஸூம் தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் 2015ஆம் ஆண்டு மே 13 திகதி கூட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்யா படுகொலை செய்யப்பட்டார்.
இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தநிலையில், குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்களுக்கு மூவரடங்கிய நீதிபதிகள் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற சங்கிலி பறிப்பு சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய தினம் சுமார் மாலை 3.30 மணியளவில், முள்ளியவளையிலிருந்து வற்றாப்பளைக்கு வகுப்பிற்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த உயர்தர வகுப்பு மாணவியொருவர் குறிவைக்கப்பட்டார்.
அவர் பயணித்த துவிச்சக்கர வண்டியை இலக்கத்தகடு இன்றி விலையுயர்ந்த மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் பின்தொடர்ந்து, மாணவி அணிந்திருந்த சுமார் முக்கால் பவுண் எடையுடைய தங்கச் சங்கிலியை அறுத்து கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதற்கு முன்னரும் கடந்த வாரம் இதே பகுதிக்கு அண்மையில் உள்ள கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த பெண்ணொருவரிடமிருந்து ஒரு பவுண் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக இடம்பெறும் இத்தகைய குற்றச்செயல்கள் குறித்து பிரதேச மக்கள் கடும் கவலை வெளியிட்டுள்ளனர்.
சம்பவங்களுடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், பொலிஸார் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், உள்ளூர் இளைஞர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் சந்தேகநபர்களை அடையாளம் காணும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வீதிகளில் சந்தேகத்திற்கிடமான முறையில் இயங்கும் நபர்கள் மீது தீவிர ரோந்து கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என பிரதேச மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஹபராதுவ, கொக்வத்தை பகுதியில் அண்மையில் மின்னல் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறப்பட்ட 25 வயதான ஆடைத்தொழிற்சாலை ஊழியரின் மரணம், நேரடி மின்னல் தாக்கத்தால் ஏற்பட்டதல்ல என்பது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இந்த பிரேதப் பரிசோதனை கராப்பிட்டிய தேசிய மருத்துவமனையில், திடீர் மரண விசாரணை அதிகாரி கமல் காமினி திலக்க முன்னிலையில் நடத்தப்பட்டது.
விசாரணையை மேற்கொண்ட விசேட சட்ட மருத்துவ அதிகாரி சித்ராணி வீரசிங்க வழங்கிய அறிக்கையில், மழுங்கிய பொருள் தலையில் பட்டதில் ஏற்பட்ட பலத்த காயங்களே மரணத்திற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், மின்னல் தாக்கத்தால் வீட்டின் சுவர் மற்றும் கூரை இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட காயங்களே இளம்பெண்ணின் உயிரிழப்புக்குக் காரணமானதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் கடந்த 3ஆம் திகதி அதிகாலை ஹபராதுவ, கொக்வத்தை பகுதியில் இடம்பெற்றது.
இதில் பஸ்கொட, ரொட்டும்பை பகுதியைச் சேர்ந்த, கொக்கலை முதலீட்டு வலயத்தில் பணியாற்றி வந்த சேனாநாயக்க சேதிகல்லகே இமாஷா மதுபாஷினி ஹிதவங்ச (25) உயிரிழந்தார்.
மரண விசாரணையின் போது உயிரிழந்த இளம்பெண்ணின் தந்தை வழங்கிய சாட்சியத்தில், தனது மகள் ஒன்றரை ஆண்டுகளாக கொக்கலை பகுதியில் பணியாற்றி வந்ததுடன், ஹபராதுவில் வாடகை அறையில் தங்கியிருந்ததாக தெரிவித்தார்.
சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று அதிகாலை 2.30 மணியளவில் மின்னல் தாக்கியதாக தகவல் கிடைத்தபோது அங்கு சென்றபோது மகள் உயிரிழந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், இச்சம்பவத்தின் போது இளம்பெண்ணுடன் தங்கியிருந்த மற்றுமொரு பெண் காயமடைந்து கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் பூரண குணமடைந்த பின் வாக்குமூலம் பெறப்பட வேண்டும் என திடீர் மரண விசாரணை அதிகாரி உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சென்னப்பட்டணா பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன். இவருக்கு நாகமணி என்ற மனைவியும் சாத்விக் என்ற 4 வயது மகனும் உள்ளனர்.
இந்த தம்பதியினர் வேலைக்காக பெங்களூரு நகரில் தங்கியிருந்த காரணத்தால் சிறுவன் அவனது தாத்தாவின் பராமரிப்பில் சொந்த ஊரில் மிகவும் செல்லமாக வளர்ந்து வந்துள்ளான்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சிறுவன் தனது வீட்டின் வாசலில் வைக்கப்பட்டிருந்த செருப்பு அடுக்கில் இருந்து தனது செருப்பை வெளியே எடுத்துள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு ஒரு பெரும் துயரம் அரங்கேறியுள்ளது.
சிறுவன் தனது செருப்பை எடுத்த அந்த வினாடியில் அதற்குள் ரகசியமாக பதுங்கியிருந்த கொடிய நாகப்பாம்பு ஒன்று அவனது கையில் பலமாக கடித்துள்ளது.
வலியால் அலறித்துடித்த அந்த பிஞ்சுக் குழந்தையின் சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவனது தாத்தா உடனடியாக அங்கு பதறி அடித்து ஓடி வந்துள்ளார்.
பின்னர் நிலைமையைப் புரிந்து கொண்ட அவர் சற்றும் தாமதிக்காமல் சிறுவனை உடனடியாக அருகிலுள்ள சென்னப்பட்டணா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தூக்கிச் சென்றுள்ளார்.
அங்கு அந்தச் சிறுவனுக்கு மருத்துவர்களால் முதலுதவி சிகிச்சை மிகவும் விரைவாக அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சிறுவனை மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மிகவும் பதற்றத்துடன் உடனடியாக அழைத்துச் சென்றனர்.
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுவனுக்கு மருத்துவர்கள் தங்களது அதிதீவிர சிகிச்சையை இடைவிடாமல் தொடர்ந்து அளித்து வந்தனர்.
இருப்பினும் மருத்துவர்களின் பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகும் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் அந்த சிறுவன் மிகவும் பரிதாபமாக உயிரிழந்தான்.
வேலைக்குச் சென்ற பெற்றோர் தங்களது ஒரே மகனின் இந்த திடீர் மரணச் செய்தியைக் கேட்டு மிகுந்த கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
இந்த துயர சம்பவம் குறித்து தகவலறிந்த சென்னப்பட்டணா புறநகர் காவல் துறையினர் உடனடியாக ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர்.
மேலும் இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் தொடர்பாக அவர்கள் தங்களது தீவிர விசாரணையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், காதல் ஜோடி தற்கொலைச் செய்துக் கொண்டது உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சாய்குமார் (22) மற்றும் ஸ்ருதி (20) என்ற காதல் ஜோடிக்கு, இரு வீட்டாரின் சம்மதத்துடன் அண்மையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
திருமணத்திற்கு முன்பாக ஓரளவு பணம் சம்பாதித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற உன்னத நோக்கில் இவர்கள் செயல்பட்டனர். இதற்காகச் சாய்குமார் வேலை நிமித்தமாக வெளிநாட்டிற்குச் சென்று கடினமாக உழைத்து வந்துள்ளார்.
வெளிநாட்டில் பணியாற்றி வந்த சாய்குமாருக்கு திடீரென கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அவர்,
வேறு வழியின்றி அங்கேயே தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் துயரச் செய்தி சாய்குமாரின் குடும்பத்தினருக்கும், அவரது வருங்கால மனைவி ஸ்ருதிக்கும் பேரிடியாக அமைந்தது.
தனது காதலனின் மரணச் செய்தியைக் கேட்டு நிலைகுலைந்து போன ஸ்ருதி, மிகுந்த வேதனையில் ஆழ்ந்தார். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து ஸ்ருதியும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
நிச்சயதார்த்தம் முடிந்து திருமணக் கனவில் இருந்த காதல் ஜோடி, அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் கயா மாவட்டத்தைச் சேர்ந்த மாமியார் மற்றும் மருமகள், ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
62 வயதான இந்தர் தேவி, தனது 45 வயது மருமகள் சங்கீதா தேவியை ரயில் நிலையத்தில் வழியனுப்பி வைப்பதற்காகப் பக்தியார்பூர் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.
அப்போது நடை மேம்பாலத்தைப் பயன்படுத்தாமல் தண்டவாளத்தின் வழியாகச் செல்ல முயன்றபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது.
அவர்கள் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, டெல்லியிலிருந்து மால்டா டவுன் நோக்கி அதிவேகமாக வந்த ‘பராக்கா எக்ஸ்பிரஸ்’ ரயில் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் சிக்கிய மாமியார் மற்றும் மருமகள் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இவர்களுடன் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற ஒரு மர்ம நபர், கடைசி நொடியில் பிளாட்பாரத்தில் ஏறி உயிர் தப்பிய காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
விபத்து குறித்துத் தகவல் அறிந்த ரயில்வே போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
ஒரு சிறிய கவனக்குறைவால் நேரிட்ட இந்த விபத்து, ரயில் பயணிகள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தண்டவாளங்களைக் கடக்கும்போது பொதுமக்கள் எப்போதும் நடை மேம்பாலங்களையே பயன்படுத்த வேண்டும் என ரயில்வே அதிகாரிகள் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று முதல் டெங்கு அதிக அபாயம் உள்ள பகுதிகளில் சிறப்பு நுளம்பு ஒழிப்புத்திட்டம் செயல்படுத்தப்படும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப்பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு கட்டுப்பாட்டுப்பிரிவின் ஆலோசகர் வைத்திய நிபுணர் பிரஷிலா சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் 43 சுகாதார வைத்திய அலுவலர் பிரிவுகள் டெங்கு அதிக அபாயம் உள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆறு மாவட்டங்களில் டெங்கு பாதிப்புகள் அதிகரித்துள்ளதாகவும், இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 26,071 ஆகும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, டெங்கு தொடர்பான 13 மரணங்களும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப்பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு நுளம்புக்கள் பரவுவதை தடுக்க, பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று பிரஷிலா சமரவீர வலியுறுத்தியுள்ளார்.