மும்பை விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றம் : பயணிகளுடன் உரசிக்கொண்ட விமானங்கள்!!

இந்தியாவின் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் (03) இரவு இரண்டு பயணிகள் விமானங்களின் இறக்கைகள் மோதி விபத்திற்குள்ளதகியுள்ளது.

இந்த விபத்து காரணமாக யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை என ஏர் இந்தியா, இண்டிகோ நிறுவனங்கள் அறிக்கைகளை வெளியிட்டு உறுதி செய்துள்ளன.

இச்சம்பவத்தின்போது கோவைக்குப் புறப்படத் தயாராக இருந்த ஏர் இந்தியா விமானமும் ஹைதராபாத்தில் இருந்து வந்து தரையிறங்கிய இண்டிகோ விமானமும் ஒன்றோடு ஒன்று உரசிக்கெண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் அனைத்துலக விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் புறப்படுவதற்காக, அது நிறுத்தப்பட்டிருந்த இடத்திலிருந்து பின்னோக்கி நகர்த்தப்பட்டபோது, ஏற்கெனவே அதே ஓடுபாதையில் மெதுவாக வந்து கொண்டிருந்த விமானத்தின் இறக்கைகள் மீது லேசாக உரசியுள்ளது.

இரண்டு விமானங்களும் மிகக் குறைந்த வேகத்தில் பயணித்ததால், ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் இரண்டு விமானங்களிலும் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் எந்த காயமும் இல்லாமல் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, விமான நிறுவனங்கள் விமானங்களை இரத்து செய்து பயணிகளுக்கு மாற்று தங்குமிடங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏர் இந்தியா விமானத்தின் இறக்கை முனை சேதமடைந்துள்ளது என்றும்‌ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த விமானம் தொழில்நுட்ப ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது என்றும் அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இந்த விபத்து சம்பவம் குறித்து இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) இந்த சம்பவம் குறித்து முறையான விசாரணையைத் தொடங்கியுள்ளது.

கனடாவுக்கு தற்காலிக விசாவில் சென்ற தமிழர்களுக்கு அதிர்ச்சித் தகவல்!!

கனடாவிற்கு தற்காலிக விசாவில் வருகை தந்தவர்கள், அதன் காலம் முடிவடைந்ததுடன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பதை கடுமையாக்கப்பட்டுள்ளதாக கனேடிய குடிவரவுத் துறை அமைச்சர் லெனா மெட்லெஜ் தியாப் தெரிவித்துள்ளார்.

தற்காலிக விசாக்களில் கனடாவுக்குள் வருபவர்கள் வெளியேறுவதைக் கண்காணிக்க டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஒரு நபர் நாட்டை விட்டு வெளியேறும் போது அவரது விபரங்களை எல்லைப் பாதுகாப்பு முகவரகம் பதிவு செய்யப்படுகிறது.

எனினும் விசா காலம் முடிந்ததால் குறிப்பிட்ட நபர் வெளியேறுகிறாரா என்பதைத் தானாகக் கண்டறியும் வசதி இல்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை சாதாரண நடைமுறையின் மூலம் சரிபார்க்க அதிக நேரம் எடுப்பதால், அதனை மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2026ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1.9 மில்லியன் தற்காலிக விசாக்கள் காலாவதியாகவுள்ளதாக கனேடிய குடிவரவுத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

விசிட்டர் விசா உட்பட பல விசாக்களில் பல தமிழர்கள் கனடா சென்றுள்ள நிலையில், அவர்களுக்கும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் : வெளியான புதிய தகவல்!!

கடந்த ஆண்டு (2025), 2047 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தனியார் வாகனங்கள் மற்றும் வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களுக்கான மொத்த இறக்குமதி செலவினமாக கூறப்படுகின்றது.

மேலும், வாகன இறக்குமதிக்கான மொத்த செலவு 2025 டிசம்பரில் 301 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்துள்ளது.

2025 ஆம் ஆண்டில் வணிக வாகன இறக்குமதி 440.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், தனியார் வாகன இறக்குமதி 1,606.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் இருந்தது.

கடந்த ஆண்டில் (2025) அதிகபட்ச வருடாந்திர ஏற்றுமதி வருவாய் பதிவாகியிருந்தாலும், வர்த்தக கணக்கு பற்றாக்குறை 2024 உடன் ஒப்பிடும்போது 7.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டில் (2025) வாகன இறக்குமதி செலவினத்தில் ஏற்பட்ட அதிகரிப்பே இதற்குக் காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

தங்கம் வாங்க காத்திருந்தோருக்கு சாதகமான செய்தி : இன்று பதிவாகியுள்ள விலை நிலவரம்!!

கொழும்பு செட்டியார் தெரு தகவல்களின் படி இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 356,100 ரூபாவாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 385,000 ரூபாவாக காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் உலக சந்தையில் இன்றைய நிலவரப்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 4,870 முதல் 4,890 அமெரிக்க டொலர் என்ற மதிப்பீட்டில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் வரலாற்றில் முதன்முறையாக உலக சந்தையில் தங்க விலையானது 5000 அமெரிக்க டொலர்களை தாண்டியிருந்தது.

அதேவேளை இலங்கையிலும் வரலாற்றில் முதன்முறையாக 4 இலட்சம் ரூபாவை எட்டியிருந்தது தங்க விலை. இவ்வாறான சூழலில் தற்போது தங்க விலையில் வீழ்ச்சிப் போக்கு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா நெளுக்குளத்தில் சுற்றுச்சூழல் தூய்மை எனும் தொனியில் சிரமதானம் முன்னெடுப்பு!!

சுற்றுச்சூழல் தூய்மை , ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் சமூக ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்கில் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் பொது இடங்களை அழகுபடுத்துவோம் எனும் நெளுக்குளம் கிராம அலுவலர் திருமதி லெ.கௌசல்யாவின் எண்ணக்கருவில் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது.

இதன் முதற்கட்டமாக இன்று (03.02.2025) காலை வவுனியா நெளுக்குளம் கிராம சேவையாளர் அலுவலக வளாகம் , கிராம அபிவிருத்தி சங்க வளாகம் என்பற்றினை அழகுபடுத்தும் செயற்பாடு இடம்பெற்றது.

இச் செயற்பாட்டில் கிராம மக்கள் , அமைப்புக்களின் பிரதிநிதிகள், இளைஞர் மற்றும் யுவதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மகளை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த தந்தை – பாட்டி வெளியிட்ட தகவல்!!

தென்னிலங்கையில் இரகசியமான முறையில் கையடக்க தொலைபேசியை பயன்படுத்திய மகளை, தந்தை ஒருவர் கொலை செய்துள்ள நிலையில், அது குறித்த தகவலை சிறுமியின் பாட்டி வெளியிட்டுள்ளார்.

காலி, ஊரகஸ்மஹந்திய பகுதியில்14 வயது மகளை கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

கையடக்க தொலைபேசி தொடர்பில் தந்தைக்கும் மகளுக்கும் கடும் மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதன்போது கரந்தெனிய பகுதியிலுள்ள பாடசாலையில் 9ஆம் வகுப்பு பயின்று வந்த துல்மி சமாயா சத்சரணி என்ற மாணவி கொலை செய்யப்பட்டார்.

சம்பவத்தன்று இரவு உணவு அருந்திய பின் தனது அறைக்குச் சென்ற மாணவி, தலையணைக்கு அடியில் கையடக்க தொலைபேசி ஒன்றை மறைத்து வைத்து இரகசியமாகப் பயன்படுத்தியுள்ளார்.

இதனைத் தற்செயலாகக் கண்ட தந்தை, கடும் ஆத்திரமடைந்து வீட்டில் இருந்த கறுவாப்பட்டை வெட்டும் கத்தியால் மகளைக் கொடூரமாகத் தாக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாக்குதலில் பலத்த காயமடைந்த மாணவி அண்டை வீட்டாரின் உதவியுடன் எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக 41 வயதான இந்துனில் புஷ்பகுமார என்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட தந்தையை எல்பிட்டிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில் எதிர்வரும் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனது மகளைப் பிரிந்து அவரது தாய் வெளிநாடு சென்றுவிட்ட நிலையில், மகளின் எதிர்காலத்திற்காக தந்தை இரண்டாவது திருமணம் செய்யவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபரின் தாய்

துயரமான சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த சந்தேக நபரின் தாய்,

“தனது மகன் பேத்தி மீது அதிக அன்பு வைத்திருந்ததாக கண்ணீருடன் கூறினார். ஏற்கனவே கையடக்க தொலைபேசி பயன்படுத்தக் கூடாது எனத் தந்தை எச்சரித்திருந்த நிலையில்,

மற்றுமொரு நபர் மூலம் கிடைத்த தொலைபேசியை மகள் பயன்படுத்தியதால் ஏற்பட்ட திடீர் கோபமே இந்த விபரீதத்திற்கு காரணம்” என அவர் தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்ட மாணவிக்கு தொலைபேசி வழங்கிய நபர் யார் என்பது குறித்து ஊரகஸ்மஹந்திய பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது சோகம் – பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!!

தென்னிலங்கையில் கடற்கரைக்குச் சென்ற இளைஞன் ஒருவர், கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

காலி, கராந்துவ பகுதியைச் சேர்ந்த அச்சிர சனேஸ் சமரசேகர என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது 20ஆவது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக உறவினர்களுடன் சென்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மரண விசாரணை அதிகாரியிடம் வாக்குமூலம் அளித்த உயிரிழந்த இளைஞனின் தந்தை “எனக்கு நான்கு பிள்ளைகள். உயிரிழந்தது எனது கடைசி மகன். அவர் கடந்த 29 ஆம் திகதி தனது 20 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

அதனை கொண்டாடுவதற்காக நாங்கள் கடற்கரைக்குச் சென்றோம். அங்கு மகன் உறவினர்களுடன் பந்து விளையாடிக் கொண்டிருந்த போது பந்து கடலில் அடித்துச் செல்லப்பட்டது.

அதைப் பிடிக்கச் சென்ற மகன் அலையில் இழுத்துச் செல்லப்பட்டார். அவரைக் காப்பாற்ற முயன்ற மேலும் இருவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட போதிலும், பிரதேசவாசிகளின் உதவியுடன் அவர்கள் மீட்கப்பட்டனர்.

ஆனால் எனது மகனை எங்களால் காப்பாற்ற முடியாமல் போனது. மகன் உயிரிழந்த இடத்திலேயே மறுநாள் அவரது சடலம் மிதந்த நிலையில் மீட்கப்பட்டது” என அவர் மேலும் தெரிவித்தார்.

நீரில் மூழ்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை வைத்திய அதிகாரி பபசரா குணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மோமோஸ் வாங்க 85 லட்சம் பெறுமதியான தங்க நகைகளை கொடுத்த சிறுவன் : பெற்றோர் அதிர்ச்சி!!

இலவசமாக மோமோஸ் தருவதாக கூறி சிறுவனிடம் ரூ.85 லட்ச தங்க நகைகளை கடை உரிமையாளர்கள் சுருட்டியுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா நகரத்தை சேர்ந்த விம்லேஷ் மிஸ்ரா, வாரணாசியில் உள்ள கோயிலில் பூசாரியாக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு 7வது படிக்கும் மகன் ஒருவர் உள்ளார். அந்த மகனுக்கு மோமோஸ் உணவு என்றால் மிகவும் விருப்பம். பணம் கிடைக்கும் போதெல்லாம் அதனை வைத்து அருகே உள்ள கடையில் மோமோஸ் வாங்கி சாப்பிட்டுள்ளார்.

இதனை கவனித்த அந்த கடையின் உரிமையாளர்கள் இலவசமாக மோமோஸ் வேண்டுமென்றால், தங்கள் கேட்கும் பொருட்களை வீட்டில் இருந்து எடுத்து வருமாறு கூறியுள்ளனர்.

அதனை சிறுவன் செய்ததும், வீட்டில் உள்ள தங்க நகைகளை எடுத்து வந்தால் வாழ்நாள் முழுவதும் இலவசமாக மோமோஸ் தருவதாக தெரிவித்துள்ளனர்.

இதனை கேட்டு மகிழ்ச்சியடைந்த சிறுவன், வீட்டில் உள்ள தங்க நகைகளை எடுத்து வந்த கடை உரிமையாளர்களிடம் வழங்கி மோமோஸ் பெற்றுள்ளான்.

அதன் பின்னர், விம்லேஷ் மிஸ்ராவின் சகோதரி தனது நகைகளை பெற்றுக்கொள்ள வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அலமாரியை திறந்து பார்த்த போது நகைகள் இல்லாததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மாயமாகியுள்ளது.

இது குறித்து விம்லேஷ் மிஸ்ரா ராம்பூர் கர்கானா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் வீட்டிற்கு வந்து விசாரணை நடத்திய போது, மோமோஸ் வாங்குவதற்காக நகைகளை கொடுத்ததை சிறுவன் தெரிவித்துள்ளான்.

உடனடியாக அந்த கடைக்கு சென்ற போது, கடை மூடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மோமோஸ் கடை உரிமையாளர்கள் மூவரை தேடி வருகின்றனர்.

புதிதாக வாகனங்களை வாங்கியோருக்கு வெளியான முக்கிய தகவல்!!

வாகனங்களுக்கான எண் தகடுகள் வழங்கும் பணி மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளர் நாயகத்தின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மோட்டார் போக்குவரத்து ஆணையர் நாயகம் கமல் அமரசிங்க நேற்று (02) இதனை தெரிவித்துள்ளார்.

திணைக்களம் 25 ஆண்டுகளாக எண் தகடுகளை வழங்கி வருவதாகவும், புதிய டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும், அதற்காக ஒரு புதிய நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

புதிய நிறுவனம் ஜனவரி மாத நடுப்பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், எண் தகடுகளை அச்சிட அமைச்சரவை மூன்று மாத கால அவகாசம் அளித்துள்ளதாகவும் ஆணையர் நாயகம் கூறியுள்ளார்.

எண் தகடுகளை அச்சிடும் பணி வேரஹெர கிளையால் மேற்கொள்ளப்படும் என்றும் ஆணையர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

சுமார் 500,000 வாகனங்களுக்கு புதிய எண் தகடுகள் வழங்கப்பட உள்ளதாகவும், அவற்றில் மிகப்பெரிய எண்ணிக்கை மோட்டார் சைக்கிள்கள், கார்கள் மற்றும் பிற வாகனங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயக் கிணற்றில் மூழ்கி 3 சிறுமிகள் பரிதாபமாக பலி!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கலவை வட்டம் ஆரூர் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி அசோகனின் மகள்கள் யுவஸ்ரீ (13), பிரியங்கா (11) மற்றும் வெங்கடேசன் மகள் பிரியா (13).

இவர்கள் பொன்னமங்கலம் அரசு நடுநிலைப் பள்ளியில் 8 மற்றும் 6ஆம் வகுப்பு படித்து வந்தனர். சனிக்கிழமை மாலை துணி துவைக்க விவசாயக் கிணற்றில் இறங்கியுள்ளனர்.

அப்போது ஒருவர் தவறி விழுந்ததை பார்த்து மற்ற இருவரும் காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் அவர்களும் நிலை தடுமாறி கிணற்றில் விழுந்தனர். மூவரும் தண்ணீரில் மூழ்கியதால் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்ததும் வாழைப்பந்தல் போலீசார் மற்றும் கலவை தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு மூன்று சிறுமிகளின் சடலங்களும் மீட்கப்பட்டன. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

17 முறை மனைவியைக் கத்தியால் குத்தி கொன்ற கணவன் : இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!!

கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில், தனது மனைவியை நடுரோட்டில் வைத்துச் சரமாரியாகக் குத்திக் கொன்ற கணவருக்கு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.

ஆலப்புழை மாவட்டம் சேர்த்தலை பள்ளிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் (31). இவர் கேரள அரசுப் படகு போக்குவரத்துத் துறையில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி அம்பிளி (27),

அந்தப் பகுதியில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கியில் பணம் வசூல் செய்யும் முகவராகப் பணிபுரிந்து வந்தார். மனைவியின் நடத்தையில் ராஜேஷுக்குச் சந்தேகம் ஏற்பட்டதால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம் 18-ம் தேதி, அம்பிளி தனது வசூல் பணத்தை முடித்துவிட்டு ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பள்ளிபுரம் கிராம நிர்வாக அலுவலகம் அருகே வந்தபோது, ராஜேஷ் அவரை வழிமறித்து மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாகக் குத்தினார்.

பின்னர் மனைவியிடம் இருந்த வசூல் பணத்தையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடினார். பலத்த காயமடைந்த அம்பிளியை மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அம்பிளியின் மார்பு உட்பட உடலின் 17 இடங்களில் கத்திக்குத்துக் காயங்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சேர்த்தலை போலீசார் ராஜேஷைக் கைது செய்தனர். இந்த வழக்கு ஆலப்புழை கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி பாரதி முன்னிலையில் நடைபெற்று வந்தது.

ராஜேஷ் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டதால், அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். ₹2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

குடும்பத் தகராறு காரணமாக ஒரு பெண் நடுரோட்டில் வைத்துப் படுகொலை செய்யப்பட்ட இந்தச் சம்பவம் அப்போது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு குற்றவாளிகளுக்கு ஒரு பாடமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

18 வயது இளம்பெண் ஆணவக் கொலை செய்யப்பட்ட கொடூரம்!!

நெல்லை பேட்டை செக்கடியைச் சேர்ந்த பச்சிராஜன், அரசு பஸ் டிரைவர்; அவரது மனைவி ரேவதி, தனியார் பள்ளி ஆசிரியை. இவர்களின் இளையமகள் சிவமதி (18) பாளை கல்லூரியில் பிஎஸ்சி இயற்பியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

சிவமதி, பேட்டை கடசர் தெருவைச் சேர்ந்த ஆனந்த கிருஷ்ணனுடன் காதலித்து வந்தார். ஆனந்த கிருஷ்ணன் ஏர்டெல் நிறுவனத்தில் டீம் லீடராக பணியாற்றுகிறார்.

இருவரும் வெவ்வேறு பிரிவினரினால், சிவமதியின் பெற்றோர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உறவினர் மகனுடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.

இதையொட்டி, ஆனந்த கிருஷ்ணனும் சிவமதியும் வரும் 6-ஆம் தேதி திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர்.

கடந்த சில தினங்களில் சிவமதியின் உடல்நிலை சரியில்லை எனக் கூறி, மாலை 6 மணியளவில் அவரை டவுன் கண்டியபேரி அரசு மருத்துவமனையில் கழுத்தில் காயத்துடன் பெற்றோர் சேர்த்தனர்.

மருத்துவமனை பரிசோதனையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என்று அறிவிக்கப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. பேட்டை போலீசார் மர்மச்சாவாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரீல்ஸ் மோகத்தால் பறிபோன உயிர்!!

இந்தியாவில் ரீல்ஸ் மோகத்தால் இளைஞர் தடுக்கி வீழ்ந்து பலியான சம்பவம் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய இளைய தலைமுறையினர் சமூகவலைத்தளத்தில் லைக்குகளை அள்ளும் ஆசையில் சாகச வீடியோக்கள் சில சமயம் அவர்களின் உயிருக்கு ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்து உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

அவ்வகையில் உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் மேலே ஏறி இன்ஸ்டா ரீல்ஸ் எடுக்க முயன்ற நபர் தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.

மேம்பாலத்தின் மேலே கொன்க்ரீட் பலகை மீது ஏறி நடனமாடியபோது, Slabs சரிந்து 22 வயதுடைய குறித்த இளைஞரின் தலை மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இந்த ரீல்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் சரிவு : இலங்கையிலும் மாற்றம் – வெளியான பின்னணி!!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக சரிவதற்கு காரணம் இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் என்று அகில இலங்கை நகைக்கடைக்காரர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4737 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

அதன்படி, இலங்கையில் தங்கத்தின் விலை இன்றைய தினம் (03) 12,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது.அதேநேரம், 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம் 349,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதற்கமைய,24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 380,000 ரூபாவாகவும், பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகைக்கடைக்காரர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கணவனின் சடலத்திற்காக இரு மனைவிகள் மோதல் : வைத்தியசாலையில் ஏற்பட்ட பரபரப்பு!!

கொழும்பின் புறநகர் பகுதியான ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த ஒருவரின் சடலத்தைப் பொறுப்பேற்பதில் இரு பெண்களுக்கு இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக திடீர் மரண விசாரணை அதிகாரி, தலையீட்டு சட்டப்பூர்வமான முதலாவது மனைவிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது. மீகொட பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதுடைய ஓய்வுபெற்ற சுகாதார உதவியாளர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரைத் திருமணம் செய்திருந்தார். அந்தத் திருமணத்தின் மூலம் இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

எனினும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் தனது முதல் மனைவியையும் பிள்ளைகளையும் பிரிந்து சென்ற இவர், மீகொட பிரதேசத்தை சேர்ந்த மற்றொரு பெண்ணைத் திருமணம் செய்து அவருடன் வசித்து வந்துள்ளார்.

இரண்டாவது பெண்ணின் முதல் திருமணத்தின் மூலம் மூன்று பிள்ளைகள் இருந்தபோதிலும், உயிரிழந்த நபருக்கும் அந்தப் பெண்ணுக்கும் பிள்ளைகள் இல்லை எனக் கூறப்படுகிறது.

திடீர் சுகவீனம் காரணமாக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், கடந்த 30ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரது மரண விசாரணை கடந்த 31ஆம் திகதி நடைபெறவிருந்த நிலையில், உயிரிழந்த நபரின் சட்டப்பூர்வமான முதல் மனைவி திருமணச் சான்றிதழுடன் வருகை தந்து சடலத்தை தன்னிடம் ஒப்படைக்குமாறு கோரினார்.

கடந்த 20 வருடங்களாகத் தன்னுடனேயே அவர் வாழ்ந்ததாகக் கூறி, இரண்டாவது மனைவியும் திருமணச் சான்றிதழைச் சமர்ப்பித்து சடலத்திற்கு உரிமை கோரினார். இதனால் வைத்தியசாலை வளாகத்தில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.

இந்தச் சிக்கலான நிலையைத் தணிப்பதற்கு ஹோமாகம திடீர் மரண விசாரணை அதிகாரி தலையிட்டார்.

இரண்டாவது பெண்ணுடன் எவ்வளவு காலம் வாழ்ந்திருந்தாலும், சட்டப்பூர்வமாக முதல் மனைவியிடமிருந்து விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்திருப்பது செல்லுபடியாகாது.

எனவே, சட்டத்தின்படி சடலத்தைப் பொறுப்பேற்க முதல் மனைவிக்கே முன்னுரிமை உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.

235 அடி பள்ளத்தில் விழுந்து முச்சக்கர வண்டி விபத்து : ஒருவர் படுகாயம்!!

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா, கிளாரண்டன் பகுதியில் அதிவேகமாக பயணித்த முச்சக்கர வண்டியொன்று பிரதான வீதியை விட்டு விலகி செங்குத்தான சரிவில் 235 அடி பள்ளத்தில் விழுந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று (02) திங்கட்கிழமை மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் முச்சக்கர வண்டியின் சாரதி படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நானுஓயா பொலிஸார் கூறுகையில்,

நுவரெலியா – கந்தப்பளை பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 235 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது என தெரிவித்தனர் .

மேலும் குறித்த விபத்தில் முச்சக்கர வண்டி கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.