நான்கு வயதுச் சிறுவன் உயிரிழப்பு : சோகத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம்!!

கல்முனை – பாண்டிருப்பில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நான்கு வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாண்டிருப்பு, திருவள்ளுவர் வீதியை சேர்ந்த சசிகரன் ஜெனிதாவின் நான்கு வயது மகன் கபிஸ்கரனே நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

குறித்த குடும்பம் கடந்த சில காலமாக பெரிய நீலாவணையில் வாடகைக்கு வசித்து வந்த நிலையிலேயே சிறுவன் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளான்.

இதனைத் தொடர்ந்து சிறுவன் கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கபட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த நான்கு வயது சிறுவனின் பரிதாப மரணம் அப்பகுதியில் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் 45 ஆயிரம் பாலியல் தொழிலாளிகள்!!

நாடு முழுவதும் 45 ஆயிரம் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக குருணாகல் வைத்தியசாலையின் எயிட்ஸ் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவின் சிறப்பு மருத்துவ நிபுணர் எச்.ஏ.சி.டப்ளியூ.ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த பெண்கள் தினமும் மூன்று இலட்சம் ஆண்களுக்கு தமது சேவைகளை வழங்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச எயிட்ஸ் நோய் தினத்தை முன்னிட்டு குருணாகல் பௌத்த இளைஞர் சங்க மண்டபத்தில் நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கையில் தற்போது சுமார் 25 ஆயிரம் ஓரினச் சேர்கையாளர்கள் இருப்பதாகவும் மருத்துவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதுவரை 2 ஆயிரத்து 600 எயிட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்போது பாலியல் சார்ந்த நோய்கள் தொற்றுக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானோர் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் பிள்ளைகள் : யாழில் விரக்தி அடைந்த தந்தை தற்கொலை!!

யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பருத்தித்துறை திக்கத்தை சேர்ந்த 59 வயதான சந்திரசேகரம்பிள்ளை இராசலிங்கம் என்பவர், தனக்குதானே தீ வைத்து தற்கொலை செய்துள்ளார்.

தீக்காயங்களுக்கு உள்ளான அவர் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர், மனைவியை இழந்து தனிமையில் வாழ்ந்து வந்ததாகவும், அவரின் பிள்ளைகள் வெளிநாட்டில் வசிப்பதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பெட்ரோல், டீசலுக்குப் பதில் பியரைப் பயன்படுத்தினாலும் கார் ஓடும்!!

பெட்ரோல் மற்றும் டீசலுக்கு பதில் கார்களுக்கு பியரைப் பயன்படுத்தும் ஆராய்ச்சி வெற்றிகரமாக முடிந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகளவில் மதுபானங்களை வைத்து விஞ்ஞானிகள் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வருகின்றனர்.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் டீசல் மற்றும் பெட்ரோலுக்கு மாற்றாக புதிய எரிபொருளைக் கண்டுபிடிக்கும் பணியில் இங்கிலாந்து விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தனர்.

மதுவில் இருக்கும் எத்தனாலை பியூட்டனாலாக மாற்றினால் அதை எரிபொருளாக பயன்படுத்த முடியும். எனவே, மது வகைகளில் நிறைய சோதனைகள் நடத்தி பிரிக்கப்பட்டது. ஆனால், அவர்களது முயற்சி தோல்வியில் முடிந்தது.

மது வகையில் இருக்கும் எத்தனாலை பியூட்டனாலாக மாற்ற முடியவில்லை. அப்படி மாற்றினாலும் அது வாகனத்திற்கு அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது.

எனவே, பியரில் இச்சோதனையை செய்தனர். அது வெற்றிகரமாக முடிந்துள்ளது.

அதில் இருந்து எடுக்கப்பட்ட எரிபொருள் வாகனத்தை சரியாக இயக்கியது. அதிக மைலேஜும் கொடுத்தது.

எனவே பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக பியர் மாறும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், எத்தனாலை, பியூட்டனலாக மாற்றும் இந்த வினை செயல் அதிகக்காலம் எடுத்துக்கொள்வதால், தற்போது இந்த கண்டுபிடிப்பை பயன்பாட்டிற்குக் கொண்டுவர முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த சிக்கலும் சரி செய்யப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்தும் மீட்டரின்றி பயணிக்கும் முச்சக்கரவண்டிகள்!!

கடந்த ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில், பயணிகள் மற்றும் பொருட்களை ஏற்றிச்செல்லும் முச்சக்கரவண்டிகளுக்கு மீட்டர் பொருத்தப்படுவதைக் கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டது.

எனினும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் முச்சக்கரவண்டிகள் மீட்டர் பொருத்தப்படாமலே சேவையில் ஈடுபடுகின்றன.

செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில், பயண நிறைவின் போது பயணிகள் கட்டணம் செலுத்திய பின்னர், பயணிகளின் விருப்பத்திற்கு அமைய பற்றுச்சீட்டு வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பயணித்த தூரம், வாகனப் பதிவு இலக்கம், அறவிடப்பட்ட தொகை மற்றும் பயணத் திகதி என்பன பற்றுச்சீட்டில் குறிப்பிடப்பட்டிருத்தல் அவசியமாகும்.

மேலும், முச்சக்கரவண்டி சாரதியின் இருக்கைக்கு பின்புறத்தில் பயணிகளுக்கு தௌிவாகத் தெரியக்கூடிய வகையில், வாகனப் பதிவு இலக்கம், சாரதியின் பெயர், நிழற்படம் என்பன காட்சிப்படுத்தப்படல் வேண்டும்.

முச்சக்கரவண்டி சாரதியாக சேவையாற்றும் அனைத்து சந்தர்ப்பங்களிலும், குறுகிய காலத்திற்குள் விரைவாக சென்றடையக் கூடிய வீதியூடாக பயணிகள் செல்லக்கூடிய இடங்களுக்கு அவர்களை அழைத்துச்செல்ல வேண்டும் எனவும் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு முச்சக்கரவண்டியிலும் அதன் வலது பக்கத்தினூடாக பயணிகள் வண்டியில் ஏறுவதற்கோ, இறங்குவதற்கோ இடமளிக்கக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அமுல்படுத்தப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்பது கேள்விக்குறியே?

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பயணிகள் மற்றும் பொருட்களை ஏற்றிச்செல்லும் முச்சக்கரவண்டிகளுக்கு இதுவரையில் மீட்டர் பொருத்தப்படாதுள்ளது.

125,000 யூரோக்கு ஏலத்தில் விடப்பட்ட முழுக் கிராமம்!!

 

கிழக்கு ஜேர்மனியில் உள்ள ஆல்வின் என்ற முழு கிராமமே 125,000 யூரோக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

இக்கிராமத்தில் பல கட்டிடங்கள் உள்ள நிலையில் வயதான 20 நபர்கள் மட்டுமே வசித்து வருகின்றனர்.

கடந்த ஞாயிறன்று கிராமத்தின் நுழைவாயிலில் முழு கிராமத்தையே 125,000 யூரோக்களுக்கு ஏலத்தில் விடுவதாக விளம்பர பலகை வைக்கப்பட்டிருந்தது.

இரண்டாம் உலகப்போரின் போது இக்கிராமத்தை சுற்றியுள்ள இடங்களில் இளைஞர்களுக்கு ஹிட்லர் பயிற்சி அளித்தாராம்.

1960ஆம் ஆண்டுகளில் ஜேர்மனி ஒன்றாக இணைந்தபோது 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருந்ததாகவும் 1991ஆம் ஆண்டு Coal Briquette Plant மூடப்பட்டபோது பலரும் வேலைக்காக கிராமத்தை காலிசெய்ததாகவும் Andreas Claus என்ற மேயர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கிராமத்தை காலி செய்துவிட்டு மேற்கு ஜேர்மனி நோக்கி சென்ற இளைஞர்கள் மீண்டும் திரும்பிவரவில்லை என 1945ஆம் ஆண்டில் இருந்து வசித்து வரும் Peter Kroll என்பவர் தெரிவித்துள்ளார்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை : ஒப்புக்கொண்டார் பிரபல இந்திய விளையாட்டு வீரர்!!

அமெரிக்காவில் 12 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்ததாக இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த பனிச்சறுக்கு விளையாட்டு வீரர் ஒருவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டு உள்ளார்.

அமெரிக்காவில் நியூயோர்க் மாகாணம், சரனாக்லேக் என்ற கிராமத்தில் நடைபெற்ற உலக பனி ஷூ விளையாட்டு போட்டியில் கலந்துகொள்வதற்காக இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர் தன்வீர் உசேன் கடந்த பெப்ரவரி மாதம் சென்றார்.

இந்த நிலையில் அங்கு அவர் கடந்த பெப்ரவரி மாதம் 27ம் திகதி 12 வயது சிறுமி ஒருவருக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக அந்த சிறுமியின் பெற்றோர் பொலிசில் புகார் செய்தனர். அதன்பேரில் அவர் மார்ச் முதலாம் திகதி அவர் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது எசெக்ஸ் கவுண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின் போது அவர் தன் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் தொல்லை குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

இதுபற்றி அந்த நீதிமன்றத்தின் அரசு தரப்பு துணை வழக்கறிஞர் கிறிஸ்டி ஸ்பிராக் விடுத்துள்ள அறிக்கையில், “சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான குற்றச்சாட்டை தன்வீர் உசேன் ஒப்புக்கொண்டு விட்டார். அதை பிரமாண வாக்குமூலமாக அளித்துள்ளார்” என கூறினார். அவரது விசா கடந்த ஆகஸ்டு மாதமே முடிந்துவிட்டது.

அவரது தாயார் உடல் நலக்குறைவால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில், அவரது வருகையை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், அவரது சகோதரியின் திருமணமும் ஒத்தி போடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அவர் நீதிமன்றத்தில் செய்துகொண்ட குற்ற உடன்படிக்கையின் படி தண்டிக்கப்படாமல் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என தகவல்கள் கூறுகின்றன. எனினும் அதற்கு சிறிது காலம் ஆகும் என தெரியவந்துள்ளது.

கூலித்தொழிலாளி உயிருடன் எரிப்பு!!(வீடியோ)

ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம் அனைவரையும் உறைய வைக்கிறது.

அம்மாநிலத்தில் கூலி வேலை செய்யும் முஸ்லிம் தொழிலாளி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரை அப்பகுதியைச் சேர்ந்தவர் கொடூரமான ஆயுதத்தால் தாக்கினார். படுகாயமடைந்த அவர் உயிருக்காக போராடி கொண்டிருக்கிறார். அவர் மீது எரிபொருளை ஊற்றி அடித்து உயிருடன் எரித்தனர். அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கொலை குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவிவருகிறது. அதன் அடிப்படையில் ஷாபு லால் என்பவரை பொலிஸார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் குலாப்சந்த் கட்டாரியா கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த வழக்கானது சிறப்பு விசாரணை குழுவிற்கு மாற்றப்படும் என அவர் உறுதியளித்தார்.

கடமைக்கு வராத ரயில்வே ஊழியர்களுக்கு சிக்கல்!!

கடமைகளுக்கு சமூகமளிக்காத ரயில்வே ஊழியர்களின் பதவி வெற்றிடமாகவுள்ளதாக, கருதப்படும் என, அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.

சில கோரிக்கைகளை முன்வைத்து கடந்த புதன்கிழமை நள்ளிரவு முதல் ரயில்வே ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இது குறித்து போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளுடன் பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும், இணக்கப்பாடு எட்டப்படாமையால், தொடர்ந்தும் அப் போராட்டம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மாணவியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!!

 
வவுனியா ஓமந்தை அலகல்லு போட்டகுளத்தில் 16 வயது சிறுமியை கற்பமாக்கிய சம்பவத்துடன் தொடர்புபட்ட ஆசிரியருக்கு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், சமூகத்தில் இனி இவ்வாறு இடம்பெறக்கூடாது என்றும் தெரிவித்து நொச்சிக்குளம் மகளீர் கிராம அபிவிருத்திச்சங்கத்தினால் இன்று காலை 9.30 மணியளவில் ஓமந்தை ஆரம்ப மருத்துவப் பராமரிப்பு பிரிவிற்கு முன்பாக ஒன்றிணைந்த மகளீர் அமைப்பினர் ஏ9 வீதியூடாக ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு விழிப்புணர்வுப் பேரணியாகச் சென்று ஓமந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் மகஜர் ஒன்றினைக் கையளித்துள்ளனர்.

இப்பேரணியில் கலந்துகொண்டவர்கள் இருப்பவர்கள் இருந்தால் இப்படி நடந்திருக்குமா?, சிறுமியை பலாத்காரம் புரிந்தவருக்கு தண்டனை வழங்கு, இதற்கு உடந்தையாக இருந்த தாயார் மீது நடவடிக்கை மேற்கொள் போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு பேரணியில் கலந்துகொண்டனர்.

குறித்த ஆசிரியர் முன்னர் கல்வி கற்பித்த 10ற்கும் மேற்பட்ட பாடசாலைகளிலும் சிறுவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு சாட்டப்பட்டு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக நொச்சிக்குளம் மகளீர் கிராம அபிவிருத்திச்சங்கத்தினர் குற்றசாட்டினை முன்வைத்துள்ளனர்.

மகஜரை ஏற்றுக்கொண்ட பொலிசார் சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தியுள்ளதாகவும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டு சட்டநடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் ஓமந்தைப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இப் பேரணியில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் இணைப்பு செயலாளர் சு.சுதாகரன், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் ஆகியோரும் ஆதரவு வழங்கியிருந்தனர். ‌

100 சிறுமிகளை நிர்வாணப் படம் எடுத்த மருத்துவருக்கு 60 ஆண்டுகள் சிறை தண்டனை!!

அமெரிக்காவில் உடல் பரிசோதனைக்காக வந்த 100க்கும் மேற்பட்ட சிறுமிகளை நிர்வாண படம் எடுத்த மருத்துவருக்கு 60 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஒலிம்பிக் குழுவில் உறுப்பினராக இருந்தவர் லார்ரி நாசர் (54), இவர் நாட்டின் ஜிம்னாஸ்டிக் கழகத்தில் மருத்துவராக பணிபுரிந்தார். அப்போது பரிசோதனைக்கு வந்த 100-க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததோடு அவர்களை நிர்வாணப் படம் எடுத்து சித்ரவதை செய்ததாக நாசர் மீது புகார்கள் எழுந்தன.

இதையடுத்து நாசர் மீது மிச்சிகன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட நாசருக்கு 60 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

சிறுமிகளை நிர்வாண படம் எடுத்தது தொடர்பான மூன்று வழக்குகளில் தலா 20 ஆண்டுகள் வீதம் தண்டனை பிரித்து வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையில் நாசர் மீது பாலியல் சித்ரவதை தொடர்பான வழக்கு விசாரணையும் நடந்து வரும் நிலையில் அதற்கான தீர்ப்பு வரும் ஜனவரியில் வெளியாகவுள்ளது.

அன்று மனைவியின் உடலை தோளில் சுமந்து சென்றவரின் இன்றைய நிலை!!

ஒடிசா மாநிலத்தில் இறந்துபோன மனைவியின் உடலை எடுத்து செல்வதற்கு மருத்துவமனை அம்புலன்ஸ் தராத காரணத்தால், தனது மனைவியின் உடலை தோளில் சுமந்து சென்று உலக மக்களின் கவனத்தை ஈர்த்தவர் இன்று நல்ல வசதி வாய்ப்புடன் வாழ்ந்து வருகிறார்.

தானா மாஜ்கி என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் காசநோயால் இறந்துபோனார், மனைவியின் உடலை கொண்டு செல்வதற்கு மருத்துவமனை நிர்வாகம் அம்புலன்ஸ் தராத காரணத்தால் , தனது தோளில் சுமந்தபடி சுமார் 12 கிலோ மீற்றர் நடந்து சென்றார், இவருடன் இவரது மகளும் நடந்து சென்றார்.

இந்த புகைப்படம் சமூகவலைதளங்கள் மற்றும் செய்திகளில் வெளியாகி உலக மக்களின் கவனத்தை ஈர்த்தது. இதனைப்பார்த்த பலரும் மாஜ்கிக்கு நிதி உதவி செய்ய முன்வந்தனர், பஹ்ரைன் பிரதமர் கலிபா பின் சல்மான் அல் கலிபா 9 லட்சத்தை நிதியுதவியாக அளித்தார்.

பிரதான் மந்திரியின் ஆவாஸ் யோஜ்னா திட்டத்தின் கீழ் இவருக்கு வீடு கட்டிக்கொடுக்க உறுதியளிக்கப்பட்டது. இவரது 3 மகள்களும் படிக்கும் பள்ளி நிர்வாகம், இவர்களுக்கு இலவச கல்வியி அளித்து வருகிறது. மறுமணம் செய்துகொண்டு மாஜ்கியின் மனைவி தற்போது கர்ப்பமாக இருக்கின்றார்.

பலரது உதவியால் தற்போது மாஜ்கி நல்ல வசதியுடன் வாழ்ந்து வருகிறார், 65 ஆயிரம் மதிப்புள்ள ஹொண்டா இரு சக்கர வாகனத்தில் இவர் பயணித்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

அன்று தனது மனைவியின் உடலை தனது தோளில் சுமந்துகொண்டு நடந்துசென்றவர், இரு இரு சக்கர வாகனத்தில் பயணிக்கிறார்.

தாயை அடித்துக் கொலைசெய்துவிட்டு பொலிசில் சரணடைந்த மகன் : காரணம் என்ன?

தாய்க்கு வேறு நபருடன் தொடர்பு உள்ளதாக சந்தேகப்பட்ட மகன் அவரின் தலைமுடியை வெட்டி பின்னர் கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தின் தம்தரி மாவட்டத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.

துர்கா பாய் (45) என்ற விதவை பெண் தனது மகன் ராஜ்னேஷ் சிங் (25) என்பவருடன் வசித்து வந்துள்ளார். ராஜ்னேசுக்கு திருமணமாகி மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில், துர்கா அதே ஊரை சேர்ந்த ஒரு நபருடன் தொடர்பில் உள்ளதாக ராஜ்னேசுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

நபருடனான தொடர்ப்பை விட்டு விடும்படி தாயிடம் கூறியும் அவர் கேட்கவில்லை. துர்காவையும், அவருடன் பழகிய நபரையும் பல தடவை ஒன்றாக ராஜ்னேஷ் பார்த்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் மீண்டும் பார்த்துள்ளார்.

இதையடுத்து தாய் மீது ஆத்திரம் ஏற்பட அவரின் தலைமுடியை வெட்டிய ராஜ்னேஷ் பின்னர் அடித்து கொலை செய்துள்ளார். சடலத்தை தனது வீட்டு வாசலிலேயே போட்ட ராஜ்னேஷ் நேராக காவல் நிலையத்துக்கு சென்று அனைத்து விடயங்களையும் கூறி சரணடைந்துள்ளார்.

இதையடுத்து பொலிசார் துர்காவின் சடலத்தை கைப்பற்றி விட்டு ராஜ்னேசிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தியாவை உலுக்கிய 17 கொலை வழக்கு : குற்றவாளிகளுக்கு மரணதண்டனை!!

டெல்லியை அடுத்துள்ள நொய்டாவிலுள்ள நிதாரி கிராமத்தில் இளம்பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டில் டெல்லியை அடுத்துள்ள நொய்டாவிலுள்ள நிதாரி கிராமத்தில் இளம்பெண்கள் மற்றும் குழந்தைகள் திடீர், திடீரென காணாமல் போயினர். சுமார் 17 இளம்பெண்கள் மற்றும் குழந்தைகளை மணீந்தர் சிங் (52) என்ற நபரும், இவரிடம் வேலை பார்த்த ரேந்தர் கோலி என்பவரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வீட்டிற்குள் புதைத்து வைத்துள்ளனர்.

இருவரும் சேர்ந்து 17 இளம்பெண் மற்றும் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து வெட்டிக் கொன்று சாக்கடையில் வீசியதாக 16 வழக்குகள் பதிவானது.

9 வழக்குகளில் மணிந்தர் சிங் பந்தர் மூன்று வழக்குகளில் குற்றவாளி என்றும், சுரிந்தர் கோலி அனைத்து வழக்கிலுமே குற்றவாளி என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அனைத்து வழக்கிலும் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு போக்குவரத்து விதிமுறையின் சான்றிதழ்கள் வழங்கல்!!

 
வவுனியா நெளுக்குளம் கலைமகள் பாடசாலையில் இன்று (08.12) காலை 7.45 மணியளவில் பாடசாலை அரங்கில் பாடசாலையின் அதிபர் ப.சிவநாதன் தலைமையில் மாணவர்களுக்கு நெளுக்குளம் போக்குவரத்து பொலிசாரினால் சைகைகள், போக்குவரத்து விழிப்புணர்வு செயலமர்வு இடம்பெற்று 25 மாணவர்களுக்கு அதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றிய நெளுக்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.எஸ். அத்தநாயக்க கடமையில் ஈடுபடும் மாணவர்கள் ஏனைய மாணவர்களுக்காக தங்களை அர்ப்பணித்து மழை, வெயில் பாராது நேரகாலத்திற்கு வந்து தமது கடமையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 3வருடங்களாக இவ்வாறான சேவையை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்.

இனிவரும் காலங்களிலும் இவ்வாறான சேவையை தொடர்ந்து செய்வோம். இவ்வாறான சேவையினால் நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் நெளுக்குளம் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி சி.எச்.எம்.மாதுண்ன, பொலிஸ் பரிசோதகர், எஸ். ஜி.ஆர்.பிரியந்தகுமார, பாடசாலையின் உப அதிபர், அசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

வவுனியாவில் “பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுப்போம்” : வாகனப் பேரணி!!

 
வவுனியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுப்போம் எனும் தொனிபொருளிலான வாகன விழிப்புணர்வு பேரணியும், பொது மக்களிடம் கையச்சு பெறும் நிகழ்வு ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த விழிப்புணர்வுப் பேரணியானது இன்று மாலை 3 மணியளவில் மன்னார் வீதியிலுள்ள காமினி பாடசாலைக்கு முன்பாக மோட்டார் சைக்கில், முச்சக்கர வண்டிகள் ஒன்றிணைந்து ஆரம்பமாகி மன்னார் வீதியூடாக குருமன்காட்டு சந்தியை வந்தடைந்து மணிக்கூட்டு வீதியூடாக காமினி பாடசாலையை மீண்டும் வந்தடைந்து முடிவுற்றது.

அதன் பின்னர் பொதுமக்கள், இளைஞர்கள் கையில் ஒறேஞ் நிறத்திலான மையை பூசி கையச்சு பதியும் நிகழ்வும் வாகனத்தினை கழுவி சுத்தம் செய்யும் நிகழ்வும் இடம்பெற்றது.

பெண்களுக்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் தடுப்போம்” எனும் தொனிப்பொருளிலான செயற்பாட்டினை ஐக்கிய அபிவிருத்தி நிதியம், ஜெர்மன் நிதி வழங்கும் நிறுவனம் ஆகியன இணைந்து மேற்கொண்டிருந்தனர்.