உயிருக்கு போராடும் தந்தை : மணப்பெண்ணுடன் மருத்துவமனையில் தாலி கட்டிய இளைஞனின் நெகிழ்ச்சி சம்பவம்!!

தமிழகத்தில் உயிருக்கு போராடு தந்தையிடம் ஆசி பெறுவதற்காக மகன், தந்தை சிகிச்சை பெறும் மருத்துவமனையில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவொற்றியூர் மேற்கு மாட வீதியை சேர்ந்தவர் சுதேஷ். 60 வயதான இவர் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், பிரகாஷ், சரவணன், சதீஷ்(28) என மூன்று மகன்களும் உள்ளனர்.

இந்நிலையில் சதீசுக்கும், திருவொற்றியூர் சன்னதி தெருவைச் சேர்ந்த சித்ரா என்ற பெண்ணுக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டு, அடுத்த மாதம் பிப்ரவரி 15-ஆம் திகதி திருமணம் நடைபெறவிருந்தது.

ஆனால் கடந்த 11-ஆம் திகதி, திருவொற்றியூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற சுதேஷ் மீது அந்த வழியாக சென்ற மின்சார ரெயில் மோதியது. இதனால் படுகாயமடைந்த அவர் சென்னையில் இருக்கும் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து காரணமாக அவரது இடுப்புக்கு கீழ் இருக்கும் பகுதிகள் அகற்றப்பட்டதால், அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். இதனால் அவருக்கு இன்று காலை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யவுள்ளனர்.

அறுவை சிகிச்சையில் ஏதும் அசம்பாவிதம் நடந்துவிட்டால் தனது தந்தை கண் முன்னே தனது திருமணம் நடக்காதே?, அவரிடம் ஆசீர்வாதம் பெற முடியாதே? என சதீஷ் யோசித்துள்ளார்.

இதையடுத்து தனது தந்தை இருக்கும்போதே அவரது கண் எதிரேயே தனது திருமணத்தை நடத்த வேண்டும் என தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். தந்தை மீதான அவரது பாசத்தை பார்த்து நெகிழ்ந்த இருவீட்டாரும் இதற்கு சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து சதீஷ் நேற்று இரவு ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் இருவீட்டார் ஒத்துழைப்புடன் உறவினர்கள் முன்னிலையில் சித்ராவின் கழுத்தில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தந்தையிடம் ஆசீர்வாதம் பெற்றார்.

தந்தை பாசத்தில் மகன் செய்த இந்த திருமண நிகழ்வு மருத்துவமனை வளாகத்தில் இருந்தவர்களை நெகிழ்ச்சி அடைய வைத்தது.

கொன்றுவிடு என கூறிய காதலி : பிஞ்சு குழந்தைகளின் கண்முன்னே மனைவியை கொலை செய்த கணவன்!!

 

மனைவியை கொலை செய்த கணவன்

மும்பை பாந்ராவில் காதலியை திருமணம் செய்துகொள்வதற்காக முதல் மனைவியை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சல்மான் ஷேக் என்பவருக்கு ஆயிஷா என்ற பெண்ணுடன் 2013 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு 2 குழந்தைகள் இருந்தனர்.

இந்நிலையில், 2015 ஆம் ஆண்டு தன்னுடன் வேலைபார்க்கும் ஜாஸ்மின் என்ற பெண்ணுடன் சல்மானுக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் இது காதலாக மாறியது. ஜாஸ்மினை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்த நிலையில், இதற்கு மனைவி ஆயிஷா இடையூறாக இருந்துள்ளார்.

இதனால், தனது பிஞ்சு குழந்தைகளின் முன்பு மனைவியை கொடூரமாக கொலை செய்துள்ளார். இதற்கு காதலி ஜாஸ்மினும் உதவி செய்துள்ளார்.

மனைவியை கொலை செய்துவிட்டு ஜாஸ்மினை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். பிள்ளைகள் அவர்களது தாத்தா பாட்டியுடன் வசித்து வந்தனர். இந்நிலையில், ஆயிஷாவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், சல்மான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. விசாரணையில், சல்மான் கொலை செய்தது உறுதியானதையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடுங்குளிரில் வீசப்பட்ட பிஞ்சுக்குழந்தை : தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய பெண் பொலிஸ்!!

 

காப்பாற்றிய பெண் பொலிஸ்

பெங்களூரு மாநிலத்தில் சாலையோரத்தில் வீசப்பட்டு கிடந்த பிஞ்சு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய பெண் பொலிஸாருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. பெங்களூரு மாநிலம் எலகங்கா பகுதியை சேர்ந்தவர் கான்ஸ்டபிள் சங்கீதா எஸ் ஹலிமனி. இவர் அப்பகுதியில் சாலையோரத்தில், பெற்றோரால் தூக்கி வீசப்பட்டு கிடந்த பச்சிளங்குழந்தையை மீட்டுள்ளார்.

கடும் குளிரில் எறும்புகள் மொய்க்க கிடந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கும் போது , அவர்களின் அனுமதியுடன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், குழந்தை பிறந்து 10 முதல் 12 மணிநேரம் வரை மட்டுமே ஆகியிருக்கிறது.

குழந்தை பிறந்தது முதல் தாய்ப்பால் கொடுக்கப்படாமல் இருந்ததால், சர்க்கரை அளவு குறைந்து காணப்பட்டது. சங்கீதா சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்ததோடு, தாய்ப்பால் கொடுத்ததால் குழந்தையின் உயிரை காப்பாற்ற முடிந்தது.

தற்போது நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க குழந்தைக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார். பின்னர் பெண் பொலிஸ் சங்கீதா பேசுகையில், தனக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருப்பதால் இந்த குழந்தையை தந்தெடுப்பது இயலாது என கூறியுள்ளார்.

வெளிநாட்டில் பணிபுரிந்த 25 வயது இளைஞர் மாரடைப்பால் மரணம் : கதறி அழும் குடும்பத்தார்!!

 

இளைஞர் மாரடைப்பால் மரணம்

சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்ற இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் நான்கு மாதங்கள் கழித்து அவரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. உத்தரபிரதேச மாநிலத்தின் லக்னோவை சேர்ந்தவர் தினேஷ்குமார் (25). இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் சவுதி அரேபியாவின் Dammam நகருக்கு கார் ஓட்டுனர் பணிக்காக சென்றார்.

இந்நிலையில் கடந்தாண்டு செப்டம்பர் 23ஆம் திகதி தினேஷ்குமார் மாரடைப்பால் திடீரென உயிரிழந்ததாக அவரின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தார் தினேஷ்குமாரின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சவுதியில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டும், வெளியுறவு அமைச்சகத்தை தொடர்பு கொண்டும் அவர்கள் முயன்ற நிலையில் சடலத்தை கொண்டு வரமுடியாத நிலை நீடித்தது. இந்நிலையில் பெரும் போராட்டத்துக்கு பின்னர் அனைத்து விதமான சிக்கல்களும் தீர்க்கப்பட்டு தினேஷ்குமாரின் உடல் நேற்று சொந்த ஊருக்கு வந்தடைந்தது.

அவரின் சடலத்தை பார்த்து குடும்பத்தார் கதறி அழுதது காண்போர் கண்களை குளமாக்கியது. இதன்பின்னர் இன்று தினேஷ்குமாரின் இறுதிச்சடங்குகள் நடந்தது. இதில் உள்ளூரை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

யாழில் ரயிலுடன் மோதி ஒருவர் பலி!!

 

ஒருவர் பலி

யாழ்பபாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற நகர் சேர் கடுகதி புகையிரதத்துடன் மோதுண்டு 50 வயது மதிக்கத்த ஆண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பணத்தில் இருந்து நேற்றையதினம் 1.30 மணயளவில் கொழும்பு நோக்கி புறப்பட்டுச் சென்ற நகர்சேர் கடுகதி குளிரூட்டப்பட்ட புகையிரதத்துடன் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

அரியாலை, நாவற்குழி பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் வயல்வெளிகளுக்கு ஊடாக சென்று கொண்டிருந்த போது, குறித்த வயல்வெளிகளின் ஊடாக வந்த நபர் ரயில் தண்டவாளத்தை கடக்க முற்பட்டுள்ளார்.

இதனை அவதானித்த ரயில் சாரதி ஒலி எழுப்பியபோதும், குறித்த நபர் ரயிலுடன் மோதுண்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலத்தை குறித்த ரயிலில் ஏற்றபட்டு நாவற்குழி புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதுடன், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தைக் மீட்டு தற்கொலையா, விபத்தா என்ற கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உலகின் அபூர்வ பொருள் ஒன்று இலங்கையில் கண்டுபிடிப்பு!!

 

அபூர்வ பொருள்

உலகின் மிகப் பழமையான கிராம்பு வகை ஒன்று இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மன்னார் – மாந்தையில் அகழ்வு ஆராய்ச்சியின் போது உலகின் மிகப் பழமையான கிராம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பழமையான மாந்தை துறைமுகத்தில் மிகப்பெறுமதி வாய்ந்த கறுப்பு மிளகுகள் தொடர்பான சான்றுகளையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சர்வதேச ஆய்வாளர்கள் குழுவொன்று மாந்தை துறைமுகப் பகுதியில் அகழ்வாய்வில் ஈடுபட்டது. இலங்கை தொல்பொருள் திணைக்களம், சீலிங்ஸ், மற்றும் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் தொல்பொருள் நிறுவகம் ஆகியன இணைந்து இந்த ஆய்வில் ஈடுபட்டிருந்தன.

இதன்போது, கண்டுபிடிக்கப்பட்ட கிராம்பு, கி.பி 900 ஆம் ஆண்டுக்கும் 1100 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது என்று கண்டறியப்பட்டுள்ளதாக, ஆய்வாளர் Eleanor Kingwell-Banham தெரிவித்துள்ளார்.

இது ஆசியாவின் மிகப் பழைய கிராம்பு மாத்திரமல்ல, உலகிலேயே மிகப் பழமையான கிராம்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, இங்கு கண்டுபிடிக்கப்பட்ட எட்டு மிளகுகள், கி.பி 600 தொடக்கம் 700 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாக இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கடலில் காணாமல் போன மீனவர் இரு நாட்களின் பின் மீட்பு!!

கடந்த 16ஆம் திகதி திருகோணமலை – வீரநகரிலிருந்து கடலுக்குச் சென்று காணாமல் போயிருந்த நபர் மீட்கப்பட்டுள்ளார்.

வீரநகர் மீனவ சங்கத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த இரு நாட்களாக ​மேற்கொண்ட தேடுதலின் பயனாக குறித்த நபர் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளார்.

நாகேஸ்வரன் டிலக்சன் என்ற 31 வயதான இளைஞனே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் படகு பழுதடைந்தமையினால் கரைக்கு திரும்ப முடியாத நிலையில் தத்தளித்து கொண்டிருந்தார் என அவரை மீட்டெடுத்த மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

சோர்வுற்றிருந்த நபரை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் அமெரிக்க வானொலி வலையமைப்பு!!

இலங்கையில் தற்காலிகமாக தங்கியிருக்கும் அமெரிக்க படையினர், பொதுமக்கள் மற்றும் அமெரிக்க ஒப்பந்தகார்களின் பயன்பாட்டுக்காக வானொலி வலையமைப்பை நடத்தி செல்ல இலங்கை அரசாங்கம் இடமளித்துள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கும் வெளிவிவகார அமைச்சுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

பேச்சுவார்த்தை சம்பந்தமான இரகசிய ஆவணம் மூலம் இந்த தகவல் கசிந்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை இலங்கைக்கு வரும் அமெரிக்க விமானங்கள், கப்பல் துறைமுக கட்டணங்களோ வேறு கட்டணங்களோ அறவிடப்பட கூடாது என அமெரிக்க தூதரகம் யோசனை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் அமெரிக்க படையினர் சுதந்திரமாக எந்த இடத்திற்கு செல்லவும் அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை தவிர அமெரிக்க ராஜாங்க திணைக்களத்திற்கு தனியாக தொடர்பாடல் கட்டமைப்பை ஏற்படுத்தவும் இடமளிக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக இலங்கை அரசும், அமெரிக்க அரசும் உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பாகவும் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அந்த சிங்கள பத்திரிகையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எது எப்படி இருந்த போதிலும் இந்த விடயம் சம்பந்தமாக அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எதனையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொலை சம்பவம் தொடர்பில் பௌத்த பிக்கு கைது!!

 

பௌத்த பிக்கு கைது

பொலன்னறுவை, ஹபரண பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் நபர் ஒருவரை கொலை செய்துள்ளமை தொடர்பிலேயே பௌத்த பிக்கு இன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பௌத்த பிக்குக்கும் நபர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது. இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதை கண்டறிந்த பொலிஸார் பிக்கு உள்ளிட்ட மூவரை இன்று கைது செய்துள்ளனர்.

உயிரிழந்தவர் 32 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேகநபர்களை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தாய் வெளிநாடு சென்றுள்ள நிலையில் 17 வயது மகள் தற்கொலை!!

 

17 வயது மகள் தற்கொலை

அனுராதபுரத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹல்மில்லவெவ – கனேகொட பிரதேசத்தை சேர்ந்த சவ்பாக்யா என்ற 17 வயதான மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வீட்டுத் தோட்டத்திலுள்ள கிணற்றில் குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கடந்த மாதம் அவர் சாதாரண தர பரீட்சைகளை நிறைவு செய்து விட்டு வீட்டில் இருந்துள்ளார்.

அவரது தாயார் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றமையினால் அவர் தனது தந்தை மற்றும் சகோதரனுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது காதல் தொடர்பு தந்தை மற்றும் சகோதரனுக்கு தெரியவந்தமையினால் குறித்த மாணவி தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரவு நேரத்தில் வானிலிருந்து கொட்டும் மர்ம திரவம் : கொழும்பில் பாதிப்படையும் மக்கள்!!

 

வானிலிருந்து கொட்டும் மர்ம திரவம்

கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளையில் கறுப்பு மழை பெய்வதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். வத்தளை ஹெதல பிரதேசத்தில் இரவு நேரத்தில் கறுப்பு மழை பெய்வதால் பிரதேச மக்கள் கடும் சிரமத்திற்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

ஒருவகை திரவம் போன்று கறுப்பு மழை காணப்படுவதாக பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர். கடந்த ஒரு மாத காலமாக அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் பெய்யும் இந்த கறுப்பு நிற மழை தொடர்பில் பல அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்த போதிலும் அது குறித்து எவரும் கவனம் செலுத்தவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வத்தளை, ஹெதல காதினல் குரே மாவத்தை சுற்றியுள்ள பிரதேசங்களில் 1500 குடும்பங்கள் வாழ்கின்றன.

கறுப்பு மழை காரணமாக கடந்த ஒரு மாத காலமாக பிரதேச மக்கள் கடும் சிரமத்திற்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

கறுப்பு நிறத்திலான இந்த திரவம் விழுவதனால் பிரதேசத்தின் வீடுகள், மரங்கள், பூக்களில் இந்த திரவம் படிந்து காணப்படுகின்றன.

இதனால் அந்த பகுதி மக்களின் நாளாந்த வாழ்க்கைக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வான்வெளி ஊடாக பயணிக்கும் விமானங்களிலிருந்து இவ்வாறான திரவங்கள் கொட்டப்படுவதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குக்கு முன்பாக விபத்து : இருவர் காயம்!!

 

வைத்தியசாலைக்குக்கு முன்பாக விபத்து

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (19.01.2019) காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்துச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

ஏ9 வீதி வழியாக வவுனியா நகருக்கு சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள பாதசாரிகள் கடவையினை பாதசாரிகள் கடக்க முற்பட்ட சமயத்தில் முச்சக்கரவண்டி நின்றுள்ளது.

இதன் போது அதே பாதையில் பயணித்த மோட்டார் சைக்கில் முச்சக்கரவண்டியின் பின் புறமாக மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த சிறுவன் உட்பட இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் 100 வருடம் பழமையான ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் சித்திரத் தேர் வெள்ளோட்டம்!!

 

சித்திரத் தேர் வெள்ளோட்டம்

வவுனியாவில் சுமார் 100 வருடம் பழமையான ஸ்ரீகந்தசாமி ஆலயத்திற்கு புதிதாக அமைக்கப்பட்ட திராவிட மரத்தேர் இன்று மதியம் 1.30 மணியளவில் வெள்ளோட்டத்தில் இறங்கியுள்ளது.

வவுனியா ஸ்ரீகந்தசாமி ஆலயத்தின் திருவிழா நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் எண்கோண பூசாந்தர சித்திரத் தேர் கடந்த 5 மாதகாலமாக வடிவமைக்கப்பட்டு வந்துள்ளதுடன் நேற்று பூர்த்தியாகியுள்ளது.

24அடி உயரமும் 9 அங்குலமும் கொண்ட திராவிட மரத் தேர் இரண்டு கோடி ரூபா செலவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

100வருடம் பழமையான ஆலயத்தின் வெள்ளோட்டம் இன்று இடம்பெறுகின்ற அதேவேளை நாளை தேர் திருவிழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது .

16 வயதில் பள்ளியை விட்டு வெளியேறிய பெண் : இன்று கோடீஸ்வரியான ஆச்சர்யம்!!

 

கோடீஸ்வரியான ஆச்சர்யம்

ஸ்காட்லாந்தில் 16 வயதில் பள்ளியில் விட்டு வெளியேறிய மாணவி தற்போது, வருடத்திற்கு £1 மில்லியன் வரை சம்பாதித்து அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ பகுதியை சேர்ந்தவர் லிவ் கான்லான் (20). இவர் தன்னுடைய 16 வயதில், ஆசிரியரை சந்தித்து, படிப்பை நிறுத்திக்கொள்வதாக கூறியுள்ளார். அப்போது இதனை கேட்ட ஆசிரியர் அதிர்ச்சியடைந்துள்ளார். அதற்கு பதிலாக நான் புதிதாக ஒரு தொழில் துவங்க போகிறேன் என கூறிவிட்டு, கான்லான் பள்ளியிலிருந்து நடையை கட்டியுள்ளார்.

அந்த இளம் தொழிலதிபர், சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்து, ஆன்லைன் விற்பனை மூலம், முதல் வருடம் 5,000 பவுண்டுகள் சம்பாதித்து அசத்தியுள்ளார். அதன் பிறகு, ThePropertyStagers என ஒரு இணையதளத்தை துவங்கி அதில், எந்தவொரு நிதி ஆதாரமும் இல்லாமல் வெற்று வீடுகளை உருவாக்கி கொடுக்கும் முயற்சிகளில் ஈடுபட ஆரம்பித்தார்.

அதன் முதல் ஆண்டில் £ 30,000 பவுண்டுகள் என, இரண்டாவது ஆண்டில் £ 1 மில்லியன் பவுண்டுகள் வரை சம்பாதித்துள்ளார். கான்லான் தற்போது ஒரு வருடத்திற்கு 300 க்கும் அதிகமான வீடுகளை வாங்கி மெருகேற்றி வருகிறார்.

மேலும் அவருக்கு கீழ் 10 பேர் கொண்ட குழுவினர் வேலை செய்து வருகின்றனர். இதில் அவருடைய தாய் அலி (52) மற்றும் சகோதரர் ஜாக் (22) ஆகியோரும் அடங்குவர். இந்த வெற்றிக்கு பின்னால் நிச்சயமாக என்னுடைய தந்தையும், நம்பிக்கையாக லோன் கொடுத்த வங்கியுமே உள்ளது என கான்லான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

அவளை பார்த்தவுடன் காதலில் விழுந்தேன் : முதல் முறையாக மனம் திறந்த நடிகர் விஷால்!!

 

நடிகர் விஷால்

காதலில் விழுந்த தருணம் குறித்து நடிகர் விஷால் முதல் முறையாக பகிர்ந்துள்ளார். விஷாலுக்கும், தெலுங்கு நடிகை அனிஷா என்பவருக்கும் விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெறவிருக்கிறது. விஷால் கூறியதாவது, விசாகப்பட்டினத்தில் ’அயோக்யா’ பட ஷூட்டிங்கில் இருந்தேன். அப்போது அறிமுகமானார் அனிஷா. பார்த்ததுமே பிடித்துப் போனது.

அவரை கடவுள் அனுப்பியதாக நினைத்துக் கொண்டேன். பின்னர் நண்பர்களாக பழகினோம், நாளடைவில் அவரை நான் காதலிக்க ஆரம்பித்தேன். நான்தான் காதலைச் சொன்னேன். அவர் உடனே சம்மதம் சொல்லவில்லை. சில நாட்கள் கழித்து சம்மதம் சொன்னார். அனிஷா, தேசிய அளவிலான கூடைப்பந்து வீராங்கனை. சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார்.

சமீபத்தில் அவரது வீடியோ ஒன்றை பார்த்தேன். ஒரு புலியை தூங்க செய்வதற்கான பயிற்சியளித்தார். அது தொடர்பான நடத்தை பயிற்சியை அவர் கற்றிருக்கிறார். இந்த வீடியோவை பார்த்து எனக்கு மயக்கம் வந்துவிட்டது.

மார்ச் மாதம் எங்கள் திருமண நிச்சயதார்த்தம் இருக்கும். நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பின் திருமணம் நடக்கும் என்று கூறியுள்ளார்.

வவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேரூந்தினர் தாக்குதல் : இருவர் கைது!!

 

தாக்குதல்

வவுனியா எட்டாம் கட்டை பகுதியில் இன்று (18.01) மதியம் 1.30 மணியளவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேரூந்து சாரதி மற்றும் நடத்துனர் சேர்ந்து தாக்குதல் மேற்கொண்டதில் காயமடைந்த இ.போ.ச ஊழியர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவிலிருந்து பூவரசங்குளம் ஊடாக செட்டிக்குளம் நோக்கி பயணித்த இ.போ.ச பேரூந்தினை எட்டாம் கட்டை பகுதியில் வவுனியாவிலிருந்து வாரிக்குட்டியூர் நோக்கி பயணித்த தனியார் பேரூந்தினர் வழிமறித்த போது ஏற்பட்ட கருத்து முரண்பாட்டினால் இ.போ.ச நடத்துனர் மீது தாக்குதல் மேற்கொண்டதில் 31 வயதுடைய தா.விக்கினேஸ் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பூவரசங்குளம் பொலிஸார் குறித்த தனியார் பேரூந்தின் நடத்துனர் மற்றும் சாரதியினை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.