சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

2025ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைகள் இம்மாதம் 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

இந்நிலையில், சாதாரண தரப் பரீட்சைக்கான கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் என்பனவற்றினை நடத்த 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் பரீட்சை நிறைவடையும் வரை இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 3,545 பரீட்சை மையங்களில் 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை சாதாரண தரப் பரீட்சையை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் மாணவன் பரிதாபமாக பலி!!

வவுனியா- வாரிக்குட்டியூர் பகுதியில் மோட்டர் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் இன்று (06.02.2026) தெரிவித்தனர்.

வவுனியா, வாரிக்குட்டியூர் பகுதியில் மோட்டர் சைக்கிளில் நேற்றைய தினம் (05.02.2026) இரு மாணவர்கள் பயணித்த போது மோட்டர் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஒரு மாணவன் மரணமடைந்துள்ளார்.

இவ் விபத்தில் வாரிக்குட்டியூர் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் கரிஸ்ணன் (வயது 16) என்ற மாணவனே மரணமடைந்தவராவார். இது தொடர்பில் பூவரசன்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கெண்டு வருகின்றனர்.

அரச ஊழியர்களின் சம்பள மற்றும் கொடுப்பனவு அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு!!

அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் 2027ஆம் ஆண்டு சம்பள உயர்வு வரும் வரை வேறு எந்தவொரு கொடுப்பனவும் அதிகரிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.

கண்டியில் ஜனாதிபதி தலைமையில் இன்று (06.02.2026) காலை இடம்பெற்ற நிகழ்வில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், அரச சேவையைப் பொறுத்தவரை அடிப்படைச் சம்பள உயர்வே முக்கியம் என்று நாங்கள் கருதினோம். அந்த அடிப்படை சம்பள உயர்விற்காக மாத்திரம் 2025ஆம் ஆண்டில் 11,000 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டு இந்த ஜனவரி மாதத்திலேயே மேலும் 11,000 கோடி ரூபா செலவிடப்படுகிறது. 2027இல் அடுத்த கட்டமாக 11,000 கோடி ரூபா செலவிடப்படவுள்ளது. 2027 ஆகும்போது எமது அரச சேவையின் சம்பள உயர்வுக்காக மாத்திரம் நாங்கள் ஏற்கும் செலவு 33,000 கோடி ரூபாவாகும்.

இவ்வாறு சம்பள உயர்வு செய்திருக்கும் நிலையில், சிலர் மீண்டும் இந்தக் கொடுப்பனவை கூட்டுங்கள், அந்தக் கொடுப்பனவை கூட்டுங்கள் என்று கேட்பதை நான் காண்கிறேன். அது நடக்காது.

முதலில் நாங்கள் 2027இல் மூன்றாவது சம்பள அதிகரிப்பு வந்த பின், எமது வரவு செலவுத் திட்டத்திற்கு ஏற்படும் தாக்கத்தை பார்த்துவிட்டுத் தான் ஏனைய கொடுப்பனவுகள் பற்றி யோசிப்போம்.

அதனால் யார் எவ்விதத்தில் ஆர்ப்பாட்டம் செய்தாலும், வீதியில் இறங்கினாலும் 2027 ஆம் ஆண்டு அடுத்த சம்பள உயர்வு வரும் வரை கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட மாட்டாது என குறிப்பிட்டுள்ளார்.

வீதியில் வைத்து ஆசிரியையின் உதடுகளை துண்டித்த மாணவன்!!

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரியில், 12 ஆம் வகுப்பு மாணவன் ஒருவர் தனது ஆசிரியையை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி அவரது உதடுகளை துண்டித்த சம்பவம் பெரும் அதிர்ர்ச்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் தனது ஆசிரியையை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி, அவரது இரண்டு உதடுகளையும் துண்டித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட ஆசிரியையின் சகோதரர் அளித்துள்ள முறைப்பாட்டின்படி, ஆக்ரா வீதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பணிபுரிந்த அந்த ஆசிரியையை , மாணவன் நீண்டகாலமாகத் துன்புறுத்தி வந்துள்ளார்.

இது குறித்து பெற்றோர் – ஆசிரியர் சந்திப்பின் போது மாணவனின் தாயிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது. மாணவனின் தாய் தனது மகனின் நடத்தை மாறும் என உறுதியளித்த போதிலும், அந்த மாணவனின் தொல்லை நீடித்துள்ளது.

மாணவனின் செயலால் மனமுடைந்த ஆசிரியை, தனது பணியில் இருந்து விலகி வேறொரு பாடசாலையில் வேலைக்குச் சென்றுள்ளார். எனினு , மாணவன் விடாமல் ஆசிரியை வேலை செய்யும் புதிய இடத்தைக் கண்டுபிடித்து, தினமும் அவரைப் பின்தொடர்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் அண்மையில் ஆசிரியை வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது வழியில் மறித்த அந்த மாணவன், மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் ஆசிரியையைத் தாக்கி அவரது இரண்டு உதடுகளையும் துண்டித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் தலைமறைவாக உள்ள மாணவனைத் தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிகிச்சைக்கு பணமில்லாமல் உயிர்விட்ட சீரியல் நடிகை!!

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சீரியல் நடிகை வாஹினி தற்போது சிகிச்சைக்கு பணமில்லாமல் உயிரிழந்துள்ளார்.

பிரபல சீரியல் நடிகை இவர் திரைப்படத்திலும் நடித்துள்ளார் புற்றுநோயால் காலமானார். சின்னதிரையில் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் இவர் நடித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வைத்துள்ளார்.

இவர் பல நாட்களாக மார்பக புற்றுநோயால் பாதிக்கபட்டு வந்துள்ளார். ஆனால் இதனை ஆரம்பத்திலேயே சிகிச்சை பெறாமல் அப்படியே விட்டு விட்டதால் தற்போது அந்த நோய் முற்றி அதை குணப்படுத்த அதிக பணம் தேவைப்பட்டுள்ளது.

ஆனால் தன்னிடம் அதிக பணம் இல்லாத காரணத்தினால் இவர் நேற்று புதன்கிழமையன்று உயிரிழந்தார். வாஹினியின் மறைவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

அவரின் மறைவுக்கு ஏராளமானோர் சோசியல் மீடியா பக்கத்தில் அவர்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இவரின் பல உறுப்புக்கள் இந்த புற்றுநோய் காரணமாக செயலிழந்துள்ளது.

இதனால் ஐசியூ மற்றும் கீமோதெரபி சிகிச்சையால் மருத்துவ செலவுகள் அதிகரித்தன. சிகிச்சைக்கு ரூ.35 லட்சம் வரை செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் வாஹினியிடம் பணம் இருக்கவில்லை.

கராத்தே கல்யாணி உதவிய போதும் பணம் போதாமல் இருந்துள்ளது. இதன் காரணமாக சிகிச்சை செய்து கொள்ளாமல் இவர் உயிர் இழந்துள்ளார்.

விமான நிலையத்தில் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த யாழ் நபர் : காத்திருந்த இருவரும் கைது!!

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ‘குஷ்’ ரக போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வந்த யாழ்ப்பாண ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பயணி யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் எனவும், அவர் அடிக்கடி வான்பயணங்களை மேற்கொள்ளும் ஒரு வர்த்தகர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, போதைப்பொருள் தொகுதியை மன்னார் பகுதிக்கு கொண்டு செல்வதற்காக மேலும் இருவர் நீர்கொழும்பு நகரிலுள்ள சொகுசு விற்பனை நிலையத்திற்கு அருகில் காத்திருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

அதற்கமைய, இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் இரு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் நபர் இன்று அதிகாலை 12.35 மணியளவில் தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து தாய்லாந்து ஏர்வேஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

பயணியின் பயணப் பையின் ரகசியப் பகுதியில் இரண்டு பொதிகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ 116 கிராம் ‘குஷ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதேவேளை கைப்பற்றப்பட்ட குஷ்’ போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி 2 கோடியே 11 இலட்சத்து 60 ஆயிரம் (ரூபா 21,160,000) என மதிப்பிடப்பட்டுள்ளது.

உடன் கைது செய்யப்பட்ட ஏனைய இருவர் மன்னார் பகுதியைச் சேர்ந்த 43 மற்றும் 36 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதில் ஒருவர் தொழில்நுட்பவியலாளராகப் பணியாற்றி வருபவராவார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காகக் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களையும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

தென்னிலங்கை பெரும் சோகம் : முச்சக்கர வண்டியிலிருந்து வீசப்பட்ட யுவதி பலி!!

ஹொரணை – ரத்னபுர பிரதான வீதியில் சம்பவித்த விபத்தில் 20 வயதுடைய யுவதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இங்கிரிய பகுதியில் இடம்பெற்ற மத நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக குறித்த யுவதி முச்சக்கர வண்டியில் இங்கிரிய நோக்கி பயணித்துள்ளார்.

வளைவில் எண்ணெய் தாங்கி லொறியுடன் முச்சக்கர வண்டி மோதியதில், பின் இருக்கையில் இருந்த பெண் தூக்கி வீசப்பட்டு, லொறியின் பின் சக்கரங்களுக்கு அடியில் நசுங்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே குறித்த உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் கிரியெல்ல பகுதியைச் சேர்ந்த கிருஷாணி கவிந்தியா குமாரி என்ற 20 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரியெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு கோடி மதிப்புள்ள அரிய பாம்பு : கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல்!!

இந்தியாவில், 1 கோடி மதிப்புள்ள அரியவகை பாம்பு ஒன்றை பொலிஸார் கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர்.

பீகார் மாநிலம் கயா ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்பு படை (RPF) மற்றும் அரசு ரயில்வே பொலிஸ் (GRP) இணைந்து நடத்திய சோதனையில், 1 கோடி ரூபாய் மதிப்புள்ள அரிய சிவப்பு மண்ணுளி (Red Sand Boa) பாம்பு கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நடவடிக்கை, Operation WILEP என்ற வனவிலங்கு மற்றும் சட்டவிரோத பொருட்கள் கடத்தலை தடுக்கும் சிறப்பு நடவடிக்கையின் போது நடைபெற்றது.

பொலிசார் சந்தேகத்திற்கிடமான இரண்டு நபர்களை கண்காணித்து, அவர்கள் எடுத்துச் சென்ற நீல நிற பையில் சுமார் 4 அடி நீளமுள்ள சிவப்பு மண்ணுளி பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது.

கைதாகியவர்கள், மொஹம்மது சதுல்லா (46) மற்றும் உபெந்திர குமார் (28) என அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் பிரயாக்ராஜ் நகரிலிருந்து ஹாவ்ரா-ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பாம்பை கொண்டு வந்து, கயாவில் ஒருவரிடம் ஒப்படைக்க திட்டமிட்டிருந்தனர்.

இந்த பாம்பு, Wildlife Protection Act, 1972-இன் Schedule IV-இல் பதிவு செய்யப்பட்டுள்ளதால், இதனை வேட்டையாடுடல் மற்றும் கடத்துதல் குற்றமாகும். குற்றவாளிகளுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 25,000 முதல் 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிவப்பு மண்ணுளி பாம்பு, அதன் இரட்டைத் தலை போன்ற தோற்றம் காரணமாக “two-headed snake” என அழைக்கப்படுகிறது. இது அதிர்ஷ்டம், செல்வம், மாந்த்ரீகம் போன்ற மூடநம்பிக்கைகளால் சர்வதேச கருப்பு சந்தையில் 1 கோடி முதல் 25 கோடி ரூபாய் வரை விலை பெறுகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட பாம்பு, வனத்துறைக்கு ஒப்படைக்கப்பட்டது.

தேனீக்களிடமிருந்து 20 குழந்தைகளை காப்பாற்ற தன் உயிரை தியாகம் செய்த பெண்!!

அங்கன்வாடியில் சமையல் செய்யும் பெண், தேனீக்களிடமிருந்து 20 குழந்தைகளை காப்பாற்ற உயிர் தியாகம் செய்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம், நீமுச் மாவட்டத்தின் ரன்பூர் கிராமத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் உள்ள குழந்தைகள் வழக்கம் போல், மையத்திற்கு வெளியே விளையாடி கொண்டிருந்தனர்.

அப்போது அருகே உள்ள மரத்தின் தேனீ கூட்டில் இருந்து நூற்றுக்கணக்கான தேனீக்கள் அந்த குழந்தைகளை சூழ்ந்தது.

அங்கு உள்ள குழந்தைகளுக்கு சமையல் செய்யும் 40 வயதான காஞ்சன் பாய் என்ற பெண், இதனை கவனித்த உடன் உடனடியாக பாய் மற்றும் கையில் கிடைத்தவற்றை வைத்து குழந்தைகளை சுற்றி பாதுகாப்பாக ஒரு அறைக்கு அழைத்து சென்றுள்ளார்.

இந்த சம்பவத்தின் போது தேனீக்கள் அவரை சூழ்ந்து கடுமையாக கொட்டியுள்ளன. இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் குழந்தைகளை பாதுகாத்துவிட்டு, வெளியே வந்து அங்குள்ள தேனீக்களை விரட்ட முயற்சித்துள்ளார்.

தேனீக்கள் கடுமையாக தாக்கியதில் அவர் மயங்கி விழுந்துள்ளார். இதனை கவனித்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். காஞ்சன் பாயின் கணவர் ஷிவ்லால் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

Jai Mata Di என்ற சுய உதவிக்குழுவின் தலைவராக உள்ள காஞ்சன் பாய், அங்கன் வாடி குழந்தைகளுக்கு மத்திய உணவு சமைத்து தருவார். இவரின் வருமானமே அந்த குடும்பத்திற்கு ஒரே வருவாய் ஆதாரமாக இருந்துள்ளது.

குழந்தைகளை காப்பற்றுவதற்காக உயிர் தியாகம் செய்த காஞ்சன் பாய் குடும்பத்திற்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பிள்ளைகளை தனியாக விட்டுச் செல்ல விருப்பம் இல்லை : பெண் எடுத்த விபரீத முடிவு!!

இந்தியாவின் ஹைதராபாதில், ரயில் நிலையம் ஒன்றில் ஒரு பெண்ணும் அவரது இரண்டு பிள்ளைகளும் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

ஹைதராபாதில் மென்பொறியாளராக பணியாற்றிவருபவர் ஷாந்தி ரெட்டி (Pinninti Vijaya Shanthi Reddy, 38). ஷாந்தியின் கணவரான விஜய ரெட்டி, துபாயில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவருகிறார்.

தம்பதியரின் பிள்ளைகளான சேத்தனா ரெட்டியும் (18) விஷால் ரெட்டியும் (17) ஹாஸ்டலில் தங்கி படித்துவருகிறார்கள்.

இந்நிலையில், சனிக்கிழமை மாலை தன் பிள்ளைகளை ஹாஸ்டலிலிருந்து அழைத்துக்கொண்டு Cherlapally என்னும் ரயில் நிலையத்துக்கு காரில் சென்றுள்ளார் ஷாந்தி.

.காரை ரயில் நிலையத்தின் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு ரயில் நிலையத்துக்கு உள்ளே சென்றுள்ளார்கள் மூவரும். பின்னர், அவர்கள் மூன்று பேரும் உயிரற்ற நிலையில் கிடப்பதைக் கண்ட மக்கள் பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர்.

அவர்கள் உடல்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் வந்த காரை பரிசோதித்துள்ளனர் பொலிசார்.

காருக்குள், ஷாந்தி எழுதியதாக கருதப்படும் கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில், தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ள ஷாந்தி, தன் பிள்ளைகளை இந்த உலகில் தனியாக விட்டுச் செல்ல தனக்கு விருப்பமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தாயும் பிள்ளைகளும் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட விடயம் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள நிலையில், பொலிசார் அந்த துயர சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

19 வயதில் காதல் : தங்கையையும், காதலனையும் வெட்டிக் கொன்ற அண்ணன்கள்!!

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் அருகே உள்ள உம்ரி கிராமத்தில், வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த காதல் ஜோடி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 400 குடும்பங்கள் வாழும் உம்ரி கிராமத்தில், இந்து மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் எந்தவித மத மோதல்களுமின்றி ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். ஆனால் கடந்த ஜனவரி மாதம் நடந்த இந்த இரட்டைக் கொலை அந்த அமைதியைக் குலைத்துள்ளது.

19 வயதான காஜல் மற்றும் 27 வயதான முகமது அர்மான் ஆகிய இருவரும் அண்டை வீட்டார். இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலித்து வந்துள்ளனர்.

கடந்த ஜனவரி 19-ம் தேதி இவர்கள் இருவரும் காணாமல் போன நிலையில், ஜனவரி 21-ம் தேதி கிராமத்தின் ஒதுக்குப்புறமான ஆற்றுப் படுகையில் இவர்கள் புதைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இருவரும் மண்வெட்டியால் அடித்துக் கொல்லப்பட்டதாகப் போலீசார் தெரிவித்தனர். இந்தக் கொலை தொடர்பாகக் காஜலின் மூன்று சகோதரர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் மொராதாபாத் நகரில் மேஸ்திரி வேலை செய்பவர்கள். தங்களது தங்கை மாற்று மதத்தைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்ததை கௌரவக் குறைவாகக் கருதி,

இந்தத் துயரமான முடிவை அவர்கள் எடுத்ததாகத் துணைத் தலைவர் முனிராஜ் ஜி தெரிவித்துள்ளார். காவல்துறை இதனை ஒரு ‘ஆணவக் கொலை’ என வகைப்படுத்தியுள்ளது.

உம்ரி கிராமத்தில் இதுவரை இது போன்ற மத ரீதியான பிரச்சினைகளோ அல்லது காதல் விவகாரங்களுக்காகக் கொலைகளோ நடந்ததில்லை என உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

“இப்படி ஒரு சம்பவத்தை நாங்கள் கற்பனை கூட செய்து பார்த்ததில்லை” என அங்கிருப்பவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கொல்லப்பட்ட இருவரும் அமைதியான சுபாவம் கொண்டவர்கள் என்றும், அவர்களுக்கு அதிக நண்பர்கள் இல்லை என்றும் அண்டை வீட்டார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியாவின் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் சில அதிர்ச்சியான தகவல்களை அளிக்கின்றன: 2014-ல் வெறும் 18 ஆக இருந்த ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை, 2023-ல் 38 ஆகப் பதிவாகியுள்ளது.

ஆனால், சமூக ஆர்வலர்கள் இந்தக் கணக்கை மறுக்கின்றனர். பல ஆணவக் கொலைகள் சாதாரணக் கொலை வழக்குகளாகப் பதிவு செய்யப்படுவதால், உண்மையான எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக்கில் இருக்கும் என அவர்கள் எச்சரிக்கின்றனர்.

தையல் கலையில் 15 நிமிடங்களில் உலக சாதனை படைத்த யாழ் இளம் பெண்!!

யாழ் இளம் பெண் ஒருவர் தையல் கலையில் 15 நிமிடங்களுக்குள் தனது அபார திறமையை வெளிப்படுத்தி உலக சாதனை படைத்துள்ளார்.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு முள்ளியானைச் சேர்ந்த இளம் பெண் ஜெயந்தன் மேரி சுலக்சனா, உலக சாதனைப் புத்தகத்தில் தனது பெயரைப் பதிவு செய்து பெருமை சேர்த்துள்ளார்.

இலங்கை மகளிரின் திறமைகளை வெளிக்கொணரும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட விருது வழங்கும் விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (01.02.2026) கொழும்பில் நடைபெற்றது.

அந்த நிகழ்வில் வழங்கப்பட்ட சிறப்புப் பணியை ஜெயந்தன் மேரி சுலக்சனா வெறும் பதினைந்து நிமிடங்களுக்குள் வெற்றிகரமாக செய்து முடித்ததன் மூலம் இந்த உலக சாதனையைப் படைத்தார்.

இந்நிலையில் இந்த அபூர்வ சாதனையைத் தொடர்ந்து அவருக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.

 

தங்கையின் மோசமான காணொளியை பார்த்து அதிர்ச்சிக்குள்ளான சகோதரன்!!

தங்கையின் மோசமான காணொளியை நண்பனின் கையடக்க தொலைபேசியில் பார்த்த சகோதரன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதையடுத்த14 வயது நிரம்பிய மாணவியான தங்கை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக மாணவியின் சகோதரர் அளித்த முறைப்பாட்டை அடுத்து, கந்தானை பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரின் கையடக்க தொலைபேசியை வாங்கி அவசர தொலைபேசி அழைப்பு ஒன்றை எடுத்த போதே குறித்த காணொளியை அவதானித்துள்ளார்.

அதன் பின்னர் அவர் செய்த முறைப்பாட்டில் 19 வயது இளைஞரை கடந்த (3.01.2026) இரவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்,முறைப்பாடு செய்த சகோதரரின் நண்பர் என்றும், அவர் குறித்த மாணவியுடன் சிறிது காலமாக காதல் உறவு கொண்டிருந்தமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொலிஸார் கையடக்க தொலைபேசியை கைப்பற்றி, அதில் உள்ள காணொளியை ஆராய்ந்து, குற்றத்தை உறுதிசெய்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

அதே நேரத்தில் வன்கொடுமைக்கு உள்ளான மாணவி வைத்திய பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

நடுவீதியில் காட்டு யானைகள் சண்டை : அச்சத்தில் பிரதேசவாசிகள்!!

தம்புள்ளை – ஹபரணை பிரதான வீதியில் திகம்பதஹா பிரதேசத்தில் புதன்கிழமை (4) பிற்பகல் இரண்டு காட்டு யானைகள் நடுவீதியில் சண்டையிட்டுக்கொண்டிருந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் பிரதேசவாசிகளும் வாகனங்களில் பயணித்தவர்களும் அச்சத்தில் இருந்துள்ளனர்.

இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். திகம்பதஹா பிரதேசத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் பூண்டு : மிஸ் பண்ணாதீங்க!!

சமையல்களில் முக்கிய இடம் பெறுவது பூண்டு.அதேநேரம் சாப்பிடும் போது பூண்டை ஒதுக்கி வைக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது.

அதற்கு காரணம் பூண்டில் இருக்கும் நன்மைகள் யாருக்கும் தெரிவதில்லை. காலை எழுந்தவுடன் ஒரு பூண்டு சாப்பிடுவதால் உடலில் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை காண்போம்.

நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக மாற்றும். அதனால், சளி இருமல் போன்ற நோய் தொற்று பிரச்சனை இருக்கவே இருக்காது.

உடலில் ரத்த அழுத்தம் அளவை குறைத்து இதய ஆரோக்கியத்தை காக்கும். ரத்த ஓட்டமும் சீராக இருக்கும். இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பதால் ரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு பூண்டு அருமந்து.

செரிமான என்சைமை தூண்டும். வயிறு உப்புசம், வாயு தொல்லை ஆகியவற்றை நீக்கும். உடலில் பாக்டீரியாக்கள் சம நிலையில் இருக்கும்.

மனித உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்றும். குறிப்பாக கல்லீரல் செயல்பாட்டை துரிதப்படுத்தும். செரிமான அமைப்பை சுத்தப்படுத்தும்.

உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும். மெட்டபாலிசத்தை ஊக்குவித்து உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்வதை தடுக்கும். பசி உணர்வை கட்டுப்படுத்தும். சரும ஆரோக்கியத்திற்கு பூண்டு நல்லது முகப்பருவுக்கு காரணமான பாக்டீரியாவை அழிக்கும்.

அலர்ஜியை குறைத்து வயதான தோற்றத்தை ஏற்படுவதை தடுக்கும், ஒன்று அல்லது இரண்டு பூண்டு பற்களை நசுக்கி சாப்பிடலாம். வெறும் வயிற்றில் சாப்பிட்டு விட்டு வெதுவெதுப்பான நீர் குடிக்கலாம்.

இஸ்லாமிய இளைஞனுடன் காதல் வயப்பட்ட இந்துப்பெண் : அரங்கேறிய கொடூரம்!!

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில், வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த காதலர் இருவர் ஆணவக் கொலை’ செய்யப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது.

பல ஆண்டுகளாக மத நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வந்த கிராம மக்கள் மத்தியில் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் உம்ரி கிராமத்தைச் சேர்ந்த 19 வயது காஜல் (இந்து) மற்றும் 27 வயது முகமது அர்மான் (முஸ்லிம்) ஆகியோரது உடலங்கள், கடந்த ஜனவரி 21 ஆம் திகதி ஆற்றங்கரையோரம் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டன.

ஜனவரி 18 மற்றும் 19 ஆம் திகதிக்கு இடைப்பட்ட இரவில், அர்மான் தனது காதலியான காஜலைச் சந்திக்க அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார்.

காதலர்கள் சந்தித்தபோது காஜலின் மூன்று சகோதரர்களும் அவர்களைக் கையும் மெய்யுமாகப் பிடித்துள்ளனர். ஆத்திரமடைந்த சகோதரர்கள், இருவரையும் மண்வெட்டியால் கொடூரமாக அடித்துக் கொன்றுவிட்டு, உடலங்களை இரகசியமாகப் புதைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கொலை செய்த பிறகு, குற்றத்தை மறைக்க முயன்ற சகோதரர்கள், அர்மான் தனது தங்கையைக் கடத்திச் சென்றதாக ஜனவரி 20 ஆம் திகதி காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சகோதரர்களின் வாக்குமூலத்தில் காணப்பட்ட முரண்பாடுகளைக் கண்டறிந்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தியபோதே உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

உடல்கள் புதைக்கப்பட்ட இடத்தைக் கண்டுபிடித்த பொலிஸார் , காஜலின் மூன்று சகோதரர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 400 குடும்பங்கள் வாழும் உம்ரி கிராமத்தில் இதுவரை மத ரீதியான மோதல்கள் ஏற்பட்டதில்லை என கிராம மக்கள் தெரிவிக்கின்ற நிலையில் காதலர்கள் கொடூர கொல்லப்பட்ட சம்பவத்தால் கிராமமே அதிர்ந்துபோயுள்ளது.

அதேவேளை இந்தியாவில் 2023 ஆம் ஆண்டில் மாத்திரம் 38 கௌரவக் கொலைகள் உத்தியோகபூர்வமாகப் பதிவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில், , உண்மையான எண்ணிக்கை இதைவிட மிக அதிகம் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.