கனடாவுக்கான மாணவர் விசாவில் அதிரடி மாற்றம் : இனி புதிய நடைமுறைகள்!!

சர்வதேச மாணவர்களுக்கான கல்வி அனுமதி (Study Permit) விதிகளில் முக்கிய மாற்றங்களை கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது.

கனடா குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு (IRCC) 2026 முதல் நடைமுறை செய்யப்படும் புதிய கல்வி அனுமதி (Study Permit) விதிகளை அறிவித்து, சில மாணவர்களுக்கு விதிகளை தளர்த்தியுள்ளது.

மாணவர் சேர்க்கை எண்ணிக்கையைக் குறைக்கும் அதேவேளை, விண்ணப்ப நடைமுறைகளை எளிதாக்கும் நோக்கில் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்கள் அல்லது கல்வி நிறுவனங்களுடன் இணைந்த கூட்டுப் பாடநெறிகளில் (Joint Programmes) சேரும் மாணவர்கள், இனி ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் தனித்தனியாக அத்தாட்சி கடிதம் (Attestation Letter) பெற வேண்டியதில்லை.

ஒரே ஒரு மாகாண அத்தாட்சி கடிதம் (Provincial Attestation Letter) போதுமானதாகும். மேலும், பொது நிறுவனங்களில் (Public Institutions) முதுகலை (Master’s) மற்றும் முனைவர் (Doctoral) படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு அத்தாட்சி கடிதம் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள தொழிற்கல்வி பாடநெறிகளுக்கு (Vocational Programmes) சில விலக்குகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், CEGEP கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் கட்டாயம் அத்தாட்சி கடிதத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

அத்துடன், விண்ணப்ப நடைமுறைகள் எளிதாக்கப்பட்டாலும், கனடாவுக்குள் நுழையும் மாணவர்களின் எண்ணிக்கையை அரசாங்கம் பெருமளவில் குறைத்துள்ளது.

2026 ஆம் ஆண்டில் சர்வதேச மாணவர் சேர்க்கை இலக்கு 155,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில் இந்த இலக்கு 305,900 ஆக இருந்த நிலையில், தற்போது அது பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் வீட்டு வசதி தட்டுப்பாடு மற்றும் சமூக சேவைகள் மீதான அழுத்தத்தைக் குறைப்பதே இந்த முடிவின் பிரதான நோக்கமாகும்.

விசிட்டிங் மாணவர்கள் (Visiting Students) மற்றும் பட்டதாரி பார்வையாளர்கள் (Graduate Visitors) வழக்கம் போல அத்தாட்சி கடிதத்தைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்.

இந்த புதிய விதிகள் சில மாணவர்களுக்கு வசதியாக அமைந்தாலும், ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அரசு கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வீதியில் சுயநினைவின்றிக் கிடந்த இளம் தம்பதி : வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்!!

இந்தியாவின் ராஜஸ்தானில், வாக்கிங் சென்ற ஒரு இளம் தம்பதியர் சுயநினைவின்றிக் கிடந்த நிலையில், அந்த இளம்பெண்ணின் நகைகள் காணாமல் போயிருந்தன. பொலிஸ் விசாரணையில், திடுக்கிடவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜஸ்தானிலுள்ள ஸ்ரீ கங்காநகர் என்னுமிடத்தைச் சேர்ந்த அஞ்சு (23) என்ற பெண்ணுக்கும் ஆஷிஷ் (27) என்பவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் திருமணம் ஆனது.

சமீபத்தில் இருவரும் அஞ்சுவின் ஊரான ஸ்ரீ கங்காநகருக்கு வந்திருந்த நிலையில், ஜனவரி மாதம் 30ஆம் திகதி இருவரும் வாக்கிங் சென்றுள்ளனர்.

சிறிது நேரத்தில் அஞ்சுவின் குடும்பத்தினருக்கு அஞ்சுவும் அவரது கணவரும் விபத்தொன்றை சந்தித்ததாக தகவல் கிடைக்கவே, சம்பவ இடத்துக்கு விரைந்த அவர்கள், தம்பதியரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால், ஆஷிஷ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நடந்த சம்பவம் குறித்து அஞ்சுவிடம் பொலிசார் விசாரிக்க, தங்கள் இருவரையும் கார் ஒன்று மோதித்தள்ளிவிட்டுச் சென்றதாக தெரிவித்துள்ளார் அவர்.

ஆனால், அவருக்கு பெரிய அளவில் காயங்கள் எதுவும் இல்லை. பொலிசாருக்கு சந்தேகம் ஏற்படவே, மேலதிக விசாரணையைத் துவக்கியுள்ளனர்.

இதற்கிடையில், ஆஷிஷ் கழுத்து நெறித்து கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணையில், மேலும் பல திடுக்கிடவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அஞ்சு, சஞ்சு என்ற நபருடன் ஏழு ஆண்டுகளாக பழகிவந்துள்ளார்.

அது தெரிந்தும் அஞ்சு குடும்பத்தினர் அவரை ஆஷிஷுக்கு திருமணம் செய்து வைத்ததாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். ஆக, தாய் வீட்டுக்கு போகலாம் என்று கூறி ஆஷிஷை அழைத்துவந்துள்ளார் அஞ்சு.

ஏற்கனவே தன் காதலனுடன் திட்டமிட்டபடி, இருவருமாக வாக்கிங் செல்லும்போது, புதர்களில் மறைந்திருந்த சஞ்சுவும் அவரது நண்பர்களும் ஆஷிஷைக் கொலை செய்துள்ளார்கள்.

அவர்களிடம் தன் நகைகளைக் கழற்றிக் கொடுத்துவிட்டு, சுயநினைவிழந்தது போல் நடித்துள்ளார் அஞ்சு. பொலிஸ் விசாரணையில் உண்மை தெரியவந்துள்ளது.

ராஜஸ்தானில், இந்த வழக்கு ‘தேனிலவுக் கொலை’ என்றே அழைக்கப்படும் நிலையில், அஞ்சுவுக்கு மரண தண்டனை வாங்கித்தரவேண்டும் என ஆஷிஷ் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

 

திருமணமாகி இரண்டே மாதங்கள் : பெற்றோர் உதவியுடன் கணவனைக் கொன்ற இளம்பெண்!!

திருமணமாகி இரண்டே மாதங்களில், தன் கணவரைக் கொலை செய்த இளம்பெண் ஒருவர், தன் பெற்றோர் உதவியுடன், அவர் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டதாக மற்றவர்களை நம்பவைக்கவும் முயன்றுள்ளார்.

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்திலுள்ள பரேலி என்னுமிடத்தில், ஜித்தேந்திர யாதவ் என்பவர் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆனால், மேலதிக விசாரணையில், அது திட்டமிடப்பட்ட கொலை என தெரியவந்துள்ளது.

தடயவியல் நிபுணர்களின் ஆய்வு மற்றும் உடற்கூறு ஆய்விலிருந்து யாதவ் தானே தன் உயிரை மாய்த்துக்கொள்ளவில்லை என தெரியவந்த நிலையில், பொலிசார் யாதவின் மனைவியான ஜோதியை விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.

விசாரணையில், யாதவும் ஜோதியும் ஒன்பது ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், திருமணம் ஆன உடனேயே யாதவின் பூர்வீக சொத்தை விற்று தன் பெயரில் ஒரு வீட்டையும் காரையும் வாங்க ஜோதி யாதவை வற்புறுத்திவந்துள்ளார்.

இதற்கிடையில், யாதவ் ஒன்லைன் சூதாட்டத்தில் 20,000 ரூபாயை இழக்க, ஜோதி யாதவுடன் சண்டை போட்டுள்ளார். வாக்குவாதம் முற்ற, கணவரின் கழுத்தை நெறித்துள்ளார் ஜோதி, யாதவ் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்.

கணவன் உயிரிழந்ததை உணர்ந்த ஜோதி, பயந்துபோய் தன் பெற்றோரை அழைக்க, அவர்கள் உதவியுடன், மூன்று பேருமாக யாதவ் உடலை கயிற்றில் கட்டித் தொங்கவிட்டுவிட்டு, அவர் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டதாக நாடகம் ஆடியுள்ளார்கள்.

யாதவ் இறந்ததும், ஜோதி யாதவின் பெற்றோருக்கோ, மருத்துவமனைக்கோ அல்லது பொலிசாருக்கோ தகவல் கொடுக்காமல், தன் பெற்றோரை அழைத்துள்ளதும், ஜோதியின் உறவினர்கள் பலர் உடனடியாக அவரது வீட்டுக்கு வந்துள்ளதும் மொபைல் டேட்டா மூலமாக தெரியவரவே பொலிசாரின் சந்தேகம் ஜோதி குடும்பத்தினர் மீது திரும்பியுள்ளது.

ஜோதியும் அவரது பெற்றோரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபின் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து : இளைஞன் பலி!!

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்திற்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்து காலி, கரந்தெனிய பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள், முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிளைச் செலுத்திய 24 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். நாகொடை பிரதேசத்தைச் சேர்ந்த இந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மற்றைய மோட்டார் சைக்கிளின் செலுத்துநரான 67 வயதுடைய முதியவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் பெரும் சோகம் – இளம் தாயும் மகளும் பரிதாபமாக பலி!!

கண்டியில் மின்சாரம் தாக்கி தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கலஹா, நவனெலிய, கிரிபோகஹைன்ன பகுதியில் இன்று காலை 10.00 மணியளவில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்கள் 46 வயதுடைய தாயும் 13 வயதுடைய மகளும் என பொலிஸார் தெரிவித்தனர்.

மரத்தில் இருந்து கறிவேப்பிலை பறித்துக் கொண்டிருந்தபோது, ​​அறுந்து விழுந்த மின்சார கம்பியின் ஊடாக மின்சாரம் பாய்ந்து இருவரும் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கலஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

பிரபல பாடசாலையில் மாணவியை தாக்கிய ஆசிரியருக்கு நேர்ந்த கதி!!

நானுஓயாவில் பாடசாலை மாணவியை தாக்கிய ஆசிரியர் பொலிஸாரால் நேற்று (06) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நானுஓயா நகரில் இயங்கும் பிரபல பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரை ஆசிரியர் தாக்கியதில் பாதிப்படைந்த மாணவி

(05) நானுஓயா ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், தாக்குதல் இடம்பெற்று இரண்டு நாட்களின் பின் நானுஓயா பொலிஸாரால் குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின் ஆசிரியரை இன்று (07) நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தரம் 08 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு ஆசிரியரால் தாக்கப்பட்டுள்ள நிலையில், மாணவிக்கு அடிகாயங்கள் மற்றும் உள்காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியர் வழக்கமாக பாடசாலை மாணவிகளுக்கு தொல்லை கொடுப்பதாகவும், மாணவ, மாணவிகளை தகாத வார்த்தைகளால் திட்டியும் அடித்தும் வந்துள்ளதாகவும் தாக்குதலுக்கு உள்ளான மாணவி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் பகுதியில் நெல் மூட்டைகளுடன் கவிழ்ந்த வாகனம் : தப்பிய உயிர்!!

அக்கரைப்பற்று – கல்முனை வீதியில் டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக சாரதி உயிர் தப்பியுள்ளார்.

ஒலுவில் பிரதேசத்தில் நேற்று (06) மூட்டைகளை ஏற்றிச் சென்ற டிப்பர் ரக வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகித் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பகுதியில் பலத்த மழை பெய்து கொண்டிருந்த வேளையில், வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, இன்னொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தின் போது வாகனத்தில் இருந்த ஏராளமான நெல் மூட்டைகள் வீதியோரத்தில் கால்வாயிலும் சிதறிக்கிடந்துள்ளன. பொலிஸார் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ஏழு பேரில் ஒருவருக்கு மனநலப் பாதிப்பு : அதிர்ச்சித் தகவல்கள்!!

உலக சுகாதார அமைப்பின் மதிப்பீடுகளின்படி, ஏழு பேரில் ஒருவருக்கு மனநலப் பிரச்சினை இருக்கலாம் என்று அங்கொடை தேசிய மனநல நிறுவனத்தின் இயக்குநர் வைத்தியர் தம்மிக அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

தேசிய மனநல நிறுவனத்தில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறுவதாகவும், ஒவ்வொரு நாளும் 600க்கும் மேற்பட்ட நோயாளிகள் வைத்தியசாலைகளுக்கு வருகை தருவதாகவும் அவர் கூறினார்.

மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட எவரும் 24 மணி நேரமும் செயல்படும் 1926 துரித அழைப்பில் மனநலப் பிரச்சினைகள் குறித்து ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம்.

அங்கொடை தேசிய மனநல நிறுவனத்தில் அமைந்துள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் 24 மணி நேரமும் பரிசோதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். இளைஞர்கள் வாட்ஸ்அப் (1926) மூலம் குறிப்பிடும் மனநலப் பிரச்சினைகளுக்கு கூட வாட்ஸ்அப் மூலம் பதிலளிக்கப்படுகிறது.

இதற்கிடையில்,மாணவர்கள், குழந்தைகள் கையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையாகி வருவது குறித்து பெற்றோரிடமிருந்து வரும் முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

குழந்தைகள் கையடக்கத் தொலைபேசிகளுக்கு அடிமையாவதால், அவர்கள் தங்கள் கல்வி நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைக்கு நடந்து சென்ற மாணவி பரிதாபமாக பலி!!

இரத்தினபுரியில் வீதியோரத்தில் நடந்து சென்ற பாடசாலை மாணவி ஒருவர் லொரி மோதி உயிரிழந்துள்ளார்.

எலபத பொலிஸ் பிரிவில் கனதொல-இலுக்தென்ன வீதியில் உள்ள 79 ஆம் இலக்க ரப்பர் தோட்டத்திற்கு அருகில் நேற்று பிற்பகல் விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த மாணவி இரத்தினபுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த மாணவர் அலுகட்டிய பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். விபத்து தொடர்பாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், எலபத பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை!!

கடந்த நாட்களில், சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் ஏற்பட்ட பெரிய சரிவுக்கு பின்னர் தங்கத்தின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் காரணமாக, இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் உச்சம்தொட்டுள்ளது.

அதன்படி, இன்று (07.02.2026) தங்கத்தின் விலை 2,000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, ஒரு பவுண் 24 கரட் தங்கம் 392,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 362,600 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,000 ரூபாயாகவும்,22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,325 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி பாதுகாப்பான புகலிட சொத்துக்களாக தொடர்ந்து செயல்படும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.

சமீபத்திய கருத்துக் கணிப்பின் படி, 2025 ஆம் ஆண்டு சாதனை படைத்த நிலையில், 2026 ஆம் ஆண்டு தங்கம் நல்ல நிலையில் இருக்கும் என்று கணித்துள்ளது.

உலகளாவிய மத்திய வங்கிகளின் கொள்முதல் தங்க விலை உயர்வுக்கு தொடர்ந்து பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகள் மீதான அத்துமீறல் வழக்கை விரைவுபடுத்த தாயிடம் பாலியல் இலஞ்சம்!!

கேகாலை மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கை விரைவாக முடிக்க உதவுவதாகக் கூறி, பாலியல் இலஞ்சம் பெற முயற்சித்ததாக பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு எதிராக விசாரணை நடைபெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

குறித்த வழக்கில் தொடர்புபட்ட பெண்ணை வாரகாபொல பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்றதாகக் அந்தப் பெண் கடந்த (05.01.2026) அளித்த முறைப்பாட்டையடுத்து கேகாலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு விசாரணை நடத்தி வருகிறது.

முறைப்பாடு செய்த பெண்ணின் மகள் மீது 2021 ஆம் ஆண்டு நடந்ததாகக் கூறப்படும் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு தற்போது கேகாலை மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது, மேலும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பொலிஸ் பரிசோதகர் இந்த வழக்கில் சாட்சியாகச் செயல்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வழக்கை விரைவாக முடிக்க அந்த பெண் பொலிஸ் பரிசோதகரின் உதவியை கோரியுள்ளார். அச்சந்தர்ப்பத்தில் பெண்ணை தனியாக வந்து சந்திக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும், அதற்கான தேவையான ஆவணங்களைத் தயாரிப்பதாகவும் கூறியுள்ளார்.

பெண்ணின் கையடக்க தொலைபேசி எண்ணைப் பெற்ற சந்தேக நபரான பொலிஸ் பரிசோதகர், தனியாக சந்திக்க வருமாறு அழுத்தம் கொடுத்துள்ளார்.

அவ்வாறான ஒரு நிலையில் பொலிஸ் பரிசோதகரை சந்திக்க சென்றபோது, அவரை மோட்டார் சைக்கிளில் ஏறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.அந்தப் பெண் ஆரம்பத்தில் மறுத்தாலும், அவரது தொடர்ச்சியான வேண்டுகோளின் பேரில் அவர் அதற்கு ஒப்புக் கொண்டார்.

பின்னர் அவர் அவளை ஒரு ஒஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்றதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

-தமிழ்வின்-

வவுனியாவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பிரபல ஆறு உணவங்களுக்கு பூட்டு!!

வவுனியா நகரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பிரபல உணவகங்கள் சுகாதார பரிசோதகர்களால் நேற்று (06.02.2026) மூடப்பட்டது.

குறித்த உணவங்கள் சுகாதார பரிசோதகர்களால், சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது அவை சுகாதார சீர்கேட்டுடன் இருந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த உணவகங்களை நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் திருத்தப்பணிகளுக்காக எதிர்வரும் 14நாட்களுக்கு மூடுமாறு சுகாதார பரிசோதகர்களால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள இரு உணவகங்கள், பழைய பேருந்து நிலையப்பகுதியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகம், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்கு அண்மையில் அமைந்துள்ள பிரபல உணவகங்களுக்கே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் வானிலையில் மாற்றம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் நாளை(07.02.2026) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

திணைக்களம் இன்று(06.02.2026) பிற்பகல் 2.00 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை, திருகோணமலை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தையும் மகனும் பலி!!

தென்னிலங்கையில் சம்பவித்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர். அக்மீமன பொலிஸ் பிரிவின் பனகமுவ பகுதியில் வாகன விபத்து நேற்று சம்பவித்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்னடுவ அதிவேக நெடுஞ்சாலை வெளியேறும் இடத்திலிருந்து காலி நோக்கிச் சென்ற கார், எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பின்னால் சென்ற இருவர் காயமடைந்து கராபிட்டிய போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் வலஹந்துவ பகுதியைச் சேர்ந்த 36 மற்றும் 16 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் என்பது தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பாக சம்பந்தப்பட்ட காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, அக்மீமன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆபத்தான நிபா வைரஸ் : தயார் நிலையில் இலங்கை!!

இலங்கையில் நிபா வைரஸ் (NiV) பரவலைக் கண்டறியவும், அதற்குப் பதிலளிக்கவும் சுகாதாரத் துறை தனது தயார்நிலையைத் தீவிரப்படுத்தியுள்ளது. நிபா வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் ஒரு வகை நச்சுயிரி (Zoonotic disease) ஆகும்.

முக்கியமாக ‘பழம் தின்னும் வௌவால்கள்’ (Fruit bats) மூலம் பரவுகிறது. அசுத்தமான உணவு மற்றும் பாதிக்கப்பட்ட மனிதர்களுடனான நேரடித் தொடர்பின் மூலமும் இது பரவக்கூடும்.

இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களில் 40% முதல் 75% வரை உயிரிழக்க வாய்ப்புள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இது மிகவும் ஆபத்தான தொற்றுநோய்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தற்போது இந்த வைரஸிற்குச் சிகிச்சையளிக்கத் தடுப்பூசிகளோ அல்லது பிரத்யேக மருந்துகளோ இல்லை.

அதோடு தீவிரமான மருத்துவக் கண்காணிப்பு (Supportive care) மட்டுமே ஒரே வழி ஆகும். iந்நிலையில் இலங்கையின் முதன்மை ஆய்வகமான வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனம் (Medical Research Institute – MRI) நிபா வைரஸைக் கண்டறியும் திறனை அதீத தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தியுள்ளது.

இதன் மூலம் வைரஸ் தொற்று சந்தேகத்திற்குரிய நபர்களுக்கு ஆரம்பத்திலேயே பரிசோதனைகளை மேற்கொண்டு வைரஸ் பாதிப்பை உறுதி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக நவீன தொழில்நுட்பக் கருவிகள் ஆய்வகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனம் வட்டாரம் தெரிவித்துள்ளது.

 

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த இளம் பெண் ஒருவருக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தலை மேற்கொண்ட முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுளை, பம்பரு எல்ல நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்ற வெளிநாட்டு பெண்ணே இந்த நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளார். பாலியல் குற்றச்சாட்டில் முச்சக்கரவண்டி சாரதி கடந்த 4ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெர்மனியிலிருந்து இலங்கைக்குச் சுற்றுலா வந்த 26 வயதுடைய இளம் பெண்ணே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். நுவரெலியா, ஹாவாஎலிய பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியே கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வெளிநாட்டு பெண், பம்பரு எல்ல நீர்வீழ்ச்சியைப் பார்ப்பதற்காக சந்தேக நபரின் முச்சக்கரவண்டியில் பயணித்துள்ளார்.

இதன்போது சாரதி தமக்கு பாலியல் ரீதியான தொல்லைகளைக் கொடுத்ததாக அந்த யுவதி சுற்றுலாப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

பெண்ணின் முறைப்பாட்டை தொடர்ந்து, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபரான சாரதி கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர், வெலிமடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டள்ளது.