வவுனியாவில் உணவகத்தில் கோழி இறைச்சியில் புழுக்கள் : சுகாதாரப் பரிசோதகர்கள் அதிரடி நடவடிக்கை!!

வவுனியா குருமன்காட்டு சந்தியில் உள்ள உணவகங்களில் சுகாதார பரிசோதகர்கள் இன்று (14.10.2025) திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

குறித்த பகுதியில் இயங்கிவரும் உணவகம் ஒன்றில் நேற்றயதினம் கொள்வனவு செய்யப்பட்ட கோழி இறைச்சியில் புழுக்கள் இருந்துள்ளமை தொடர்பாக வவுனியா மாநகரசபைக்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

அதற்கமைய இன்றையதினம் காலை மாநகரசபையின் பிரதி முதல்வர் ப.கார்த்தீபன், உறுப்பினர் சிறிஅருணன் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் அந்த பகுதிக்கு விஜயம் செய்திருந்ததுடன் அங்கிருந்த உணவங்கள் மீது திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது உணவகம் ஒன்றில் சுகாதாரசீர்கேடான முறையில் உண்பதற்கு ஒவ்வாத கோழிஇறைச்சி மற்றும் உணவுப்பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.

குறித்த உணவுப்பொருட்கள் சுகாதாரப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டதுடன் அந்த உணவகம் மீது நீதிமன்றில் வழக்குதாக்கல் செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுப்பட்டது.

அத்துடன் சுகாதார நடைமுறைகளை பேணாமல் உணவங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தொடர்பாகவும் இதன்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தது.

 

வெளிநாட்டிலிருந்து திரும்பிய மனைவி மாயம் : கணவர் முறைப்பாடு!!

வெளிநாடொன்றில் தொழில்புரிந்துவிட்டு, நாடு திரும்பிய தனது மனைவியை, ஒரு மாதமாக காணவில்லையென, அவருடைய கணவன், மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சாமிமலை ஓல்ட்டன் தோட்டம் நிலாவத்தை பிரிவில் உள்ள, இரண்டு குழந்தைகளின் தாயான, மோகன் நிஷாந்தனி (வயது 33) கடந்த மாதம் 10/09/2025 நாடு திரும்பினார்.

மனைவியை கடத்தியிருக்கலாம்

எனினும், இன்றுவரையிலும் வீட்டுக்குத் திரும்பவில்லையென அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பாகங்களில் தேடியும் மனைவி கிடைக்கவில்லை. எனினும், தன்னுடைய மனைவி, நாட்டுக்குத் திரும்புவதற்கு முன்னர், வழங்கிய தகவல்களின் அடிப்படையில், பதுளை ஸ்பிரிங்வெளி பகுதியை சேர்ந்த ஒருவர் மனைவியை கடத்தியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் படத்தில் உள்ளவரை கண்டால் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்துக்கு 052 2277222 என்ற இலக்கத்திற்கு அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 0753591052/0753435012 அந்த இலக்கங்களுக்கு அறிய தருமாறு கோர்க்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை : பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்!!

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 75 மி.மீ. அளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிலவக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் நுவரெலியா பிரதேசசபை பிரிவுக்குட்பட்ட நானுஓயா பகுதியில் நேற்று பெய்த கன மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நானுஓயா நகரில் போக்குவரத்து செய்யும் பிரதான வீதி ஊடாக வெள்ள நீரினால் நிரம்பியதால் நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் போக்குவரத்தும் சில மணி நேரம் பாதிக்கப்பட்டது.

மேலும் நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 476/ஏ கிரிமிட்டி கிராம உத்தியோகத்தர் பிரிவில் டெஸ்போட், கிரிமிட்டி,

கார்லிபேக் போன்ற பிரிவுகளில் தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், பலரின் வீடுகளுக்குள் வெள்ளநீர் உட்புகுந்ததால் பிரதேச மக்களும் பாரிய அசௌகரியங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.

இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக இப்பகுதியிலுள்ள விவசாய நிலப்பரப்புகள் முற்றாக நீரினால் நிறைந்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர் .

தங்க விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்!!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. அதற்கமைய இன்றைய தினம்(13) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,208,731 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் 42,640 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 341,100 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்க கிராம் 39,090 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கப் பவுண் 312,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 37,310 ரூபாவாக பதிவாகியுள்ளது. 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 298,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

சர்வதேச சந்தையில் தங்க விலை வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளதுடன், ஒரு அவுன்ஸ் தங்கம் 4,000 அமெரிக்க டொலரைத் தாண்டி, புதிய சாதனையை பதிவு செய்துள்ளது.

இந்த அதிரடி உயர்வுக்கு பல உலகளாவிய காரணங்கள் அடிப்படையாக அமைந்துள்ளதுடன், அமெரிக்காவில் ஏற்பட்ட அரசு முடக்கம், டொனால்ட் டிரம்ப்பின் வர்த்தகப் போர், புவிசார் அரசியல் நெருக்கடிகள் உள்ளிட்டவை தங்க விலை உயர்விற்கு காரணமாக அமைந்துள்ளது.

இலங்கைக்கு கிடைத்துள்ள பெருந்தொகை அமெரிக்க டொலர்கள்!!

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பிய அமெரிக்க டொலர்களின் வீதம் கடந்த செப்டெம்பர் மாதம் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இதன்படி, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் கடந்த செப்டெம்பர் மாதம் 695.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பி வைத்துள்ளனர். இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது இது 25.2 வீதம் அதிகமாகும்.

இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களால் மொத்தம் 5.81 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது.

காதலனின் வீட்டில் விருந்திற்கு சென்ற காதலி கொடூரமாக கொலை!!

குருணாகலில் காதலனின் வீட்டில் மதுபான விருந்தின் போது, ​​அபிவிருத்தி அதிகாரியான காதலி மண்வெட்டியால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் மாவத்தகம, வேவகெதர பகுதியை சேர்ந்த 37 வயதான நடேஷானி கீர்த்தி ராஜபக்ஷ என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்த பெண் ரம்புக்கனை பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார்.

கடந்த 11ஆம் திகதி தனது காதலனின் வீட்டில் நடந்த விருந்துக்கு குறித்த பெண் சென்றுள்ளார்.

இதன்போது காதலனுக்கும் நண்பர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், காதலியான பெண் மண்வெட்டியால் தாக்கி கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த மரணம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நீர்வீழ்ச்சியில் மூழ்கிய இளைஞர்கள் – ஒருவர் பலி : மூவர் வைத்தியசாலையில் அனுமதி!!

மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்ற மூன்று இளைஞர்கள் நீர்வீழ்ச்சியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளனர். நேற்று நடந்த இந்த அனர்த்தம் காரணமாக ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்து மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் வத்தேகம பகுதியை சேர்ந்த 19 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். உயிரிழந்த இளைஞனின் சடலம் மாத்தளை மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் முகமூடி அணிந்த குழு அட்டகாசம் : வாகனங்களுக்கு தீவைப்பு!!

யாழ்ப்பாணம் மானிப்பாயில் இன்று (13) அதிகாலை முகமூடி அணிந்த நான்கு பேர் சண்டிலிப்பாய் வடக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து அட்டகாசம் செய்துள்ளது.

உந்துருளியில் வந்த குழு, வீட்டின் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்கு மண்ணெண்ணெய் ஊற்றி அதற்கு தீ வைத்தனர்.

அதே இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த உந்துருளியையும் எடுத்து வீட்டிலிருந்து எடுத்துச் சென்று சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் உள்ள மல்லாகம் வீதி, மாசியப்பிட்டி சந்தியில் வீதியின் நடுவில் தீ வைத்தனர்.

சம்பவம் தொடர்பில் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

லஞ்ச் சீட் பாவனைக்கு முற்றாகத் தடை!!

நாட்டில் அஎதிர்வரும் காலத்தில் லஞ்ச் சீட் பாவனை முற்றாகத் தடை செய்யப்படவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி லஞ்ச் சீட்க்கு மாற்றாக பிளாஸ்டிக் அல்லாத லஞ்ச் சீட்கள் அறிமுகப்படுத்தப்படுமென்று மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் திலக் ஹேவாவசம் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் பொலித்தீன் பைகளை இலவசமாக வழங்க முடியாதெனவும் இலவசமாக வழங்கப்படாத பொலித்தீன் கொள்கலன் பைகளுக்கு நுகர்வோரிடமிருந்து வசூலிக்கப்படும்

தொகையைப் பற்றுச்சீட்டில் குறிப்பிட வேண்டுமெனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை அண்மையில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தது.

அதேவேளை வட மாகாணத்தில் லஞ்ச் சீட் பதிலாக வாழை இலைகளைப் பயன்படுத்துவதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை நேரம் நீடிப்பு : கல்வி நேர இழப்பை ஈடுசெய்ய நோக்கம்!!

வரவிருக்கும் கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்படவுள்ளதால், மாணவர்களின் போக்குவரத்துக்குத் தேவையான மாற்றங்கள் குறித்து போக்குவரத்து,

நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து தொடர்பாக ஏற்கனவே சம்பந்தப்பட்ட தரப்பினருடன் முதற்கட்ட கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதாகவும்,

எதிர்காலத்தில் மற்றொரு சுற்று கலந்துரையாடல் நடைபெறும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நலகா கலுவேவா குறிப்பிட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் “இது குறித்த தேவையான தகவல்களை நாங்கள் ஏற்கனவே வழங்கியுள்ளோம். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சு தற்போது நிலைமையை மீளாய்வு செய்து வருகின்றது.

புதிய பாடசாலை அட்டவணை அமுலுக்கு வந்தவுடன் போக்குவரத்து ஏற்பாடுகள் தொடர்பான தேவைகளை நாங்கள் தெரிவிப்போம்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சு சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி அதற்கேற்ப பதிலளிக்கும்.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களின் கீழ், தரம் 1 முதல் 6 ஆம் வகுப்பு வரையிலான பாடசாலை நேரம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்படவுள்ளது.

திருத்தப்பட்ட அட்டவணையானது நீண்ட 50 நிமிட பாடவேளைகளை அறிமுகப்படுத்துவதன் மூலமும், கொவிட்-19 தொற்றுநோய் போன்ற முந்தைய தடங்கல்களால் இழந்த கல்வி நேரத்தை ஈடுசெய்வதன் மூலமும் கற்றல் சூழலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

வாகன விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் : வெளியான தகவல்!!

வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரியைக் குறைக்குமாறு வாகன இறக்குமதியாளர்கள் குழு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் முன்மொழிவாக வாகன இறக்குமதியாளர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இந்த கோரிக்கையின் நோக்கம் சாதாரண மக்களுக்கு வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பை வழங்குவதாகும் என்று கூறுகின்றனர்.

ஜனவரி 28 ஆம் திகதி அரசாங்கம் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கியதிலிருந்து ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 918 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டுகின்றது.

மேலும், ஆகஸ்ட் மாதத்தில் 249 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. மேலும் தற்போது வாகன விற்பனையில் குறிப்பிடத்தக்க குறைவு ஏற்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையில், இலங்கை மத்திய வங்கி சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டின் இறுதியில் நாட்டில் உள்ள நிதி நிறுவனங்களிடமிருந்து இலங்கையர்கள் பெற்ற கடன்களில் 82.6 சதவீதம் வாகனம் மற்றும் தங்கக் கடன்கள் என்று தெரிவித்துள்ளது.

இதேவேளை, வாகன இறக்குமதி முழுமையாக மீண்டும் தொடங்கிய ஜனவரி 28, 2025 முதல் செப்டம்பர் வரை 220,538 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

வேலை தருவதாக ஹோட்டலில் நேர்காணல் நடத்திக் கொண்டிருந்த நபர் கைது!!

குவைத்தில் வேலை தருவதாக கூறி நேர்காணல் நடத்திக் கொண்டிருந்த நபர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குருநாகல் நகரில் உள்ள ஹோட்டலில் நேற்று நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

இதன்போது சந்தேக நபரிடம் 03 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் வேலை விண்ணப்ப படிவங்கள் மற்றும் பல ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரிடம் வெளிநாட்டு வேலைகளை வழங்க பதிவு செய்யப்பட்ட உரிமம் இல்லை என சோதனை நடத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் குருநாகல் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை, டுபாயில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை தருவதாக வாக்குறுதி அளித்து 8 கோடி ரூபாய் மோசடி செய்த பெண் ஒருவரையும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் மஹார நீதவான் முன் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கிரிபத்கொட பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொலிஸ் பிரிவில் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

இணைய மோசடி சம்பவங்கள் குறித்து வெளியான எச்சரிக்கை!!

இணைய மோசடி தொடர்பாக பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு மையம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, வெளிநாடுகளில் பங்குகளில் முதலீடு செய்வதற்காகப் பெரிய தொகைகளை வழங்குவதாக வாக்குறுதி வழங்கிய இணைய மோசடி தொடர்பான முறைப்பாடுகளே அதிகளவில் பதிவாகியுள்ளன.

இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு மையத்தின் தகவல் பாதுகாப்பு பொறியாளர் சாருக தமுனுபொல இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த இணைய மோசடிகளின் ஊடக 10 இலட்சம் முதல் 3 கோடி வரையிலான பணம் இழக்கப்பட்டுள்ள சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதிக அவதானம் செலுத்துவதுடன், ஏதேனும் வகையில் முதலீடுகள் குறித்த தகவல்கள் கிடைத்தால் அதன் உண்மைத் தன்மைகளை ஆராயுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் பங்குகளில் முதலீடு செய்வதற்கு பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன.

இதனைத் தாண்டி வெளிநாடுகளில் முதலீடுகள் செய்வதாகக் கூறி ஏதேனும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் வந்தால் அதனை ஆராயுமாறும் தகவல் பாதுகாப்பு பொறியாளர் சாருக தமுனுபொல வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், எந்தக் காரணம் கொண்டும் தனிப்பட்ட தகவல்கள், வங்கித் தகவல்கள் உள்ளிட்ட எதனையும் யாருக்கும் வழங்க வேண்டாம் என்றும் இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு மையத்தின் தகவல் பாதுகாப்பு பொறியாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.

மருமகனை திட்டமிட்டு கொலை செய்த மாமனார்!!

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டை அடுத்த ராமநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 24 வயதுடைய ராமச்சந்திரன். இவர் பால் கரவை தொழில் செய்து வருகிறார்.

வழக்கம் போல கணபதிபட்டி கிராமத்தில் பால் கறவைக்கு சென்ற இடத்தில் சந்திரன் என்பவரின் மகள் ஆர்த்தி என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இவர்களின் காதலை ஆர்த்தி வீட்டில் ஏற்றுக்கொள்ளாத நிலையில் கடும் எதிர்ப்புகளை மீறி கடந்த ஜூன் மாதம் இருவரும் காதல் திருமணம் செய்துள்ளனர்.

இந்நிலையில் ராமச்சந்திரன் மீது சந்திரன் குடும்பத்தினர் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். திருமணமாகி ஐந்து மாதங்கள் கடந்ததால் பிரச்சனை இன்றி காதல் தம்பதிகள் சந்தோஷமாக இருந்து வந்தனர்.

இந்நிலையில் வழக்கம் போல் குளிப்பட்டி கிராமத்திற்கு பால் கறவைக்கு ராமச்சந்திரன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது கூட்டாத்து அய்யம்பாளையம் கிராமத்தை அடுத்து பெரியார் பாசன கால்வாய் பாலத்தில் ராமச்சந்திரன் சென்று கொண்டிருந்தபோது சந்திரன் அவரை வழிமறித்தார்.

மேலும் சந்திரன் கண்ணிமைக்கும் நேரத்தில் ராமச்சந்திரனை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் கை துண்டான நிலையில் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மிதந்து பாலத்திலேயே சரிந்த சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

ராமச்சந்திரனின் உடலை பார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து போலீசாருக்கு தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நிலக்கோட்டை டிஎஸ்பி செந்தில்குமார்,

இன்ஸ்பெக்டர் சந்திரபிரபா ஆகியோர் உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து மருமகனை படுகொலை செய்த மாமனார் சந்திரனை போலீசார் கைது செய்தனர்.

கொலை சம்பவம் நடந்த இடத்தை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பிரதீப் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் காதல் திருமண தகராறில் ஐந்து மாதங்கள் காத்திருந்து நடத்தப்பட்ட படுகொலை தொடர்பாக நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் வேறு சிலருக்கு தொடர்பு உள்ளதா? என தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இளம்பெண்ணை கொடூரமாக அடித்தே கொன்ற கணவன்!!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மண்ணா அருகே ஆனமங்காடு பகுதியை சேர்ந்த வைஷ்ணவி (26). கணவர் தீக் ஷித் (26) கொடூரமாக தாக்கியதில் வைஷ்ணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு பாலக்காடு மாவட்டம் ஸ்ரீகிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்த தீக் ஷித்துடன் வைஷ்ணவிக்கு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

சம்பவத்தன்று இரவு, உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி வைஷ்ணவியை மாங்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தீக் ஷித் அழைத்து சென்றார்.

அங்கு மருத்துவர்கள் வைஷ்ணவிக்கு தீவிர சிகிச்சை அளித்தபோதும், வைஷ்ணவி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

வைஷ்ணவியின் உடலில் காயங்களும் இருந்ததாக மருத்துவக் கண்ணோட்டத்தில் தெரிந்துள்ளது. உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து சென்ற ஸ்ரீகிருஷ்ணபுரம் போலீசார் தீக் ஷித்தை கைது செய்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில் குடும்ப தகராறின் போது அவர் வைஷ்ணவியை அடித்து கொன்றது தெரிய வந்தது. இது அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சொல்லிக் கொடுப்பது எதுவுமே புரியவில்லை : கல்லூரி மாணவி விபரீத முடிவு!!

தெலுங்கானா மாநிலம் எல்கதுர்த்தி அருகே கோபால்பூர் கிராமத்தை சேர்ந்த கிருபாகர் என்பவரின் மகள் கீர்த்தனா (19), ஐதராபாத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் முதல் ஆண்டு படித்து வந்தார்.

கல்லூரி விடுதியில் தங்கி வந்த அவர், கற்பிக்கும் பாடங்கள் புரியவில்லை என அடிக்கடி பெற்றோரிடம் வருத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனஅழுத்தத்துடன் இருந்து வந்த கீர்த்தனாவை பெற்றோர், கல்லூரி விடுமுறையில் வீட்டிற்கு வரவழைத்து, வேறு கல்லூரியில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்த கீர்த்தனா, நேற்று திடீரென தன் அறைக்குள் சென்றார். நீண்ட நேரம் ஆகியும் வெளியில் வராததால் கதவை உடைத்து பார்த்த போது, அவர் தூக்கிட்டு உயிரிழந்தது தெரிய வந்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் தகவலளித்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இளம் வயதில் கல்வி அழுத்தத்தால் உயிரிழந்த கீர்த்தனாவின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.