அடுத்த 24 மணி நேரத்தில் கடும் மழை, பலத்த காற்று : மக்களே அவதானம்!!

நாட்டில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக வலுவடைந்துள்ள நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமாக கடும் மழை பெய்யும் என வளிமணடலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமணடலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இடியுடன் கூடிய மழை பெய்யும் போது கடும் மழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

வவுனியா மாநகரசபைக்கு எதிரான இடைக்கால தடை உத்தரவு மேல் முறையீட்டு நீதிமன்றத்தால் நீடிப்பு!!

வவுனியா மாநகரசபைக்கு எதிரான இடைக்கால தடை உத்தரவு மேல் முறையீட்டு நீதிமன்றத்தால் எதிர்வரும் ஜனவரி 23 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாநகரசபையின் முதல்வர், பிரதி முதல்வர் ஆகியோர் அந்த பதவிகளை வகிப்பதற்கு இடைக்கால தடை உத்தரவை விதித்து கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றம் கடந்த ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி தடை உத்தரவிட்டிருந்தது.

குறித்த வழக்கு நேற்று (08.12) மீண்டும் மூன்றாவது முறையாக மேல் முறையீட்டு நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் உள்ளிட்ட சட்டத்தரணிகள் சபை நடவடிக்கைகளை நடத்துவதற்கு அனுமதி கோரினர்.

இதற்கு மனுதாரர் தரப்பு ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தலைமையிலான சட்டத்தரணிகள் ஆட்சேபம் தெரிவித்தனர்.

குறித்த விடயம் தொடர்பில் நீண்ட விவாதம் இடம்பெற்ற நிலையில் இவற்றை ஆராய்ந்த மேல் முறையீட்டு நீதிமன்றம் மனு மீதான விசாரணைகள் முடிவடையும் வரை முதல்வர் பிரதி முதல்வர் ஆகியோர் அந்த பதவிகளை வகிப்பதற்கு வழங்கப்ட்ட இடைக்கால தடை உத்தரவினை எதிர்வரும் ஜனவரி 23 ஆம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டுள்ளது.

வவுனியா மாநகரசபை உறுப்பினர்களான க.பிரேமதாஸ் மற்றும் சு.விஜயகுமார் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்திற்கே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் பிரதிவாதிகளாக ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த மாநகர முதல்வர் சு.காண்டீபன், ஜனநாயக தேசிய கூட்டணியைச் சேர்ந்த பிரதி முதல்வர் ப.கார்த்தீபன் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 79 குடும்பங்கள் தொடர்ச்சியாக முகாம்களில்!!

வவுனியாவில் ஏற்ப்பட்ட வெள்ளப் பாதிப்பினால் 79 குடும்பங்களை சேர்ந்த 232 பேர் தொடர்சியாக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் நாட்டில் ஏற்ப்பட்ட வெள்ளப்பேரிடர் காரணமாக வவுனியா மாவட்டத்திலும் கடுமையான பாதிப்புக்கள் ஏற்ப்பட்டிருந்தது.

இந்நிலையில் வெள்ளம் காரணமாக மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மொத்தமாக 58 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

தற்போது மழைவீழ்ச்சி குறைவடைந்த நிலையில முகாம்களில் இருந்த மக்கள் மீண்டும் தமது வீடுகளிற்கு திரும்பியிருந்தனர்.

இருப்பினும் கடுமையான பாதிப்புக்களை சந்தித்த வெங்கல செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் மூன்று இடைத்தங்கல் முகாம்கள் தொடர்ச்சியாக செயற்ப்பட்டு வருவதுடன் அங்கு 79 குடும்பங்களை சேர்ந்த 232 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தாயின் விபரீத முடிவால் பறிபோன குழந்தைகளின் உயிர்கள் : இலங்கையில் பெரும் துயர சம்பவம்!!

தாயின் விபரீத முடிவால் குழந்தைகள் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

மொரட்டுவையிலிருந்து அனுராதபுரத்திற்கு வந்த ஒரு தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் மல்வத்து ஓயா ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதை அடுத்து காணாமல் போன இரண்டு குழந்தைகளில்

ஒருவரான சிறுமியின் சடலம் நேற்று (7) அனுராதபுரம் ‘மல்வத்து ஓயா லேன்’ சாலைக்குச் செல்லும் புதிய பாலத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டதாக அனுராதபுரம் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

மொரட்டுவை, அங்குலான, எண் 15/11 ரயில்வே பலாபாரவைச் சேர்ந்த சித்துல்ய மீரியகல்லேவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

முதலைகள் அல்லது பாம்பு தின்றிருக்கலாம்

சிறுமியின் ஒரே சகோதரரான திஷுகா மீரியகல்லே என்ற 8 வயது சிறுவனின் சடலம், காணாமல் போன மூன்று நாட்களுக்குப் பிறகு, கடந்த 4 ஆம் தேதி அனுராதபுரத்தின் மிஹிந்துபுர பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டபோது, ​​அவரது இடது கை மற்றும் இடது கால் காணாமல் போயிருந்ததாகவும், அது முதலைகள் அல்லது பாம்புகளால் தின்றிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

கடந்த ஏழு நாட்களுக்கு முன்பு, 2 ஆம் தேதி, மொரட்டுவவின் அகுலான பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தாய் ஒருவர் தனது எட்டு வயது மகன் மற்றும் நான்கரை வயது மகளுடன் அனுராதபுரத்திற்கு வந்து,

அனுராதபுரத்தில் உள்ள பண்டாரநாயக்க மாவத்தையில் உள்ள மிஹிந்துபுர பாலத்திலிருந்து மல்வத்து ஓயாவில் குதித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அன்று காலை, மிஹிந்துபுர பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர், மல்வத்து ஓயாவில் பெண், நீரில் மூழ்குவதை கண்டு அப்பகுதிவாசிகளுடன் சேர்ந்து,

அவரை தண்ணீரில் இருந்து வெளியே எடுத்தார். பின்னர் அந்தப் பெண் இரண்டு குழந்தைகளின் தாயாக அடையாளம் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கொலைக் குற்றச்சாட்டில் தாய் கைது

மீட்கப்பட்ட பெண் அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, காவல்துறையினரால் காவலில் எடுக்கப்பட்டார்.

இந்நிலையில் தனது மகள் கடந்த 1 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி, தனது 8 வயது மகனையும் 4 வயது மகளையும் அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாகவும், அவரது கணவர் வெளிநாடு சென்ற பிறகு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் தந்தை போலீசாரிடம் தெரிவித்திருந்தார்.

அதேவேளை நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக, மல்வத்து ஓயாவின் வேகமான நீரோட்டமும், கரையின் இருபுறமும் முதலைகள் இருந்ததாலும்,

நடவடிக்கைகளை கடினமாக்கியது. 6 நாட்களாக, பல குழுக்களாகப் பிரிக்கப்பட்ட காவல்துறை உயிர் பாதுகாப்புப் பிரிவு, இரண்டு குழந்தைகளைத் தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

இந்நிலையில் காணாமல் போன மற்றும் இறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளின் உடல்கள் இரண்டு சந்தர்ப்பங்களில் பள்ளத்தில் சிக்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த மரணங்கள் குறித்து அனுராதபுரம் கூடுதல் நீதவான் மற்றும் கூடுதல் மாவட்ட நீதிபதி பி.எச்.டபிள்யூ.டி.எல். சமரசிங்க நீதிவான் விசாரணை நடத்தினார். உடல்கள் குறித்து பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டது.

இதனையடுத்து குழந்தைகளைன் தாயார் செனடி ஸ்ரீமா விதான (40) கொலைக் குற்றச்சாட்டில் போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் , இந்த மாதம் 17 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

வெள்ள நீரில் சிக்கிய குடும்பம் : அயல் வீட்டாரின் நேர்மையான செயலால் நெகிழ்ச்சி!!

சேருவில, மாவிலாறு பகுதியில் டித்வா சூறாவளியின் பின்னர் இடம்பெற்ற மனிதாபிமான செயல் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. குடும்பம் ஒன்று வெள்ளத்தில் சிக்கிய நிலையில் ஹெலிகொப்டர் மூலம் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதன்போது தங்கள் வீட்டின் கூரையில் இருந்து வெள்ள நீரில் விழுந்த தங்களின் விலைமதிப்பற்ற பொருட்கள் நிறைந்த ஒரு பையை 5 நாட்களின் பின்னர் அயல் வீட்டு நபர் மீண்டும் கொண்டு வந்து ஒப்படைந்துள்ளார்.

அந்தப் பகுதியில் வசித்து வந்த சுஜித் என்பவரின் குடும்பமே இந்த இக்கட்டான நிலையை எதிர்கொண்டது.

வெள்ளம் அதிகரித்ததால், அவர் தனது பிள்ளைகள் மற்றும் மனைவியுடன், பணம், தங்க ஆபரணங்கள், பிறப்புச் சான்றிதழ்கள், மதிப்புமிக்க ஆவணங்கள் மற்றும் பல துணிகளுடன் தயாரிக்கப்பட்ட பையுடன் வீட்டின் கூரையில் ஏறுவதில் சிரமப்பட்டார்.

மறுநாள் மதியம் ஹெலிகொப்டர் மூலம் அவர்கள் மீட்கப்பட்டபோது, ​​அவரது கையில் இருந்த பை தண்ணீரில் விழுந்து காணாமல் போனது. “எங்களை ஹெலிகொப்டர் மூலம் அழைத்துச் செல்லும்போது, ​​பை தண்ணீரில் விழுந்தது.

செய்வதற்கு எதுவும் இல்லை. நாங்கள் இடைத்தங்கல் முகாமிற்கு அழைத்து வரப்பட்டோம். 5 நாட்களின் பின்னர் இந்த தொலைந்த பை என் நண்பர் சமிந்த குமாராவின் தோட்டத்தின் கம்பி வேலியில் சிக்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் அதை என்னிடம் கொண்டு வந்தார்.

அதில் மதிப்புள்ள தங்கப் பொருட்களும், 37,000 ரூபாய் பணமும் இருந்தன. மேலும், அனைத்து முக்கிய ஆவணங்களும் அப்படியே இருந்தன” என சுஜித் தெரிவித்துள்ளார்.

 

லண்டனில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் குடும்பஸ்தர் படுகொலை!!

பிரித்தானியாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் நபர் ஒருவரினால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

லண்டனிலுள்ள உணவகம் ஒன்றில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் படுகாயம் அடைந்த 32 வயதான ஜெயந்தன் இராமச்சந்திரன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 3ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் 25 வயதான Dequarn Williams என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 29ஆம் திகதி இந்த தாக்குதல் சம்பவம் நடந்த நிலையில், சில மணித்தியாலங்களில் சந்தேக நபரை லண்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட இளைஞன் யாழ்ப்பாணம் கரவெட்டி பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. கடந்த வருடம் திருமணம் செய்த நிலையில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வங்காள விரிகுடாவில் புதிதாக உருவான காற்றுச் சுழற்சி : யாழ் பல்கலைக்கழக நிபுணர் எச்சரிக்கை!!

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அருகாக புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வு கூறியுள்ளார்.

07.12.2025 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00 மணி வானிலை எதிர்வுகூறலொன்றை விடுத்து, அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அருகாக புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது.

இது மிக வலுவான ஈரப்பதன் கொண்ட கீழைக் காற்றுக்களுடன் இணைந்துள்ளது. ஏற்கனவே இலங்கையின் தென்மேற்கு பகுதியில் வளிமண்டல தளம்பல் நிலை ஒன்று காணப்படுகிறது.

இந்தக் காற்றுச் சுழற்சி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்காக நகர்ந்து இலங்கைக்கு தெற்காக தெற்கு வங்காள விரிகுடா பகுதியை அண்மிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் ஏற்கனவே குறிப்பிட்டபடி எதிர்வரும் 09.12.2025 முதல் 13.12.2025 வரை இலங்கையின் பல பகுதிகளுக்கும் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

குறிப்பாக, இலங்கையின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, தென், ஊவா, வட மேல், சப்ரகமுவ, மேல் மாகாணங்கள் கன மழையைப் பெறும் வாய்ப்புள்ளது.

ஏற்கனவே இலங்கையின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைத்து நிலம் தன்னுடைய நிரம்பல் நிலையை எட்டியுள்ளது.

எனவே அந்த பிரதேசங்களில் தொடர்ச்சியாக 50 மில்லிமீற்றருக்கு மேற்பட்ட மழை கிடைத்தால் அப்பகுதிகளில் வெள்ள நிலைமைகள் ஏற்படும் வாய்ப்புண்டு.

எனவே மேற்குறிப்பிட்ட (09.12.2025 முதல் 13.12.2025) தாழ் நிலப்பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ள அனர்த்தம் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம்.

அத்தோடு மலையகத்தின் சில பகுதிகளில் இக் கனமழை நிலச்சரிவு நிகழ்வுகளைத் தூண்டலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே அன்புக்குரிய இலங்கை மக்கள் அனைவரும் எதிர்வரும் 09.12.2025 முதல் 13.12.2025 வரை கனமழை மற்றும் அதனோடு இணைந்த மண்சரிவு போன்ற நிகழ்வுகள் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம்.

துறைசார் அதிகாரிகள் இது தொடர்பாக ஆராய்ந்து உரிய திணைக்களங்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் மக்களை விழிப்பூட்டுவது சிறந்தது.

குறிப்பாக மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாண மக்கள் அனைவருக்கும் இந்த தகவல் சென்றடையும் வகையில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் மத்திய மாகாணங்களின் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டத்தை சற்று குறைவாகப் பேணுவது சிறந்தது.

அத்தோடு எதிர்வரும் 15.12.2025 அன்று மீளவும் ஒரு காற்றுச் சுழற்சி தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகும் வாய்ப்புள்ளமையும் குறிப்பிடத்தக்கது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

67 வயதான கணவரை உலக்கையால் அடித்து கொலை செய்த மனைவி!!

அனுராதப்புர மாவட்டத்தில் உள்ள மிஹிந்தலை பிரதேசத்தில் திருமணமான பெண் ஒருவர் தனது 67 வயதான கணவரை தலையில் உலக்கையால் அடித்து கொலை செய்ததாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர் ஆனந்த சிசிரகுமார (67), இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். இவர், ரஜரட்ட ரட அபிவிருத்தி வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்று மிஹிந்தலை கிரிந்தேகமவில் வசித்து வந்தார்.

குடும்ப தகராறு அதிகரித்தபோது, ​​மனைவி வீட்டிற்குள் இருந்த உலக்கையால் தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர், அவரது குடும்பத்தினரால் மிஹிந்தலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவர் இறந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக இறந்தவரின் மனைவி, 67 வயது ஓய்வு பெற்ற பெண், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!!

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கையானது இன்று (08) பிற்பகல் 11.00 மணி முதல் நடைமுறையில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி,சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும், கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில இடங்களிலும் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழையுடன் அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மின்னல் மற்றும் காற்றினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

அரச ஊழியர்களின் சம்பளமில்லா விடுப்பு : அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு!!

2026ஆம் ஆண் டுஜனவரி 1 ஆம் திகதி முதல், அரச ஊழியர்களுக்கு வேறு இடங்களில் வேலை செய்ய சம்பளமில்லா விடுப்பு வழங்கப்படாது என்று ஒரு புதிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு அமைச்சரவை முடிவின் கீழ் இந்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், உள்ளூர் அல்லது வெளிநாடுகளில் மாற்று வேலை தேடுவதற்காக பலர் பயன்படுத்தி வந்த ஐந்து ஆண்டு விடுப்பு விருப்பத்தை ரத்து செய்வதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சக செயலாளர் எஸ். ஆலோக பண்டாரவை கோடிட்டு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த சிறப்பு விடுப்பை முடிவுக்குக் கொண்டுவரும் சுற்றறிக்கை இந்த வாரம் வெளியிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஏற்கனவே அத்தகைய விடுப்பைப் பெற்றவர்களுக்கு விடுப்பு நீடிப்பு இருக்காது என்றும், புதிய விண்ணப்பங்களும் இனி பரிசீலிக்கப்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் 2022 ஆம் ஆண்டில் ஐந்து ஆண்டு சம்பளமில்லா விடுப்பு வழங்க அமைச்சரவை முடிவு எடுக்கப்பட்டது. ஓய்வூதியம் பெறும் அதிகாரிகளுக்கு அவர்களின் மூப்புக்கு எந்தவித பாரபட்சமும் இல்லாமல் விடுப்பு வழங்கப்பட்டது.

இந்த வசதியைப் பயன்படுத்தி சென்ற மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்கள் போன்ற நிபுணர்கள் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளனர். இதன் காரணமாக, இப்போது அரசுத் துறையில் குறித்த நிபுணர்களுக்கான பாரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக, இந்த முடிவு எடுக்கப்பட்டபோது, அரசாங்கத்தின் சம்பள செலவைக் குறைக்க வேண்டிய அவசியம் இருந்தது, ஆனால் இப்போது பொருளாதாரம் நிலையாகிவிட்டதால், அவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்புவது முக்கியம் என்று ஆலோக பண்டார குறிப்பிட்டுள்ளார்.

கணவனை கொடூரமாக கொலை செய்த மனைவி!!

மிஹிந்தலை பொலிஸ் பிரிவின் மஹாகிரிந்தேகம பகுதியில் ஒருவர் நேற்று காலை தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்டவர் மிஹிந்தலை மஹாகிரிந்தேகம பகுதியைச் சேர்ந்த 61 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு குறித்த நபருக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

அதன் பின்னர், நேற்றையதினம் காலை உயிரிழந்தவரின், மனைவி அவரை ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் கணவனை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்படும் 53 வயதான மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வடக்கு – கிழக்கில் இன்றிரவுடன் அதிகரிக்கும் கனமழை வெளியான தகவல்!!

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றிரவு (08) முதல் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

அவதானமாக இருக்க வலியுறுத்து

மேலும், பிற்பகல் 1:00 மணிக்குப் பிறகு தீவின் பிற பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை நேரங்களில் பனிமூட்டமான நிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் திணைக்களம் பொதுமக்களை கோரியுள்ளது.

கண்டியில் 35 மாணவர்களும் 10 ஆசிரியர்களும் மரணம் : பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக கண்டி மாவட்டத்தில் 35 பாடசாலை மாணவர்களும் 10 ஆசிரியர்களும் உயிரிழந்துள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் நிஹால் அலஹகோன் தெரிவித்துள்ளார்.

மாத்தளை மாவட்டத்தில் பாடசாலை மாணவர் உயிரிழந்துள்ளதாகவும், நுவரெலியா மாவட்டத்தில் தற்போது தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

காணாமல் போன மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குறித்த தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். கண்டி மாவட்டத்தில் 97,850 மாணவர்கள் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாத்தளை மாவட்டத்தில் 8,500 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நுவரெலியா மாவட்டத்திற்கான புள்ளிவிவரங்கள் தற்போது கணக்கிடப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டி மாவட்டத்தில் 130 பாடசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அதிக எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்கள் இடம்பெயர்வு முகாம்களில் உள்ளனர். மேலும் 16 ஆம் திகதி பாடசாலைகள் மீள திறக்கப்படுவதால், அவர்களுக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்கு சென்று கல்வி கற்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காசாவில் இடிந்த கட்டிடங்களுக்கு நடுவில் 54 ஜோடிகளுக்கு திருமணம் : இணையங்களில் வைரல்!!

காசாவில் இடிந்த கட்டிடங்களுக்கு நடுவில் இடம்பெற்ற திருமணம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இரண்டு வருட போருக்குப் பிறகு நம்பிக்கையின் ஒரு தருணத்தில் காசாவில் ஐம்பத்து நான்கு ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர்.

இணையங்களில் வைரல்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே காசாவில் 2 ஆண்டுகளாக நடந்து வந்த போரில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய கொடூர தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாஸ்தீனர்கள் பலியானதுடன், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பட்டினிச்சாவும் துயரத்தை ஏற்படுத்தி இருந்தது.

2023ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல் காசா மீதான இஸ்ரேலின் தொடுத்த போரில் 70,360 பேர் உயிரிழந்த நிலையில் 171,047 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலைய்ல் கடந்த ஒக்டோபர் மாதம் இஸ்ரேல் – ஹமாஸ் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டபோதும் 373 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் காசாவில் இடிந்த கட்டிடங்களுக்கு நடுவில் ஐம்பத்து நான்கு ஜோடிகளுக்கு இடம்பெற்ற திருமணம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

மின்னல் தாக்கி தீப்பிடித்து எரிந்த வீடு……..!!

மின்னல் தாக்கியதால் வீடொன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (07.12.2025) இரவு காலி, பலப்பிட்டி, பஹக்மனவத்த பிரதேசத்தில், இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீப்பற்றியதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

யாழ். கடற்பரப்பில் கரையொதுங்கிய வெள்ளை நுரைகள் : மக்கள் மத்தியில் பரபரப்பு!!

யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பகுதியில் வெள்ளை நுரை கரையொதுங்கியதால் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பருத்தித்துறை இறங்குதுறையை அண்டிய கடற்பகுதியில் நேற்றைய தினம் (07.12.2025) காலை வெள்ளை நுரையில் ஒதுங்கியதால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

இலங்கையில் தொடரும் அனர்த்த நிலை நேரத்தில் யாழ்ப்பாண கடற்கரையில் திடீரென வெள்ளை நுரை கரை ஒதுங்கியது மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.