வவுனியாவில் புதிய அரசியல் அமைப்பு தொடர்பான விளக்கமளிக்கும் கலந்துரையாடல்!!

 
புதிய அரசியல் யாப்பு தொடர்பான கலந்துரையாடலொன்று அன்புக்கும் நட்புக்குமான வலய அமைப்பினரால் இன்று (10.12.2017) வவுனியாவில் தனியார் விருந்தினர் விடுதியொன்றில் நடைபெற்றது.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்நிகழ்வில் இளைஞர், யுவதிகளுக்கு புதிய அரசியல் யாப்பு தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு கடந்தகால அரசியல் யாப்பு பற்றியும், அதன் பலம் பலவீனம் தொடர்பாகவும், அரசியல் யாப்பின் பண்புகள் தொடர்பாகவும், இலங்கையிலுள்ள இனப்பிரச்சனை மற்றும் ஏனைய தீர்வுகளுக்கு புதிய அரசியல் யாப்பிலுள்ள முக்கியத்துவ தேவை தொடர்பாகவும் விளக்கமளித்திருந்ததுடன் அரசியலமைப்பு தொடர்பான இளைஞர் யுவதிகளின் கேள்விகளுக்கும் பதிலளித்திருந்தார்.

கடந்த காலங்களில் இளைஞர் யுவதிகளுக்கான அரசியல் அறிவூட்டல் செயல்பாடுகளை அன்புக்கம் நட்புக்கமான வலையமைப்பு முன்னெடுத்து வந்திருந்தது.

இந்நிகழ்வில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு ஒற்றையாட்சி பொருத்தமற்றது : வவுனியாவில் எம்.எ.சுமந்திரன்!!

புதிய அரசியல் யாப்பு தொடர்பான கலந்துரையாடலொன்று அன்புக்கும் நட்புக்குமான வலயமைப்பினரின் ஏற்பாட்டில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்று (10.12.2017) வவுனியாவில் தனியார் விருந்தினர் விடுதியொன்றில் நடைபெற்றது.

நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்..

அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரம் நிரந்தரப் பெரும்பான்மையும், நிரந்தரமாக எண்ணிக்கையில் சிறுபான்மையிரும் இருக்கிற போது எண்ணிக்கையிலே சிறுபான்மையிராக நாடு பூராவும் இருப்பவர்கள் ஏதாவது ஒரு இடத்திலே பெரும்பான்மையிராக வாழ்ந்தால் பிராந்தியங்களுக்கு அரச அதிகாரங்களை பகிர்ந்து கொடுக்கும்போது சிறுபான்மையினரும் அதிகாரங்களை கையாளக்கூடியதாக இருக்கும்.

நாடு முளுவதும் சிறுபான்மையிராக இருப்பவர்கள் பெரும்பான்மையிராக வாழ்வது வடக்கு கிழக்கிலேதான் அதனாலேதான் அதிகாரங்களை பிராந்தியங்களாக பகிருகின்றபோது ஒரு வழியிலே பிரச்சனைக்கு தீர்வு காணப்படக்கூடியதாக இருக்கின்றது.

ஆனால் நாட்டிலே மற்றைய பகுதிகளில் வாழ்கின்ற மலையக, முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களுக்கு சமூதாய அவைகளை உருவாக்குவதன் ஊடாக அவர்களின் பிரச்சனையை தீர்க்க கூடியதாக இருக்கும்.

தமிழ் மக்களுக்காக மட்டுமல்ல மலையக மக்கள், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் நாங்கள் ஆதரவாகவே செயற்படுவோம். ஆனால் அவர்களுடைய பிரதிநிதிகளாக பேசுகிற உரித்து எங்களுக்கு கொடுக்கப்படவில்லை. இந்நிலமைக்கு மக்கள் எங்களை தங்கள் பிரநிதியாக தெரிவு செய்யாமையே காரணம்.

ஒரு குறித்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு நான் எதிரானவன். ஒரு நாட்டினுடைய அரசியலமைப்பு சட்டம் மக்கள் அனைவரையும் சமமாக நடத்துவதாக இருந்தால் ஒரு குறித்த மதத்திற்கு மாத்திரம் முதன்மை ஸ்தானம் வழங்குவது தவறானது.

இடைக்கால அறிக்கையிலும் கையெழுத்திட்டு அதை கூறியிருக்கிறேன். அத்துடன் பாராளுமன்றத்திலும், அரசியலமைப்பு பேரவையிலும் நான் அதை சொல்லியிருக்கிறேன். ஒரு குறித்த சமயம் நடைமுறையில் இருப்பதற்கு அரச பாதுகாப்புதான் அவசியம் என்று கேட்டால் அதற்கு ஏன் மறுப்பு தெரிவிக்க வேண்டும்.

என்னுடைய சிந்தனையின்படி சமயங்கள் மேலானவைகள். ஒரு அரசாங்கத்தின் பாதுகாப்பிலேதான் ஒரு சமயம் தப்பி பிழைக்குமாக இருந்தால் அது உருப்படியான சமயமாக இருக்க முடியாது.

ஒரு அரசியலமைப்பு சட்டமானது நூற்றுக்கு நூறு எல்லா மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்க முடியாது. பாகுபாடற்ற ஒரு காப்புவாசகம் புதிய அரசியலமைப்பில் எழதப்படுமாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளலாம். இது குறித்த பல பௌத்த உயர்பீடங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறோம். அதற்கு அவர்கள் இணங்கியிருக்கிறார்கள். மக்கள் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பது ஒரு பௌத்த கோட்பாடு. எனவே பெயரளவில் முதன்மை ஸ்தானத்தை பௌத்தத்திற்கு வழங்குங்கள் மற்ற மதங்களையும் பாகுபாடற்ற முறையில்பாதுகாப்பதற்கு இணங்குகிறோம் என தெரிவித்துள்ளார்கள்.

ஒரே நட்டுக்குள் நாடு பிரிபடாமல் இருக்க வேண்டும் என நாங்கள் சொல்வதற்கான காரணம் எங்களுடைய மக்கள் எங்களுக்கு அந்த ஆணையை வழங்கியுள்ளனர்.1977 ஆம் ஆண்டு மக்கள் ஒரு ஆணையை கொடுத்தார்கள். நாட்டை தனியாக பிரியுங்கள் என்று. அதற்கு முன் 1970ம் அண்டு மக்கள் ஆணையை கொடுத்தார்கள் நாட்டை பிரிக்க வேண்டாம் என்று. இலங்கை தமிழரசுக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் 1970 ஆம் ஆண்டிலே தெட்டத்தெளிவாக சொல்லப்பட்டிருந்தது தனிநாடு கேட்பவர்களுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என சொல்லியிருந்தது. அதன்படிதான் மக்கள் வாக்களித்திருந்தனர்.

அன்று தனிநாடு கோரிய வி.நவரட்ணம் மற்றும் சி.சுந்தரலிங்கம் ஆகியோர் கட்டுக்காசை இழந்திருந்தனர். ஆனால் ஏழு வருட காலத்திற்குள் எங்கள் மக்களுடைய நிலைமை மாறியிருந்தது.

எமது மக்கள் தனி நாடு கோரியிருந்தனர். இப்போது நிலைமை மாறி ஒரே நாட்டுக்குள் தீர்வை பெற்றுத்தாருங்கள் என்ற ஆணையை மக்கள் எமக்கு வழங்கியிருக்கிறார்கள். சமூக ஒப்பந்தங்களுக்கு ஒரு இணக்கப்பாடு ஏற்படுத்தப்படவேண்டும்.

சமஸ்டியைப் பற்றி கூறுவதானால் இடைக்கால அறிக்கையில் முதல் இரண்டு பக்கங்களில் ஒற்றையாட்சிக்கு மாற்றீடாக ஒரு மும்மொழிவு கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதிலே இலங்கைக்கு ஒற்றையாட்சி பொருத்தமற்றது என தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. உறுப்புரை இரண்டில் மாற்றீடாக நாடு ஒன்றாக இருக்கிறது என்பதை குறிக்கிறது.

சமஸ்டிக்கான குணாதியசங்கள் கொடுக்கப்படுகின்ற அதிகாரங்கள் தெளிவானதும் கொடுத்ததை திரும்ப பெற முடியாததாகவும், குறைக்கப்பட முடியாததாகவும், அதிகாரம் சம்பந்தமாக மத்திய அரசு தலையிட முடியாததாகவும் இருக்க வேண்டும். அவை இரண்டும் இந்த இடைக்கால அறிக்கையிலே உள்ளது. அத்துடன் அறுபது வருடங்களுக்கு முன்னைய சமஸ்டி ஒற்றையாட்சி என்கிற பதங்கள் இன்று மாறியுள்ளது.

ஒற்றையாட்சி என்கிற பதம் உருவானது பிரித்தானியாவில் ஒரு பாராளுமன்றத்திலிருந்ததான். அனால் இன்று பிரித்தானியாவில் பல பாராளுமன்றங்கள் உள்ளன. அத்துடன் பிரிந்து போவதற்கதான உரிமையும் உள்ளது. அதே போலதான் சமஸ்டியின் விளக்கமும் மாறியுள்ளது. உதாரணத்திற்கு இந்தியாவை எடுத்துக்கொள்ளலாம்.

இடைக்கால அறிக்கையின் சுபாவம் சமஸ்டிக்கு ஒத்ததாக இருக்கிறது. அண்மையிலே இலங்கை உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. இலங்கை தமிழரசுக்கட்சிக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கிலே ஒற்றையாட்சி உள்ள பல நாடுகள் சமஸ்டியாக இருக்கிறது.

சமஸ்டியாக இருக்கிற பல நாடுகள் ஒற்றையாட்சி முறைமையை கொண்டுள்ளன. ஆகவே இந்த சொற்பதங்களில் எந்தவிதமான அர்த்தங்களும் இல்லை என சொல்லியுள்ளது.

இலங்கை தமிழரசுக்கட்சி சமஸ்டி அடிப்படையிலான ஒரு தீர்வை கேட்பது அவர்களுடைய உரித்து என இலங்கை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆகவே பெயர் முக்கியமில்லை அறிக்கையின் உள்ளடக்கம்தான் முக்கியம் என்று தெரிவித்தார்.

13 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் கருந்துளை கண்டுபிடிப்பு!!

வானியல் நிபுணர்கள் தொலைதூரத்தில் உள்ள மிக அதிக எடை கொண்ட கருந்துளை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

பெருவெடிப்பிற்கு 690 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு நாம் பார்க்கும் இந்த கருந்துளை, வியத்தகு 13 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.

ஆனால், சூரியனின் எடையை விட 800 மில்லியன் மடங்கு எடை கொண்ட இந்த கருந்துளை, பிரபஞ்சம் தோன்றியதற்குப் பிறகு இத்தகைய மிகப்பெரிய அளவை மிகச்சிறிய நாட்களில் எட்டியுள்ளது வியப்பிற்குரியதாகும்.

நேச்சர் என்ற அறிவியல் சஞ்சிகை இது தொடர்பாக ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது.

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கருந்துளை ஒரு நட்சத்திர மண்டலத்தின் மையத்தில் இருந்துகொண்டு அண்டும் பொருட்களை இழுத்துக்கொண்டுள்ளது. எனவே இது குவாசர் என்று அழைக்கப்படுகிறது.

இந்த குவாசர் மிகவும் சுவாரஸ்யமானது. ஏனென்றால், பிரபஞ்சம் அதன் தற்போதைய வயதில் 5% இருக்கும் சமயத்தில் இருந்து இது வந்திருக்கிறது.

இந்த நேரத்தில்தான், முதல் நட்சத்திரம் தோன்றியதற்கு முன்பு, பிரபஞ்சம் இருண்ட காலத்திலிருந்து வெளிவரத்தொடங்கியது.

குவாசரின் தொலைவானது ரெட்ஷிப்ட் என்னும் ஒரு அளவுகோல் மூலம் அளவிடப்படுகிறது. பேரண்டம் விரிவடைவதன் காரணமாக குவாசரின் ஒளியின் அலை நீளம் புவியை அடைவதற்கு முன்பு எந்த அளவு இழுபட்டுள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த ரெட் ஷிப்ட் மதிப்பிடப்படுகிறது.

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கருந்துளை 7.54 ரெட்ஷிப்ட் அளவைக் கொண்டுள்ளது.

எந்த அளவிற்கு ரெட்ஷிப்ட் அதிகமாக இருக்கின்றதோ அந்த அளவிற்கு அதன் தொலைவும் அதிகமாக இருக்கும்.

இந்த கண்டுபிடிப்பிற்கு முன்பு, அதிகத் தொலைவுள்ள குவாசராக அறியப்பட்டது, பிரபஞ்சம் தோன்றி 800 மில்லியன் ஆண்டுகள் ஆன பொழுது தோன்றியது.

விரிவான ஆராய்ச்சிகள் செய்யப்பட்டபோதும் இவ்வளவு தூரத்தில் உள்ள ஒரு பொருளை காண்பதற்கு ஐந்தாண்டு காலம் ஆகியிருக்கிறது.

வவுனியா தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தவிசாளர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவு!!

 
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு தவிசாளராக இருந்த ஓருவர் இன்று(10.12.2017) ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்டார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச சபைத் தலைவராக விளங்கிய முருகுப்பிள்ளை பாலசுப்பிரமணியம் மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்களே இவ்வாறு இணைந்து கொண்டனர்.

போரால் பாதிக்கப்பட்ட தமது பிரதேசத்தை முன்னர் தான் தலைவராக இருந்த காலத்தில் அபிவிருத்தி செய்ய முடியவில்லை எனவும் அரசுடன் இணைந்து அபிவிருத்தியை முன்னெடுக்கவுள்ளதாகவும் ஐக்கிய தேசியக்கட்சி வவுனியா வடக்கு பிரதேச சபையை கைப்பற்றும் எனவும் இதன்போது தெரிவித்தார்.

இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் கருணாதாச, இணை ஓருங்கிணைப்பாளர் தம்பாபிள்ளை பிறமேந்திரராஜா மற்றும் கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

வவுனியா தவசிக்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் ஐயப்பன் குருபூஜையும் குருசாமிகள் கௌரவிப்பும்!!

 
வவுனியா தவசிக்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வருடாந்தம் நடைபெறும் ஐயப்பன் குருபூஜை மற்றும் குருசாமிகள் கௌரவிப்பு நிகழ்வுகள் நேற்று சனிக்கிழமை (09.12.2017) காலை 11 மணியளவில் பாபு குருசாமி தலைமையில் சிறப்பாக நடை பெற்றது.

அகில இலங்கை பாரத ஐயப்ப சேவா சங்க ஒன்றியத்தலைவர் குருநாதர் (ரவிகுருசாமி) அவர்களுக்கும் வவுனியா மாவட்ட குருசாமி மற்றும் ஏனைய மாவட்ட குருசாமிகளும் கௌரவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது.

மின்சாரம் தாக்கி இராணுவச் சிப்பாய் பலி!!

பனாகொடை இராணுவ முகாமில் கடமையாற்றும் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

முகாமில் இருக்கும் தடாகத்தில் மின் கோளாரை சரிசெய்து கொண்டிருந்த போதே அவர் இவ்வாறு மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இவர் பன்னிப்பிடிய – பெலன்வத்தை பகுதியைச் சேர்ந்த 28 வயதான இராணுவச் சிப்பாய் ஆகும்.

சடலம் ஹோமாகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இலங்கையின் பந்து வீச்சில் சிக்கி சின்னாபின்னமான இந்திய அணி : இலங்கை அணி அபார வெற்றி!!

தொடர்ந்து 12 தோல்விகளைச் சந்தித்த இலங்கை அணி இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இந்திய அணியிடம் இழந்த இலங்கை, அடுத்து 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

முதல் ஒரு நாள் போட்டி இன்று தர்மசாலாவில் நடைபெற்றது. இதில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித்தலைவர் திசரா பெரேரா பந்துவீச்சை தெரிவு செய்தார்.

அதன்படி, ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா இருவரும் ஆட்டத்தை தொடங்கினர். ஆட்டத்தின் 2வது ஓவரிலே இந்திய அணிக்கு அதிர்ச்சி காந்திருந்தது. அதில், ஷிகர் தவான், ரன்கள் ஏதும் எடுக்காமல் டக் அவுட் முறையில் வெளியேறினார். தவானைத் தொடர்ந்து இந்திய அணியின் தலைவர் ரோகித்சர்மா 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இதற்கு அடுத்து வந்த தினேஷ் கார்த்திக்கும் டக் அவுட் முறையில் வெளியேற இந்திய அணி 8.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு வெறும் 8 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தது.

தொடர்ந்து வந்த மணீஷ் பாண்டே (2), ஷ்ரேயாஸ் ஐயர் (9), ஹர்திக் பாண்டியா (10), புவனேஸ்வர் குமார் (0) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற இந்திய அணி 16.4 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 29 ஓட்டங்கள் எடுத்து தத்தளித்தது.

இதையடுத்து டோனி மற்றும் குல்தீப் யாதவ் ஜோடி ஓரளவு ஓட்டங்கள் சேர்த்தது. குல்தீப் 19 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு டோனியுடன் பும்ரா இணைந்தார்.

கடைசியில் டோனி தனது அதிரடியை காட்டி பவுண்டரிகள், சிக்சர்கள் என்று விளாசினார். 15 பந்துகள் நிலைத்து நின்ற பும்ரா ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

அடுத்த சாஹல் டோனியுடன் இணைந்தார். இந்த நிலையில் அதிரடி காட்டிய டோனி தனது 67வது அரைசதத்தை கடந்தார். இறுதியில், 38.2வது ஓவரில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. டோனி 10 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உட்பட 65 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இலங்கை சார்பாக சுரங்க லக்மல் 4 விக்கெட்டுகளும், நுவான் பிரதீப் 2 விக்கெட்டுகளும், மத்யூஸ், பெரேரா, பத்திரன, தனஜெய ஆகியோர் தல ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

113 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய இலங்கை அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 114 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இலங்கை அணியின் தரங்க 49 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். மத்யூஸ் 25 ஓட்டங்களும் டிக்வெல்ல 26 ஓட்டங்களும் சேர்த்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.

இதன் மூலம் இலங்கை அணி ஒருநாள் போட்டியில் அடைந்த 12 தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. மேலும், மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

வடகொரியாவின் மிரட்டலை சமாளிக்க ஜப்பான் அதிரடி திட்டம்!!

வடகொரியாவின் மிரட்டலை சமாளிக்க ஜப்பான், நீண்ட தூரம் பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணைகளை அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து வாங்க திட்டமிட்டுள்ளது.

அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு வடகொரியா சிம்ம சொப்பனமாக இருந்து வரும் நிலையில் தொடர்ந்து அணு குண்டு சோதனைகளையும், ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது.

சமீபகாலமாக பசிபிக் கடலில் உள்ள அமெரிக்க பிராந்தியத்தை தாக்கும் வகையிலான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசி வடகொரியா சோதனை நடத்தி வருகிறது. இந்த ஏவுகணைகள் ஜப்பான் நிலப்பரப்பின் மீது பறந்து சென்று குறிப்பிட்ட இலக்கை அடைகிறது.

எனவே வடகொரியாவின் மிரட்டலை சமாளிக்க ஜப்பான் ஜெ.ஏ.எஸ்.எஸ்.எம். மற்றும் எல்.ஆர்.ஏ.எஸ்.எம். எனப்படும் நீண்ட தூரம் பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணைகளை அமெரிக்காவிடம் இருந்து வாங்குகிறது.

900 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து சென்று தாக்கும் திறன் படைத்த இந்த ஏவுகணைகளை போர் விமானங்களில் இருந்து செலுத்தலாம். அதே போன்று 500 கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று தாக்கும் காங்ஸ்பெர்க் என்ற ஏவுகணையை நோர்வேயிடம் இருந்து வாங்குகிறது.

இத்தகவலை ஜப்பான் ராணுவ அமைச்சர் இட்ஸ்னோரி அனோடெரா தெரிவித்துள்ளார்.

உயிருடன் எரித்துக் கொல்லப்படும் முன் என்னிடம் பேசினார் : மனைவியின் உருக்கமான பேட்டி!!

ராஜஸ்தானில் முகமது அப்ரசல் என்பவர் லவ் ஜிஹாத் என்ற பெயரில் உயிருடன் எரித்துக் கொல்லப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இச்சம்பவம் தொடர்பாக அவரது மனைவி உருக்கமான பேட்டியளித்துள்ளார். அவர் கூறுகையில், என்னுடைய கணவர் அப்போது தான் போன் செய்து பேசினார், 50000 பணத்தை உனக்கு அனுப்புகிறேன். அதை வைத்து கடனை அடை, வங்கிக்கு சென்று பார் பணம் வந்துவிட்டதா என்று கூறியுள்ளார்.

அந்த பெண்ணும் வங்கிக்கு சென்று இரண்டு மணிநேரமாக காத்திருந்துள்ளார், போனும் ஓப் செய்து வைக்கப்பட்டு இருந்துள்ளது. பின்னர் தான் அவர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.

மேலும் எங்களுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள், வறுமையால் ஒரு மகள் வேலைக்கு செல்கிறாள், அவருக்கு அப்படி ஒரு எண்ணமே வந்திருக்காது, குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வாங்கித்தர வேண்டும் என கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.

விடுதி மாடியிலிருந்து ஒன்றாக குதித்து தற்கொலை செய்த மாணவிகள்: காரணம் என்ன?

தமிழகத்தில் தனியார் பள்ளியிலிருந்து நேற்று காணாமல் போன மாணவிகள் இருவர் விடுதி மாடியிலிருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தின் அரிசிப்பாளையத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது, இப்பள்ளியில் கவிஸ்ரீ மற்றும் ஜெயராணி என இருவர் எட்டாம் வகுப்பு படித்து வருகின்றனர்.

நெருங்கிய தோழிகளான இருவரும் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை. பெற்றோர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை, இந்நிலையில் இன்று காலை உணவு விடுதி ஒன்றின் மாடியிலிருந்து ஒன்றாக குதித்து தற்கொலைக்கு முயன்றனர்.

இதில் ஒரு மாணவி சம்பவ இடத்திலேயே பலியாக, மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்கொலைக்கு இருவரையும் ஆசிரியர் தனித்தனியாக பிரித்து வகுப்பறையில் அமர வைத்ததே காரணம் என கூறப்படுகிறது.

பாலியல் வல்லுறவுக்கு ஆளான 10 வயது சிறுமியின் குழந்தையை தத்தெடுத்த தம்பதி!!

பாலியல் வல்லுறவுக்கு ஆளான பத்து வயது சிறுமியின் குழந்தையை மஹாராஷ்டிரத் தம்பதியினர் தத்தெடுத்துள்ளனர்.

சண்டிகரைச் சேர்ந்த பத்து வயதே ஆன சிறுமி தன் தாய் வழி மாமாக்கள் இருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இதனால் அச்சிறுமி கர்ப்பம் அடைந்தார், அவளுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் பெண் குழந்தையும் பிறந்தது.

அக்குழந்தையை வெளிநாட்டு தம்பதி தத்தெடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் குழந்தைகள் நல வாரியத்தின் சேர்மன் சங்கீதா வர்தன் அதை மறுத்தார்.

இந்நிலையில் மஹாராஷ்டிராவை சேர்ந்த தம்பதியினர் தத்தெடுத்துள்ளனர், எனினும் குழந்தையின் நலன் பற்றி சண்டிகரில் உள்ள தத்தெடுப்பு நிறுவனம் தொடர்ந்து கண்காணித்து வரும் என தெரியவந்துள்ளது.

சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனை விதித்து விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

பிரசவத்தில் பெண்ணுக்கு கடற்கன்னி குழந்தை பிறந்த அதிசயம்!!

இந்தியாவில் பெண் ஒருவருக்கு கடற்கன்னி உருவம் கொண்ட குழந்தை பிரசவத்தில் பிறந்த நிலையில் நான்கு மணி நேரத்தில் உயிரிழந்துள்ளது.

மேற்குவங்க மாநிலத்தின் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் முஷ்குரா பிபி (23) என்ற பெண் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு பிரசவத்தில் கடற்கன்னி போன்ற உருவம் கொண்ட குழந்தை பிறந்தது. அதாவது குழந்தையின் இரண்டு கால்களும் ஓட்டியே இருந்தன, அதே போல இடுப்பு பகுதியும் சரியான வளர்ச்சியடையாமல் இருந்துள்ளது.

இதன் காரணமாக அந்த குழந்தையின் பாலினத்தை மருத்துவர்களால் கண்டுப்பிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் பிறந்த நான்கு மணி நேரத்தில் குழந்தை உயிரிழந்து விட்டது.

இது குறித்து குழந்தைகள் நல மருத்துவர் சுதிப் சஹா கூறுகையில், குழந்தையின் பெற்றோர் கூலி வேலை செய்து வருகிறார்கள். அவர்களிடம் போதிய பணம் இல்லாததால் கர்ப்பமாக இருக்கும் போது சரியான மருந்துகளை அந்த பெண் எடுத்து கொள்ளவில்லை.

மேலும் குழந்தைக்கு கிடைக்க வேண்டிய ஊட்டச்சத்து, ரத்த ஓட்டம் சரியாக கிடைக்காமல் போனால் கூட இந்த பிரச்சனை வரும்.

கடற்கன்னி போல பிறக்கும் குழந்தைகளின் நோய்க்கு மெர்மெய்ட் சிண்ட்ரோம் என பெயராகும் என கூறியுள்ளார். மெர்மெய்ட் சிண்ட்ரோம் 60,000லிருந்து 100,000 வரை பிறக்கும் குழந்தைகளில் ஒன்றை தாக்குகிறது.

இந்தியாவில் இது போல ஏற்கனவே கடந்தாண்டு ஒரு குழந்தை பிறந்து இறந்துள்ளது. உலகளவில் மெர்மெய்ட் சிண்ட்ரோம் குறைப்பாட்டால் பிறந்த எந்த குழந்தைகளும் இதுவரை அதிக நாட்கள் உயிரோடு இருந்ததில்லை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

வவுனியாவில் வீடு புகுந்து திருட்டு : மோப்ப நாயின் உதவியுடன் பொலிசார் தீவிர தேடுதல்!!

வவுனியா குருமன்காடு, கரப்பன்காட்டில் நேற்று (08.12.2017) இரவு இரு வீடுகளில் புகுந்த திருடர்கள் அங்கு தமது கைவரிசையைக்காட்டியுள்ளனர். இதையடுத்து இன்று (09.12.2017) பொலிசார் சம்பவ இடத்தில் மோப்ப நாயின் உதவியுடன் தீவிர தேடுதலை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று இரவு 8.45 மணியளவில் குருமன்காடு, கரப்பன்காட்டிலுள்ள இரு வீடுகளுக்குள் சென்ற திருடர்கள் அங்கு வீட்டு உரிமையாளர்கள் முன்நிலையில் அவர்களின் கைபேசிகளையும் பணப்பையிலிருந்த பணத்தினையும் திருடிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து குறித்த வீட்டு உரிமையாளர் பொலிசாரின் அவரச தொலைபேசி இலக்கத்திற்கு முறையிட்டுள்ளார்.
இதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகள் மேற்கொண்டு வரும்போது அதே பகுதியிலுள்ள இன்னொரு வீட்டிற்குள் புகுந்த குறித்த திருடர்கள் அங்கிருந்த மின்சார தொழிநுட்பப் பொருட்களை ஐபாட், கைபேசிகள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து இரு வீட்டு உரிமையாளர்களும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் மேலதிகமாக இன்று சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் மோப்பநாய்களின் உதவியுடன் திருடர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் விமானப்படை வீரர் படுகாயம்!!

 
வவுனியாவில் இன்று (09.12.2017) மாலை 4 மணியளவில் கண்டி வீதியில் இடம்பெற்ற விபத்தில் வன்னி விமானப்படைத்தளத்தில் பணியாற்றும் விமானப்படை வீரர் படுகாயமடைந்த நிலையில் வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று மாலை 4 மணியளவில் வன்னி விமானப்படை தளத்திற்கு அருகில் துவிச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த விமானப்படை வீரரை நுவரெலியாவிலிருந்து வந்த மோட்டார் கார் மோதியதில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த வன்னி விமானப்படை வீரர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பாக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா நெளுக்குளத்தில் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யும் நபர் கைது!!

வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வரும் நபரை நெளுக்குளம் பொலிஸார் நேற்று (08.12.2017) மாலை கைது செய்துள்ளனர்.

நெளுக்குளம், குழுமாட்டுச்சந்தி, காத்தான் கோட்டம் , தாஸ்கோட்டம் , ஊர்மிளா கோட்டம் , கூமாங்குளம் போன்ற பகுதியிலுள்ள இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக நெளுக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நெளுக்குளம் பொலிஸ் பொருப்பதிகாரி ஏ.எம்.எஸ்.அத்தநாயக்க தலைமையிலான பொலிஸ் சார்ஜன் சந்திரதாச (41370), பொலிஸ் கொஸ்தபர்களான நிரோசன் (88567), ஜெயரூபன் (89437) ஆகிய பொலிஸார் குறித்த நபரை தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது நேற்று (08.12.2017) மாலை குழுமாட்டுச்சந்தி கள்ளுத்தவறணைக்கு அருகாமையில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயம் காத்தான் கோட்டம் பகுதியைச் சேர்ந்த 32 வயது நபரை நெளுக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபரிடமிருந்து ஒரு பொதியில் 10 கிராம் வீதம் பொதி செய்யப்பட்டிருந்த 5 பொதிகளை பொலிஸார் கைப்பற்றியதுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நெளுக்குளம் பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகள் எதும் இடம்பெறும் பட்சத்தில் நெளுக்குளம் பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கத்திற்கு ( 024 3242467) தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்தியாவில் இலங்கைச் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை!!

வேலை பெற்றுத் தருவதாக கூறி கரூரிலுள்ள இலங்கை அகதிச் சிறுமியொருவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுமியின் தாயார் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே குறித்த ஏழு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மூன்று தலைமுறைகளாக கரூரில் அகதி வாழ்க்கை வாழ்ந்து வரும் குடும்பத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி வறுமையின் காரணமாக பாடசாலை கல்வியை தொடர முடியாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் குறித்த சிறுமியின் தாய்க்கு அறிமுகமான சரண்யா எனும் 27 வயதான பெண்ணொருவர் வீட்டில் இருக்கும் சிறுமிக்கு வேலை பெற்றுத் தருவதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் திடீரென்று அவர் சிறுமியை திருப்பூருக்கு அழைத்துச் சென்று அங்கு மேலும் சிலருடன் இணைந்து அவரை பலவந்தமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பி வந்த சிறுமியின் செயற்பாட்டில் ஏற்பட்டிருந்த மாற்றம் தொடர்பில் சந்தேகமடைந்த சிறுமியின் தாயார் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து அனைத்து விடயங்களும் தெரியவந்துள்ள நிலையில் நான்கு பெண்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், இந்த ஏழு பேர் மீதும் ஆட்கடத்தல், சிறுவர் துஷ்பிரயோகம், சட்டவிரோதமாகத் தடுத்து வைத்தல் ஆகிய பிரிவுகளில் பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.