வெளிநாட்டில் இலங்கையர் இருவருக்கு ஏற்பட்ட பரிதாபம் : தப்பி வந்தவர்களின் திகில் அனுபவம்!!

வேலைவாய்ப்பு நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட இரண்டு இலங்கையர்களை மலேசிய பொலிஸார் மீட்டுள்ளனர்.

மலேசியாவில் கப்பல் பொறியியலாளர் வேலையை பெற்று தருவதாக கூறி இலங்கை வெளிநாட்டு முகவரால் குறித்த இருவரும் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

மதுஷங்க பெரேரா எதிரிசிங்க மற்றும் துஷான் கவிந்த டி சில்வா என்ற 21 வயதான இளைஞர்களே இவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளனர்.

குறித்த தொழிலுக்காக இருவரும் தலா 325,000 ரூபாய் பணம் செலுத்தி முகவர்களின் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.

கடந்த 8ஆம் திகதி இரவு 11 மணியளவில் குறித்த இருவரும் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

இலங்கை முகவர்களால் அனுப்பப்பட்ட 2 இந்தியர்கள் குறித்த இருவரையும் வரவேற்றுள்ளனர். அத்துடன் Sibu என்ற பகுதிக்கு அழைத்து செல்வதற்கு முன்னர் தங்களின் கடவுச்சீட்டுகளை சமர்ப்பிக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடவுச்சீட்டுகளை சமர்ப்பித்த பின்னர் Sibu பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அங்கு 25 வயதான மற்றுமொரு இந்தியர் அவர்களை காரில் கப்பலுக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு அவர்கள் கட்டாய வேலையாட்களாக வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, பணியிடத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை.

கடந்த 17ஆம் திகதி அங்கிருந்து தப்பிய இருவரும் மாலை 4.40 மணியளவில் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளனர்.

Sibu மாவட்ட தலைமை பொலிஸ் அதிகாரி Stanley Jonathan Ringgit இந்த சம்பவத்தை உறுதி செய்துள்ளார். அதற்கமைய விசாரணைகளை ஆரம்பித்தவர் குறித்த இருவரையும் மருத்துவ பரிசோதனை செய்யுமாறு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

25 வயதான இந்திய முகவர் நேற்று 5.30 மணிக்கு கைது செய்யப்பட்டார். தனிநபர் கடத்தல் மற்றும் 2007 ஆம் ஆண்டின் சட்டவிரோத ஆட்கடத்தல் சட்டத்தின் கீழ் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீமான், தொல்.திருமாவளவன் உள்ளிட்டவர்கள் கைது!!

ராம ராஜ்ஜிய ரத யாத்திரை தமிழகம் வந்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட முயன்ற அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விஷ்வ ஹிந்து பரிஷத் ரதயாத்திரைக்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினரும், இஸ்லாமிய அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்த யாத்திரையைக் கண்டித்து, நெல்லை மாவட்டம் செங்கோட்டையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தின்போது, ரத யாத்திரைக்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர், முழக்கமிட்டனர், ரத யாத்திரையை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட சீமான் உட்பட, நாம் தமிழர் கட்சியினர் அனைவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

அத்துடன், இந்த யாத்திரையை, எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடச் சென்ற, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை, மதுரை மாவட்டம் பாறைப்பட்டியில் வைத்து பொலிஸார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் தென்காசியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் மனித நேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

வவுனியாவில் உணவு வாங்குபவர்களுக்கு எச்சரிக்கை : ஒருவர் கைது!!

 
வவுனியா புகையிரத வீதியில் அமைந்துள்ள அரச வங்கிக்கு அருகேயுள்ள நடமாடும் விற்பனை நிலையத்தினை சுகாதார பிரிவினர் சுற்றிவளைத்து பரிசோதனை மேற்கொண்ட சமயத்தில் சுகாதார சீர்கேடான உணவுப் பொருட்களை விற்பனை செய்த குறித்த விற்பனை நிலையத்தின் பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.

குறித்த பரிசோதனை இன்று (20.03.2018) காலை மேற்கொள்ளப்பட்ட சமயத்தில் பழுதடைந்த மீன் போன்றவற்றை விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

இவர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

கணவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க வருகிறார் சசிகலா!!

உடல்நலக் குறைவால் காலமான கணவர் நடராஜன் இறுதிச் சடங்கில் பங்கேற்க பெங்களூரு சிறையில் இருந்து பிணையில் வருகிறார் சசிகலா.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் பெங்களூரு சிறையில் 4 ஆண்டு காலம் தண்டனையை அனுபவித்து வருகிறார் சசிகலா.

கடந்த ஆண்டு கணவர் நடராஜனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட போது பிணையில் வந்திருந்த சசிகலா, சென்னையில் இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா வீட்டில் தங்கி இருந்து கணவர் நடராஜனை மருத்துவமனைக்கு சென்று பார்த்து வந்தார்.

கடந்த 16ம் திகதி நடராஜன் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் சசிகலா பிணையில் வருவார் என கூறப்பட்டது.

இது தொடர்பாக அவரது வழக்கறிஞர்கள் பெங்களூரு சிறையில் நேற்று சசிகலாவுடன் ஆலோசனை நடத்தி இருந்தனர். சிறை நிர்வாகத்திடம் பிணை கேட்டு விண்ணப்பித்தனர்.

எனினும் முதலில் கணவர் நடராஜன் சுகயீனமுற்று இருந்த போது பிணையில் வெளியில் வந்து 5 மாதங்களே ஆன நிலையில் கணவர் இறந்தால் மட்டுமே பிணை வழங்கப்படும் என சிறை நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இன்று அதிகாலை நடராஜன் உயிர் பிரிந்தது. இதையடுத்து நடராஜன் உடல் எம்பாமிங் செய்யப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னையில் சில மணிநேரங்கள் வைக்கப்படும்.

பின்னர் தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்துக்கு நடராஜன் உடல் எடுத்துச் செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெறும்.

இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக சசிகலா பிணையில் வருகிறார். நடராஜனின் இறப்பு சான்றிதழ் கொடுக்கப்பட்டவுடன் பெங்களூரு நிர்வாகம் சசிகலாவுக்கு பிணை வழங்கும்.

சசிகலாவின் கணவர் நடராஜன் காலமானார்!!

சசிகலா கணவரும் புதிய பார்வை இதழின் ஆசிரியருமான ம.நடராஜன் சென்னையில் காலமானார்.

உடல் நலக்குறைவினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில் சிகிச்சைகள் பலனளிக்காததால் அவர் நள்ளிரவு 1.30 மணியளவில் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சசிகலாவின் கணவர் நடராஜன் கல்லீரல் மற்றும் சீறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்த நிலையில், இதையடுத்து அவருக்கு சமீபத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டது.

அறுவைசிகிச்சை செய்யப்பட்ட பின்பு, அவரை பார்ப்பதற்காகச் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா 5 நாட்கள் பரோலில் வந்தார். தொடர்ந்து, வீட்டில் இருந்தவாறு அவருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனினும், கடந்த சில நாட்களாக அவர் உடல்நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தநிலையில், சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

தற்போது, அவரது உடல் எம்பார்மிங் செய்யப்படுவதற்காக போரூர் ராமச்சந்திரா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

எம்பார்மிங் முடிந்த பின் சென்னை பெசன்ட் நகர் வீட்டில் காலை 7 மணியளவில் அஞ்சலிக்காக வைக்கப்படும் எனவும் இதனையடுத்து, அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டுச் செல்லப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆதரவு வழங்கியமையால் இலங்கைக்கு ஆபத்து!!

இந்திய கிரிக்கெட் அணிக்கு இலங்கையர்கள் ஆதரவு வழங்கியமையினால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு ஆதரவாக எழுப்பப்பட்ட கோஷங்கள் எட்கா உடன்படிக்கைகளுக்கு கைச்சாத்திட பயன்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொழும்பு சுகததாஸ மைதானத்தில் நேற்று முன்தினம் இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான சுந்திர கிண்ண இறுதி போட்டி இடம்பெற்றது.

இந்தப் போட்டியில் இலங்கையர்கள் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என ஆதரவு வழங்கியமை தொடர்பில் விமல் வீரவன்ச விமர்சனம் வெளியிட்டுள்ளார்.

பங்களாதேஷ் அணியில் வீரர்கள் சிலர் தவறாக நடந்து கொண்ட போதிலும், அவர்கள் இலங்கையின் அரசியல் அல்லது பொருளாதார ரீதியில் தலையிடுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இறுதிப்போட்டியின் போது இந்திய அணிக்கு இலங்கை ரகசியர்கள் பெருமளவு ஆதரவினை வழங்கியிருந்தனர். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இலங்கை தேசிய கொடியை மைதானத்தில் ஏந்தியவாறு இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா நடந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பெண்ணின் கொலைக்கு நீதி கோரும் சகோதரி!!

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மகாவலி கிளை ஆற்றின் புலிபாய்ந்தகலில் கொலைசெய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் (18.03) சடலமாக மீட்கப்பட்ட பெண், வவுனியாவைச் சேர்ந்தவரென, அப்பெண்ணின் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார் என, வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, மரக்காப்பளை, கணேசபுரத்தைச் சேர்ந்த 32 வயதான மருதை சுதர்சினி என்பவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இப்பெண், குடும்பத்தில் காணப்பட்ட வறுமை காரணமாக, சவூதி அரேபியாவுக்கு வீட்டு பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், அங்கு வீட்டு எஜமானுடன் ஏற்பட்ட பிரச்சினையையடுத்து, கடந்த 16ஆம் திகதியன்று நாட்டுக்குத் திரும்புவதாகவும், விமான நிலையத்துக்கு வருமாறு, சகோதரிக்கு தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த திகதியில் சகோதரியின் கணவர், விமான நிலையத்துக்குச் சென்று சுமார் 10 மணித்தியாலங்கள் காத்திருந்தபோதும், அவர் அங்குவரவில்லை. அத்துடன், அவரின் அலைபேசியும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதையடுத்து, வரவேற்கச் சென்ற சகோதரின் கணவர், அங்கிருந்த வீட்டுக்குத் திருப்பியுள்ளார்.

எனினும், வருவதாகக் கூறிய அப்பெண் எங்கு சென்றார், என்ன நடந்தது எனத் தேடிக்கொண்டிருந்த நிலையில், அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளாரென, வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள பிரேத அறையில் சகோதரியை அடையாளம் காட்டினோம். அவரைத் திட்டமிட்டுக் கொலை செய்துவிட்டு, அவரின் உடலில் இருந்த தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

“அத்துடன், அவரின் சடலத்துக்கு அருகில் வெறுமையான நகைப்பெட்டிகள், அவரின் பயணப்பொதி, செருப்பு, கடவுச்சீட்டு, அடையாள அட்டை என்பன மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறான ஒரு நிலைமை, எந்தப் பெண்ணுக்கம் இனி ஏற்படக்கூடாது. எனது சகோதரியின் கொலைக்கு நீதி வேண்டும்” என, சடலமாக மீட்கப்பட்டவரின் சகோதரி எம்.சுபானந்தராணி, அழுது புலம்பியவாறு தெரிவித்தார்.

மகாவலி கிளை ஆற்றின் சற்றுத் தொலைவில், சுதர்சினி அணிந்திருந்ததாக நம்பப்படும் காலணிகள், காதணி, சுதர்சினியைத் தாக்கியிருக்கக் கூடும் என்று கருதப்படும் உடைந்த போத்தல் கண்ணாடிகள், இரத்தக் கறை, தலைமுடி என்பனவும், இன்னும் சற்றுத்தொலைவில் சுதர்சினியின் பயணப்பொதியும் இன்னும் சில பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

சுதர்சினியின் மண்டை பிளக்கப்பட்டிருந்ததாகவும், ஆடைகள் கிழிக்கப்பட்ட நிலையில் சடலம், ஆற்றில் புதர்களுக்கிடையில் சிக்கிக் கொண்டிருந்ததெனவும் பொஸிஸார் தெரிவித்தனர்.

சடலத்தைப் பார்வையிட்ட பதில் நீதிபதி ஹபீப் றிபான், சடலத்தை சட்ட வைத்திய அதிகாரியின் உடற் கூறாய்வுக்காக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைவக்கு அனுப்பி வைக்குமாறும், வவுனியாவிலுள்ள உறவினர்களுக்கு அறிவித்து அவர்களை அழைப்பித்து வாக்குமூலங்களைப் பெற்றுக் கொள்ளுமாறும், வாழைச்சேனைப் பொலிஸ் பொறுப்பதிகாரி டி.எஸ். பெரமுனவுக்கு உத்தரவிட்டார்.

இது தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார், பல கோணங்களில் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு குடிநீர் வடிகட்டும் இயந்திரத்தொகுதி பாவனைக்கு கையளிப்பு!!

 
வடக்கு மாகாண சபை உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கத்தின் மாகாண நிதி ஒதுக்கீட்டில் வவுனியா சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயத்திற்கு பொருத்தப்பட்ட குடிநீர்வடிகட்டும் இயந்திரத்தொகுதி இன்று (19.03.2018) மாணவர்களின் பாவனைக்காக சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது.

வவுனியா மாவட்டத்தில் அதிகரித்துவரும் சிறுநீரக நோயின் தாக்கத்தை கவனத்தில்கொண்டு சிறுவயதிலிருந்தே மாணவர்கள் சுத்தமான குடிநீரை பருகும் நோக்குடன் இந்த குடிநீர்வடிகட்டும் இயந்திரத்தொகுதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு இதே பாடசாலைக்கு நிழற்பிரதி இயந்திரம் ஒன்று முன்னாள் சுகாதார அமைச்சரால் வழங்கப்பட்டபோது பாடசாலை அதிபரால் குடிநீர்வடிகட்டும் இயந்தரமொன்றின் தேவைபற்றி கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா ஓமந்தை நாவற்குளம் பாவட்டங்குள வீதி புனரமைப்பு!!

 
நீண்ட கால யுத்தத்தின் பின்னர் குடியேற்றப்பட்ட வவுனியா ஓமந்தை நாவற்குள கிராமத்தில் அமைந்துள்ள பாவட்டங்குள வீதி நீண்ட காலமாக புனரமைக்கப்படாத நிலையில் மக்களின் நலன் கருதி புனரமைக்கப்பட்டுள்ளது.

இப்பிரதேசத்தில் மீள்குடியேற்றப்பட்ட 35 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வீதி சீரின்மையால் பல பிரச்சனைகளை எதிர் நோக்கி வந்துள்ளனர்.

இந்நிலையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சார்பாக வவுனியா தெற்கு பிரதேச சபைக்கு பிரதேச சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட கதிரவேலு கணேசலிங்கம் தனது சொந்த நிதியைக் கொண்டு இவ் வீதியை புனரமைத்துள்ளார்.

இது பற்றி அக்கிராமத்தை சேர்ந்த மக்கள் தெரிவிக்கையில், பலர் தேர்தல் காலங்களில் வீதியை திருத்தித் தருவோம் என வாக்குறுதிகளை வழங்கினார்கள். தேர்தல் முடிந்த பின்பு யாரும் இந்த பக்கம் வரவில்லை பல சிரமங்களுக்கு மத்தியிலே இவ் வீதியால் எமது பிள்ளைகள் நோயாளிகள் வயோதிபர்கள் என பலரும் பயணம் செய்து வந்தனர்.

இந்நிலையில் தேர்தல் காலத்தில் தான் வழங்கிய வாக்குறுதியினை பதிவாளர் கணேசலிங்கம் செய்து முடித்துள்ளார். அவர் தேர்தல் காலத்தில் சொன்ன விடயங்களை செய்து வருகிறார்.அவரது சேவை இக்கிராமத்திற்கு வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியில் வித்தக விநாயகர் ஆலயம் புனர்நிர்மாணம்!!

 
வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியில் ஸ்ரீ இந்து வித்தக விநாயகர் ஆலயம் புனர்நிர்மாணம் செய்து பாடசாலை சமூகத்திடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (19.03) கல்லூரியின் அதிபர் த. பூலோகசிங்கம் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனின் பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியத்தின் கீழ் இவ் ஆலயம் புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

அத்துடன் புதிதாக பால முருகன் சிலை இ.சிவசுப்பிரமணியம், சு.சுந்தரமூர்த்தி ஆகியோரின் உபயத்தில் இந்துக்கல்லூரியில் பிரதிஸ்டை செய்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் முன்னாள் வவுனியா நகரசபை உப நகரபிதா சந்திரகுலசிங்கம் (மோகன்) மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

ஒரே ஒரு பேஸ்புக் பதிவால் கவிழும் நோர்வே அரசு!!

நோர்வே நாட்டில் எதிர்க்கட்சி குறித்து பேஸ்புக்கில் பெண் அமைச்சர் ஒருவர் பதிவிட்ட கருத்தால் அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

நோர்வேயில் பிரதமர் எர்னா சொல்பெர்க் தலைமையில் கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் ஆட்சி நடக்கிறது. தற்போது இது மைனாரிட்டி நிலையில் உள்ளது.

இந்த நிலையில் அரசியல் அங்கம் வகிக்கும் நீதித்துறை பெண் அமைச்சர் சில்வி லிஸ்தாக் தமது பேஸ்புக் பக்கத்தில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதில் 2011ம் ஆண்டில் தொழிலாளர் கட்சியின் ஆன்டர்ஸ் பெக்ரிங் பிரிவிக் தலைமையில் இருந்த ஆட்சி தீவிரவாதிகள் மீதான தாக்குதல் என்ற பெயரால் இளைஞர்கள் முகாமின் மீது தாக்குதல் நடத்தியது என தெரிவித்து இருந்தார்.

இது தொழிலாளர் கட்சிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அதனால் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து அமைச்சர் சில்வி லிஸ்தாக் தமது பேஸ்புக்கில் பதிவு செய்திருந்த தனது கருத்தை நீக்கிவிட்டார்.

இருந்தும் தொழிலாளர் கட்சியின் கோபம் தணியவில்லை. இதனையடுத்து நீதித்துறை அமைச்சர் சில்வி லிஸ்தாக் மீது பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

இத்தீர்மானம் வெற்றி பெற்றால் ஏற்கனவே சிறுபான்மையாக உள்ள அந்த அரசு கவிழும் அபாயத்தில் உள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு யூலை மாதம் 22 ஆம் திகதி வலதுசாரி போராளியான AndersBehring Breivik தலைநகர் ஓஸ்லோவில் மேற்கொண்ட வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.

மட்டுமின்றி துப்பாக்கியால் நடத்திய தாக்குதலில் 69 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலும் இளைஞர்களே கொல்லப்பட்டனர்.

குறித்த சம்பவத்தை சுட்டிக்காட்டியே அமைச்சர் சில்வி தமது பேஸ்புக் பக்கத்தில் புகைப்படங்களுடன் தொழிலாளர் கட்சி மீது அந்த கருத்தை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களது மகன் உங்களிடம் இருந்தால் கொடுத்துவிடுங்கள் : கனடிய பெற்றோர் உருக்கம்!!

கனடாவின் மொன்ட்ரியலை சேர்ந்த 10 வயது சிறுவன் காணாமல் போனதையடுத்து அவனது பெற்றோர் உருக்கமான கோரிக்கையை விடுத்துள்ளனர்,

Ariel Jeffrey Kouakou (10) என்ற சிறுவன் கடந்த 17 ஆம் திகதி தனது நண்பனின் வீட்டிற்கு சென்றுவிட்டு வருவதாக தனது பெற்றோரிடம் தெரிவித்து விட்டு சென்றுள்ளான்,

ஆனால், 2 நாட்கள் ஆகியும் Ariel வீடு திரும்பவில்லை, இதனால் தனத மகனை யாரோ கடத்திவிட்டார்கள் என தந்தை Kouadio Frédéric Kouakou பொலிசில் புகார் அளித்துள்ளார்.

தனது மகனை கண்டுபிடித்துகொடுத்தால், $10,000 தொகை சன்மானம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, எனது மகன் உயிரோடு இருக்கிறான் என்று நான் நம்புகிறேன், அவன் கடத்தப்பட்டுள்ளான், உங்கள் யாரிடமாவது எனது மகன் இருந்தால் அவனை எங்களிடம் கொண்டு வந்து சேர்த்துவிடுங்கள் என கூறியுள்ளார்,

தாய் கூறியதாவது, எனது மகன் காணாமல் போன நாள் முதல் நான் நிம்மதியாக தூங்கவில்லை, எனது மகனால் எங்களை விட்டு நீண்ட தூரம் செல்ல இயலாது என கூறியுள்ளார்.

சிறுவனின் உடல் அடையாளங்களை தெளிவுப்படுத்தியுள்ள பொலிசார், சிறுவனை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது, விரைவில் கண்டுபிடிப்போம் என தெரிவித்துள்ளனர்.

பெற்ற மகள்களையே கௌரவக் கொலை செய்த தாய் : அதிர்ச்சிக் காரணம்!!

கனடாவில் தனது மூன்று மகள்களையும் கௌரவக் கொலை செய்த பெண்ணை நாடு கடத்தவும், நிரந்தர குடியுரிமையை பறிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த வெளியேற்ற உத்தரவானது Tooba Yahya என்ற குற்றம்சாட்டப்பட்ட அந்த பெண் கியூபெக் சிறையில் இருந்து விடுதலையான பின்னர் தான் நடைமுறைப்படுத்தப்படும் என அவரது வழக்கறிஞர் Stephane Handfield செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இதற்கான உத்தரவை கனடாவின் குடியேற்ற மற்றும் அகதிகள் நல வாரியம் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட சகோதரிகளான Zainab(19), Sahar (17) and Geeti (13) மற்றும் Yahya கணவரின் முதல் மனைவி ஹேனா(52) ஆகிய நான்கு பேரின் உடல்களும் 2009ம் ஆண்டு ஜூன் மாதம் கால்வாய் ஒன்றில் மூழ்கிய நிலையில் இருந்த காரில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கொலைகளில் Tooba Yahya கணவர் மற்றும் அவர்களின் மகன் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால் 2012ம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் பரோலில் வெளி வரமுடியாதவாறு 25 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தனது மூன்று மகள்களும் குடும்ப கட்டுப்பாடுகளை பின்பற்றாமல், மீறியதால் தாம் கெளரவ கொலை செய்ததாக Tooba Yahya வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானை சேர்ந்தவரான Tooba Yahya நாடு கடத்த உத்தரவிடப்பட்டுள்ளதால் Yahya தற்போது எந்த அந்தஸ்தும் இல்லாமல் கியூபெக் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைப் படித்தபின் இனி மது குடிக்கவே மாட்டீர்கள் : எச்சரிக்கை செய்தி!!

சீனாவில் 30 ஆண்டுகளாக மதுவுக்கு அடிமையான முதியவருக்கு கழுத்தில் வளர்ந்த பெரிய கட்டியால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சீனாவில் 68 வயது முதியவர் ஒருவர் மூச்சுவிட முடியாத அளவுக்கு கழுத்தில் கட்டியுடன் மருத்துவர்களை நாடியுள்ளார்.

மருத்துவர்கள் மேற்கொண்ட விசாரணையில் அவர் கடந்த 30 ஆண்டுகளாக தினசரி மது அருந்தி வந்ததும், அதை உணவுப்பழக்கமாகவே கடைபிடித்து வந்ததும் மருத்துவர்களுக்கு தெரிய வந்தது.

13 வயதில் இருந்தே மது அருந்தும் பழக்கத்தை வளர்த்துக் கொண்ட அந்த நபர் நாளடைவில் அதை கைவிட முடியாமலும் தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 1997 ஆம் ஆண்டு அவரது கழுத்தில் சின்னதாய் ஒரு கட்டி இருப்பதாய் கண்டறிந்துள்ளார்.

அது பெரிதாகி 2011 ஆம் ஆண்டு கழுத்தும் முழுவதும் வியாபித்துள்ளது. மருத்துவர்களை நாடினாலும், அது ஆபத்தானது அல்ல எனவும் மருந்துகளால் குணப்படுத்த முடியும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் நாளாக குறித்த நபருக்கு மூச்சு விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து 2017 ஆம் ஆண்டு இறுதியில் கட்டி இருந்த பகுதியில் வலியுடன் மூச்சு விட பிரயாசைப்பட்டுள்ளார்.

13 வயதில் மது அருந்த துவங்கியவர் தனது 40 வயது வரை தினமும் ஒரு லிற்றர் மது அருந்தி வந்துள்ளார்.

தனது நிலை மிகவும் மோசமாக இருப்பதை உணர்ந்த பின்னரே கடந்த 2016 ஆம் ஆண்டு அவர் மது அருந்துவதை நிறுத்தியுள்ளார்.

தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் அவருக்கு அறுவைசிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உலக அளவில் இதுபோன்ற கட்டியானது 400 பேருக்கு மட்டுமே வந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதில் 200 பேர் சீனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

படமாகிறது ஸ்ரீதேவியின் வாழ்க்கை : மயிலாக நடிக்கும் பிரபல நடிகை!!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க உள்ளதாக பாலிவுட் இயக்குநர் ஹன்சல் மேத்தா தெரிவித்துள்ளார்.

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக துபாய் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி, ஹொட்டல் குளியலறை நீர் தொட்டியில் மூழ்கி மரணமடைந்தார்.

இந்திய சினிமாவின் உச்ச கதாநாயகியாக வலம் வந்த ஸ்ரீதேவியின் இந்த திடீர் மறைவுக்கு முக்கிய நடிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

போனி கபூர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்திருந்த ஸ்ரீதேவிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவரின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப் படமாக எடுக்க கணவர் போனி கபூர் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், ஸ்ரீதேவியை வைத்து படமெடுக்க நினைத்திருந்த பிரபல இயக்குநர் ஹன்சல் மேத்தா, அவர் மறைந்துவிட்டதால் அவரின் வாழ்க்கையை படமாக எடுக்க முன் வந்துள்ளார்.

அந்த திரைப்படத்தில் ஸ்ரீதேவி வேடத்தில், கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த வித்யா பாலனை நடிக்க வைக்கப் போகிறாராம்.

சில்க் ஸ்மிதா படத்தில் வித்யா பாலன் நடித்த போது, அவருக்கு பெரிய கண்கள் இல்லை என்று விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

1000 ரூபாய் இன்று 5.7 லட்சம் கோடியாக மாறியது எப்படி : முகேஷ் அம்பானியின் வெற்றிக்கதை!!

இந்திய வர்த்தகத்தில் உலக ஜாம்பவான் எனப் போற்றப்படும் முகேஷ் அம்பானி தன்னுடைய கம்பனி முதன் முதலில் எப்படி ஆரம்பிக்கப்பட்டது என்பதை கூறியுள்ளார்.

முகேஷ் திருபாய் அம்பானி இந்தியாவின் நவீனத் தொழில்துறை முன்னோடிகளில் குறிப்பிடத்தக்க ஒருவர் ஆவார். இளம் வயதிலேயே தன்னுடைய தந்தையுடன் வணிகத்தில் ஈடுபட்ட அவர், மிக விரைவில் ஒரு தொழிலதிபராக வளர்ச்சிப் பெற்றார்.

இந்திய வர்த்தக உலக ஜாம்பவான் எனப் போற்றப்படும் திருபாய் அம்பானியின் மகன் ஆவார். ரிலையன்ஸ் என்கிற மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியதில் முகேஷின் பங்களிப்பு முக்கியமானது என்று கூறினால் மிகையாது.

இப்படி வர்த்தக உலகில் கொடிகட்டி பறக்கும் முகேஷ் அம்பானி சமீபத்தில் Financial Times ArcelorMittal Boldness in Business Awards என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், இந்த நிறுவனம் கடந்த 1966-ஆம் ஆண்டு என்னுடைய தந்தையான Dhirubhai Ambani-யால் 1,000 ரூபாயை வைத்து ஆரம்பிக்கப்பட்டது. அப்போது ஒரே ஒரு தொழிலாளி மட்டும் தான் வேலை பார்த்தார்.
அதன் பின் 5 தசாப்தங்கள் அதாவது 50 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது நிறுவனத்தின் நிகர மதிப்பு 5.7 லட்சம் கோடியாக உள்ளது.

எங்கள் நிறுவனத்தின் மிகப் பெரிய வெற்றிக்கு காரணம் பங்குதாரர்கள் என்றே கூறலாம். ஏனெனில் கடந்த 40 ஆண்டுகளில் எங்களிடம் பங்குதாரர்களாக உள்ளவர்கள் மதிப்பு, தற்போது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

அதுமட்டுமின்றி எந்தவொரு வணிகக் குழுவை விடவும், எங்கள் நிறுவனம் இந்தியாவிற்கு பெருமளவு உதவி செய்திருக்கிறது அதுவும் ஒரு வகை காரணம் என்றே கூறலாம் என தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2017-ஆம் ஆண்டு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களின் மதிப்பு 6 லட்சம் கோடியாக உயர்ந்து புதிய மைல் கல்லை எட்டியது .

தற்போது உள்ள வர்த்தக உலகத்தில் ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர மதிப்பு 5.7 லட்சம் கோடியாக உள்ளது. இதற்கு அடுத்த படியாக TCS 5.4 லட்சம் கோடியோடு உள்ளது.

மேலும் இந்தியாவில் தற்போது ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிமாகிவிட்டது. முதலில் இலவசமாக இதை கொடுத்த அம்பானி, அதன் பின் கணிசமாக ஒரு விலைகளை நிர்ணயித்து கொடுத்து வருகிறார்.

இந்த எண்ணம் எதனால் எனக்கு ஏற்பட்டது என்பதை குறித்தும் கூறியுள்ளார். அதாவது அமெரிக்காவில் Yale University படித்து வந்த அவரது மகள் கடந்த 2011-ஆம் ஆண்டு Isha Ambani விடுமுறைக்காக இந்தியா வந்துள்ளார்.

அப்போது படிப்பு தொடர்பாக இணையத்தளங்களை பயன்படுத்தியுள்ளார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவிற்கு இணையதளங்களில் வேகம் இல்லை. அவ்வப்போது இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு வேறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி, குரல் அழைப்புகளை தவிர, தொலைத்தொடர்பு சேவையில் பயன்படுத்த நிறைய இருக்கிறது. இவையெல்லாம் உங்கள் தலைமுறைக்கு கிடைக்காது என்று கிண்டலாக கூறியுள்ளார்.

அதன் பின் இதைப் பற்றி யோசித்த போதே ஜியோ பற்றிய எண்ணம் வந்ததாகவும், 2016-ல் அதை வெற்றிகரமாக முடித்து காட்டியதாகவும் முகேஷ் அம்பானி அந்த நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

ஜியோ வருவதற்கு முக்கிய காரணம் அவர் மகள் தானாம் என்று கூறி பலரும் தற்போது இணையத்தளங்களில் அவர் தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து வர ஆரம்பித்துவிட்டனர்.