கொள்ளுப்பிட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் ரயில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்கள். செல்பி புகைப்படம் எடுப்பதற்காக முயற்சித்த போது இருவரும் ரயிலில் மோதுண்டு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
12 மற்றும் 24 வயதுடைய சகோதரர்களில் நேற்று மாலை உயிரிழந்துள்ளனர். கொள்ளுப்பிட்டி – பம்பலப்பிட்டி ஆகிய பகுதிக்கு இடையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் அநுராதபுரத்தைச் சேர்ந்த ஷஷி மதுஷான் ரணவீர (24) மற்றும் அவரது சகோதரரான திலக் லக்ஷான் ரணவீர (12) ஆகிய இருவருமே பலியாகியுள்ளனர்.
ஷஷி மதுஷான் என்ற இளைஞன் சிங்கப்பூரில் பணியாற்றிவிட்டு இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக இலங்கை வந்துள்ளார்.
அவரை அழைத்துச் செல்ல, அவரின் தாய், தந்தை மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட குடும்பத்தவர்கள் அநுராதபுரத்திலிருந்து வான் ஒன்றில் கொழும்புக்கு வந்துள்ளனர்.
மேலும், அநுராதபுரத்துக்குச் செல்வதற்கு முன்னர், கோல்பேஸுக்குச் சென்று, பின்னர் கொள்ளுப்பிட்டி கடற்கரை பகுதிக்குச் சென்றதாகவும், இதன்போது இந்த அனர்த்ததுக்குமுகங்கொடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொச்சிக்கடை, கட்டான பிரதேசத்தில் ஊர்வலத்தில் சென்ற யானையொன்று தாக்கியதில் பௌத்த மதகுரு ஒருவர் பலியானர்.
கட்டானயிலுள்ள குறித்த விகாரையில் வருடாந்த உற்சவம் நேற்று (11) இடம்பெற்றுள்ளது. பொலிஸார் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
யானை தாக்கியதில் பலத்த காயமடைந்த குறித்த பௌத்த மதகுரு நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (12) அதிகாலை உயிரிழந்தார்.
குறித்த பௌத்த மதகுரு 25 வயது மதிக்கத் தக்கவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் களனி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் எனவும், இறுதிவரை அனுராதபுரம் எப்பாவல பிரதேசத்தில் விகாரை கல்விக் கூடத்தில் பேராசிரியராக பணியாற்றியிருந்தார்.
மரண விசாரணைகள் இன்று இடம்பெறவுள்ள நிலையில் கொச்சிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மட்டக்குளி பொலிஸ் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குரிய ரொட்ரியோ பகுதியில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை தொடர்பில் பிறிதொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜுன் 05 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது சந்தேகநபர்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்களுக்கு நிதி அனுசரணைகளை வழங்கியதுடன், மோட்டார் சைக்கிளையும் வழங்கியுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
வத்தளை ஹேகித்தை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் ஒருவரே இன்று (12) கொழும்பு முதன்மை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
பொலிஸ் குற்றவிசாரணை பிரிவினரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பாகிஸ்தானுக்கு எதிராக கார்டிவ், சொபியா கார்டன்ஸ் விளையாட்டரங்கில் இன்று நடைபெறவுள்ள தீர்மானம் மிக்க ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண குழு பி போட்டியை இலங்கை அணி வீரர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவுள்ளதாக மெட்ரோ ஸ்போர்ட்ஸுக்கு அணி முகாமையாளர் அசன்க குருசின்ஹ தெரிவித்தார்.
வீரர்கள் அனைவரும் பூரண உடற்தகுதியுடன் இருப்பதாகத் தெரிவித்த அவர், காலையில் (இன்று) ஆடுகளத்தின் தன்மையை அவதானித்த பின்னர் இறுதி பதினொருவரைத் தெரிவு செய்வதாகவும் கூறினார்.
திசர பெரேராவின் தலையில் பந்துபட்டதால் அவருக்கு பாதிப்பு இல்லை என்றார் அவர். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஈட்டிய வெற்றியானது இலங்கை அணிக்கு உற்சாகத்தையும் மனோதைரியத்தையும் கொடுத்துள்ளதாக குறிப்பிட்ட அசன்க குருசின்ஹ, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் என்ன விலைகொடுத்தேனும் வெற்றிபெறுவதற்கு வீரர்கள் முயற்சிப்பார்கள் எனவும் தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க, சாமர கப்புகெதரவுக்குப் பதிலாக குழாமில் இணைத்துக்கொள்ளப்பட்டு இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அபார அரைச் சதம் குவித்த தனுஷ்க குணதிலக்க இன்றைய போட்டியிலும் நிரோஷன் திக்வெல்லவுடன் ஆரம்ப வீரராக விளையாடுவார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.
குசல் மெண்டிஸ் வழமைபோல் மூன்றாம் இலக்கத்திலும், தினேஷ் சந்திமால் பெரும்பாலும் நான்காம் இலக்கத்திலும் துடுப்பெடுத்தாடுவர்.
தொடர்ந்து அணித் தலைவர் எஞ்சலோ மத்யூஸ், அசேல குணரட்ன, குசல் மெண்டிஸுக்குப் பதிலாக குழாமுக்கு இரண்டாவது மாற்று வீரராக அழைக்கப்பட்ட தனஞ்செய டி சில்வா, திசர பெரேரா ஆகியோர் துடுப்பாட்ட வரிசையில் இடம்பெறுவர்.
வேகப் பந்துவீச்சில் லசித் மாலிங்க, சுரங்க லக்மால், நுவன் பிரதீப் அல்லது நுவன் குலசேகர இடம்பெறவாய்ப்புள்ளது.
ஆடுகளத்தின் தன்மையைப் பொறுத்து சில வேளைகளில் லக்ஷான் சந்தகன் அணிக்கு அழைக்கப்படலாம்.
அமெரிக்காவில் 7 பேரை கொலை செய்த குற்றத்திற்காக கைதாகியுள்ள நபரால் கடத்தப்பட்டு பாலியல் சித்திரவதைக்கு உள்ளான பெண்ணை பொலிசார் மீட்டுள்ளனர்.
அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியில் கப்பலில் சரக்கு அனுப்ப பயன்படுத்தும் பெட்டகம் ஒன்றில் பூட்டி வைத்து கடந்த இரண்டு மாதங்களாக பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கி வந்த பெண்ணை பொலிசார் அதிரடியாக மீட்டுள்ளனர்.
30 வயதான அந்த பெண், பொலிஸ் பிடியில் உள்ள கொலை குற்றவாளி ஒருவரால் கடத்தப்பட்டு கடந்த 2 மாதங்களாக பாலியல் அடிமையாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளார்.
Todd Kohlhepp என்ற அந்த நபர் 7 கொலை உள்பட பல்வேறு கற்பழிப்பு வழக்குகளில் தொடர்புடையவர் என தெரிய வந்ததால் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இருந்து, பெண் ஒருவர் பெட்டகம் ஒன்றில் பூட்டி வைக்கப்பட்டுள்ளதாக பொலிசாருக்கு தெரிய வந்துள்ளது.
இதனையடுத்தே ஆயுதம் தாங்கிய பொலிசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று பெண்மணியை மீட்டுள்ளனர். கழுத்தில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் அவரை பொலிசார் மீட்டுள்ளனர்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் நீதிமன்ற விசாரணையின் போது குறித்த நபர் குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
அரிசோனா மாகாணத்தில் ஆட்கடத்தல் வழக்கு தொடர்பாக 14 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பின்னர் வெளியே வந்த Todd Kohlhepp கடந்த 2001 ஆம் ஆண்டு கரோலினா பகுதிக்கு குடியேறியுள்ளார்.
கரோலினா பகுதியில் குடியேறிய பின்னர் 7 கொலைகள் செய்துள்ளதாக பொலிஸ் தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால் தமக்கு அதில் எந்த தொடர்பும் இல்லை என Todd Kohlhepp சதித்துள்ளார்.
Todd Kohlhepp தமது 15-வது வயதில் துப்பாக்கி முனையில் 14 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த வெள்ளியன்று Todd Kohlheppகு எதிராக காணொளி ஆதாரங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை வெளியிட்டு அதிகாரிகள் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
கட்டார் நாட்டில் உள்ள 22 இலங்கையர் அமைப்புகளுக்கு கட்டாருக்கான இலங்கைத் தூதரகம் அழைப்பு விடுத்துள்ளது.
கட்டார் நாட்டில் அவசர நிலை ஏற்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கட்டாருக்கான இலங்கைத் தூதுவர் லியனகே தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடல் புதன் கிழமை (14) இடம்பெறவுள்ளது.
மேலும், கட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கு உணவு மற்றும் தொழில் தொடர்பில் பிரச்சினை எதுவும் இல்லை எனவும் லியனகே குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சினதும் ஆலோசனைக்கு அமையவே தான் அனைத்து தீர்மானங்களையும் மேற்கொள்வதாக ஊடகம் ஒன்றுக்கு லியனகே தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் 0097455564936 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தன்னை தொடர்புகொள்ளுமாறும் அறிவித்துள்ளார்.
காப்புறுதி பணத்தை பெற்றுக்கொள்ள தனது மகளை கொலை செய்து, அந்த குற்றத்திற்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த குற்றவாளி ஒருவர் 6 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் மரண தண்டனையை வழங்கியிருந்தது.
குற்றவாளிகள் மாறுவேடத்தில் தலைமறைவாக இருந்த நிலையில், நேற்று கினிகத்தேனை பிரதேசத்தில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் 2009 ஆம் ஆண்டு தனது 8 வயது மகளை கொடூரமாக வெட்டிக்கொலை செய்ததுடன் மனைவியையும் வெட்டி காயப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குற்றவாளி விசாரணைகளுக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாது புறக்கணித்து வந்த நிலையில், குற்றவாளி இல்லாமலேயே நுவரெலியா மேல் நீதிமன்றம் விசாரணைகளை மேற்கொண்டதுடன் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருந்தது.
மேலும், மனைவியை வெட்டி காயப்படுத்திய குற்றச்சாட்டுக்கு 12 ஆண்டு கடூழிய சிறை தண்டனையும் 7 ஆயிரத்து 500 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.
எனினும் குறித்த நபர், கண்டி அலவத்துகொடை பிரதேசத்தில் திருமணமான பெண்ணொருடன் வசித்து வந்துள்ளதாக பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
இந்த பெண்ணுக்கு சொந்தமான சொத்துக்களை நபர் கைப்பற்றிக்கொண்டுள்ளார். சொத்துக்களை கைப்பற்றிய நபர் , பெண்ணை கைவிட்டு, புத்தல, எகொடவத்தை பிரதேசத்தில் தச்சு தொழிலாளியாக மறுவேடத்தில் இருப்பதாக கினிகத்தேனை பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்தது.
புத்தள பிரதேசத்தில் பெண்ணொருவரை மணந்துள்ளதுடன் அந்த பெண்ணுக்கும் ஒரு ஆண் குழந்தை இருப்பதாக தெரியவருகிறது.
இதேவேளை, குற்றவாளி இன்று ஹட்டன் பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவரை நாளைய தினம் நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் மாலை வேளை மழைவீழ்ச்சி பதிவாவதற்கான சாதகமான அறிகுறிகள் காணப்படுகின்றது. எனவே மின்னல் தாக்கத்திலிருந்து மக்கள் அவதானமாக இருக்கும்படி வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
காலநிலை குறித்து அவதான நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,கடந்த நாட்களில் மழை வீழ்ச்சி அதிகமாக பதிவாகியிருந்தது போன்று இல்லாமல் மழைவீழ்ச்சி சற்று குறைவடைந்திருந்தாலும் தொடர்ந்தும் மழைவீழ்ச்சி பதிவாகும். இருப்பினும் காற்றின் வேகம் வழமை போன்றே நிலவக்கூடும்.
மேல் மாகாணம் உவா, மற்றும் மத்திய மாகாணங்களில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் அதேவேளை சிறிதளவில் மழைவீழ்ச்சியும் பதிவாகும் சாத்தியங்கள் காணப்படுகின்றது.
அதனால் கரையோர பிரதேசங்களில் வாழும் மீனவக் குடும்பங்களும் அதிக அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பிரித்தானியாவில் நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை வம்சாவளிப் பெண்ணொருவர் பாரிய வெற்றியை பெற்றுள்ளார்.
தொழிற்கட்சி சார்பில் பிரிஸ்டல் மேற்குத் தொகுதியில் போட்டியிட் தங்கம் டெபோனயர் என்ற இலங்கைப் பெண்ணே வெற்றி பெற்றுள்ளார். இவர் 47,213 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இவரை எதிர்த்துப் போட்டியிட்ட கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் 9,877 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார்.
தங்கம் டெபோனயர் இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஆவார். தங்கம் டெபோனயரின் தந்தை ஒரு இலங்கைத் தமிழர். அவரது தாயார் பிரித்தானிய வெள்ளையின பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவை சேர்ந்த 12 வயதான சிறுமி பழச்சாறு விற்பனையின் மூலம் மிகப் பெரிய தொழில் அதிபராக உருவாகியுள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தை சேர்ந்த மிகைலா உல்மர் என்ற இந்த சிறுமி தேன் கலந்த எலுமிச்சை பழச்சாறு தயாரிக்கும் மீ அண்ட் தி. பீஸ் லெமனேட் என்ற நிறுவனத்தின் தலைவராக இருந்து வருகிறார்.
இந்த சிறுமி, தேனடைகளில் இருந்து எடுக்கப்படும் தேனுடன் புதினா, ஆளிவிதை, எலுமிச்சை ஆகியவற்றை கலந்து பீ ஸ்வீட் லெமனேட் என்ற பெயரில் இயற்கை பானத்தை தயாரித்து மிகப் பெரியளவில் விற்பனை செய்து வருகிறார்.
அமெரிக்காவில் பல இடங்களில் தனது கிளைகளை கொண்டிருக்கும் ஹோல் புட்ஸ் என்ற சிறப்பங்காடி நிறுவனம் தனது 55 வர்த்தக நிலையங்களில் மிகைலாவின் நிறுவனம் தயாரிக்கும் பானத்தை விற்பனை செய்து வருகிறது.
இதனை தவிர தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றின் மூலம் இந்த சிறுமிக்கு 38.9 லட்சம் ரூபா முதலீடு கிடைத்துள்ளது.
கடந்த 1940 ஆம் ஆண்டுகளில் மிகைலாவின் பாட்டி இந்த பானத்தை தயாரித்து வந்துள்ளார். பானம் தயாரிக்கும் இரகசியம் பரம்பரை வழியாக மிகைலாவுக்கு கிடைத்துள்ளது.
பல புதிய படங்கள் வெளிவருவதால் பாகுபலி 2 படத்தின் வசூல் மெல்ல மெல்ல தனது முடிவை நெருங்கி வருகிறது.
பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள படம் – பாகுபலி தி கன்க்ளூஷன்’ (பாகுபலி 2).
ஏப்ரல் 28 அன்று வெளியான பாகுபலி 2, இந்தியாவில் மட்டும் 9,000 திரையரங்குகளில் வெளியானது.
இதுவரை 1500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
இந்தியாவில் ஹிந்தி பாகுபலி 2 படம் 500 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன்பு எந்தவொரு ஹிந்திப் படமும் இந்தியாவில் 400 கோடி கூட வசூலித்தது கிடையாது. இந்நிலையில் ஹிந்தி பாகுபலி 2வின் வசூல் 500 கோடியைத் தாண்டி மகத்தான சாதனை புரிந்துள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் பாகுபலி 2 ஹிந்தி படத்தின் வசூல் கடந்த ஒரு வாரத்தில் பாதியாகக் குறைந்துள்ளது.
புதிய படங்களின் வரவாலும் பாடசாலைகள் திறந்துவிட்டதாலும் பாகுபலி 2 படம் மெல்ல மெல்ல திரையரங்கிலிருந்து வெளியேறும் காலத்தை நெருங்கி வருகிறது.
சினிமா விமர்சகர் தாரன் ஆதர்ஷ், பாகுபலி 2 படத்தின் வசூல் நிலவரங்களை வெளியிட்டுள்ளார்.
பாகுபலி 2 (ஹிந்தி) கடந்த ஒருவார வசூல்
வெள்ளி: 72 லட்சம்
சனி: ரூ. 1.03 கோடி
ஞாயிறு: ரூ. 1.35 கோடி
திங்கள்: ரூ. 66 லட்சம்
செவ்வாய்: ரூ. 60 லட்சம்
புதன்: ரூ. 54 லட்சம்
வியாழன்: ரூ. 45 லட்சம்
பாகுபலி 2 (ஹிந்தி) வசூல்
முதல் வாரம்: ரூ. 247 கோடி
2-ம் வாரம்: ரூ. 143.25 கோடி
3-ம் வாரம்: ரூ. 69.75 கோடி
4-ம் வாரம்: ரூ. 29.40 கோடி
5-ம் வாரம்: ரூ. 11.78 கோடி
6-ம் வாரம்: ரூ. 5.35 கோடி
மொத்த வசூல்: ரூ. 506.53 கோடி
பாகுபலி 2 (ஹிந்தி) இந்தியாவில் நிகழ்த்திய சாதனைகள்
ரூ. 100 கோடி: 3வது நாள்
ரூ. 200 கோடி: 6வது நாள்
ரூ. 300 கோடி: 10வது நாள்
ரூ. 400 கோடி: 15வது நாள்
ரூ. 450 கோடி: 20வது நாள்
ரூ. 475 கோடி: 24வது நாள்
ரூ. 500 கோடி: 34வது நாள்
புத்தளம் வென்னப்புவ பிரதேசத்தில் நேற்றிரவு ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வென்னப்புவ சுனவேல் பியனம மாவத்தையில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
வென்னப்புவ சுனவேல் பியனம மாவத்தையைச் சேர்ந்த 48 வயதான வசந்த பெரேரா என்பவரே தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
இந்த நபர் வட்டிக்கு கடன் வழங்கும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். ஒரு வாரத்திற்கு முன்னர் வீட்டையும் 60 லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்திருந்தாகவும் பண கொடுக்கல் வாங்கல் பிரச்சினையால் அவர் தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
உயிரிழந்தவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். அவர் கட்டிலில் படுத்தவாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். சடலத்தை பார்த்த அயல் வீட்டில் உள்ள உறவினர் ஒருவர் சம்பவம் குறித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக வென்னப்புவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை
கொழும்பு மற்றும் கொழும்பை சுற்றியுள்ள பிரதேசங்களின் வாகனங்களுக்கான வீதி விதிகள் நாளை முதல் கடுமையாக செயற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதற்காக பொலிஸ் தலைமையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய பொலிஸ் மோட்டார் சைக்கிள் குழு, பொலிஸ் நடமாடும் சேவை, பொலிஸ் சீ.சீ.டீ.வி கமரா மற்றும் மேலதிக பொலிஸ் அதிகாரிகள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இவர்கள் ஊடாக இந்த சட்டத்தை செயற்படுத்துவதற்கு பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விசேடமாக காலி வீதி, ஸ்ரீ ஜயவர்தனபுர பிரதான வீதி மற்றும் வாகனங்கள் கொழும்பிற்குள் நுழையும் பிரதான வீதிகளில் இந்த சட்டத்தை செயற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உணவை சிந்தியதற்காக 6 வயது சிறுமியை ஒருவரை வயோதிப பெண் ஒருவர் கடுமையாக தாக்கும் வீடியோ ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன் வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது.
தற்போது மலேசியா, கோலாலம்பூர், புக்சோவ் என்ற பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது தெரிய வந்தது.
குழந்தையை தாக்கிய அந்த பெண்ணை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
அந்த குழந்தையின் வீட்டில் வேலை பார்த்த அப்பெண் அந்த வீட்டில் இருந்து நகைகளை திருடியது தெரிய வந்ததுள்ளது.
மேலும் அந்த குழந்தையை ஈவு இரக்கமில்லாமல் கொடூரமாக தாக்கியும் உள்ளார்.
அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தும் வீடியோவும் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
இவ்வாறு விசாரணை நடத்திய போது தான் அந்த வீட்டில் நகைகள் திருடியதையும் அந்த பெண் ஒப்புக்கொண்டுள்ளார்.
நகையை திருடியதும் இல்லாமல் தாய் தந்தையற்ற அனாதை சிறுமியை தாக்கிய குற்றத்திற்காக அவருக்கு தற்போது சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான சிறுமிக்கு தற்போது ஒரு நல்ல தத்துப்பெற்றோருடன் வாழும் வாய்ப்பு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக…
சாப்பிடும் போது உணவை சிந்தியதற்காக, 6 வயது சிறுமியை கண்மூடித்தனமாக மரத்தினால் ஆன தடியால் 30க்கும் மேற்பட்ட தடவைகள் வயோதிப பெண் ஒருவர் தாக்குவதும், சிறுமி கதறி அழுவதுமான காணொளியொன்று அடையாளம் தெரியாத நபர் சமூக தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
இந்த காட்சி வைரலாக பரவியது. மலேசியாவின் தமன் புசங் பெர்டானா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளமை பின்னர் தெரியவந்தது. 2 நிமிடம், 50 செக்கன்கள் ஓடும் இந்த வீடியோவில் ஒரு சிறுமி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.
சிறுமிக்கு முன்பாக ஒரு பெண் உட்கார்ந்து கொண்டிருந்தார். சிறுமியை எழுந்து போகுமாறு அப்பெண் கூற, அச்சிறுமி எழுந்து செல்லும் போது சில உணவுப் பொருட்கள் சிந்துகின்றன.
இதைப் பார்த்த அப்பெண்மணி தடியால் சிறுமியை பலமாக அடிக்கிறார். சிறுமி கதறி அழுதும், நிறுத்தாமல் தொடர்ந்து தாக்குகின்றார்.
தொடர்ந்து அடித்துக் கொண்டே, “எத்தனை முறை அடித்தாலும் உனக்கு ஒழுங்காக சாப்பிடுவது எப்படி என்று தெரியவில்லை. செத்துப்போ, எங்காவது போய்விடு, எங்காவது போய் செத்துவிடு. எப்படி சாப்பிடுவது என்று கூட தெரியவில்லை” என்று கத்துகிறார்.
பிறகு அடிப்பதை நிறுத்திவிட்டு வேறு அறைக்குச் செல்லும் பெண், மீண்டும் வந்து அந்த சிறுமியை அடிக்கிறார். அப்போது இந்த வீடியோவை எடுப்பவர், ‘‘குழந்தையை அடிக்காதீர்கள், ஏன் அடிக்கிறீர்கள், இதைப் புகைப்படம் எடுத்து செய்தியில் வெளியிடுவேன்’’ என்று எச்சரிக்கிறார்.
இதன் பின்னர் குறித்த பெண் அயலவர்களின் உதவியுடன் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பியன்ஸ் கிண்ண தொடரில் விளையாடிவரும், இலங்கை அணியின் சகலத்துறை ஆட்டக்காரரான திசர பெரேராவின் தலை பகுதியில் பந்தடிப்பட்டுள்ளதால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானிற்கு எதிராக நாளை களமிறங்கவுள்ள இலங்கை அணி, நேற்று இங்கிலாந்தின் கார்டிப் மைதானத்தில் பயிற்சில் ஈடுபட்டிருந்த நிலையில், திசர பெரேரா தலையில் பந்தடிப்பட்டு உபாதைக்குள்ளாகியுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள திசர பெரேராவிற்கு எவ்வித பாதிப்புமில்லையெனவும், பந்தடிப்பட்ட பகுதி மாத்திரம் மென்மைநிலை அடைந்துள்ளதாகவும், எவ்வாறாயினும் அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் 8ஆவது சம்பியன்ஸ் கிண்ண தொடரில் விளையாடி வரும் இலங்கை அணி, அரையிறுதி வாய்ப்பை பெறுவதற்கு, நாளை இடம்பெறவுள்ள பாகிஸ்தானுடனான போட்டியில் வெற்றிபெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.
சீனி உட்பட 12 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகளை தன்னிச்சையாக அதிகரிக்கும் வியாபாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்கட்டிச்சோலையில் அமைக்கப்பட்ட இலங்கையின் 378ஆவது ச.தொ.ச விற்பனை நிலையம் நேற்றுக் காலை திறந்துவைக்கப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் சோ.கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ரிசாட் பதியூதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தில் முதன்முறையாக அரச விற்பனை நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
விவசாயிகளும் வறுமை நிலையில் உள்ள மக்களும் அதிகமாக வாழும் இப்பகுதி மக்கள் பயன் அடையும் வகையில் அனைத்து வசதிகளையும் கொண்டதாக இந்த விற்பனை நிலையம் அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் நிறைவடைவதற்குள் 500 ச.தொ.ச விற்பனை நிலையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்தார்.
சீனி உட்பட 12 பொருட்கள் அத்தியாவசிய பொருட்களாக அடையாளப்படுத்தப்பட்டு நேற்று வர்த்தமானி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த பொருட்களுக்கு நினைத்தவாறு விலைகளை அதிகரிக்கமுடியாது.
சீனிக்கான தீர்வை விலையை 10ரூபாவினால் அதிகரித்ததற்காகவும் அதன்காரணமாக நுகர்வோருக்கான சீனியின் விலையினை வர்த்தகர்கள் அதிகரிக்கமுடியாது எனவும் தெரிவித்த அமைச்சர் இவற்றினை கண்காணிப்பதற்காக 200அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.