காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் வவுனியாவில் 107 நாட்களைக்கடந்து தொடரந்துகொண்டிருக்கும் நிலையிலே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா நேற்று (10.06) மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்..
எங்களுடைய பிள்ளைகள் எங்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம் ஆனால் போராட்டமானது 100 நாட்களையும் கடந்து 107 வது நாளாக தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில் பெருமளவான மக்கள் எங்கள் போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளனர்.
எங்களுக்கு எதிராக சில சக்திகள் செயற்படுவதுடன் அவர்களின் எண்ணம் ஈடேறாது. எங்கள் தொடர் போராட்டம் பலரின் முகமூடியை கிழித்து எறிந்துள்ளது. ஆயிரம் நாட்களானாலும் எங்கள் பிள்ளைகள் வந்து சேரும்வரை போராட்டம் தொடரும் .
ஜனாதிபதி எங்களுக்கு பதில் வழங்க வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் எங்கள் போராட்டம் மீண்டும் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டமாக மாறும். காணாமல் போன எமது பிள்ளைகளின் தாய்மார் உண்ணாவிரதப் போராட்டத்தில் உறுதியாக உள்ளனர் எனத் தெரிவித்தார்.













































