வவுனியா கோவில்குளம் அருளகம் சிறுவர் இல்லத்தில் புதிய கட்டிடம் திறந்துவைப்பு!(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் அனுசரணையின் கீழ் இயங்கும் அருளகம் சிறுவர் இல்லத்தில் அவுஸ்திரேலிய தமிழர் ஒன்றியத்தின் உதவியில் அமையப்பெற்ற கட்டிடத்தின் திறப்பு விழா 22 .01.2019 செவ்வாய்க்கிழமை காலை 9.00மணியளவில் இடம்பெற்றது.

மேற்படி கட்டிடம் அவுஸ்திரேலிய தமிழ் ஒன்றிய உறுப்பினர் கலாநிதி கதிர்.ப. சிவகுமாரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அருளக சிறுவர் சிறுமியர் மற்றும் ஆலய அறங்காவலர் சபையினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கிரலாகல தூபி மீது ஏறி புகைப்படம் எடுத்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி!!

வரலாற்று சிறப்புமிக்க கிரலாகல தூபி மீது ஏறி புகைப்படம் எடுத்த தென்கிழக்கு பல்கலைகழகத்தின் மாணவர்கள் ஏழு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க கிரலாகல தூபி மீது ஏறி பிடிக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரிமாறப்படுவதாக அந்த வலயத்திற்கு பொறுப்பான தொல்பொருள் அதிகாரி ஹொரவபொத்தான காவற்துறையில் நேற்று பிற்பகல் முறைப்பாடு செய்திருந்தார்.

கடந்த ஜனவரி மாதம் ஐந்தாம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாள் ஒன்றில் கிரலாகல தொல்பொருள் வனப்பகுதியில் சட்டவிரோதமாக நுழைந்த சிலர் இந்த புகைப்படங்களில் தோன்றியுள்ளதாக அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கமைய மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர்கள் ஏழு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைக்கவசம் அணியாத முதியவரை தாக்கும் போக்குவரத்துப் பொலிசார்!!

 

போக்குவரத்துப் பொலிசார்

பாதுகாப்பு தலைகவசம்யின்றி உந்துருளியில் காவற்துறையின் கட்டளைகளை புறக்கணித்து பயணித்த நபர் ஒருவரை கைது செய்ய முற்பட்ட போது ஏற்பட்ட பதற்ற நிலைமை தொடர்பிலான காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவிவருகின்றது.

குறித்த உந்துருளியாளரை நிறுத்துமாறு கோரியும் அதனை பொருட்படுத்தாமல் சென்றுள்ள நிலையில் மீக நீண்ட தூரம் சென்று பிடித்ததாக காவற்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் குறித்த சம்பவம் எந்த பிரதேசத்தில் இடம்பெற்றது என குறிப்பிடப்படவில்லை. சம்பவம் குறித்த காணொளி இணைப்பு.

கோர விபத்தில் சிக்கி தாய் மற்றும் மகள் பலி : இருவர் காயம்!!

 

தாய் மற்றும் மகள் பலி

அனுராதபுரம் – புத்தளம் பிரதான வீதி பொதானேகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த தாய் மற்றும் மகள் உயிரிழந்து மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

அதிவேகமாக பயணித்த கெப் ரக வாகனம், முச்சக்கர வண்டியுடன் மோதுண்டு இன்று குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 73 வயது தாய் மற்றும் 54 வயதுடைய மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் மகளின் கணவர் காயமடைந்து, அனுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இலங்கை வாகன சாரதிகளுக்கான எச்சரிக்கை!!

 

வாகன சாரதிகளுக்கான எச்சரிக்கை

பாரிய தவறுகளை மேற்கொள்ளும் சாரதிகளுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள அபராத தொகையை அதிகரிப்பதற்கு எதிர்வரும் சில வாரங்களில் செயற்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அபராதத்திற்கு மேலாக அவர்களின் சாரதி அனுமதி பத்திரத்தையும் இரத்து செய்வதற்கு தேவைய சட்டத்தை எதிர்வரும் காலத்தில் அமுல்படுத்தவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கல்லடி பாலத்தில் சடலமாக தனது மகளின் மரணத்தில் மர்மம் : ஊடகங்களின் முன் கதறும் தாய்!!

 

மகளின் மரணத்தில் மர்மம்

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் சடலமாக மீட்கப்பட்ட தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இன்று அவர்களது வீட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த மரணமடைந்த மாணவியான வசந்தராஜா தேவயானியின் தாயாரான வசந்தராஜா மல்லிகாதேவியே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மரப்பாளம் கிராமத்தை சேர்ந்த வசந்தராஜா தேவயாணி (18 வயது) என்ற மாணவி கடந்த 30.10.2018 அன்று மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.

சடலம் மீட்க்கப்பட்டு 85 நாட்கள் கடந்துள்ள நிலையில் தங்களது மகளின் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றும், மகள் கல்லடி பாலத்தில் சடலமாக மீட்கப்பட்டதை வைத்து அவள் தற்கொலை செய்து கொண்டாள் என்று சொல்லமுடியாது எனவும், தனது மகளின் மரணம் கொலையாக இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறுவதற்கான காரணங்கள் இருப்பதாக தாயார் மேலும் தெரிவித்துள்ளார்.

வீடு புகுந்து தாக்குதல் நடத்திய பெண்கள் : மட்டக்களப்பில் நடந்த துணிகர செயல்!!

 

தாக்குதல் நடத்திய பெண்கள்

மட்டக்களப்பு, ஏறாவூரில் வீடொன்றுக்குள் பெண்கள் உட்புகுந்து தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டிற்குள் உட்புகுந்த இரு பெண்கள் வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதோடு வீட்டின் ஜன்னல் மற்றும் பொருட்களையும் சேதமாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இத்தாக்குதலினால் படுகாயமடைந்த குழந்தையும், தாயும் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனிப்பட்ட தகராறே இத்தாக்குதலிற்கு காரணமாக அமைந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடும் குளிரில் உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை : பதைபதைக்க வைக்கும் சம்பவம்!!

 

பதைபதைக்க வைக்கும் சம்பவம்

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் கடும் குளிரில் உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தையானது உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தின் கிராமம் ஒன்றில் கடந்த வெள்ளியன்று நெஞ்சை உலுக்கும் இச்சம்பவம் நடந்துள்ளது.

சம்பவத்தன்று வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் என பதிவாகியுள்ளது. அப்போது பச்சிளம் குழந்தையின் முனகும் சத்தம் அப்பகுதி மக்களுக்கு கேட்டுள்ளது. உடனடியாக சத்தம் வந்த திசையில் விரைந்த அப்பகுதி மக்கள் புதைக்கப்பட்டிருந்த குழந்தையை தோண்டி எடுத்து அடுத்துள்ள அரசு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

முதற்கட்ட சிகிச்சைக்கு பின்னர் பிறந்து 3 வாரமேயான அந்த குழந்தை ஆபத்து கட்டத்தை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தர்மேந்திர பிரதான் என்பவர் சுமார் 7 மணி மாலையில் அப்பகுதி வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போதே குழந்தை ஒன்று முனகும் சத்தம் கேட்டுள்ளது. துரிதமாக செயல்பட்ட அவர் குழந்தையை தோண்டி எடுத்ததுடன் அப்பகுதி மக்களையும் உஷார் படுத்தியுள்ளனர்.

இந்த கடும் குளிரில் பிறந்து 3 வாரமேயான பச்சிளம் குழந்தையை கைவிடும் கோர முடிவை எப்படி எடுத்தார்கள் என்பது வியப்பாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். குறித்த விவகாரம் தொடர்பில் வழக்குப் பதிந்த பொலிசார், உடனடியாக அந்த குழந்தையின் பெற்றோரை கைது செய்து விசாரித்துள்ளனர்.

அதில் மந்திரவாதியின் பேச்சை நம்பியே குழந்தையை புதைத்ததாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து குழந்தையின் தந்தை மற்றும் உறவினர் பெண் ஒருவரையும் அவரது கணவரான மந்திரவாதியையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

தாயின் ஆண் நண்பரால் சிதைக்கப்பட்ட 7 வயது சிறுமி : பின்னர் எடுத்த முடிவு!!

 

சிதைக்கப்பட்ட 7 வயது சிறுமி

மகாராஷ்டிரா மாநிலத்தில் 7 வயது சிறுமி ஒருவர் தாயின் ஆண் நண்பரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த சிறுமியின் தந்தை 6 மாதங்களுக்கு முன்பு உடல்நலம் குன்றி உயிரிழந்துள்ளார்.

இதனை அடுத்து அவரது தாய்க்கும், இளைஞர் ஒருவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் வயது வித்தியாசம் அதிகம் இருந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். பொலிசார் கைது செய்வார்கள் என பயந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வவுனியாவில் விபத்தில் வீழ்ந்தவரை தூக்கச் சென்றவரை தாக்கியதால் பதற்றம்!!

 

வவுனியாவில் விபத்தில்..

வவுனியா பழைய பேருந்து நிலையம் பிரதான கண்டி வீதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் வீழ்ந்தவரை தூக்கச் சென்ற இளைஞன் மீது தாக்கியதில் சற்று பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியாவில் இன்று மாலை பழைய பேருந்து நிலைய பிரதான கண்டி வீதியில் பயணித்த இளைஞன் ஒருவர் பேருந்து நிலையப் பகுதிக்குத் திரும்புவதற்கு முற்பட்டபோது பிரதான கண்டி வீதியிலிருந்து மணிக்கூட்டுக் கோபுரத்தினை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் சாரதி மீது மோதியுள்ளார்.

இதையடுத்து விபத்தில் வீழ்ந்த நபரைத் தூக்கச் சென்ற இளைஞன் மீது விபத்தில் வீழ்ந்த நபர் தாக்கியதில் பேருந்து நிலையப் பகுதியிலிருந்து சற்று பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போக்குவரத்துப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் விபத்தில் இரு மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்துள்ளது.

மோட்டார் சைக்கிள் இரண்டையும் பொலிஸ் நிலையத்திற்கு ஏற்றிச் சென்றுள்ளதுடன் விபத்தை ஏற்படுத்திய இருவரையும் இளைஞனை தாக்கியதாக தெரிவிக்கப்படும் கருத்திற்கு பேருந்து நிலையப் பகுதியிலிருந்த இளைஞர்கள் சிலரும் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

எனினும் மோட்டார் சைக்கிளினை செலுத்திய நபர் ஒருவர் மதுபோதையிலிருந்துள்ளதாக அப்பகுதியில் நின்றிருந்த விபத்தை நேரில் பார்வையிட்ட இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

அண்ணனை காப்பாற்ற சென்று தம்பியும் உயிரிழந்த பரிதாபம் : திருமணமான சில மாதங்களில் நடந்த துயரம்!!

 

உயிரிழந்த பரிதாபம்

தமிழகத்தில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் போது, சகோதரர்கள் இருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் சிங்காநல்லூர் பகுதியை அடுத்து திருநகரில் இருக்கும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்வதற்காக, திருநகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர், கோயமுத்தூர் உப்பிலிப்பாளையம் சி.எம்.சி காலனியிலிருந்து மூன்று நபர்களை வரவழைத்துள்ளனர்.

அவர்கள் கழுநீர் தொட்டியில் ஏற்பட்டிருந்த அடைப்பை சரி செய்வதற்காக சாலையில் உள்ள சாக்கடையை திறந்துள்ளனர். அப்போது மூன்று பேரில் வந்த முருகன் என்பவர், சாக்கடைக்குள் இறங்கி, அடைப்பை சரி செய்ய முற்பட்டுள்ளார்.

ஆனால் சாக்கடையின் உள்ளிருந்து வெளியே வந்த விஷவாயு, அவரை தாக்கியதால், அவர் அந்த இடத்திலே மயங்கி விழுந்தார். இதைக் கண்ட அவருடன் வந்த சித்தப்பா மகனும், அவருடன் வேலைக்கு வந்தவருமான பாண்டிதுரைவ் விஷவாயு வெளியில் வருவது தெரியாமல் தலையை விட்டு காப்பாற்ற முயன்றுள்ளார்.

ஆனால் விஷவாயு அவரையும் தாக்கியதால், இரண்டு பேரும் சாக்கடைக்குள் மயங்கிவிழுந்து, பரிதாபமாக அந்த இடத்திலே உயிரைவிட்டனர். இந்த சம்பவம் குறித்து பொலிசாருக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் விரைந்து வந்து இரண்டு பேரின் உடலையும் மீட்டு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்து இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்தை அறிந்த முருகன் மற்றும் பாண்டிதுரை உறவினர்கள் இருவருமே சகோதர்கள், இப்போது தான் பாண்டிதுரைக்கு திருமணமானது. அவள் மனைவி கர்ப்பமாக இருக்கிறாள் என்ன சொல்வது என்று கதறி அழுதுள்ளனர்.

கணவர் இறந்த அதிர்ச்சியில் ஊமையான பெண் : 2 ஆண்டுகள் கழித்து பாம்பை பார்த்ததும் பேசிய அதிசயம்!!

 

பாம்பை பார்த்ததும் பேசிய அதிசயம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் பாம்பை பார்த்த அதிர்ச்சியில் ஊமைப் பெண்ணுக்கு பேச்சு வந்துள்ளது அப்பகுதி மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவிடைமருதூரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் சுரேஷ் இறந்ததால் அதிர்ச்சி அடைந்த மனைவி ஹேமாவுக்கு பேச்சுவரவில்லை. இதனால் இவரின் குடும்பத்தினர் மிகுந்த கவலையில் ஆழ்ந்திருந்தார்.

மேலும் 2 ஆண்டுகளாக அவர் ஊமையாகவே இருந்துள்ளார். இந்நிலையில், பாம்பை பார்த்த அதிர்ச்சியில் ஹேமாவுக்கு மீண்டும் பேச்சு வந்துள்ளது. பாம்பைபார்த்த அதிர்ச்சியில் அவருக்கு பேச்சு வந்துள்ளது அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளதுடன், அவரது குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விடுதலைப்புலிகளுக்காக கேரளாவில் தயாரான சொகுசுப் படகு : வெளிவரும் புதிய தகவல்!!

 

சொகுசுப் படகு

பல ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலைப்புலிகளுக்காக கேரளாவில் தயாரான இரும்பினாலான படகு ஒன்று சேதமடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய மாநிலம் கேரளாவின் முனம்பம் பகுதியில் அமைந்துள்ள கப்பல் கட்டும் தளத்திலேயே இந்த மினி கப்பல் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு கேரளாவின் முனம்பம் பகுதியில் விடுதலைப்புலிகளுக்காக கப்பல் தயாரிப்பதாக தமிழகத்தின் கியூ பிரிவு பொலிசாருக்கு தகவல் கிட்டியுள்ளது. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே போர் உச்சத்தில் இருந்த காலகட்டத்திலேயே குறித்த கப்பலானது முனம்பம் பகுதியில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தின் திருச்சியில் இருந்து கியூ பிரிவு பொலிசார் முனம்பம் பகுதிக்கு சென்று குறித்த கப்பலை மீட்ட நிலையிலேயே அந்த கப்பலானது விடுதலைப்புலிகளுக்காக தயாராவது தொடர்பில் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது.

கடந்த 11 ஆண்டுகளாக முனம்பம் கப்பல் கட்டும் தளத்தில் நிறுத்தப்பட்டு துருப்பிடித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி குறித்த கப்பலை அங்கிருந்து அப்புறப்படுத்த அந்த நிறுவனத்தின் உரிமையாளர் பல முறை கியூ பிரிவு பொலிசாரை அணுகியும் இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை என்றே குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தற்போது இந்த விவகாரம் தொடர்பில் கேரள மீன்வளத்துறை அமைச்சகத்தை நாட அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. முனம்பத்தில் இருந்து சமீபத்தில் தமிழர்கள் உள்ளிட்ட பலர் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச்சென்றதாக வெளியான தகவலை அடுத்தே விடுதலைப்புலிகளின் கப்பல் தொடர்பில் தகவல் வெளியானது.

குறித்த கப்பலானது 65 அடி உயரமும் 72 அடி நீளமும் கொண்டதாக உள்ளது. கப்பலை தயாரிப்பதற்காக ரூபாய் 20 லட்சம் முன்பணமாக தரப்பட்டது எனவும் கூறப்படுகிறது. அந்த கப்பலை ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது என்றும் கூறப்படுகிறது.

மனைவி அழகாக இருந்ததால் கல்லைப்போட்டு கொலைசெய்த கணவன் : பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

 

அதிர்ச்சி சம்பவம்

சென்னையில் மனைவி அழகாக இருந்தது பிடிக்காததால் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துவிட்டு, கணவனும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புளியந்தோப்பு, திரு.வி.க.நகரில் வசித்து வந்தவர் துக்காராம்(42). இவரது மனைவி தாராபாய்(33). இவர்களுக்கு சஞ்சய்ராம், அனுமந்ராம், ஸ்ரீராம் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்.

மனைவி அழகாக இருப்பது பிடிக்காத துக்காராம் அவருடன் அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை எழுந்த மகன் சஞ்சய்ராம் தனது தந்தை தூக்கில் தூங்கி இறந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதனை அம்மாவிடம் கூற சென்றபோது அவரும் தலை நசுங்கியபடி இறந்துகிடந்துள்ளார். இதனால் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். சத்தம் கேட்டு வீட்டுக்கு வந்த அக்கம் பக்கத்தினர், கணவன்-மனைவி இருவரும் இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் துக்காராம், தாராபாயின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தாராபாய் அழகாக இருப்பதால் அவர் மீது அடிக்கடி சந்தேகப்பட்டு துக்காராம் தகராறு செய்துள்ளார். நீண்ட காலமாகவே இந்த பிரச்சனை நீடித்துள்ளது.

இவ்வாறு சண்டையிடும்போது, என்றாவது ஒருநாள் உன்னை கொலை செய்துவிட்டு, நானும் தற்கொலை செய்துகொள்வேன் என்று துக்காராம் தனது மனைவியிடம் கூறியிருக்கிறார் என தெரிய வந்துள்ளது.

அதன்படியே, நள்ளிரவில் கிரைண்டர் கல்லை எடுத்து தாராபாய் தலையில் போட்டு துக்காராம் கொலை செய்துள்ளார். அதன் பின்னர் மனைவியின் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஆசியாவின் அதிசயம் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்!!

தாமரைக் கோபுரத்தின் வணிகச் செயற்பாடுகள் எதிர்வரும் மார்ச் மாதம் முதல் ஆரம்பமாகும் என தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தெற்காசியாவின் இரண்டாவது மிக உயர்ந்த கோபுரமான இந்த தாமரைக் கோபுரம், 350 மீற்றர் உயரத்தைக் கொண்டுள்ளதுடன், 30 ஆயிரத்து 600 சதுர மீற்றர் பரப்பளவையும் கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது இலங்கையிலுள்ள மிக உயரமான கோபுரமாகும்.

இந்த கோபுரத்தை நிர்மாணிப்பதற்காக 104 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளதுடன், இதில் 80 வீதமான தொகையை சீன எக்சிம் வங்கி வழங்கியுள்ளது.

தொலைத் தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் இந்த கோபுரத்தின் நிர்மாணம் முன்னெடுக்கப்படுவதுடன், தாமரைக் கோபுரத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்த திட்டத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

உணவகம், தொலைத்தொடர்பாடல் காட்சியகம், சிற்றுண்டிச் சாலை, பல்பொருள் வர்த்தக தொகுதி, கருத்தரங்கு மண்டபம், கேட்போர் கூடம், அதிசொகுசு ஹோட்டல் அறைகள், விழா மண்டபம் மற்றும் கண்காணிப்பு கூடங்கள் என்பனவும் இந்த தாமரைக் கோபுரத்தில் அமையப் பெற்றுள்ளன.

தாமரைக் கோபுரத்திற்குள் பிரவேசிப்பதற்கான நான்கு நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுள் முக்கிய பிரமுகர்கள் பிரவேசிப்பதற்காக இரண்டு நுரைவாயில்கள் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை மாணவியை ஆபாசமாக காணொளி எடுத்த நபரை மடக்கிப் பிடித்த மக்கள்!!

கம்பஹாவில் பாடசாலை மாணவியை தவறான முறையில் வீடியோ எடுத்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பூகொட பகுதியில் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த மாணவியையே இவ்வாறு வீடியோ எடுத்துள்ளார். எனினும் பேருந்தில் பயணித்த பயணிகளின் ஆதரவுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை மாணவி பாடசாலைக்கு செல்வதற்காக ஹங்வெல்லவில் இருந்து கிரிதிவெல வரை பயணித்த தனியார் பேருந்தில் சென்றுள்ளார். அந்த மாணவியுடன் அவரது தந்தையும் பயணித்துள்ளார். அந்த பேருந்து பாடசாலையை நெருங்கிய போது பின் கதவருகிற்கு மாணவி சென்றுள்ளார்

இந்த சந்தர்ப்பத்தில் கதவிற்கு அருகில் அமர்ந்திருந்த நபர் மாணவியின் ஆடைக்கு கீழ் கையடக்க தொலைபேசியை வைத்து காணொளி எடுத்துள்ளார். இதனை அவதானித்த நபர் ஒருவர் மாணவியின் தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பேருந்தில் பயணித்த அனைவரும் ஒன்றிணைந்து குறித்த நபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைந்துள்ளனர். அவரது கையடக்க தொலைபேசியை சோதனையிட்ட போது பேருந்தில் பயணித்த பலரை தவறாக எடுத்த காணொளிகள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் 39 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில் செய்பவர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.