வீட்டுக்குள் புகுந்த பெண் ஒருவரும் அவரது மகனும் அங்கு வசிக்கும் சகோதரிகளான மூன்று இளம் பெண்களைக் கடுமையாகத் தாக்கி விட்டுத் தப்பிச் சென்ற சம்பவம் யாழ். உடும்பிராய் தெற்கு யோகபுரத்தில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்குள்ளான மூன்று பெண்களும் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலுக்குள்ளானவர்களில் ஒருவர் மயக்கமடைந்து சுய நினைவற்ற நிலையில் காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அயலவர்கள் இவர்களை மீட்டு கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அம்பியூலன்ஸ் மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துளள்னர்.
இலங்கையில் இன்று முதல் நாம் வெளியில் வாங்கி சாப்பிடும் சில பொருட்களுக்கு நிறக் குறியீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக நாம் வெளியில் வாங்கி சாப்பிடும் உணவும் பொருட்களின் பெரும்பான்மையானவைகளில் சரியான அளவிற்கு அதில் இருக்கும் கொழுப்பு, உப்பு, இனிப்புத்தன்மை போன்றவை இருப்பதில்லை.
இதையடுத்து இலங்கையில் இன்று முதல் நாம் வாங்கும் உணவுப் பொருட்கள், குளிர்பானங்கள், பிஸ்கட்கள், இனிப்பு பண்டங்கள் போன்றவைகளில் நிறக்குறியீடு (Colour Code System) இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதாவது குறித்த உணவுப் பொருட்களில் கொழுப்பு அதிகமாக இருந்தால் ஒரு நிறம், உப்பு அதிகமாக இருந்தால் ஒரு நிறம் என்று இப்படி குறித்த உணவு வகைகளில் குறிக்கப்பட்டிருக்கும்.
அது இன்று முதல் கட்டாயமாக்கப்படுகிறது. ஆனால் அதே சமயம் இது குழந்தைகளின் உணவு பொருட்கள், போத்தலில் இருக்கும் தண்ணீர், கோப்பி பழங்கள், மருத்துவ பரிந்துரைக்கப்பட்ட உணவுப் பொருட்கள், பால், அரிசி, சிறிய பைக்கெட்களில் விற்கப்படும் உணவும் பொருட்கள், டீ, காய்கள் போன்றவைகளில் இது கட்டாயம் கிடையாது என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத தொகைகளை அதிகரிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் சிவில் விமான அமைச்சினால் வெளியிடப்பட்ட குறித்த வர்த்தமானி அறிவித்தலை சுட்டிக்காட்டி பத்திரிகையொன்று இன்றைய தினம செய்தி வெளியிட்டுள்ளது.
1. 25,000 ரூபா அபராதம் – வாகன சாரதி பத்திரம் இல்லாமல் பயணித்தல், மது மற்றும் போதைப்பொருள் பாவனையின் பின் வாகனத்தை செலுத்தல், புகையிரத கடவைகளில் பாதுகாப்பற்ற முறையில் வாகனத்தை செலுத்தல் உள்ளிட்ட ஏழு விதி மீறல்களுக்கு..
2. செல்லுபடியற்ற வாகன அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தல் மற்றும் வாகனம் செலுத்துவதற்குரிய வயதின்றி வானத்தை செலுத்த முற்படல் போன்ற குற்றங்களுக்கு அபராதம் அதிகரிப்பு..
3. அதிக வேகமாக வாகனத்தை செலுத்தல், வாகனம் செலுத்தும் போது கையடக்க தொலைபேசி பயன்படுத்தல் என்பவற்றுக்கான அபராதங்களும் அதிகரிப்பு..
இவற்றின் மூலம் குற்றவாளியாக அடையாளம் காணப்படுவோருக்கு 25000 ரூபா – 30000 ரூபா வரையில் அபராதம்.
இரண்டாம் தடவை அதே குற்றங்களை இழைப்பாராயின் 30000 ரூபா – 40000 ரூபா அபராதத்துடன், 6 மாதங்கள் வரையில் சாரதி அனுமதி பத்திரம் ரத்து செய்யப்படும்.மூன்றாவது தடவை எனில் 40000 ரூபா – 50000 ரூபா அபராதத்துடன், 12 மாதங்கள் வரையில் சாரதி அனுமதி பத்திரம் ரத்து செய்யப்படும்.
வேகம் (வரையறுக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகம்) 20 வீதம் அதிகம் எனில் 3000 – 5000 ரூபா, 30 வீதம் அதிகம் எனில் 5000 – 10000 ரூபா, 50 வீதம் அதிகம் எனில் 10000 – 50000 ரூபா
இவ்வாறு அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலையில் சத்திரசிகிச்சை செய்யப்பட்டு கோமா நிலைக்கு சென்ற இளம்பெண் நேற்று பிற்பகல் உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. மன்னார் – தட்சணா மருதமடு, பாலம்பிட்டியை சேர்ந்த கைலாசபிள்ளை ஹேமா எனும் 28 வயது பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஹேமாவுக்கு எதிர்வரும் பத்தாம் திகதி திருமணம் நடைபெறவிருந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டு வந்துள்ளன. இந்த சந்தர்ப்பத்தில் மணப்பெண்ணான குறித்த இளம் பெண் தலைவலி ஏற்பட்டதை தொடர்ந்து மயக்கமடைந்துள்ளார்.
இந்த நிலையில் அவரை உறவினர்கள் உடனடியாக மன்னார் மடு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அந்த பெண்ணை பரிசோதித்த வைத்தியர்கள் அவரின் தலையில் கட்டி இருப்பதை கண்டறிந்து அதனை நீக்குவதற்காக சத்திரசிகிச்சையொன்றை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் அந்த பெண் கோமா நிலைக்கு சென்றுள்ளதுடன், நேற்று பிற்பகல் அவர் உயிர் பிரிந்துள்ளதாக வைத்தியசாலை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் அப்பகுதியையே கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
வவுனியாவில் நேற்று இரவு மின்தடை அமுலில் உள்ள நேரத்தைப் பயன்படுத்தி தங்கநகை அடகுச் சேவை நிலையத்தில் திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வவுனியா பஜார் வீதியிலுள்ள வியாபார மொத்த விற்பனை நிலையம் மற்றும் தங்கநகை அடகுச்சேவை நிலையத்தில் நேற்று இரவு கூரையின் மேல் பகுதியால் உள்நுழைந்த திருடர்கள் தங்க நகை அடகுச் சேவை நிலையத்திற்குள் சென்று அங்கிருந்த தங்க நகைககள் மற்றும் பணங்களை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் எவரையும் உள் செல்ல அனுமதியளிக்கவில்லை. நேற்று இரவு மின் தடை அமுலில் உள்ள நேரத்தைப் பயன்படுத்தியும் மின்தடை நேரத்தில் அங்குள்ள கண்காணிப்புக் கமராக்கள் செயற்படமாட்டாது என்று தெரிந்து கொண்ட திருடர்கள் மிகவும் திட்டமிட்ட வகையில் இத்திருட்டினை மேற்கொண்டிருக்கலாம் என்று பொலிஸார் தொடர்ந்து தமது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா நெளுக்குளம் பகுதியில் இன்று (02.04.2019) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வியாபார நடவடிக்கைக்காக தண்டாங்குளம் பகுதியிலிருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த நபர் மீது நெளுக்குளம் சந்திக்கு அருகே வைத்து அதிகாலை 3 மணியளவில் முகத்தினை மறைத்துக்கொண்டு பற்றைக்குள் பதுங்கி நின்ற இருவர் சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்.
வாள்வெட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த நபர் சிகிச்சைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செட்டிக்குளம் தட்டாங்குளம் பகுதியினை சேர்ந்த 27வயதுடைய நவசுதர்சன் என்ற இளைஞனே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரின் இரு கால் மற்றும் வலது கையில் பாரிய வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக வைத்தியாலை வட்டாரங்கள் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸாருடன் இணைந்து வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் யாழ்ப்பாணத்தினை தொடர்ந்து வவுனியாவிலும் வாள்வெட்டுக் கலாச்சாரம் தொடங்கியுள்ளமை பொதுமக்கள் மத்தியில் பாரிய அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பு – வாழைச்சேனை விநாயகபுரம் பகுதியில் நபர் ஒருவர் எரித்துகொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 37 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
எவ்வாறாயினும், மதுபோதையில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டதை அடுத்தே சந்தேகநபர், 58 வயதான நபரை தாக்கி பெட்ரோல் ஊற்றி தீயிட்டு எரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், சந்தேகநபர் அந்த இடத்தில் இருந்து தப்பியோடிய நிலையில் பொது மக்கள் அவரை மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மது போதையில் ஏற்பட்ட வாய்த்தக்கத்தில் போத்தலால் குத்தியதுடன் பெட்ரோலும் ஊற்றி கொலை செய்துள்ளதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நடு வீதியில் எரித்துக் கொல்லப்பட்ட நபர் : சிறையில் இருந்து தப்பியவர் செய்த கொடூரம்?
மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரத்தில் நேற்று மாலை குடும்பஸ்த்தர் ஒருவரின் சடலம் நடு வீதியில் தீயில் கருகிய நிலையில் மீட்க்கப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட நபரை பட்டப்பகலில் ஒருவர் எரித்துக் கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வாழைச்சேனை கண்ணகிபுரத்தைச் சேர்ந்த நாகன் சாமியன் வயதுடைய (58) இரண்டு பிள்ளைகளின் தந்தையான புகையிரத கடவை தொழிலாளியே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் பிரதேசத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றங்கள் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நேற்று சரீரப்பிணையில் விடுதலையானவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, “மது போதையில் இருந்த இருவருக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதத்தினால் ஏற்பட்ட தகராறு காரணமாக குறித்த நபரை சந்தேகநபர் தீயிட்டு எரித்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் எலிக்காச்சலின் நோய் அதிகரித்து காணப்படுவதினால் இவ் வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம் 31 நோயாளிகள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் கனகராஜா நந்தகுமாரன் தெரிவித்தார். அவர் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
அண்மைக்காலமாக எலிக்காச்சலின் தாக்கம் வவுனியாவில் அதிகமாக உணரப்பட்டுள்ளது. கடந்த வருடங்களை ஒப்பிடும் போது கடந்த 2018ம் ஆண்டு அதிகமான நோயாளர்கள் எமது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
எலிக்காச்சல் நோயினால் பாதிக்கப்பட்டு கடந்த வருடம் 70 ஆண்களும் 20 பெண்களும் சிகிச்சை பெற்றுள்ளதுடன். இந்த வருடம் மார்ச் மாதம் வரை 23 ஆண்களும் 8 பெண்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்கள். வவுனியாவில் எலிக்காச்சால் நோய் ஏற்படுவதற்கான முக்கியமான காரணம் வயல்களில் பணிபுரிபவர்களாலே. வயல்களில் எலியின் சிறுநீரில் இருந்தே கிருமி மனிதர்களை தாக்குகின்றது.
எலி எங்கேங்கு கூடுதலாக காணப்படுகின்றதோ அந்த இடங்களிலிருந்து கிருமி மனிதரை தாக்கி எலிக்காச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. முக்கியமாக வயல்கள் மற்றும் சதுப்பு நிலங்களில் பணபுரியும் பொதுமக்கள் எலிக்காச்சலிருந்து தங்களை பாதுகாத்து கொள்வது மிக மிக அவசியமாகும் .
அப்படியான இடங்களில் பணிபுரிபவர்கள் கால்கள் , கைகளில் காயங்கள் இருக்குமாகவிருந்தால் அவற்றுக்குரிய பாதுகாப்பு அதாவது நீளமான பாதணி அணிதல் வேண்டும் அல்லது காலுறைகளை அணிந்து பணிபுரியலாம் . எலியின் சிறுநீர் காயங்களில் படாதவாறு அவதானித்து கொள்ளுதல் வேண்டும் .
கிருமிகள் காயங்களிலுடாக, கண், வாய் போன்ற மெல்லிய தோல்களினுடாக உடலுக்குள் சென்று இந்த நோயை ஏற்படுத்துகின்றது. காய்ச்சல் போன்ற எதேனும் அறிகுறிகள் காணப்பட்டால் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்தார்.
வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமோட்டை பகுதியில் கரடியின் தாக்குதலிற்குள்ளாகி காயமடைந்த நபர் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், நேற்று காலை வயல்வெளிக்கு சென்ற குறித்த நபர் மீது பற்றை ஒன்றிற்குள் மறைந்திருந்த மூன்று கரடிகள் தாக்கியுள்ளது. எனினும் குறித்த நபர் கரடியின் மீது தாக்குதல் நடித்தியுள்ளதுடன் தப்பி ஓடியுள்ளார்.
குறித்த சம்பவத்தில் சிவகுமார் (வயது 42) என்ற நபரே கையில் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா தண்டிக்குளம் புகையிரத கடவையில் உள்ள அபாய மணி ஒலி நேற்று இரவு 7 மணியிலிருந்து 3மணித்தியாலயத்திற்கும் மேலாக ஒலித்த நிலையில் காணப்பட்டதால் அப்பகுதியூடாக பயணிக்கும் மக்கள் மிகுந்த அச்சத்துடன் பயணிக்க நேரிட்டுள்ளதுடன் பலர் பயம் காரணமாக கடவையை கடக்க முயலாமல் காத்து நின்றதையும் அவதானிக்க முடிந்தது .
இதேவேளை இப்புகையிரத கடவையானது பாதுகாப்பற்ற புகையிரத கடவை என்பதுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் இக்கடவையில் முச்சக்கர வண்டியில் பயணிக்கும் போது ரயிலுடன் மோதி பலியாகியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் குறித்த புகையிரத கடவையில் இதற்கு முன்னரும் அபாய ஒலி பலமணிநேரம் ஒலித்த சம்பவம் ஒன்றும் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. பொதுமக்களின் உயிருடன் விளையாடும் புகையிரத திணைக்களம் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டு நிற்கின்றனர்.
மஸ்கெலியா வைத்தியசாலைக்கு அருகில் அட்டன் மஸ்கெலியா பிரதான வீதியில் வளைவு பகுதியில் பயணித்த முச்சக்கரவண்டியை கண்டு ஒதுங்கிய நபர் ஒருவர் அருகில் உள்ள பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் டிக்கோயா கிளங்கன் பகுதியை சேர்ந்த டி.எம்.ரம்பண்டா வயது 59 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் எனவும் தெரிவித்துள்ள பொலிஸார் சடலம் பிரேத பரிசோதணைக்காக மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
அட்டன் பிரதேசத்திலிருந்து மஸ்கெலியாவை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி வளைவு பகுதியில் செல்லும் போது முச்சக்கரவண்டி குடைசாய்ந்துள்ளது. அவ்விடத்தில் குறித்த நபர் வீதியில் சென்றுக் கொண்டிருந்த போது குடைசாய்ந்த முச்சக்கரவண்டி தன்னை மோதிவிடுமோ என பயத்தில் வீதியை விட்டு ஒதுங்கிய போதே பள்ளத்தில் வீழ்ந்துள்ளார்.
இவரை மீட்க முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் முயற்சித்தபோது, அவர் உயிரிழந்துள்ளதை அறிந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் சிறு சிறு காயங்களுக்குள்ளாகி மஸ்கெலியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதோடு, முச்சக்கரவண்டியின் சாரதியை மஸ்கெலியா பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கம்பஹா மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 82 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்தப்பட்ட 43 விபச்சார விடுதிகள் மற்றும் அனுமதியற்ற மசாஜ் நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டன.
அங்கு விபச்சார தொழிலில் ஈடுபட்ட 67 பெண்கள் மற்றும் முகாமையாளர்களாக செயற்பட்ட 15 ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் உத்தரவிற்கமைய கம்பஹா மாவட்ட பொலிஸ் அதிகாரிகள் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் நாட்டின் பல்வேறு பிரதேசத்தை சேர்ந்த 18 – 40 வயதிற்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று கம்பஹா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மின்சார விநியோகத் தடையை இந்த மாத இறுதிக்குள் முடிவுக்கு கொண்டு வர எதிர்பார்ப்பதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டு காலத்தில் மின் விநியோகத்தில் எதுவித தடையும் இருக்காது அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தற்போதைய நெருக்கடியான நிலையில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும்படி அமைச்சு நுகர்வோரை கேட்டுள்ளது. மின்சாரத்தை பிறப்பிப்பதற்கு மேலதிக மின்பிறப்பாக்கிகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று அமைச்சின் பேச்சாளர் சுலக்சன ஜயவர்த்ன தெரிவித்தார்.
சமகாலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுழற்சி முறையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சிறுபோக விவசாய செயற்பாடுகளுக்கு நீர் தேக்கங்களிலிருந்து நீர், திறந்து விடப்படும் பொழுது, நீர் மின் உற்பத்தி கொள்ளளவை அதிகரிக்கலாம் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
இன்று முதல் கடவுச்சீட்டு விநியோகிப்புக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், சாதாரண மற்றும் ஒருநாள் சேவை கடவுச்சீட்டு விநியோகிப்புக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதுவரை காலமும், சாதாரண சேவை ஊடாக கடவுச்சீட்டு விநியோகிப்பு நடவடிக்கையின் போது, 3000 ரூபா அறவிடப்பட்டு வந்தது. இந்தத் தொகையுடன் மேலும் 500 ரூபா சேர்க்கப்படுவதால் கடவுச்சீட்டின் கட்டணம் 3500 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது.
ஒரு நாள் சேவைக்காக இதுவரை காலமும் 10 ஆயிரம் ரூபா அறவிடப்பட்டு வந்தது. இச்சேவைக்கு மேலும் ஐயாயிரம் ரூபா சேர்க்கப்படுவதால், கடவுச்சீட்டின் கட்டணம் 15 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாகவும், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அண்மைக்காலமாக மலையகத்தில் வரட்சியான கால நிலை ஏற்பட்டிருந்த நிலையில் நீர் நிலைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளது.
இவ் வரட்சியால் கொத்மலை நீர்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்துள்ளமையினால் நீரில் மூழ்கியிருந்த வணக்கஸ்தலங்கள் தென்பட ஆரம்பித்துள்ளன.
1979 ம் ஆண்டு கொத்மலை அணைக்கட்டு நீர்மாணிக்கப்பட்ட போது பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க விகாரை மற்றும் ஆலயம் என்பன நீரில் மூழ்கியமை யாவரும் அறிந்த ஒன்று.
இந்நிலையில் தற்போது நீர்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்துள்ளமையினால் நீரில் மூழ்கியிருந்த வணக்கஸ்தலங்கள் தென்படுவதுடன் அதனை பார்வையிட பொது மக்கள் வருகை தருகின்றனர்.