இந்தியர்களை கூண்டுக்குள் அடைத்து வைத்து துன்புறுத்திய அரேபியர் : வீடியோ வெளியானதால் சர்ச்சை!!

 

துன்புறுத்திய அரேபியர்

அபுதாபியில் நடந்த ஆசிய கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் தோற்றது. இந்நிலையில், போட்டு தொடங்குவதற்கு முன்பாக வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோவில், சில இந்தியர்களைப் பறவைக் கூண்டில் அடைபட்டுக் கிடக்கின்றனர்.

வெளியே அமர்ந்திருக்கும் அரபு மனிதர் கையில் கம்பு வைத்துக் கொண்டு, அடைபட்டுக் கிடப்பவர்களிடம் `யாருக்கு நீங்கள் சப்போர்ட் செய்வீர்கள்’ என்று கேட்கிறார். உள்ளே இருப்பவர்கள். `இந்தியாவுக்குத்தான் சப்போர்ட் செய்வோம்’ என்கிறார்கள்.

நீங்கள் இங்கேதான் வசிக்கிறீர்கள், அதனால் அமீரகத்துக்கு தான் சப்போர்ட் செய்யவேண்டும் என கூறியுள்ளார். நாங்கள் அமீரகத்துக்கு ஆதரவு அளிக்கிறோம்’ என்று சொன்ன பிறகே வெளியே விடப்படுவது போன்று அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது.

இந்த வீடியோ அமீரகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அமீரகத்தின் அட்டர்னி ஜெனரல் வெளியிட்டுள்ள அறிக்கையில், `அரபு மனிதரின் செய்கை நாட்டின் சட்டத்துக்கு புறம்பானது. உடனடியாக அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அரபு நபர் மீண்டும் வெளியிட்ட வீடியோவில், நான் உள்நோக்கத்துடன் எதையும் செய்யவில்லை, விளையாட்டாக செய்தேன். இவர்கள் எனது தோட்டத்தில் 22 ஆண்டுகளாக பணியாற்றுகிறார்கள். நாங்கள் ஒரு தட்டில் சாப்பிடுவோம் என கூறியுள்ளார்.

8 பேருக்கு உயிர் கொடுத்து தன்னுயிரை விட்ட இளைஞன் : மனதை உருக்கும் சம்பவம்!!

 

மனதை உருக்கும் சம்பவம்

மதுப்பழக்கமே இல்லாத இளைஞர் ஒருவரின் உயிரை மதுவே பறித்த துயரச் சம்பவம் தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தில் நடந்துள்ளது. நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் குடியிருக்கும் பழனிக்குமார் என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.

திருமணமாகாத இவர் தமது தந்தையின் மறைவுக்கு பின்னர் தாயாருடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2 ஆம் திகதி தனது நண்பருடன் பழனிக்குமார் மோட்டார் சைக்களில் சென்றபோது, எதிரே 3 நபர்களுடன் வந்த மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது மோதியுள்ளது.

அந்த மோட்டார் சைக்களில் வந்தவர்கள் மதுபோதையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. மட்டுமின்றி வாகனத்தை ஓட்டியவர் செல்போனில் பேசியபடியே வந்துள்ளார். இதனால் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து பழனிக்குமார் சென்ற வாகனத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் பழனிக்குமார் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பயனளிக்காமல் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டார் என்று மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

மருத்துவர்கள் தெரிவித்த இந்தத் தகவலால் கதறித் துடித்த பழனிக்குமாரின் தாயார் தமது ஒரே மகனின் உடல் உறுப்புகளை தானம் அளிக்க சம்மதித்துள்ளார்.

பழனிக்குமாரின் இதயம், சிறுநீரகங்கள், கல்லீரல், கண், தோல் உள்ளிட்டவை தானம் பெறப்பட்டன. தானம் பெறப்பட்ட உடலுறுப்புகள் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டது.

தற்போது பழனிக்குமாரின் உடல் உறுப்புகளால் 8 பேர் மறுவாழ்வு அடைந்துள்ளனர். கணவரையும் இழந்து தனக்கு ஆதரவாக இருந்த ஒரே மகனையும் இழந்து நிர்கதியாய் நிற்கும் 65 வயதான தாயாரின் இந்த முடிவு அப்பகுதி மக்களை நெகிழ வைத்துள்ளது.

அழகால் மயக்கி கொலை செய்ததற்காக சிறை சென்ற பெண் : இன்று பிரித்தானிய பிரபலம்!!

 

சிறை சென்ற பெண்

தன்மீது பாலியல் ரீதியாக தாக்குதல் நடத்திய ஒரு நபரை ஆசை காட்டி தனது அறைக்கு வரச் செய்து, தன் மீது சபலம் கொண்ட ஒருவர் மற்றும் அவரது கூட்டாளியாகிய இன்னொரு நபரையும் விட்டு, தாக்கி கொலை செய்யச் செய்த ஒரு இந்திய வம்சாவளிப்பெண், பிரித்தானியாவில் மேயர் பதவிக்கு போட்டியிடும் ஒருவரின் மனைவியாக இருப்பதால் பிரபலமடைய உள்ளார்.

Mundill Mahil, சீக்கியரான Gagandip Singh (21) என்னும் தொலைக்காட்சி ஊழியர் ஒருவரை தன் அழகால் மயக்கி தனது அறைக்கு வரவழைத்தார்.

முன்பு தன்னை பாலியல் ரீதியாக தாக்கிய அவரை Mundill நயவஞ்சகமாக ஏமாற்றி வரவழைக்க, அவரது அறையில் மறைந்திருந்த Harvinder Shoker என்னும் சீக்கியரும், Darren Peters என்னும் நபரும் தலையில் அடித்து, மின்சார கேபிளால் கட்டி அவரது காரின் பின்பக்கத்திலேயே அடைத்து தீயிட்டுக் கொளுத்திக் கொலை செய்தனர்.

இந்த சம்பவத்திற்காக கைது செய்யப்பட்ட Mundillக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டாலும், பின்னர் மூன்று ஆண்டுகளுக்குப் பின் அவர் விடுதலை செய்யப்பட்டார். பின்னர் லேபர் கட்சியில் வளர்ந்து வரும் அரசியல்வாதியான Varinder Singh Bola மணந்து கொண்டார் Mundill. Varinder Singh Bola தற்போது லண்டனிலுள்ள சிறு நகரம் ஒன்றில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்.

இதனால் கொலைக்குற்றத்திற்காக சிறை சென்ற அந்த பெண், ஒரு மேயரின் மனைவியாக மரியாதைக்குரிய ஒரு நபராக மாற இருக்கிறார்.

ஹெல்மெட் அணியாமல் சென்ற இளைஞனின் மண்டையை உடைத்த பொலிஸ்!!

 

மண்டையை உடைத்த பொலிஸ்

ஹெல்மெட் இல்லாமல் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இளைஞர் ஒருவர் புத்தளம் பொலிஸ் அதிகாரியால் தாக்கப்பட்ட சம்பவம் சமூக ஊடகங்கள் மூலம் பேசப்படுகிறது.

மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்து பயணம் செய்த நபர் பாதுகாப்புக்காக ஹெல்மெட் அணியாமல் சென்ற நிலையில் பொலிஸ் அதிகாரி ஹெல்மெட்டால் குறித்த இளைஞனின் தலையில் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்குப் பிறகு, இளைஞர் சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இவர் புத்தளம் பொலிஸ் அதிகாரியால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் பிரபல பாடசாலை மாணவர்களின் அட்டகாசம் : அதிபர், ஆசிரியர்கள் மீது தாக்குதல்!!

யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலையில் கல்வி பயிலும் இரு மாணவர்கள் உட்பட 11 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தென்மராட்சி, நாவற்குழி மத்திய மகா வித்தியாலயத்தில் மாணவர்கள் இருவர் மற்றும் பிரதேச இளைஞர்கள் 11 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலை சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை, அதிபர், ஆசிரியர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த புதன்கிழமை போதைப்பொருளுக்கு அடிமையாகியமையினால் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இருவர் இவர்களை தண்டித்துள்ளனர்.

பின்னர் இந்த மாணவர்கள் தங்கள் நண்பர்கள் சிலரை அழைத்து சென்று பாடசாலை சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியதோடு அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இருவர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

வவுனியாவில் சாராய போத்தல்களுடன் இருவர் கைது!!

 

இருவர் கைது

வவுனியா செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயில்முட்டையிட்ட குளம் பகுதியில் சட்டவிரோத வடிசாராய உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று மாலை செட்டிகுளம் பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மயில்முட்டையிட்ட குளம் பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் தேடுதல் நடாத்தியபோதே குறித்த நபர்கள் கைதுசெய்யபட்டனர்.

கைது செய்யபட்டவர்களிடம் இருந்து 50 போத்தல் வடிசாராய போத்தல்கள் கைப்பற்றபட்டதுடன் அதனை உற்பத்தி செய்ய பயன்படும் கோடா 180 லீட்டரும், நவீன உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யபட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

யானையின் தாக்குதலில் பரிதாபமாக பலியான விவசாயி!!

அனுராதபுரம் மாவட்டத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி விவசாயி ஒருவர் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளதாக எப்பாவள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று(11.01) அதிகாலை மஹயிலுப்பள்ளம் பகுதியில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் 58 வயதுடைய இஹலகம மஹயிலுப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் சம்பவ தினத்தன்று தனது விவசாய நிலத்திலிருந்து வீட்டுக்கு சென்ற போதே இவ்வனர்த்தம் நிகழ்ந்துள்ளமை தெரிய வந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எப்பாவள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இருகுழுக்களுக்கிடையே பயங்கர மோதல் : 26 வயதுப் பெண் மரணம்!!

 

பெண் மரணம்

மாத்தறை திக்வெல்ல-கோட்டகொட பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அலவாங்கினால் குறித்த பெண் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுதுவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான பெண்ணே உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த பெண் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஐரோப்பிய நாடுகளில் உறைபனி அபாயம் : 7 பேர் பலி!!

ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் நிலவும் பனிப்புயல் மற்றும் உறைபனி நிலைமைகளை அடுத்து அங்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உச்சகட்டமாக ஜேர்மனியில் கடும் பனிப்பொழிவு நிலவுகின்றது. இதுவரை குளிர் மற்றும் பனிச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே அடுத்த சில நாட்களில் பனி பொழிவின் அளவு 6 அடி வரை உயரும் என்று ஜேர்மனி வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் ஜேர்மனி, ஒஸ்ரியா உள்ளிட்ட நாடுகளில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வீதிகளில் தேங்கியுள்ள பனியை அகற்றுவதற்கு இராணுவத்தினரை ஈடுபடுத்த ஜேர்மனி அரசு திட்டமிட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உறைபனி காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்தவாரம் முதல் கடும் பனிப்பொழிவு தொடர்ந்துவரும் ஓஸ்ரியாவில் இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர். சுவிடனின் வடபகுதியிலும் பனிப்பொழிவும் கடுமையான குளிர்காற்றும் வீசுவதால் பெரும் பாதிப்புக்கள் தொடர்கின்றன.

இலங்கை தமிழர்கள் இருவர் சிங்கபூரில் சிறையில் அடைப்பு!!

சிங்கபூர் நாட்டில் கடவுச்சீட்டு சட்டத்தின் கீழ் இலங்கை தமிழர்கள் இருவருக்கு கடந்த 7ஆம் திகதி எட்டு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரராசசிங்கம் பூவிந்தன் மற்றும் மாரிமுத்து சுப்பிரமணியம் ஆகிய இருவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளவும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஒட்டோபர் 28ஆம் திகதி சிங்கபூர் சாங்கி விமான நிலையத்தில் வைத்து பரராசசிங்கம் பூவிந்தன் மற்றும் மாரிமுத்து சுப்பிரமணியம் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பூவிந்தனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுக்கொள்ள எண்ணியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் இருந்து சிங்கபூர் வருதற்கு பரராசசிங்கம் பூவிந்தனின் சொந்த கடவுச்சீட்டு பயன்படுத்தப்பட்டிருந்தது.

எனினும், அவரின் கனடா நாட்டு கடவுச்சீட்டில் முரண்பாடுகள் காணப்பட்டதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

அதேநேரம், மாரிமுத்து சுப்பிரமணியம் விமான நிலையத்தில் 3வது முனையத்தில் வைத்து ஐ.சி.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை, குற்றவாளிகளாகக் கருதப்பட்டவர்கள் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படலாம் அல்லது இருவருக்கும் 10,000 டொலர்கள் அபராதம் விதிக்கலாம் என அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கால் வந்த வினை : மாணவியை கடுமையாக தாக்கிய அதிபர்!!

கண்டியிலுள்ள பிரபல மகளிர் பாடசாலை அதிபரின் தாக்குதலில் காயமடைந்த உயர்தர மாணவி ஒருவர் நேற்று கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்கப்பட்ட மாணவி தனது நண்பியுடன் பேஸ்புக் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அதிபர் தொடர்ந்து அந்த மாணவியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனக்கும் அந்த புகைப்படத்திற்கும் தொடர்பு இல்லை என குறித்த மாணவி கூறிய போதிலும் தவறை ஏற்றுக் கொள்ளுமாறு பலவந்தப்படுத்தி குறித்த மாணவியை அதிபர் தாக்கியுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மாணவியின் தாயார் கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாடு செய்த சந்தர்ப்பத்தில் மாணவியின் காதில் கடுமையான வலி உள்ளதாக குறிப்பிட்ட நிலையில் அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அதிபரின் அலுவலகத்தில் இருந்த சிசிடிவி கமரா உதவியுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நடவடிக்கை எடுக்காவிடில் நீதிமன்றம் போவேன் : ரணிலை மிரட்டிய சுமந்திரன்!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்குமிடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது. நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் இந்த சந்திப்பு நடந்தது.

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் அரசாங்க அதிகாரிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுவொன்றை அமைப்பதென முடிவெடுக்கப்பட்டிருந்தது. அந்த குழுவை அடுத்த வாரமளவில் உருவாக்குவதென முடிவெடுக்கப்பட்டது.

கம்பெரலிய நிதி, அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டது.

இதன்போது, இலங்கை நிர்வாக சேவை போட்டிப்பரீட்சையில் அதிக தமிழர்கள் சித்தியடைந்ததை காரணம் காட்டி, அந்த பரீட்சை மோசடியாக நடத்தப்பட்டதாக கல்வியமைச்சு அறிவித்த விவகாரத்தை நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் குறிப்பிட்டார்.

பரீட்சையில் மோசடிகள் இடம்பெறவில்லையென்பதை பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டிய எம்.ஏ.சுமந்திரன், இந்த விடயத்தில் நீதியான முடிவு எடுக்கப்படாவிட்டால், தான் நீதிமன்றத்தை நாடப்போவதாக குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தில் உடன் கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை எடுக்கும்படி தனது செயலாளரிற்கு பிரதமர் உத்தரவிட்டார்.

மட்டக்களப்பில் கடலில் குளிக்கச் சென்ற 14 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!!

 

சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு

மட்டக்களப்பு -புன்னக்குடா கடலில் நீராடியபோது, அலையில் அள்ளுண்டுச் சென்ற மாணவனொருவனின் சடலம், நேற்று (11.01) காலை மீட்கப்பட்டுள்ளதாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.  சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

செங்கலடி குமாரவேலியார் கிராமத்தை சேர்ந்த 14 வயதுடைய குவேந்தின் ஹரீஸ்வருத்தன் என்ற மாணவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட சடலம் அவரது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

செங்கலடி மத்திய கல்லூரியில் எட்டாம் ஆண்டு கல்விகற்கும் ஹரீஸ்வருத்தன், நேற்று முன்தினம் (10.01) காலை பாடசாலை சென்று வீடுதிரும்பியதும், பகலுணவை உட்கொண்டபின் தாயிடம் 100/= ரூபா பணம் பெற்று தலை முடி வெட்டி வருவதாக கூறிச்சென்றுள்ளார்.

மாலை 06 மணிவரைக்கும் முடிவெட்டச் சென்ற மகன் வீடு திரும்பாததால், குறித்த சலூனுக்கு சென்று தேடியபோது, முடிவெட்டி சென்றுவிட்டார் என தகவல் கிடைத்திருக்கிறது. அதன் பின்னர் அருகாமையிலுள்ள உறவினர்கள் வீடுகளில் தேடியும் மகனை காணக் கிடைக்கவில்லை. இரவெல்லாம் விழித்திருந்து தன் மகனின் வரவுக்காக காத்திருந்த பெற்றோருக்கு ஏமாற்றமே விடையாக கிடைத்தது.

நேற்று காலை விடயத்தை ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்த பின்னர், குறித்த மாணவனின் நண்பர்கள் யாரென பொலிஸார் விசாரித்த போது பெற்றோர் மகனின் மிக நெருங்கிய நண்பர்கள் இருவரது பெயரை சொன்னதும், குறித்த மாணவர்கள் இருவரையும் காலை பாடசாலை சென்று அதிபரின் அனுமதியுடன் சந்தித்த பொலிசார், மாணவர்களை விசாரித்த போதுதான் விடயம் தெரிய வந்துள்ளது.

நேற்று முன்தினம் பிற்பகல் மாணவன் ஹரீஸ்வருத்தன் தலைமுடிவெட்டி வெளியாகியதும், நாங்கள் ஐந்து பேர் சேர்ந்து புன்னக்குடா கடலுக்கு குளிக்கச் சென்றதாகவும், குளித்துக் கொண்டிருக்கும் போது, ஹரீஸ்வருத்தன் நீரில் மூழ்கிவிட்டதால் பயம் காரணமாக யாரிடமும் சொல்லாமல் இருந்து விட்டோம் என்று இரு மாணவர்களும் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் (10.01) மாலை, ஐந்து மாணவர்கள் புன்னக்குடா கடலில் நீராடுவதற்குச் சென்றிருந்தபோதே, குறித்த மாணவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் ஏனைய மாணவர்கள் வழங்கிய தகவலுக்கமைய, மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில், ஏறாவூர்ப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கனடாவில் கோர விபத்து : மூவர் பலி, 9 பேர் ஆபத்தான நிலையில், 23 பேர் படுகாயம்!!

 

கனடாவில் கோர விபத்து

கனடாவில் ஒட்டாவ பகுதியில் பேருந்து ஒன்று போக்குவரத்து தரப்பிடத்தின் மீது மோதியதில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளது. இந்த கோர விபத்து கனேடிய நேரப்படி இரவு 10.30 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமை அதிகாரி Charles Bordeleau குறிப்பிட்டுள்ளார். பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதனால் சாரதியின் தகவல்கள் வெளியிடப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

பேருந்துக்குள் இருந்த இருவரும் தரிப்பிடத்தில் நின்ற ஒருவரும் சம்வத்தில் உயிரிழந்துள்ளதாக Ottawa மேயர் Jim Watson தெரிவித்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்தவர்களில் 9 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக Ottawa வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளார்.

இந்த பேருந்தில் 90 பேர் பயணிக்க கூடிய வசதியை கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 2013ஆம் ஆண்டு குறித்த இடத்தில் இதேபோன்ற கோர விபத்து ஏற்பட்டமையில் அதில் 6 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மஹோற்சவப் பெருவிழா விஞ்ஞாபனம் – 2019

வவுனியா  நகரில் அமைந்துள்ள  ஸ்ரீ கந்தசாமி  ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம்  இன்று 12.01.2019   சனிக்கிழமை    காலை 11.30 மணியளவில்  கொடியேற்றத்துடன்  ஆரம்பமாகவுள்ளது  .பத்து  நாட்கள்  இடம்பெறும்  ஆலய  மகோற்சவத்தில்

  • கணபதி உற்சவம் 11.01.2019 வெள்ளிக்கிழமை (மாலை 4.00 மணிமுதல்)
  • கொடியேற்றம்12.01.2019 சனிக்கிழமை (பகல் 11.30 மணிமுதல்)
  • தேர் -20.01.2019 ஞாயிற்றுகிழமை (காலை 9.00 மணிமுதல்)
  • தீர்த்தம் – 21.01.2019 திங்கட்கிழமை ( காலை 9.00 மணிமுதல்)
  • 22.01.2019 செவ்வாய்க்கிழமை 1008 சங்காபிஷேகமும் காலை 8.30 மணிமுதலும் திருக்கல்யாணம் மாலை 4.30 மணிமுதலும் இடம்பெறவுள்ளன.

வவுனியா ஒலுமடு தமிழ் மகாவித்தியாலய மரதன் ஓட்டப்போட்டி!!

வவுனியா ஒலுமடு தமிழ் மகாவித்தியாலயத்தின் 2019ம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டியின் முதல் நிகழ்வான மரதன் ஓட்டபோட்டி இன்று வெள்ளிக்கிழமை காலை 6.50 மணியளவில் பாடசாலைக்கு முன் ஆரம்பமானது.

பாடசாலையின் அதிபர்
கு.விமலேந்திரன் தலைமையில் ஆரம்பமான போட்டியில் ஆண்கள் 11 KM தூரமும்,பெண்கள் 08KM தூரமும் என நிர்ணயிக்கப்பட்டு போட்டி இடம்பெற்றது

போட்டியின் நிறைவில் ஆண்கள் பிரிவில் த.தனுசன் முதலாம் இடத்தினையும்,த.சுமன் இரண்டாம் இடத்தினையும், க.கௌரிகாந்தன் மூன்றாம் இடத்தினையும், பெண்கள் பிரிவில் ர.டினோஜா முதலாம் இடத்தினையும், ந.புகழினி இரண்டாம் இடத்தினையும்,
வி.டிசாந்தினி மூன்றாம் இடத்தினையும் பெற்றனர்.

போட்டியின் நிறைவில் முதல் மூன்று இடங்களையும் பெற்ற மாணவர்களுக்கு வெற்றிக் கேடயங்களும் வழங்கிவைக்கப்பட்டது. குறித்த மரதன் ஓட்டப் போட்டியில் அறுபதுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.