இலங்கையில் பாடசாலைகளில் பணம் வசூலிப்பதற்கு தற்போதைய அரசாங்கத்தால் எவ்வித சட்டப்பூர்வ அனுமதியும் வழங்கப்படவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பணம் அறிவிடுதால் மாணவர்கள் பல்வேறு மன உளைச்சலுக்கு உள்ளாவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெளிவுபடுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாடசாலைகளில் பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுப்பதற்காக மாணவர்களிடையே பணம் வசூலிப்பது நீண்ட காலமாக ஒரு பொதுவான நடைமுறையாக இருந்து வருகிறது.
ஒவ்வொரு பாடசாலையிலும் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தொகைகள் முன்னர் கணக்கிடப்பட்டன. தேசிய மக்கள் சக்தியின் தற்போதைய அரசாங்கத்தின் கீழ், பாடசாலைகளில் பணம் வசூலிப்பதற்கு எந்த சட்டப்பூர்வ அனுமதியும் வழங்கப்படவில்லை.
சில குழுக்கள் அல்லது தனிநபர்களின் பணம் கோருதல்கள் காரணமாக ஒரு மாணவர் சிரமத்தை எதிர்கொண்டால் மாணவர்களின் நலனில் தலையிட அதிகாரம் உள்ளது.
அதேநேரத்தில், தன்னார்வ அடிப்படையில் பாடசாலைகளுக்கு உதவும் குழுக்கள் அல்லது பெற்றோரிடமிருந்து தன்னார்வ பங்களிப்புகளைத் தடுக்கவும் முடியாது. இதுவரை, இந்த விஷயத்தில் அமைச்சுக்கு எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு நாலந்தா கல்லூரியின் இரண்டு ஆசிரியைகள் பாடசாலையிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டு, மாகாண கல்வி அலுவலகத்திற்கு இணைக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் தலைமை மாணவருடன் முறையற்ற தொடர்புகளைப் பேணியதாக கூறப்படும் இரண்டு ஆசிரியைகளே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இரு ஆசிரியைகளும் மாகாண கல்வி அலுவலகத்திற்கு மாற்றப்பட்ட போதிலும், அவர்கள் இதுவரை அங்கு பணிக்குச் சமூகமளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலை அதிபரிடமிருந்து முதற்கட்ட விசாரணை அறிக்கை கிடைத்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவேவ தெரிவித்துள்ளார்.
அத்துடன், பாடசாலையின் மாணவர் தலைவர் சபை கலைக்கப்பட்டுள்ளது. தலைமை மாணவர் மற்றும் ஆசிரியர்களுக்கு இடையிலான முறையற்ற நடத்தைகள் தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, பாடசாலை நிர்வாகம் உள்வாரி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
தற்போது இந்தச் சம்பவம் தொடர்பாக கல்வி அமைச்சினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட 12 பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் ஆயம் இந்த தீர்ப்பை அறிவித்தது. அத்துடன், 4 பேருக்கு 5 வருடம் ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத கால சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் 41 பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களின் போது, நிட்டம்புவ நகரில் வைத்து அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் நிட்டம்புவ ஊடாகச் சென்றுகொண்டிருந்தபோது ஆவேசமடைந்த கும்பலால் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கண்டி யாழ்ப்பாணம் வீதியின் வவுனியா நகருக்குட்பட்ட 3 கிலோமீற்றருக்குட்பட்ட பகுதி அகலப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
வவுனியா மாவட்டத்தில் உள்ள பிரதான வீதிகள், சிறு வீதிகள், கிராமிய வீதிகள் தொடர்பான விசேட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரட்நாயக்க தலைமையில் மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.
இதன்போது வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரியால் இவ்வாறு கூறப்பட்டிருந்தது. அந்தவகையில் கண்டி யாழ்ப்பாணம் வீதியில் வவுனியா பொலிஸ் நலன்புரிச்சங்கத்திற்கு அண்மையில் இருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைஉள்ள பகுதிக்கும் இடையில் உள்ள 3 கிலோமீற்றர் நீளம் கொண்ட பகுதி (176-179 கி.மீ) அகலப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படவுள்ளது. அதற்காக 1322 மில்லியன் ரூபாய் பணம் மதிப்பிடப்பட்டுள்ளது.
அந்தவகையில் வவுனியா மணிக்கூட்டு கோபுரசந்தி மற்றும் வைத்தியசாலை சுற்றுவட்டம் என்பனவும் அகலப்படுத்தப்பட்டு, மேம்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அத்துடன் நகரப்பகுதியில் உள்ள வடிகால்களை சீரமைப்பதடன் அதற்கு சீமெந்திலான மூடிகளை இடும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.
அத்துடன் வவுனியா பொது வைத்தியசாலைக்கு அருகில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் சதுக்கத்தில் இவ்வருடம் போக்குவரத்து சமிஞ்சை விளக்குகள் பொருத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
22 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று தெரிவித்தனர்.
வவுனியா தலைமை பொலிஸ்நிலைய போதைத்தடுப்பு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பட்டானிச்சூர் பகுதியில் கடமையில் இருந்த பொலிஸ் குழுவினர் கப்ரக வாகனம் ஒன்றை வழிமறித்து அதில் சோதனையில் ஈடுபட்டனர்.
இதன்போது குறித்த வாகனத்தில் சூட்சுமமான முறையில் கஞ்சா கொண்டு செல்லப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த வாகனத்தில் இருந்த இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டதுடன், அதில் இருந்த 22கிலோ கஞ்சாவும் மீட்கப்பட்டது.
குறித்த கஞ்சா போதைப்பொருள் மன்னாரிலிருந்து திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலேயே பொலிசாரால் கைப்பற்றப்பட்டது.
வவுனியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுரங்க வீரரத்தின தலைமையில் பொலிஸ் பரிசோதகர் இலங்கசிங்க, மற்றும் திசாநாயக்க (37348), கீர்த்தி ரத்ன (48001), குமார(63340), ரட்னசேகர(6762), றெஜினோல்ட் (68300), ரணில்(81010), கலாகிரு(85763), குமார(87334), சகரான் (22449), பிரதீஸ்(99695) ஆகியோரால் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைதுசெய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பலரும் அலுவலக வேலை அல்லது செல்போன் மோகம் காரணமாக இரவு நீண்ட நேரம் கண் விழித்து இருக்கிறார்கள். ஆறு மணி நேரம் அல்லது அதற்கும் குறைவாக தூங்குவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
தினமும் இரவு 6 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கினால் உடலில் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை பார்க்கலாம்.
தினமும் 6 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு இரண்டாம் வகை நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் இரட்டிப்பாகும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தினமும் இரவு 6 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கினால் உடல் பருமன் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பசியைத் தூண்டும் ஹார்மோர்ன் அதிகரிக்கும். அதிகப்படியான தேவையற்ற உணவுகளை சாப்பிட நேரலாம். 7-8 மணி நேரம் தூங்குபர்களை விட ரத்தக்குழாயில் அதிக கொழுப்பு படிவதாக தெரியவந்துள்ளது.
ஆறு மணி நேரம் அல்லது அதற்கு குறைவாக தூங்கி வந்தால், மூளையில் நச்சுக்கள் குவியும். பிறகு எதிர்காலத்தில் அறிவாற்றல் குறைபாடு அல்லது மறதி நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது.
நினைவாற்றல் குறைபாடு, முடிவெடுக்கும் திறன் குறைவு, கவனச் சிதறல் போன்றவையும் குறைந்த தூக்கத்தால் ஏற்படுகின்றன.
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலையில் இன்று முற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், பொன்னாலை சந்தியில் இருந்து மாதகல் பக்கம் செல்கின்ற வீதியால் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தனர்.
இதன்போது அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் நின்ற பனை மரத்துடன் மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டார்.
உயிரிழந்தவரது சடலம் தற்போது காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மூன்று ஆண்டுகளாக தான் கதாலித்துவந்த பெண், தனக்கு திருமணம் என்று கூறி திருமண பத்திரிகை வைத்ததால், ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ள இயலாமல் துயர முடிவொன்றை எடுத்துள்ளார் இளைஞர் ஒருவர்.
இந்தியாவின் பெங்களூருவைச் சேர்ந்த கிரண், காதலர் தினத்துக்காக தனது காதலிக்கு பெரிய பரிசொன்றைக் கொடுப்பதற்காக தயாராகிக்கொண்டிருந்தார். சனிக்கிழமையன்று, தன் காதலரை பார்க்க வந்தார் அந்தப் பெண். அவர் கொடுத்த சர்ப்ரைஸை கிரணால் தாங்க இயலவில்லை.
ஆம், தனது திருமண பத்திரிகையைக் கொடுப்பதற்காக வந்திருந்தார் அந்தப் பெண். தனக்கு ஏற்கனவே வேறொருவரும் நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாகக் கூறி, திருமண அழைப்பிதழைக் கொடுத்துவிட்டுச் சென்றார் அந்தப் பெண்.
சோகத்தில் தன் அறைக்குள் சென்று உள் பக்கமாக கதவைப் பூட்டிக்கொண்ட கிரணை, பிறகு சடலமாகத்தான் பார்த்தார்கள் அவரது பெற்றோர்.
அந்தப் பெண்ணின் குடும்பம் வாங்கியிருந்த 50 லட்ச ரூபாய் கடனை அடைக்க உறுதியளித்திருந்தாராம் கிரண்.
அவர் அந்தப் பெண்ணுக்கு காதலர் தின பரிசு கொடுப்பதற்காக தயாராகிக்கொண்டிருக்க, அவரோ தங்கள் பிள்ளை உயிரை மாய்த்துக்கொள்ளக் காரணமாக இருந்துவிட்டதாக பொலிசில் புகாரளித்துள்ளார்கள் கிரணுடைய பெற்றோர்.
பொலிசார் இந்த சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
சீகிரியா, கலகொட்டுவ பகுதியில் வீடொன்றில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டு, வீட்டின் ஒரு அறை முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளது.
சார்ஜருடன் கையடக்க தொலைபேசி இணைக்கப்பட்டிருந்த போது ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு எழுதவிருந்த மாணவர் ஒருவர் பயன்படுத்திய அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் மாணவர் அறையில் இல்லை என தெரியவந்துள்ளது.
எனினும், மாணவரின் மடிக்கணினி, உடைகள் மற்றும் கல்விக்குத் தேவையான அனைத்து புத்தகங்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. சம்பவம் குறித்து சீகிரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொது வெளியில் பெண்களை அனுமதியின்றி புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் இலங்கை யூடியூபர் ஒருவர், டொராண்டோ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது, அனுமதியின்றி அந்நியர்களைப் படம் பிடித்தமை தொடர்பான தொடர்ச்சியான சம்பவங்களைத் தொடர்ந்து, நான்கு குற்றவியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
45 வயதான அந்த நபர், டொராண்டோ முழுவதும் பொது இடங்களில் பலமுறை தனிநபர்களை அணுகி, அவர்களுக்கு குறிப்பிடத்தக்க அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அவர்களை படம் பிடித்ததாக அந்நாட்டு பொலிஸார் குற்றம் சாட்டுகின்றனர்.
டொராண்டோ பொலிஸ் சேவை வெளியிட்ட அறிக்கையின்படி, அவர் கடந்த டிசம்பர் 10, 2025 அன்று பொலிஸ் காவலில் எடுக்கப்பட்ட நிலையில், பெப்ரவரி 4, 2026 அன்று ஒன்ராறியோ நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார்.
குற்றவியல் துன்புறுத்தல் தொடர்பான நான்கு வெவ்வேறு சம்பவங்களையும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூன் 8, 2025 அன்று, டன்டாஸ் தெரு மேற்கு மற்றும் டஃபெரின் தெரு அருகே ஒரு நிகழ்வில் ஒரு பெண் கலந்து கொண்டிருந்தபோது, குறித்த நபர் தன்னை படம் பிடித்ததை உணர்ந்துள்ளார்.
பின்னர் அந்த பெண் அவரை நிறுத்தச் சொன்னபோது, அவர் மோதலில் ஈடுபட்டார், தொடர்ந்து அவரை துன்புறுத்தினார், மேலும் பாதுகாப்பு உத்தரவை மீறி வெளியேற மறுத்துவிட்டார் என்று கனேடிய பொலிஸார் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.
அதேநேரம், அதிகாரிகள் அவ்விடத்திற்கு செல்லும் முன்பே குறித்த சந்தேக நபர் வெளியேறியதாகவும் மேலும் அந்த பெண்ணுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டிருக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், ஓகஸ்ட் 21, 2025 அன்று, பிற்பகல் 2:45 மணியளவில், அதே நபர் யூனியன் ஸ்டேஷனில் உள்ள ஒரு TTC ஊழியரை அணுகி, அவர்களின் சம்மதமின்றி அவர்களைப் படம்பிடித்து, அவர்களின் இனம் குறித்து துன்புறுத்தும் கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
அடுத்ததாக செப்டம்பர் 27, 2025 அன்று, பிற்பகல் 3 மணியளவில் டேவிட் பெக்காட் சதுக்கத்தில், இதேபோன்ற சம்பவம் நடந்ததாகவும் அங்கு நின்ற ஒருவர் அணுகி, நிறுத்துமாறு கோரிக்கைகள் விடுத்த போதிலும் படப்பிடிப்பைத் தொடர்ந்துள்ளதுடன் மோதலில் ஈடுபட்டுள்ளார்.
மற்றொரு சம்பவத்தில், மே 26, 2025 அன்று, குற்றம் சாட்டப்பட்டவர் யோங் தெரு மற்றும் ஷட்டர் தெருவில் உள்ள ஒரு பெண் அதிகாரியை அணுகி, அவரைப் படம்பிடித்து, அவரது தோற்றம் குறித்து கருத்து தெரிவித்ததாக கனேடிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
டொராண்டோ பொலிஸார் அவரது படத்தை வெளியிட்டு, மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என்று நம்புவதாகவும் தகவல் தெரிந்த எவரும் டொராண்டோ பொலிஸ் சேவையைத் தொடர்பு கொள்ளவோ அல்லது குற்றத் தடுப்பாளர்கள் மூலம் பெயர் குறிப்பிடப்படாத உதவிக்குறிப்புகளை வழங்கவோ முடியும் என வலியுறுத்தியுள்ளனர்.
கனடாவின் குற்றவியல் சட்டத்தின் கீழ், குற்றவியல் துன்புறுத்தல் குற்றப்பத்திரிகை மூலம் வழக்குத் தொடரப்பட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு வழிவகுக்கும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இரத்தினபுரி – எலபாத்த பகுதியில் பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த விபத்தில் உயிரிழந்த மாணவி தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் எலபாத்த பொலிஸ் பிரிவின் ரம்புக்கந்த தோட்டத்தில் உள்ள தமிழ் வித்தியாலயத்தில் நான்காம் ஆண்டு படிக்கும் ராமநாதன் பிரியதர்ஷனி என்ற 9 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் எலபாத்த பொலிஸ் பிரிவின் ரத்னஹங்கமுவ, அலுகெட்டியவைச் சேர்ந்தவராகும்.
கடந்த 6 ஆம் திகதி, பாடசாலை முடிந்து தனது மூத்த சகோதரியுடன் வீடு திரும்பும் போது, லொறி ஒன்றின் இடது பின்புற சக்கரத்தில் மோதியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். விபத்தின் பின்னர் லொறியின் சாரதியே மாணவியை இரத்தினபுரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
மரணம் தொடர்பான விசாரணையை இரத்தினபுரி மருத்துவமனையின் நீதித்துறை மருத்துவ அதிகாரி தம்மி லூயிஸ் ஹேவா மேற்கொண்டார். மேலும் பிரேத பரிசோதனையை இரத்தினபுரி மருத்துவமனையின் மரண விசாரணை அதிகாரி லக்மினா தென்னகோன் மேற்கொண்டார்.
மூளை மற்றும் தலையில் ஏற்பட்ட காயங்களால் மரணம் ஏற்பட்டுள்ளதாக மரண விசாரணை அதிகாரி லக்மினா தென்னகோன் அறிவித்துள்ளர். விபத்து தொடர்பாக லொறி ஓட்டுநர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பளையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தாய் மற்றும் மகள் பற்றிய தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
கலஹா, கிரிபோகஹைன்னவை சேர்ந்த 46 வயது தாயும் அவரது 13 வயது மகளும் தங்கள் தோட்டத்தில் அறுந்து விழுந்த மின்சார கம்பியில் சிக்கி உயிரிழந்தனர்.
ஜே.கே.எம். சாந்தி குமாரி என்ற தாய் மற்றும் உதயங்கனியே நிசான்சா என்ற மகள் ஆகியோரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
டித்வா சூறாவளியின் போது அறுந்து விழுந்த மின் கம்பிகளை மின்சார சபை இரண்டு மாதங்களுக்கும் மேலாக சரி செய்யத் தவறியதால் இந்த பேரழிவு ஏற்பட்டதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் அப்பகுதிவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தங்கள் தோட்டத்தில் விழுந்த மின் கம்பிகளை அகற்றுமாறு மின்சார சபை அதிகாரிகளிடம் பலமுறை கேட்ட போதிலும், அவர்கள் அவ்வாறு செய்யவில்லை என உயிரிழந்த தாயின் மூத்த மகள் மற்றும் கணவர் தெரிவித்துள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தப் பகுதியில் மின்சார கம்பிகள் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பேரிடரின் போது அறுந்து விழுந்த மின் கம்பிகள் தரையில் இருந்தபோது அருகிலுள்ள வீடுகளுக்கு மின்சாரம் வழங்க வந்ததற்காகவும், ஆபத்தான கம்பிகள் தரையில் இருந்தபோது வெளியேறியதற்காகவும் கிராம மக்கள் மின்சார சபைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சனிக்கிழமை, காலை 10 மணியளவில், மதிய உணவு தயாரிக்க கறிவேப்பிலை பறிக்க தோட்டத்திலுள்ள ஒரு மரத்திற்கு தாயும் மகளும் சென்றிருந்தனர்.
எனினும், அருகிலுள்ள மின்சார கம்பியில் மோதியதில் அவர்கள் தரையில் விழுந்தனர். அயலவர்கள் வந்து அவர்களை காப்பாற்ற முயன்றபோது, முடியாமல் போயுள்ளது. மின்சாரம் தாக்கிய தாயும் மகளும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் டெல்டோட்டா பிராந்திய மருத்துவமனைக்கும், பின்னர் பிரேத பரிசோதனைக்காக பேராதனை மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டன.
புதிதாக வெளியிடப்பட்ட இரண்டாயிரம் ரூபா நாணயத்தாள் தொடர்பில் சில வங்கி கிளைகளில் மக்களுக்கு அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி பணம் வைப்பிலிடும் தானியங்கி இயந்திரங்களில் குறித்த புதிய இரண்டாயிரம் ரூபா நாணயத்தாளை வைப்பிலிட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் சில வங்கிகளின் தானியங்கி இயந்திரங்களால் புதிய இரண்டாயிரம் ரூபா நாணயத்தாள் நிராகரிக்கப்படுவதால் தாம் சிக்கலை எதிர்நோக்குவதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்திருந்தனர்.
நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஹட்டன் பகுதியில் சில அரச மற்றும் தனியார் வங்கிகளின் தானியங்கி இயந்திரங்களில் புதிய இரண்டாயிரம் ரூபா நாணயத்தாளை செலுத்தும் போது அந்த நாணயத்தாள்களை இயந்திரம் ஏற்க மறுப்பதாக பலரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் கொட்டகலையில் உள்ள இலங்கை வங்கியின் தானியங்கி இயந்திரத்தில், குறித்த புதிய இரண்டாயிரம் ரூபா நாணயத்தாளை வைப்பிலிடுவதை தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், சில தனியார் நிதி நிறுவனங்களில் பணத்தை வைப்புச் செய்யும் போது பணம் எண்ணும் இயந்திரங்களில் குறித்த தாள் நிராகரிக்கப்படும் சம்பவங்களும் பதிவாவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் பொது மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் கூறுகையில், பணம் எடுக்கும் மற்றும் வரவு வைக்கும் இயந்திரங்கள் மற்றும் பணத்தை எண்ணும் இயந்திரங்களில் புதிய 2000 ரூபா தாள்களைப் புதுப்பிக்கத் தவறியதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றனர்.
இத்தாலியின் கோர்டினாவில் நடைபெற்று வரும் 2026 குளிர்கால ஒலிம்பிக் போட்டியில், அமெரிக்காவின் பனிச்சறுக்கு நட்சத்திரம் லின்ட்சே வான் (Lindsey Vonn) விபத்துக்குள்ளான சம்பவம் விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
41 வயதான வான், ஒன்பது நாட்களுக்கு முன்புதான் தனது இடது முழங்காலில் தசைநார் கிழிந்து கடுமையான காயத்திற்குள்ளாகியிருந்தார்.
எனினும், ஒலிம்பிக் கனவுக்காகவும், தனது விருப்பத்திற்குரிய ‘டவுன்ஹில்’ (Downhill) போட்டியில் பங்கேற்பதற்காகவும் அவர் மிகப்பெரிய சவாலை ஏற்று களம் கண்டார்.
பயிற்சியின் போது சிறப்பாகச் செயல்பட்ட அவர், இறுதிப் போட்டியின் போது ஒரு பனிச்சரிவுத் தடுப்பில் மோதி நிலைதடுமாறி விழுந்தார்.
சுமார் 15 நிமிடங்கள் மைதானத்திலேயே அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக சிகிச்சைக்காக அவர் ஹெலிகொப்டர் மூலம் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.
தற்போது அவர் சீரான நிலையில் இருப்பதாக அமெரிக்க பனிச்சறுக்கு குழு உறுதிப்படுத்தியுள்ளது.
நேர்ந்த
லின்ட்சே வான் இந்த விபத்தைச் சந்தித்த அதே போட்டியில், சக அமெரிக்க வீராங்கனையான ப்ரீசி ஜோன்சன் (Breezy Johnson) 1 நிமிடம் 36.10 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.
ஜோன்சன் தனது சக வீராங்கனையின் நிலை கண்டு கண்ணீர் மல்க தனது வெற்றியைக் கொண்டாடினார். இந்த விபத்தானது லின்ட்சே வானின் ஐந்தாவது மற்றும் கடைசி ஒலிம்பிக் பயணமாக இருக்கும் என கருதப்படுகிறது.
விளையாட்டு உலகில் பல மீள்வருகைகளை நிகழ்த்திய ஒரு வீர வீராங்கனைக்கு இத்தகையதொரு முடிவு நேர்ந்தது ‘மிகவும் கொடூரமானது’ என முன்னாள் ஒலிம்பிக் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 395,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 365,400 ரூபாவாக காணப்படுகிறது.
முன்னதாக இலங்கையில் தங்கத்தின் விலையானது 4 இலட்சம் ரூபாவை கடந்திருந்த நிலையில் கடந்த சில நாட்களாக வீழ்ச்சிப் போக்கை பதிவு செய்திருந்தது.
இவ்வாறான சூழலில் தங்கத்தின் விலை மீண்டும் நான்கு இலட்சத்தை நெருங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. உலக சந்தையில் தங்கத்தின் விலையானது மீண்டும் 5000 அமெரிக்க டொலர்களை கடந்துள்ளது.
இதற்கமைய, இன்றைய தினம் (09.02.2026) ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5 ஆயிரத்து 29 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
ஏற்கனவே தங்கத்தின் விலையானது உலக சந்தையில் ஐயாயிரம் அமெரிக்க டொலர்களை தாண்டியிருந்த போதும் அதன்பின் கடந்த சில நாட்களாக வீழ்ச்சியை பதிவு செய்திருந்தது.
இந்த நிலையிலேயே மீண்டும் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. அத்துடன், உலக சந்தையில் வெள்ளியின் விலையிலும் இன்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி, வெள்ளியின் விலை 80 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இந்தநிலையில், இலங்கையிலும் தங்கத்தின் விலையில் இன்று அதிகரிப்பு பதிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த பெப்ரவரி 5ஆம் திகதியுடன் நிறைவடைந்த வாரத்தில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 24.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பத்திரங்களைக் கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த 28 மாதங்களில் பதிவான மிக அதிகப்படியான வெளிநாட்டு முதலீடாகும் என மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டின் முதல் ஐந்து வாரங்களில் மாத்திரம் இலங்கைக்குள் 12,654 மில்லியன் ரூபாய் (சுமார் 41.1 மில்லியன் டொலர்) நிகர வெளிநாட்டு முதலீடு கிடைத்துள்ளது.
அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பால், முதலீட்டாளர்கள் இலங்கை போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் சந்தைகளை நோக்கித் திரும்பியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அண்மைக்காலத் தரவுகளின்படி, நாட்டின் அரச பத்திரங்கள் மீதான வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆர்வம் கணிசமாக அதிகரித்துள்ளது.
கடந்த பெப்ரவரி 5ஆம் திகதியுடன் நிறைவடைந்த வாரத்தில் மாத்திரம் 7,463 மில்லியன் ரூபாய் பெறுமதியான பத்திரங்கள் வெளிநாட்டவர்களால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 23 வாரங்களில், 16 வாரங்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ச்சியாக இலங்கை ரூபாய் பத்திரங்களைக் கொள்வனவு செய்துள்ளனர்.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்ட போதிலும், இலங்கையின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் கொள்கைகள் மற்றும் நிலையான வட்டி விகிதங்கள் காரணமாக இந்த முதலீட்டு வரத்து அதிகரித்துள்ளது.
குறிப்பாக, அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உலகளாவிய முதலீட்டாளர்களை இலங்கை போன்ற நாடுகளின் பக்கம் ஈர்த்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் டொனால்ட் ட்ரம்ப்பின் வரி அறிவிப்புகளைத் தொடர்ந்து ஏற்பட்ட சிறிய அளவிலான வெளியேற்றத்திற்குப் பிறகு, தற்போது முதலீடுகள் மீண்டும் வலுவடைந்து வருவது நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்குச் சாதகமான ஒன்றாகப் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.