வவுனியா பிரதேச கலாசார பேரவையும் , வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டமும் இணைந்து நடாத்திய மார்கழி இசை விழா இன்று(11.01) காலை 9.30 மணிக்கு வவுனியா பிரதேச செயலக கலாசாரமண்டபத்தில் நடைபெற்றது.
கலாபூசணம் திருமதி.தேவிமனோகரி நாகேஸ்வரன் அவர்களின் நினைவாக இடம்பெற்ற இந்நிகழ்வில் கலைஞர்களினால் கர்நாடக சங்கீத இசை நிகழ்வுகளும், நினைவுரைகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உதவி பிரதேச செயலாளர் திருமதி பிரியதர்சினி சஜீவன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் மு.இராதாகிருஸ்ணன், நகரசபை உறுப்பினர் சேனாதிராசா, வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்ட தலைவர் கலாநிதி தமிழ்மணி அகளங்கன் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. சீமான்-கயல்விழி திருமணம் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ அரங்கில் கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது.
சீமான்-கயல்விழி திருமணத்தை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன்தான் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.
தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது. தமிழின் முதல் எழுத்தான ‘அ’ பொறிக்கப்பட்ட டொலருடன் கூடிய தாலியை பழ.நெடுமாறன் எடுத்து தர, அதை வாங்கி சீமான் கயல்விழி கழுத்தில் கட்டினார்.
திருமணமாகி 5 அண்டுகள் ஆன நிலையில் சீமான்-கயல்விழி தம்பதிக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.
சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கயல்விழிக்கு பிரசவம் நடந்தது. தாயும் சேயும் நலம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீமான் தந்தை ஆகியுள்ளதால், நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் சந்தோஷத்தில் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர்.
தொடர்ந்து ஆறு சத்திர சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்த மருத்துவர் ஒருவர், கடைசி சத்திர சிகிச்சை முடித்ததும் மேசையிலேயே அயர்ந்து தூங்கிவிட்டார், ஆனாலும் அவரது கடமையில் தவறவில்லை.
சீன மருத்துவரான Luo Shanpeng தொடர்ந்து ஓய்வின்றி 20 மணி நேரம் அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டதற்காக வெகுவாக பாராட்டப்பட்டாலும், தனது கடைசி அறுவை சிகிச்சைக்குப்பின் அவர் சத்திர சிகிச்சை மேசையிலேயே தூங்கும் புகைப்படம் முன்னை விட அவரை அதிக பிரபலமாக்கிவிட்டது.
Shanpeng புலம்பெயர்ந்த நோயாளி ஒருவரின் துண்டான கையை அறுவை சிகிச்சை மூலம் ஒட்டவைத்துவிட்டு, அந்த சிகிச்சை மேசையிலேயே சாய்ந்து தூங்குவதை அந்த படம் காட்டுகிறது. அவர் தூங்கினாலும் அவர் ஒட்டவைத்த கையை பிடித்தவாறே துங்குகிறார். அந்த புகைப்படம் சீனாவின் பிரபல சமூக ஊடகம் ஒன்றில் வெளியான நிலையில், சட்டென வைரலானது.
அன்று அவர் அதற்குமுன் ஐந்து அறுவை சிகிச்சைகளைச் செய்து முடித்திருக்கிறார், ஆறாவது அறுவை சிகிச்சை எட்டு மணி நேரம் நீடித்திருக்கிறது. ஐந்து அறுவை சிகிச்சைகளை முடித்தபிறகு, மாமிசம் வெட்டும் கத்தியில் சிக்கி, கை துண்டான ஒருவரை சிலர் தூக்கிக் கொண்டு வர, களைத்துப்போனாலும், களைப்பையும் மீறி பொறுப்புணர்வோடு அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்திருக்கிறார் Shanpeng.
அந்த நோயாளிக்கு அப்போது அறுவை சிகிச்சை செய்யாதிருந்தால், அவர் தனது கையை இழக்க நேரிட்டிருக்கும் என்கிறார் Shanpeng. அவர் தூங்கும் படத்தைக் காட்டி அதைக் குறித்துக் கேட்டால், சற்று ஓய்வெடுப்பதற்காக கண்களை மூடினேன், ஆனால் தூங்கிவிடுவேன் என்று நினைக்கவில்லை என்கிறார்.
20 மணி நேரம் தொடர்ந்து ஓய்வின்றி அறுவை சிகிச்சைகள் செய்ததாக தெரிவிக்கும் Shanpeng, அந்த நோயாளியின் கையில் போடப்பட்ட கட்டு காய்வதற்குமுன், அவர் கையை கீழே வைத்து விடக்கூடாது என்பதற்காகவே அவரது கையைப் பிடித்துக் கொண்டே இருந்ததாக தெரிவிக்கிறார். அதுமட்டுமின்றி நோயாளியின் கையில் சரியான இரத்த ஓட்டம் நடப்பதற்கும் இது அவசியம் என்கிறார் Shanpeng.
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இந்த சிறப்பு விடுமுறைக்கான கட்டளையை கல்வி அமைச்சின் செயலாளருக்கு வழங்கியுள்ளார்.
ஜனவரி 15ஆம் திகதி செவ்வாய்கிழமை கொண்டாடப்படும் தமிழர்களின் பண்டிகையான தைப் பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு 14ஆம் திகதி திங்கட்கிழமை வடக்கு மாகாணத்தின் பாடசாலைகளுக்கும் விடுமுறையினை வழங்குவதற்கான உத்தரவினை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் வழங்கியுள்ளார். இந்த விடுமுறைக்கான பதில் பாடசாலை தினம் பின்னர் அறிவிக்கப்படும்.
வவுனியா தரணிக்குளம் பகுதியிலுள்ள வியாபார நிலையங்களுக்கு விறகு ஏற்றிச் செல்லப்படும் பட்டா ரக வாகனத்தில் உணவுப் பண்டங்களான பாண், கேக், பணிஸ் போன்றவற்றை விற்பனை செய்த நபருக்கு எதிரான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட வெதுப்பக உற்பத்தி நிலையத்தின் உரிமையாளருக்கு நேற்று வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றம் 30ஆயிரம் ரூபா தண்டம் அறிவிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியாவிலுள்ள பிரபல்யமான வெதுப்பகம் ஒன்றின் உற்பத்திப் பொருட்களை வெதுப்பகத்திற்கு விறகு ஏற்றப் பயன்படுத்தப்பட்ட பட்டா ரக வாகனத்தை உரிய முறையில் துப்பரவு செய்யாமல் களஞ்சியப்படுத்தி தரணிக்குளம் பகுதியில் விற்பனை செய்தமை தொடர்பில் வெதுப்பகத்தின் உரிமையாளருக்கு எதிராக பொதுசுகாதாரப் பரிசோதகரினால் வவுனியா நீதிமன்றத்தில் கடந்த 13.10.2018 வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சுத்திகரிப்புச் செய்யப்படாமல் விறகு ஏற்றிச் சென்ற பட்டா ரக வாகத்தில் வெதுப்பக உற்பத்தி உணவுப் பொருட்கள் மண், தூசு, பூச்சி, காலாவதித் திகதி முடிவடையும் முன்னரே பூஞ்சனம் பிடித்த பாண் என்பன காணப்பட்டுள்ளதுடன் மருத்துவ தகுதிச்சான்றிதழ் இன்றி வாகனத்தைச் செலுத்திய நபரே வெற்றுக் கைகளினால் உணவுப் பொருட்களை விற்பனை செய்தமை போன்ற ஆறு குற்றச்சாட்டுக்களுக்கு எதிராகவும் உரிய அனுமதிப்பத்திரமின்றி மேற்படி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்த உரிமையாளருக்கு எதிராகவும் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேற்படி வழக்குகள் நேற்றைய தினம் விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது எதிராளி குற்றத்தை ஒப்புக் கொண்டதற்கு இணங்க முதலாம் எதிரி மீதான ஆறு குற்றச்சாட்டுகளுக்கும் தலா நான்கு ஆயிரம் ரூபா வீதம் 24ஆயிரம் ரூபாவும் இரண்டாம் எதிரிக்கு 6 ஆயிரம் ரூபா மொத்தமாக 30ஆயிரம் ரூபா நீதிமன்றத்தினால் தண்டமாக விதிக்கப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட உணவுப்பொருட்களை அழித்து விடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை காலாவதித் திகதி முடிவடைந்த 10 குளிர்பான போத்தல்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த வர்த்தகர் ஒருவருக்கு எதிரான குற்றச்சாட்டிற்கும் நீதிமன்றம் 5ஆயிரம் ரூபா அபராதம் விதித்திருந்தாக பொது சுகாதாரப்பரிசோதகர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் – தென்மராட்சி, நாவற்குழியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் அதிபர் மற்றும் ஆசிரியர்களை மாணவர்கள் சிலர் தாக்க முற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாடசாலைக்கு முன்பாக ஒன்று திரண்ட பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, ஒரு சில மாணவர்கள் பாடசாலையில் ஒழுக்க விதிகளை மீறி செயற்ப்பட்டமை குற்றச்செயல்களிலும் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்ததன் காரணமாக ஆசிரியர்கள் கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் குறிப்பிட்ட மாணவர்களை பாடசாலையில் ஒழுக்கமாகவும் பாடசாலையின் கௌரவத்தினை பேணும் வகையில் நடந்துகொள்ளுமாறு அதிபர் அறிவுறுத்தியுள்ளார். இதனால் குறித்த மாணவர்கள் வெளியாட்களோடு இணைந்து இன்று காலை 11.00 மணிக்கு பாடசாலைக்குள் நுழைந்து அதிபர் மற்றும் ஆசிரியர்களை தாக்க முற்பட்டுள்ளனர்.
இதன்போது வெளியாட்கள் மூன்று பேரைப் பிடித்த பாடசாலையின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்று திரண்டு சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இவர்களில் இரண்டு மாணவர்களும் உள்ளடங்குகின்றனர்.
இச்சம்பவத்தையடுத்து பாடசாலைக்கு முன்பாக ஒன்றுதிரண்ட மாணவர்கள் தமது மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தக் கோரியும் ஒழுக்கமற்ற மாணவர்களை பாடசாலையில் இருந்து விலக்குமாறு கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் நாவற்குழி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தென்மராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர், சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இதன்போது நாளைய தினம் பாடசாலை சமூகம், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கம், வலயக்கல்வி பணிப்பாளர் மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து தீர்கமான முடிவு எடுக்கப்பட்டு ஆசிரியர் மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
பாடசாலை மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு பழைய மாணவர்கள், கிராம மக்கள் என அனைவரும் ஆதரவு தெரிவித்து ஒன்றுதிரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் காணமல் போன இளைஞரின் கால் மட்டும் சாலையில் கிடைத்துள்ள நிலையில் அது கொலையா..? விபத்தா..? என்று முடிவு செய்ய முடியாமல் பொலிசார் திணறி வருகின்றனர். தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சுதாகர் என்ற இளைஞர் காணமல் போனதாக அவரது குடும்பத்தினர் பொலிசாருக்கு புகார் அளித்தனர்.
இந்நிலையில், திருவள்ளூர்- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நடந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்ற பொலிசார் ஒரு கால்கள் மட்டும் கண்டெடுத்தனர். இது குறித்து சுதாகரின் உறவினருக்கு தகவல் கிடைத்ததும் அங்கு வந்த அவர்கள் அது சுதாகரனின் கால்கள்தான் என்று உறுதி செய்தனர்.
ஆனால் உடலின் மற்ற எந்த பாகவும் அந்த பகுதியில் இல்லாத நிலையில் இது பொலிசாருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. வாகனங்களில் அடிப்பட்டு உடல் பாகம் சிதைத்திருக்க வாய்ப்பு உள்ளதா என்றும், இல்லை கொலை செய்யப்பட்டரா என்றும் விசாரணை நடத்தி வருகின்றன.
இது குறித்து அந்த பகுதியில் சென்ற வாகனங்கள், அருகில் உள்ள தொழிற்சாலைகள் என்று எல்லா பகுதியிலும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். ஆனால் ஒரு கால்கள் மட்டும் வைத்து விசாரிப்பது பொலிசாருக்கு சவாலாகவே உள்ளது.
யாழ்ப்பாணம், வலி வடக்கு மீள்குடியேற்ற பகுதிக்குட்பட்ட பாடசாலையொன்றின் மாணவர்கள் மூவர் போதை மாத்திரைகள் உட்கொண்டு போதையேறிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதுடன், மாணவர்கள் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நல்லிணக்கபுரத்தில் உள்ள இரு மாணவர்களும் தெல்லிப்பளையை சேர்ந்த ஒரு மாணவனும் இணைந்து நேற்று காலை பாடசாலைக்கு சென்றுள்ளனர். நல்லிணக்கபுரத்தை சேர்ந்த மாணவர் தனது சகோதரனிடம் (வயது 16) இருந்து போதை மாத்திரைகளை (20 மாத்திரைகள்) பெற்று வந்துள்ளார்.
அதில் ஒருவர் 5 மாத்திரையும், மற்ற மாணவன் 4 மாத்திரைகளையும், மூன்றாவது மாணவன் 3 மாத்திரைகளையும் உட்கொண்டுள்ளார். பின்னர் வகுப்பறையினுள் மயங்கிய நிலையில் இவர்கள் கிடந்துள்ளனர்.
விடயத்தை அறிந்த பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து அவர்களை வெளியே அழைத்து சென்று விசாரணை செய்துள்ளனர். அப்போது அவர்கள் தகாதவார்த்தை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். நிலமையை அறிந்த அதிபர் குறித்த மாணவர்களை தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
பின்னர் வைத்தியசாலையில் இருந்து சுகாதார வைத்திய அதிகாரிக்கு குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டு, சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட குழு வைத்தியசாலைக்கு சென்று மாணவர்களிடம் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
இவ்வாறான மாத்திரைகள் அவர்களது சுற்றயல்களில் உள்ள மருந்தகங்களில் சாதாரணமாக கிடைப்பதாகவும், தாம் பயன்படுத்திய மாத்திரை தனது சகோதரனிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் மாணவரொருவர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
எந்த மருந்தகங்களில் குறித்த மாத்திரைகள் கொள்வனவு செய்யப்படுகின்றன என்ற தகவலை பெற்றுக்கொண்டு மாவட்டபுரத்துக்கு அண்மையில் உள்ள அந்த மருந்தகங்களுக்கு சென்ற சுகாதார வைத்திய அதிகாரி குழு அங்கு பரிசோதனை மேற்கொண்டு அங்கிருந்த மாத்திரைகளையும் கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன் குறித்த மருந்தகங்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்படவுள்ளதாக குறித்த சுகாதார தை்திய அதிகாரி குழு தெரிவித்துள்ளது.
வவுனியா பழைய பேருந்து நிலைய பகுதியில் வீசப்பட்டுள்ள குப்பைகளில் கோழிக்கழிவுகள் வீசப்பட்டிருப்பதால் துர்நாற்றம் வீசுவதாக வர்த்தகர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த பேருந்து நிலையப் பகுதிகளிலுள்ள வியாபாரிகள் இன்று அதிகாலை வர்த்தக நிலையங்களுக்கு வருகை தந்த வேளையிலேயே இவ்வாறு கோழிக்கழிவு குப்பைகள் வீசப்பட்டுள்ளதை அவதானித்துள்ளனர்.
இதனால் பல்வேறு தேவைகளுக்காக இப்பகுதிக்கு வருகை தரும் பொது மக்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக தெரியவருகிறது.
கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்தில் தமிழ் மக்களை பழி தீர்க்கும் எண்ணக்கருவோடு இனத்துவேசம் பேசும் ஒருவருக்கு ஆளுநர் பதவியை ஜனாதிபதி வழங்கி இருக்கின்றமை தமிழ் மக்களிடையே அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநரை பதவி விலக கோரி திருகோணமலை, மட்டக்களப்பு, மாவட்டங்களில் இன்று டயர்கள் எரித்தும், கடைகளை அடைத்தும் மக்கள் எதிர்ப்பினை வெளிகாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தீர்வுத்திட்டங்கள் மூலம் நிம்மதியான வாழ்வு கிடைக்கும் என ஜனாதிபதிக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு இன துவேசம் பேசிவந்த எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவை கிழக்கு மாகாண ஆளுநராக நியமனம் செய்திருப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது ஜனாதிபதிக்கு இருந்த காழ்ப்புணர்ச்சிக்கு தமிழ் மக்களை பலி கடாவாக்கியுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
தமிழ் மக்களின் இருப்புக்களுக்கு குந்தகத்தை ஏற்படுத்தும் விதமான பேச்சுகளடங்கிய கானொளிகள் வெளிவந்த நிலையில் நாடாளுமன்றில் வட, கிழக்கு இணைந்தால் ‘இரத்த ஆறு ஓடும்” என தூபமிடும் ஒருவரை கிழக்கு மாகாண ஆளுநராக நியமித்திருப்பது தமிழர்கள் இருப்புக்கு ஐயப்பாட்டினை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மட்டக்களப்பு தமிழ் பிரதேசங்களில் இந்துக்களின் வணக்கஸ்தலங்களை இடித்து மீன் சந்தை தொகுதிகளை தனது இனத்திற்கு அமைத்து கொடுத்த ஒருவரை ஆளுநராக நியமித்தமை தமிழ் மக்கள் மீது மைத்திரிபால சிறிசேனவிற்கு இருக்கின்ற குரோத மனப்பான்மையை வெளிக்கொண்டு வருவதாக சமூகவலைத்தளங்களில் ஆதகங்களை தெரிவித்து வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களில் கடைகள் பூட்டப்பட்டு, பாடசாலைகள், வங்கிகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் போன்றவற்றின் இயல்பு நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் ஹர்த்தாலுக்கு அறைகூவல் விடுத்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டமையை தொடர்ந்து குறித்த பகுதிகளில் அமைதி நிலவுகின்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
சாப்பிட்டுக் கொண்டிருந்த வேளை மீன் முள்ளு தொண்டையில் சிக்கியமையினால் நபரொருவர் சாப்பாடு தட்டினை எடுத்துக் கொண்டு வைத்தியசாலைக்கு சென்ற சம்பவமொன்று இன்று திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை – ஆண்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபரே இவ்வாறு வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, குறித்த நபர், தனது மகள் சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது தொண்டையில் மீன் முள்ளு குத்தியதாகவும், இந்த நிலையிலேயே அவர் சாப்பிட்ட சாப்பாட்டையும் எடுத்துக் கொண்டு வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
பாதிக்கப்பட்ட நபர் அனுமதியறையில் கடமையாற்றும் வைத்தியரிடம், தற்பொழுது தான் மதுபோதையில் இருப்பதாகவும் அதனால் முள்ளு தொண்டையில் இருப்பதை அவதானிக்க மாட்டார்கள் என நினைத்து சாப்பிட்ட சாப்பாட்டு தட்டுடன் வைத்தியசாலைக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத்தினால் எம்.ஜி.ஆர். சிலை அமைப்பதற்கு தர்மலிங்கம் வீதியில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வவுனியா நகரில் பொது இடங்களில் சினிமா நடிகர்களுக்கு சிலை அமைப்பதற்கு நகர சபையின் உறுப்பினர்களின் அனுமதி பெற்றே பொது இடங்களில் சிலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நகர உப பிதா சு.குமாரசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த வாரம் வவுனியா நகரசபைக்கு எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத்தினால் கடிதம் ஒன்று வழங்கப்பட்டுள்ளதுடன் அதில் நகரின் முக்கிய பகுதியான தர்மலிங்கம் வீதியிலுள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபையினரின் பகுதி முச்சந்தி ஒன்றில் எம். ஜி.ஆரின் சிலை அமைப்பதற்கு அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் சிலை அமைப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இச்சிலைக்கு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ஒருவர் நிதி வழங்கியுள்ளார். இந்நிலையில் அதனை தடுத்து நிறுத்தியதுடன் நகரசபையின் அனுமதி பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த நற்பணி மன்றம் பதிவு செய்யப்படவில்லை. எனவே பதிவு செய்யப்படாத ஒரு மன்றத்தின் கோரிக்கையினை நகரசபையினால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நிலையும் தற்போது ஏற்பட்டுள்ளது. பள்ளி வாசலுக்கு அருகில் அமைக்கப்படும் இச்சிலைக்கு பெருமளவானர்கள் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து நகரசபை நகர உபபிதாவிடம் தொடர்பு கொண்டபோது, அவர்களின் அனுமதிக்கடிதம் கிடைத்துள்ளது. எனினும் எமது சபையில் அவ்விடம் ஆராயப்பட்ட பின்னரே இதற்கு பதில் வழங்க முடியும் இதைவிடுத்து அப்பகுதியில் அனுமதியற்ற விதத்தில் சிலை அமைப்பதற்கு அனுமதிக்க முடியாது அத்துடன் வவுனியா பொது இடங்களில் நடிகர்களுக்கு சிலை அமைப்பதற்கு சபையின் உறுப்பினர்களின் அனுமதி பெற்றுக்கொள்ளப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளார். இவ்வாறான இடங்களில் தமிழ் அறிஞர்கள், புலவர்களின் சிலையை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளமுடியும் என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே இவ்வாறு எம்.ஜி.ஆரின் சிலை அமைப்தாக செய்திகள் பரவியதும் நடிகர் விஜயின் ரசிகர்களும் தமது தலைவரின் சிலையை அமைப்பதற்குரிய நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் வாகனங்களின் நடமாட்டங்களை அவதானிக்கும் வகையில் இந்த வருட இறுதி முதல் வானலை அலைவரிசை அடையாளத்தை (The Radio-Frequency Identification – RFID) பயன்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் ஏ.எச்.கே.ஜெகத் சந்திரஶ்ரீ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
குறித்த முறையை கொண்டு வாகனங்களை நிறுத்தாமலேயே பொலிஸாருக்கு வாகனங்களை அடையாளம் காண முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் குற்றமிழைக்கும் வாகன சாரதிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வாய்ப்புக்கள் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்த வானலை அலைவரிசை கருவிகள் விரைவில் பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளன.
இந்த கருவிகள் ஏற்கனவே இந்தியா, துபாய், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அமரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்படுவதாகவும் மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அம்பலதொட்டை, உஸ்ஸன்கொட கடற்கரையில் பெருந்தொகையிலான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நிறைந்து காணப்படுவதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 3000 சுற்றலா பயணிகளின் பங்களிப்புடன் உஸ்ஸன்கொட கடற்கரை மற்றும் சுற்றியுள்ள காட்டுப் பகுதிகளில் சுற்றுலா முகாம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றுலா முகாம் 10 நாட்களுக்கு நடைபெறும். சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மற்றும் சுற்றுலா முகாம்களை ஏற்பாடு செய்யும் வெளிநாட்டு தனியார் நிறுவனங்களினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முகாமிற்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கான வசதி மற்றும் போக்குவரத்து சேவைகளுக்காக அந்த பிரதேசத்தில் பல வீடுகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகள் சுற்றுலா பயணிகளின் பயண வசதிகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த முகாம் எல்லைக்குள் இலங்கையர்கள் எருவரும் நுழைவதற்கு அனுமதி வழங்கப்படாது. தனிப்பட்ட பாதுகாப்பு சேவை ஒன்று முகாமை சுற்றி பாதுகாப்பு வழங்கியுள்ளது. எனினும் இம்முறையில் அந்த பகுதிகளில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
காட்டுப் பகுதி மற்றும் கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சத்தமாக இசைக்கருவிகளை இசைப்பதுடன். மதுபானம் மற்றும் ஆபாச செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரங்களிலும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் அந்தப் பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உஸ்ஸன்கொட கடற்கரையில் இவ்வாறான பாரிய அளவு சுற்றுலா பயணிகளின் செயற்பாடுகள் அந்த பகுதி மக்களுக்கு சற்று சிக்கலாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. எனினும் இந்த சுற்றுலா முகாம் காரணமாக இலங்கைக்கு பாரியளவு முதலீடு கிடைப்பதுடன் அந்த பகுதி மக்களுக்கு வருமானம் கிடைப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு பல்வேறு புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
விமானங்களுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு, ஓய்வறையில் சினிமா படங்களை பார்ப்பதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நிறுவனங்கள் இணைந்து அறிமுகம் செய்துள்ள புதிய Sky Light தொழில்நுட்பம் ஊடாக VR சினிமா அனுபவத்தை பயணிகளுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்மூலம் விசேட டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி Allo Sky மற்றும் Sky Kids மூலம் புதிய திரைப்படங்கள், 2D தொழில்நுட்பத்திலான நாடகங்கள், 3D மற்றும் 360 View தொழில்நுட்பம் ஊடாக சிறியவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான நிகழ்ச்சிகளை பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில் இந்த வசதி நீண்ட விமான பயணங்களை மேற்கொள்ளும் ஸ்ரீலங்கன் விமானங்களிலும் அறிமுகம் செய்ய ஸ்ரீலங்கன் விமான சேவை திட்டமிட்டுள்ளது.
HD சினிமா அனுபவத்தை ஆசியாவில் முதல் முறையாக ஸ்ரீலங்கன் விமான சேவை அறிமுகம் செய்து வைத்துள்ளமை விசேட அம்சமாகும்.
கொழும்பில் பாடசாலை மாணவன் ஒருவரின் விபரீத செயற்பாடு தொடர்பில் பெற்றோர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காதல் தொடர்பு காரணமாக பாடசாலை மாணவர் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பொரளை பேஸ்லைன் வீதியில் பிரதேசத்தை சேர்ந்த 17 வயதான யேஷான் பிரபாத் பெரேரா என்ற இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மகனின் மரணம் தொடர்பில் சாட்சியம் வழங்கிய தந்தை,
உயிரிழந்தவர் எனது மூத்த மகன். அவர் உயர்தரத்தில் கல்வி கற்கின்றார். கடந்த 6ஆம் திகதி நானும் மனைவியும் எனது மற்ற இரண்டு மகன்களும் வீட்டில் இருந்தோம். உயிரிழந்த மகன் மேல் மாடியில் இருந்தார். அவர் சற்று கோபமாக இருந்தமையினால் மனைவியிடம் மேலே சென்று பார்க்குமாறு கூறினேன்.
பின்னர் 8 மணியளவில் மகனை உணவருந்த அழைத்த போது உணவு வேண்டாம் என கூறிவிட்டு கடைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பியவுடன் மேல் மாடிக்கு சென்று விட்டார். மீண்டும் அவரது அறைக்கு சென்று பார்க்கும் போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற போதிலும் அவர் உயிரிழந்து விட்டார். மகனின் கையடக்க தொலைபேசிக்கு பல குறுந்தகவல் வந்திருந்தது. அதில் மாணவி ஒருவர் தனக்கு புற்றுநோய் இருப்பதாகவும் தான் இன்னும் 4 நாட்களில் உயிரிழந்து விடுவதாகவும், மகனையும் உயிரிழக்குமாறு கூறியுள்ளார்.
அதற்கு முன்னர் தான் தற்கொலை செய்து கொள்வதாக கூறிய மகன் கழுத்தை வெட்டி அந்த பெண்ணுக்கு புகைப்படம் ஒன்றையும் அனுப்பியிருந்தார். மகனின் காதலை நாங்கள் விரும்பவில்லை. மகன் இரகசியமாக தான் காதலித்தார். பின்னரே அவர் இவ்வாறு தூக்கில் தொங்கியுள்ளார்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் உயிரிழந்த இளைஞனின் காதலி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
நான் அவரை 4 மாதங்களாக காதலித்தேன். நாங்கள் கையடக்க தொலைபேசியில் தான் பேசினோம் அவர்களின் வீட்டவர்களை எங்களுக்கு தெரியும்.
எனக்கும் வாயிலும் மூக்கிலும் இரத்தம் வந்தது. நான் மருந்து எடுக்க செல்வதாக கூறிவிட்டு சென்றேன். எனக்கு வருத்தம் என அவருக்கு தெரியும். எனினும் எனது நோய் என்னவென்று இன்னமும் கண்டுபிடிக்கவில்லை.
எனினும் எனக்கும் எதுவும் ஆபத்தாகவிடும் என அச்சத்தில் அவர் இவ்வாறு செய்துள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.