மாத்தறை திக்வெல்ல-கோட்டகொட பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அலவாங்கினால் குறித்த பெண் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுதுவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான பெண்ணே உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த பெண் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் நிலவும் பனிப்புயல் மற்றும் உறைபனி நிலைமைகளை அடுத்து அங்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உச்சகட்டமாக ஜேர்மனியில் கடும் பனிப்பொழிவு நிலவுகின்றது. இதுவரை குளிர் மற்றும் பனிச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே அடுத்த சில நாட்களில் பனி பொழிவின் அளவு 6 அடி வரை உயரும் என்று ஜேர்மனி வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் ஜேர்மனி, ஒஸ்ரியா உள்ளிட்ட நாடுகளில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வீதிகளில் தேங்கியுள்ள பனியை அகற்றுவதற்கு இராணுவத்தினரை ஈடுபடுத்த ஜேர்மனி அரசு திட்டமிட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உறைபனி காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்தவாரம் முதல் கடும் பனிப்பொழிவு தொடர்ந்துவரும் ஓஸ்ரியாவில் இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர். சுவிடனின் வடபகுதியிலும் பனிப்பொழிவும் கடுமையான குளிர்காற்றும் வீசுவதால் பெரும் பாதிப்புக்கள் தொடர்கின்றன.
சிங்கபூர் நாட்டில் கடவுச்சீட்டு சட்டத்தின் கீழ் இலங்கை தமிழர்கள் இருவருக்கு கடந்த 7ஆம் திகதி எட்டு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரராசசிங்கம் பூவிந்தன் மற்றும் மாரிமுத்து சுப்பிரமணியம் ஆகிய இருவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளவும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஒட்டோபர் 28ஆம் திகதி சிங்கபூர் சாங்கி விமான நிலையத்தில் வைத்து பரராசசிங்கம் பூவிந்தன் மற்றும் மாரிமுத்து சுப்பிரமணியம் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பூவிந்தனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுக்கொள்ள எண்ணியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் இருந்து சிங்கபூர் வருதற்கு பரராசசிங்கம் பூவிந்தனின் சொந்த கடவுச்சீட்டு பயன்படுத்தப்பட்டிருந்தது.
எனினும், அவரின் கனடா நாட்டு கடவுச்சீட்டில் முரண்பாடுகள் காணப்பட்டதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
அதேநேரம், மாரிமுத்து சுப்பிரமணியம் விமான நிலையத்தில் 3வது முனையத்தில் வைத்து ஐ.சி.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இதேவேளை, குற்றவாளிகளாகக் கருதப்பட்டவர்கள் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படலாம் அல்லது இருவருக்கும் 10,000 டொலர்கள் அபராதம் விதிக்கலாம் என அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டியிலுள்ள பிரபல மகளிர் பாடசாலை அதிபரின் தாக்குதலில் காயமடைந்த உயர்தர மாணவி ஒருவர் நேற்று கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்கப்பட்ட மாணவி தனது நண்பியுடன் பேஸ்புக் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அதிபர் தொடர்ந்து அந்த மாணவியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனக்கும் அந்த புகைப்படத்திற்கும் தொடர்பு இல்லை என குறித்த மாணவி கூறிய போதிலும் தவறை ஏற்றுக் கொள்ளுமாறு பலவந்தப்படுத்தி குறித்த மாணவியை அதிபர் தாக்கியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மாணவியின் தாயார் கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாடு செய்த சந்தர்ப்பத்தில் மாணவியின் காதில் கடுமையான வலி உள்ளதாக குறிப்பிட்ட நிலையில் அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அதிபரின் அலுவலகத்தில் இருந்த சிசிடிவி கமரா உதவியுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்குமிடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது. நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் இந்த சந்திப்பு நடந்தது.
வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் அரசாங்க அதிகாரிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுவொன்றை அமைப்பதென முடிவெடுக்கப்பட்டிருந்தது. அந்த குழுவை அடுத்த வாரமளவில் உருவாக்குவதென முடிவெடுக்கப்பட்டது.
கம்பெரலிய நிதி, அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டது.
இதன்போது, இலங்கை நிர்வாக சேவை போட்டிப்பரீட்சையில் அதிக தமிழர்கள் சித்தியடைந்ததை காரணம் காட்டி, அந்த பரீட்சை மோசடியாக நடத்தப்பட்டதாக கல்வியமைச்சு அறிவித்த விவகாரத்தை நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் குறிப்பிட்டார்.
பரீட்சையில் மோசடிகள் இடம்பெறவில்லையென்பதை பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டிய எம்.ஏ.சுமந்திரன், இந்த விடயத்தில் நீதியான முடிவு எடுக்கப்படாவிட்டால், தான் நீதிமன்றத்தை நாடப்போவதாக குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் உடன் கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை எடுக்கும்படி தனது செயலாளரிற்கு பிரதமர் உத்தரவிட்டார்.
மட்டக்களப்பு -புன்னக்குடா கடலில் நீராடியபோது, அலையில் அள்ளுண்டுச் சென்ற மாணவனொருவனின் சடலம், நேற்று (11.01) காலை மீட்கப்பட்டுள்ளதாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
செங்கலடி குமாரவேலியார் கிராமத்தை சேர்ந்த 14 வயதுடைய குவேந்தின் ஹரீஸ்வருத்தன் என்ற மாணவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட சடலம் அவரது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
செங்கலடி மத்திய கல்லூரியில் எட்டாம் ஆண்டு கல்விகற்கும் ஹரீஸ்வருத்தன், நேற்று முன்தினம் (10.01) காலை பாடசாலை சென்று வீடுதிரும்பியதும், பகலுணவை உட்கொண்டபின் தாயிடம் 100/= ரூபா பணம் பெற்று தலை முடி வெட்டி வருவதாக கூறிச்சென்றுள்ளார்.
மாலை 06 மணிவரைக்கும் முடிவெட்டச் சென்ற மகன் வீடு திரும்பாததால், குறித்த சலூனுக்கு சென்று தேடியபோது, முடிவெட்டி சென்றுவிட்டார் என தகவல் கிடைத்திருக்கிறது. அதன் பின்னர் அருகாமையிலுள்ள உறவினர்கள் வீடுகளில் தேடியும் மகனை காணக் கிடைக்கவில்லை. இரவெல்லாம் விழித்திருந்து தன் மகனின் வரவுக்காக காத்திருந்த பெற்றோருக்கு ஏமாற்றமே விடையாக கிடைத்தது.
நேற்று காலை விடயத்தை ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்த பின்னர், குறித்த மாணவனின் நண்பர்கள் யாரென பொலிஸார் விசாரித்த போது பெற்றோர் மகனின் மிக நெருங்கிய நண்பர்கள் இருவரது பெயரை சொன்னதும், குறித்த மாணவர்கள் இருவரையும் காலை பாடசாலை சென்று அதிபரின் அனுமதியுடன் சந்தித்த பொலிசார், மாணவர்களை விசாரித்த போதுதான் விடயம் தெரிய வந்துள்ளது.
நேற்று முன்தினம் பிற்பகல் மாணவன் ஹரீஸ்வருத்தன் தலைமுடிவெட்டி வெளியாகியதும், நாங்கள் ஐந்து பேர் சேர்ந்து புன்னக்குடா கடலுக்கு குளிக்கச் சென்றதாகவும், குளித்துக் கொண்டிருக்கும் போது, ஹரீஸ்வருத்தன் நீரில் மூழ்கிவிட்டதால் பயம் காரணமாக யாரிடமும் சொல்லாமல் இருந்து விட்டோம் என்று இரு மாணவர்களும் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் (10.01) மாலை, ஐந்து மாணவர்கள் புன்னக்குடா கடலில் நீராடுவதற்குச் சென்றிருந்தபோதே, குறித்த மாணவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் ஏனைய மாணவர்கள் வழங்கிய தகவலுக்கமைய, மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில், ஏறாவூர்ப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கனடாவில் ஒட்டாவ பகுதியில் பேருந்து ஒன்று போக்குவரத்து தரப்பிடத்தின் மீது மோதியதில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளது. இந்த கோர விபத்து கனேடிய நேரப்படி இரவு 10.30 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமை அதிகாரி Charles Bordeleau குறிப்பிட்டுள்ளார். பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதனால் சாரதியின் தகவல்கள் வெளியிடப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
பேருந்துக்குள் இருந்த இருவரும் தரிப்பிடத்தில் நின்ற ஒருவரும் சம்வத்தில் உயிரிழந்துள்ளதாக Ottawa மேயர் Jim Watson தெரிவித்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்தவர்களில் 9 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக Ottawa வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளார்.
இந்த பேருந்தில் 90 பேர் பயணிக்க கூடிய வசதியை கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 2013ஆம் ஆண்டு குறித்த இடத்தில் இதேபோன்ற கோர விபத்து ஏற்பட்டமையில் அதில் 6 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று 12.01.2019 சனிக்கிழமை காலை 11.30 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது .பத்து நாட்கள் இடம்பெறும் ஆலய மகோற்சவத்தில்
வவுனியா ஒலுமடு தமிழ் மகாவித்தியாலயத்தின் 2019ம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டியின் முதல் நிகழ்வான மரதன் ஓட்டபோட்டி இன்று வெள்ளிக்கிழமை காலை 6.50 மணியளவில் பாடசாலைக்கு முன் ஆரம்பமானது.
பாடசாலையின் அதிபர்
கு.விமலேந்திரன் தலைமையில் ஆரம்பமான போட்டியில் ஆண்கள் 11 KM தூரமும்,பெண்கள் 08KM தூரமும் என நிர்ணயிக்கப்பட்டு போட்டி இடம்பெற்றது
போட்டியின் நிறைவில் ஆண்கள் பிரிவில் த.தனுசன் முதலாம் இடத்தினையும்,த.சுமன் இரண்டாம் இடத்தினையும், க.கௌரிகாந்தன் மூன்றாம் இடத்தினையும், பெண்கள் பிரிவில் ர.டினோஜா முதலாம் இடத்தினையும், ந.புகழினி இரண்டாம் இடத்தினையும்,
வி.டிசாந்தினி மூன்றாம் இடத்தினையும் பெற்றனர்.
போட்டியின் நிறைவில் முதல் மூன்று இடங்களையும் பெற்ற மாணவர்களுக்கு வெற்றிக் கேடயங்களும் வழங்கிவைக்கப்பட்டது. குறித்த மரதன் ஓட்டப் போட்டியில் அறுபதுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா பிரதேச கலாசார பேரவையும் , வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டமும் இணைந்து நடாத்திய மார்கழி இசை விழா இன்று(11.01) காலை 9.30 மணிக்கு வவுனியா பிரதேச செயலக கலாசாரமண்டபத்தில் நடைபெற்றது.
கலாபூசணம் திருமதி.தேவிமனோகரி நாகேஸ்வரன் அவர்களின் நினைவாக இடம்பெற்ற இந்நிகழ்வில் கலைஞர்களினால் கர்நாடக சங்கீத இசை நிகழ்வுகளும், நினைவுரைகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உதவி பிரதேச செயலாளர் திருமதி பிரியதர்சினி சஜீவன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் மு.இராதாகிருஸ்ணன், நகரசபை உறுப்பினர் சேனாதிராசா, வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்ட தலைவர் கலாநிதி தமிழ்மணி அகளங்கன் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. சீமான்-கயல்விழி திருமணம் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ அரங்கில் கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது.
சீமான்-கயல்விழி திருமணத்தை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன்தான் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.
தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது. தமிழின் முதல் எழுத்தான ‘அ’ பொறிக்கப்பட்ட டொலருடன் கூடிய தாலியை பழ.நெடுமாறன் எடுத்து தர, அதை வாங்கி சீமான் கயல்விழி கழுத்தில் கட்டினார்.
திருமணமாகி 5 அண்டுகள் ஆன நிலையில் சீமான்-கயல்விழி தம்பதிக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.
சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கயல்விழிக்கு பிரசவம் நடந்தது. தாயும் சேயும் நலம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீமான் தந்தை ஆகியுள்ளதால், நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் சந்தோஷத்தில் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர்.
தொடர்ந்து ஆறு சத்திர சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்த மருத்துவர் ஒருவர், கடைசி சத்திர சிகிச்சை முடித்ததும் மேசையிலேயே அயர்ந்து தூங்கிவிட்டார், ஆனாலும் அவரது கடமையில் தவறவில்லை.
சீன மருத்துவரான Luo Shanpeng தொடர்ந்து ஓய்வின்றி 20 மணி நேரம் அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டதற்காக வெகுவாக பாராட்டப்பட்டாலும், தனது கடைசி அறுவை சிகிச்சைக்குப்பின் அவர் சத்திர சிகிச்சை மேசையிலேயே தூங்கும் புகைப்படம் முன்னை விட அவரை அதிக பிரபலமாக்கிவிட்டது.
Shanpeng புலம்பெயர்ந்த நோயாளி ஒருவரின் துண்டான கையை அறுவை சிகிச்சை மூலம் ஒட்டவைத்துவிட்டு, அந்த சிகிச்சை மேசையிலேயே சாய்ந்து தூங்குவதை அந்த படம் காட்டுகிறது. அவர் தூங்கினாலும் அவர் ஒட்டவைத்த கையை பிடித்தவாறே துங்குகிறார். அந்த புகைப்படம் சீனாவின் பிரபல சமூக ஊடகம் ஒன்றில் வெளியான நிலையில், சட்டென வைரலானது.
அன்று அவர் அதற்குமுன் ஐந்து அறுவை சிகிச்சைகளைச் செய்து முடித்திருக்கிறார், ஆறாவது அறுவை சிகிச்சை எட்டு மணி நேரம் நீடித்திருக்கிறது. ஐந்து அறுவை சிகிச்சைகளை முடித்தபிறகு, மாமிசம் வெட்டும் கத்தியில் சிக்கி, கை துண்டான ஒருவரை சிலர் தூக்கிக் கொண்டு வர, களைத்துப்போனாலும், களைப்பையும் மீறி பொறுப்புணர்வோடு அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்திருக்கிறார் Shanpeng.
அந்த நோயாளிக்கு அப்போது அறுவை சிகிச்சை செய்யாதிருந்தால், அவர் தனது கையை இழக்க நேரிட்டிருக்கும் என்கிறார் Shanpeng. அவர் தூங்கும் படத்தைக் காட்டி அதைக் குறித்துக் கேட்டால், சற்று ஓய்வெடுப்பதற்காக கண்களை மூடினேன், ஆனால் தூங்கிவிடுவேன் என்று நினைக்கவில்லை என்கிறார்.
20 மணி நேரம் தொடர்ந்து ஓய்வின்றி அறுவை சிகிச்சைகள் செய்ததாக தெரிவிக்கும் Shanpeng, அந்த நோயாளியின் கையில் போடப்பட்ட கட்டு காய்வதற்குமுன், அவர் கையை கீழே வைத்து விடக்கூடாது என்பதற்காகவே அவரது கையைப் பிடித்துக் கொண்டே இருந்ததாக தெரிவிக்கிறார். அதுமட்டுமின்றி நோயாளியின் கையில் சரியான இரத்த ஓட்டம் நடப்பதற்கும் இது அவசியம் என்கிறார் Shanpeng.
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இந்த சிறப்பு விடுமுறைக்கான கட்டளையை கல்வி அமைச்சின் செயலாளருக்கு வழங்கியுள்ளார்.
ஜனவரி 15ஆம் திகதி செவ்வாய்கிழமை கொண்டாடப்படும் தமிழர்களின் பண்டிகையான தைப் பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு 14ஆம் திகதி திங்கட்கிழமை வடக்கு மாகாணத்தின் பாடசாலைகளுக்கும் விடுமுறையினை வழங்குவதற்கான உத்தரவினை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் வழங்கியுள்ளார். இந்த விடுமுறைக்கான பதில் பாடசாலை தினம் பின்னர் அறிவிக்கப்படும்.
வவுனியா தரணிக்குளம் பகுதியிலுள்ள வியாபார நிலையங்களுக்கு விறகு ஏற்றிச் செல்லப்படும் பட்டா ரக வாகனத்தில் உணவுப் பண்டங்களான பாண், கேக், பணிஸ் போன்றவற்றை விற்பனை செய்த நபருக்கு எதிரான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட வெதுப்பக உற்பத்தி நிலையத்தின் உரிமையாளருக்கு நேற்று வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றம் 30ஆயிரம் ரூபா தண்டம் அறிவிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியாவிலுள்ள பிரபல்யமான வெதுப்பகம் ஒன்றின் உற்பத்திப் பொருட்களை வெதுப்பகத்திற்கு விறகு ஏற்றப் பயன்படுத்தப்பட்ட பட்டா ரக வாகனத்தை உரிய முறையில் துப்பரவு செய்யாமல் களஞ்சியப்படுத்தி தரணிக்குளம் பகுதியில் விற்பனை செய்தமை தொடர்பில் வெதுப்பகத்தின் உரிமையாளருக்கு எதிராக பொதுசுகாதாரப் பரிசோதகரினால் வவுனியா நீதிமன்றத்தில் கடந்த 13.10.2018 வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சுத்திகரிப்புச் செய்யப்படாமல் விறகு ஏற்றிச் சென்ற பட்டா ரக வாகத்தில் வெதுப்பக உற்பத்தி உணவுப் பொருட்கள் மண், தூசு, பூச்சி, காலாவதித் திகதி முடிவடையும் முன்னரே பூஞ்சனம் பிடித்த பாண் என்பன காணப்பட்டுள்ளதுடன் மருத்துவ தகுதிச்சான்றிதழ் இன்றி வாகனத்தைச் செலுத்திய நபரே வெற்றுக் கைகளினால் உணவுப் பொருட்களை விற்பனை செய்தமை போன்ற ஆறு குற்றச்சாட்டுக்களுக்கு எதிராகவும் உரிய அனுமதிப்பத்திரமின்றி மேற்படி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்த உரிமையாளருக்கு எதிராகவும் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேற்படி வழக்குகள் நேற்றைய தினம் விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது எதிராளி குற்றத்தை ஒப்புக் கொண்டதற்கு இணங்க முதலாம் எதிரி மீதான ஆறு குற்றச்சாட்டுகளுக்கும் தலா நான்கு ஆயிரம் ரூபா வீதம் 24ஆயிரம் ரூபாவும் இரண்டாம் எதிரிக்கு 6 ஆயிரம் ரூபா மொத்தமாக 30ஆயிரம் ரூபா நீதிமன்றத்தினால் தண்டமாக விதிக்கப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட உணவுப்பொருட்களை அழித்து விடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை காலாவதித் திகதி முடிவடைந்த 10 குளிர்பான போத்தல்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த வர்த்தகர் ஒருவருக்கு எதிரான குற்றச்சாட்டிற்கும் நீதிமன்றம் 5ஆயிரம் ரூபா அபராதம் விதித்திருந்தாக பொது சுகாதாரப்பரிசோதகர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் – தென்மராட்சி, நாவற்குழியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் அதிபர் மற்றும் ஆசிரியர்களை மாணவர்கள் சிலர் தாக்க முற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாடசாலைக்கு முன்பாக ஒன்று திரண்ட பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, ஒரு சில மாணவர்கள் பாடசாலையில் ஒழுக்க விதிகளை மீறி செயற்ப்பட்டமை குற்றச்செயல்களிலும் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்ததன் காரணமாக ஆசிரியர்கள் கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் குறிப்பிட்ட மாணவர்களை பாடசாலையில் ஒழுக்கமாகவும் பாடசாலையின் கௌரவத்தினை பேணும் வகையில் நடந்துகொள்ளுமாறு அதிபர் அறிவுறுத்தியுள்ளார். இதனால் குறித்த மாணவர்கள் வெளியாட்களோடு இணைந்து இன்று காலை 11.00 மணிக்கு பாடசாலைக்குள் நுழைந்து அதிபர் மற்றும் ஆசிரியர்களை தாக்க முற்பட்டுள்ளனர்.
இதன்போது வெளியாட்கள் மூன்று பேரைப் பிடித்த பாடசாலையின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்று திரண்டு சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இவர்களில் இரண்டு மாணவர்களும் உள்ளடங்குகின்றனர்.
இச்சம்பவத்தையடுத்து பாடசாலைக்கு முன்பாக ஒன்றுதிரண்ட மாணவர்கள் தமது மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தக் கோரியும் ஒழுக்கமற்ற மாணவர்களை பாடசாலையில் இருந்து விலக்குமாறு கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் நாவற்குழி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தென்மராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர், சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இதன்போது நாளைய தினம் பாடசாலை சமூகம், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கம், வலயக்கல்வி பணிப்பாளர் மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து தீர்கமான முடிவு எடுக்கப்பட்டு ஆசிரியர் மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
பாடசாலை மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு பழைய மாணவர்கள், கிராம மக்கள் என அனைவரும் ஆதரவு தெரிவித்து ஒன்றுதிரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் காணமல் போன இளைஞரின் கால் மட்டும் சாலையில் கிடைத்துள்ள நிலையில் அது கொலையா..? விபத்தா..? என்று முடிவு செய்ய முடியாமல் பொலிசார் திணறி வருகின்றனர். தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சுதாகர் என்ற இளைஞர் காணமல் போனதாக அவரது குடும்பத்தினர் பொலிசாருக்கு புகார் அளித்தனர்.
இந்நிலையில், திருவள்ளூர்- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நடந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்ற பொலிசார் ஒரு கால்கள் மட்டும் கண்டெடுத்தனர். இது குறித்து சுதாகரின் உறவினருக்கு தகவல் கிடைத்ததும் அங்கு வந்த அவர்கள் அது சுதாகரனின் கால்கள்தான் என்று உறுதி செய்தனர்.
ஆனால் உடலின் மற்ற எந்த பாகவும் அந்த பகுதியில் இல்லாத நிலையில் இது பொலிசாருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. வாகனங்களில் அடிப்பட்டு உடல் பாகம் சிதைத்திருக்க வாய்ப்பு உள்ளதா என்றும், இல்லை கொலை செய்யப்பட்டரா என்றும் விசாரணை நடத்தி வருகின்றன.
இது குறித்து அந்த பகுதியில் சென்ற வாகனங்கள், அருகில் உள்ள தொழிற்சாலைகள் என்று எல்லா பகுதியிலும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். ஆனால் ஒரு கால்கள் மட்டும் வைத்து விசாரிப்பது பொலிசாருக்கு சவாலாகவே உள்ளது.