கழிவறையில் இருந்தபடி நீதிமன்ற விசாரணையில் பங்கேற்ற நபர் : சம்பவத்தால் அதிர்ச்சி!!

இந்தியாவில் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, நபர் ஒருவர் கழிவறையில் இருந்து நேரடி ஒளிபரப்பில் ஆஜரான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், காசோலை மோசடி தொடர்பான வழக்கு ஒன்றை குஜராத் நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கின் விசாரணையின் போது, முறைப்பாடு அளித்தவரான சமத் பேட்டரியை ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, உயர் நீதிமன்ற நீதிபதி நிர்சார் எஸ் தேசாய் அமர்வு முன்பு கடந்த ஜூன் 20ஆம் திகதி நேரடி ஒளிபரப்பு மூலம் சமத் பேட்டரி நீதிமன்றத்தில் ஆஜரானார்.

ஆனால், அவர் கழிப்பறை இருக்கையில் அமர்ந்து தனது ஹெட்செட்டை அணிந்து கொண்டு ஆஜராகியுள்ளார்.

இது தொடர்பான வீடியோவில், அந்த நபர் தனது கையடக்க தொலைபேசியை தரையில் வைத்துக்கொண்டு தன்னைத்தானே சுத்தம் செய்து கொள்வதையும், எதிர்தரப்பில் நீதிமன்ற அறையில் சட்டத்தரணி தனது வாதங்களை முன்வைத்து வாதிடுவதையும் காண முடிகிறது.

இது தொடர்பான வீடியொ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நீதிமன்ற விசாரணையின் போது நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக ஒருவர் செயல்படுவதற்கு பலரும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

மாவனல்லையில் மற்றுமொரு கோர விபத்து இருவர் காயம்!!

மாவனல்லைப் பிரதேசத்தில் மற்றுமொரு பேருந்து – லொறி விபத்தில் இரண்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவனல்லை, கொழும்பு – கண்டி வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது கொழும்பில் இருந்து மாத்தளை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து வண்டியொன்றும், மாவனல்லையில் இருந்து கேகாலை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிய ரக லொறியொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

லொறியில் பயணித்த திப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக இன்று அதிகாலை மாவனல்லை பிரதேசத்தில் இரண்டு லொறிகள் மோதி விபத்துக்குள்ளானதில் ஏழுபேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முச்சக்கரவண்டி விபத்தில் பலர் படுகாயம்!!

அநுராதபுரம் – கம்பிரிகஸ்வெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (27) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதியின் கட்டுப்பாட்டை முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த கொங்கிரீட் கல்லில் மோதி குடைசாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று இடம்பெற்ற விபத்தில் 10 இற்கும் மேற்பாட்டோர் வைத்தியசாலையில்!!

மாவனெல்ல பகுதியில் இன்று (28.06.2025) அதிகாலை 5 மணியளவில் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நித்திரை காரணமாக இடம்பெற்ற இவ்விபத்தில் சாரதியின் நிலைமை மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் சிக்கி லொறியில் பயணித்த பதினொரு பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விபத்து தொடர்பிலா விசாரணைகளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தண்ணீரை சூடாக்கிய சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!!

மதவாச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கிலிகந்தராவ பகுதியிலுள்ள வீடொன்றில் 8 வயது சிறுமி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (27.06.2025) வெள்ளிக்கிழமை  இடம்பெற்றுள்ளது.

மின்சாரம் தாக்கியதையடுத்து, குறித்த சிறுமி மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக மதவாச்சி பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மதவாச்சி பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டனர்.

விசாரணையில் சிறுமி தண்ணீரை சூடாக்கும் மின்சார கருவியை ( water heater ) பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர்!!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஸ்வாட் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் அடித்துச் செல்லப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர்களில் 4 பேர் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பக்துன்க்வா மாகாணத்திற்கு சுற்றுலா வந்த குழுவின் ஒரு பகுதியினர் (ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர்), ஸ்வாட் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதன்படி கனமழை காரணமாக வெள்ளம் அதிகரித்ததால் குறித்த அணைவரும் இழுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், அந்நாட்டு அதிகாரிகளின் கூற்றின்படி 18 பேரில் யாரும் பிழைக்க வாய்ப்பில்லை என அஞ்சப்படுகிறது.

யாழில் மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தாய்க்கு நேர்ந்த கதி!!

யாழ்ப்பாணத்தில் மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தாய் கீழே விழுந்து மயங்கிய நிலையில் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஈச்சமோட்டை வீதி, பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த 19ஆம் திகதி ஊர்காவற்துறையில் உள்ள தனது வீட்டினை பார்ப்பதற்கு மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.

இதன்போது ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு முன்பாக இடது பக்கமாக ஒருவர் துவிச்சக்கர வண்டியில் வந்துள்ளார். இந்நிலையில் திடீரென பிரேக்கினை அழுத்தியவேளை பின்னாலிருந்த குறித்த பெண் திடீரென கீழே விழுந்து மயங்கியுள்ளார்.

பின்னர் ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

விபத்து தொடர்பில் பொலிஸார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரபல நடிகை திடீர் உயிரிழப்பு : அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

இந்தி நடிகையும் மற்றும் இந்தி பிக் பாஸ் 13 சீசனின் பிரபலமுமான ஷெஃபாலி ஜரிவாலா திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

42 வயது ஷெஃபாலி ஜரிவாலாவுக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இவரை உடனடியாக அவரது கணவர் மும்பையில் உள்ள வைத்தியசாலைக்கு அழைத்து சென்றிருக்கிறார்.

ஆனால், அங்கே அவரைப் பரிசோதித்து பார்த்த வைத்தியர்கள், ஷெஃபாலி ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் ,நடிகை ஷெஃபாலி மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அதிகாலையில் நடந்த கோர விபத்து ஏழு பேர் வைத்தியசாலையில்!!

மாவனல்லைப் பிரதேசத்தில், இடம்பெற்ற விபத்து காரணமாக ஏழு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவனல்லை, உதுவன்கந்த, பல்பாத பிரதேசத்தில் இன்று அதிகாலை ஐந்து மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

எதிரெதிர் திசைகளில் இருந்து வந்த இரண்டு லொறிகள் நேருக்கு நேராக மோதிக் கொண்டதில் இந்த விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது இரண்டு குழந்தைகள் உட்பட 07 பேர் காயமுற்ற நிலையில் மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனல்லை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

 

கொழும்பில் வாடகைக்கு தங்கியிருந்த இளம் பெண் கொலை : பொலிஸார் தீவிர விசாரணை!!

கொழும்பில் பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெலென்னவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்த பெண்ணொருவர் நேற்று (27) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட பெண் இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். சடலமானது களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலும் கொலைக்கான காரணம் வெளியாகாத நிலையில் சம்பவம் தொடர்பில் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட தொழிலதிபரின் காரில் பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 8 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.

குறித்த வர்த்தகரின் சடலம் நேற்றுமுன்தினம் (26) மஹவ, தியதம்பையில் உள்ள காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

இதேவேளை, அவர் இறப்பதற்கு சற்று முன்பு தங்க ஆபரணங்களை அடகு வைத்து பெறப்பட்டதாகக் கூறப்படும் சுமார் 2.5 மில்லியன் ரூபாவை பொலிஸார் அவருடைய காரில் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த பெருந்தொகை பணம் எந்த நோக்கத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டது மற்றும் அது கொலையுடன் தொடர்புடையதா என்பது குறித்து புலனாய்வாளர்கள் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், உயிரிழந்த வர்த்தகரின் தொலைபேசி அழைப்புகள் தொடர்பான பகுப்பாய்வு அறிக்கையைப் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருநாகல், தொரட்டியாவ பொலிஸ் பிரிவில் வசிக்கும் குறித்த தொழிலதிபர், முடி வெட்டப் போவதாகக் கூறி ஜீப்பில் வீட்டை விட்டுச் சென்றதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

மாலை வரை அவர் வீடு திரும்பாத நிலையில், அவரது கையடக்க தொலைபேசியும் இயங்காமல் போயுள்ளது. இதனால் அவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில், கட்டம்புவ பகுதியில் கால்நடைகளை பார்க்கச் சென்ற ஒருவர், ஜீப்பில் ஒருவர் எரிந்த நிலையில் உயிரிழந்துள்ளதை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

அதற்கமைய, பொலிஸாரின் விசாரணையில், காணாமல் போன தொழிலதிபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஜூலை முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்படும் நடைமுறை : வெளியான அறிவிப்பு!!

சகல பயணிகள் பேருந்துகளின் சாரதிகளுக்கும் ஆசனப்பட்டிகள் கட்டாயமாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து சபையின் தலைவர் பி.ஏ.சந்திரபாலா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் சர்வதேச தரம் வாய்ந்த நடைமுறைகளுக்கு அமைய போக்குவரத்து பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான முயற்சி எனவும் அவர் கூறியுள்ளார்.

 

இரண்டு மாதங்கள் கழித்து பாடசாலைக்கு சென்ற மாணவனை தாக்கி காயப்படுத்திய ஆசிரியர்!!

நுவரெலியா, கினிகத்தேன பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியரால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் ஒருவன் நேற்று வியாழக்கிழமை (26) மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.

கினிகத்தேன பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இந்த மாணவன் புறப்பாட நடவடிக்கைகளுக்காக இரண்டு மாத காலங்களாக பாடசாலைக்கு செல்லாமல் இருந்துள்ள நிலையில் கடந்த 23 ஆம் திகதி மீண்டும் பாடசாலைக்கு சென்றுள்ளார்.

அதே பாடசாலையில் கடமையாற்றும் பாட ஆசிரியர் ஒருவர் குறித்த மாணவனிடம் பாடக் குறிப்புப் புத்தகத்தை காண்பிக்குமாறு கேட்டுள்ளார்.

இதன்போது இந்த மாணவன் தான் இரண்டு மாத காலங்களாக புறப்பாட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி அதன் பாடக் குறிப்புப் புத்தகத்தை ஆசிரியரிடம் காண்பித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த ஆசிரியர், புத்தகத்தை தூக்கி எறிந்து மாணவனை பலமாக தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து காயமடைந்த மாணவன் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பில் கினிகத்தேன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் அளித்துள்ளார்.

இந்நிலையில், நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவன் நேற்று வியாழக்கிழமை (26) மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகம் : காதலன் எதிர்த்ததால் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!!

உலகம் முழுவதுமே இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு வந்த நிலையில்,

ரீல்ஸ் வீடியோ பதிவிடுவதற்கு காதலன் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இது குறித்த வாக்குவாதம் அதிகரித்த நிலையில், ஆத்திரத்தில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் அதிர செய்திருக்கிறது.

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் ஒசஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சவுபாக்யா. இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

இவரது மகள் சைதன்யா (22). இவர் துமகூருவில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இறுதி ஆண்டு படித்து வந்தார்.

அழகு கலை நிபுணராகவும் இருந்து வந்த சைதன்யா, அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘ரீல்ஸ்’ வீடியோக்களை பதிவு செய்து வெளியிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் சைதன்யாவுக்கும், ராமேனஹள்ளியை சேர்ந்த விஜய் (25) என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 2 வருடங்களாக இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்த காதல் விவகாரம் சைதன்யாவின் தாய் சவுபாக்யாவுக்கு தெரிய வந்தது. அவர் சைதன்யாவை கண்டித்து வந்தார். ஆனால் சைதன்யா தனது தாய்க்கு தெரியாமல் விஜயுடன் தொடர்ந்து நெருக்கமாக பழகி வந்தார்.

இதற்கிடையில் சைதன்யா, செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ மற்றும் வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் பதிவிட்டு வந்தார். இது காதலன் விஜய்க்கு பிடிக்கவில்லை. அவர் சைதன்யாவை கண்டித்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று சைதன்யாவை புகைப்பட கலைஞர் ஒருவர் சந்தித்துள்ளார். அப்போது தனது கேமராவில் சைதன்யாவை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து கொடுத்தார்.

அந்த புகைப்படத்தை சைதன்யா வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இதைப் பார்த்த விஜய், சைதன்யாவிடம் தகராறில் ஈடுபட்டார். இந்த தகராறு முற்றியதில் சைதன்யாவின் வீட்டுக்கு வந்த விஜய், அவரது தாயாரிடம் இது குறித்து கூறினார்.

இதனால் தாய் சைதன்யாவை திட்டியதாக கூறப்படுகிறது. அப்போது கோபம் அடைந்த சைதன்யா தனது அறைக்கு சென்று கதவை பூட்டி கொண்டார். இதனால் விஜய் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

இதற்கிடையே விஜயிடம் செல்போனில் பேசிய சைதன்யா, தான் தற்கொலை செய்துக் கொள்ளப் போகிறேன் எனக் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய் சைதன்யா வீட்டுக்கு பதறியடித்தப்படி ஓடி ச் சென்றார். அவர் சைதன்யா இருந்த அறை கதவை திறக்குமாறு தட்டினார். ஆனால் கதவு உட்புறமாக பூட்டப்பட்டு இருந்தது.

இதனால் அவர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றார். அங்கு மின்விசிறியில் சைதன்யா தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக கிடந்தார். இதைப் பார்த்து விஜய், சைதன்யாவின் தாய் சவுபாக்யா ஆகியோர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.

இது குறித்து துமகூரு புறநகர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் சைதன்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் விசாரணையில், ‘ரீல்ஸ்’ வீடியோ விவகாரத்தில் காதலனுடன் ஏற்பட்ட தகராறில் சைதன்யா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இது குறித்து துமகூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்ரீகாந்த்தை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்!!

போதைப்பொருள் வழக்கில் ஏற்கனவே நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, தற்போது நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணாவிடம் கிழக்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமார், திருவல்லிக்கேணி துணை ஆணையர் ஜெயச்சந்திரன் தீவிர விசாரணை நடத்தினர்.

முன்னதாக அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என தெரிய வந்துள்ளது. இருப்பினும், போதைப்பொருள் சம்மந்தமாக தொலைபேசி உரையாடல்கள் மற்றும் தொடர்புகள் உள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை பெசன்ட் நகரில் உள்ள நடிகர் கிருஷ்ணாவின் வீடு மற்றும் கார்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது தனக்கு இரைப்பை பிரச்சனைகள் இருப்பதாக கிருஷ்ணா தெரிவித்ததை அடுத்து, அவர் பயன்படுத்தும் மருந்துகளையும் ஆய்வுக்காக போலீசார் எடுத்துக் கொண்டனர்.

2024ல் ஆஞ்சியோ சிகிச்சை எடுத்துக் கொண்டதற்கான சான்றிதழ்கள் மற்றும் வாயுகோளாறு, அதிர்ச்சியான தகவல்களை கேட்டால் படபடப்பு ஏற்படுவது உட்பட தனது உடல்நிலை பிரச்சினைகளுக்கான மருத்துவ சான்றிதழ்களையும் கிருஷ்ணா போலீசாரிடம் கொடுத்தார்.

போதை பொருளை உபயோகப்படுத்தும் அளவுக்கு தனது உடல்நிலை இல்லை எனவும் நடிகர் கிருஷ்ணா போலீசாரிடம் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் கிருஷ்ணாவின் வாட்ஸ் ஆப் தகவல் பரிமாற்றத்தில் நண்பர்களுடன் அவர் செய்த சாட்டிங்கில் ரகசிய குறியீடு வார்த்தைகளை பயன்படுத்தியிருப்பதை கண்டுபிடித்தனர்.

2020 முதல் கிருஷ்ணாவின் செல்ஃபோனில் அழிக்கப்பட்ட குறுஞ்செய்திகளை மீட்டு போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகர் கிருஷ்ணாவிடம் 2 நாட்களாக நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது.

நேற்று பிற்பகலில் அவரும் அவரது நண்பர் கெவினையும் போலீஸார் கைது செய்தனர். இருவரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில்,

ஜூலை 10ம் தேதிவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

600 அடி பள்ளத்தாக்கு எரிமலையில் விழுந்து இறந்த பிரபலத்தின் உடல் 4 நாட்களுக்குப் பின்னர் மீட்பு!!

எரிமலையில் இருந்து ராட்சத பள்ளத்தாக்கில் சுமார் 600 அடியில் தவறி விழுந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் ஜூலியானா உயிரிழந்த நிலையில், அவரது உடல் 4 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது.

பிரேசில் நாட்டை சேர்ந்தவர் ஜூலியானா மரின்ஸ் (26). இன்ஸ்டாகிராம் பிரபலமான இவர் வெளிநாடுகளுக்கு சென்று வீடியோ பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இவரை சுமார் 3½ லட்சம் பேர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஜூலியானா இந்தோனேசியாவுக்கு சுற்றுலா சென்றார். தொடர்ந்து அங்குள்ள 3,500 மீட்டர் உயரம் கொண்ட எரிமலை சிகரமான ரின்ஜானிக்கு கடந்த 22ம் தேதி சாகச குழுவினர் மலையேற்ற சாகசத்தில் ஈடுபட்டார்.

அப்போது எதிர்பாராத விதமாக எரிமலையில் இருந்து ராட்சத பள்ளத்தாக்கில் சுமார் 600 அடியில் தவறி விழுந்தார். இது குறித்து தகவலறிந்த பேரிடர் மீட்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்றனர்.

டிரோன் மூலமாக அவர் இருக்கும் இடத்தை கண்காணித்தனர். அப்போது மண்ணில் சிக்கி அவர் உயிருக்கு போராடி வந்தது தெரிந்தது. தொடர்ந்து கயிறு கட்டி கீழே இறங்கி மீட்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

இதனால் அவர் 2 நாட்களுக்கு முன்பு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து மீட்பு பணி தொடர்ந்து நடந்து வந்த நிலையில், ஜூலியானா உடலை 4 நாட்களுக்கு பிறகு மீட்டு மேலே கொண்டு வரப்பட்டது.