ஸ்ரீதேவிக்கு கடற்கரையில் மணல் சிற்பம் அமைத்து அஞ்சலி!!

ஒடிசா மாநிலம் புரி கடற்கரையில் நடிகை ஸ்ரீதேவிக்கு மணல் சிற்பம் அமைத்து மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை புரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி மக்கள் மனதில் பதியவைத்து வருகிறார்.

தேசிய அளவில் தலைசிறந்த மணல் சிற்ப கலைஞராக திகழும் இவர், சர்வதேச அளவில் பல நாடுகளில் நடைபெற்ற போட்டிகளிலும் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார்.

இந்நிலையில், ஒடிசா மாநிலம் புரி கடற்கரையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் இன்று மணல் சிற்பம் அமைத்துள்ளார்.

சுதர்சன் பட்நாயக்கும், அவரது மாணவர்களும் புரி கடற்கரையில் ஸ்ரீதேவியின் மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளனர். இந்த சிற்பத்துக்கு அப்பகுதி மகக்ள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மணிரத்னம் படத்தில் நடிக்க விடாமல் தடுக்கின்றார்கள் : சிம்பு குற்றச்சாட்டு!!

சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்த இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்தார்.
இப்படம் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தபடி ஓடவில்லை. இதற்கு சிம்புதான் காரணம் என்று தயாரிப்பாளரும், இயக்குனரும் குற்றம்சாட்டினார்கள்.

இதையடுத்து சமீபத்தில் சிம்பு – ஆதிக் ரவிச்சந்திரன் பேசிய ஓடியோ ஒன்றும் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது.
இந்நிலையில், என்னை நடிக்க விடாமல் தயாரிப்பாளர் சங்கம் தடுக்கிறது என்று நடிகர் சிம்பு குற்றம்சாட்டியிருக்கிறார்.
இதுகுறித்து சிம்பு அளித்த விளக்கம் வருமாறு,

நடிகர் சங்கத்தில் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து எனக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீசுக்கு ஒரு நடிகனாக எனது பதிலை நடிகர் சங்கத்துக்கு தெரிவித்துவிட்டேன். இதுகுறித்த அடுத்தக்கட்ட நடவடிக்கையை நடிகர் சங்கம் எடுக்கலாம்.

ஆனால் அதை செய்யாமல் மணிரத்னம் படத்தில் நான் நடித்துக் கொண்டிருக்கும் போது, தினமும் போன் செய்து தொல்லை கொடுக்கிறார்கள். சிம்புவை வைத்து படம் எடுக்காதீர்கள் என்று படத் தயாரிப்பாளருக்கு இடைஞ்சல் கொடுக்கிறார்கள். இதுகுறித்து நடிகர் சங்க நிர்வாகிகள் பொன்வண்ணன் மற்றும் கருணாஸ் உடன் பேசி அவர்களிடம் விளக்கிவிட்டேன்.

படம் வெளியாகி 6 மாதத்திற்குப் பின்னர் என்மீது குற்றம் சுமத்துகிறார்கள். அது யாருடைய தூண்டுதலின் பேரில் செய்தார்கள் என்று தெரியவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தில் என் மீது தனிப்பட்ட பிரச்சனை ஏதேனும் இருந்தால், அதனை நடிகர் சங்கத்தில் தான் முறையிட வேண்டும்.

எனது பதிலை நான் நடிகர் சங்கத்திடம் தெரிவித்துவிட்டேன். தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினராக இருக்கும் பிரகாஷ்ராஜிடமும் இதுகுறித்து நான் விளக்கிவிட்டேன் என்று கூறினார்.

சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்து வருகின்றார்.

சம்பள நிலுவை : கமல் மீது கெளதமி குற்றச்சாட்டு!!

நடிகர் கமல்ஹாசன் தனது மனைவி சரிகாவை பிரிந்து வாழ்ந்த நிலையில், நடிகை கவுதமி கமலுடன் 10 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

2016 அக்டோபர் மாதம் அவர் கமலை விட்டு பிரிந்து விட்டார். அதன் பிறகு அவர்கள் ஒன்று சேரவில்லை.
இப்போது கமல்ஹாசன் அரசியலில் இறங்கி தனிக்கட்சி தொடங்கி இருப்பதையடுத்து கமலும், கெளதமியும் மீண்டும் சேர்ந்து வாழ இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இதை நடிகை கெளதமி மறுத்துள்ளார்.

இது சம்பந்தமாக டுவிட்டர் இணையத்தளத்தில் அவர் கூறியிருப்பதாவது, நாங்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழப்போவதாக வந்த செய்தி முற்றிலும் தவறானது. 2016ம் ஆண்டில் பிரிந்து வந்த பிறகு நான் அவருடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை.

கமலை விட்டு வெளிவந்ததை தொடர்ந்து நான் எனது வாழ்க்கையை கட்டமைக்க தேவையான முயற்சிகளை செய்து வருகிறேன். நானும் எனது மகளும் பாதுகாப்பான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற முயற்சியில் இறங்கி இருக்கிறேன்.

இப்போது எங்களுக்கு ஒரு நிலையான வருமானம் வேண்டும். எனது குழந்தைக்கு பொருளாதார ரீதியாக ஒரு வலுவான தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்று நான் தேவையான பணிகளை செய்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் வலைதளத்தில் ஒரு கடிதம் ஒன்றும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது..

கமல்ஹாசனுடன் சேர்ந்து வாழ்ந்த காலத்தில் நான் திரை தொடர்பான பல்வேறு பணிகளை செய்தேன். கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்த படங்களில் உடை அலங்கார நிபுணராக பணியாற்றினேன். கமல் நடித்த விஸ்வரூபம், தசாவதாரம் போன்ற பல படங்களுக்கும் உடை அலங்கார நிபுணர் பணியை செய்தேன்.

ஆனால் அதற்கு தர வேண்டிய சம்பளம் இன்னும் முழுமையாக தரப்படவில்லை. நான் கமராவுக்கு முன்பும், பின்பு இருந்தும் பல பணிகளை செய்துள்ளேன். அதற்கான பணமும் வரவில்லை.

இது சம்பந்தமாக நான் பல தடவை நினைவுபடுத்தி தகவல் அனுப்பி இருக்கிறேன். ஆனாலும், எனக்கு தர வேண்டிய பணத்தை எனக்கு செட்டில் செய்யவில்லை.

இதுபோன்ற பணிகள் மூலம்தான் எனக்கு வருமானம் வருகிறது. அதை வைத்துதான் நான் வாழ்க்கையை உருவாக்க வேண்டும். ஆனால், சம்பள நிலுவை தராததால் பொருளாதார ரீதியாக எனக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

நானும் கமலும் பிரிந்ததற்கு அவருடைய மகள்கள் சுருதி, அக்‌ஷரா ஆகியோர் காரணம் என்று கூறப்படுவது தவறானது.
இதில் அவர்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. இனி எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு சேர்ந்து வாழ முடியாது என்ற நிலையிலும், சுய மரியாதையை இழக்க கூடாது என்பதாலும் நான் பிரிந்து வந்து விட்டேன். இனி சேர்ந்து வாழ்வதற்கான எந்த வாய்ப்பும் இல்லை.
இவ்வாறு கெளதமி கூறி உள்ளார்.

கால்வாயில் காரொன்று வீழ்ந்ததில் ஒருவரை காணவில்லை!!

பதுளை மஹியங்கனை பிரதான வீதியின் வியானா கால்வாயில் காரொன்று வீழ்ந்ததில் ஒருவர் காணாமற்போயுள்ளார்.

இன்று காலை பண்டாரவளையிலிருந்து மஹியங்கனை நோக்கி பயணித்த கார், வீதியை விட்டு விலகி கால்வாயில் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

காரில் பயணித்த காரின் சாரதி உள்ளிட்ட மூவர் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் காணாமற் போயுள்ளார்.
காாணமற் போனவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு மாணவர்களுடன் இயங்கும் பாடசாலை!!

அம்பாறையில் இரண்டு மாணவர்களுடன் ஒரு பாடசாலை இயங்குகின்றது. அம்பாறை கல்வி வலயத்திலுள்ள 103 பாடசாலைகளில் ஒரே ஒரு தமிழ் பாடசாலையாக அம்பாறை தமிழ் மகா வித்தியாலயம் விளங்குகின்றது.

அம்பாறை தமிழ் மாகாவித்தியாலயம் 1954 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாரிய கல்வி பாரம்பரியத்தினை கொண்ட பாடசாலையாக காணப்படுகின்ற போதிலும் தற்போது கவனிப்பாரற்ற நிலையிலுள்ளது.

இந்த பாடசாலையில் கல்வி பயின்ற பலர் உயர் நிலைகளில் உள்ள​போதிலும் தற்போது இரு மாணவர்கள் மாத்திரமே கல்வி பயில்கின்றனர்.

சாதாரண தரம் வரையுள்ள இந்த பாடசாலை, தற்போது அதிபர், ஒரு ஆசிரியர் இரு மாணவர்களுடன் இயங்கிவருகின்றது.

இந்த பாடசாலையில் கற்றல் செயற்பாடுகளுக்குரிய பொளதீக வளங்கள் அனைத்தும் காணப்படுகின்ற போதிலும், மூடப்படும் அபாய நிலையிலுள்ளதாக மக்கள் கூறிகின்றனர்.

அரசியல் பின்னணி மற்றும் போக்குவரத்து பிரச்சினை காரணமாக மாணவர்கள் அம்பாறை தமிழ் மகாவித்தியாலயத்திற்கு மாணவர்கள் வருகைதருவதில்லை என பாடசாலை அதிபரும், மக்களும் தெரிவிக்கின்றனர்.

பாடசாலைகளை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் அண்மைக்காலமாக பாரிய செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

இந்த நிலையில் அம்பாறை தமிழ் மகா வித்தியாலயத்தின் முன்னேற்றம் தொடர்பில் அதிகாரிகளின் கவனம் திரும்பாமைக்கான காரணம் என்ன?

மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் இறுதிக் கிரியைகள் நாளை!!

மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் உடல் இன்று இரவு இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இன்று மாலை 3.30 அளவில் அவரின் உடலை தாங்கிய விமானம், டுபாயிலிருந்து புறப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதென தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால் இறுதி சடங்குகள் நாளை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளன.

54 வயதான ஸ்ரீ தேவி டுபாயில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தபோது, மாரடைப்பால் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

ஸ்ரீ தேவி, தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மேலும் பல மொழிகளில் வெளியான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார்.

தனது 4 ஆவது வயதில் துணைவன் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமானார் ஸ்ரீதேவி. பல்வேறு மொழிகளிலும் தேர்ச்சி பெற்று விளங்கிய ஶ்ரீதேவி, சுமார் 300 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகை ஶ்ரீதேவியின் ஏராளமான ரசிகர்கள், அவரின் மும்பை இல்லத்திற்கு முன்பாக நேற்று முதல் குழுமியுள்ளதாகவும் செய்திகள் வௌியாகியுள்ளன.

வவுனியா நொச்சிமோட்டை பாலத்தில் பயணிக்க முடியாத அவல நிலை!!

 
வவுனியா – நொச்சிமோட்டை பாலத்தினூடான போக்குவரத்தில் தடை ஏற்பட்டுள்ளது நீண்டகாலமாக இப்பாலத்தினை புனரமைத்துத்தருமாறு கோரிய போதிலும் இன்று வரையில் அப்பாலமூடான போக்குவரத்து மேற்கொள்வதில் பல அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதுடன் அப்பாலத்தில் விபத்துகள் ஏற்படக்கூடய அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இப்பாலம் கடந்த சில தினங்காக உடைந்த நிலையில் காணப்படுவதுடன் ஒரு பக்கம் ஊடாகவே வாகனங்கள் தமது பயனத்தினை மேற்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பாலத்தில் போடப்பட்டுள்ள தகரங்களில் சில உடைந்த நிலையில் காணப்படுகின்றது. பார ஊர்திகள் பயணம் மேற்கொள்ளும் இப்பாலத்தில் போக்குவரத்து பொலிஸாரும் கடமையில் இல்லை. எனவே சாரதிகள் இப்பாலத்தில் அபயாகரமான போக்குவரத்தினையே மேற்கொண்டு வருகின்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

இப்பாலத்தினை சீரமைப்பது குறித்து எவ்விதமான நடவடிக்கையும் கடந்த சில தினங்காக இடம்பெறவில்லை இதையடுத்து வவுனியா மாவட்டத்திலுள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளரிடம் தொடர்புகொண்டு வினவியபோது,

இது தொடர்பாக தங்களது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இன்னும் சில தினங்களில் இப்பாலம் சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும், பாலத்தில் போடப்பட்டுள்ள தகரம் இன்னும் வந்து சேரவில்லை வந்ததும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றம் : பயணிகள் பாதிப்பு!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக பயணிகள் பெரிதும் சிரமப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து செல்லவிருந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானங்கள் உரிய நேரத்தில் பயணத்தை ஆரம்பிக்கவில்லை. இதன்காரணமாக அங்கு குழப்பமான நிலை ஏற்பட்டதுடன், பயணிகள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
நேற்றிரவு மற்றும் இன்று காலை வேளையில் விமானங்கள் உரிய நேரத்தில் விமான நிலையத்தை விட்டு செல்லாமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக 8 மணித்தியாலத்திற்கும் அதிகமான நேரம் பயணிகள் விமான நிலையத்தில் தங்கியிருக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவ்வாறு விமானங்கள் தாமதமாகியுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீதேவியின் மரணம் குறித்து அமீரக பத்திரிகை வெளியிட்ட அதிர்ச்சி செய்தி!!

ஸ்ரீதேவியின் மரணம் குறித்து அமீரகத்தில் வெளியாகும் நாளிதழ் ஒன்று அதிர்ச்சி செய்தி வெளியிட்டுள்ளது.

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற இடத்தில் பாலிவுட் நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அமீரகத்தில் வெளியாகும் ஆங்கில நாளிதழான கலீஜ் டைமிஸில் வெளியான செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, திருமணம் முடிந்ததும் மும்பை சென்ற போனி கபூர் தனது மனைவிக்கு சர்பிரைஸ் கொடுக்க சனிக்கிழமை மாலை துபாய்க்கு மீண்டும் வந்தார்.

மாலை 5.30 மணி அளவில் தூங்கி எழுந்துள்ளார் ஸ்ரீதேவி. பின்னர் தூங்கி எழுந்த பிறகு அவர் தனது கணவருடன் 15 நிமிடங்கள் பேசியுள்ளார். டின்னருக்கு வெளியே செல்லலாமா என்று போனி கேட்க அவரும் சரியென்று தெரிவித்துள்ளார்.

நான் ரெடியாகிவிட்டு வருகிறேன் என்று கூறி பாத்ரூமுக்கு சென்ற ஸ்ரீதேவி வெகுநேரமாகியும் வெளியே வரதாததால் போனி கதவை தட்டியுள்ளார். அப்படியும் கதவை திறக்காததால் அவர் கதவை உடைத்து சென்றுள்ளார்.

பாத்ரூமுக்குள் சென்று பார்த்தால் பாத்டப்(குளியல் தொட்டி) முழுவதும் நீர் இருக்க அதில் ஸ்ரீதேவி பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்துள்ளார். ஸ்ரீதேவியை காப்பாற்ற அவர் முயன்றும் முடியவில்லை.

உடனே போனி கபூர் தனது நண்பர் ஒருவருக்கு போன் செய்து வரவழைத்துள்ளார். ஒன்றும் நடக்காததால் இரவு 9 மணி அளவில் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!!

எதிர்வரும் வாரங்களில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சர்வதேச சந்தையில் தற்போது தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக தங்க ஆபரணத்தங்கத்தின் விலையும் தொடர்ச்சியாக விலைகுறைந்து கொண்டே போகின்றது.

கடந்த வாரம் 22 கரட் தங்கம் ஒரு பவுணுக்கு 54 ஆயிரத்து 650 ரூபாவாக விற்கப்பட்டது. இந்த வாரம் அதன் விலை 53 ஆயிரத்து 550 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் வாரமளவில் இதன் விலை இன்னும் கூடுதலாக வீழ்ச்சியடையலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாடு சென்று வந்த மனைவிக்கு கணவனால் நேர்ந்த கொடுமை!!

மத்திய கிழக்கு நாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்று வேலை செய்து விட்டுத்திரும்பிய மனைவியின் பணம் மற்றும் நகைகளை திருடிக் கொண்டு கணவன் மாயமாகி விட்டதாக ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் வெள்ளிக்கிழமை நடந்துள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏறாவூர் – பள்ளியடி வீதியை அண்மித்த பகுதியில் வாழும் 32 வயதுடைய செய்யது இப்றாஹீம் ஷஹீரா என்பவரே இதில் பாதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், “அம்பாறை – இறக்காமம் வரிப்பத்தான்சேனையைச் சேர்ந்த அலியார் முஹம்மது ஹமீன் (வயது 33) என்பவரை நான் திருமணம் செய்து எமக்கு இரண்டு குழந்தைகள் உள்ளார்கள்.

பொருளாதாரக் கஷ்டம் காரணமாக நான் சவூதி அரேபியா நாட்டுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் வாய்ப்பு பெற்றுச்சென்றேன்.

இரவு பகலாக வீட்டுப் பணிப்பெண் வேலை செய்து இரண்டு வருடமாக கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை என் குழந்தைகளைப் பராமரிப்பதற்காகவும் தொழில் செய்வதற்காகவும் என்று கணவன் கேட்டுக் கொண்டதனால் அவருக்கே அனுப்பி வைத்தேன்.

இவ்விதம் சுமார் 6 இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட தொகை அவரது கணக்கிற்கு அனுப்பியிருந்தேன். நான் இல்லாத மனவேதனை காரணமாக தான் வீட்டுக்குச் செல்லாமல் தனது தாயுடன் இருப்பதாகவும் அவர் தொடர்ச்சியாக என்னிடம் கூறி வந்தார்.

அதேவேளை, எனது தாயுடன் குழந்தைகள் இருப்பதாகவும் நான் அனுப்பிய பணத்தில் படி ரக வாகனம் ஒன்று வாங்கி தான் தொழில் செய்து வருவதாகவும் கூறினார்.

நான் சவூதியில் இருந்து கொண்டு கணவன் கூறிய இந்த வார்த்தைகளை நம்பினேன். அதனால் தொடர்ந்து பணம் அனுப்பிக்கொண்டு தொடர்பிலும் இருந்தேன்.

கடந்த வாரம் நான் இரண்டு வருடங்கள் முடிந்து சவூதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பப் போவதை அறிவித்தவுடன் கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு என்னை அழைத்து வருவதற்காக வந்திருந்தார்.

பஸ்ஸில் வரும்போது எனது கைப்பையையும் அவரே வைத்துக் கொண்டார். ஏறாவூருக்கு அழைத்து வந்த அவர் வீட்டுக்கு என்னைக் கொண்டு வந்து சேர்ப்பித்து விட்டு தனது படி ரக வாகனத்தை எடுத்து வருவதாகக் கூறி விட்டுச் சென்றார். ஆனால், அப்போது போனவர் இன்னமும் திரும்பி வரவே இல்லை.

எனது, கைப்பையையும் அபகரித்துச் சென்று விட்டார் என்பதை பின்னர்தான் அறிந்தேன். அதில் ரொக்கப் பணம் 50 ஆயிரம் ரூபாவும் நகைகளும் இருந்தன.

நான் வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்றதிலிருந்து என்னுடன் தந்திரமாகப் பேசி இன்று வரை எனது கணவர் எனது பணம் நகைகளைக் கொள்ளையடித்து என்னையும் எனது பிள்ளைகளையும் ஏமாற்றியிருக்கிறார் என்பதை தற்போது எனது வீட்டு நிலைமைகளை நேரில் பார்த்த பின்னர் கண்டறிந்து கொண்டேன்.

தற்போது 12 மற்றும் 8 வயதான பாடசாலை செல்லும் பிள்ளைகளைப் பராமரிக்க முடியாமலும் குடியிருக்க இருப்பிடமில்லாமலும் கணவனால் ஏமாற்றப்பட்டு நிர்க்கதியாகியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் 5000 வீடுகள் அமைக்க நடவடிக்கை!!

வவுனியா மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் வருமானம் குறைந்த மக்களுக்கு ஐயாயிரம் வீடுகளை அமைத்துக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக 2950 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. கடந்த வருடமும் வவுனியா மாவட்டத்தில் வருமானம் குறைந்த மக்களுக்கு ஐயாயிரம் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

அவற்றில் 1500 வீடுகள் மீள்குடியேற்ற அமைச்சினாலும், 3500 வீடுகள் வீடமைப்பு அமைச்சினாலும் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

மீள்குடியேற்ற அமைச்சினால் அமைக்கப்பட்ட வீடுகளுக்கு தலா எட்டு லட்சம் ரூபா வீதம் செலவாகியுள்ளது. வீடமைப்பு அமைச்சினால் தலா ஐந்து லட்சம் ரூபா செலவில் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நிர்மாணிக்கப்படவுள்ள ஐயாயிரம் வீடுகளையும் மீள்குடியேற்ற அமைச்சும் வீடமைப்பு அமைச்சும் இணைந்தே நிர்மாணிக்கவுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் பரிதாபமாக பலி!!

மட்டக்களப்பு – ஆரையம்பதி செல்வாநகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் சந்திவெளியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பலியாகியுள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையில் உள்ள உறவினர் வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போதே சந்திவெளி பகுதியில் வைத்து இளைஞர் கனரக வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

சம்பவத்தில் ர.சஞ்சய்காந் (26வயது) என்பவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, இவருடன் பயணித்த நபர் படுகாயங்களுக்குள்ளாகிய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், விபத்தை ஏற்படுத்திய கனரக வாகனம் தப்பிச்சென்றுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் தொடர் கொலைகாரனின் பட்டியலில் தமிழர் ஒருவர்!!

கனடாவில் ரொறொன்ரோவில் அண்மையில் பரபரப்பை ஏற்படுத்திய தொடர் கொலைகாரன் ஒருவன் ஆறு பேர்களை கொன்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வரிசையில் வெள்ளிக்கிழமை ஆறாவதாக 2010-ல் நகரின் ஓரின சேர்க்கை சமூக பகுதியில் இருந்து காணாமல் போன 40-வயதுடைய ஸ்கந்தராஜா நவரட்னம் என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நபர் நகரின் சேர்ச் மற்றும் வெலெஸ்லி பகுதியில் Houston திட்டத்தின் பிரகாரம் 2012-ல் அதிகாரிகளால் தேடப்பட்டு வந்தவர்.

கொலையாளி மக்ஆதரின் முகநூல் பகுதியில் நண்பராக காணப்பட்டுள்ளார். ஜனவரி 18-ல் 66-வயதுடைய சுய தொழில் நில சீரமைப்பாளரான மக்ஆதர் செலிம் எசென் மற்றும் அன்ட்ரூ கின்ஸ்மன் ஆகிய இருவரை கொலை செய்த குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து விசாரனைகளிலிருந்து மேலும் மூவரை கொலை செய்தமை தெரியவந்தது. இவரால் பாதிக்கப்பட்ட-கொலை செய்யப்பட்டவர்கள்: மஜிட் கெய்ஹான்-58 வயதுடைய ரொறொன்ரோ வாசி. ரொறொன்ரோ ஓரின சேர்க்கையாளர் கிராம பகுதியில் இருந்து காணாமல் போனதாக 2012-2014 காலப்பகுதியில் தேடப்பட்டு வந்தவர்.

சோறுஷ் மஹ்முடி: 2015ல் ரொறொன்ரோ கிழக்கு பகுதியில் இருந்து காணாமல் போனவர். வயது50. டீன் லிசோவிக் : 43 அல்லது 44வயது மதிக்கத்தக்கவர். 2016-2017 ற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் காணாமல் போய் உள்ளார்.

செலிம் இசென்: 44-வயது. 2017ஏப்ரலில் நகரின் ஓரின சேர்க்கையாளர் கிராமத்திலிருந்து காணாமல் போயுள்ளார். இவரது மறைவை தொடர்ந்து பொலிசார் கடந்த ஆகஸ்டில் Project Prism எனப்படும் திட்டத்தை ஆரம்பித்தனர். ஐந்து மாதங்களின் பின்னர் பொலிசார் மக்ஆதர் மீது இவரது மரணம் குறித்து குற்றம் சுமத்தினர்.

அன்ட்ரூ கின்ஸ்மன்: 49வயதுடையவர். நகரின் ஓரின சேர்க்கையாளர் கிராமத்திலிருந்து 2017-யூன் மாத இறுதியில் இவரும் காணாமல் போயுள்ளார். இவருக்கும் மக்ஆதருக்கும் பாலியல் தொடர்பு இருந்துள்ளதென பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஸ்கந்தராஜா நவரட்னம்: 40-வயதுடைய இவர் 2010ல் காணாமல் போய் உள்ளார். Project Houston திட்டத்தின் கீழ் இவரது மறைவு புலன்விசாரனை செய்யப்பட்டது. இவரது மரணத்திற்கு மக்ஆதர் காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.

மேற்குறித்த ஆறு மனிதர்களும் ரொறொன்ரோ ஓரின சேர்க்கையாளர்கள் கிராமத்துடன் தொடர்பு கொண்டவர்கள்.

நவரட்னம் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 24ல் நவரட்னத்தின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இவருக்கு முகநூலில் பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவு செய்தனர். நவரட்னம் திரும்ப வருவார் என அனைவரும் நம்பி இருந்தனர். ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை நம்பிக்கை மறைந்தது. நவரட்னம் கொலை செய்யப்பட்டுள்ளார் என நவரட்னத்தின் எஞ்சியுள்ள பற்களின் பதிவுகள் நவரட்னம் இறந்தது தெளிவாகியது.

-தமிழ்வின்-

பிரித்தானியாவில் சாதித்த தமிழன் : யாழ்ப்பாணத்திற்கு கிடைத்த பெருமை!!

பிரித்தானியாவின் தலைநகர் லண்டன் நிதி நகரத்தை சிறந்த நகரமாக மாற்றிய உலகின் சிறந்த வங்கியாளரான இலங்கையர் தனது பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பிறந்து கல்வி கற்று பின்னர் பிரித்தானியாவுக்கு சென்ற பெர்னாட் சின்னய்யா Citi Bank வங்கி பணியில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.

கடந்த 38 வருடங்களாக Citi வங்கியில் பணியாற்றயவர், முதலில் கொழும்பு வங்கிக்கு அந்நியச் செலாவணி பிரிவுக்கு வந்தவர் பின்னர் உலகம் ஏற்றுக்கொண்ட வங்கியாளராக மாறியுள்ளார்.

ப்ளும்பர்க் உட்பட சர்வதேச செய்தி சேவைகளில், உலக அந்நிய செலாவணி தலைவர் என்றே சின்னய்யா தொடர்ந்தும் அழைக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்றைய தினம் லண்டன் பைனான்னஸ் டைம்ஸ் செய்தியில் சின்னய்யாவின் ஒய்வு தொடர்பில் செய்தி வெளியாகியிருந்தது.

நுகர்வோர்களை அடிப்படையாக கொண்டு தீர்வு வழங்கும் விசேட நபரான சின்னய்யா சர்வதேச மதிப்பை பெற்றுள்ள ஒருவராகும் என நேற்று வெளியாகிய செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சின்னய்யா 2015ஆம் ஆண்டு “யாழ்ப்பாண பையன்” (Jaffna Boy) என தனது புத்தகத்தை எழுதியிருந்தார். அந்த புத்தகத்தில் நான் தோல்வியுற்ற கதாபாத்திரமாக யாழ்ப்பாணத்தை விட்டு சென்றேன் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

முதலில் அவுஸ்திரேலிய Citi Bank வங்கியில் பணியாற்றிய சின்னய்யா, அங்கு வெளிப்படுத்திய திறமை காரணமாக லண்டனில் அனைத்து வசதிகளை வழங்கப்பட்டு பிரித்தானியாவுக்கு அழைக்கப்பட்டார். அங்கு பயணத்தை ஆரம்பித்தவர் 38 வருடங்களின் பின்னர் லண்டன் நிதி நகரத்தை சிறந்த நகரமாக மாற்றிய உலகின் சிறந்த வங்கியாளராக ஓய்வு பெறவுள்ளார்.

தனது மனைவி மற்றும் 3 பிள்ளைகளுடன் சரே பிராந்தியத்தில் வாழும் அவர் அடிக்கடி இலங்கைக்கும் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

2014ஆம் ஆண்டு தான் கல்வி கற்ற யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரியில் விசேட விருந்தினராக கலந்து கொண்டார். அங்கு நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில், “இன்று நடக்கும் பரிசளிப்பு விழா இந்த பாடசாலையின் எத்தனையாவது பரிசளிப்பு விழா என எனக்கு தெரியாது. ஒரு நாளும் பரிசு பெறாத ஒருவர் பிரதான விருந்தினராக அழைக்கப்பட்டிருப்பது நானாக தான் இருக்க வேண்டும். என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது உரையின் தலைப்பாக இலங்கை கிரிக்கெட் வீரர் மஹேல ஜயவர்தன உட்பட திறமையானவர்களை சுட்டிக்காட்டி உரையாற்றினார்.

1983ஆம் ஆண்டு ஜுலை கலவரத்தின் போதே அவர் நாட்டை விட்டு சென்றார். நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டான இவரை யார்? எப்போது இலங்கைக்கு அழைத்து வருவார்கள் சிங்கள ஊடகமொன்று கேள்வி எழுப்பியுள்ளது.

வவுனியாவில் கலை ஊக்குவிப்பு மன்றம் அங்குரார்ப்பணம்!!

 
வவுனியாவில் கல்வி மற்றும் கலை, இலக்கிய துறையை விருத்தி செய்யும் வகையில் கலை ஊக்குவிப்பு மன்றம் வவுனியா குருமன்காடு பிரின்சஸ் ரோஸ் விடுதியில் நேற்று (25.02.2018) ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணிக்கு மன்றத்தின் இலங்கைக்கான இணைப்பாளர் பூ.அபிசேக்கின் ஏற்பாட்டில் கலைஞர் மாணிக்கம் ஜெகன் தலைமையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

இவ் அங்குரார்ப்பண நிகழ்வில் இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட இணைப்பாளர்கள் கலந்து கொண்டதுடன் மிகவிரைவில் பொதுக்கூட்டத்தை நடாத்த எண்ணியிருப்பதாக அதன் இலங்கைக்கான இணைப்பாளர் பூ.அபிசேக் தெரிவித்தார்.

புலம்பெயர் தேசமான பிரான்ஸ் தேசத்தில் பவுல்.சி தயாரிப்பு நிறுவனத்தின் ஆலோசனை மற்றும் அணுசரணையுடன் இவ்வமைப்பு உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.