வவுனியாவில் தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன!!

 
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வவுனியா நகரசபையில் போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இன்று மதியம் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

வவுனியா மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல்கள் திணைக்களத்திலேயே கட்டுப்பணத்தை இன்று (08.12) மதியம் 12 மணியளவில் செலுத்தியுள்ளனர்.

வவுனியா மாவட்ட செயலக தேர்தல் அலுவலகத்தில் வவுனியாவில் வைப்புக்கள் வைக்கப்பட்டிருந்தன.

வடக்கு மத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் தலைமையிலான குழுவினர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

இலங்கையில் இளம் பெண்ணொருவரின் மோசமான செயற்பாடு!!

பேருந்துகளில் பயணிகளை ஏமாற்றி கொள்ளையடிக்கும் இளம் பெண் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல்வேறு நோய்களுடன் உள்ள நபர்களுக்கு சிகிச்சை வழங்க வேண்டும் என கூறி பயணிகளின் பேருந்துகளுக்குள் போலியாக பணம் சேகரித்து, பயணிகளின் பைகளை இளம் பெண்ணொருவர் கொள்ளையடித்து வந்துள்ளார்.

அம்பலந்தொட்டை மற்றும் குட்டிகல பொலிஸார் இணைந்து மேற்கொள்ளப்பட்ட செயற்பாட்டில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

மாத்தறையில் இருந்து எம்பிலிப்பிட்டிய வரை பயணித்த தனியார் பேருந்து ஒன்றில் பயணித்த பெண்ணின் பணப்பை நேற்று பகல் திருடப்பட்டுள்ளது.

இதன் போது, பேருந்தில் பணம் சேகரித்து கொண்டிருந்த இருவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், குட்டிகல பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபரின் வீட்டை தேடிச் சென்றுள்ளனர்.

அதற்கமைய அந்த இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டிருந்த நபர் தப்பி சென்றள்ள நிலையில் அதற்கு தொடர்புடைய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊனமுற்ற தனது தந்தை மற்றும் ஊனமுற்ற சிறுவர்களுக்கு சிகிச்சை பெற்றுக் கொடுக்க வேண்டும் என கூறி பண மோசடி இடம்பெற்றுள்ளது. இந்த நடவடிக்கையில் நீண்ட காலமாக குறித்த பெண், அவரது கணவர் மற்றும் சகோதரர் ஈடுபட்டு வந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய வீட்டினுள் பல்வேறு பிரதேசங்களை சேர்ந்த நோய்வாய்ப்பட்ட சிறுவர்கள் புகைப்படங்கள் மற்றும் மருத்துவ ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

விமானத்தை கடத்துவதாக அச்சுறுத்திய இலங்கையருக்கு 20 வருட சிறைத்தண்டனை!!

பறந்து கொண்டிருந்த மலேசிய விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டி சக பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்திய இலங்கை பயணிக்கு குறைந்தபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் மெல்போர்னில் இருந்து கோலாலம்பூர் புறப்பட்ட மலேசிய ஏர்வேஸ் MH128 என்ற விமானத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றது.

அதற்கமைய இலங்கையை சேர்ந்த மனோத் மார்க்ஸ் என்ற 25 வயதுடைய நபரே இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டார்.

விமானம் பறந்து உயர்ந்ததும் கையில் வெடிகுண்டு போன்ற ஒரு பொருளை வைத்திருந்த இலங்கை பயணி, அத்துமீறி விமானியின் அறைக்குள் நுழைய முயன்றுள்ளார். இதைக்கண்ட சக பயணிகள் அச்சமடைந்தனர். எனினும் சாதுரியமாக செயல்பட்ட பயணிகள், அந்த நபரை பிடித்து விமான இருக்கையில் கட்டி வைத்தனர்.

சம்பவத்தை அடுத்து விமானம் மீண்டும் மெல்போர்னுக்கு திருப்பப்பட்டது. அங்கு விமான நிலையத்தில் பொலிஸார் அந்த நபரை கைது செய்தனர். விசாரணை நடத்தியதில் அவர் மனநோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றவர் என தெரியவந்துள்ளது.

அவர் கையில் வைத்திருந்தது ப்ளுடூத் என தெரிவித்துள்ள பொலிஸார், இந்த சம்பவத்தில் தீவிரவாத நோக்கம் எதும் இல்லை என குறிப்பிட்டுள்ளனர்.

மெல்போர்னுக்கு திரும்ப கொண்டு வரப்பட்ட பயணிகள் உரிய ஓய்வுக்கு பின்னர் வேறு விமானத்தில் கோலாலம்பூர் புறப்பட்டனர்.

எனினும் இந்த விமானத்தை திசை திருப்பி, பயணிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மெல்போர்னில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக மெல்போர்ன் நீதிமன்றம் நேற்று அறிவித்துள்ளது.

இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதை நீதிமன்றம் ஏற்றுள்ள நிலையில், இவரின் குற்றச்சாட்டுகள் மீளப்பெறலாம் என கூறப்படுகிறது.

திருமணம் நடந்து 30 நிமிடங்களில் பிரிந்து சென்ற மணமகள்!!

 
சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதியொருவருக்கும் அவரது காதலிக்கும் திருமணம் நடைபெற்று 30 நிமிடங்களில் பிரிந்து சென்ற சம்பவமொன்று கொழும்பில் பதிவாகியுள்ளது.

கொழும்பு – மெகசின் சிறைச்சாலையில் முப்பத்தேழரை வருடம் சிறைத்தண்டனை அனுபவத்து வரும் செனரத் பந்துல லியனாராச்சி என்பவரும், வத்தளையில் வசிக்கும் சவீட்டி ஷாலின் சமிளா என்பவரும் நீண்ட காலங்களாக காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் அரசியல் கைதிகளின் உரிமைக்கான அமைப்பிடம் தமக்கு திருமணம் செய்து வைக்குமாறு கோரியுள்ள நிலையில், இருவருக்கும் நேற்று சிறைச்சாலையில் வைத்து திருமணம் நடத்தப்பட்டுள்ளது.

இவர்களது திருமணம் நேற்று 10.30 மணியளவில் நடைபெற்றுள்ள நிலையில், இதனைத் தொடர்ந்து மணமகள் இல்லத்தரசியாக வீட்டிற்கும், மணமகன் தண்டனைக் கைதியாக சிறைச்சாலைக்கும் சென்றுள்ளனர்.

திருமணம் முடிந்து 30 நிமிடங்களிலேயே தம்பதியினர் கண்ணீர் வார்த்தபடி பிரிந்து சென்றுள்ளனர். இதன்போது மணமகள் தரப்பில் அருட்தந்தை சக்திவேலும், மணமகன் தரப்பில் பௌத்த மதகுருவொருவரும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் நடந்த அதிசயம் : படையெடுக்கும் மக்கள்!!

 
இலங்கையிலுள்ள தேவாலயம் ஒன்றில் இயேசு நாதரின் உருவத்திலிருந்து வியர்வைத் துளிகள் வடிந்து வருகிறது.

வத்தளை – சென்.அன்டனிஸ் தேவாலயத்திலுள்ள இயேசு நாதரின் உருவம் பொறிக்கப்பட்ட புகைப்படத்திலேயே வியர்வை வடியும் அதிசயம் இடம்பெற்றுள்ளது.

இந்த அதிசயத்தைக் காண பெருந்திரளான பக்தர்கள் தேவாலயத்தை நோக்கி படையெடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீர் போன்று வடியும் இந்த திரவம் வியர்வைக்கு சமமானதாக உள்ளதெனவும், இந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இவ்வாறு புகைப்படத்தில் இருந்து வியர்வைத் துளிகள் வடிந்து வருவதாக வத்தளை தேவாலய வணக்கத்துக்குரிய அருட்தந்தை சன்ஜீவ் மென்டிஸ் தெரிவித்துள்ளார்.

வியர்வை வடியும் புகைப்படம் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின், சாலக்குடி பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.

கண்ணீர் போன்ற நீர்த்துளிகள் வடியும் இந்த படம் ஆரம்பத்தில் நிரோமி அமரசிங்க என்ற பெண்ணின் வீட்டில் வைக்கப்பட்டிருந்ததாக அருட்தந்தை மென்டிஸ் குறிப்பிட்டுள்ளார்.

இயற்கைக்கு மாறான நிகழ்வு ஏற்பட்ட பின் இந்தப் படம் தேவாலயத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வப்போது இயேசு நாதரின் நெற்றியில் இருந்து வியர்வைத் துளிகள் வடிந்ததாக நிரோமி குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் உரிய முடிவுக்கு தற்போது வர முடியாது. இது தொடர்பில் அறிவியல் விளக்கம் இருக்கலாம். ஆனால் யாரால் அதை நிரூபிக்க முடியும் என்று எனக்கு தெரியாதென அருட்தந்தை மேலும் தெரிவித்துள்ளார்.

தொடரும் புகையிரத வேலை நிறுத்தம் : மக்கள் அசௌகரியத்தில்!!

ரயில்வே சாரதிகளுக்கான உதவியாளர்களை சேர்த்துக்கொள்ளும் முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில்வே இயந்திர சாரதிகள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தம் காரணமாக ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என ரயில்வே இயந்திர சாரதிகள் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ரயில்வே சாரதிகள் சங்கம் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தத்தில் இன்று நள்ளிரவு முதல் ரயில்வே நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுபாட்டாளர்களும் இணைந்து கொள்ளவுள்ளதாக ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் ஜகன பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

இது குறித்த பிரச்சினையை சீர் செய்வதற்காக அமைச்சர் நிமல் சிரி பா டி சில்வா தொழிற்சங்கங்களுடன் நேற்று நண்பகல் இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியில் நிறைவடைந்துள்ளமையினால் பணிப்புக்கணிப்பினை முன்னெடுத்துச்செல்ல நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த வேலைநிறுத்தம் காரணமாக பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்க இலங்கை போக்குவரத்துச் சபை விஷேட பஸ்கள் சேவைகளை மேற்கொண்டுள்ளன.

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குவதில் அதிகாரிகள் தோல்வியடைந்துள்ளமையே இதற்குக் காரணம் என, ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட சுட்டிக்காட்டியுள்ளார்.

சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கை ஆறாக குறைக்கப்படும்!!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கை ஆறாக குறைக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

தேசிய சுரக்ஸா காப்புறுதித் திட்டத்தை அமுல்படுத்தும் நிகழ்வு நேற்று (07.12) கொழும்பு அனுலா கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற போது கல்வி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சாதாரண தரப் பரீட்சையின் போது ஒன்பது பாடங்கள் தற்போது கட்டாய பாடங்களாக காணப்படுகின்றன. இந்த பாடங்களின் எண்ணிக்கையை ஆறாக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

இதேவேளை, கல்வித்துறையில் காத்திரமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்கள் சார்பில் சிம்புவிடம் தனுஷ் கோரிக்கை!!

சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் சக்க போடு போடு ராஜா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ் சிம்பு ரசிகர்கள் சார்பில் சிம்புவிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் சக்க போடு போடு ராஜா படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர் தனுஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டார். இதில் தனுஷ் பேசும் போது..

“சிம்பு அழைப்பு விடுத்ததாலேயே இந்த விழாவில் கலந்து கொண்டிருக்கிறேன். அதேபோல் நான் விழாக்களுக்கு அழைப்பு விடுத்தால் அவரும் வருவார். அவரும் நானும் நல்ல நட்புடன் தான் உள்ளோம். மற்றவர்கள் கூறுவது போல் எனக்கும் அவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. எங்களுக்கு நடுவில் இருப்பவர்களுக்குள் தான் பிரச்சனை உள்ளது. அவர்கள் தான் எங்களுக்கு இடையில் பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகின்றனர். எனினும் நாங்கள் நட்புடன் தான் இருக்கிறோம். ஏறக்குறைய 15 வருட நட்பு எங்களுடையது.

நான் இங்கு வந்தபோது சிம்புவின் ரசிகர்கள் எனக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதேபோல் என் விழாக்களுக்கு அவர் வரும்போது, எனது ரசிகர்களும் அவருக்கு இதேபோன்ற வரவேற்பை அளிப்பார்கள். அனைத்து நடிகர்களுமே அவர்களது ரசிகர்களுக்காக மட்டுமே படம் பண்ணவில்லை. அனைவரும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் படத்தில் நடிக்கிறார்கள்.

சிம்பு தனது ரசிகர்களுக்காக ஆண்டுக்கு இரண்டு திரைப்படங்களாவது நடிக்க வேண்டும். அது உங்கள் கடமை. உங்கள் ரசிகர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்”

இந்த விழாவில் சந்தானம், சிம்பு, தனுஷ், யுவன் சங்கர்ராஜா, இயக்குனர் ராஜேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.

7 வயது மகனுக்கு பாடசாலை அனுமதி கிடைக்காததால் தந்தை தற்கொலை!!

மகனுக்கு பாடசாலை அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ஏமாற்றப்பட்ட தந்தை, தீவைத்துத் தற்கொலை செய்துகொண்டார்.

பெங்களூரு பொறியியலாளர் ரித்தேஷ் (35). இவர் தனது ஏழு வயது மகனை நகரின் பிரபல பாடசாலையில் சேர்க்க விரும்பினார். ஆதித்ய பஜாஜ் என்பவர் மேற்படி அனுமதி வாங்கித் தருவதாகக் கூறி 2.5 இலட்ச ரூபாயை லஞ்ச முற்பணமாகப் பெற்றுள்ளார்.

எனினும் ரித்தேஷின் மகனுக்கு அனுமதி கிடைக்கவில்லை. கொடுத்த பணத்தை ரித்தேஷ் திருப்பிக் கேட்டபோது, தர முடியாது என மறுத்துள்ளார் ஆதித்யா.

இந்நிலையில், பணத்தைக் கேட்பதற்காக ஆதித்யாவின் அலுவலகம் சென்ற ரித்தேஷ், கையோடு கொண்டுபோயிருந்த எரிபொருளை உடலில் ஊற்றிக்கொண்டு பணத்தைத் திருப்பித் தருமாறு அச்சுறுத்தியுள்ளார்.

அதற்கும் மசியாததால் ரித்தேஷ் உடலில் தீ வைத்துக்கொண்டு பலியானார்.

ஆதித்யா மீது பொலிஸார் கொலைக்குத் தூண்டிய மற்றும் ஏமாற்றுப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்

பேஸ்புக்கிடம் இழப்பீடு வாங்கி கோடீஸ்வரர்களான இரட்டையர்கள்!!

டைலர் மற்றும் கேமரூன் விங்க்லெவோஸ் இரட்டையர்கள் ஹாலிவுட் நடிகர்கள் என எளிதாகத் தவறாக புரிந்து கொள்ளப்படலாம்: இவர்கள் இருவரும் அழகாக இருக்கிறார்கள், இளமை (36 வயது), உயரம்… மற்றும் பணக்காரர்கள். கேமரா முன்பு தோன்றவில்லை என்றாலும், ஒரு படத்தின் மூலம் பிரபலமடைந்தார்கள்.

ஃபேஸ்புக்கிற்காக தங்களது ஐடியவை திருடியதாகக் கூறி, மார்க் சக்கர்பெர்க்கிற்கு எதிராக இந்த அமெரிக்க இரட்டையர்கள் வழக்கு தொடர முடிவு செய்த பிறகு, இவர்களின் கதையை மையமாக வைத்து ´தி சோஷியல் நெட்வோர்க்´ எனும் படம் 2010ல் வெளியானது.

நீதிமன்றத்தின் மூலம் 2011-ம் ஆண்டு இவர்கள் 65 மில்லியன் டாலர் பணத்தை இழப்பீடாகப் பெற்றனர்.

இரண்டு வருடங்கள் கழித்து, இழப்பீடாகப் பெற்ற பணத்தின் பெரும்பகுதியை(11 மில்லியன் டாலர்) பிட்காயின் வாங்கப் பயன்படுத்தினர்.

பிட்காயினானது இணையம் சார்ந்த மின்னணு பணமான கிரிப்டோகரன்சி வகையைச் சார்ந்தது. இது உலகம் முழுவதும் பல நாடுகளில் பயன்பாட்டிலுள்ளது.

இவர்கள் முதலீடு செய்த பிட்காயின் மதிப்பு பல மடங்கு உயர்ந்து, இவர்களை உலகின் முதல் கிரிப்டோகரன்சி கோடீஸ்வரர்களாக உயர்த்தியது. இவர்களின் பிட்காயினின் மதிப்பு தற்போது ஒரு பில்லியன் டாலர்களாகும்.

டிசம்பர் 6-ம் திகதியன்று, ஒரு பிட்காயினின் மதிப்பு 12,788 டாலர்களாகும். உண்மையில், இந்த இரட்டையர்கள் முன்பே பிட்காயின் ஆர்வலர்களாக இருந்துள்ளனர். 2013-ம் ஆண்டு இவர்கள் 90,000 பிட்கயின்களை வாங்கினர். அந்த ஆண்டு புழக்கத்தில் இருந்த பிட்காயின்களின் எண்ணிக்கையில், இவர்கள் வாங்கியது ஒரு சதவீதமாகும்.

வாங்கியதில் ஒரு பிட்காயினைக்கூட விற்கவில்லை என இவர்கள் கூறுகிறார்கள். பிட்காயினின் அளவானது ப்ளாக்செயின் எனும் மென்பொருளால் கண்டிப்புடன் கட்டுப்படுத்தப்படுகிறது.

´´நாங்கள் ஸ்பெயினில் விடுமுறையில் இருந்தபோது, பிட்காயின்களை பற்றி ஒரு நபர் பேச தொடங்கினார். அந்தப் பேச்சால் கவரப்பட்டோம்´´ என இந்த இரட்டையர்கள் நியூயார்க் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளனர்.

இவர்கள் தங்களுக்கான பிட்காயின்களை வாங்கியபோது, ஒரு காயினின் மதிப்பு 20 டாலர்களாக இருந்தது.

ஹார்வார்டில் பொருளாதாரப் பட்டம் பெற்ற இவர்கள், பெய்ஜிங் ஒலிம்பிக்ஸில் படகோட்டுதல் விளையாட்டில் அமெரிக்கா சார்பில் விளையாடினர். அத்துடன் விங்கிலோவ்ஸ் கேபிட்டல் என்ற தங்களது முதலீட்டு நிதி நிறுவனத்தையும் நடத்தி வருகின்றனர்.

பிட்காயின் மீது வலுவான நம்பிக்கை வைத்திருக்கும் இவர்கள், இந்த வருடத் தொடக்கத்தில் அமெரிக்க பங்குச் சந்தையில் அதை பரிவர்த்தனை செய்யவேண்டும் என்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால், இவர்களின் திட்டம் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனால், பிட்காயினின் மதிப்பில் தற்காலிக சரிவு ஏற்பட்டது.

பிட்காயின் முதலீட்டின் அபாயங்கள் பற்றி முதலீட்டாளர்கள் மற்றும் நிபுணர்களும் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர். கட்டுப்பாடு இல்லாதது மற்றும் அதன் மையப்படுத்தப்படாத தன்மையால் எதிர்பாராத நேரத்தில் பெரும் சரிவு ஏற்படலாம் என அவர்கள் வாதிடுகின்றனர்.

இருந்தாலும் இந்த இரட்டையர்கள் அதைப்பற்றி கவலை கொள்ளவில்லை. கொண்டாட இவர்களுக்குக் காரணங்கள் உள்ளன. குறைந்தபட்சம் இப்போதாவது.

இருந்தாலும் சொத்து மதிப்பில் தங்களது பழைய எதிராளியை விட, வெகு தொலைவில் உள்ளனர். சமீபத்திய மதிப்பீடுகளின்படி, மார்க் சக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 74 பில்லியின் டொலர்களாகும்.

குடும்பத் தலைவரைக் கொலை செய்தவருக்கு மரண தண்டனை!!

கிளிநொச்சியில் ஒருவரை கொலை செய்த குற்றத்துக்காக 2 பிள்ளைகளின் தந்தையான குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதியளவில் கிளிநொச்சியில் வேலுப்பிள்ளை சிவரூபன் என்பவர் போத்தால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
அவரது சடலம் பாறையொன்றுடன் கட்டப்பட்டு கிணற்றில் தள்ளப்பட்டிருந்தது.

இந்தக் கொலையைச் செய்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கிளிநொச்சியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் கரிகரன், தங்கராஜா ராஜேந்திரன் அல்லது ராசா ஆகிய இருவரும் மாங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவருக்கும் எதிராக கிளிநொச்சி நீதிவான் மன்றில் சுருக்க முறையற்ற விசாரணைகள் இடம்பெற்றன.
அதன் பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

வேலுப்பிள்ளை சிவரூபனை கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் எதிரிகள் இருவருக்கு எதிராகவும் தண்டனைச் சட்டக் கோவை 296 ஆம் பிரிவின் கீழ் சட்டமா அதிபர் திணைக்களத்தால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் 2011 ஆம் ஆண்டு பெப்ரெவரி மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், நேற்று (07.12) யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்றன.

இரண்டாம் பிரதிவாதி மீதான குற்றச்சாட்டை வழக்குத் தொடுனரால் நீருபிக்க முடியவில்லை. அதனால் இரண்டாம் பிரதிவாதியை மேல் நீதிமன்றம் விடுவித்தது.

முதலாம் பிரதிவாதி மீதான குற்றம் கண்கண்ட சாட்சிகளின் அடிப்படையில் நிரூபிக்கப்படாவிடினும் சந்தர்ப்ப சூழல் சாட்சியங்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதனால் கொலை செய்யும் பொது நோக்கோடு வேலுப்பிள்ளை சசிரூபனை கொலை செய்தார் என இனங்கண்டு முதலாம் பிரதிவாதியை குற்றவாளியாக நீதிமன்று அறிவிக்கிறது” என்று மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.

கொலைக் குற்றத்துக்காக ஜனாதிபதியால் தீர்மானிக்கப்படும் திகதியில் நிர்ணயிக்கப்படும் இடத்தில் குற்றவாளியின் உயிர் பிரியும்வரை தூக்கிலிடுமாறு இந்த மன்று பரிந்துரைக்கிறது” என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டார்.

8 மாதங்களுக்கு முன் காணாமல் போனதாக கூறப்பட்ட சிறுமிக்கு ஏற்பட்ட நிலை!!

காலி பிரதேசத்தை சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவரின் 16 வயதான மகள், ஹோமாகமை பிரதேசத்தில் சிறிய வீடொன்றில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுமார் எட்டு மாதங்களுக்கு முன்னர் காணாமல் போனதாக கூறப்படும் சிறுமியே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார். தடுத்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றால், பெற்றோரை கொலை செய்யப் போவதாக அச்சுறுத்தி சிறுமியை தடுத்து வைத்திருந்தாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நபர் சிறுமியின் தந்தையிடம் சாரதியாக பணியாற்றியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாரதியாக பணிப்புரிந்த சந்தேகநபர் சரியாக பணிப்புரியவில்லை என்ற காரணத்தில் வேலையை விட்டு நீக்கப்பட்டிருந்தாகவும் இதற்கு பழிவாங்கும் நோக்கில் வர்த்தகரின் மகளை சந்தேகநபர் கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டணிக் கட்சிகளிடையே முறுகல் : ஒற்றுமையாக வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் என்கிறார் சம்பந்தன்!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள முறுகல் நீடிக்கின்றது. இந்த நிலையில், தமிழரசுக் கட்சியுடன் மீண்டும் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் எவ்வித தீர்மானமும் இல்லை என தமிழீழ விடுதலை இயக்கம் நேற்று தெரிவித்துள்ளது.

தமிழரசுக் கட்சியின் மேலாதிக்க முயற்சி மற்றும் தொகுதிப்பங்கீடு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இரண்டு பங்காளிக் கட்சிகள் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளன.

மக்களின் ஆணைக்கு புறம்பாக தமிழரசுக் கட்சி செயற்படுவதாகத் தெரிவித்து வௌியேறிய ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி உள்ளிட்ட சில தரப்பினருடன் சேர்ந்து உதய சூரியன் சின்னத்தில் புதிய கூட்டமைப்பை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில், தமிழரசுக் கட்சியுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என தமது கட்சியின் நிலைப்பாட்டில் இதுவரை எவ்வித மாற்றமும் இல்லை என ரெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் சட்டத்தணி ஶ்ரீ காந்தா தெரிவித்தார்.

இதேவேளை, நேற்று மாலை கிளிநொச்சியிலுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்திற்குச் சென்ற தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர், சட்டத்தரணி ஶ்ரீ காந்தா, வீ. ஆனந்த சங்கரியை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இலங்கை தமிழரசுக் கட்சி விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை மற்றுமொரு பங்காளிக் கட்சியான புளொட் எனப்படும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், திருகோணமலை உதவி தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகத்தில் நேற்று கட்டுப்பணம் செலுத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனிடம் கூட்டமைப்பில் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவினர்.

இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் வேறுபட்ட கருத்துக்கள் இருப்பதாக அவர் பதிலளித்தார். ஒற்றுமையாக வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் துவிச்சக்கரவண்டி சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி இன்று அறிவித்தது.

யாழ்ப்பாணத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, தமிழரசுக் கட்சியின் யாழ். அலுவலகத்திலும் நேற்று விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

வாள் வெட்டுக் குழுவுகளில் தொடர்புடைய 6 பேர் வட்டுக் கோட்டையில் கைது!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் வாள் வெட்டுக் குழுக்களின் சிறிய குழுவொன்று சாவகச்சேரியில் கைது செய்யப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 06 பேர் நேற்று மதியம் வட்டுக்கோட்டை பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பொறுப்பதிகாரி எச். எம்.பி.குணதிலக்க தெரிவித்தார்.

அது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில் நேற்று முன்தினம் இரவு வட்டுக்கோட்டை பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சந்தேக நபர்களை வட்டுக்கோட்டை பொலிசார் கைது செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குறித்த சம்பவம் வன்முறைச் சம்பவங்களை தூண்டும் அடிப்படையில் வாள் வெட்டுக்கள் இடம்பெற்றுள்ளதாகவும், ஆரம்ப கட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவர்களை எதிர்வரும் 22 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் மல்லாக நீதிமன்ற நீதிபதி ஏ.யுட்சன் உத்தரவு பிறப்பித்தார்.

அமெரிக்காவில் இலங்கை பெண் கொலை : தமிழ் நீதிபதியின் உத்தரவு!!

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இலங்கை பெண் ஒருவரை கொடூரமாக கொலை செய்த சந்தேக நபரின் பிணை நிராகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

27 வயதான Dantey Moore என்பவரின் பிணையை நிராகரித்து விளக்கமறியலை நீடிக்குமாறு நீதிபதி ராஜ ராஜேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை இந்த கொலை தொடர்பான வழக்கு, விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த மாதம் இலங்கையை பூர்வீகமாகவும் அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற கீதா கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவருக்கு பிணை வழங்குமாறு சந்தேக நபரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி Marina Tricorico, நீதிபதியிடம் கோரியுள்ளார்.

இந்த சம்பவத்தின் போது குறித்த பெண்ணை காப்பாற்ற முயற்சித்த நபர் மீதும் இந்த சந்தேக நபர் தாக்குதல் மேற்கொண்டிருந்தார்.

ஏற்கனவே இந்த சந்தேக நபர் மீது 3 குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும், அவற்றில் ஒரு குற்றச்சாட்டு தொடர்பில் சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கொலை வழக்கு நாளைய தினம் மீளவும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வவுனியாவில் படுகொலை செய்யப்பட்ட சாந்தன், ஜூட் இருவரினதும் நினைவு தினம் அனுஸ்டிப்பு!!

 
கடந்த 2001ம் ஆண்டு மார்கழி 07 ம் திகதி வவுனியா வைரவபுளியங்குளத்தில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட மாணவர்களான ஜூட் கஜன் மற்றும் சாந்தன் ஆகியோரின் 16வது வருட நினைவு தினமும் ஜங்ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் 23வது வருட பூர்த்தியையும் முன்னிட்டு உதைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் புகைப்படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் தீபச்சுடரும் ஏற்றி நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது. அதன் பின்னர் உதைப்பந்தாட்ட போட்டியும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் அமரர் சாந்தனின் சிறிய தந்தை விஜயகுமார் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோதாரலிங்கம் , வட மாகாண சபை உறுப்பினர் ம.தியாகராஜா, கண்ணகி தேவராஜா, சுந்தரலிங்கம் , எஸ்.எஸ்.வாசன், விவேகானந்தன், ஜங்ஸ்டார் கழக தலைவர் ஜீவன், செயலாளர் லெஸ்லி , பொருலாளர் ரதீபன், கழக உறுப்பினர்களான சந்திரகுமார் கண்ணன், பாபு, ஹரிகரன் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.