வவுனியாவில் சுற்றுலா மையம் மற்றும் சிறுவர் பூங்கா திறந்துவைப்பு!!

வவுனியா தமிழ் தெற்கு பிரதேசசபையின் ஆளுகைக்கு உட்பட்ட கல்நாட்டினகுளம் பகுதியில் வடமாகாணசபையின் குறித்து ஒதுக்கப்பட்ட 8.41மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட சுற்றுலா மையம் மற்றும் சிறுவர் பூங்கா நேற்று (05.07.2018) காலை 10 மணியளவில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனினால் மக்கள் பாவனைக்கு திறந்து கையளிக்கப்பட்டுள்ளது.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச தவிசாளர் து.நடராஜசிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு சுற்றுலா மையத்தினையும் சிறுவர் பூங்காவினையும் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், ஜி.ரி.லிங்கநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகராதலிங்கம், சிவநாதன் கிஸோர், வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன், நகரசபை உறுப்பினர்கள், தமிழ் தெற்கு பிரதேசசபை உப தவிசாளர், செயலாளர், உறுப்பினர்கள், அப்பகுதி பொதுமக்கள், எனப்பலரும் கலந்துகொண்டனர்.

80 வயதான தந்தையை வீதியில் கைவிட்டுச் சென்ற மகன்!!

கதிர்காமம், கந்தசுரிந்துகம, ராஜமாவத்தை வீதியில் எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றுக்கு எதிரில் 80 வயதான முதியவரை அவரது மகன் கைவிட்டுச் சென்றுள்ளார்.

வயதான இந்த முதியவரை இன்று அதிகாலை 4 மணியளவில் அவரது மகன் குறித்த இடத்தில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளார்.

மகனுடன் முச்சக்கர வண்டியில் வந்த இந்த முதியவரை இறக்கி விட்ட அவரது மகன், தான் வரும் வரை அங்கு இருக்குமாறு கூறி சென்றதாக முதியவர் பிரதேசவாசிகளிடம் கண்ணீருடன் கூறியுள்ளார்.

இளமை காலத்தில் கமத்தொழில் செய்து வந்துள்ள இந்த முதியவருக்கு நான்கு ஆண் பிள்ளைகள் இருப்பதாகவும் விவசாயம் செய்து தாம் அவர்களை வளர்த்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சிந்திக்கும் திறன் குறைந்து காணப்படும் முதியவர் தனது மகன் திரும்பி வரும் வரை எரிபொருள் நிலையத்தில் காத்திருந்த போதிலும் சென்ற மகன் திரும்பவில்லை.

பிரதேசவாசிகள் முதியவர் குறித்து கதிர்காமம் வைத்தியசாலை மற்றும் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். கதிர்காமம் வைத்தியசாலை அதிகாரிகள், முதியவரை கதிர்காமம் முதியோர் இல்லத்தில் ஒப்படைத்துள்ளனர்.

கனடாவில் காணாமல் போன யாழ். இளைஞன் சடலமாக மீட்பு!!

கனடாவில் கடலில் காணாமல் போன யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் சடலமாக பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்.

கனடா, ஒன்டாரியோ ஏரிக்குள் விழுந்து காணாமல் போன 27 வயதான பார்த்தீபன் சுப்ரமணியம் என்ற இளைஞனின் சடலமே நேற்று மீட்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் ஒன்டாரியோ மாகாணத்தில் Bluffers Park அருகே கப்பலில் இருந்து கடலில் விழுந்த தமிழ் இளைஞன் காணாமல் போயிருந்த நிலையில் நேற்று அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பார்த்தீபன் தனது நண்பர்களுடன் கடலுக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் கடலில் தவறி விழுந்ததாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சுமார் ஒருமாத கால தீவிர தேடுதலின் பின்னர் அவரின் சடலத்தை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து பார்த்தீபனின் உறவினர்களுக்கு பொலிஸார் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.

அவரது இறுதிக்கிரிகைகள் எதிர்வரும் ஜுலை 8 ஆம் திகதி நடைபெறும் என குடும்பத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். கைதடியைப் பிறப்பிடமாக கொண்ட பார்த்தீபன் சுப்ரமணியம், தனது பத்து வயதில் கனடாவுக்கு சென்றுள்ளார்.

இசைத்துறையில் DJ கலைஞராக செயற்பட்ட பார்த்தீபன் சுப்ரமணியம் கனடாவில் அதிக தமிழர்களால் நன்கு அறியப்பட்ட ஒருவர் என அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவின் முதலாவது கின்னஸ் சாதனையாளரை நேரில் சென்று சந்தித்த பா.சத்தியலிங்கம்!!

கின்னஸ் சாதனை படைத்துள்ள வவுனியாவைச் சேர்ந்த பொறியியலாளர் கனகேஸ்வரன் கணேஸ்வரனுக்கு வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.சத்தியலிங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கணேஸ்வரனின் வீட்டுக்கு இன்று காலை நேரில் சென்று தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

வவுனியவைச் சேர்ந்த இளம்பொறியிலாளரான கனகேஸ்வரன் கணேஸ்வரன் உலகின் மிக நீளமான மின்சாரசுற்றை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பழைய மாணவனான இவர் மிருதங்க கலைஞர் கனகேஸ்வரன், வயலின் கலைஞர் சௌதாமணி தம்பதிகளின் புதல்வனாவார்.

மேலும், வவுனியா மாவட்டத்தின் முதலாவது கின்னஸ் சாதனையாளரை கௌரவித்தமையை பெருமையாக கருதுவதாக முன்னாள் மாகாண அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வறுமையிலும் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவர்கள்!!

கிளிநொச்சி கல்வி வலயத்தில் உள்ள கிராமத்து பாடசாலையான இராமநாதபுரம் கிழக்கு அ.த.க பாடசாலையின் மாணவர்கள் தேசிய மட்ட பளுத் தூக்குதல் போட்டியில் சாதனை படைத்துள்ளனர்.

கடந்த வாரம் தேசிய மட்ட பளுத் தூக்குதல் போட்டி திருகோணமலையில் இடம்பெற்றது. இதல் நாடளாவிய ரீதியிலிருந்து பல பாடசாலைகள் பங்குபற்றியிருந்தன.

இந்தப் போட்டியில் கிளிநொச்சி இராமநாதபுரம் கிழக்கு அ.த.க பாடசாலை மாணவர்களும் கலந்துகொண்டனர்.

கலந்து கொண்டவர்களில் இருபது வயது பெண்கள் பிரிவில் 63 கிலோ பிரிவில் றஜீபா புவனரஞ்சன் வெண்கலப் பதகத்தையும், பதினேழு வயது பெண்கள் 75 கிலோ பிரிவில் துர்க்கா சுரேந்திரன் வெண்கலப் பதகத்தையும், 17 வயது ஆண்கள் 50 கிலோ பிரிவில் மோகனதாஸ் பாவலன் நான்காம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை, பல்வேறு வசதிவாய்ப்புகள் அற்ற நிலையில் கல்வி செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் பாடசாலையிலிருந்து சென்ற தங்களின் பிள்ளைகளை சாதனையாளர்களாக மாற்றிய அதிபர், ஆசிரியர்களுக்கு பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்.

திருமணமான இரண்டே நாட்களில் பரிதாபமாக பலியான இளைஞன்!!

மாத்தறை – வெலிகமை ஹேன்வல பிரதேசத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வெலிகமை தப்பரதொட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதான இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞன் இரண்டு நாட்களுக்கு முன்னரே திருமணம் செய்து கொண்டுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற மற்றுமொரு நபர் படுகாயமடைந்த நிலையில் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து சம்பவம் குறித்து வெலிகமை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

முள்ளிவாய்க்காலில் வீட்டு முற்றத்தில் தாய் ஒருவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் அபாயகரமான வெடிகுண்டு ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முள்ளிவாய்கால் மேற்கு கிராமத்தில் வசிக்கும் தாய் ஒருவர் தனது வீட்டு முற்றத்தில் மரம் ஒன்று நடுவதற்காக கிடங்கு ஒன்றை தோண்டியுள்ளார். இதன்போது ஒரு பெரிய குண்டு மீட்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த மர்ம பொருள் அபாயகரமான வெடிகுண்டு என்று அறியாத அந்த தாய் குறித்த குண்டை எடுத்துச் சென்று வேலி ஓரத்தில் வைத்துவிட்டு அயலவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த மர்ம பொருள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று பகல் அங்கு சென்ற பொலிஸார் குறித்த மர்மப் பொருள் அபாயகரமான வெடிகுண்டு என்று உறுத்திப்படுத்தியுள்ளனர்.

மேலும் குறித்த வெடிகுண்டை அங்கிருந்து பாதுகாப்பாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

11 பேர் மர்ம மரண விவகாரம் : குடும்பத்தில் உயிரோடு இருக்கும் ஒரே பெண் பரபரப்புப் பேட்டி!!

டெல்லியில் 11 பேர் மர்மமாக இறந்த விடயத்தில் புதிய திருப்பமாக அந்த குடும்பத்தில் கடைசியாக உயிரோடு இருக்கும் பெண் ஒருவர் தன் குடும்பம் குறித்து பேட்டி அளித்துள்ளார்.

புராரி பகுதியில் இரு தினங்களுக்கு முன்னர் ஒரு வீட்டிலிருந்து 11 சடலங்கள் கைப்பற்றப்பட்டதோடு, பொலிசாருக்கு கடிதங்கள் மற்றும் டைரிகள் சிக்கியது.

அதில், எப்படி தற்கொலை செய்தால் மோட்சம் கிடைக்கும் என்று குறிப்புகள் உள்ளது. எதோ ஒரு மத சடங்கிற்காக இவர்கள் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதை வைத்து பொலிஸ் தீவிரமாக விசாரித்து வருகிறது.

இதில் நிர்மலா தேவி என்ற 77 வயது பெண்ணும் தற்கொலை செய்துள்ளார். இந்நிலையில் அவரின் மகள் சுஜாதா தற்போது பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

சுஜாதா மட்டுமே தற்போது அந்த குடும்பத்தில் உயிரோடு இருக்கும் பெண்ணாவார்.

அவர் கூறுகையில், என்னுடைய குடும்பம் தற்கொலை செய்ய கூடியது அல்ல. எங்கள் வீட்டில் யாருக்கும் அவ்வளவு மோசமான மூட நம்பிக்கை இல்லை.

ஆனால் யாரோ இவர்களை கொலை செய்து இருக்கிறார்கள். பொலிஸ் அவர்களை கைது செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

மர்ம மரணத்தில் 6 பேரின் உடல்கள் பரிசோதனை செய்யப்பட்டு, தற்போது பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகி உள்ளது. அதன்படி இவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று கூறியுள்ளனர். ஆனால் முழுமையாக பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகவில்லை.

இதனிடையில், இந்த குடும்பத்தில் இருந்த புராரியின் தந்தை சில வருடங்களுக்கு முன் மரணம் அடைந்துள்ளார். அவர் இவர்களின் கனவில் வந்து இப்படி தற்கொலை செய்ய சொன்னதாகவும் கூறப்படுகிறது.

சிறுமியாக இருக்கும் போதே பாலியல் துன்புறுத்தல் : நவீன் குறித்து திவ்யா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!

சிறுமியாக இருக்கும் போது நவீன் வீட்டுக்கு சென்ற போது அவர் தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தார் என திவ்யலட்சுமி கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான நவீன் தன்னை திருமணம் செய்துவிட்டு பின்னர் தன்னை ஏமாற்றியதாக திவ்யா என்ற பெண் புகார் கூறினார். மேலும் கிருஷ்ணகுமாரி என்ற பெண்ணுடன் அவர் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் திவ்யாவை தான் திருமணமே செய்யவில்லை என நவீன் மறுப்பு தெரிவித்தார்.

இந்நிலையில் திவ்யா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், எனக்கு நவீனை கடந்த 2007-லிருந்தே தெரியும். அப்போது நவீனின் அம்மா என் அம்மாவிடம் கடன் வாங்கிய நிலையில் அவரால் பணத்தை திரும்பி தரமுடியவில்லை.

அதற்கு பதிலாக நவீன் தங்கை எனக்கு டியூசன் எடுத்தார், அதற்காக அவர் வீட்டுக்கு தினமும் செல்வேன். அப்படி நவீன் வீட்டுக்கு செல்லும் போது அவருடன் நல்ல நட்பு ஏற்பட்டது.

அப்போது 2008-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒருநாள் நவீன் வீட்டுக்கு சென்றேன், அப்போது நவீனை தவிர வீட்டில் யாருமில்லை.

அந்த சமயத்தில் நவீன் எனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தார், ஆனால் அவர் மீது எனக்கு காதல் இருந்ததால் அதை நான் தடுக்கவில்லை.

மேலும், என்னை நவீன் திருமணம் செய்து கொள்வார் என நினைத்தேன், ஆனால் என்னை அவர் வெறுக்க ஆரம்பித்தார்.
பின்னர் எப்படியோ என்னை பதிவு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்துக்கு முன்னர் பல சமயம் அவருக்கு நான் பண உதவி செய்துள்ளேன், அவர் தங்கை திருமணத்துக்கு கூட ஒன்றரை லட்சத்தை என் அம்மா கொடுத்தார். எங்களிடம் நவீன் பணம் கேட்டு அழுததால் கொடுத்தோம்.

இந்நிலையில் கிருஷ்ணகுமாரியுடன் தொடர்ந்து டப்ஸ்மேஸ் செய்ய நவீன் ஆரம்பித்தார்.

ஏன் அவருடன் இவ்வளவு நெருக்கம் காட்டுகிறீர்கள் என நான் கேள்வி கேட்ட போது அவரை தான் நான் திருமணம் செய்யவுள்ளேன் என கூறி அதிர வைத்தார்.

அதே போல கிருஷ்ணகுமாரி என்னிடம் மோசமாக பேசுவதை வழக்கமாக கொண்டார். அவரை போல மோசமான பெண்ணை பார்த்ததில்லை.

என் பெயரை கெடுக்கும் வகையில் என் புகைப்படங்களை மார்பிங் செய்து நவீன் வெளியிட்டுள்ளார்.

இனியும் இது போல தொடர்ந்தால் நான் சாவதை தவிர வேறு வழியில்லை என அழுது கொண்டே கூறியுள்ளார்.

11 பேர் தற்கொலை சம்பவத்தில் 10 ஆண்டுகளுக்கு முன் இறந்தவருக்கு தொடர்பு? வெளியான அதிர்ச்சித் தகவல்!!

டெல்லி புகாரி அருகே நடைபெற்ற தற்கொலை சம்பவம், 10 ஆண்டுகளுக்கு முன் இறந்த தந்தை நாராயணன் உத்தரவின் பேரில் அவரது மகன் லலித் தான் செயல்படுத்தியுள்ளதாக விசாரணை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி பிகாரி அருகே சாண்ட் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், கடந்த 1-ம் தேதியன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் மர்மமான முறையில் இறந்து போயினர்.

அனைவரையும் பெரும் குழப்பத்தில் ஆழ்த்திய இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினரும் தொடர்ந்து பல்வேறு கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது, வீட்டிலிருந்த குறிப்பேடு ஒன்றினை காவல்துறையினர் கண்டறிந்தனர். அதன்பேரிலே தற்போது தீவிரமான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மர்மமான முறையில் நடைபெற்றள்ள இந்த சம்பவத்தில், நாராயணனின் மகன் லலித் பாட்டியாவுக்கு அதிக தொடர்பு இருப்பதாகவே போலீசார் கருதுகின்றனர்.

10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தந்தையை போலவே லலித் அடிக்கடி வீட்டில் நடந்துகொள்வாராம். அதேசமயம் தந்தையின் குரலிலே அடிக்கடி பேசியும் வந்துள்ளார்.

இதனால் தந்தை தான், தன் மூலமாக குடும்பத்தை வழிநடத்தி வருகிறார் என லலித் நம்பியுள்ளார். அதனையே குடும்பத்தாரும் நம்பியதால், ஏற்பட்ட விபரிதமே 11 பேரின் தற்கொலை சம்பவம்.

இறப்பதற்கு முன் 20 சப்பாத்திகளை குடும்பத்தார் ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளனர். ஆனால் தொட்டுக்கொள்ள எதையும் வாங்கவில்லை.

அந்த சப்பாத்திகளை அனைவரும் தாய் மற்றும் நாராயணன் கைகளால் மட்டுமே உண்ணவேண்டும் எனவும் அந்த குறிப்பில் எழுதப்பட்டிருந்தது.

இதுகுறித்து சப்பாத்திகளை டெலிவரி செய்யவந்த பையனுடன் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ளும்பொழுது, அவர்கள் சப்பாத்திகளை வாங்கும்பொழுது இறப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை என கூறியுள்ளார்.

முன்னதாக காவல்துறையால் கைப்பற்றப்பட்ட குறிப்பேட்டில், “தற்கொலை செய்துகொண்டால் தந்தை காப்பாற்றுவார்” என குறிப்பிடப்பட்டிருந்துள்ளது.

மேலும், “கடைசி நேரத்தில் உங்கள் கடைசி ஆசையை சொல்லும்போது மேகங்களில் வெடிப்பு ஏற்படும், பூமி நகரும் என அனைவரும் சப்தமாக கத்தினால் நான் வருவேன், வந்து உங்களை காப்பேன்” என்று தந்தை சொல்வதை போல் லலித் எழுதியிருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மர்மமான முறையில் காணாமல் போன கேரள மாணவி : 100 நாட்கள் கழித்து சிசிடிவில் சிக்கிய காட்சி!!

கேரளா மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள வெச்சூசிரா பகுதியில் காணாமல் போன கல்லூரி மாணவி ஜெஸ்னா குறித்த சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளன.

அவரை தேடும் பணி 100 நாட்கள் கடந்துள்ள நிலையில், காவல்துறையினருக்கு ஒரு புதிய தடயம் கிடைத்துள்ளது.

அதாவது முன்டக்கயம் பகுதியில் கிடைத்த ஒரு சிசிடிவி கமெராவின் காட்சியில் ஜெஸ்னா பதிவாகியுள்ளார். அதில் கையில் ஒரு பையுடனும், தோளில் ஒரு பையுடனும் ஜெஸ்னா ஒரு கடைக்குள் செல்கிறார். இந்தக் காட்சிகளைக்கொண்டு காவல்துறையினர் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

அதன்பின்னர் 6 நிமிடங்களுக்கு பின் ஜெஸ்னாவின் ஆண் நண்பர் ஒருவர் அந்தக் கடைக்குள் செல்கிறார். ஏற்கனவே காவல்துறையினரின் விசாரணையில், ஜெஸ்னா காணாமல் போன கடைசி நேரங்களில் இந்த ஆண் நண்பருக்கு அதிக போன் கால் செய்ததும், மெசேஜ் அனுப்பியதும் தெரியவந்துள்ளது.

ஆனால் அந்தக் கடைக்குள் இருந்து அவர்கள் இருவரும் வெளியே வரும் காட்சிகள் இல்லை. இதனால் அந்த நபர் மீது சந்தேகம் கொண்டு, காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

11 பேர் இதற்காகத் தான் தற்கொலை செய்து கொண்டனர் : சிசிடிவி காட்சிகள் மூலம் வெளியான உண்மை!!

 

இந்தியாவில் மர்மமாக இறந்து கிடந்த 11 பேரும் மூடநம்பிக்கையின் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதியாகியுள்ளது.

டெல்லி புராரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் 11 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது. எப்போதும் போல் இது ஒரு தற்கொலையாகத் தான் இருக்கும் என்று பொலிசார் அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணை ஆரம்பிக்கப்பட்டவுடன், சில நம்பமுடியாத தகவல்கள் எல்லாம் வெளிவந்தன. ஆம் இவர்கள் மூடநம்பிக்கையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும், அதற்காக வீட்டில் இருந்து ஆத்மா வெளியேற 11 குழாய்களை வீட்டிற்கு வெளியில் வரும் படி செட் செய்துள்ளார்கள் எனவும் கூறப்பட்டது.

இதற்கிடையில் அந்த வீட்டில் நிறைய கடிதங்கள், டைரிகள் கைப்பற்றப்பட்டது.

அதில் எப்படி தற்கொலை செய்தால் மோட்சம் கிடைக்கும், எந்த நேரத்தில் தற்கொலை செய்ய வேண்டும் என்றெல்லாம் எழுதப்பட்டிருந்தது.

இதனால் இது கொலையா, தற்கொலையா என்று தெரியாமல் பொலிசார் குழம்பி போய் நின்றனர். மேலும் இவர்களின் உடற்கு கூறு ஆய்விலும் கொலை செய்யப்பட்டதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை.

மூடநம்பிக்கையின் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் பொலிசாருக்கு நிலவியதால், சாமியார்கள் யாரும் தலையிட்டிருக்கிறார்களா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

ஆனால் இந்த சம்பவத்தில் சாமியார்களின் தலையீடு இல்லை என்று பொலிசார் உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்து இறந்தவர்களின் உறவினர்கள் 20 பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஆனால் அது குறித்து எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை. இறந்த 11 பேர் விவகாரத்தில் shared psychosis என்ற நோயின் தாக்கம் இருக்குமா என்ற சந்தேகமும் எழுந்தது.

இந்நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரும் மூட நம்பிக்கையால் தற்கொலை செய்தது பக்கத்துவீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சி மூலம் உறுதியாகியுள்ளது.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்க்கையில் இதில் பிறரது குற்றம் எதுவும் இல்லை என்பது தெரிகிறது எனவும் பொலிசார் கூறியுள்ளனர்.

சிசிடிவி காட்சியின்படி 10 மணியளவில் அந்த குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் 5 நாற்காலிகளை எடுத்து வந்துள்ளார்,

சிறுவர்கள் கயிறு எடுத்து வந்துள்ளனர். அவர்கள் சொர்க்கத்தை அடைய வேண்டும் என்ற மூடநம்பிக்கையிலே இதனை செய்துள்ளனர் என்பதை காட்சிகள் உறுதிபடுத்துகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுக்கை அறையில் கருகிய மனைவி, மகள் : சிலிண்டரை வெடிக்க செய்து கணவரே கொன்றாரா?

தமிழ்நாட்டில் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பரங்குன்றத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. பிஸ்கட் மற்றும் மிட்டாய் வியாபாரம் செய்து வந்த இவருக்கு சமீபகாலமாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் சுமையால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் குடிப்பழக்கமும் இருந்துள்ளதால், குடும்பத்தில் தகராறும் அடிக்கடி ஏற்பட்டு வந்துள்ளது

எல்லா வகையிலும் பிரச்சனைகள் சேர்ந்து கடும் மன உளைச்சலுக்கு ஆளான ராமமூர்த்தி குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார்.

நேற்றிரவு 2 மணியளவில், தனது மனைவி காஞ்சனா, 6 வயது மகள் அக்‌ஷயா தூங்கி கொண்டிருந்த அறையில் சிலிண்டரை கொண்டு வந்து வைத்து, அதனை திறந்துவிட்டதுடன் தீயையும் பற்றவைத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் பக்கத்திலிருந்து மற்றொரு சிலிண்டரும் வெடித்து சிதறியது. இதில், தூங்கிக் கொண்டிருந்த ராமமூர்த்தியின் மனைவி, காஞ்சாவும் அவர்களது 6 வயது பெண் அட்ஷயாவும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

ராமமூர்த்தி படுகாயமடைந்து உயிருக்கு போராடினார். சத்தத்தை கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே ராமமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உத்தரவு பிறப்பிக்க 1 மணியளவில் நிகழ்ந்த மரணம் : 11 பேர் மரணத்தில் இதுவரை நடந்த முழு விவரங்கள் இதோ!!

டெல்லியில் புராரி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

டெல்லியின் வடக்குப்பகுதியில் சாந்த் நகர் புராரி பகுதியைச் சேர்ந்தவர் பவனேஷ். அவரின் சகோதரர் லலித் பாட்டியா. இருவரின் குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரும் நேற்று வீட்டில் கைகள், கால்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

தற்கொலை செய்துகொண்டதில் வீட்டில் வயது முதிர்ந்த பெண் நாராயண் தேவி(வயது77) தரையில் படுத்தவாறு இறந்திருந்தார். மற்ற 10 பேரும் தூக்கில் தொங்கி இருந்தனர். இதில் நாராயண் தேவியின் இரு மகன்கள் பவனேஷ் (வயது 50), லலித் பாட்டியா (45), மகள் பிரதிபா(வயது 57). மற்றொரு மகள் இங்கு இல்லை.

மூடப்பழக்கவழக்கங்களுக்கு அடிமையான குடும்பம்
வினோதமான மூடப்பழக்கங்களைக் கடைப்பிடித்த இந்தக் குடும்பத்தினர் கடவுளைத் தரிசிக்கப் போகிறோம் என்று எழுதிவிட்டு, தற்கொலை செய்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

அவர்கள் எழுதிய டைரியில், உடல் தற்காலிகமானது, கண்களையும், வாயையும் மூடிக்கொண்டால் பயத்தில் இருந்து விடுபடலாம் என்று எழுதி வைத்துள்ளனர்.

முக்தி அடைவது குறித்து இறந்து போன தனது தந்தை கூறியதாக லலித் தனது டைரியில் எழுதி வைத்துள்ளார். தூக்கில் தொங்கினால் தங்களை லலித்தின் தந்தையின் ஆன்மா வந்து காப்பாற்றும் என்று அவர்கள் நம்பியுள்ளனர்.

ஒரு டைரியின் கடைசி வாக்கியத்தில் கூறப்பட்டிருப்பதாவது, ஒரு கப்பில் தண்ணீர் வைக்கவும், அதன் நிறம் மாறியதும் நான் வந்து உங்களை காப்பாற்றுவேன் என்று இருந்துள்ளளது. இவை அனைத்தும் பொலிசாருக்கு கிடைத்த ஆதாரங்கள்.

முக்தி அடைவதே நோக்கம்! காட்டிக்கொடுத்த சிசிடிவி
சிசிடிவி பதிவுகள் மூலம் வெளியாட்கள் யாரும் வீட்டிற்குள் செல்லவில்லை என்பது தெரிய வந்துள்ளது

சிசிடிவி பதிவுகளில் நாராயண் தேவி குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண், 12 வயது த்ருவ், 15 வயது ஷிவம் ஆகியோர் பர்னிச்சர் கடைக்கு சென்று வயர்கள், ஸ்டூல்கள் வாங்கி வந்தது தெரிய வந்துள்ளது. அவர்கள் அனைவரும் திட்டமிட்டு தான் இந்த செயலை செய்துள்ளனர்.

அனைவரும் இரவு 1 மணி அளவில் இறந்துள்ளனர். நாராயண் தேவியின் இளைய மகன் லலித் சுந்தாவத்(45) உத்தரவுகள் பிறப்பிக்க அதை குடும்பத்தார் பின்பற்றியது சிசிடிவி பதிவில் தெரிய வந்துள்ளது

5 ஸ்டூல்களை வைத்து அவர்கள் தூக்கு போட்டுள்ளனர். த்ருவ் மற்றும் ஷிவம் ஆகிய சிறுவர்களை அவர்களின் பெற்றோரே கைகளை கட்டி வயரை மாட்டிவிட்டுள்ளனர்.

லலித்தின் மனைவி டினாவின் கைகளும், கண்களும் கட்டப்படவில்லை. அவர் தான் மற்றவர்களின் கைகளை பின்புறமாக கட்டி, கண்களை துணியால் கட்டியிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. நாராயண் தேவி மட்டும் தரையில் பிணமாகக் கிடந்தார்.

இரவு 10 மணிக்கு மூத்த மருமகள் ஸ்டூல்களை கொண்டு வந்துள்ளார். இரவு 10.15 மணிக்கு த்ருவ், ஷிவம் ஆகயோர் தூக்குப் போடத் தேவையான வயர்களை கொண்டு வந்துள்ளனர். 10.39 மணிக்கு அந்த குடும்பம் ஆர்டர் செய்த 20 சப்பாதி டோர் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. 10.57 மணிக்கு நாராயண் தேவியின் மூத்த மகன் புவனேஷ் நாயை வெளியே அழைத்துச் சென்றுள்ளார்.

11.04 மணிக்கு புவனேஷும், நாயும் வீட்டிற்குள் சென்றுள்ளனர். ஜூலை மாதம் 1ம் தேதி காலை 5.56 மணிக்கு பால் கார்டன்களை வைத்துவிட்டு டிரக் சென்றுள்ளது. 7.14 மணிக்கு அக்கம் பக்கத்தார் வந்து பார்த்தபோது அனைவரும் இறந்து கிடந்தனர். இது தான் சிசிடிவி பதிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

காதல் கணவனை ஆணவக்கொலைக்கு பலிகொடுத்த கேரள மாணவிக்கு மனநலம் பாதிப்பு?

கேரளாவில் ஆணவக்கொலைக்கு காதல் கணவனை பறிகொடுத்த நீனுவின் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதா கூறி அவளைஇழிவுபடுத்த முயல்வதாக இறந்துபோன கெவினின் தந்தை ஜோசப் கூறியுள்ளார்.

நீனு என்கிற மாற்று சமூகத்தைச்சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட கெவின் ஜோசப் என்ற இளைஞர் கேரள மாநிலத்தில் கடந்த மாதம் ஆணவக் கொலை செய்யப்பட்டார்.

கணவர் கொலை செய்யப்பட்ட பின், வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த நீனு வேதனையிலிருந்து மீண்டு கல்லூரி செல்லத் தொடங்கியுள்ளார்.

வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த அவருக்கு, கெவின் ஜோசப்பின் பெற்றோர் ஆறுதல் அளித்து, படிப்பைத் தொடங்க உதவியுள்ளனர்.

கெவினை கொலை செய்த குற்றத்திற்காக நீனுவின் தந்தை மற்றும் அண்ணனை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் தனது கணவருக்கு ஜாமீன் கோரி நீனுவின் தாய் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

மேலும், நீனுவுக்கு மனநலம் பாதித்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இவரின் இந்த கருத்தை நீனுவின் மாமனார் மறுத்துள்ளார். அவளை எங்கள் மகள் போல பார்த்து வருகிறோம், அவள் நன்றாக படிக்கிறாள். அவளுக்கு மனநலம் பாதித்துவிட்டது என்று அவரது தாயார் கூறுவது அவரை இழிவுபடுத்துவதாக உள்ளது என கூறியுள்ளார்.

கேரள அரசு கெவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது. நீனுவின் படிப்புச் செலவையும் அரசே ஏற்றுள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வெழுத வேண்டுமென்பது நீனுவின் லட்சியம்.

8 வயதில் 300 மேடைகளில் சொற்பொழிவாற்றி பிரம்மிக்க வைக்கும் சிறுமி!!

தமிழகத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர், சுமார் 300 மேடைகளில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

காரைக்குடியைச் சேர்ந்த சிறுமி பூஜிதா(8). 4ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் இவர், இந்த வயதிலேயே தமிழகத்தில் பல மேடைகளில் தனது பேச்சாற்றலால் அனைவரையும் ஆச்சரியபட வைத்துள்ளார்.

இவர் 1ஆம் வகுப்பு படிக்கும்போதே இவரது நினைவாற்றலைக் கண்டு வியந்த தனியார் பள்ளி ஒன்று, இவரைத் தத்தெடுத்துக்கொண்டது. அந்தப் பள்ளியில் பூஜிதா எந்தக் கட்டணமும் இன்றி 12ஆம் வகுப்பு வரை படிக்கலாம் என்று பள்ளி நிர்வாகம் அறிவித்தது.

LKG படிக்கும்போது முதன் முதலில் மேடையேறிய பூஜிதா, இதுவரை சுமார் 300 மேடைகளில் பேசியுள்ளார். அவற்றில் ஆன்மிக சொற்பொழிவு, இலக்கியக் கூடங்கள், முற்போக்கு மேடைகள் ஆகியவை அடங்கும்.

இவர் மைக்கைப் பிடித்து பேசினால், பார்ப்பவர்கள் மெய்மறந்து போவார்கள் என்று கூறுகிறார்கள். தனது பேச்சாற்றலினால் பூஜிதா 8 வயதிலேயே ‘இலக்கியச்செல்வி’, ‘முத்தமிழ்ச்செல்வி’, ‘தமிழமுது’, ‘மக்கள் பேச்சாளர்’ என பல பட்டங்களை பெற்றுள்ளார்.

பூஜிதாவின் தந்தை கணேஷ் தனது மகள் குறித்து கூறுகையில், ‘அப்போது பாப்பா பேச ஆரம்பித்து கொஞ்ச நாள் தான் ஆகியிருந்தது. தொலைக்காட்சியில் எந்தப் பாட்டைக் கேட்டாலும், வசனத்தைக் கேட்டாலும் அப்படியே திருப்பி பாடுவாள், பேசுவாள்.

நமக்கு கூட சில நேரத்தில் வரிகள் மறந்துவிடும். ஆனால், அவள் வார்த்தைகள் மாறிடாமல் மிகச் சரியாக பேசுவாள். என் மனைவி இளவரசிதான் இதனை முதலில் கவனித்தார்கள். அதன்பின்னர், பூஜிதாவின் நினைவாற்றலை சரியாக பயன்படுத்த முடிவு செய்தோம்.

அவளுக்கு திருக்குறளை முதலில் சொல்லிக் கொடுத்தோம். தனது 3வது வயதில் மேடையில் திருக்குறளை ஒப்புவித்தாள். அதன்பின் திருப்பாவை, அபிராமி அந்தாதி சொல்லி கொடுத்தோம். பெரிய பிள்ளைகள் கலந்துகொண்ட மேடையில் 20 பாடல்களை சரியாக கூறி முதல் பரிசு பெற்றாள்.

ஆன்மீகம் மட்டுமல்லாமல், சுதந்திரப் போராட்ட தியாகிகள் பற்றியும், சமூகப் பிரச்சனைகள் குறித்தும் பல மேடைகளில் பேசியிருக்கிறாள். மாறுவேடப்போட்டிகளிலும் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றிருக்கிறாள்.

என் மனைவியுடன் இணைந்து யோகா, தியானம் எல்லாம் செய்வாள். வீட்டில் சுட்டிவிகடன், சிறுவர் மலர் போன்ற புத்தகங்களை படிப்பாள். பூஜிதாவின் பிறந்தநாளுக்கு பிறகு அவளது வாழ்க்கையே அர்த்தமுள்ளதாக மாறிவிட்டது’ என தெரிவித்துள்ளார்.

மேலும், பூஜிதா கூறுகையில் ‘என் அப்பா, அம்மா தான் எனக்கு எல்லாம் சொல்லி கொடுத்தார்கள். எனக்கு பேசுவது ரொம்ப பிடிக்கும். என்ன சொல்லிக் கொடுத்தாலும் அப்படியே கேட்டுவிட்டு பேசிவிடுவேன்.

எனக்கு அப்துல்கலாமை ரொம்ப பிடிக்கும். பெரிய Scientist ஆக வேண்டும். அதுதான் என்னுடைய லட்சியம்’ என தனது மழலைக் குரலில் தெரிவித்துள்ளார்.